இரான் – ஒரே நாவலின் பதினாறு மொழிபெயர்ப்புகள் ஏன், எப்படி? – சயீத் கமாலி டேஹ்கான்

இரானிய புத்தகக்கடை அலமாரிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை ஜே. டி. சாலிங்கரால் பார்க்க முடியுமென்றால், அவரது கல்லறை அமைதி குலைந்து விடும். 1947ல் அவர் எழுதிய ஒரு குறுநாவல், தி இன்வர்டட் பாரஸ்ட், அமெரிக்காவில் அதை மறுபதிப்பு செய்ய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அனுமதி மறுத்து விட்டார். ஆனால் அது பெரும்பாலான இரானிய புத்தகக்கடைகளில் வெறும் தொண்ணூறாயிரம் ரியால்களுக்கு, அதாவது 2.20 பவுண்டுகளுக்கு, பார்ஸி மொழியில் கிடைக்கிறது. ஏப்புக்ஸ் தளத்தில் இந்தப் புத்தகத்தைத் தேடும் ஆங்கில மொழி வாசிக்கும் சாலிங்கர் வெறியர்கள், அது முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட காஸ்மோபாலிடன் இதழின் பழைய பிரதியை ஐநூறு டாலர்கள் விலை கொடுத்து மட்டுமே வாங்க முடியும்.

இன்வர்டட் பாரஸ்ட் பார்ஸி மொழியில் பதிப்பிக்கப்பட்டிருப்பது இரானின் ஒழுங்குபடுத்தப்படாத, சிக்கலான, ஆனால் வசீகரிக்கும் மொழிபெயர்ப்புச் சூழலின் ஒரு உதாரணம் மட்டுமே. காப்புரிமைச் சட்டத்தை நெறிப்படுத்தும் பெர்ன் கன்வென்ஷனில் இரான் இணைய மறுத்து வருவது நீண்ட காலமாகவே அதன் மொழிபெயர்ப்புத் துறையின் வளர்ச்சிக்கு எதிரானதாக இருந்து வருகிறது. இரானின் தேசிய சட்டம் தம் தாயகத்தில் பதிப்பிக்கும் இரானிய எழுத்தாளர்களுக்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் இரானுக்கு வெளியே தம் புத்தகங்களைப் பதிப்பிக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு இரான் எவ்வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. பாலா ஹாகின்ஸ் இவ்வாண்டு எழுதியுள்ள, இன்டு தி வாட்டர், என்ற நாவலின் பார்ஸி மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்கான காப்புரிமையை இரானிய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் பெற்றுள்ளார் என்ற தகவலை டெஹ்ரான் டைம்ஸ் அளிக்கிறது. ஆனால் அந்த நாவலுடன் போட்டியிடும் வேறு மொழிபெயர்ப்புகளை குறைந்தபட்சம் ஐந்து பேர் அதற்குள் துவங்கிவிட்டனர்.

இரான் இலக்கியத்தை நேசிக்கிறது. எனவே மர்செல் ப்ரூஸ்ட் முதல் ஹருகி முரகாமி வரை பல்வகைப்பட்ட பிற தேச நூல்கள் விற்கப்படுகின்றன என்று டெஹ்ரானின் புத்தகக்கடைகள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். கஸ்டவ் ஃப்ளாபேரின் செண்டிமெண்டல் எஜுகேஷன் போன்ற நூல்கள் இங்கிலாந்தின் புத்தகக்கடைகளில்கூட மிக அபூர்வமாகவே காணக் கிடைக்கின்றன. ஆனால் அவை இரானில் ஏராளமாக விற்பனையாகின்றன- பரவலாக வாசிக்கப்படுகின்றன. இதைச் சொல்லும்போது, தீவிரமான தணிக்கை முறை அங்கு நடைமுறைப் படுத்தப்படுவதையும் கூறியாக வேண்டும்: கலாசாரம் மற்றும் இசுலாமிய நெறிமுறை அமைச்சகம் அனைத்து புத்தகங்களையும் பதிப்பிக்கும் முன் தணிக்கைக்கு உட்படுத்துகின்றது. தற்போதுள்ள மிதவாதிகளின் ஆட்சியில் சுதந்திரம் சிறிது சிறிதாக அதிகரிக்கிறது என்றாலும் பெரும்பாலான புத்தகங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது.

மேற்கில் மிக அபூர்வமாகவே காணப்படும் பிராபல்யம் இரானிய மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஓரளவு கிட்டுகிறது; ஆசிரியர்களின் பெயர்களுடன் புத்தக முன்னட்டைகளில் மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களும் இடம் பெருகின்றன. சில மொழிபெயர்ப்பாளர்கள் புகழ் பெற்ற கலாசார ஆளுமைகளாகவும் உள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் மொழியாக்கப் பணியை பேரன்பு காரணமாகவே மேற்கொண்டுள்ளனர். அவர்கள் பெறுவது மிகக் குறைவான சன்மானம், மொழியாக்க அனுமதி பெறவோ பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அந்நிய மொழி புனைவுகளுக்கு உள்ள கணிசமான வரவேற்பும் முறையான அனுமதி பெறுவதில் உள்ள தடைகளும் ஒரே புத்தகத்தின் பல்வேறு மொழியாக்கங்கள் வெளியாக மிகப்பெரும் காரணங்களாக உள்ளன. காப்புரிமை குறித்த வெற்றிடத்தை ஒரு சில மொழிபெயர்ப்பாளர்கள் தாம் வளம் பெற பயன்படுத்திக் கொள்கின்றனர்- குறிப்பாக, விற்பனை சாதனை படைத்த நூல்களை மொழிபெயர்ப்பவர்கள். உதாரணமாக, காலேத் ஹொசேனியின் ‘அண்ட் தி மவுண்டென்ஸ் எக்கோட்’ என்ற நாவல் பாரசீக மொழியில் குறைந்தபட்சம் பதினாறு வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. துருக்கிய எழுத்தாளரான ஓரான் பாமுக்கின் எழுத்தை மொழியாக்கம் செய்துள்ள அர்சலன் பாசிஹி, இத்தகைய போக்கு, “பாரசீக இலக்கியத்தின் வீழ்ச்சிக்கு” காரணமாகலாம் என்று எச்சரித்துள்ளார்- ஏனெனில், இது மொழியாக்கங்களின் தரத்தை மலினப்படுத்துகிறது.

இரானிய அதிபர் ஹாசன் ரூஹானிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் அதே சமயம், பெர்ன் கன்வென்ஷனில் இரான் இணைய வேண்டும் என்று கோரி ஒரு கடிதம் எழுதியுள்ளனர். தெஹ்ரானில் வாழும் எழுத்தாளர் ஹோசென் சானபூர் அவர்களில் ஒருவர். “புரட்சிக்கு முன்னரே எம் மகத்தான இலக்கியவாதிகளில் சிலர் காப்புரிமை சட்டத்துக்கு இரான் அங்கீகாரம் அளிப்பதை எதிர்த்தனர்,” என்கிறார் அவர். “முன்னரே இணையாத காரணத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை அண்மைய ஆண்டுகளில்தான் உணரத் துவங்கியிருக்கிறோம்”.

சில பதிப்பாளர்கள் காப்புரிமைச் சட்டத்தை தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொள்ளத் துவங்கினர் என்கிறார் சானபூர். “காப்புரிமையை மதிக்கத் துவங்கும் பதிப்பாளர்களின் எண்ணிக்கை அலை அலையாக அதிகரிக்கும் என்று ஒரு கட்டத்தில் தோன்றியது. ஆனால் அவர்களின் எண்ணிக்கை கூடவில்லை… ஐந்து அல்லது ஆறு பதிப்பகத்தினர் இதைத் துவங்கினர், அதன்பின் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது”.

அனுமதியின்றி பதிப்பிப்பதை அவர், திருட்டு போன்ற ஒன்று என்று மிகக் கடுமையாக விமரிசிக்கிறார். எனினும் அவர் மொழிபெயர்ப்பாளர்களைக் குற்றம் சொல்வதில்லை. “போதுமான சட்டங்கள் இல்லை என்பதுதான் பிரச்சினை,” என்கிறார் அவர்.

மாசித் மிர்மோஸி நாற்பதுக்கும் மேற்பட்ட ஜெர்மன் மொழி புத்தகங்களை பார்ஸி மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். பதிப்பிக்கும்முன் காப்புரிமை பெறும் நடைமுறையை அவர் பின்பற்றத் துவங்கியுள்ளார். சுவிஸ் எழுத்தாளரான பாஸ்கல் மெர்சியரின் ‘நைட் ட்ரெயின் டு லிஸ்பன்’ உட்பட அவரது அண்மையை புத்தகங்கள் அனைத்தும் முன் அனுமதி பெற்ற பின்னரே பதிப்பிக்கப்பட்டுள்ளன.

“காப்புரிமையை மதிப்பவர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,” என்கிறார் அவர். “ஆனால் காப்புரிமைப் பிரச்சனை ஈரானின் இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையை ஒரு நோய்மை போல் பீடித்துள்ளது. இது வாசகர்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாகிறது”

எழுத்தாளர்களும்தான். பால் ஆஸ்டர் போன்ற சிலர் இரானிய மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து ஒரு அடையாள சன்மானம் பெறத் துவங்கியுள்ளனர் என்றால் மரியா வர்காஸ் லோசா போன்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜே. எம். கோட்ஸீ 2008ஆம் ஆண்டு, இரானிய செய்தி நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கும் நோக்கத்தில் என்னிடம் ஒரு அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையில் அவர், காப்புரிமை பாதுகாப்பு என்பது பணம் சம்பந்தப்பட்ட ஒன்று மட்டுமல்ல என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். “அனுமதி இன்றி தம் புத்தகங்கள் பறித்துக் கொள்ளப்பட்டு, அமெச்சூர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, தமக்குத் தெரியாமல் விற்பனையாவதில் எழுத்தாளர்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது என்றால் அது நியாயமான ஒன்றுதான்,” என்று அவர் எழுதினார்.

மிர்மோஸி போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் சிரமப்பட்டு காப்புரிமை பெற்றாலும்கூட, வேறொரு பதிப்பாளர் காப்புரிமை பெறாமல் தேர்ச்சியற்ற மொழிபெயர்ப்பாளர் ஒருவரைக் கொண்டு மொழியாக்கம் செய்து வெளியிட முடியும். இதற்கான முன்னுதாரணங்கள் உண்டு. ஆனால் பலரைப் போல் மிர்மோஸியும் இரானியர்களின் இச்சிறு தனித்தன்மையை இயல்பான ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறார். “இது ஒரு கொடுங்கனவல்ல,” என்கிறார் அவர், “எங்கள் வாழ்வின் நிதர்சன உண்மை”.

(This is an unauthorised translation of the article, “Why Iran has 16 different translations of one Khaled Hosseini novel,” by Saeed Kamali Dehghan, originally published at The Guardian. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.