ஏகாந்தன்
பூங்காவைச் சுற்றிச் சுற்றி
வந்தது போதுமென கொஞ்சம்
ஓய்வு தனிமைக்கு ஆசைப்பட்டு
ஓரத்து காலி பெஞ்சில் உட்கார்ந்தேன்
நொடியில் நெருங்கிய ஒரு நோஞ்சான்
முகக்கவசத்தைக் கீழிறக்கி
பக்கத்தில் உட்கார்ந்து இளிக்க
பல்லைக் கடித்தேன் மனதுக்குள்
தள்ளி ஒரு பக்கமாக நகர்ந்தேன்
உடனே எழுந்து சென்றால்
உட்கார்ந்த மனிதனை
அவமதித்ததாக ஆகிவிடுமே ..
”இந்தக் கொரோனா விடாது சார்
எல்லாரையும் அனுப்பிச்சிட்டுத்தான் போகும்”
நூல்விட்டுப் பார்க்கும் ஆசாமியை
மேல்நோக்க ஆர்வமின்றி
பேருக்கு ஆட்டினேன் தலையை லேசாக
”கேஸ் ஜாஸ்தியாகிக்கிட்டிருக்கு சார் ..
மூணாவது அலை வந்தாச்சு !”
அதுக்கு என்னய்யா பண்ணச் சொல்ற
என்பதாக நேராக முறைத்து
போதும் என கையை உயர்த்தினேன்.
விட்டுருவானா அவ்வளவு ஈஸியா ..
”நார்த் கொரியால கொரோனா வந்த ஆளுங்கள
சுட்டுத் தள்ளிடறாங்களாம் சார்!”
இன்னும் யாரையும் நான் கொலை செய்ததில்லை
இன்று ஒரு கொலை விழுவதில் விருப்பமில்லை
என மனம் முணுமுணுக்க
எழுந்து நடக்கலானேன்
One comment