– பெருந்தேவி –
படுக்கைவிரிப்பைத் தட்டிப்போட்டேன்
ஜன்னல் பக்கம் சின்ன அசைவு
உற்றுப் பார்த்தேன்
நிழலைப் போலெழும்பி கண்முன்
நின்றது மண்டையோடு
(எல்லா மண்டையோடுகளைப் போல)
இதற்கும் சிரித்த களையான முகம்
என்றாலும் எனக்கேயானது அந்தச் சிரிப்பு
என்று கண்டுகொண்டபோது மகிழ்ச்சி
நிலைகொள்ளவில்லை
சுப்ரமணியபுர நாயகனின்
ஸ்டைல் (அதுவேயான) தலையசைப்பில்
அதைச் சுற்றி அடர்ந்த
இருள் ஒரு டோப்பா கலை
‘உடலும் இல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்’
கள்ளக்குரல்களில்
(வாசல் நேர்வழி அது வராததால்)
கலந்து பாடினோம்
கனவில் கையற்ற அது
(இருந்தாலும்)
இரு கைகளையும் அகல விரித்து
ஆகாவென சைக்கிள் ஓட்டுகிறது
நானும் ஒவ்வொரு தெருமுக்குக்கும்
45˚ பறவைப் பார்வை
கிளுகிளுப்பில் நடக்கிறேன்
கடைசியில் துரோகம்
என்னையும் உந்தும்போது
எப்படி சாகடிப்பது மண்டையோட்டை