பகல் ரயில், தொடர்பு எல்லைக்கு வெளியே – பைராகி கவிதைகள்

பைராகி

 

பகல் ரயில்

ரயிலின் திடும் ஆட்டம்
எல்லாரையும் குலுக்கியது.
பள்ளிச்சிறுவர்கள் கூடிச் சிரித்தனர்
அக்கணக் குலுக்களில்

முன்னறிவிப்பில்லாமல் ரயில் மீண்டும் கிளம்ப
விழுவதும், எழுவதும், தள்ளுவதுமாக
சிறுவர்கள் சிரிப்பைத் தொடர்ந்தனர்
அடுத்த நொடி ஆட்டத்தின் எதிர்பார்ப்பில்

என் பக்கத்தில் தனியே உட்கார்ந்திருந்த பாட்டி
யாரிடமோ சண்டையிட்டுக் கொண்டிருந்தார்
தனது இளமையில்.

போனஸ் சிக்கலை
வண்டியோட்டி தனது சகாவிடம்
புலம்பிக்கொண்டிருந்தார் அன்றைக்கு இரவில்.

ரயிலின் குலுக்கலில்
முன்னும் பின்னுமாக ஆடிய
காலத்தை கணக்கில் வைத்த
குவளை முகப் பறவை
நிதானமாகக் கடக்கும் ரயிலின்
தற்பொழுதை கிளை மறைவிலிருந்தபடி
வரவில் வைக்கிறது.

தொடர்பு எல்லைக்கு வெளியே

பேசத்தொடங்கிய குகை வாசியின்
பெருந்தனிமை எனைச் சூழாதிருக்க
மனம் விரும்பியும்
சோம்பிக்கிடக்கப் பிடிக்காது
சுள்ளென அடித்த வெயிலைப்
போர்த்திக்கொள்ள மெல்ல
வாசலுக்கு வந்தேன்.
குறுக்கும் நெடுக்குமான அண்டை வீட்டுச் சுவர்கள்.
சுருட்டி வைத்திருந்த அன்றைய பேப்பரை
ஓனர் கையிலிருந்து வாங்கினேன்.
தரையில் முழுவதுமாக விரித்து
பேப்பர் சுருளை நீவிடத்தொடங்கினேன்.
தொட்டும் விலகியும் சென்ற மடிப்புகள்
நேற்றும இன்றும் போல
தொடர்பற்றுக் கிடந்தன.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.