சங்கீத வார்த்தைகளால்
வானம் மழைக்கால கீதத்தை
இசைக்கிறது
கொதிப்பேறிக் கிடந்த
வரண்ட நிலத்தின் வெடிப்புக்களை
கண்ணாடிப் பூக்களாய்
மாற்றுகிறது மழை
இரசிக்கப்படாமலே
கைவிடப்பட்டுக் கிடந்த
இயற்கையை மழை அழகுபடுத்துகிறது
குழந்தைகள் வண்ணத்துப்பூச்சிகளாய் மாறி
மழையின் தெருக்களில்
சிறகசைத்துப் பறப்பதை
முரட்டுக்கரங்கள் தொடர்ச்சியாகத்
தடுக்க முனைந்து தோற்கின்றன
மின்சாரக் காற்றில் உலர்ந்த உடல்களை
இயற்கையாய் வருடுகின்றன
மழையின் கரங்கள்.
மழைக் கால இரவுகள்
அன்பின் இரகசியத்தை ஈரச் சொற்களால்
பகிர்ந்துகொள்கின்றன
எனினும்
இனம்புரியாதவோர்
மழை நேரத்துச் சோகம்
மீண்டும் அதே ஈரச் சொற்களால்
துயரக் கவிதைகளை
இதயத்தில் எழுதிக்கொண்டே இருக்கிறது