வெந்து தணியும் வாழ்வு

ஆ. மகராஜன்

வாழ்ந்து களிக்க வந்த
மாநகரப் பெருவெளியின்
வெப்பம் உமிழும்
பகல் பொழுது வீதிகளில்
பொருளீட்டிக் களைத்து,

கட்டிடங்களின் நெருக்த்தில்
பிதுங்கித் திணறுமோர்
முட்டுச்சந்து மேன்ஷனின்
குறுகிப் புழுங்கும் அறையொன்றுள்
ஓய்வுக்காய்ப் புகுந்து,

தூரத்துக் கிராமத்தின்
மனைவி மக்களோடு
தூக்கம் தழுவும் வரை
அலைபேசிவழி கிசுகிசுத்து,

குழந்தைகளோடு கொஞ்சலும்
இல்லாளோடு கலவியும்
கனவுக் குடித்தனத்திலேயே
நடத்தி முடித்து,

மற்றுமோர் ‘நாளை’க்காய்
உடலும் உள்ளமும் தயாராகி
எப்படியோ வாழ்ந்து கழிக்க
முடிகிறது.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.