தேவதைகளின் இன்றைய களம்

சரவணன் அபி

பலிகளம்
தயாராகி விட்டது

நினைவை மீட்டி உரைக்கிறேன்
இது போல் ஏதும் நாம் கண்டதில்லை

களமெழுதி திரையிறக்கி
வண்ணமும் சுண்ணமும் சார்த்தி
நான்மூலைகளில்
தீபமும் தூபமும் பொருத்தி
கொட்டும் முழக்கும் கூட்டி
பலிகளம்
தயாராகி விட்டது

அம்பும் வில்லும்
வாளும் சூட்டி
இளித்தும் அழுதும்
இன்முகம் காட்டி
கனலென எரியும்
கண்கள் உருட்டி
காற்றில் நடிக்கும்
உடைகள் பூட்டி
பெருந்தெய்வங்களும்
குறுந்தேவதைகளும்
களமாடும் நியதி

கூடி வருவன தனித்து
ஆடி வருவன
என
அவையனைத்தும்
இந்தக் கதிர்மங்கும்
அந்தியில்
களம் வந்து சேர்ந்துவிட்டன

விடியும் வரை அல்லது
பலிகள் விழும் வரை
சந்நதம் அடங்காதாடும்
அவை
பெரும்பலிகள்
கொள்ள வேண்டி
சினந்தவை இணைவதும்
கூடியவை பொருதுவதும்
காத்திருக்கும் பலிகள்
கண்முன் நிகழ்வதுமோர்
ஆட்டமே

யாசித்தல் போல் கையேந்தும் சில
அபயஹஸ்தம் காட்டும் சில
உரத்த பாவனைகளில்
மறைந்து கொள்ளும் சில
முஷ்டி மடக்கி
காற்றில் சமர் புரிந்து
பலிகளை மகிழ்விக்கும் சில
எனினும்
கவலை வேண்டாம்
குழம்ப வேண்டாம்
தேவதைகளின் தெய்வங்களின்
தேவை ஒன்றே

களம்புகக் காத்திருக்கும்
பலிகளின்
சித்தத்தின் உறுதியை
அவ்வப்போது சோதித்துக்
கொண்டே ஆடுமவை
பலிகள்
ஒருநொடி
கண்கிறங்கி
உணர்வு மயங்கி
சிரம் சாய்ந்தால்
துள்ளிப் பாய்ந்து
முதற்பலி ஏற்கும்

துடிக்கும் தாளம்
துவளா ஆட்டத்திற்கும்
தடுமாறும் பிரக்ஞை
நிலைதவறும் சித்தத்திற்கும்
இடையில்
காத்திருக்கிறது
இந்த பலிகளம்

அவை ஆடும்
அந்தக் களம் காத்திருக்கும்
சித்தம் சோரும்வரை

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.