பால்மயக்கம்- சரவணன் அபி

சரவணன் அபி

இறுக்கம்கூடிய
திரைகளையும் திறந்துவிடும்
நுட்பமறிந்தோர் மட்டுமே
நிறைந்ததோர் உலகம்
வண்ணம் வழியும் வீதியின்
இருமருங்கும் இடப்பட்டிருக்கும்
உணவு மேசைகளினின்று
ஏந்த யாருமின்றி
சிந்துகின்றன சுவைமிகுந்த மதுக்கள்
அங்கே நடனமாடுவதுபோல் நடிப்பதற்கும்
நடப்பதுபோல் கிடப்பதற்கும்
ஊக்கம் தரும் மிகச் சிறந்த லாகிரிகள்
அவை மட்டுமல்ல
நடைபாதையின் மேலேறி
உதட்டினருகே குவளையைக்
கொணர்கிறாள்
மிக மிக சிவந்த இதழ்ச்சாயம்வழி
ஒன்றையே குறிப்புணர்த்தும்
வியட்நாமிய இளம்பெண்
பர்மிய இசைபொழியும்
மதுக்கடையின் அடுத்து
தாய் உணவகம்
இசை என்று பிரித்தறிய முடியா ஒலிகள்
இன்ன நிறம் என்று பகுத்தறிவியலா ஒளிகள்
இவ்வினம் இது
இச்சுவை அது
எதுவும் கூடும்
விரித்துக் கிடக்குமிந்த பாங்காக் நகரத்து
சுகும்வித் வீதியில்
ஆணோவென்னும் பெண்ணும்
பெண்ணோ எனும் ஆணும்
ஏன் உணர வேண்டும்
இதுவென்ன மயக்கமென

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.