Month: December 2015

இருமொழிக் கவிதைகள் 2- கடைசியாக எப்பொழுது

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

last-time

கடைசியாக
எப்பொழுது
தண்ணீர் குடித்தாய்
அதைத் தொடும்போழுதும்
தூக்கும்போழுதும்
செல்லமகளைப்போல்
கூட வந்ததா
தண்ணீரில்
வானவெளியென நீ நுழைகையில்
அது
குதித்துக் கும்மாளமிட்டதைக் கேட்டாயா
பஸ்ஸில்
போலீஸ்காரர் நடுவே
கைவிலங்கிட்டு அமர்ந்திருக்கும்
இளங்கைதியின்
கண்கள்
வருடிக்கொண்டிருக்கின்றன
மூடிய பானையை
மூடாத தண்ணீரை.

௦௦௦

When was
the last time
You drank water
When you touched it
and lifted it
Did it come to you
like your darling daughter
When you entered as if
You were the wide sky gliding
into water
Did you hear
It
Jump with joyful glee
Sitting handcuffed
in a bus
between policemen
That young convict
His eyes
are Caressing
The pot that’s closed
The water that’s left open.

௦௦௦

இந்தக் கவிதையின் பிரச்சினையான பகுதி, துவக்கத்தில் வரும் கேள்விகள். அவை யாரை நோக்கிக் கேட்கப்படுகின்றன?
கவிஞர் கைதியை நோக்கிக் கேட்கிறாரா, அல்லது கைதியைக் குறித்து தனக்குள் கேட்டுக் கொள்கிறாரா, அல்லது, அவை நமக்காக எழுப்பப்படும் கேள்விகளா? இந்த மூன்று விடைகளும் சாத்தியம் என்பதன் ambiguity மூன்று வெவ்வேறு உணர்வுகளை ஏககணத்தில் சாத்தியப்படுத்துகிறது. கைதியை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள் என்றால் தாபம் குறித்த புரிந்துணர்வைப் பார்க்கிறோம், கைதியைக் குறித்து தனக்குள் கேட்டுக் கொள்கிறார் என்றால், அங்கு ஒரு சுயவிசாரணையும், நமக்காக எழுப்பப்படும் கேள்விகளானால் அறிவுறுத்தலும் உண்டு. இதன்பின் வரும் உரைநடைத்தன்மை கொண்ட புறவிவரணையின் அழுத்தத்தில் இந்தக் கேள்விகள் ஒன்றுகூடிய உணர்வுகளாகின்றன- இறுதியில் “மூடிய பானையை/ மூடாத தண்ணீரை.” இந்த இரு வரிகளும் ஒரு எதிர்பாராத ஆச்சரியமாய் அமைகின்றன.

பொதுக் கேள்விகள் என்றாலும் கவிதையின் தண்ணீர் பானை, அல்லது அது போன்ற ஒரு கொள்கலனுக்குரியது பானைத் தண்ணீரைக் குடிக்கிறோம், பானைத் தண்ணீரைதான் செல்ல மகளைப் போல் தொட்டுத் தூக்க முடியும். ஏன், பானைத் தண்ணீரில்தான், “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்/ அது குதித்துக் கும்மாளமிட்டதை நீ கேட்டாயா” என்ற கேள்விக்கு பொருள் கிட்டுகிறது- பானையில் உள்ள தண்ணீரில் பிரதிபலித்து ஆடும் ஒளியாகிறோம் நாம்.. இந்த, உயர்ந்த கவித்துவம் கொண்ட, புதிர்த்தன்மை மிக்க கேள்வியில்தான் இறுதி வரிகளின் ஆச்சரிய தாக்கத்தை உணர்கிறோம்- மூடிய பானையும் மூடாத தண்ணீரும் தத்துவம் சார்ந்து பொருட்படுகின்றன. மூடிய பானை கலன் எனில், மூடாத தண்ணீர் கொள்பொருள்- கொள்பொருளைக் கொள்கலனின் வடிவம் சிறைப்படுத்துவதில்லை. பானைத் தண்ணீரில் தோன்றும் சூரியன்களை சாங்கிய தத்துவம் பேசுவது இங்கு நினைவுக்கு வரலாம்.

“பஸ்ஸில்/ போலீஸ்காரர் நடுவே. கைவிலங்கிட்டு அமர்ந்திருக்கும்/ இளங்கைதி” புனைவுக்குரியவன், ஆனால் அவன் ஒரு குமாஸ்தாவாகவோ கணினி நிபுணனாகவோ வேறு யாராகவும் இல்லாமல் சிறைப்பட்ட கைதியாக இங்கு மூடிய பானையையும் மூடாத தண்ணீரையும் கண்களால் வருடிக் கொண்டிருப்பதில்தான் கவிதைக்குரியவன் ஆகிறான்- அவனது வேட்கை தண்ணீருக்கல்ல, விடுதலைக்கு என்று உணரும்போது மேற்கண்ட சாங்கிய தத்துவத்தின் சாயல் நம்மை வேறொரு, இதனினும் உயர்ந்த, விடுதலை வேட்கைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் இது தத்துவக் கவிதை அல்ல. “அதைத் தொடும்போழுதும்/ தூக்கும்போழுதும்/ செல்லமகளைப்போல்/ கூட வந்ததா/”- என்ற கேள்வி தவிர்க்க முடியாதபடி சிறைக்கைதியை ஒரு தகப்பனாக, அவனது தாபத்தை வெறும் விடுதலை வேட்கையாக அல்லாமல், தீண்டல், தழுவுதல், நுகர்தல் என்ற மானுட உறவுகளை நோக்கும் வேட்கையாக நிறுவுகிறது. செல்ல மகளைத் தொட்டுத் தூக்கும் ஏக்கத்தை இன்னும் தீவிரமான உணர்வாக நாம் அறிகிறோம். ஆனால், சாங்கிய விடுதலையின் எதிரொலிப்புக்கு கவிதை இடம் கொடுத்திருக்கிறது என்பதுதான் நோக்கத்தக்கது.

மொழியாக்கம் குறித்து ஒரு விஷயம்- “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்” என்பது முதலில் “When you entered as if/ You were the firmament gliding/ Into Water” என்று மொழிபெயர்க்கப்பட்டது.கிறித்தவ தொல்மறையில், மண்ணின் நீரையும் ஆகாயத்தின் நீரையும் பிரிக்கும் கூரைதான் firmament, Firmament தண்ணீரில் இறங்கும்போது ஆகாய நீரும் மண்ணின் நீரும் சேர்கின்றன. எல்லையற்ற விடுதலை என்று இதைக் கொள்ளலாம். கவிமொழியில் firmament என்பது ஆகாயத்தின் குறியீடாகவும் கையாளப்படுகிறது. மேலும் நாம் தண்ணீரில் இறங்கும்போது பருப்பொருளாகவே இறங்குகிறோம், ஒரு firmamentக்கு உரிய திடத்தன்மை நமக்கு இருக்கிறது, என்பதால் இந்த மொழிபெயர்ப்பில் குறை சொல்ல முடியாது. ஆனால், இங்கு சாங்கிய தளையறுதலை காணும் சாத்தியங்கள் குறைவு, மாறாக தமிழறியாத ஒருவர் கிறித்தவம் சார்ந்த தளையறுதலைக் காண இயலும். இது சரியான தேர்வா இல்லையா, கவிதையின் சுட்டலுக்கும் கவிஞரின் நோக்கத்துக்கும் நியாயம் செய்கின்றதா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள். ஆனால் ஒன்று சொல்லலாம். இந்த இரு சாத்தியங்களையும் நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது.

மொழியாக்கம் என்பது மொழிபால் உள்ள காதலால் செய்யப்படுவது. ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது அதில் உள்ள ஒவ்வொரு சொல்லின் எடையையும் இடத்தையும் கூர்ந்து நோக்கித் தேர்ந்தெடுக்க வேண்டியதாகிறது. மொழியாக்கத்தைவிட நெருக்கமான வாசிப்பு வேறொன்றில்லை. “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்” என்பது “When you entered as if/ You were the firmament gliding/ Into Water” என்று மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் “When you entered as if/ You were the wide sky gliding/ into water” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி இதை உணர்த்தும். உண்மையில், எந்தத் திரிபும் இல்லாதபோதும்கூட வெவ்வேறு சுட்டல்களால் இருவேறு மொழிதல்களை ஏககாலத்தில் நிகழ்த்தும் தன்மை மொழியாக்கங்களுக்கு எப்போதும் உண்டு, இரு மொழிகளையும் அறிந்தவனால் அதைத் தவிர்க்கவும் முடியாது. மொழியாக்கத்தின் இன்பமும் வாதையும் இதுதான்.

இருமொழிக் கவிதைகள் 4- ஜெல்லி மீனே ஜெல்லி மீனே

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

jellyfish

ஜெல்லி மீனே ஜெல்லி மீனே:
என் கண்களை நழுவ விடுகிறேன்
என் காதுகளை உதிர்க்கிறேன்
மறையச் செய்கிறேன் என் நாசியை
இப்போது
மிஞ்சி நிற்கிறேன்
வாயும் வயிறுமாய்
மெல்ல நகர்ந்து கடலுக்கடியில் செல்கிறேன்
கரையோரம் வந்து
காத்துக் கிடக்கிறேன்
மாலைச்சிறுவர்கள் வருவார்கள் என
என்னை உள்ளங்கையில் ஏந்தி
ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என
அப்போது அவர்களிடமிருந்து
விரல்களைப் பரிசுபெறுவேன்
கண்களை வாங்கிக் கொள்வேன்
நாசியைப் பெற்றுக் கொள்வேன்.
கூடவே கூடவே
நானும்
விளையாடத் தொடங்குவேன்:
ஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று

௦௦௦

O Jellyfish Jellyfish:

I let my eyes slip away
I shed my ears
I get my nose to vanish
Now
I stand with what’s leftover
All mouth and stomach
I pregnantly inch towards the bottom of the sea
I move towards the seashore
and wait patiently for
the kids to show up in the evening
Rest me on their palms and scream
O Jellyfish Jellyfish
I would then get from them
a gift of :
Fingers,
Eyes and
Nose.
And also, also
I would begin to play :
O Jellyfish Jellyfish.

௦௦௦

கவிதை இங்கே ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்- “கரையோரம் வந்து/ காத்துக் கிடக்கிறேன். மாலைச்சிறுவர்கள் வருவார்கள் என/ என்னை உள்ளங்கையில் ஏந்தி/ ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என/”.  மாலைச் சிறுவர்கள் என்பதை தினமும் மாலைப் பொழுதில் வரும் சிறுவர்கள் என்று எடுத்துக்கொண்டால், சிறுவர்கள் ஜெல்லி மீன் பிடித்து கையில் வைத்து விளையாடுவது வழக்கம் என்றும் அதைக் காணும் கவிஞர், சிறுவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள நினைக்கிறார் என்றும் சொல்ல இடமிருக்கிறது

இங்கிருந்து துவங்கி,. கவிதையின் முதல் பகுதியை வாசித்தால், ஜெல்லி மீனாகும் நோக்கத்தில் அவர் தன் அவயங்களை இழந்து ஆழ்கடலுக்குச் சென்று தனக்குரிய பூதத்தலத்தைக் கண்டுகொண்டவராய், கரையோரம் வந்து காத்து நிற்கிறார் என்று வாசிக்கிறோம். அதன்பின் அவரை உள்ளங்கையில் ஏந்தி ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்தும் மாலைச் சிறுவர்களில் ஒருவராகி கவிஞரும் ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துகிறார்.

இது எப்படி சாத்தியம்? ஜெல்லி மீன் என்றால் அவர் ஜெல்லி மீனாகவே மாறுவதில்லை. தன்னிழப்பு ஏற்படுகிறது. எப்படி ஜெல்லிமீனாக மாறுகிறாரோ அதே போல் அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாய் அந்த உருவத்தையும் இழந்து சிறுவர்களின் விரல்களாகவும் கண்களாகவும் நாசிகளாகவும் இருந்து மகிழ்கிறார்..தனிமை, அதையொட்டிய சுத்திகரிப்பும் – இவற்றில்தான் கலப்பின் சாத்தியங்களும் கூடலின் திளைப்பும் உருவாகின்றன என்பதில் பல சிந்தனைகளை அளைய இடமுண்டு.

ஆனால் பொழுது சாயும்போது ஜெல்லி மீனின் கதி என்ன? அவரவர் பாதை அவரவருக்கு, இந்தக் கூடல் நிலையானதல்ல. இது தெரிந்தும் உருமாற்றம் பெறும் விருப்பம் வெளிப்படுகிறது எனில் பிறருடன் தொடர்பு கொள்ளும் விழைவில் தன்னிழப்பையும் மரணத்தையும் தழுவ விரும்பும் மிக உக்கிரமான தனிமை மேலோங்கித் தெரிகிறது என்றுதான் கொள்ள முடியும். இதில் ஒரு atavistic impulse உள்ளது என்றும் சொல்லலாம். ஜெல்லி மீன்தான் உலகின் மூத்த பல்லுறுப்பு உயிரி என்பதால் தன் உறுப்புகள் அனைத்தையும் இழந்து துவக்கங்களுக்குச் செல்வதில் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிய பயணத்தைக் கற்பனை செய்து பார்க்கிறார் கவிஞர். அதன்பின் தன்னுணர்வு பெற அவர் தேர்ந்தெடுப்பது சிறுவர்களின் உடலை, இதிலும் தனிமனித அனுபவத்தின் பின்னோக்கிய பயணமே மேற்கொள்கிறார். இது போதாதென்று ஒரு ஜெல்லி மீனாய் மாறியபின் அவர், கரையோரம் “வாயும் வயிறுமாய்” நிற்கிறார்- சூல் கொண்ட பெண்ணைப் போல், சூலின் நிறை சாத்தியங்களோடு.

தனிமையின் துயரைப் பேசும் இக்கவிதை அதை romanticise செய்வதில்லை- அகத்தின் வேலிகளற்ற ஒரு ஆனந்தம் எதிர்பார்க்கப்படுகிறது, தனிமையின் தடுமாற்றங்களை, அதன் ‘பிற்போக்கு’ உணர்வை, அதன் உளச்சிக்கல்களை மிக அழகாக, எதையும் எளிமைப்படுத்தாமல் வெளிப்படுத்துவதால்தான் இந்தக் கவிதையில் ஒரு சிறு உறுத்தல் தென்படுகிறது. ஒரு நண்பர் இது குரூரமான கவிதை என்றும் பதிவு செய்திருக்கிறார், அது ஏன் என்பதை ஒருவாறு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் குரூரமல்ல, தனிமையும் அதன் தீர்வாய் தனிமையற்ற கூடலின் வசீகர அழைப்பும்தான் இந்தக் கவிதையின் அடிநாதம். அதற்குரிய விலை தன்னிழப்பு எனில் அவ்வாறே ஆகட்டும்.

வாயும் வயிறும் என்பதை அதன் முழுப்பொருளில் ஆங்கிலப்படுத்த இயலாமல் போய் விட்டது, இந்த மொழியாக்காத்தின் மிகப் பெரிய இழப்பு. ஆனால், |I stand with what’s left over/ A mouth and a stomach” என்பதில் மிகப் பெரும் வறுமையையும் பசியையும் சுட்ட முடிகிறது என்பதே இதன் மிகச் சிறந்த பயன்.

ஊழ்

 

தி வேல்முருகன்

 

oozh_poem

அப்போது செட்டியார் வீட்டு வேலை நடந்து கொண்டு இருந்தது. இவனது மேற்பார்வையில். முகப்பில் போர்ச்சும், இரண்டு மாஸ்டர் பெட்ரூமும், ஹால், டைனிங் ஹால், கிச்சன், சிட் அவுட் பின்னால் அவுட்-ஹவுஸ் என நவீன வில்லாவுக்கு உருவம் கொடுத்து கொண்டு இருந்தார்கள். முருகன் மேஸ்திரிதான் தினக்கூலிக்கு ஆட்களை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

தீபாவளி வருகிறது, பிள்ளைக்கு ஏதாவது செய்ய வேண்டும். குழந்தை பிறந்த அன்று வெறும் கையாய் நின்றது, இப்போது ஏதாவது செய்ய வேண்டும் காசுக்கு, என்று உருட்டிக் கொண்டு இருந்தது.. இந்த வேலையில் ஒன்றும் பைசா பெறாது. ஏற்கனவே கழுத்துவரை வாங்கியாகி விட்டது இப்போது வட்டிக்குச் செய்வது போலதான் அவன் அந்த வேலை பார்த்து கொண்டு இருந்தான்.

புரட்டாசி மாதம் ஆரம்பித்து கடைசி வாரமாகியும் மழை இல்லை. ஆனால் அன்று பார்த்து மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்து திடீர் என்று காற்று மாறி மழை வந்து வேலையைக் கெடுத்தது. எனவே, திரும்பி வரும்போது அதே தெருவில் வசிக்கும் ஒய்வு பெற்ற வாத்தியார் இவனைக் கூப்பிட்டார். வாத்தியார் மகன் அவனது நண்பன்.சிஆர்பிஎப்பில் நார்த்தில் பணிபுரிகிறான்.

“என்ன பாக்கறப்பா, வா, அம்மா கூப்டுது பாரு”

வாசலில் இருந்த வெள்ளை நாய் உறுமியது.

தயங்கி வெளியில் நின்றவனை, “வாப்பா உள்ளே”, என்று கூடத்துக்கு அழைத்தனர்.

“என்னம்மா?”

‘மேலே பாரு தம்பி”

மேலே பார்த்தபோது ரூப் சிலந்தி வலை போல் விரிசல் விட்டு அது வழியாக காலையில் பெய்த சிறு மழைக்கே தண்ணீர் கசிந்தும் சொட்டிக் கொண்டும் இருந்தது..

“சார் காலம் போட்டு கட்டிய வீடுதானே?” என்றான்.

“ஆமாம் தம்பி ஐய்யாரு மேஸ்திரிதான் கட்டினாரு செஞ்சாரு.மணி கொத்தனாருதான் கிட்ட இருந்து எல்லாம் வேலையும் செஞ்சாரு”.

“இங்கே மட்டும் தான் தண்ணீர் சொட்டுதா?”

‘இல்லப்பா ரூம்ல,கிச்சன்ல அப்படியே ஊத்துதுப்பா”

பார்த்தபோது எல்லா இடமும் சிலந்தி வலை போல் விரிசல் இருந்தது. கிச்சனில் மிக அதிகமாக விரிசல் விட்டு ரீபார்லாம் துருப்பிடித்து உதிர்ந்து விடும் நிலையில் இருந்தது.

“ஏன் சார் தண்ணி கசியறத பாக்காம விட்டுடீங்களா?”

“நீ வேறப்பா போன வருசம்தான் மேல கொத்திட்டு புதுசா டைல்ஸ் எல்லாம் போட்டன், அதுக்குள்ள ஒழுகுது.”

“சார் வாங்க வீட்ட வெளிப்பக்கமும் மேல்தளத்தையும் பார்ப்போம்”.

அவன் பார்த்தபோது காலம் போட்டு இருந்த இடமெல்லாம் நேர்க்கோடாக விரிசல், பழைய வீட்டு அஸ்த்திவாரத்தின் மேலேயே சுவர் வைத்து எழுப்பிருக்கிறார்கள். கீழே பீம் கொண்டு இணைப்போ லிண்டல் பீமோ கொடுக்காமல் வெறும் சுவற்று மேலே ரூப் தளம் அமைத்ததால் கீழே அஸ்திவாரம் கனம் தாங்காமல் உட்கார்ந்து விரிசல் விடுகிறது. ‘மற்றபடி நகாசு வேலைகளால் தரையும், பூவூம், கைப்பிடியில் குழவும் கார்னரில் திரனையும் செய்து தங்களது அனுபவத்தால் மேஸ்திரி இழைத்து வைத்திருந்தார்.

“சார் வீட்டிற்கு மேல மேல செலவு செய்வது வேஸ்ட், கீழே அஸ்திவாரம் ஒக்காருது. இப்ப சரி செஞ்சாலும் திரும்ப பழையபடி ஒழுவும், இந்த வீடு தாங்காது அண்ணன்கிட்ட சொல்லுங்க லோன் போட்டு இடிச்சுட்டு புதுசா கட்டிடுவோம்,” என்றபோது கையில் காப்பி வைத்து கொண்டு எதிரில் நின்ற அம்மாவின் கண்ணில் நீர் பொலபொலவென வடிந்தது. காப்பியை மேஐையில் வைத்துவிட்டு ரூமுக்குச் சென்று விட்டார். தொடர்ந்து அழுவது தெரிந்தது. ஏன் சொன்னோம் என்றாகி விட்டது அவனுக்கு.

அதைப்பற்றி கவலைப்படாமல் வாத்தியார் காப்பியை எடுத்து உறிஞ்சும் சத்தம் நிசப்தத்தை உடைத்து நாராசமாக்கியது. ”

”என்ன தம்பி காப்பி ஆறிடும், எடுத்துக் குடி”

இவனுக்கு காப்பியை கையில் எடுத்தும் குடிக்க முடியவில்லை நெருப்பை விழுங்குவது போல் இருந்தது இரண்டு நிமிடமும்.

வாத்தியார் ரூமைப் பார்த்து, “இப்ப என்ன செய்யறது>” என்று ஆரம்பித்ததும் ;இவன், “சார் நான் உள்ளதச் சொன்னேன். இப்ப பேருக்கு செஞ்சிட்டு திரும்ப கன்டிப்பாக ஒழுவும் அப்ப கேட்க மாட்டிங்களா?” என்றான்..

ரூமில் இருந்தே அம்மா, “வேற வழியில்லையா?” என்று கேட்டார்.

‘இருக்கும்மா. செலவு ஆகும் செஞ்சா இரண்டு மூன்று வருசமாவது தாங்கும்”

“அப்படியே செஞ்சுடுப்பா,” என்றார் அம்மா.

வாத்தியார், “என்ன மாதிரி செய்யனும்?” என்று விசாரித்தார்.

“சார் பழைய டைல்ஸ் எல்லாம் கொத்தி எடுத்துட்டு ரூப் விரிசல் எல்லாம் ரிப்பேர் பார்த்து வாட்டர் புருப்பிங் பண்ணிட்டு வாட்டம் காட்டி வேற டைல்ஸ் போட்டா தாங்கும்.”

“அதெல்லாம் ஒன்றும் வாணாம், இப்படி மேலேயே ஏதாவது செய்ய முடியுமா பாரு”

‘சரி சார் அளவு எடுத்து இரண்டு தார்ப்பாய் வாங்கி போடுவோம் ஒழுவாத மாதிரி ”

“என்னப்பா நீ போவாத ஊருக்கு வழி சொல்ற?”

“இல்லை சார் வேற எப்படி செய்யறதுனு தெரியல நீங்க முடிவு பண்ணி சொல்லுங்க எனக்கு வேல இருக்கு” என்று அவன் கிளம்பினான்.

அம்மா வெளியே வந்து, “சாயந்திரம் வா தம்பி என்ன செய்யலாம்ன்னு நான் சொல்றேன்,” என்றார்.

வெளியே சிறு சாரல் மழை தூறி கொண்டு இருந்தது. நனைந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான் துணி மாற்றிவிட்டு “தீவாளிக்கு வழி பொறந்திருக்கு,” என்றான் மனைவியுடம் குழந்தையை வாங்கி கொண்டே. பையனிடம், “கடையில உள்ள விலக்கூடிய டிரஸ்தான் உனக்கு,” என்றான்,

குழந்தை கையை ஆட்டி வழக்கம் போல கே கே என்று புன்னகைத்தது.

“என்னது அப்பாவும் பிள்ளையும் சேர்ந்துட்டிங்க, அப்படியே நாளு கிழமையில என் நகைக்கு ஒரு வழி பொறந்தா நல்லா இருக்கும் ”

“மேலும் மனைவியின் ஆவலைத் தூண்டாமல் நடந்ததைச் சொன்னதும், “வேல செஞ்ச மாதிரிதான் நீங்க வாங்குன மாதிரிதான், ஊருல அவன் அவன் எப்படி ஏய்ச்சு பொழைக்கறானுவ ” என்றாள் மனைவி. “நீங்க இப்படி ஊம கனா காண வேண்டியதுதான் ”

அவளைச் சொல்லி குற்றமில்லை, அவள் வந்ததிலிருந்தே இவனது உழைப்பும் முயற்சியும் பலன் அளிக்கவில்லை வெறுங்கையுடன் வருவதே வாடிக்கையாகி விட்டது !”செய்த வேலையெல்லாம் நஷ்டப்பட்டு நகையெல்லாம் அடகுக்கடையில் பத்திரமாக இருக்கிறது, திருப்பும் வழி எட்டிய தூரம்வரை தெரியவில்லை. மத்தளம் போல் இருந்தது அவன் நிலமை, ஏன்டா சொன்னோம் என்று ”

“மாலையானதும், “சரி அந்த வேலையை வாத்தியாருக்கு இல்லைன்னாலும் அந்த அம்மாவின் கண்ணீருக்காகவது செய்வோம்,” என்றான் மனைவியிடம்.

‘போய் பார்த்துட்டு வாங்க, என்ன செய்யறது அவங்களுக்கு என்ன கஷ்டமோ”

“அவன் சென்று பார்த்தபோது வாசல் கேட்டில் நாய் நின்று கொண்டு இருந்தது. ஒரே சீரான உறுமல். அடுத்த அடி வைத்தவுடன் வேகமாக குரைத்துக்கொண்டு மேலே பாய்ந்து விடும் போல் வந்தது.

“டைகர் ” என்று சத்தமிட்டு அம்மா வெளியே வந்தார்கள். “நாய் அவர் மீது உரசி செல்லம் கொஞ்சியது

“வாப்பா உள்ளே வா ”

“சொல்லுங்கம்மா”

“எனக்கு மருமகள நினைச்சுதானப்பா பயம், பையன் ஒத்துக்கிட்டான் செய்யச் சொல்லி நீ நாளைக்கே ஆளுகள ரெடி பண்ணி பெரிய மழைக்கு முன்ன முடிச்சு குடு”

“சார் இடையில வேற மாதிரி செய்யனும்னு சொன்னா…”

“சார் அப்படிதான் ஆனா இனி ஒன்னும் சொல்ல மாட்டார், பையன் சொல்லிட்டான்ல”

“சரிம்மா”

“நாளைக்கு இரண்டு ஐோடி ஆட்களை விட்டு உடைக்க விடுவோம். சார்ட்ட சொல்லிடுங்க. நான் போய் ஆட்கள் ஏற்பாடு பண்றம்மா,” என்றவன், “அம்மா இந்த நாய்…” என்று தயங்கினான்.

“டைகரா? நான் பின்னாடி கட்டிப் போடறன், பயப்படாதே ”

“அவன் மேஸ்திரியிடம் வேலையைப் பற்றி சொல்லி மறுநாள் காலையில் ஆட்களை ரெடி செய்து வேலையை ஆரம்பித்து விட்டான். செட்டியாரைப் பார்த்து “வாத்தியார் வீட்ல ஒழுகுது, ரிப்பேர் வேலை”, என்றதற்கு செட்டியார் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், மனதில் என்ன நினைக்கிறார் என்ன சொல்லுவார் என்ற பயம் உள்ளுக்குள் அவனுக்கு இருந்தது ‘

‘மேஸ்திரி தினக்கூலிக்கு ஆள் அனுப்புவதால், மாலையானதும் சம்பளம் கையில் வந்திடும், அவரது கமிஷன் எடுத்துக் கொண்டுதான் ஆட்களுக்கு தருவார். இவனுக்குதான் பயம் திட்டமிட்டபடி வேலை முடியல என்றால் கூடுதல் செலவு ஏற்படும் அதற்கான காரணம் சொல்ல வேண்டும். அதும் செட்டியாரை சமாளிப்பது பெரும் பாடு.

மேஸ்திரி கலியமூர்த்தியுடன் சேர்ந்து இரண்டு ஐோடி ஆட்களை அனுப்பியிருந்தார், கணவன் மனைவியாகதான் வருவார்கள் ஒட்டர் இன பழங்குடியினர் அவர்கள், வேலையை கான்ராக்ட்டாக பேசிக்கொண்டுதான் வேலை செய்வார்கள். அதிலும் மேஸ்திரி கமிஷன் கொடுத்தாக வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு அடுத்த வேலை கிடைக்காது. இதெல்லாம் அவனுக்கும் தெரியும் ஆனால், ஒன்றும் செய்ய முடியாது.

வாத்தியாரை வைத்துக் கொண்டு மேஸ்திரி கலியமூர்த்தியிடம் வேலையைச் சொன்னதும், “சார் இது எல்லாம் கடுக்காய் கருப்பட்டி போட்டு ஐல்லி போட்டு இருக்கு இது கான்ராக்ட்டாக செய்ய முடியாது, சம்பளம் கொடுத்து மதிய சாப்பாடு போட்டுடுங்க, ” என்றார் அவர்.

“வாத்தியார் “இங்கே சாப்பாடுலாம் செய்ய முடியாது,” என்றார்.

“மேல என்ன செய்யறது சொல்லு தம்பி”

“சார் சாப்பாடு கடையில வாங்கி கொடுத்துடலாம்,” என்று சொல்லிவிட்டு கலியமூர்த்தியிடம், “ஒரே நாளில் முடிச்சுடனும்,” என்றதும் “சார் நாளைக்கு முடிஞ்சாலே பெரிய விஷயம்” என்றார் அவர்.

இவன் வாத்தியாரை பார்த்ததும் அவர், “சரிப்பா சாப்பாடு வாங்கி கொடுத்துடறன். வேலையை ஆரம்பி ஆனா எனக்கு நாளைய பொழுதுக்குள் முடிச்சுடனும் ” என்று கறாராகச் சொன்னார்.

‘கலியமூர்த்தி ஆட்கள் வேலையைத் தொடங்கினர், முன்பே சொல்லியிருந்ததால் தயாராக சம்மட்டி, உளி பான்டுவுடன் வந்திருந்தனர் இயல்பாக வேலை நடந்தது, ஆனால், வாத்தியாரிடம் சொல்லிவிட்டு வீடு வரை சென்று வருவதற்குள் வாத்தியார் ஆட்களுடன் சன்டை போட்டு விட்டார். அவன் திரும்பி வந்ததும் அவனிடம், “என்னப்பா நீ இவன் இங்கே அடிக்கற அடி கீழே எல்லாம் கொட்டுதுப்பா. என் கெட்ட நேரம் இருக்கிறது பத்தாமல் மேலேயும் நீங்க ஒழுவ வப்பீங்க போலிருக்க” என்று கொபமாககக் கத்தினார்.

கலியமூர்த்தியும் அவனது ஆட்களும் வருத்தத்துடன் வேலை செய்வது தெரிந்தது, முகத்தில் ஈயாடவில்லை. நாளைக்கு வேலைக்கு வருவார்களா என்று இவனுக்கு கவலையாகி விட்டது.

“வாத்தியார் கீழே போய், “பாரு எப்படி கிடக்குன்னு என் பேச்ச எங்க கேட்கறா,ரிட்டையர்மென்டுக்கு பிறகு கிடந்து அல்லாடுடறன்,” என்றார்.,

இரண்டு மூன்று இடங்களில் மேலே ஐல்லியை உடைத்ததும் ஏற்கனவே இருந்த விரிசலில் இருந்து சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்திருக்கிறது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல் இவர்களுக்கு பயம். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும்போது அம்மா, காப்பியோடு வந்து நிற்கிறார்கள் வாத்தியார் சண்டை போட்டு திட்டியதில் அழுதிருப்பார்கள் போல் இருந்தது.

அவன் அப்போதுதான் பழைய சாதம் தயிரோடு சேர்ந்து சாப்பிட்டிருந்தான் காப்பி வேண்டாம் என்றால் வருத்தப்படுவார் என்று வாங்கி கண்ணை மூடிக்கொண்டு குடித்து விட்டு வைத்தான்

“அம்மா கீழே விரிசல் எல்லாம் தட்டிவிட்டு புதிதாக கெமிக்கல் பூசி சரியாக்கனும் கொட்டினால் வேலைக்கு நல்லதுதான். நீங்க சாருகிட்ட கொஞ்சம் சொல்லுங்க, ஆட்களை சத்தம் போட்டா வேலைக்கு வரமாட்டாங்க., பிறகு வேலை முடிப்பதற்கு சிரமமாயிடும்!

“கேட்டுக் கொண்டு வந்த வாத்தியார், “நீ என்னப்பா, அவங்களுக்கு வக்காலத்து வாங்கற உனக்கு என் கஷ்டம் புரியாதப்பா,பையன் நாளைக்கு கேட்டால் பதில் சொல்ல வேண்டிய சங்கடம் எனக்கு. நீ கொஞ்சம் கிட்ட இருந்து இதை முடிச்சுக் கொடு, எனக்கு இந்த வேலை ஒன்றும் புரியல” என்றார்.

சரி சார் நான் பார்த்துக்கரன், ”

அப்படா என்று இருந்தது அவனுக்கு இனி கலியமூர்த்தியுடன் சமாளிச்சு வேலைய எப்படியாவது முடிக்கனும். கலியமூர்த்தி கள்ளமில்லாமல் வேலை செய்யற ஆள், வெடவெடவென்று நல்ல உயரம் கருப்பு. ஆனால் எங்கே போனாலும் கூலிக்காரன் என்று நினைத்துக் கொண்டு சற்று விரட்டினால் சன்டை போட்டு விடுவான். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று குழம்பி, “கலியமூர்த்தி உடைச்ச ஐல்லியை எங்க போடறிங்க.” என்று கேட்டான்.

சார் அத ஏன் கேட்குற, வாத்தியார் மனுசன் மாதிரியா பேசராரு?.

‘ஏம்பா என்னாச்சு ”

சார் வேலை செய்யறவன் வெத்தலை பாக்கு போடமாட்டான்? பீடி குடிச்சு போடமாட்டான்? அதுக்கெல்லாம் பேசராரு, சீரா அடிக்க சொல்ராரு, கொஞ்சம் கூட பேற மாட்டேங்குது ஓங்கி அடிச்சா மட்டு மரியாதை இல்லாமல் பேசராரு. நீ யாராவது வச்சி பாரு சார், நம்ம கொண்டு ஆவாது”.

ஏம்பா உனக்கு நாலஞ்சு நாள் வேல இருக்கு அவசரப்படாத. ஐல்லியை உடைத்து அள்ளுன பிறகு சுத்தமாக்கி விட்டு தார் பெயின்ட் அடிக்கனும், உன்னைத்தான் நம்பி இருக்கன், செஞ்சு குடு” என்றான் “நாளைக்கு வாத்தியாரோடு நீ டவுனுக்கு போய் பொருள் எல்லாம் வாங்கிட்டு வா, உனக்கு செலவுக்கு ஆகும்”

கலியமூர்த்தி மவுனமாகி வேலை செய்து கொண்டு இருந்தான், ஒன்றும் பதில் இல்லை.

கீழே வந்து அம்மாவிடம், “ஆட்களுக்கு டீ போட்டு கொடுங்கள்” என்று கூறி விட்டு வேலையைப் பார்த்தான் வாத்தியார் டீ கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார், ஆட்கள் சிறிது இயல்பாய் பேசி கொள்ள ஆரம்பித்ததும், “சார் நாளைக்கு பெயின்ட், தார் சீட் எல்லாம் வாங்கனும் மானம் மப்பு மந்தாரமா இருக்கு எதுக்கும் பக்கத்து சுருட்டு கம்பேனியில் தார்ப்பாய் கேளுங்க, சாயந்திரம் வேலை முடிந்து மூடி வச்சிடுவோம்” என்றான். வாத்தியார் வேகமாக பக்கத்தில் தார்ப்பாய் கேட்க சென்றார்.

“தெ உன் புத்திய காட்டாத வேலை செய்ய பாரு தீவாளிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்ல புள்ளைவோ துணி கேட்டு அழுவுதுவோ என்ன நா சொல்றது கேட்குதா என்றார் கலியமூர்த்தி மனைவி புவனா.

கலியமூர்த்தி முறைத்து விட்டு சம்மட்டியால் வேகமாக அடிக்க ஆரம்பித்ததும் கீழே இருந்து வாத்தியார் தார்ப்பாய் எடுக்க கூப்பிட்டார்

“போயி எடுத்துட்டு வா” என்றான் இவன்.

கலியமூர்த்தி போனதும், “தினம் வேலை செய்யறத குடிச்சுட்டு புள்ளைவோளுக்கு ஒன்னும் செய்ய மாட்டார் சாரு நான் பொம்பளை சம்பாரிச்சு அதுவள பார்க்கறன் ரா சோறு ஆக்கறதுதான் மீச்சம் மீதிய காலைல போட்டுட்டு வேலைக்கு ஒடி வரேன்,” என்றார் புவனா.

” மதியத்திற்கு?”

”பால்வாடி சோறுதான்”

‘அவனுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை..

வாத்தியார் கலியமூர்த்தியோடு மேலே தார்ப்பாய் கொண்டு வந்தார்.

“சார் மணி 12. ஆவுது சாப்பாடு வாங்கி வரனும்”

“இது நல்லாருக்குபா, வேளைக்கு சாப்பாடு, டீ நம்ம பாடு தான் சிரிப்பா சிரிக்குது யார் போய் வாங்கி வரது| கீழே வா காசு தரன்”

“‘கலியமூர்த்தி நீ போய் வாங்கி வாயேன் ”

‘சரி சாரு!

”ஏ பூனா 4, 4 பரோட்டா வாங்கியாரன்”

‘தெ காசு இருந்தா 4 வாங்கி புள்ளைவோளுக்கு குடுத்துட்டு வா”

கலியமூர்த்தி சென்றதும், “செட்டியார் வீட்டுல பூச்சு வேலை நடக்குது போயி பாத்துட்டு சாப்பிட்டுட்டு வந்துடறன் சார்” என்றான் இவன்.

” ம்ம்” என்றார் வாத்தியார், சுரத்தில்லாமல்.

‘பூச்சு வேலை சொல்லியிருந்தபடி சாரம் போட்டு ஆரம்பித்திருந்தனர், நேரம் ஓடியிருந்த அளவு வேலை நடந்திருக்கவில்லை.

“பழனி ஏன் வேலை ஆவல?”

‘வசந்து கையில சாரத்திலிருந்த தேள் போட்டுடூதுன கலவை குடுக்க ஆள் இல்லாமல் வேலை தேங்கி போச்சு”

”மேஸ்திரி வரலையா?”

” இல்லைண்ணா, காலையிலிருந்தே காணும்”

” எங்க வசந்து”

“செட்டியார் பையன் ஆஸ்பத்திரிக்கு இட்டுட்டு போயிருக்காரு, நான் அப்படியே மேஸ்திரியிடம் சொல்ல சொன்னேன்,” என்றான் கொத்தனார் பழனி.

“என்ன பழனி இவ்வளவு கலவையை போட்டு வச்சிருக்க, எப்ப முடிக்கறது?”

“சாப்பிடப் போவாம 4 மணி வேலை செய்யலாம்ன்னு பிளான் பண்ணுனோம், கடைசில இப்படி ஆயிப் போச்சு”

கொத்தனார் மணி எங்க?”

“வசந்துக்கு பதிலா யாராவது பசங்க கூப்ட்டு வரேன்னு சைக்கிள் எடுத்து போயிருக்கான்,இப்ப வந்துடுவாண்ண”

பேச்சுக்குரல் கேட்டு செட்டியார் வெளியில் வந்து விட்டார். ஐயோயோ என்றது அவன் மனம்

“என்னப்பா காலையிலிருந்து ஆள காணல?”|

“இல்லிங்க வாத்தியார் வீடு ஐல்லி உடைக்க ஆரம்பிச்ச உடனே கீழே பூச்சு எல்லாம் கொட்ட ஆரம்பிச்சதும் சார் வேலை செய்ய விடல, புரிய வைக்க போதும் போதுமுனு ஆயிடுச்சு அதான் நிக்க வேண்டியதா போயிடுச்சுங்க”

“இங்கே பாத்தியா இந்த வசந்து பயல தேளு கொட்டிடுச்சு, வேல எப்படி ஆவுமுனு தெரியல”

“அதெல்லாம் முடிச்சுடலாங்க, மணி ஆள் கூப்பிட்டு வந்துடுவாப்பல நான் போவாம இருந்து பாத்துக்கறன்”

செட்டியார் உள்ளே சென்று விட்டார்

“ஏய் பழனி ஒரு காரியம் செய்,கலவையை வாங்கி இளக்கி வாரி மேலே அடிச்சுடு , மணி வந்ததும் அப்படியே சுத்தம் பண்ணி கட்டைய புடிச்சு ஸ்பான்ச் போட்டு கீழே இறங்கலாம்”.

“சரிண்ண”

“அருளு நீ சாரத்தில் ஏறு. அமுதா கலவையை அள்ளிக் குடு, நான் ரோடு வரை போய் யாராவது கண்ணுல பட்டா கொண்டு வரேன்.”

அதற்குள் வண்டி சத்தம் கேட்டது, செட்டியார் பையன் சந்துரு வெறும் ஆளாய் வந்தான். சந்துரு அவன் பள்ளித் தோழன்

” மேஸ்திரி இல்லடா”

“ஏய் சந்துரு ஆளுவ சாப்பாடுக்கு கலையாமல் வேல செய்ய முடிவு பண்ணி இருக்கு, நீ காசு வச்சிருக்கியா டீ பிஸ்கட் ரெடி பண்ண போ… ”சாப்பாட்டு நேரம் தாண்டிப் போச்சு பாரு”

டீ வருவதற்குள் மணி இரண்டு பசங்களுடன் வந்து விட்டான். டீயைக் குடித்து விட்டு பழனி வாரி அடித்து இருந்ததை சுத்தம் பண்ணி முடிக்க 4 மணி ஆகி விட்டது./ பாதி வேலை பாக்கி நிற்கிறது வெளிப்பூச்சு வேலை அது, சாரம் பிரித்து விட்டு மிச்சம் உள்ளதைப் பூச வேண்டும். பார்த்தபோது மலைப்பாக இருந்தது இன்று எப்படியாவது முழுவதும் குறையில்லாமல் முடித்து விட வேண்டும். சிறுநீர் கழிக்காதது வலி எடுத்து விட்டது சென்று திரும்பும்போது பழனியும், மணியும் சாரத்தை பிரிக்க ஆரம்பித்து இருந்தனர்,

‘4 மணிக்கு டீ பிஸ்கட் வந்தது குடித்து விட்டு ஆரம்பித்தது வேலை, இடையில் தண்ணீர் கேட்டு குடிப்பதை தவிர யாரிடமும் பேச்சே இல்லை. “ஒருவழியாய் வேலை நெருங்கி முடிக்கும் போது மணி 7 ஆகிவிட்டது. மேஸ்திரி தேடிக்கொண்டு வந்து விட்டார், அவனிடம் “கலியமூர்த்திக்கு சம்பளம் வாங்கி குடுத்துட்டு வரம்பா, வாத்தியார் பேச்சு குடுத்துட்டாரு” என்றார். ‘”முடிஞ்சுதுன்ன நீங்க பார்த்துங்க ”

இதையெலாம் “பார்த்து கொண்டு இருந்த செட்டியார், “மேஸ்திரி நீங்க வரலான்ன எப்படி நடக்கும் வேலை?” என்று கேட்டார்.

”இல்லீங்க பையனுக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு, ஆஸ்பத்திரியில் லேட்டா போயிடுச்சு. அதலாம் நாளைக்கு கிட்ட இருந்து பார்த்துக்கரன் ”

‘ஆட்களைப் பார்க்க பாவமாக இருந்தது, பசியில் துவண்டு உள் வாங்கி இருந்த கண்களில். செட்டியார் அடுத்து என்ன சொல்லுவார் என்ற கவலை அவனால் பார்க்க முடிய வில்லை, செட்டியாரிடம் தலையாட்டி விட்டு கிளம்பினான். ஆனால், வீடு வந்தால்,’ “என்ன ஊர் வேலை முடிஞ்சாச்சா?” என்கிறாள் மனைவி! மதியம் சாப்பிட வராத எரிச்சலில் அவன் ஒன்றும் சொல்லவில்லை தாவிய பிள்ளையிடம், “இரு தங்கம் குளிச்சிட்டு வந்துடறன்” என்றான்.

”பச்சை தண்ணிரில் உடம்பு குளிர குளித்த போது ஆற்றாமையும் கரைந்து ஒடி சிறிது ஆறுதலாக இருந்தது சாப்பிட்டு படுக்கும்வரை பேச்சு இல்லை மனைவியுடன் குழந்தை ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்தது. ‘”கோபமா?” என்று நிலைகொள்ளாமல் அவள் அவன் தலைமுடியில் கையை கொண்டு அலைந்தாள், உடம்பு குறுத்து சிலிர்த்தது திரும்பிய அவன் அவளுக்களித்த பதிலில் உடல் களைத்துப் படுத்தவள், இழுத்தணைத்து திரும்ப முத்தமிட்டாள்.

மறுநாள் வேலை திட்டமிட்டபடி மேஸ்திரி வந்ததால் அதிக சிரமமில்லாமல் இரண்டு இடத்திலும் செய்ய முடிந்தது, வாத்தியார் மதியத்திற்கு பிறகு வராததை பற்றி அதிகம் கேட்கவில்லை, செட்டியார் வீட்டீல் நடந்ததை அறிந்த பிறகு நம் வேலை சீக்கிரம் முடிந்தால் சரி என்ற மன நிலையில் இருந்தார் மாலை, வேலை நடந்து கொண்டு இருக்கும்போதே தேவையானவற்றை வாங்க கலியமூர்த்தியை இட்டுக் கொண்டு சென்று வந்தார். இந்த கலியமூர்த்தியும் வாத்தியார் பின்னாலே நின்று கொண்டு இருக்கிறான், அவரும் அவனைத்தான் கூப்பிடுகிறார், குறையில்லாமல் வேலை நடந்தால் சரி என்றது அவன் மனம்.

அடுத்த நாள் செட்டியார் வீட்டு அவுட்டா் பூச்சு வேலை முடிந்தது. வாத்தியார் வீட்டில் கலியமூர்த்தி மற்றும் ஆட்களைக் கொண்டு சுத்தம் பண்ணி தார் பூசி மணி கொத்தனாரை கொண்டு பிட்டுமன் சீட்டை சூடுபடுத்தி ஒட்டி விட்டு அதன் மேல் மர உருளையை உருட்டி முடிக்க இரவாகிவிட்டது. வழக்கம் போல நேரமாகிவிட்டது, ஆட்களுக்குப் புரியாத வேலை என்பதால் சாப்பிடவும் போகவில்லை, இடிமுழக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான் அவன் ஆச்சரியமாக அவள் ஒன்றும் சொல்லவில்லை

“அப்பா வந்து உங்களுக்காக இத்தனை நேரம் இருந்து பார்த்து விட்டு போயிடுச்சு”

“சரி”

“இது என்ன சட்டை பேண்ட் எல்லாம் தாரு?”

அப்போதுதான் பார்க்கிறான், தார் பெயிண்ட் ஒட்டி இருக்கிறது

“போங்க கரித்துணிக்குக்கூட ஆவாது போலிருக்கு,” என்றாள்

“விடு, இப்ப என் நிலமையும் அப்படிதான் இருக்கு,” என்றான்

தீவாளி வரிசையைக் காட்டினாள் அதில் பையனுக்கும் அவளுக்கும் இரண்டு இரண்டாக துணி மணிகள் இருந்தன.

அன்று இரவு மழை பெய்தது, அது மிதமான மழைதான் அடுத்த நாள் காலை, எங்கு வாத்தியார் வீடு திரும்ப ஒழுவுதோ என்று பயத்தில் அவன் சென்று பார்த்தபோது இரண்டு இடங்களில் கசிவு இருந்தது

‘வாத்தியார், “என்னப்பா இது?” என்று சலித்துக் கொண்டார்.

“இல்ல சார் சரி பண்ணிடுவம், தண்ணி ஓடாமல் தேங்கி நிக்குது, அதான்”, என்றான் அவன். “கீழே சாரம் போட்டு விரிசல் எல்லாம் கெமிக்கல் பூசனும், மேல தளத்தில் ஐல்லி போட்டு வாட்டம் காட்டி டைல்ஸ் பதிக்கனும் சார் எல்லாம் செஞ்ச பிறகு பாருங்க ”

“என்னம்மோ செய்யுங்க” வாத்தியார்க்கு நம்பிக்கை இல்லை, அம்மா முகத்தில் கவலை தெரிந்தது

ஆட்களை எதிர்பார்த்து வெளியே வந்தான். மேஸ்திரி மொத்த ஆட்களோடு வந்து கொண்டு இருந்தார், இன்னும் இரண்டு நாட்கள் வேலை இருக்கிறது ”

“என்னப்பா செட்டியார் இப்படி பண்ணிட்டாரு>|

“ஏன்ணன் என்னாச்சு?”

“தீவாளி கழிச்சு செய்யலாம்னு சொல்ராரு. இந்த பயலுவல மண்ண ஏத்தி வைங்கடானு சொன்னன்,உட்டுட்டானுவ. அமுதா காலையிலே சலிக்கப் பார்த்து இருக்கு செட்டியார் பார்த்துட்டு வேலை ஆவாதுனு நெறித்துட்டாரு, என்ன செய்யறது?”

“மேலே வாங்க வாத்தியார்ட்ட பேசி பார்ப்போம்” என்றான் அவன்.

“சார் ஆளுவ நிறைய இருக்கு, நீங்கள் ஒத்துகிட்டா நாளைக்கே வேலையை முடித்துக் தரேன்,” என்று வாத்தியாரிடம் சொன்னார் மேஸ்திரி. வாத்தியார் அவனை பார்த்தார்.

|என்ன சொல்ரப்பா?”

அவன் சொல்வதற்க்குள் மேஸ்திரியே, “தீவாளி வருது சார், ஆளுவ இப்ப எங்க போவும்? நீங்க மூணு ஆள் சம்பளம் குறைச்சு கொடுங்க, நான் நிரவி கொடுத்து விடுறேன்.,” என்றார்.

வாத்தியார் ஒத்துக் கொண்டு உள்ளேயிருந்து கருப்பு கலர் பாலித்தீன் சீட் கொண்டு வந்து கொடுத்து அதை தளத்தில் விரித்து அதன் மேல் கான்கீரிட் இடவேண்டும் என்றார்

“அதுக்கு என்ன சார், ஐோரா செய்வோம்,” என்றார் மேஸ்திரி. அவன் மறுத்து, ஐல்லி கொட்டும்போதே பாலித்தீன் ஓட்டை விழுந்துடும் பிறகு இட்டு என்ன பிரயோசனம் என்றதற்கு வாத்தியார் ஒத்து கொள்ளவில்லை மேஸ்திரியும் வாத்தியாருடன் சேர்ந்து கொண்டார், அவன் என்ன செய்ய முடியும், வேடிக்கை பார்ப்பதை தவிர? ஐல்லி மணல் ஏற்றும்வரை அதையேதான் செய்தான். வாட்டம் காட்ட புல்லோடு வைத்த பழனி இரண்டு நாளில் தங்கச்சிக்கு வரிசை கொண்டு போவனும் என்றும், மணி தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போவனும் என்றும், கலவை கொண்டு வந்த அமுதா கூரை வீட்டை பெருமழைக்கு முன் பிரித்து கட்டனும் என்றும் கவலைப்பட்டனர். அதில் அவனது கவலை அடிபட்டுப் போனது

“ஆனாலும் செட்டியார் இப்படி செய்ய கூடாதுண்ண” என்றனர் அவனிடம்

“பொறுங்க, மேஸ்திரிட்ட சொல்லி செட்டியாரிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி தர சொல்றேன் கவலைப்படாம வேலை செய்ங்க,” என்றான் அவன்.

பழனியும் மணியும் சிறுவயது முதலே இவ்வேலைகள் செய்து வருவதால் தேர்ந்த குயவன் போல் கை வணங்கி வரும், அருமையாகச் செய்தனர்” நினைத்ததைவிடச் சிறப்பாக வேலை நடந்தது தினம் இரவு எட்டு மணி வரை வேலை செய்து முடிக்கும்போது வாத்தியாருக்கு முகமெல்லாம் பல்லாக தெரிந்தது. மேஸ்திரியிடம் சம்பளம் கணக்கு தீர்த்து அனுப்பிவிட்டு இவனிடம், “பையன் வந்துடட்டுமே”, என்று சொல்லி அனுப்பிவிட்டார்..

மனம் வெறுமையாக இருந்தது, விடிந்ததிலிருந்தே மழை சிறு தூறல் விட்டுவிட்டுப் பெய்தது. குழந்தைக்கு விளையாட்டு காட்டியபடி மழையைப் பார்த்து கொண்டு இருந்தான். மேஸ்திரி அவனைத் தேடி வந்தார், செட்டியார் நாளை வரச் சொல்லி இருப்பதாகவும் அவனையும் உடன் அழைத்து வரச் சொன்னதாகவும் காலையில் வருவதாகவும் சொல்லிச் சென்றார் பணம் சீக்கிரம் கிடைத்துவிடும் என்று சிறிது நப்பாசை தோன்றியபோது வானம் கிடும்புடும் என்று கமறியது

“ஏங்க வெளியே போவாதிங்க. கீழ் மாரி கொள்ளுது சரி மழை பிடிக்கப் போவுது,” என்றாள் மனைவி

இடிச்சத்தம் வரும்போது குழந்தையோடு அவன் உடம்பும் ஆடியது மாலையில் கல்லூரியில் படிக்கும் தம்பி அவன் நினைத்த கத்தரிப்பூ கலரில் குழந்தைக்கு துணியும் சென்னையில் வேலை பார்த்த தம்பி அவனுக்கு துணிமணியும் எடுத்து வந்து பார்த்து சென்றனர் மனம் நெகிழ்ந்திருந்தது அவனுக்கு

இரவு முழுவதும் மழை விட்டுவிட்டுப் பெய்தது. காலையிலே மேஸ்திரி வந்து விட்டார். செட்டியாரை சென்று பார்த்தபோது, எவ்வளவு என்று கேட்டு அவன் முன்னிலையில் மேஸ்திரிக்குக் கொடுக்க வேண்டியதை எண்ணிக் கொடுத்து நோட்டில் எழுதி கொண்டார். இருவருமே பணம் வேண்டுமா என்று அவனைக் கேட்கவில்லை, அவனும் கேட்டு விடலாமா என தயங்கிக் கொண்டிருந்தபோது, “வா தம்பி, வழியில் டீ சாப்பிட்டு போவலாம் என்று பேச்சை முடித்துவிட்டார் மேஸ்திரி. சரி என்று அவனும் போக வேண்டியதாகிவிட்டது. டீ சாப்பிடும்போது, மேஸ்திரியிடம் காசு கேட்கலாமா, இதுவரை அப்படி கேட்டதில்லையே” என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. மனது வேண்டாம் என்றது மேஸ்திரியிடம், “எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

வரும் வழியில் வாத்தியார் வீடு செல்லத் தோன்றியது, கேட்டில் நின்ற டைகர் இவனைக் கண்டதும் குரைக்காமல் ஊம்ம் என்று பிரியமாய் குரல் எழுப்பிய சத்தத்தில் அம்மா வெளியே வந்தார்கள்

“வா தம்பி உன்னைத்தான் பார்த்துட்டு இருந்தேன்”.

அவன் பயந்து மேலே பார்த்தான் அங்கெல்லாம் ஒழுவியிருக்கவில்லை

“தம்பி ராத்திரிதான் வந்துச்சி, உன்னைத்தான் கேட்டுக்கிட்டு இருந்துச்சி இரு கூப்பிடறேன்,” என்று உள்ளே சென்றார்கள்

டேபிளில் புதுத்துணிகளோடு பைகள் சுவிட் எல்லாம் இருந்தது அவனுக்கு ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும் பரபரப்பும் தோன்றியபோது உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.

“தம்பி அந்தப் புள்ள கஷ்டப்பட்டு எல்லாம் செஞ்சுச்சுப்பா,ஏதாவது செய்யணும்பா”

“என்னம்மா சொல்ற, அவன் என் பிரண்டும்மா கோவிச்சுபாம்மா,” என்று வெளியில் வந்தான் நண்பன்.

“நல்லா இருக்கியா?”

“இருக்கேன்ண”

“ஏய் உன் புண்ணியத்துல வீடு ஒழுவுல. அப்பா அம்மாவுக்கு தீவாளி பரிசு கொடுத்துருக்க” என்று சிரித்தான். “ஏதாவது வேணுமா, சாப்பிடுரியா?”

இல்ல சாப்பிட்டுட்டன், வரேங்க,” என்று கூறியபோது குரல் மேலன்னத்தில் ஒட்டி தாழ்ந்து ஒலித்தது அவனுக்கே கேட்டது. அவனுக்கு அவனையே பிடிக்கவில்லை, இறங்கி நடந்தான் மழை பெய்தது…….

(Art credit to http://www.surrealismnow.com/jeroenvanvalkenburg.html)

பன்முகப்பட்ட வாசிப்பு சாத்தியங்கள் – Brooklyn novel / Colm Toibin

– அஜய் ஆர். –

Brooklyn-Cover

ஒரு இளம் பெண் அயர்லாந்திலிருந்து வேலைக்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறாள். அங்கு தனிமையில் வாடுகிறாள். ஒரு இளைஞனை அவள் சந்திக்க, அவர்களுக்குள் மெல்ல ஒரு உறவு உறவாகும்போது மீண்டும் தாய் நாடு செல்ல வேண்டிய சூழல் அப்பெண்ணிற்கு. அங்கு இன்னொரு (உயர்குடியைச் சேர்ந்த) இளைஞன் அவள்பால் ஈர்க்கப்படுகிறான். அப்பெண் மனத் தடுமாற்றம் கொள்கிறாளா, தன் வாழ்க்கை குறித்து என்ன முடிவெடுக்கிறாள் என்பது கலம் டுபீனின் (Colm Toibin) ‘Brooklyn’ நாவலின் இறுதிப் பகுதி. நாவலின் உள்ளடக்கத்திற்கு கிஞ்சித்தும் நியாயம் செய்யாத இந்தக் கதைச் சுருக்கம், வழக்கமான முக்கோணக் காதல் கதையைச் சுட்டுவதாகத் தோன்றினால், அது ‘கதைச்சுருக்கம்’ என்பதன் போதாமையே தவிர நாவலின் தரம் குறித்த சரியான மதிப்பீடாகாது. இந்தக் கட்டுரைக்கு ஒரு பின்புலமாக மட்டுமே அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நாவலைப் பற்றிய நேர்மறை விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, அது குறித்து வெளிவந்துள்ள/ வருகிற எதிர்மறை விமர்சனங்களில் இரண்டு கருத்துகள் முக்கியமாக மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. ஒன்று, அதன் முக்கிய பாத்திரமான எல்லிஸின் (Ellis) ‘செயலின்மை’. தன்னிச்சையான முடிவெடுக்கத் தெரியாதவராக, அலைபாயும் மனமுடையவராக உருவகித்து இறுதியில் நம்பிக்கை துரோகியாக, ஏமாற்றுக்காரியாக அவரை வாசகன் பார்க்கும் முடிவிற்கும் அது இட்டுச் செல்கிறது. நாவலில் ‘கதை’ என்பதே இல்லை (‘கதை’ என்பதன் வரையறை என்ன என்பதை தனிக் கட்டுரையாக பார்க்க வேண்டும்), இதன் மூன்று பகுதிகளில் முதல் இரண்டு பகுதிகளும் அவற்றின் சம்பவங்களும் எந்தத் தொடர்பும் இன்றி சிதறிக் கிடந்து வாசகனுக்கு எதையும் சொல்வதில்லை, அதன் இறுதிப் பகுதியில் வரும் நிகழ்வுகள் மட்டுமே நினைவில் தங்குகின்றன. நாவலே இறுதிப் பகுதியின் பலத்தில்தான் நிற்கிறது என்பது இரண்டாவது விமர்சனம். நேரடியான வாசிப்பில் நாவல் குறித்து இத்தகைய ஒரு பார்வை சாத்தியம்தான் என்றாலும், நாவலை மீள் பார்வை செய்து இத்தகைய மேலோட்டமான வாசிப்பைத் தாண்டிய இன்னொரு கோணத்தையும் வாசகன் காணக் கூடுமா என்பதை இக்கட்டுரையில் ஆராய்வதின் மூலம், எந்தத் தரப்பையும் முற்றிலுமாக மறுதலிக்காமல், அதே நேரம் இலக்கியத்தின் பன்முகப்பட்ட வாசிப்பின் சாத்தியத்தை நாம் அறியவரக்கூடும்.

சம்பவம் 1:

குடும்பத்தை விட்டு பிரிந்து அயர்லாந்திலிருந்து அமெரிக்கா வந்து ஒரு துணிக்கடையில் வேலை செய்யும் இளம் பெண்ணான எல்லிஸ் (Ellis), தன் விடுமுறை நாளை காதலனுடன் கடற்கரையில் செலவிட முடிவு செய்கிறார். அதற்குத் தகுந்த உடையை (bathing suit) தேர்வு செய்ய அவருடைய பெண் மேலதிகாரி உதவுகிறார். எல்லிஸின் உடலை அவர் தொடுவது, ஆடை அணிவிப்பது என அவருடைய சுவாதீனமான நடவடிக்கை எல்லிஸை அசௌகர்யப்படுத்துகிறது. (மேலதிகாரிக்கும் ஒரு காதலன் இருக்கிறான் என்பதால், அவர் நடத்தையில் பாலியல் விழைவு உள்ளது என்பது போன்ற வாசிப்பிற்கு இடமில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்) எனினும் எல்லிஸ் தன் கூச்சத்தை வெளியே சொல்வதில்லை

சம்பவம் 2:

குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் இருக்கும் எல்லிஸ், தன் மனத்துயர் குறித்து யாருடனும் பகிர முடியாத மனநிலையில் உள்ளார் என்பதை டூபின்

None of them could help her. She had lost all of them. They would not find out about this; she would not put it into a letter. And because of this she understood that they would never know her now. Maybe, she thought, they had never known her, any of them, because if they had, then they would have had to realize what this would be like for her.” 

என்று சுட்டுகிறார்.

இரண்டு சம்பவங்களும் நேரடியான தொடர்பு கொண்டவையல்ல என்றாலும், இரண்டாம் சம்பவம், மற்றவர்களிடம் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மிகவும் தயங்கும் எல்லிஸின் குணத்தை வெளிப்படுத்தி முதல் சம்பவத்தை புரிந்து கொள்ள உதவும் அதே நேரத்தில், மொத்த நாவலையும் தொகுத்துக் கொள்ளவும் உதவுகிறது. அவரின் ‘செயலின்மையாக’ சுட்டப்படுவது உண்மையில் தன்னுள்ளேயே சுருங்கிக் கொள்ளச் செய்யும் அவர் அகத்தின் தயக்கம்தான்.

அயர்லாந்தில் விதவைத் தாய் மற்றும் மூத்த சகோதரி ரோஸுடன்  வசிக்கும் எல்லிஸிற்கு, ஒரு பாதிரியின் உதவியால் அமெரிக்காவில் வேலை கிடைக்க, அவர் அங்கு அனுப்பப்படுகிறார். அயர்லாந்தைவிட அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கள் அதிகம் என்பதால்  அங்கு இங்குள்ளதைவிட மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று கருதி ரோஸ் இந்த முடிவெடுக்கிறார்.   மூத்த பெண் என்பதால்   குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பை – முப்பது வயதான, யாரையும் திருமணம் செய்யாத, தங்கையின் படிப்புச் செலவை ஏற்கும், வேலையில் நேர்த்தியாக இருக்கும்,  இவை அனைத்தையும்   தனக்குள்ள சிக்கல்களை வெளிக்காட்டாமல்  திறம்பட செய்யும் – அழகி ரோஸின் பார்வையில் அவர் எடுக்கும் முடிவு மிகச் சரி என்றாலும் எல்லிஸிற்கு  நன்மை செய்வதாக எண்ணி அவர் இதைச் செய்யும்போது, சொந்த ஊர், குடும்பம், நண்பர்கள் அனைவரையும் பிரிந்து   அங்குச் செல்வது குறித்து   எல்லிஸிற்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடும் என்பதை அவர் கருத்தில் கொள்வதில்லை.

எல்லிஸிற்கு முற்றிலும் நேர்மாறான  ரோஸின்  பாத்திரம், எல்லிஸை புரிந்து கொள்ள உதவக் கூடும். ஒருவேளை சிறு வயதிலியே எல்லிஸும்  ரோஸ் போல் மன ரீதியாக முதிர்ந்திருந்தால் பல அசந்தர்ப்பமான நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும். தங்கை மீது பாசம் வைத்திருக்கும் ரோஸ் ஏன் அவரிடம் அமெரிக்கா செல்வது குறித்த அபிப்பிராயம் கேட்கவில்லை? எல்லிஸிற்கு கூட இது குறித்து நேர்மையாகவோ/ எதிர்மறையாகவோ அதிகம் சொல்ல எதுவும் இல்லை என்றோ அல்லது அதைச் சொல்ல அவர் விரும்பவில்லை என்றோ தோன்றுகிறது. இங்கும் அவர் அகத்தில் உறைந்திருக்கும் தயக்கத்தையே உணர முடிகிறது. இவற்றிக்கான  காரணங்களை அவர் அமெரிக்கா சென்றபின் நடக்கும் நிகழ்வுகளில் தேடிப்  பார்க்கலாம்.

நாவல் குறித்த இரண்டாவது முக்கிய எதிர்மறை விமர்சனமான  – சம்பவங்கள் தொடர்பற்று இருக்கின்றன என்பதை  கலம் டுபீனின் இன்னொரு நாவலான  ‘The Blackwater Lightship‘ நாவலுடனேயே ஒப்பிடலாம்.  அதிலும்  சம்பவங்கள் நேரடி தொடர்புள்ளவையாக டுபீனால் சொல்லப்படாவிட்டாலும்  அவை தன்னியல்பாக ஒன்றுடன் ஒன்று பொருந்தி விடுகின்றன. இந்த அம்சம் ‘Brooklyn’ நாவலில் இல்லை என்பதால், இவற்றைத் தொகுப்பதில் வாசகனின் பங்கு அதிகம் உள்ளது. இது பலரை நாவலிலிருந்து அந்நியப்படுத்தும் என்றாலும், வாசகனின் அதிக உழைப்பைக் கோரும் இத்தகைய வாசிப்பும் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் அல்லவா?  இங்கு நாவலின் இன்னொரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

அமெரிக்காவில் டோனி (Tony) எனும் இத்தாலிய இளைஞனை எல்லிஸ் சந்திக்கிறாள்.  டோனி அவள்பால் ஈர்க்கப்படுகிறான், அவளும் தடை சொல்வதில்லை (இவர்களுக்கிடையே உள்ள உறவு குறித்து விரிவாக பின்னர் பார்ப்போம்). ஒரு முறை  தாய்/ தந்தை, மூன்று சகோதரர்களுடன் வசிக்கும் (கூட்டுக் குடும்ப)  வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்கிறான். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது/ சீண்டிக் கொள்வது இவற்றை சற்றே அன்னியத்தன்மையோடு எல்லிஸ் கவனிக்கிறாள். இந்தச் சம்பவம்  குறித்து ஒரு பேட்டியில் டூபின் “They’re all just so good with each other. And one watches this in life with fascination and envy. I would love to have been brought up like that. But Ireland’s not like that.” என்று குறிப்பிடுகிறார். இதில் எல்லிஸின் செயல்/ செயலின்மைக்கான ஒரு விளக்கம் உட்போதிந்துள்ளது.  பாசமும் நேசமும் குடும்பத்தில் இருந்தாலும், அதைத் தளர்வான (informal) முறையில் வெளிப்படுத்தும்  சூழலில் எல்லிஸ் வளராததால்,அவளால் தன் உணர்வுகளைத் தெளிவாக சொல்ல முடிவதில்லை என்று   புரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்வும் கதையின் மையத்திற்கு நேரடியான தொடர்பு கொண்டதல்ல என்பதால், இதை வாசகன் எளிதில் கடந்து சென்றுவிடக் கூடும். ஆனால் சற்றே கூர்ந்து கவனித்தால்

இப்படி தொடர்பற்றவையாகத் தோன்றும் பல நிகழ்வுகள் எல்லிஸின் மனச் சங்கிலியின் கண்ணிகள் தான் என்று வாசகன் அவதானிக்கலாம். அது எல்லிஸ் குறித்த அவன் பார்வையை விரிவடையச் செய்யக் கூடும்.

எல்லிஸின் மனவுலகை நுட்பமாக உருவாக்கும் அதே நேரத்தில் டூபின்  50களின்  Brooklyn நகரில், கனவுலகைப் போல் தோற்றமளிக்கும் அமைதியான – “… quietness of these few leafy, streets that had shops only on the corners, streets where people lived”  -காட்சிகளோடு, நிஜ உலகில் தள்ளும் பரந்த வீதிகளையும், அவற்றை முற்றிலும் நிரப்பும் மனிதர்களையும்/  வாகனங்களையும் பார்க்கும்போது நாளுக்கு நாள் உருமாறிக்கொன்டிருக்கும், பல நாடுகளிருந்தும் எண்ணற்றோர்  புலம்பெயர்ந்து கொண்டிருக்கும்  ஒரு நகரின்  சித்திரத்தையும் உருவாக்குகிறார். ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவருக்கு துணிகள் விற்பதற்கு எல்லிஸ் வேலை செய்யும் கடை முடிவு செய்வது நாவலில் வரும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல.

அம்முடிவு குறித்த எல்லிஸின் எதிர்வினைக்கும் , மற்ற பெண்  விற்பனையாளர்களின்   எதிர்வினைக்கும் உள்ள வித்தியாசம் குறிப்பிடத்தக்கது. அயர்லாந்தில் தன் சொந்த ஊரில் கறுப்பினத்தவரை கண்டிராத/ அறிந்திராத எல்லிஸிற்கு கடையில் அவர்களை அனுமதிப்பது என்ற  முடிவு எந்த பெரிய சலனத்தையும்  ஏற்படுத்துவதில்லை, ஆனால் கடையின் மற்ற பெண் விற்பனையாளர்கள் இதை எதிர்கொள்ளும் விதம் – ஆப்பிரிக்க அமெரிக்க இனப் பெண்கள் கடைக்குள் வந்தால் இடமே அமைதியாவது,  ஓரக்கண்ணால் வந்தவர்களைக் கவனிப்பது, தங்கள் வீட்டில் இது குறித்து தெரியவந்தால் அவர்கள் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்று தங்களுக்குள்ளேயே   கேள்வி எழுப்புவது – ஆகியவை ஒரு காலகட்ட சமூகச் சூழலின் பிரதிபலிப்பும் கூட. இது குறித்து அதிகம் கவலைப்படாத எல்லிஸ், மற்றொரு பெண் முன் உடைமாற்றுவது குறித்து வெட்குவதை கலாசார வேறுபாடு என்று சொல்லலாமா? உடை தேர்வு செய்யும்போது, இத்தாலிய ஆண் தன் இணை கடற்கரையில் எப்படி தோற்றமளிக்கிறாள் என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் தருபவன் என எல்லிஸின் மேலதிகாரி கூற,

‘In Ireland no one looks, Ellis said. It would be bad manners.’

‘In Italy it would be bad manners not to look’.

என்று நடக்கும் உரையாடலில் கலாசார வேறுபாடு மட்டும் தெரிவதில்லை. எல்லிஸும் சரி அவள் மேலதிகாரியும் சரி அமெரிக்கா என்று குறிப்பிடாமல்  Ireland/ Italy என்று சொல்வது, தங்களை அவர்கள் இன்னும்  முழுதாக அமெரிக்காவினுள் ஐக்கியப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுடன் புலம்பெயர்ந்தவர்களின் ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடாகவும் உள்ளது. (இவர்கள் இருவரின் பிள்ளைகள்/ பேரப்பிள்ளைகள் தங்களை அமெரிக்கர்களாக மட்டுமே கருதக்கூடும் என்பதையும் நினைவில் கொள்வோம்)

எந்த ஆப்பிரிக்க- அமெரிக்க  பெண்ணும் தனியாக கடைக்கு வராமல் இரண்டு-மூன்று பேராக வருவது, நேர்த்தியாக உடையணிந்திருக்கும் அப்பெண்கள்,  விற்பனையாளர்களுடன் அதிகம் பேசாதது (கர்வத்தால் அல்ல, இனம் சார்ந்து இருக்கும் இடைவெளி என்று வாசகன் புரிந்து கொள்ள முடியும்)  என அவர்கள் நடந்து கொள்வதையும்  ஒரு விதத்தில் புலம் பெயர்ந்தவர்களின் கலாசார வேறுபாட்டால் புரிந்து கொள்ளலாம். எல்லிஸ் நாடு விட்டு நாடு வந்திருந்தால், இப்பெண்கள் தங்கள் நாட்டிற்குள்ளேயே வெளியாட்களாக இருந்து,  இப்போது தான் தங்கள் தேசத்தின் சில காட்சிகளை காண்கிறார்கள்.

இப்படி தொடர்பற்றவையாக தோன்றும்  நிகழ்வுகளும் எல்லிஸின் மனவுலகோடு அவரின் புற உலகையும் நாவலினுள் உருவாக்குகின்றன எனபதால் அவை நாவலின் கட்டமைப்பிற்கு தேவையானவைதான் என்று சொல்லலாம்.

டோனியின் துணையும், பகுதி நேரப் படிப்பும் எல்லிஸின் மனதை ஆற்ற ஆரம்பிக்கும் வேளையில் அவர் குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத துயர நிகழ்வால், தாயை கவனித்துக்கொள்ள  எல்லிஸ் மீண்டும் அயர்லாந்து திரும்ப வேண்டியுள்ளது. தன்னைப் பிரிய மனமே இல்லாமல் டோனி துயருற, மீண்டும் சொந்த ஊர் வரும் எல்லிஸ் வீட்டை கவனித்துக் கொள்கிறாள். ஜிம் (Jim) என்ற சற்றே மேட்டுக்குடி இளைஞனுடன்  அவளுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. ஜிம் அவள்பால் ஈர்க்கப்படுகிறான்,  அவளை மணம் முடிக்க வேண்டும் என்ற முடிவுக்கும் அவன் வந்து விட்டது போல்   தெரிகிறது. எல்லிஸ்   என்ன செய்கிறாள்? தன் தோழியின்  கணவனின் நண்பனான அவனுடன், குழு சுற்றுலா செல்கிறாள், அவனுடன் கனிவாக நடந்து கொள்கிறாள் ஆனால் டோனி பற்றி ஒன்றும் சொல்வதில்லை, அதே நேரம் ஜிம்மை அதிகம் ஊக்குவிப்பதும் இல்லை, அவன் தன் மீது செலுத்தும் கவனத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறாள் அவ்வளவே. டோனி அனுப்பும் கடிதங்களை படிப்பதையும் அவள் நிறுத்தி விடுகிறாள். இங்கு எல்லிஸின் நடவடிக்கை/ நடவடிக்கையின்மையை   நம்பிக்கை துரோகமாக பார்க்கும் சாத்தியம் உள்ளதுதான்.

இங்கு இடைவெட்டாக நாவலின் முதல் பகுதியிலிருந்து  ஓர் சம்பவம். அமெரிக்கா வந்த முதல் சில நாட்களில், மிகவும் மனச் சோர்வுற்றிருக்கும் எல்லிஸ், காலையில் வேலைக்குச் செல்லும் வழியில் உணவருந்த ஓர் விடுதிக்கு செல்கிறாள். அவள் முகத்தைப் பார்த்து அவளின் சோகத்தை யூகிக்கும் விடுதி பணியாள் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே என்று கேட்கிறான். இல்லை என்று அவள் சொன்ன பிறகும், மீண்டும் அதையே கேட்கும் அவன் உரத்தக் குரலில் “Cheer up…..Give us a smile,” என்று சொல்ல அந்தக் கரிசனத்தைக் தாங்க முடியாமல் அழுது விடுவோம் என்று அஞ்சி அங்கிருந்து ஓடி விடுகிறாள். பணியாளனின் செய்கை வெளிப்படையாகப் பேசும் அமெரிக்க குணம் அது, அவன் கரிசனம் தவறில்லை என்றாலும் அதைத் தாங்கும் வலு அவளுக்கு இல்லை. கரிசனத்தை அல்ல அவள் எதிர்பார்ப்பது,  தன்னுடன் கை கோர்த்து நடக்கும் ஒரு சக ஜீவியை. டோனி அத்தகையவனாக உள்ளான்.  அவனின் வேகத்திற்கு தன்னால் செல்ல முடியாது என்ற உணர்வும்   எல்லிஸிற்கு இருந்தாலும், சக பயணியை அவள் இழக்க விரும்பவில்லை. டோனி எல்லிஸை காதலியாகப் பார்க்கிறான் என்றால் எல்லிஸ் அவனை தோழனாக மட்டுமே அதிகம் பார்க்கிறாள். தன் குடும்பத்தில் நிகழ்ந்த பேரவலச் சம்பவத்தின் தாக்கத்தில் அவள்  வாழ்வில்  முதல் முறையாக  அவனுடன் உடலுறவு கொண்டாலும் அதைக் காதல் என்றோ காமம் என்றோ அறிதியிட்டு கூற முடியாது. அப்போது அவள் அவனை உபயோகிக்கிறாள் என்று சொல்லலாமா? அப்படி சொன்னால் டோனியும் தன் மனதின் விழைவுக்காகவே அவளுடன் பழகுகிறான் என்றும் சொல்லலாம், இதை இன்னும் விரிவாக்கி அனைத்து உறவுகளையுமே கொடுக்கல் வாங்கல் என்ற இரட்டை நிலைக்குள் அடக்கிவிடலாம். ஆனால் அப்படி எளிமையாக வகைபடுத்தக் கூடிய  ஒன்றா மனித உறவுகள்? இவர்கள் உறவின் dynamic தெளிவான இடத்தை அடையும் முன், எல்லிஸ் மீண்டும் தன் தாய் நாடு திரும்ப வேண்டியுள்ளது. குடும்பத் துயரம் வேறு அவளை வாட்ட, அவள் திக்கு தெரியாதவள் போல் நடந்து கொள்வதில்  – அது மூன்று பேரின் வாழ்வை குலைத்துப் போடக்கூடும் என்றாலும் –  ஆச்சரியம்  ஒன்றுமில்லை.

இறுதியில் எல்லிஸ் எடுக்க வேண்டிய முடிவிற்கும் கெல்லி (Kelly) என்ற பாத்திரமே   காரணமாக உள்ளார்.  இந்தப் பாத்திரத்தை நாவலோடு பொருந்தாத ஒன்றாக பார்க்க முடியும். மேட்டிமைத்தன்மை கொண்ட, அனைவரையும் எள்ளல்   செய்யும் இந்தப் பாத்திரம் நம்ப முடியாத ஒன்றோ / ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றோ அல்ல. ஆனால் டூபின் முதலிலிருந்தே நாவலின் போக்கில் உருவாக்கும் சலனமின்மையை இந்தப் பாத்திரம், அமைதியான இடத்தில்  ஒருவர் உரத்தக் குரலெழுப்பி அந்தச் சூழலைக்   குலைப்பது போல் கலைத்து விடுகிறது. அந்த விதத்தில் இப்பாத்திரம் நாவலின் உலகோடு பொருந்தாமல், அதன்  பலவீனமாக உள்ளது.   மேலும் எல்லிஸை முடிவெடுக்கத் தூண்டும் நிகழ்வும் நாவலை அதன் இறுதி நிகழ்விற்கு திருப்ப வலிந்து செய்யப்பட்ட உத்தியாக உள்ளது.

இப்போது எல்லிஸ் காதலா அல்லது கடமையா என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். எல்லிஸின் முடிவு தெரிந்தவுடன் அவர் இதைத்தான் தேர்வு செய்திருக்கிறார் என்று  பெரும்பாலான வாசகர்கள்  புரிந்து கொள்வது எதுவாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. அந்தப்  புரிதல் நியாயமானதும்  கூட. இருப்பினும் எல்லிஸின் தேர்வு இது தான்  என்று வாசகன் எதை முடிவு செய்தாலும் அதற்கு  நேர்மாறாக வாதிட  சாத்தியம் நாவலின் பக்கங்களின் உள்ளது.  அதாவது ஒரு வாசகன் அவர் காதலை தேர்வு செய்தார் என்று சொன்னால், இல்லை அவர் தேர்வு செய்தது கடமையை என்றும், எல்லிஸின் தேர்வு ‘கடமை’ என்று சொன்னால், இல்லை அது ‘காதல்’ என்றும்  இன்னொரு வாசகன்  வாதிடலாம். எனவே வாசகன் எந்தப் புரிதலுக்கு வந்தாலும் அதைச்  சற்றே மறுபரிசீலனை செய்தால், எந்த முடிவிலும்  அவர் பெறப்போவதற்கு ஈடாக அல்லது அதற்கும் மேலாகவே இழப்பையும் துயரையும்  அடையக்  கூடும் ‘Catch-22’ சூழலில் அவர் இருக்கிறார் என்பதையும்  உணர முடியும்.  இந்த இரண்டு தேர்வையும் தவிர, சுய பாதுகாப்புக்காக மட்டுமே அவர் அந்த முடிவு எடுத்தார் என்றும் வேறொரு வாசகன் சொல்லலாம். அப்படி எண்ணும் வாசகன்

Eilis imagined the years ahead, when these words would come to mean less and less to the man who heard them and would come to mean more and more to herself. She almost smiled at the thought of it, then closed her eyes and tried to imagine nothing more.

என்ற இறுதி பகுதியை மீண்டும் வாசிக்க வேண்டும். அசோகமித்திரன் கதை ஒன்றில் கதைசொல்லி இரவு நடையின்போது ஒரு ஆணும்- பெண்ணும் (தம்பதியர் என்று புரிந்து கொள்ளலாம்) சண்டையிடுவதைப் பார்ப்பான். அப்பெண்ணின் துயர் அவனை பாதித்தாலும், தலையிடாமல் வந்து விடுவான். இரவு முழுதும் அவனை அது வாட்டும். அடுத்த நாள் அனைத்தும் சரியாகி விட்டது என்பதாக கதை முடிந்தாலும்,  அதில் அ.மி சொல்லாமல் எழுப்பும் கேள்வி  அவ்வளவு சீக்கிரம் அந்நிகழ்வை அவன் மறந்து விட முடியுமா என்பதுதான். அக்கேள்வியை இங்கும் மேலே உள்ள பத்தியோடு பொருத்திப் பார்க்கலாம். பல வருடங்கள் சென்றேனும் அவள் அமைதியடையக்கூடுமா, அப்படி அடைந்தாலும் அதுவரை அவள் அனுபவித்த  வாதை?

நாவலில் எல்லிஸின் வயது குறிப்பிடப்படவில்லை என்றாலும், ‘பெதும்பை’  பருவத்தில் அவள் இருப்பதாக யூகிக்கலாம். பேதைக்கும் மங்கைக்கும் இடையே உள்ள, தன்னைக் குறித்தும் வாழ்வு குறித்தும் தெளிவின்மையும் சலனங்களும் தோன்றும் இந்தப் பருவத்தில், குடும்பத்தைப் பிரிதல், குடும்பத்தில் இழப்பு போன்ற தொடர்  பாரத்தை சுமக்கும் முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லாத அப்பருவப் பெண், அது சார்ந்து தன் வாழ்வு குறித்த  மிக முக்கிய முடிவுகளை  எடுக்க வேண்டிய நிலையிலும்  இருக்கிறாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன்   பிறகும்,   அவளை .ஏமாற்றுக்காரியாகவோ, கோழையாகவோ, குறைந்தபட்சம் செயலின்மை கொண்டவளாகவோ சுட்ட முடியும் என்றாலும், இறுதிப் பத்தியின் மீள்வாசிப்பு தன் துயரை வெளிக்காட்டாமல், எந்தச்  சூழலிலும்   முடிந்தளவு அனைவருடனும்  நேர்மையுடன் இருக்க முயன்று, அதில் தன்னை மீறி தோல்வியுற்று அதன் காரணமாக மனதில் பல ஆண்டுகள் ஒலிக்கப் போகும், மற்ற யாருக்கும் கேட்காத, வலியின் ஓலத்தை  தான் மட்டும் தனித்து கேட்டுக்கொண்டிருக்கப்  போகும்  ஒரு பெதும்பைப் பெண்ணின் உயிர்ப்புள்ள நெகிழ்வான சித்திரம் மனதில் தோன்றி மற்ற அனைத்தையும் விலக்குகிறது.

தண்டவாளம் ஒன்று தடம் புரண்டது

மு வெங்கடேஷ்

தற்போது பெய்து வரும் கனமழை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை ஞாபகப்படுத்துகின்றது, எனக்கும்தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டின் ஒரு அறையில் மனைவியும் மகளும், மற்றொரு அறையில் மாமனாரும் மாமியாரும் தூங்கிக் கொண்டிருக்க, இன்னொரு அறையில் நான் இரண்டு நாளில் இன்னொரு குழந்தைக்கு அப்பாவாகப் போகும் மகிழ்ச்சியை பேஸ்புக் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

ஜன்னல் வழியாகக் காற்று சிலுசிலுவென வீசியது. சிறிது நேரத்தில் இடியும், மின்னலுமாய் மழை சோவென பெய்யத் தொடங்கியது. எழுந்து வீட்டிலுள்ள அனைத்து ஜன்னல்களையும் மூடிவிட்டுப் பார்க்கையில் மணி இரவு 11ஐத் தாண்டியிருந்தது. தூங்கலாம் என்று எண்ணத்தில் மடிக்கணினியை எடுத்து வைத்துவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றேன்.

மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்கவே, ஓடி வந்து பார்த்தால், “மது” என்று ஆங்கிலத்தில் என் மாப்பிள்ளையின் பெயர். மது – என் அக்காவின் கொழுந்தன். என் உயிர் நண்பன். சொந்தத்தையும் தாண்டி நாங்கள் நண்பர்களாகவே பழகினோம், பழகிக் கொண்டிருக்கிறோம்.

“இவன் எதுக்குடா இந்த நேரங்கெட்ட நேரத்துல போன் பண்றான்? ஒருவேளை போதையில் இருப்பானோ?”

அழைப்பை எடுத்தேன். சற்று மௌனம்….

“மாப்ள மாமா நம்மள விட்டுப் போய்ட்டாங்கடா”.

ஒன்றும் புரியாத நான், “லேய் என்ன சொல்ற???” என்று கேட்டேன்.

“மாப்ள மாமா நம்மள விட்டுட்டுப் போய்டாங்கடா” என்று மறுபடியும் கத்தினான். அப்போதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மாமா – என் மாமாவா (அவன் அப்பா) இல்லை அவன் மாமாவா (என் அப்பா) என்று ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தேன். மீண்டும் மௌனம். உடனே அவனிடம் “மொபைலை அக்காவிடம் கொடு,” என்றேன். கொடுத்தான்.

“தம்பி அப்பா நம்மள விட்டுப் போயிட்டுப்பா” என்று அழ ஆரம்பித்தாள்.

அப்பாவை – அப்பா வந்துட்டு, அப்பா போய்ட்டு, அப்பா சாப்டுட்டு என்று அக்றிணையில்தான் எப்போதுமே கூப்பிடுவோம். அப்பாவை மட்டும் அல்ல, மாமா வந்துட்டு, மாமா சாப்டுட்டு என்று அனைவரையும் அவ்வாறேதான் கூப்பிடுவோம். இன்று வரை ஏன் என்று தெரியவில்லை.

அதைக் கேட்டவுடன் என் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு அப்படியே நின்றது. பின் என்னையும் அறியாமல் “ஓ”வென்று கத்தினேன். அந்த இரவு நேரத்தில் ஊரே தூங்கிக் கொண்டிருக்கையில் என் ஓலம் என் மனைவியையும், மாமனார், மாமியாரையும் தூங்கவா விடும்? எழுந்து ஓடி வந்தார்கள், ஒன்றும் புரியாதவர்களாய்.

கத்தி அழுது கொண்டிருந்தேன். நான் அப்படி அழுது அவர்கள் இதுவரைப் பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. என் மனைவி என்னிடம் “என்னாச்சு, என்னாச்சு?” என்றாள். பதில் கூறக்கூட முடியாதவனாய் “அப்பா…அப்பா…” என்று மட்டும் சொல்லி அழுது கொண்டிருந்தேன். அவர்களுக்குப் புரிந்து விட்டது. மனைவியும் அழத் தொடங்கினாள்.

என் வாழ்நாளில் அப்படி ஒரு அழுகை அதுவரை நான் அழுததில்லை. ”ஓ” என்றும் “அப்பா” என்றும் கத்திக் கத்தி அழுததால் வாந்தியே வந்து விட்டது. அழுது கொண்டும், கத்திக் கொண்டும், வாந்தி எடுத்துக் கொண்டும் இருந்தேன். இதற்கிடையில் மொபைலில் வேறு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. மூத்த சகோதரி, இளைய சகோதரி, சகோதரர்கள், மாப்பிள்ளை, அத்தான், மாமா, நண்பர்கள் இப்படி ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டே இருந்தார்கள். எப்போதெல்லாம் அழைப்பை எடுக்கிறேனோ அப்போதெல்லாம் அனைவரும் “அப்பா…அப்பா….” என்பதைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. அந்த இடத்தில் “அப்பா…அப்பா…” என்று கூறுவதிலேயே எனக்கு புரிந்திருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

மணி 12 கடந்திருந்தது.

அடுத்து எப்படி இப்போது சென்னையில் இருந்து நெல்லை செல்வது என்ற ஏக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது. காரிலா, பஸ்சிலா, விமானத்திலா என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன். மனைவியை இன்டர்நெட்டில் பார்க்கச் சொன்னேன். விமானம் ஏதும் அப்போது இல்லை என்றாள். சரி தனியார் பேருந்தாவது இருக்கா என்றால் அதுவும் இல்லை. ஒரே வழி காரில் செல்வதுதான் என்று முடிவெடுத்தேன். அதில் என்ன ஒரு சிக்கல் என்றால் நான் மட்டும்தான் ஓட்டிச் செல்ல வேண்டும், சென்னையில் இருந்து நெல்லை வரை. இதுவரை அவ்வளவு தொலைவு ஒட்டியதில்லை. அப்பாவை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததால் நான் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

என் முடிவை மதுவிடம் சொல்லிவிட்டு காரை எடுக்கச் சென்றேன். மீண்டும் என்னை அழைத்த அவன், “மாப்ள இந்த நிலமையில காரைத் தனியாக ஒட்டிக் கொண்டு வர வேண்டாம்”, என்றான். மனைவியும் சேர்ந்து கொண்டாள். வேறு என்ன செய்வது? யோசிக்கக்கூட நேரமில்லை, பொறுமையும் இல்லை. கால் டிரைவர் யாரையாவது அழைத்துப் பார்க்கலாம் என்று கூறினாள் மனைவி.

நான் எதையும் கண்டு கொள்வதாக இல்லை. என்னமோ பண்ணுங்க ஆனா நான் இப்போ உடனே என் அப்பாவைப் பார்க்கப் போக வேண்டும், என்றேன்.

மணி 12ஐ கடந்திருந்ததால் ஒரு கால் டிரைவரும் வரவில்லை. யாரைக் கேட்டாலும் காலை 5 மணிக்கு மேல் வருகிறேன் என்றார்கள். எனக்கோ 5 மணி வரை காத்திருக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை. மனைவி வேண்டாம் என்கிறாள், மாப்பிள்ளை வேண்டாம் என்கிறான், மாமனார் வேண்டாம் என்கிறார், அக்கா வேண்டாம் என்கிறாள். இது எதையுமே காதில் கேட்கத் தயாராக இல்லாத நான், காரை நானே ஓட்டி செல்கிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாக கீழே வந்து காரை எடுத்தேன். நிறைமாத கர்ப்பிணி என்பதால் மனைவியும் என்னுடன் வர இயலாது. எனக்கோ அந்த நேரத்தில் யார் வருகிறார்கள் யார் வரவில்லை என்றெல்லாம் யோசிக்கக்கூடத் தோணவில்லை.

காரை ஸ்டார்ட் செய்தேன். என் மாமனாருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, “நானும் உடன் வருகிறேன்” என்றார். தனியாக என்னை அந்த நிலமையில் அனுப்ப மனமில்லை போலும். சரி ஏறுங்க, என்றேன். ஏறிக் கொண்டார். “பார்த்து மெதுவா போங்க” என்றாள் மனைவி. கார் வீட்டின் வெளியே வர, மீண்டும் மதுவிடம் இருந்து அழைப்பு. “ஏல சொல்லச் சொல்ல கேட்காம எதுக்கு கார்ல தனியா வார?”என்று ஏசினான்.

“மாமனாரும் வராங்க” என்றேன். அவன் அதற்கு சம்மதித்தபாடில்லை. கடைசியாக, எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன், டிரைவர், சென்னையில் இருக்கிறான், அவனிடம் கேட்டுச் சொல்கிறேன், அதுவரை வீட்டிலேயே இரு, என்றான் மது. மறுக்கவும் முடியாமல் போகவும் முடியாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். 5 நிமிடம் கழித்து மீண்டும் மதுவிடம் இருந்து அழைப்பு. “மாப்ள அவன் இப்போ சென்னையில் இல்லையாம் நீ தயவு செய்து காரில் வராதே ப்ளீஸ் பஸ்ல வா”என்றான். இதைக் கேட்ட உடன் அவன் மேல் எனக்கு கோபம் வந்ததே தவிர, என் மேல் உள்ள அக்கறையில்தான் கூறுகிறான் என்று தோனவே இல்லை. ஒருபக்கம் அவன் வேண்டாம் என்கிறான் மறுபக்கம் மனைவி வேண்டாம் என்கிறாள். எதையும் பொருட்படுத்தாத நான் காரை எடுத்துப் புறப்பட்டேன்.

மழை வேறு அடித்து ஊத்திக் கொண்டிருந்ததால் கார் மடிப்பாக்கம் ரோட்டில் மிதந்து சென்றது. இடை இடையே மனைவி, மது, அக்கா இப்படி பலரும் காரில் வர வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். போகிற வழியில் தாம்பரத்தில் சித்தப்பா மகன் சரவணனையும் காரில் ஏற்றிக் கொண்டேன். கார் பெருங்களத்தூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மழை அதிகமாக இருப்பதாலும், இந்த நிலைமையில் காரில் வர வேண்டாம் என்று எல்லோரும் கூறுவதாலும், சரி பஸ்சிலேயேப் போய் விடலாம், என்று முடிவு செய்தேன். சரவணனின் நண்பனையும் காரில் ஏற்றிக் கொண்டு பெருங்களத்தூர் சென்றோம். அங்கு என் அக்கா மகன் ரத்னகுமார் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

பெருங்களத்தூர் பேருந்து நிலையம் ஏதோ ஹார்பர் போல் காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டிருந்தது. ஒருவழியாக மதுரை செல்லும் அரசு பேருந்து ஒன்று வர, காரை சரவணனுடைய நண்பனிடம் கொடுத்தனுப்பிவிட்டுப் பஸ்ஸில் ஏறினோம். பஸ் மெல்ல மெல்ல மிதந்து சென்றது. எனக்கோ பொறுமையே இல்லை. காரில் சென்றிருந்தால் இந்நேரம் மேல்மருவத்தூரைத் தாண்டி இருக்கலாமே என்ற எண்ணம். தூக்கம் சிறிதளவும் வரவில்லை. அழுது அழுது கண்ணீரும் வற்றி விட்டது. பேசாமல் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

அப்பாவின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. குழந்தையாக இருக்கும்போது கிளாசில் ஸ்பூனைப் போட்டு கிலுக்கு ஆட்டியதும், நீச்சல் கற்றுக் கொடுத்ததும், மடியில் படுக்க வைத்து காதில் அழுக்கு எடுத்து விட்டதும், நடக்க முடியாதபோது தோளில் தூக்கிச் சென்றதும், தேனி நாடார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்தபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னை வந்து பார்த்ததும், அவருடன் சேர்ந்து குடித்த டொரினோ, சேர்ந்து சென்ற எவரெஸ்ட் ஹோட்டல், இப்படி எண்ணற்ற நினைவுகள் ஒவ்வொன்றாக வர என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, விடிய விடிய.

பக்கத்து இருக்கையில் ஒரு சிறுவன் சொகுசுப் பேருந்தில் வந்த சந்தோஷத்தில் சீட்டை சாய்த்துச் சாய்த்து விளையாடிக் கொண்டிருந்தான். அரசு சொகுசுப் பேருந்து முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம். மற்ற பேருந்துகளைவிட இதில் டிக்கெட் விலை அதிகம். சிறு வயதில் திருவள்ளுவர் பஸ்ஸில் செல்வதென்றால் அவ்வளவு சந்தோசம். அம்மா என்ன ஏசினாலும் அப்பா எனக்காக அதில் ஏறுவார். நான் ஆசைப்பட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக.

பொழுது விடியவும் மதுரை வரவும் சரியாக இருந்தது. மதுரை, மறக்க முடியாத மதுரை. மதுரைக்கும் எனக்கும் என் அப்பாவுக்கும் நிறைய தொடர்பு உண்டு. குடும்பத்தோடு எங்கு சென்றாலும் மதுரைதான் எங்களுடைய பொது இடம். அங்குதான் அனைவரும் சந்திப்போம். அப்பாவுடன் வந்து அடிக்கடி தங்கும் ஜுபிட்டர் லாட்ஜ், காளவாசல், நகைக் கடை பஜார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவில், ஜெயராம் பேக்கரி, முனியாண்டி விலாஸ், சினிப்பிரியா-மினிப்பிரியா- சுகப்பிரியா தியேட்டர்கள், ராஜ் மகால் சில்க்ஸ், பால் பாண்டி மாமா வீடு, அப்பா கைபிடித்துச் சென்ற மதுரை வீதிகள்.
முதன்முதலாக வேலை தேடிச் சென்னை வரும்போது அப்பாதான் மதுரையில் இருந்து சென்னைக்கு வழியனுப்பி வைத்து செலவுக்கு 5000 ருபாய் கொடுத்தார். பின் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தைவிட்டுப் பேருந்து வெளியே வரும்போது, ஜன்னல் வழியாக ஒரு கை வந்து 1000 ரூபாவை என் சட்டைப் பையில் திணித்தது. சென்னை போயிட்டு செலவுக்குப் பணம் வேணும்னா அப்பாக்குப் போன் பண்ணுடா, என்று சொல்லிவிட்டு சென்றார் அப்பா. இப்படி ஒவ்வொன்றாக மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பா மிகவும் கண்டிப்பானவர்.ஆனால் இதுவரை யாரையும் ஒருமுறை கூட அடித்ததில்லை. அவரைப் பார்த்தால் எங்களுக்கு ஒரு பயம், மரியாதை தானாக வந்து விடும். பாசமிக்கவர் ஆனால் வெளிக்காட்ட மாட்டார். என்னவென்றே தெரியவில்லை, சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுடன் அவ்வளவு நெருக்கமாகப் பழக மாட்டார். வேண்டியதை எல்லாம் வாங்கித் தருவார், பணம் தேவைக்கு அதிகமாகவே தருவார். ஆனால் அவ்வளவாகப் பேச மாட்டார். வளர்ந்தபின், அவருடன் அதிகமாக பேசியது, “நா ராஜேஸ் பேசுறேன், போன அம்மாட்ட குடுங்க” வாகத்தான் இருக்கும். பல நேரங்களில் “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்கத் தோன்றியும் கேட்காமல் விட்டு விடுவேன். ஒரு மகனுக்கும் அப்பாவுக்குமான உறவும், உரையாடலும் அவ்வளவுதானா என்று பல நேரம் யோசித்ததுண்டு. எங்களுக்குள் எப்போதுமே ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருந்தது.

வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். கல்வியைத் தவிர. ஏனென்றால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அன்யோன்யமாகப் பேசிப் பழகும் அப்பாவையும் மகனையும் பார்த்தால் பொறாமையாக இருக்கும், எனக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று.

அடுத்து நெல்லை செல்ல வேண்டும். எனக்கோ பஸ் பிடித்து ஊர் செல்லும் பொறுமை இல்லை. உடனடியாக ஒரு டாக்ஸி எடுத்துக் கொண்டு நெல்லை புறப்பட்டோம்.

ஓட்டுனரிடம், அண்ணா கொஞ்சம் வேகமாப் போங்க, வேகமாப் போங்க, என்று கூறிக்கொண்டே வந்தேன். கோவில்பட்டி வந்தது. என் வாழ்நாளில் நான்கு வருடங்களைக் கழித்த இடம். நான் கல்லூரி பயின்ற இடம். நான் செய்த ஒவ்வொரு தவறுக்கும் ஒவ்வொரு முறையும் எனக்காக வந்து கைகட்டி மன்னிப்பு கேட்டுச் செல்வார் அப்பா. இரண்டாமாண்டு படிக்கும்போது அப்பாவை அழைத்த கல்லூரி முதல்வர், நான் செய்யாத தவறை நான் செய்தததாகக் கூறவே அப்பாவோ ‘என் பையனப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும், அவன் இதைப் பண்ணிருக்க மாட்டான் நீங்க என்ன செய்யணுமோ அத செஞ்சிக்கோங்க’ என்றார். கல்லூரி வாசலில் இருக்கும் புளியமரத்தடி. அப்பா என்னை வந்து பார்த்துவிட்டுச் செல்லும்போதெல்லாம் பஸ் ஏற்றிவிடும் இடம். அந்த புளியமரத்துக்கு நன்றாகத் தெரியும் எனக்கும் என் அப்பாவுக்குமான பாசம்.

இத்தனை நாள் எங்களை வழி நடத்திய அப்பா இனி இல்லை, ஒவ்வொரு முறை நாங்கள் சறுக்கியபோதும் தூணாக இருந்துத் தாங்கிய அப்பா இனி இல்லை, பொருளாதார நெருக்கடியில் எங்களைத் தூக்கிச் சுமந்த அப்பா இனி இல்லை, வாழ்க்கையில் அடிபட்டுக் கீழே விழும்போதெல்லாம் கை கொடுத்துத் தூக்கி விட அப்பா இனி இல்லை, எத்தனை இடையூறுகள் வந்தாலும் ‘நான் இருக்கேன்டா’ என்று தைரியம் ஊட்ட அப்பா இனி இல்லை. துடுப்பை இழந்த கட்டுமரம் கடலில் தனியே தவிப்பதுபோல் தவிக்கிறோம்.

வண்டி கயத்தாரை நெருங்கிக் கொண்டிருக்கும்போது என் மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இம்முறை என் மாமியார். “சுதாவுக்கு வயிறு வலி வந்துட்டு, டாக்ஸிய வரச் சொல்லிருக்கேன், இப்போ ஆஸ்பத்திரிக்கு கிளம்புறோம்” என்றார். இதைக் கேட்ட எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சில தினங்களுக்கு முன் மனைவி கூறியதுதான் நினைவுக்கு வந்தது. “ஏங்க மூத்த பொண்ணு பிறக்கும்போதுதான் நீங்க கூட இல்ல, இப்போ ரெண்டாவது குழந்தைக்காது நீங்க கூடவே இருங்க”.

சரியாக 3 மணி நேரத்தில் நெல்லை வந்தடைந்தோம்.வீடு நெருங்க நெருங்க என் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது.

எங்கள் தெருவிற்குள் டாக்ஸி நுழையவும் ஊரே எங்கள் வீட்டில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். மனம் சோகத்தின் உச்சத்தில் இருந்தது. எங்கு பார்த்தாலும் அப்பா, தாத்தா என்ற அழுகுரல்கள். பல வருடங்களுக்கு முன் பார்த்த சொந்த பந்தங்கள். அழுகையை அடக்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தேன்.

எப்போதும் போல் அப்பா வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி சகிதமாகத் தூங்கிக் கொண்டிருந்தார். என் முதல் சம்பளத்தில் நான் வாங்கிக் கொடுத்த அதே விலை உயர்ந்த வெள்ளைச் சட்டை. “இவ்வளவு பணம் கொடுத்து எனக்கெதுக்குடா வாங்குன” என்று சொல்லி போடாமல் பத்திரமாக வைத்திருந்த அதே வெள்ளைச் சட்டை. அவர் எப்போதும் சட்டையுடன் தூங்கும் பழக்கம் உடையவர். ஆனால் இம்முறை ஒரு சின்ன மாற்றம். அவர் தூங்கிக் கொண்டிருந்தது குளிரூட்டப்பட்ட அறையில் அல்ல, மாறாக குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள்.

அதற்குப் பின் அங்கு சொல்ல முடியாத சோகம் சூழ்ந்திருந்தது.

அவ்வப்போது மாமியாரிடம் மனைவிக்கு எப்படி இருக்கிறதென்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்து விட்டு அன்று இரவு அப்பாவின் அறையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். சரியாக இரவு 8.25 க்கு மாமியாரிடம் இருந்து அழைப்பு ‘மகன் பிறந்திருக்கான்’ என்று. பதில் ஒன்றும் கூறாமல் கேட்டுக் கொண்டிருந்தேன், கண்ணீர் தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட என் அம்மா தன் சோகத்தையும் மறைத்துக் கொண்டு நான் அழக் கூடாது என்பதற்காக என்னிடம் வந்து ஆறுதல் சொல்லத் தொடங்கினாள்.

மகன் பிறந்திருக்கிறான் என்றேன். என்னைக் கட்டியணைத்து ஓவென்று கதறி அழுதாள். பின் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். சந்தோசமும் பட முடியாமல், சோகத்தையும் அடக்க முடியாமல் ஒருவித குழப்ப நிலை வீடு முழுவதும் நிறைந்திருந்தது.

சற்று நேரம் கழித்து, வா வெளியே வா, இந்த ரூம விட்டு முதல்ல வெளியே வா, என்று கூறி முற்றத்திற்கு அழைத்துச் சென்றாள் அம்மா.

“நீ முதல்ல சென்னைக்குக் கிளம்பிப் போ. போய்ப் பையனப் பாரு.அங்க அவங்க தனியா இருப்பாங்க.”

“இந்த நிலைமையில நா எப்படிப் போறது?”

“சொல்றதக் கேளு, அழாதப்பா. நம்ம அப்பா நம்மள விட்டு எங்கயும் போகல. நம்மளோட தான் இருக்கார்.அப்பா செய்த புண்ணியத்திற்கு அவருக்கு நல்ல சாவு கிடைச்சிருக்கு.அலுந்தாம சந்தோசமாக் கடைசி வரைக்கும் யார்டயும் கை ஏந்தாம ராசா மாதிரிதானே போயிருக்கார்.அத நினைச்சு நாம சந்தோசப்படனும் அழக்கூடாது,” என்று கூறி அழுதாள்.

ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“பாரு நம்ம அப்பாவ இந்த ஊரே எப்படி வழி அனுப்புது பாரு.”

நான் தலை நிமிர்ந்து மேலே பார்த்தேன். ஊரே பிரகாசமாய் இருந்தது. வான வேடிக்கைகளாலும், விளக்குகளாலும் பிரகாசப்படுத்தி இருந்தனர்.

அன்று கார்த்திகைத் திருநாள். ஊரே விளக்குகளாலும், வானவேடிகைகளாலும் மின்னிக் கொண்டிருந்தது எங்கள் வீட்டைத் தவிர…..

இருள் சூழ்ந்திருந்த வீட்டில் மாலையுடன் சிரித்துக்கொண்டிருந்த அப்பா கேட்டார், “இங்க என்னடா பண்ணிட்டு இருக்க அங்க போய் உம்புள்ளையப் பாக்காம?” என்று.