ஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை

இஸ்ஸத்

கடந்த சில நாட்களாக அவனிடம் பணம் என்று இருந்ததே அந்த 20 ரூபாய் மாத்திரம்தான். அந்த நோட்டில் உள்ள படத்தில் இருக்கும் இரு மீனவர்கள் மீது எவரோ பீடி பற்ற வைத்தபோது விழுந்த தீப்பொறியினால் ஏற்பட்ட ஓட்டையும், அதன் அச்சிடப்பட்ட திகதி 1995.11.16 என்பதுவும், அதன் ஓரங்களில் ஆட்டினுடையதோ அல்லது கோழியினதோ குருதி தோய்ந்து இருந்ததையும் தூக்கத்திலெழுப்பி கேட்டாலும் விபரமாக சொல்லுமளவு அந்த நோட்டோடு அவ்வளவு ஐக்கியமாயிருந்தான். அவன் அதை செலவு செய்யாமல் இருப்பதற்கு காரணம்: தன்னிடமும் பணம் இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மாத்திரமே.

பல நாட்கள் அந்த பணத்தை வைத்துக்கொண்டு தனது பணக்கார தோரணை கருதி அதனைக் கொண்டு தனது பசியை போக்கிக் கொள்ளாமலேயே இருந்தவனுக்கு இன்று யாரோ ஒரு புண்ணியவானினால் புரியாணி பார்சல் கிடைத்துவிட்டது. அதனை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை கட்டுக்கு சென்று குளித்துவிட்டு தனது பையினுள் இருந்த ஆடைகளுள் எது நல்ல ஆடையோ அதை மாற்றிக்கொண்டு அவ்விடத்திலேயே தனது உணவு பொட்டலத்தை ஆசையாக பிரித்து வயிறு முட்ட உண்டு முடித்தான். என்னதான் புரியாணியாக இருந்தாலும் அதை உண்ட பிற்பாடு பீடா ஒன்று போட்டால்தான் அது இராஜ விருந்தாகும் என்றபடி தனது 20 ரூபாயை செலவழிக்க முடிவெடுத்தவனாய் தனது தோல் பைக்குள் இருந்த பணத்தை எடுத்து காற் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு சற்று தொலைவிலிருந்த பீடா கடையை நோக்கி ஓட்டமும் நடையுமாக போய்ச் சேர்ந்தான்.

பீடா கடை முன்பாக நின்று கொண்டு வயிறு முட்ட சாப்பிட்டதனால் வந்த ஏப்பத்தை விட்டபடியே பணத்தை எடுப்பதற்காக வேண்டி தனது காற்சட்டைப் பைக்குள் கையை விட்டவனுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலை நேரம் அப்போதிருந்த அவனது இரு நண்பர்களுடன் ஹோட்டலில் ரீ குடித்துவிட்டு ஹோட்டலின் முன்பாக சாய்ந்து கிடந்த ஆலை மரத்தின் தடித்த தண்டின் மீது உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவை அவனது தொடையில் தற்காலிக தஞ்சமடைந்ததினால் ஏற்பட்ட வடுவை வருடும் பாக்கியம் மாத்திரமே கிடைத்தது.

அவன் தனது பைக்கற்றுக்குள் கையை விட்டு துலாவியபடியே தனது பணம் எங்கோ விழுந்து விட்டதை ஊர்ஜிதம் செய்து கொண்டே கையை பைக்கற்றின் அடி ஆழம் வரை விட்டு ஓட்டையான காற்சட்டை பைக்கற்றை புரட்டி வெளியே எடுத்து அதன் இடுக்குகளில் இருந்த மண்ணையும், தூசிகளையும் துப்பரவு செய்தபடி எதுவித சலனமுமின்றி தனது ஏமாற்றத்தை சிறு புன்னகையால் தவிர்த்தவனாய் நடக்கலானான்.

அவனின் புன்னகையிலும், தொய்வற்ற நடையிலும், தான் இன்னும் எவ்வளவு இழப்பையும் தாங்குவேன் என்றும், இன்னுமொரு புதிய அல்லது பழைய பதிப்பையுடைய 20 ரூபாய் நோட்டு கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையும் வலிகளும் பல ஏமாற்றங்களும் கண்ட முதிர்ச்சியும் இல்லாமலில்லை.

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.