சிலைகள்

எஸ். சுரேஷ்

கை உயர்த்தி ஆள்காட்டி விரலால்
இலக்கில்லாத ஒன்றைச் சுட்டாமல்
கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டிருந்தால்
கறைகள் மறைந்திருக்கும்

தலை நிமிர்ந்து வானத்தை பார்க்க வேண்டும்
தலை குனிந்த தருணங்கள் மறைந்து விடும்

நெற்றியில் சில சுருக்கங்கள் இருந்தால்
சிந்தித்துக் கொண்டிருப்பது போல் இருக்கும்
அவரவர் மனதில் தோன்றும் எண்ணங்கள்
இயல்பாய் முகத்தில் தோன்றும்

பயம், அசூயை, குரோதம், கோபம்
இவற்றை மறைக்கும் சிற்பி
வீரமும் தொலைநோக்கும் கொண்ட
பார்வை கொடுக்க வேண்டும்

உதடுகளில் புன்னகையா?
வேண்டாம்
சொல்லியவை பல்லாயிரம்
பீடத்தில் ஒரு வாக்கியம் போதும்-
உதடுகள் விரியாதிருப்பதே நல்லது.

தினமும் சிலைகள் செதுக்கப்படுகின்றன-
ஆனால் எதுவும் முடிந்தபாடில்லை

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.