புலன்மயக்கம் – சரவணன் அபி

சரவணன் அபி

இமைத்துவிட்டாலும் கசங்கிப் போகக்கூடும்
விழிகளுக்குள் தேங்கி நிற்கும் உறவு
கூப்பிய கரங்களின் விரல்நுனிகள்
பார்த்தவாறிருந்தேன்
சொல்லென இல்லாமலேனும்
உணர்வொன்று
விரல்வழி வழிந்துவிடாதா
மென்மயிர் அடர்ந்த உன்
முன்வளைக்கரம் தொட்டு
உணர்த்திவிடாதா
அனிச்சையாகவேனும்
ஏதேனும் நிகழ்ந்துவிடாதா
தீண்ட நீளும் விரல்களின் முன்
சுருங்கும் என் புலன்கள்
சூழலின் உறுத்தல் மீதூற
கழுத்தை அழுத்தித் தேய்த்துக் கொள்கிறேன்

மேசை மீது வைக்கப் பெற்றிருக்கிற
நிறமும் வளைவும் மினுமினுப்பும்
உன் கழுத்தை நினைவூட்டும்
யாரும் இதுவரை தொடாத
தேநீர்க்குவளை புகைகின்றது.

2 comments

  1. “உணர்வொன்று/ விரல்வழி வழிந்துவிடாதா/“ என்ற ஆரம்ப வரிகள்,
    “யாரும் இதுவரை தொடாத/ தேநீர்க்குவளை/” என்ற இறுதி வரிகளுக்கு ஒத்து இசைவது ரசிக்கத்தக்கது.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

Leave a reply to இராய செல்லப்பா Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.