பசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்

தமிழில்: சரவணன் அபி

(Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

அத்தியாயம் – 2

அந்த குதிரைவண்டி ஜெபர்சன் வீதியில், கறுப்பினத்தவரின் தேவாலயம் தாண்டி, வறியவர்கள் விடுதியையும், காலியான மீன் சந்தையும் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. “அவரது மறைவுச் செய்தி என்னை மிக்க சோகத்தில் ஆழ்த்தி விட்டது,” டாக்டர் பெயர்ஸ் சொன்னார். “அன்புக்குரியவர்களுக்கு மட்டுமல்ல, அவரது மறைவு இந்த நகருக்கும், மருத்துவத்துறைக்குமே கூட பேரிழப்பு.”

ஜூலியா ஒன்றும் சொல்லாமல் தலையசைத்துக் கொண்டாள்: ஓர் ஒத்திகை பார்க்கப்பட்ட, பண்பட்டதோர் மௌனம். மழை தூறிக் கொண்டிருக்கும்போதும் தொலைவில் எங்கோ தீயணைப்பு மணி ஒன்று ஒலிக்கிறது.

“இறக்கும்போது அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாரா என்ன?” குறுகிய இருக்கைகளினூடே குனிந்து டாக்டர் பெயர்ஸ் கேட்டார். “உங்களுக்கு சிரமமொன்றும் இல்லையென்றால் சொல்லுங்கள் – ஏனென்றால் இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விஷயம். அவர் திடீரென்று இறந்து போனார் என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.”

“அவர் நீண்ட நாட்கள் உடல்நலமின்றி இருந்தார்.”

டாக்டர் பெயர்ஸ் ஓர் எதிர்பார்ப்புடன் தலையாட்டிக் கொண்டார். ஆனால் மேற்கொண்டு ஏதும் பேசாமல் ஜூலியா தொலைவில் எங்கோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். நகரின்மேல் அந்தி ஓர் தெளிவற்ற மூடுபனி மூட்டம் போல் கவிந்துவிட்டது. நடைபாதையின் விளக்குத் தூண்களிலொன்றின் மேல் ஏணியில் நின்றவாறு விளக்கை ஏற்றுமொருவனின் கைகள் வெளிச்சத்தில் பளிச்சிடுவதை ஜூலியா கண்டாள். வில்லியம் இறந்தபோதிருந்த உடல் அவனுக்கு.

ஈமச்சடங்குகள் முடிந்தபிறகு அவளது மகன் ஜேக்கப்புடன் படியேறி வில்லியமின் படிப்பறைக்குச் சென்றதை அவள் நினைவுகூர்ந்தாள். சிதறிக் கிடந்த குறிப்பேடுகளை அடுக்கியவாறே அவனது கிழிந்த பழைய முகவரிப் புத்தகத்தைத் தேடினாள். மேசைக்குப் பின்னால், செடார் மரப்பெட்டிக்குள் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் பட்டு நூலினால் கட்டப்பட்ட நான்கு காகிதக் கட்டுகளை கண்டுபிடித்தாள். அவனது நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மொடமொடத்துப் போன அந்தக் காகிதங்களைப் புரட்டினாள். பேராசிரியர்களுக்கோ, பதிப்பாளர்களுக்கோ அல்லது எந்தவொரு மருத்துவருக்குமோ, யார் யாருக்கெல்லாம் அனுப்பிய அத்தனைக் கடிதங்களுக்கும் ஒரு பிரதி அவன் எடுத்து வைத்திருந்தது போலிருந்தது. பெட்டிக்கு அடியில், அவளது அழகிய எழுத்தில் எழுதப்பட்ட சிறிய கடிதக்கட்டு ஒன்றும் தென்பட்டது. ஒன்றை உருவி சத்தமாகப் படித்தாள்.

அக்டோபர் 22, 1819

மிக இனிய, ஆனால் வருத்தம் தரும் விதம் தொலைவிலிருக்கும் வில்லியமிற்கு,

குளிர்காலம் துவங்கிவிட்டது. அன்னங்களும், கொக்குகளும், வாத்துகளும் தெற்கு நோக்கி பறந்துவிட்டன, இலையாடையின்றி நிர்வாணமாக நிற்கும் ஓக் மற்றும் மேப்பிள் மரங்களின் குளிர்தென்றலின் வழியனுப்புதலுடன். பறவைகள் தேடும் இதம் காரணமாக இருக்கக்கூடும், பிற மிருகங்களைப் போல் நமக்கும் இதமும் சுகமும் தேவையென்றாலும், நமது ஆசைகளை நாம் ஒழுக்கத்தின் பாற்பட்டு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது அல்லவா? இதுவொரு கொடுமை என்று நான் சொன்னால் நீ ஏற்பாய்தானே?

உன்பால் பிரிய அர்ப்பணிப்புடன்,

ஜூலியா

தோன்றிய புன்னகை ஜூலியாவின் ஒரு சிறிய கேவலில் முடிந்தது. இன்னொரு கடிதத்தை எடுத்தாள்.

ஜூலை 9, 1820

என் பிரிய ஜூலியா,

நமது பிரயாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன். வாக்-இன்-த-வாட்டர் என்ற கப்பலில் ஆகஸ்ட் 7ம் தேதி காலை 6.15க்கு நாம் கிளம்புகிறோம். மறுநாள் மாலை ராணுவ தளத்திற்கு சென்று சேர்வோம். நமது இல்லத்திற்கு தேவையான தட்டுகள், பாத்திரங்கள், துணிகள், திரைச்சீலைகள் கொண்டு வருவாய் என நம்புகிறேன்.

என் அன்பே, என் உடைமையே. நீ இல்லாதவரை நான் எப்படி முழுமையாக முடியும்? என் இதயம் உன் குரலின் நினைவில் துள்ளிக் கொண்டிருக்கிறது. என் குருதி உன் காலடி ஓசையின் வரவில் கொதிக்கிறது.

உன்பால் அர்ப்பணிப்புடன்,

வில்லியம்

அந்தக் கடிதத்தை அவள் கசப்பும், அற்புதமும், துக்கமும் ஒருசேர்ந்த கலவையான உணர்ச்சியுடன் நினைவுகூர்ந்தாள். வில்லியமிடம் அன்பு இருந்தது, பார்வைகளிலும், சில சைகைகளில், கடிதங்களில், சில வரிகளில் மட்டுமே வெளிப்படும் வண்ணம். எப்படி அவளால் அவனது கடுமையை ஏற்றுக் கொள்ளவும் விரும்பவும் முடிந்தது என்று இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஜூலியாவிற்கு திகைப்பாக இருந்தது. ஆனாலும் புருவங்கள் முடிச்சிட இதயத்தின் இறுக்கத்தை இளக்குவது போல் அவன் பார்க்கும் கடும்பார்வை அவளுக்கு விருப்பமாகவே இருந்திருக்கிறது. அவளது இளமையும், எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அவனது கறார்தன்மையும், முதிர்ந்த அணுகுமுறையும் ஒன்றையொன்று சமன்செய்து கொண்டன போலும் என்று தனக்குள் அவள் சொல்லிக்கொண்டாள். உணர்ச்சிக் கிளர்வும் இளமையும் எதனாலாவது சமன் செய்யப்பட வேண்டுமா என்ன? துக்கத்தை மகிழ்ச்சி சமன் செய்து நிம்மதியை அளித்துவிட முடியுமா என்ன?

“அந்தப் புத்தகம் பிரசுரமாகி முப்பத்தியைந்து வருடங்களாகி விட்டன என்றால் நம்பக் கடினமாக இருக்கிறது.” தலையை வியப்பில் அசைத்தவாறு மழை சடசடக்கும் சன்னல் கண்ணாடியைப் பார்த்தார் டாக்டர் பெயர்ஸ். “நான் சின்னஞ் சிறுவன். முழுகால் சட்டைகூட அணிந்திருக்கவில்லை.”

ஒருவேளை அவள் மிக சுயநலமியோ? சொல்லப் போனால், வில்லியமின் படைப்பு அவளை பாரிஸுக்கும், ஹாம்பர்கிற்கும் அழைத்துச் சென்றிருக்கிறது; மென்சிவப்பு முத்துச்சரமும், தந்த கூந்தலணிகளும், அழகிய மொரோக்கோ வேலைப்பாடுகள் கொண்ட விலையுயர்ந்த கண்ணாடி பாத்திரங்களும்… மேலும், அவளுக்கு ஒரு மகனை, ஜேக்கப் இல்லாத வாழ்வை, ஒரு கணம் கற்பனை செய்ய முயற்சித்தாள். அந்த எண்ணம் அரைக்கணம் கூட நீடிக்காமல் கசப்பான சுழலாய் உடனே மறைந்தது. டாக்டர் பெயர்ஸை நோக்கிப் புன்னகைத்தாள்.

“இன்றிரவு நீங்கள் கொண்டாடப்படுவீர்கள்,” அவர் கூறினார். “அவரது பிரபலமான ஆராய்ச்சிகளின் ஒரே சாட்சி நீங்கள் அல்லவா! அந்தச் சிறுவனைத் தவிர.”

“நான் ஒரு சாட்சியல்ல.”

டாக்டர் பெயர்ஸ் கவனமாக தலையசைத்தார்..

“அது முழுக்க முழுக்க, நோயாளிகள் அறையில் வில்லியமும் அந்தப் பையனும் சார்ந்த விஷயம்.” ஜூலியா தோள்களை குலுக்கினாள்: ஒரு தெளிவற்ற, நிராதரவான பார்வையுடன். “அவ்வளவாக என்னால் அந்த நாட்களை நினைவுகூர முடியவில்லை.”

****

செப்டம்பர் மாதம் நீரிணையிலிருந்து குளிர்காலக் காற்றைக் கொண்டு வந்தது. ஜூலியாவை கோடைக்காலம் முழுதும் வாட்டிய சுரத்தையும் நடுக்கத்தையும் போக்கியது. காலையுணவுக்குப் பின் போர் வீரர்கள் தங்குமிடம்தோறும் தொடர்ந்து சென்று அவர்களுக்கு வேண்டியன விற்கும் சட்லர்கள் கடையில் மாவு, முட்டைகள், சில அடி நீளத்திற்கு துணி கொஞ்சம் வாங்கிக்கொண்டு, மெதுவே நதியோர புல்வெளியில் நடந்தவாறே, மெல்லிய பருத்திச் சட்டைகளும் கோவணங்களும், கால்களில் மொக்கஸின் சப்பாத்துகளும் அணிந்த நாடோடிகள் தங்கள் படகுகளில் பொருட்களை ஏற்றுவதை பார்த்தாள். அணிந்திருந்த தடித்த கம்பிளியாடையின் கனம் அவளைச் சோர்வால் நிறைத்தது; அவள் நடுங்கினாள். நீரிணைக்கு எதிரே, அவர்களது குடிலின் புகை கசியும் சிம்னியும், மேற்கூரையும் தெரிய, மனம் சிறிது தெளிந்தது; பின் வில்லியமின் மேல் எண்ணங்கள் குவிந்தன.

பையன் வந்த பிறகு அவன் உற்சாகமாகவே இருந்தான், எனினும் ஒரு தொலைவு இருக்கத்தான் செய்தது: அதிகாலையில் எழுந்து, கணப்படுப்பில் தீயை மூட்டிவிட்டு, பையனைப்  பரிசோதித்துவிட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு விடுவான். அந்தியில் திரும்பி, ஒரு குவளை தேநீர் அருந்திவிட்டு, பையனின் அறைக்குள் மறைந்து விடுவான். சமையலறை மேடையின்மீது நிறைவடையாத ஒரு கடிதமும், அதன் முன்பு ஜூலியாவும் இருப்பார்கள். அவளது பேனா எழுதும் சத்தம் தவிர வேறெதுவும் அற்ற நிசப்தம்.

ஓரிரவு வில்லியம் அந்த அறைக்குள்ளிருந்து அவசரமாக வெளிவந்து அவனது குறிப்பேடுகளைப் புரட்டும் சரசரப்பு கேட்டது; பின் நீண்ட அமைதி. சிறிது நேரம் கழித்து கைகளை இடுப்பின் இருபுறம் வைத்துக்கொண்டு எதிரில் வந்து நின்றான்.

பையனுக்கு ஒன்றுமில்லையே?

கைகளால் காற்சட்டைப்பைக்குள் காசுகளை சலசலத்துக்கொண்டே புருவங்கள் நெரியக் கேட்டான். உணவெடுக்காமல் கிடக்கிறான், பசியெடுக்கிறது. சாப்பிடுகிறான், பசி மறைந்துவிடுகிறது. ஏன் என்று உனக்கு தோன்றுகிறதா?

ஜூலியா எச்சரிக்கையாக புன்னகைத்தாள்.

சொல்லு, என்றான் வில்லியம்.

கிசுகிசுப்பின் கூட்டிசை போல காற்று மரக்குடிலின் கதவைக் அறைந்து கடந்து சென்றது. ஜூலியா தலையசைத்தாள், எனக்குத் தெரியவில்லை.

ஆம், உனக்குத் தெரிந்திருக்காது. அவன் சிரித்தான். அவள் பிடரியின் மயிர்கற்றைகளை கோதினான். யாருக்குமே தெரியாது, அன்பே.

அவள் ஒன்றும் சொல்லாமல் அவன் கைகளை பற்றினாள். ஒரு வலிந்த புன்னகையுடன் அவள் விரல்களை அவன் மணிக்கட்டிலிருந்து பிரித்துவிட்டு சொன்னான். பிறகு முயற்சிப்போம். இன்றிரவு – சத்தியமாக.

மறுநாள் காலை வயிற்றில் ஒரு சுருள்வலியோடு விழித்தாள்.

நீர் கொதிக்க வைத்துவிட்டு, சமையறைக்குள்ளேயே பத்து பன்னிரெண்டு தடவைகள் சுற்றி வந்தாள். மறுபடியும் தோற்றுவிட்டேன், என்று எண்ணிக்கொண்டாள். மனதை இனிய நினைவுகளில் பதிக்கும் விதமாக அடுத்து எப்போது சூசனின் கடிதம் கொண்டுவரும் படகு வருமோ என்று நினைத்தாள். நேற்றிரவு, வில்லியமின் உணர்ச்சிகளைத் தூண்டும் முயற்சியில் மீண்டும் தோற்றுப் போனாள்: அவனது கடுமையான தொடர்ந்த உழைப்பே அவனது வீர்யத்தை செயலிழக்கச் செய்துவிடுகிறதோ என்று கசப்புடன் எண்ணிக்கொண்டாள். நான் தோற்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன், நான் மீண்டும் தோற்றுத்தான் விட்டேன். இந்த வார்த்தைகளை ஒரு துக்ககரமான, படைவீரர்களின் நடைப்பாடலின் சந்தத்தில் தனக்குள்ளே பாடிக்கொண்டாள்.

சமையலறையைக் கூட்டி துடைப்பத்தை தரைப்பலகைகளின் மேல் தட்டினாள். வில்லியமுடனான உரையாடல்களில் நிலவும் எரிச்சலூட்டும் தயக்கங்களை, அவனது ஒவ்வொரு தொடுகையிலுமிருக்கும் தாங்கவே முடியாத நிச்சயமின்மையை, அவள் வெறுத்தாள். இப்போதெல்லாம் அவளுக்கு, அவர்களிருவரும் தலை நரைத்து, இளக்கம் சிறிதுமில்லாது, காலையுணவுக்கு மேசையின் இருபுறமும் ஒரு வார்த்தையும் பேச இன்றி அமர்ந்திருக்கும் இரு அந்நியர்கள் என்பது போல் அடிக்கடி தோன்றும் காட்சி, தவிர்க்க முடியாத சினத்தையும் சோகத்தையும் ஒருசேர ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு குழந்தை அவர்களது பிரச்னைகளை தீர்த்துவிடக்கூடும்: வில்லியமின் சேய்மை, அவளது தனிமை. வீடு முழுதும் அவளது தளர்ந்த, உற்சாகம் குன்றிய மூச்சுக்காற்றினால் நிறைந்திருப்பதாக தோன்றியது.

அடுப்பைக் கூட்டும்போது, பையன் மற்றொரு அறைக்குள் நடக்கும் சத்தம் கேட்டது. கூட்டுவதை நிறுத்தினால், நடப்பதும் நின்றது. பிறகு மணி ஒலித்தது.

அறைக்குள் எட்டிப் பார்த்தாள். காலை வணக்கம், திரு ரோலு.

வணக்கம் மேடம். இந்தப் பனியை நீங்கள்தான் கொண்டு வந்தீர்களா?

ஜூலியா பணிவாக புன்னகைத்தாள். ஒரு குவளை தேநீர் கொண்டு வரவா?

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு பெண், வெண்ணிற கூந்தல் கொண்ட பனிமகள் – தன் தலையசைவில் பனியை கொண்டுவருபவள். வானின் குறுக்கே, பனிமான்கள் இழுக்க விரையும் தங்க ரதத்தில், தன் ஒரு தலையசைவில், தான் செல்லும் வழிதோறும் பனிப்பொழிவை உண்டாக்குபவள். அவள் நீதான் போல, இல்லையா?

அவள் மீண்டும் புன்னகைத்தாள். அவளை விட மூன்றே வயது சிறியவன் எனினும் இன்னும் குழந்தைகள் போல் எளிய பகடிகள் செய்வதில் விருப்பம். ஆனாலும் முட்டாள் அல்லன்: சில மதியங்களில் அவனது அறைக்குள் அவன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்கும், ஆனால் வில்லியமிடம் கையைக்கூட தூக்க முடியாதது போல் பாவனை செய்வான். படிக்கத் தெரியாது, ஆனால் ஓராயிரம் படகுப் பாடல்கள் தெரிந்து வைத்திருந்தான். அவற்றை அவ்வப்போது தனது கரடுமுரடான, ஆனால் அதேசமயம், இனிமையாகவும் தொனிக்கும் குரலில் பாடவும் செய்வான்.

நான் போய் உனக்கு தேநீர் கொண்டுவருகிறேன், என்றாள்.

தயவுசெய்து என்னோடு பேசு. இன்னும் கொஞ்ச நேரம்.

ஜூலியா சமையறைக்குள் சென்றாள், பின்னாலேயே அவனின் முனகல் கேட்டது.

அவளும் பிணியாளர்களை பேணியிருக்கிறாள், ஆனால் மூன்று நாட்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டதில்லை; இந்தப் பையனோ ஐந்து வாரங்களுக்கு மேலாக இங்கிருக்கிறான். சனிக்கிழமை காலைகளில் வில்லியம் பையனின் கட்டை அவிழ்த்துவிட்டு வேறு கட்டு போடுவான். அப்போதெல்லாம் கதவோரம் நின்று கேட்டுக்கொண்டிருக்கும் ஜூலியாவிற்கு, பையனின் பரிதாபமான குரலும், வில்லியமின் திருப்தி தோய்ந்த குரலும் பொறாமையைத் தூண்டும்.

கொதித்த நீரை எடுத்து குவளையில் தேநீர்த் தூளில் ஊற்றிக்கொண்டே ஏதோவொரு, நினைவில்லாத, இனிய பாடல் ஒன்றைப் பாடினாள். அது பையன் பாடும் பல படகோட்டும் பாடல்களில் ஒன்று என்று சட்டென்று தோன்றியபோது திடுக்கிட்டுப் போனாள்.

எனக்குத் தெரிந்த சிப்பேவா இனப்பெண்ணொருத்தியை நீ நினைவுபடுத்துகிறாய், என்றான் அவள் திரும்பி வந்தபோது. இல்லை – தவறாக ஒன்றுமில்லை, கோபப்படாதே.

அவள் தேநீர்க்கோப்பையை அவனிடம் நீட்டினாள். பின் திறந்திருந்த அறைக்கதவினருகே நின்றுகொண்டாள்.

அவள் மணமானவள், ஆனால் அதுவொன்றும் அவர்களினத்தில் ஒரு விஷயமே அல்ல.பெண்கள் பிற ஆண்களுடன் செல்வது அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறது, புரிகிறதா? லாக் டு போய்ஸ் பிளாங்க் அருகே அவர்களது கிராமம் அருகே சில நாள் தங்கியிருந்தோம், புயலொன்று ஓய்வதற்காகக் காத்திருந்தபோது. அப்போது அவள் எங்கள் முகாமுக்கு வருவாள், எரியும் தீயினருகே அமர்ந்திருப்பாள். மிக்க சோகத்துடன் இருப்பாள், உன்னைப் போலவே, எப்போதும் ஒரு சோகப் புன்னகை. அவள் – கண்கள் சுருக்கிக்கொண்டு, உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான் – அவள் ஒரு மரத்தைப் போல, முழுக்க கனிகள் காய்த்து நிற்கும் மரத்தைப் போல இருந்தாள். உனக்குப் புரிகிறதா?

யோசித்துப் பேசு, என்றாள் ஜூலியா, தயவுசெய்து.

நாங்கள் கிளம்புவதற்கு எங்கள் படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருக்கும்போது, என் சட்டையை அவள் பிடித்திழுத்தாள். நான் சியக்ஸ் குழுவால் பிடித்துச் செல்லப்பட்ட அவள் கணவனைப் போலிருக்கிறேன் என்றாள். அவள் பெயர் பசுமைப் பள்ளத்தாக்கின் பெண். அல்லது பசும்பெண், ஏதோவொரு பசுமையின் பெண், அல்லது அது போல் ஏதோவொன்று.

நீ அங்கே அவளை விட்டு வந்துவிட்டாய், அப்படித்தானே.

பையன் சிரித்தான். நான் என் சட்டையை அவளிடம் தந்தேன், அதன்பின் மூன்று வாரங்கள் எனக்கு அணிந்துகொள்ள சட்டையொன்றும் இல்லாமல் போனாலும். அடுத்த கோடையில் அவளைக் கண்டுபிடிப்பேன்.

உனக்கு நல்ல அதிர்ஷ்டம் அமைய வாழ்த்துக்கள், என்றாள் ஜூலியா.

கதவை சார்த்திவிட்டு, துடைப்பத்தை எடுத்துக்கொண்டு முன்னறைக்கு வந்து வீசிக் கூட்டினாள். அவன் சொன்ன கதை அவளுக்கு எரிச்சலூட்டியது; உறைந்து போன நதியில் தன்னந்தனியே அழுதபடி அலையும் ஒரு பழங்குடிப்பெண் அவள் முன் தோன்றினாள். தன் நினைவுகளை வில்லியம் பக்கம் திருப்ப முயன்றாள்: அவன் அந்தியில் வீடு திரும்பிவிடுவான்; அவள் அவனுக்காக வெங்காய சூப்பும் நேற்றைய இரவின் மீன்கறியும் தருவாள். பையனின் உடல்நலம் பற்றி விசாரிப்பாள். அல்லது மருத்துவமனையில் பிற நோயாளிகள் பற்றி கேட்பாள். பசியைப் பற்றி வினவுவாள்.

அவள் மறுபடி பையனின் அறைக்குச் சென்றாள். பையன் இரு கைகளையும் நெஞ்சின் குறுக்கே கட்டியபடி கட்டிலில் சிரித்தபடி அமர்ந்திருந்தான். அவனது செந்நிற சடைமுடி தோள்களில் புரண்டு கொண்டிருந்தது. தேநீர்குவளையை ஜூலியாவிடம் நீட்டினான். அவள் அதைப் பற்றியபோது அவன் குவளையை விடாமல் பிடித்துக் கொண்டான்.

இது நியாயமில்லை இல்லையா?

அவள் மூச்சு ஒருகணம் தடைபட்டது; புன்னகைக்க முயன்றாள். எது நியாயமில்லை?

என் காயத்தை நான் உனக்கு காட்டிவிட்டேன், அவன் கேட்டான், உன் காயத்தை நீ எனக்கு காண்பிக்கவில்லையே?

(தொடரும்)

அத்தியாயம் 1

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

ஒளிப்பட உதவி – PBS

 

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.