பறவை – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

 

இறக்கைகளை பறத்திக் கொண்டு
விரிந்த நிலப்பரப்பில்
நின்றிருக்கிறது
சாம்பல் வண்ண பறவை ஒன்று
தன் நிழலைப் பார்த்தபடி.

பருவமாற்றத்தின் படிநிலையைக்
காட்ட வலசை போகலாம்.
காவ் காவ் என கப்பல்காரருக்கு
நிலத்தின் வரவை
கட்டியம் கூறலாம்
உண்டிவில்லிலிருந்து விசையோடு
வீசப்படும் கல்லுக்கு
தப்பித்து செல்லலாம்.
செந்நா சுவைக்கு இலக்கென
அனலில் வறுபட்டு
அரிவகை உணவாக செரிமானம் ஆகலாம்.
ஓவியனின் கலைச்சுவைக்கு
தூண்டுகோலாகி
தூரிகையில் வண்ணப்பிரதியாகலாம்.
தன் இனத்தின் பிரதிநிதியாக
நூல்களின் சேகரிப்பில்
தகவல் தொகுப்பாகலாம்.
உயிர்த்திருத்தலின் எத்தனிப்பிற்காக
சிறுமீன் வேட்டைக்கு புறப்படலாம்.

மூக்குயர்த்தி எழும்பி
விரிந்த வானில் புள்ளியென
கரைந்து போகலாம்.

சிறுகண்ணை திருப்பி
என்னைப் பார்த்துக் கொண்டே
வளைய மூக்கால்
இறகுககளை கிளர்த்திக் கொண்டு
யோகியின் முக்திநிலையில்
இப்படியே இருக்கலாம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.