நகுல்வசன்

மலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)

நகுல் வசன்

4

என்பே வெற்றிபெறும். எப்போதும் இதையே அறிந்து கொள்கிறேன்.
விருத்திப் பெருக்கி அதன்மேல் இருத்திருக்கும் தசையோ
தன்னையே காமுற்றிருக்கும்:
தன் இரத்தநாள வனத்தையும், நரம்புப்  புதர்காட்டையும்
முலையையும் பாலுறுப்பையும் தொடையையும்  பிறப்பித்துக் கொண்டே;
தன் துன்பத்தின் வேதனையில் மரிக்கும்.
எங்கோ அதனடியே,
வெளிச்சமற்ற உட்புறத்தில், என்பு மீந்திருக்கும்
நிர்தாட்சண்யமற்ற வெண்மையாக.

அதை எதிர்த்திருப்பதோ ஆழ்ந்த
விலங்கையொத்த ஏதோவொன்று. தன்னையே தழுவிக்கொள்ளும்
உடம்பின் இயல்புணர்வுத் தழுவுதல்.  குருதியின்  பொறி.
தசையையும் உருவகத்தையும்
சுவர்க்கலோக கனவுகளையும் பூலோகப் பெண் முலைகளயும்
பிணைக்கும் ஏதோவொன்று.
இரவில் அகன்மிடிற்றினூடே
சத்தமிட்டு ஆர்ப்பரிக்கும்,
அலறும் அல்லது பாடும் ஏதோவொன்று.

எனினும் என்பே வெல்கிறது. எப்போதும். எதிலும் பங்கேற்காது
குருதியின் ஆணைகளெதற்குமே அசைந்து கொடுக்காது
வளையாது
உடலின் அப்பட்டமான இச்சைகளுக்கு சாட்சியாக
ஒளிந்து பரவியிருக்கும் மனதின் இச்சைகளை பார்த்தபடி
இறுதிவரையிலும் அதுவாகவே இருக்கும்
அது.

5

என்பை  அறிதல், நன்றாக அறிதல்:
உள்ளார்ந்திருக்கும் அதன் கடினமான கட்டாயங்கள்
அதன் சிடுக்குகள்;
உண்டு புணர்ந்து
மலம்கழித்து உறங்கி
அதை அன்னியோன்யமாக வைத்திருப்பது
ஒருகால்  ஓர் வாழ்க்கைத் தொழிலாகவும் இருக்கலாம்:

அதை மெய்ப்பிக்கும்
மனவலிமையையும் காதலையும் கோரும்
ஒரு வகையான வாழ்தல் முறை.
இப்போது பிடிபட்டுவிட்டதென்று நினைக்கிறேன் –
காதலே – உன்னால்தான்.

இங்கு பலமுறை வந்திருக்கிறேன். அனேகமாக டிசெம்பர்  மாதத்தில்.
இப்போதோ மே மாதத்து முதல் மழையுடன் வரும்போது
என் வலியிடமிருந்து விலகியிருப்பதை உணர்ந்து
ஏதோவொன்றை கூறவும் விழைகிறேன்.

6

காதலைப் பற்றி  நான் அதிகமாக அறிந்ததில்லை.

என் தந்தை என் தலையை உருவமைத்து பிரத்தியேகமான
மூக்கையும்  எனக்களித்தார். தரவுகளைக் கற்பித்தத்தை தவிர வேறெதையும்
என் தாய் எனக்கு விட்டுச் செல்லவில்லை. மிடுக்கும்  நாணமும்
பதற்றமும் புணர்ச்சியைப் பற்றிய பயமும் கலந்து
என்னை உருவாக்கிய
அவர்களின் முதல் செயகையப் பற்றி
எதுவுமே கூறப்பட்டதில்லை.
அமைதியாகவா அல்லது உணர்ச்சிமிகுந்தா
சராசரியாகவா அல்லது ஆழ்ந்தா
அது எப்படி இருந்ததென
என் கண்கள் அறிந்து கொண்டதில்லை.  முதல்
ஒலித்தடயங்களில் எதுவும் எஞ்சவும் இல்லை.

தன்னந்தனியே, காதலை நாடியே இங்கு வந்திருக்கிறேன்.
இப்போது அது கிட்டிவிட்டதால்
தசையும் என்பும் அதன்  களத்தில் எதிரிகளாக
பழைய பிளவுகளைக் காண்கிறேன்.
குளிருக்கெதிராக சளைக்காமல் காதலர்கள்
ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போது புரிகிறது.
உலகை இரண்டாய்ப் பிளக்கும்
பழம்பெரும் சக்திகளை  தவிர்க்கவியலாமல்
காதலிலும் அவர்கள் கண்ணுற வேண்டும் போலும்.

(This is an unauthorised translation of selected parts of the poem, “Malabar Hill” by Kersey Katrak . The Tamil translation is intended for educational, non-commercial display at this particular web page only).

 

 

 

 

 

 

 

குளக்கரையில் ஒரு மாயம் – நகுல்வசன் மொழிபெயர்ப்பில், ‘மரங்கொத்தி’

பீட்டர் பொங்கல்

The Kingfisher

The sky was clear and blue
barring the clouds gathering in the South.
No sooner the unruffled pond
entered my thoughts than the waves began;
A frog hopped into the water.
To appreciate the lotus flower, apparently.
At the sky, vacantly I stare. Ha!
Just then, out of the sky, headlong,
accursed Menaka falls,
and falls.

Dazzling with the seven colors of Indra’s Realm
her garment unfurling in the sky,
into the pond headlong Menaka falls.
No one else but me.

I waited for Menaka to rise,
into the air a Kingfisher rose.
A fish in its beak, seeking
a shadowed haunt it flew.
Clear and blue, yet again, the sky.

(ஞானக்கூத்தன் எழுதிய ‘மரங்கொத்தி’ என்ற தமிழ் கவிதையின் ஆங்கில மொழியாக்கம், நகுல் வசன்)

குறிப்புகளின் நோக்கம் இந்த மொழிபெயர்ப்பின் தரம் உயர்ந்தது என்று நிறுவுவதோ, எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று சொல்வதோ, எப்படியெல்லாம் புரிந்து கொண்டிருக்கிறோம் பார் என்று காட்டிக்கொள்வதோ அல்ல. ஒரு கவிதையை மொழிபெயர்க்கிறோம் என்றால் சில குறைபாடுகளைத் தவிர்க்க முடிவதில்லை என்று சொல்வதும், ஒரு கட்டத்தில் ஆங்கிலம், தமிழ் என்று மொழிகளைக் கடந்து கவிதை பொருட்படுகிறது என்று சொல்வதும்தான். அப்போது கவிதை எழுதப்பட்டதன் காரணமும் கவிஞனின் நோக்கமும் அவ்வளவு பிரமாதமாகத் தெரிவதில்லை. கவிதையைக் காட்டிலும் மொழி தனித்து உயர்ந்து நிற்கும் தருணம் அது.

இந்தக் கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சுலபமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும் (இப்படிச் சொல்வது இது எவ்வளவு ‘நல்ல’ மொழிபெயர்ப்பு என்பதற்கான உத்திரவாதம் ஒன்றை முற்படவில்லை).

முதலில் ‘தெளிவாய் நீலமாய் இருந்தது வானம்‘ என்பது ‘The sky was serene and blue‘ என்று மொழிபெயர்க்கப்பட்டது. தெளிவு என்பதற்கான நேரடி தமிழ்ச்சொல் அல்ல ‘serene‘. ஆனால், அதற்கப்புறம் தவளை குதித்து குளம் கலங்கப் போகிறது, வானத்திலிருந்து மேனகை தலைகீழாக அந்தக் குளத்தில் விழப் போகிறாள், கடைசியில் ‘தெளிவாய் நீளமாய் மறுபடி வானம்‘ என்று கவிதை முடிகிறது என்பதை எல்லாம் பார்க்கும்போது ‘serene‘ என்பது அப்படி ஒன்றும் மோசமான தேர்வல்ல என்று தோன்றுகிறது. ஆனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வு காரணமாக, ‘The sky was clear and blue’ என்று தமிழாக்கம் செய்யப்பட்டது. எனினும் இந்தக் கவிதை தெளிவைவிட அமைதி குறித்ததுதான், ‘serene‘ என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் ஒன்றும் மோசம் போயிருக்காது.

அடுத்த வாக்கியம், ‘தெற்கில் மேகத் திரட்டைத் தவிர்த்தால்,’ என்பது ‘barring the patch of cloud in the South,’ என்று இருந்து, ‘barring the clouds gathering in the South‘ என்று மாறியிருக்கிறது. மேகத்திரட்டு என்பதை patch of cloud என்று மொழிபெயர்ப்பது அவ்வளவு மோசமாகத் தெரியவில்லை. வானம் தெளிவாக இருந்தது, தெற்கில் சில மேகங்கள் இருந்தன என்பதை ஒரு காட்சியாய்க் கற்பனை செய்ய இது போதும். ஆனால் மேகம் திரண்டு வருவதில் மழை இருக்கிறதோ இல்லையோ ஒரு இருண்மைக்கான சாத்தியம் இருக்கிறது. தெளிவான வானத்தில் ஏற்படக்கூடிய மூட்டமாகவும் Serene என்ற உணர்வுநிலைக்குப் பொருந்தாத வகையிலும் மேகங்கள் திரள்கின்றன. ஒரு அச்சுறுத்தல் இருக்கிறது அல்லவா, சினிமா என்றால் பின்னணியில் இசையால் கொடுக்கப்படும் பில்ட்-அப் மாதிரி?

அடுத்த வரியில், ‘சலனம் குளத்தில் சிறிதும் இல்லை‘ என்று ஞானக்கூத்தன் எழுதும்போது, தெளிவான வானம், திரளும் மேகம்,  சலனமற்ற குளம் என்று நம் கவனத்துக்கு வருகிறது. அடுத்தபடியாக, ‘என்று நான் நினைத்த போதில் அலைகள்‘ என்று திரும்பி, ‘தவளை ஒன்று நீரில் பாய்ந்தது‘ என்று வரும்போது அதுவரை இருந்த காட்சி முற்றிலும் குலைகிறது. பொதுவாக, கவிதையில் காட்சிகளின் வரிசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முயற்சிப்பவர் நகுல்வசன். எனவே, ”சலனம் குளத்தில் சிறிதும் இல்லை”, என்பதை ‘Not even the hint of a ripple in the pond,’ என்றும், ‘என்று நான் நினைத்த போதில் அலைகள்‘ என்பதை, ‘I was just thinking that, when/ all of a sudden there were waves,‘ என்றும் மொழிபெயர்த்திருந்தார். இது ஒரு மொண்ணைத்தனமான முயற்சி என்பதை நாமெல்லாரும் ஒப்புக்கொள்வோம். ”சலனம் குளத்தில் சிறிதும் இல்லை”, என்பதை முதலில் சொல்ல வேண்டும் என்று முயற்சித்ததால்தான் இப்படியாயிற்று- ஆங்கில வாக்கிய அமைப்பில் இதை முன்கூட்டியே சொல்லிவிடுவது அடுத்து வரும் சொற்களுக்கு அதிக வேலை வைக்கிறது. எனவே ஒரு சமரசமாக, ‘No sooner the unruffled pond/ entered my thoughts than the waves began;‘ என்று முடிவாயிற்று. தமிழில் உள்ள அடர்த்தி ஆங்கில மொழிபெயர்ப்பில் இல்லை என்றாலும் சொற்கள் அவற்றுக்கு அளிக்கப்பட்ட வேலையைச் சரியான சமயத்தில் செவ்வனே செய்கின்றன என்றுதான் நினைக்கிறேன். சொல்லப்போனால், no sooner -> the unruffled pond என்பதில் உள்ள மிரட்டலும், entered my thoughts -> than the waves began என்ற அதன் நிறைவேற்றலும் இதற்கு முந்தைய வரிகளுடன் ஒத்துப் போகின்றன என்றும் தோன்றுகிறது. மொத்தத்தில், சில லாபநஷ்டங்கள் இந்தப் பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கின்றன.

(‘தவளை ஒன்று நீரில் பாய்ந்தது‘ என்பதற்கு ‘A frog had dived into the water,’ என்பது பரிசீலிக்கப்பட்டு, தவளை டைவ் அடிக்குமா என்ற யோசனையின் பேரில் ‘A frog hopped into the water,’ என்று மாற்றப்பட்டது. ‘Dived‘ என்பதில் உள்ள தீர்மானமும் விசையும் ‘hopped‘ என்பதில் இல்லைதான். ‘hopped‘ என்றால் தவளை  அலட்சியமாக அடுத்த அடி எடுத்து வைப்பதுபோல் தண்ணீருக்குள் இறங்கிற்று என்று தோன்றுகிறது – அடுத்த வரி, ‘தாமரைப் பூவை ரசிக்கப் போகிறதாம்.’ என்பதில் உள்ள விளையாட்டுத்தனம் இதற்குப் பொருந்துகிறது. ‘To appreciate the lotus flower, apparently. ‘)

(தாமரைப்பூ என்பதை lotus என்று சொன்னால் போதாதா, அது என்ன lotus flower என்று கேட்கலாம், நியாயமான கேள்விதான்)

oOo

சும்மா இருக்கும்போதுகூட சும்மா இருக்க முடியாதவர் கவிஞர் என்பதை அறிந்தோம் – மேலுக்கும் கீழுக்கும் பார்த்துக் கொண்டேயிருப்பவர் இப்போது வானத்தைப் பார்க்கிறார். அங்கு அவருக்குக் காத்திருக்கிறது ஓர் அதிர்ச்சி – ‘வெறுமனே வானத்தைப் பார்த்தேன். ஹா!‘. இதற்கான முதல் முயற்சி, ‘I was staring at the sky vacantly. And Lo!‘- ரொம்ப உரையாடலாக இருக்கிறது, அது தவிர “Lo!” என்றெல்லாம் ஆச்சரியப்படுவது ஒரு மந்திரவாதியை ஞாபகப்படுத்துகிறது என்றெல்லாம் யோசித்து, ‘At the sky, vacantly I stare. Ha!‘. என்பது முடிவாயிற்று. நியாயப்படி பார்த்தால் ‘பார்த்தேன்‘ என்பது ‘stared‘ என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாருங்கள், தமிழில் காலம் ஒரு ஆஸ்மாட்டிக் தன்மை கொண்டது. நிகழ்காலம் என்பது கடந்த காலமும் எதிர்காலமும் சந்திக்கும் கூடுதுறை, இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று ஒரு ரேஞ்சுக்குள்தான் எதுவும் நடக்கிறது. தமிழில், ‘வானத்தைப் பார்த்தேன்… மேனகை அப்பத்தான் விழுகிறாள்’ என்று எழுதலாம். நம் அனுபவ காலவரிசைக்கிரமம் இப்படிதான் இருக்கிறது. ஒரு விஷயம் முடிந்து போகும்போது அதன் அனுபவஸ்தர்களாகிய நாம் முடிந்து விடுவதில்லை, அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில், “I looked… Menaka was just then falling” என்றெல்லாம் எழுதினால் தமிழிஷாக இருக்கும், tense agree ஆகவில்லையே என்று சந்தேகப்படுவார்கள். சில பேருக்கு படிக்கவும் நன்றாக இருக்காது. எனவேதான் எதற்கு வம்பு என்று, ‘vacantly I stare,’ நாம் நிகழ்காலத்தில்தான் இருக்கிறோம்.

இப்போது என்ன நடக்கிறது? ‘வானத்தை விட்டுத் தலைகீழாக/ சாபம் கொண்ட மேனகை அப்பதான்/ விழுகிறாள். இருக்கிறாள் விழுந்து கொண்டே.’ இது ஆங்கிலத்தில் முதலில், ‘Out of the sky, upside down/ I saw accursed Menaka fall. / She kept on falling. ‘ ரொம்பவே தமிழிஷாக இருக்கிறது, காலவழு ஏதோ இருக்கிற மாதிரி இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தபின், ‘Just then, out of the sky, headlong,/ accursed Menaka falls,/ and falls.‘ இப்போதும்கூட ‘just then‘ என்பது அந்த அளவுக்குச் சரியான ஆங்கிலமா என்ற சந்தேகம் இருந்தாலும், ‘அப்பதான்‘ என்பதில் உள்ள பேச்சுத்தன்மை அதில் இருப்பதால் சரியான தேர்வுதான் என்று பாராட்டிக்கொள்ளலாம், தப்பில்லை.

oOo

இனி வரும் மூன்று வரிகளும் மிக அழகியவை – ‘இந்திர லோகத்து எழுவகை வண்ணம்/ மிளிரும் ஆடை விண்ணிலே அவிழ/ விழுகிறாள் குளத்தில் மேனகை தலைகீழாய்‘ வானத்தில் வண்ண ஆடைகள் அவிழ்ந்து பறக்கின்றன, ஒளியில் அவை மிளிர்கின்றன. ஆடைகள் விலகி நிலைகுலைந்து தலைகீழாய் குளத்தில் விழுகிறாள் மேனகை.

இந்த மூன்று வரிகளும் எவ்வளவு குறைவான சொற்களில் எவ்வளவு விஷயங்களை உணர்த்துகின்றன என்பதை எழுதுவதானால் அதற்கு ஒரு தனிப்பதிவு வேண்டும். அது எதுவும் இல்லாமலேயே நாம் சுலபமாக, ‘தன் நிலை குலைந்து மேனகை விண்ணிலிருந்து வீழ்ந்தாள்‘, என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது சொல்லப்பட்ட விதம், அதன் அழகும் அவலமும் உணர்வுடன் காட்சிப்படுத்தப்படும் பன்னிரண்டே சொற்கள், இது கவிதையிலன்றி வேறெங்கு சாத்தியம்? புத்திசாலித்தனம், ஆழமான சிந்தனை, மெய்ம்மை, உண்மைக் குரல் என்ற விஷயங்களுக்குப் போவதற்கு முன் இப்படி எழுத முடிவதுதான் கவிஞனின் முதல் தகுதி, சொற்களை இப்படி கட்டமைப்பதுதான் அவனது கற்பனைத்திறன்.

ஆங்கிலத்தில் இது எப்படி இருக்கிறது? ‘Dazzling with the seven colors of Indra’s Realm/ her garment unfurling in the sky,/ into the pond headlong Menaka falls.‘ எனக்குத் தெரிந்தவரை இது குறை சொல்ல முடியாதபடிதான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழின் கச்சிதம் எங்கே? நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ‘இந்திர லோகத்து எழுவகை வண்ணம்‘, ‘the seven colors of Indra’s Realm‘ என்று அந்நியப்படுவது ஒரு மாதிரி பில்டர் காப்பி கேட்ட இடத்தில் இன்ஸ்டன்ட் காபியைக் கொண்டு வந்து வைத்தது மாதிரிதான் இருக்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பு முயற்சியே ஒரு வகையில் பில்டர் காபியை இன்ஸ்டண்ட் காப்பி ஆக்கும் முயற்சி என்று சொல்லலாம். ஆங்கில மொழி வரலாற்றில் இந்திரலோகம் இடம் பெறவில்லை என்பது நம் குறையல்ல, ஆனால் இந்த மொழிபெயர்ப்பு விஷயத்தில் அதனால் குறைபட்டுதான் நிற்க வேண்டும்.

இதற்கு அடுத்த வரி, ‘எவரும் இல்லை என்னைத் தவிர.’ மொழிபெயர்க்க எளிது. ஆனால், ‘There was no one else but me,’ என்பது சரியா அல்லது ‘There is no one else but me‘ என்பது சரியா என்று யோசித்துப் பார்க்கப்பட்டு, ‘No one else but me,’ என்ற இடத்தில் வந்து நின்றிருக்கிறது. இதுவே, ‘None, but me‘ என்றும் இருக்கலாம், ஆனால் பிறர் இல்லை என்ற சுட்டுதல் இருக்குமா, தெரியவில்லை.

oOo

அடுத்து, ‘காத்திருந்தேன் மேனகை வெளிப்பட,/ வெளியில் எழுந்தது மீன்கொத்திப் பறவை.” ஆங்கிலத்தில் நிறைய காலவழுக்களை உருவாக்குகிறது. தமிழில், காத்திருந்தேன், என்பது காத்துக்கொண்டிருந்தேன் என்ற அர்த்தத்திலும் படிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ‘காத்திருந்தேன்‘ என்பதை நேரடியாக ‘I waited‘ என்று மொழிபெயர்த்தால் அடுத்து நடப்பது எல்லாமும் கடந்த காலத்தில் நடப்பவையாய் இருந்தால்தான் அங்கே சரிப்படும். எனவே, ‘I was waiting for her to emerge when/ into the air a Kingfisher rose,‘ என்று மிகச் சரியாகவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் பின்னர் வாசித்துப் பார்க்கும்போது இது கொஞ்சம் இயந்திர மொழியாக்கம் போலிருப்பதாய் தோன்றிய காரணத்தால், ‘I waited for Menaka to rise,/ into the air a Kingfisher rose,’ என்று மாற்றப்பட்டது. இது பிரச்சினையான மொழிபெயர்ப்புதான், யாராவது கேள்வி கேட்டாலும் சரியான பதில் சொல்ல முடியாது. ஆனால் இப்படி மொழிபெயர்க்கப்பட்டிருப்பதில் ஒரு அழகு இருக்கிறது என்று தோன்றுகிறது. ”I wait for Menaka to rise,/ into the air a Kingfisher rose,’ என்றும் எழுதலாம். இன்னும் பல சாத்தியங்களும் இருக்கின்றன. எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம் கற்பனையைப் பொருத்தது. ஆனால் எதுவும் முழுத்திருப்தி கொடுக்காது என்று தோன்றுகிறது.

கவிதை, ‘அலகிலே மீனுடன் நிழலுக்குப் பறந்தது./ தெளிவாய் நீளமாய் மறுபடி வானம்.’ என்று முடிந்து விடுகிறது. இதுவே ஆங்கிலத்தில், ‘A fish in its beak, seeking/ a shadowed haunt it flew./ Clear and blue, yet again, the sky’ என்று ஆகியிருக்கிறது. ‘நிழலுக்குப் பறந்தது‘ என்பது எப்படி ‘seeking a shadowed haunt it flew,’ என்று ஆகும் என்பது சரியான கேள்வி.  flew into shadows என்று நானானால் செய்திருப்பேன். ஆனால் நகுல்வசன் இந்தக் கவிதையில் சொல்லப்படாத, ஆனால் கவிதையால் சொல்லப்படும் முக்கியமான ஒன்றைச் சுட்ட விரும்புகிறார் என்று நினைக்கிறேன். இங்கு கொஞ்சம் மிகையான சுதந்திரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டலாம், அல்லது, அது shadowed haunt என்பது எதைச் சொல்கிறது என்று யோசிக்கலாம். என் பாணியில் அதைச் செய்கிறேன்.

oOo

பதாகையில் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை வந்தது- இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல். ந்யூஸ்டாட் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய மொழி எழுத்தாளரும் மொசாம்பிக் தேசத்தவருமான மியா கோடோ அளித்த நன்றியுரையின் தமிழாக்கம். அதன் முடிவில் அவர் ஒரு கவிதையை வாசிக்கிறார், அதன் அவ்வளவு பிரமாதமாய் இல்லாத தமிழாக்கம் இது –

வேறொரு வாழ்வில் நான் பறவையாய் இருந்தேன்

பரந்து விரிந்த சூழ்நிலங்களையும்
பறத்தலில் தொட்டுச் சென்ற சரிவுகளையும்
நினைவில் பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.

ஒற்றை மேகமும் அதன் அலட்சிய வெண்தடமும்
என்னை மண்ணில் பிணைத்திருக்கின்றன.

பறவைச் சிறகின் இதயத்துடிப்பாய் வாழ்ந்தேன்,
மண்ணைப் பசித்து வீழும் மின்னலென வீழ்ந்தேன்.

என் இதயத்தில் இருக்கும் அந்தச் சிறகை.
தன் நினைவைக் காலத்தில் பாதுகாப்பவனாய்
பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்,

வேறொரு வாழ்வில் நான் பறவையாய் இருந்தேன்,
வேறொரு பறவையில் நான் உயிராய் இருந்தேன்.

World Literature Today 

நினைவென்பது மறைவில் இருப்பது. அன்றொரு நாள் மேனகை வீழ்ந்தாள், மரங்கொத்தியாய் மாறி மறைந்தாள், என்பதல்ல இக்கவிதை சொல்வது. அவள் ஒரு shadowed hauntல் வாழ்கிறாள். ‘தெளிவாய் நீலமாய் மறுபடி வானம்‘, என்றாலும் இது முன்னிருந்த வானல்ல. மேனகை வீழ்ந்த வானம், மரங்கொத்தி பறக்கும் வானம். நினைவின் சுவடு கொண்ட, ஆனால் அதன் மூட்டமில்லாத வானம்.

Re-enchanting the World‘ என்ற தன் உரையில், மியா கோடோ, ‘ஒவ்வொரு கண்டத்திலும், பல்வேறு தேசங்களைத் தன்னுள் கொண்ட தேசமாய் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம்,’ என்று சொல்கிறார். அவற்றை உயிர்ப்பிப்பதுதான் கலைஞனின் பணி,மீண்டும் மாயத்தால் நிறைத்தல் (Re-enchantment) என்பது இதுதான். இதுவே மொழிபெயர்ப்புக்கான தேவையும்கூட.

மறைந்த கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.

ஒளிப்பட உதவி – Alcyone, The Kingfisher

The Kingfisher

நகுல் வசன்

image1

 

The sky was clear and blue
barring the clouds gathering in the South.
No sooner the unruffled pond
entered my thoughts than the waves began;
A frog hopped into the water.
To appreciate the lotus flower, apparently.
At the sky, vacantly I stare. Ha!
Just then, out of the sky, headlong,
accursed Menaka falls,
and falls.

Dazzling with the seven colors of Indra’s Realm
her garment unfurling in the sky,
into the pond headlong Menaka falls.
No one else but me.

I waited for Menaka to rise,
into the air a Kingfisher rose.
A fish in its beak, seeking
a shadowed haunt it flew.
Clear and blue, yet again, the sky.

  • மரங்கொத்தி, ஞானக்கூத்தன் (ஆங்கில மொழியாக்கம்)

 

மொழிபெயர்ப்பு – கற்பனைக்கான வெளி

 
The Lights of Brindisi
 
At night, in the harbour of Brindisi,
Angels bearing lamps were flying, and fires
Revealed their faces upturned on the sea.
– O real leaves, the walls of the closed garden
Distance you always; smiling face,
Tilted, silver in the summit of the trees,
You always keep the stormy gate shut.
But I can see you tonight; signature of foam
That the boat crosses and leaves, in the night.
 
Yves Bonnefoy, Translated by Anthony Rudolf, 1966, The Times Literary Supplement
 
ப்ரின்டீசியின் விளக்குகள்
 
இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,
தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்
அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்.
-ஓ! நிஜ இலைகளே, 
பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்
உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;
மரங்களின் சிகர வெள்ளியாய்
தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,
புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே.
ஆனால் இன்றிரவு என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது; 
நுரையின் முத்திரையே,
கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்.
 
 
முதலில் ஒரு குறிப்பு. இது ஈஃப் பன்ஃபுவா (Yves Bonnefoy) எழுதிய பிரஞ்சு கவிதையின் நேரடி மொழிபெயர்ப்பல்ல. அந்தோணி ருடால்ப் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்தான். எனவே, பிரஞ்சு கவிதைக்கும் தமிழாக்கத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கலாம்.
 
குறிப்பாக, ‘O real leaves‘ என்பதை, ‘ஓ! நிஜ இலைகளே’ என்று மொழிபெயர்த்திருக்கும் நகுல்வசன், அதைத் தொடர்ந்து ‘smiling face,’ என்பதை ‘நகைமுகமே’ என்றும், ‘signature of foam‘ என்பதை ‘நுரையின் முத்திரையே,’ என்றும் மொழிபெயர்த்திருக்கிறார். இதற்கான சமாதானம்- ஆங்கிலத்தில், ‘smiling face… you‘, என்று சொல்வதும், ‘signature of foam‘ என்பதற்கு முன் ‘But I can see you tonight;‘ என்று வந்திருப்பதும். இதில் முந்தைய சமாதானத்தை எந்த சங்கடமும் இன்றி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் பிந்தையது, சிறிது பிரச்சினைக்குரியது: ‘நான் உன்னைப் பார்க்கிறேன்’ என்பதைத் தொடர்ந்து ‘:’ என்று வந்திருந்தால் பரவாயில்லை, அது அடுத்து வருவதைச் சுட்டுவதாய் இருக்கும். ஆனால் ‘;’ என்ற குறியல்லவா வந்திருக்கிறது? பிரெஞ்சு கவிதையுடன் ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் இந்தக் கேள்விகளுக்கு விடை எளிதில் கிடைத்திருக்கும். இதையெல்லாம் இன்னொருவர் தமிழில் வேறு மாதிரி மொழிபெயர்க்கலாம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இது, இந்த மொழிபெயர்ப்புக்கான நியாயம்.
 
நகுல்வசன், முடிந்த அளவு, ஆங்கிலத்தில் உள்ள காட்சிகளின் வரிசை தமிழிலும் வர வேண்டும் என்று முயற்சிப்பவர். “At night, in the harbour of Brindisi,/ Angels bearing lamps were flying, and fires/ Revealed their faces upturned on the sea.” இதை நிதானமாகப் படிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். At night, in the harbour of Brindisi– என்பது ப்ரின்டீசி துறைமுகம் இருளில் இருப்பதைக் காட்சிப்படுத்துகிறது. தலைப்பு, The Lights of Brindisi என்று இருப்பதால், இந்த இருளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெளிச்சம் தெரிகிறது என்றும் நினைத்துக் கொள்வோம். அடுத்து, ‘Angels bearing lamps were flying‘ என்ற புதிரான வரியை நாம் அப்படியே கற்பனை செய்து பார்க்கும்போது விளக்கேந்திச் செல்லும் தேவதைகள் புலப்படுகிறார்கள். ஆனால் ஒரு காற்புள்ளிக்குப் பின், ‘and fires‘ என்று அந்த வரி துண்டாவதில் நெருப்புக்கு ஒரு அழுத்தம் கிடைக்கிறது. ‘Revealed their faces upturned on the sea.’ அவர்கள் முகங்களை வெளிப்படுத்தின- அவை கடலில் மேல்நோக்கிக் கிடந்தன. இப்போது நமக்குப் புரிகிறது, நாம் வானில் பார்த்தது விளக்கொளியை, கடல் நீரில் பார்ப்பது அவற்றின் வெளிச்சத்தில் பிரதிபலிக்கப்படும் தேவதைகளின் முகங்களை. இந்தக் காட்சியின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாதபோதும் ஒன்று சொல்லலாம். எது ஆகாயத்துக்கு உரியதோ, அது கடல் நீரில் உள்ளது, ஒளியின் பிரதிபலிப்பில். 
 
இந்த வரிகள், “இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,/ தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்/ அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்,’ என்று சரியாகவே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். ‘அழல்கள்‘ என்ற சொல்லைக் கண்டு வேண்டுமானால் புருவம் உயர்த்தலாம். 
 
அடுத்து, ‘– O real leaves, the walls of the closed garden/ Distance you always;‘ என்பதை ‘-ஓ! நிஜ இலைகளே,/ பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்/ உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;‘ என்றுதான் மொழிபெயர்க்க வேண்டுமா? ‘நிஜ இலைகளே,’ என்று அழைத்தால் போதுமே, ‘‘ என்று ஏன் கூவ வேண்டும்? ‘ஓ!‘ என்பதில் ஓர் அவலத் தொனியும், அதைத் தொடரும், ‘நிஜ இலைகளே,‘ என்ற அழைப்பில் ஒரு மென்சோகமும் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறேன். கற்பனைதான், அப்படிதான் இருக்கிறது என்று சொல்லவில்லை. பூட்டப்பட்ட தோட்டத்தின் சுவர்கள் இலைகளை எப்போதும் தொலைவில்தான் இருத்துகின்றன- நெருக்கமில்லாத காரணத்தால் அவை உள்ளவாறே அறியப்படுவதில்லை. இது தோட்டத்து மரங்களின் இலைகளை நோக்கிப் பேசப்படுவதில்லை. அறியப்படாத, ஆனால் உணர்வின் எல்லையில் நிழலாடும் ‘நிஜ’ இலைகளே அழைக்கப்படுகின்றன, துல்லியமாகப் பேசுவதானால் ‘invoke,’ செய்யப்படுகின்றன என்றுகூடச் சொல்லலாம். 
 
முதலில் ‘எது ஆகாயத்துக்கு உரியதோ, அது கடல் நீரில் உள்ளது, ஒளியின் பிரதிபலிப்பில்,’ என்று கண்டோம். அடுத்து, எது தொலைவில் உள்ளதோ, அதன் மெய்வடிவம் நிழலாட்டமாய் உணர்ந்து, அழைக்கப்படுகிறது என்று காண்கிறோம். சேய்மையில் இருப்பினும் நிஜத்தின் அண்மை உணரப்படாமல் இல்லை, அதன் வடிவம் பூரணமாய் வெளிப்படுவதில்லை, அவ்வளவுதான். 
 
smiling face,/ Tilted, silver in the summit of the trees,/ You always keep the stormy gate shut‘ – எத்தனை அழகிய வரிகள். நிலவைப் பேசுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் ‘stormy gate‘? இன்னதுதான் என்று தீர்மானமாகச் சொல்லவே முடியாது என்று தோன்றுகிறது. மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் எப்போதும் தொலைவில் இருக்கும் நிஜ இலைகள், என்பதைத் தொடர்ந்து, மரங்களின் உச்சியில் சிரிக்கும் நிலவு புயற்கதவை எப்போதும் பூட்டி வைத்திருக்கிறது என்பதில் ஏதோ ஒரு ஆசுவாசம் தொனிப்பது போல்தான் தோன்றுகிறது. “மரங்களின் சிகர வெள்ளியாய்/ தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,/ புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே,” என்ற தமிழாக்கம் சிக்கலற்றது போல்தான் தெரிகிறது. ஆனால், ‘You always keep the stormy gate shut‘ என்பதை ‘நீ எப்போதும் புயற்கதவைப் பூட்டி வைத்திருக்கிறாய்” என்பதற்கும் “நீ எப்போதும் புயற்கதவை அடைத்து விடுகிறாய்,” என்பதற்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. புயற்கதவை பூட்டி வைத்திருக்கிறாய் என்பதில் தெரியும் ஆசுவாசம், புயற்கதவை அடைத்து விடுகிறாய் என்பதில் இல்லை – உடைத்துப் பீறிட்டெழுக் காத்திருக்கும் உணர்வுகளின் அழுத்தம் தெரிகிறது என்றே சொல்லலாம். இந்த இரு வாசிப்புகளும் கவிதையின் பொருளையே மாற்றிவிடக் கூடியவை. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது மொழிபெயர்ப்பாளனின் முடிவு. இங்குதான் மொழிபெயர்ப்பாளனின் கற்பனையும் படைப்பூக்கமும் செயல்படுகின்றன. 
 
ஏனெனில், “But I can see you tonight; signature of foam/ That the boat crosses and leaves, in the night,” இன்னும் பல தேர்வுகளுக்கு இடம் கொடுப்பது. ‘But I can see you tonight;‘, என்பதை, ‘நான் இந்த இரவில் உன்னைக் காண்கிறேன்‘ என்ற இடைநிறுத்தத்தோடு விட்டுவிடலாம். யாரை என்ற கேள்விக்குச் செல்லாமல், கடல் நுரைத்துக் கொண்டிருக்கிறது, அதைக் கடந்து செல்லும் படகு, அது விட்டுச் செல்லும் நுரைகளாய் தன் கையொப்பத்தையும் இட்டுச் செல்கிறது. இந்த நுரைகளில்தான், நான் உன்னைக் காண்கிறேன் என்று சொல்கிறார் பன்ஃபுவா என்று புரிந்து கொள்ளலாம். அப்படி யாரைத்தான் காண்கிறார் என்றால், முதலில் பார்த்த கடலில் தெரியும் தேவதை பிம்பங்களுக்குப் போகலாம். அது போன்ற ஏதோ ஒன்றைக் காண்கிறார்.  
 
ஆனால் நகுல்வசன் தமிழாக்கம், “புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே,” என்பதைத் தொடர்ந்து, “நுரையின் முத்திரையே,/ கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்,” என்று இரட்டிக்கிறார். இலைகளையும், நிலவையும் அழைத்துப் பேசியதுபோல், கடல் நுரையையும் அழைக்கிறார். கடக்கும் படகு உன்னையும் விட்டுச் செல்கிறது.
 
கவிதையின் பொருள் தர்க்கத்தின் பாற்பட்டதல்ல. சொல்லப்போனால் எதுவொன்று சொற்களின் நேரடிப் பொருளாகிறதோ அது கவித்துவத்துக்கு எதிரானது. கவிதை, சுட்டல்களைக் கொண்டு சொல்லின் பொருளை அதன் அகராதிக் குறிப்புகளுக்கு அப்பால், சொற்களின் பொருளை அவற்றின் கூட்டுத்தொகைக்கு அப்பால் கொண்டு செல்கிறது. அவ்வாறே கவிதை ஒருமையடைகிறது. இந்தக் கவிதையில் சொற்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளால் பொருள் பெறுவதில்லை, ஒன்றன்மீது ஒன்று அடுக்கப்பட்ட பிம்பங்களாய் பொருள் கொள்கிறது. அதன் பொருள் கற்பனையால் மட்டுமே உணரப்படக்கூடியது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தொனிக்கலாம்- ஆனால் கவிதையை வாசிப்பவனானாலும் சரி, மொழிபெயர்ப்பவனானாலும் சரி, அவனது திறன்களில் மிக முதன்மையானது கற்பனையே. அதைக் குறைத்து மதிப்பிடுவது மொழியின் இயல்பை புரிந்து கொள்ளத் தவறுவதாகும்.
 
இந்தக் கவிதையைப் பேசும்போது நகுல்வசன் எழுப்பிய கேள்வி- இந்தப் பதிவுக்குப் பொருத்தமான முடிவாக இருக்குமென்று நினைக்கிறேன்: 
“அல்லது, இது அன்றாட பிரத்யட்ச உண்மையைக் காட்டிலும் செறிவார்ந்த ஒரு ஸ்டீவென்ஸிய ‘உன்னதத்தை’ நோக்கிய தேடலுக்கு இணையானதாய் இருக்கலாமல்லவா? “நாம் கட்டியெழுப்புவன, வளர்ப்பன, செய்வன, இவை எல்லாம் நாம் சுட்டுவன, நம்புவன அல்லது வேட்பனவுடன் ஒப்பிட்டால் மிகச் சிறியவை,” என்று வாலஸ் ஸ்டீவன்ஸ் ஒரு கடிதத்தில் எழுதினார். “தட்பவெப்பம் பழகிப் போகிறது/ சூழ்நிலமும் மற்றவையும்;/ ஆன்மாவை சன்னதம் கொள்வதற்காகவே/ உன்னதம் கீழிறங்கி வருகிறது,/ ஆன்மாவும் வெட்டவெளியும், / வெறுமையான ஆன்மா/ சூன்யமான வெளியில்.” மகத்தான மனிதர்களின் பீடங்களில் பறவைகள் மலம் கழிக்குமானால், உன்னதமென்பது வேறெங்கிருந்தோதான் வந்தாக வேண்டும். உள்ளத்தின் எல்லையில் தன் கரம் நோக்கும் கற்பனைக்கே அது சாத்தியமல்லவா? நிஜமான இலையும் நிஜமான நிலவும்கூடப் போதாது, நுரைத்தெழும் முத்திரைகளையும் விட்டுச் சென்றாக வேண்டும், புலப்படும் ஒளியைப் பிரிந்தாக வேண்டும், பிம்பத்தின் மெய்ம்மை மட்டுமே கைப்பற்றத்தக்கது”.

4′33″ ப்ளூஸ்

 
சுட்டுகளற்ற கவிதை
சுட்டுதலாகி
முற்றிடினும்
இடைவெளிகளின் வெண்ணொலி.
ஒளிப்பட உதவி – animalnewyork.com