மலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)

நகுல் வசன்

4

என்பே வெற்றிபெறும். எப்போதும் இதையே அறிந்து கொள்கிறேன்.
விருத்திப் பெருக்கி அதன்மேல் இருத்திருக்கும் தசையோ
தன்னையே காமுற்றிருக்கும்:
தன் இரத்தநாள வனத்தையும், நரம்புப்  புதர்காட்டையும்
முலையையும் பாலுறுப்பையும் தொடையையும்  பிறப்பித்துக் கொண்டே;
தன் துன்பத்தின் வேதனையில் மரிக்கும்.
எங்கோ அதனடியே,
வெளிச்சமற்ற உட்புறத்தில், என்பு மீந்திருக்கும்
நிர்தாட்சண்யமற்ற வெண்மையாக.

அதை எதிர்த்திருப்பதோ ஆழ்ந்த
விலங்கையொத்த ஏதோவொன்று. தன்னையே தழுவிக்கொள்ளும்
உடம்பின் இயல்புணர்வுத் தழுவுதல்.  குருதியின்  பொறி.
தசையையும் உருவகத்தையும்
சுவர்க்கலோக கனவுகளையும் பூலோகப் பெண் முலைகளயும்
பிணைக்கும் ஏதோவொன்று.
இரவில் அகன்மிடிற்றினூடே
சத்தமிட்டு ஆர்ப்பரிக்கும்,
அலறும் அல்லது பாடும் ஏதோவொன்று.

எனினும் என்பே வெல்கிறது. எப்போதும். எதிலும் பங்கேற்காது
குருதியின் ஆணைகளெதற்குமே அசைந்து கொடுக்காது
வளையாது
உடலின் அப்பட்டமான இச்சைகளுக்கு சாட்சியாக
ஒளிந்து பரவியிருக்கும் மனதின் இச்சைகளை பார்த்தபடி
இறுதிவரையிலும் அதுவாகவே இருக்கும்
அது.

5

என்பை  அறிதல், நன்றாக அறிதல்:
உள்ளார்ந்திருக்கும் அதன் கடினமான கட்டாயங்கள்
அதன் சிடுக்குகள்;
உண்டு புணர்ந்து
மலம்கழித்து உறங்கி
அதை அன்னியோன்யமாக வைத்திருப்பது
ஒருகால்  ஓர் வாழ்க்கைத் தொழிலாகவும் இருக்கலாம்:

அதை மெய்ப்பிக்கும்
மனவலிமையையும் காதலையும் கோரும்
ஒரு வகையான வாழ்தல் முறை.
இப்போது பிடிபட்டுவிட்டதென்று நினைக்கிறேன் –
காதலே – உன்னால்தான்.

இங்கு பலமுறை வந்திருக்கிறேன். அனேகமாக டிசெம்பர்  மாதத்தில்.
இப்போதோ மே மாதத்து முதல் மழையுடன் வரும்போது
என் வலியிடமிருந்து விலகியிருப்பதை உணர்ந்து
ஏதோவொன்றை கூறவும் விழைகிறேன்.

6

காதலைப் பற்றி  நான் அதிகமாக அறிந்ததில்லை.

என் தந்தை என் தலையை உருவமைத்து பிரத்தியேகமான
மூக்கையும்  எனக்களித்தார். தரவுகளைக் கற்பித்தத்தை தவிர வேறெதையும்
என் தாய் எனக்கு விட்டுச் செல்லவில்லை. மிடுக்கும்  நாணமும்
பதற்றமும் புணர்ச்சியைப் பற்றிய பயமும் கலந்து
என்னை உருவாக்கிய
அவர்களின் முதல் செயகையப் பற்றி
எதுவுமே கூறப்பட்டதில்லை.
அமைதியாகவா அல்லது உணர்ச்சிமிகுந்தா
சராசரியாகவா அல்லது ஆழ்ந்தா
அது எப்படி இருந்ததென
என் கண்கள் அறிந்து கொண்டதில்லை.  முதல்
ஒலித்தடயங்களில் எதுவும் எஞ்சவும் இல்லை.

தன்னந்தனியே, காதலை நாடியே இங்கு வந்திருக்கிறேன்.
இப்போது அது கிட்டிவிட்டதால்
தசையும் என்பும் அதன்  களத்தில் எதிரிகளாக
பழைய பிளவுகளைக் காண்கிறேன்.
குளிருக்கெதிராக சளைக்காமல் காதலர்கள்
ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போது புரிகிறது.
உலகை இரண்டாய்ப் பிளக்கும்
பழம்பெரும் சக்திகளை  தவிர்க்கவியலாமல்
காதலிலும் அவர்கள் கண்ணுற வேண்டும் போலும்.

(This is an unauthorised translation of selected parts of the poem, “Malabar Hill” by Kersey Katrak . The Tamil translation is intended for educational, non-commercial display at this particular web page only).

 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.