உள்புண்

கமல தேவி

பின்புறம் துணி காய வைக்கும் இடத்திலிருந்து அப்பா, “ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க, வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவாழ்க,”என்று தன் அடைத்த குரலில் வெட்டிவெட்டி பாடிக்கொண்டிருக்கிறார். கார்த்திகா முற்றத்திலிருந்து எட்டிப் பார்த்தாள்.

முற்றத்தில் பாத்திரங்கள் கழுவிய ஈரம் அவள் கால்களுக்குக் கீழே பிசுபிசுத்தது. “அம்மா… ஒழுங்கா கழுவிவிட மாட்டியா… யாராச்சும் விழப் போறாங்க பாரு,”என்று நைட்டியை தூக்கிப் பிடித்தபடி கத்தினாள்.

“படிக்கறப்பதான் ஒன்பது மணிக்கு எழுந்திருச்ச. இப்போ வேலைக்கு போயும் அதே பொழுது. நான் எந்த வேலயன்னு செய்யறது. இன்னிக்காச்சும் ஒத்தாசையா இருக்கலாம்ல,” என்னும் பொழுதே கடையிலிருந்து, “அக்கா….பொட்டுக்கடலை வேணும்,” என்ற குரல் கேட்டு அம்மா முற்றத்திலிருந்து கடையின் பின்புறம் ஏறினாள்.

“கார்த்திய பாக்க வரவங்க நல்ல பெரிய இடமாமே? இதுக்குன்னுதான் இவ்வளவு நாளாச்சுன்னு நெனச்சி பட்டுன்னு முடிங்க. இவ சித்தப்பன் மவ பிள்ள பெத்து பெரிய மனுசியாயிட்டா,” என்ற குரல் கேட்டது.

‘வீடும் கடையும் ஒரே இடத்தில வச்சுக்கிட்டு எந்நேரமும் நாயா ஓடிக்கிட்டே… எந்த வேலயும் முழுசா செய்யாம… ச்சை’என்று நினைத்தபடி முற்றத்தில் தண்ணீரை அடித்து ஊற்றிவிட்டு முகம்கழுவினாள். நடையின் படியில் அமர்ந்து முற்றத்து வெயிலில் கால்களை நீட்டினாள்.

முற்றத்தில் சுவரைத் தாண்டி கிளை நீட்டியிருந்த சீமைக்கொன்றையின் சிவந்த மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது மரம் கொள்ளாமல் காட்டுத்தீ என பூத்துக் கிடக்கையில் அப்பா“சிவசிவ” என்று நெஞ்சில் கை வைத்து பார்த்துக் கொண்டிருப்பார். அவரை அப்படிப் பார்க்க அவளுக்கு ஆசையாய் இருக்கும்.

இத்தனை வயது வரை படிப்பு, வேலை என்று வேறெதையும் பார்க்கவில்லை, பேசவில்லை, நினைக்கவில்லை. மெதுவாத்தான் இந்தக்கடல்ல குதிக்கனும். தள்ளிவிட்டுட்டு போறவங்களுக்கு என்ன? என்று இப்போது போல எப்போதும்நினைத்துக் கொள்வாள்.

எதிர்ப்புறம் மாடிப்படிகளில் இறங்கிய கதிர், “என்ன கார்த்தி… இப்படி ஒக்காந்திருக்க. வர்ற மாப்ள ஓடிப்போயிறப் போறாங்க,”என்றான்.

“ரொம்ப நல்லது.”

அம்மா, “அப்படியே கன்னத்தில ஒன்னு போட்டேனா பாரு. வயசு என்ன? கழுதைக்கு ஆகறாப்ல ஆவுது. ஒரு பயமிருக்கா. ஒன் வயசுல எனக்கு நீங்க ரெண்டு பேருமே பிறந்தாச்சு. போய் குளிடி,” என்றாள்.

“காப்பிம்மா. கால் ரொம்ப வலிக்குது…நேத்து அலைச்சல்,” என்றாள். இரண்டு நாட்களாக மனம் கண்டதை நினைத்துக் கொண்டிருக்கிறது. என்னத்துக்கு இந்த பீடிகை என்று அவளுக்குத் தெரியவில்லை.

அப்பா உள்ளே வந்து சமையலறை முன்னிருந்த நடையில் பாயில் அமர்ந்தார். அம்மா நான்கு இட்லி வைத்து சாம்பார் கிண்ணத்தை அருகில் வைத்தாள். கார்த்திகா காபி குடிப்பதற்குள் சாப்பிட்டு முடித்தவரிடம் அம்மா, “பதினோரு மணிக்கு ஒருக்கா சாப்பிடலாம். எந்திரிங்க,” என்றதும் சுள்ளென்ற முகத்துடன் எழுந்து கடைக்குள் சென்றார்.

“அங்க இங்கன்னு வீடுமுழுக்க ஒக்காந்து எந்திரிக்காம போய் குளிடி,” என்று சமையலறையிலிருந்து அம்மாவின் நாயனக்குரல் கேட்டது. அடியுமல்லாது, மெல்லியதுமல்லாது காற்றில் தட்டி நிறுத்தும் குரல். காபியின் மெல்லிய கசப்பு மட்டும் நாவிலிருந்தது. நடையிலிருந்து இறங்கி பின்பக்கம் குளியலறைக்குச் செல்லும்வரை அந்தக் கசப்பு இருந்து கொண்டேயிருந்தது.

தண்ணீரை அள்ளி வாயில் ஊற்றிக் கொப்பளித்துத் துப்பினாள். அவளுக்கு நித்யாவின் நினைவு வந்தது. அந்தக் கிறுக்கியும் இன்னைக்கு லீவுங்கறதால யாருக்கு முன்னால நிக்கப் போறாளோ? நானாவது பரவாயில்லை. அது இன்னும் செங்குத்துமரம் என்று தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றினாள்.

அவள் வயிற்றில் யாரோ ஊசியால் குத்துவது போன்ற வலி. அது நானேதானா? பனிரெண்டாம் வகுப்பில் குத்தத் தொடங்கி இன்னும் ஓயவில்லை. ஏன் படிப்பை இவ்வளவு சீரியஸா எடுத்துக் கொண்டேன். நான் மட்டுமா? இன்னும் சில கிறுக்கிகளும். வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் புத்தகத்திற்குள்ளயே புதைந்தது இந்த வேலைக்கா என்று நினைக்கையில் அப்பா பாடற மாதிரி, “பித்தா…பிறைசூடான்னு போயிடுது” என்று நினைத்தபடி வெளியில் வந்தாள். கொடிக்கயிற்றை உரசிக் கொண்டிருந்த வாழைமரத்தைப் பார்த்தபடி தலை துவட்டினாள்.

கண்ணகி பெரியம்மாவின், சந்திராஅக்காவின், வாழ்க்கையை கண்டுதான் அம்மா சின்னப் பிள்ளையாயிருக்கையிலிருந்து ஆறுமாதம் முன்புவரை, “எப்படியாவது படிக்க வச்சிடறோம். வேலக்கு போயிடனும் கார்த்தி,”என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

தனியார் வேலை, டி.என்.பி.எஸ்.ஸி கிளாஸ் என்று இரண்டுமே சரிவராமல் மூன்று ஆண்டுகள். பின் இரண்டு ஆண்டுகள் பயிற்சி வகுப்புகள், தேர்வுகள், இடையில் ஒத்துவராத திருமணப் பேச்சுகள் என்று அவள் மனம் முழித்து பின் விழித்தது.

‘வேலைக்குச் சென்று ஒரு மாதிரி இப்பதான் இயல்பான நிலைக்கு மனதும், புத்தியும் வந்திருக்கு. அடுத்து இந்தக் கல்யாணம் முன்ன பின்ன நடந்திருமா? அதையும், வேலையையும் சமாளிக்கனும். இருபத்தஞ்சு வயசுக்கு மேல நிம்மதியில்லையோ?’ என்று கண்ட கண்ட நினைப்புகள் அவள் மனதில் பேசிக்கொண்டிருந்தன.

காற்றில் அத்தனை வாழை இலைகளும் சீப்பு மாதிரி கிழிந்திருந்தன. புடைக்கன்றின் குட்டி இலைகள் இளம்பச்சையில்சிறிய இலைகளாக நிமிர்ந்திருந்தன. அதில் ஒன்றை தொட்டுத் தடவிப் புன்னகைத்தாள்.

நடைக்குள் நுழைகையில் கதிர் அலைபேசியைக் கொண்டுவந்து கொடுத்தான். நைட்டியில் கையை துடைத்தபடி வாங்கி “யாருங்க..? ஆமா..வீ.ஏ.ஓ கார்த்திகாதான்,” என்றாள்.

“நாளைக்கு பத்து மணிக்கு மேல வாங்க பாக்கலாம்,” என்றபடி சிறு முற்றத்தைக் கடந்து மாடிப்படிகளில் ஏறினாள். படிகளின் வளைவுகளில் திரும்புகையில், படியடியில் ஸ்டார் ரூமை திறந்து கொண்டிருந்த அம்மா, “நல்லதா எடுத்துப் போடு… வீட்டுக்கு மாட்டிக்கறத போட்டுட்டு வந்து நிக்காத,” என்றாள்.

நீண்ட கோரை முடியை சீவும்போது, “ இன்னக்கி முடிக்கு ஹென்னா போடலான்னு இருந்தேன். க்ரே ஹேர் தெரியுது,” என்று அலைபேசியிலிருந்த கதிரிடம் சொல்ல அவன் நிமிர்ந்து,“அவ்வளவா தெரியல..” என்றான். க்ரே கலர் சுடிதாரை எடுத்து அவனிடம் காட்ட அவன் வேண்டாம் என்று உதட்டைப் பிதுக்கி வெளியே சென்றான்.பிங்க்கை எடுத்து மாட்டிக் கொண்டு கீழே வந்து சாப்பிடுகையில் அம்மா ஆறு ஆண்டுகளாகப் பாடும் அதே மந்திரத்தைப் பாடினாள். “பக்குவமா நடந்துக்க”

ஆழத்தில் அந்த அவளென்ற வெகுளி எங்கோ ஔிந்து கொண்டாள். மனுசங்களைப் பார்க்கையில் அவர்களின் பேச்சு போக்குக்கு போக இன்றைய இவளால் முடிகிறது. அந்த வெகுளி எவ்வளவோ பரவாயில்லை. இவர்களின் பேச்சு புரியாமல் நேரடியாக தன் மனதால் அடிப்பவள்.

அப்படி இருக்கக்கூடாது என்று அம்மா மெதுவாகப் புரிய வைப்பதற்குள் அவளின் நிமிர்ந்த தன்மையின் முன் தினமும் மண்டியிட்டிருக்கிறாள். “இப்படி இருக்காத கார்த்தி. மனுசங்கள புரிஞ்சிக்கடி. கெட்டவங்கன்னு சொல்லலடி அறிவு கெட்டவளே. என்னத்தப் படிச்சியோ!” என்பாள்.

அப்பாதான் எதற்கும் தணியாமல் அப்படியே இருப்பதால் அவர் பேச்சுக்கு செவிகளில்லாதவராக தனித்திருக்கிறார். அம்மா அவர்களிடம் சிக்கி தடுமாறிப் போகிறாள். கூட்டுக் குடும்பத்தில் எதையோ தொலைத்ததை உணர்ந்தப் பின்னரே அப்பா அம்மாவிடம் பணிந்திருக்கிறார். “நான் கல்யாணமாகிப் போயிட்டா இவங்களுக்கும் ஒரு வேலை முடியும்,”என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.

மாடியில் அமர்ந்து வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டிருக்கையில் கார் சத்தம் கேட்டது. வயிற்றில் கொஞ்சமாய் ஆசிட் சுரந்து நின்றது. எந்த வடிவம் எந்த வாகனத்தில் வந்திருக்கிறதோ? கண் முன்னால் பாடப் புத்தகங்கள் இருந்த இடங்கள் ஒழிந்து கிடக்கின்றன. அவை மட்டுமே இருந்தஇடத்தில் என்னத்தை அடுக்குவது?

கீழே முற்றத்தில் குரல்கள் கேட்டன.

“எப்படி வீட்டக் கண்டுபிடிச்சீங்க?”

“அதான் சாரதாஸ் ஜவுளி மாளிகைன்னு வீட்டுசுவரை அடச்சு எழுதியிருக்கே? அததான் ஜெயா அடையாளமா சொன்னா,” என்று ஒரு ஆண் குரல் சிரித்தது.

“இங்க வந்த நேரத்துக்கு திருச்சியிலிருந்து திருவாரூர் போயிருக்கலாம். பாலகிருஷ்ணம்பட்டின்னு போர்டை பாத்து திரும்பி ஸ்டியரிங்க நாலு ஒடி ஒடிக்கறத்துக்குள்ள ஊரு கடைசிக்கு வந்தாச்சு,” என்றார்.

நடையில் சர்றென்று இரும்பு நாற்காலியை இழுக்கும் சத்தம் காதைக் குடைந்தது. இந்தக் கதிருக்கு எடுத்து போடவே தெரியாது.

“சின்ன கிராமந்தானே,” அம்மாவின் குரலில் சன்னமாக காற்றடித்தது.

நடையில் பாய் விரிக்கும் சத்தம் நீண்டு படுத்தது. ஜன்னல்வழி எட்டிப் பார்த்தாள். அப்பா முற்றத்து நிழலில் கடைக்குப் போகும் வழியில் கைகளை மடியில் வைத்து நடையைப் பார்த்துக் கொண்டிருந்தார். திருநீரு பாதி அழிந்திருந்த நெற்றி பக்கவாட்டில் தெரிந்தது. வேட்டிக்குக் கீழே கணுக்கால் முழி வீங்கியிருப்பது இங்கிருந்தே அவளுக்குத் தெரிகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு சுகரை அதன் போக்கில் விட்டு, இவர் போக்கில் நடக்கவும் போகாமல் இருந்து ஒரு கட்டத்தில் கோயிலில் போய் உட்கார்ந்து கொண்டு அவர் போக்கில்,

“தாயும் இலி, தந்தை இலி;

தான் தனியன்; காணேடி…”

என்று முடித்து, “அடுத்தத சொல்லுடா சிவசாமி” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அவரின் தோழரை அழைத்து பின் இவரே,

“தான்தனியன் ஆயிடினும்

காயில்உலகு அனைத்தும் கற்பொடிகாண்..”

என்றும்

“ஊனாய் உயிராய் உணர்வாய்…”

என்றும் அவர் சிறுவயதில் கற்ற அனைத்தையும் தினமும் கண்மூடி பாடிக் கொண்டிருந்தார். கேட்டவர்கள், “மவளுக்கு கல்யாணம் முடிக்காம… பித்து பிடிச்சுப் போச்சு,” என்றும், “அந்தப் பிள்ள திமிருக்கு இவரு இப்படி ஆயிட்டாரே,” என்றும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கடையைத் தாண்டிச் செல்பவர்களிடம், “ கடன் பாக்கி வரல, வாங்குன காசுக்கு நெல்லு வரல,” என்று நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கில் இருந்தார்.

அம்மா எடுத்த ருத்ர ரூபத்தில் அடங்கி மருத்துவரிடம் மாற்றி மாற்றி காண்பித்து கடைசியில் மூளைக்குச் செல்லும் குழாயில் அடைப்புக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு கொஞ்ச கொஞ்சமாக தன் கணக்கு வழக்கிற்கு வந்தமர்ந்து பேசாமலிருக்கிறார்.

பழைய ‘சிவனே’ என்கிற அவரின் ஓசையில்லாத இருப்பும், அவர் இயல்புக்கு வந்திருக்கிறது. என்றாலும் இடையில் வந்த பித்தன் என்ற பெயர் மாறவில்லை.

“நான் கார்த்திய கூட்டிக்கிட்டு வரேன்,”என்ற குரல் அவளைக் கலைத்தது. ஜெயாஅக்காவின் குரல். எப்போது வந்தாள்?

“சேலக்கட்டக் கூடாது? என்ன பொண்ணோ! கொஞ்சமும் பொருப்பில்லாம. சரி… சரி வா. நல்லாதான் இருக்க. ஆள் மெலிஞ்சிருக்கவும் அப்படியே இருக்க. உன் வயசில நான் ரெண்டு மடங்கு இருந்தேன்,” என்றவளுடன் நடந்தாள். கதிர் அப்பாவுக்கு மிக்ஸர் தட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தான். கார்த்திகாவை பார்த்ததும் கூடவே வந்தான்.

அத்தனை கண்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாமல் ஒவ்வொருவராக தாவிக் கொண்டிருந்தாள். ஏழுஆட்கள். அந்த மென்பச்சை சட்டை மாப்பிள்ளை. நிழலிலேயே இருக்கும் மினுமினுப்பு தெரிந்தது. கொஞ்சம் உருளையான சிவந்தவன்.

சட்டென்று வந்த புன்னகையை மறைக்க கைகளைக் கூப்பியதும் அம்மா, “பாயில உட்காரு கார்த்தி,”என்றாள். இப்போது மட்டும் எங்கிருந்து வருமோ இந்தக் குரல். பொத்தி எடுத்து கைகளுக்குள் வைத்துக் கொள்ளும் குரல்.

“என்னம்மா படிச்சிருக்க?”

“எம்.எஸ்.ஸி”

“எங்க வேல”

“வாண்டயார் இருப்பு,/”

“ம் ….” குரலிலேயே தனக்கு வேலையெல்லாம் பெரிய விஷயமல்ல என்பதை அழகாக சொல்லத் தெரிந்திருக்கிறாள்.

“ஊரு எப்படிம்மா….” என்ற ஆண் குரல். பிள்ளையின் அப்பா.

“நல்ல மரியாதயான மனுசங்க…”

“நம்ம இப்படித்தான்னு தெரிய வச்சுட்டா எங்கயும் நல்ல மனுசங்கதான்,”இன்னொரு பெரியவர்.

“இந்த மாதிரிவீடெல்லாம் இப்ப இல்ல.”

அப்பா, “ஆமாங்க… அப்பா காலத்தில சுதந்திரம் கெடச்ச புதுசில கட்டினது,” என்றார். அனைவரும் அப்பாவை ஏற இறங்கப் பார்த்தார்கள்.

அம்மா, “ஆமா அப்பதாங்க…” என்று முடித்தாள்.

பிள்ளையின் அப்பா, “ரெண்டு பசங்க. திருச்சியில ரெண்டு கடை இருக்கு. வெளிய தோப்பு, நிலம் உண்டு. பொண்ணு வேலக்கு போகனுன்னு இல்ல. வீட்லயே சரியாயிருக்கும். மூத்த மருமக இருக்கா. வீட்டுவேலக்கு வேற ஆள் இருக்கு,”என்றார்.

அந்த அம்மா, “இருந்தாலும் விசேசம், போக்குவரத்துன்னு வாரத்தில நாலு நாள் போக வேண்டியிருக்கும்… அதில்லாம வீட்டுக்கு வர்ற பொண்ணு மாகலட்சுமில்லீங்களா? எதுக்கு வெளிய போய்க்கிட்டு,” என்றாள்.

பெரியவர் மணிக்கட்டிலிருந்த கடிகாரத்தைத் திருப்பினார். சந்தன சட்டையில் நல்ல தொப்பையுடன் நாற்காலியில் அசௌகரியமாக அமர்ந்திருப்பது அவரின் அசைவுகளிலேயே தெரிந்தது.

ஜெயா அக்கா அம்மாவைப் பார்த்து, “பையனுக்கு நான் பொறுப்பு சித்தி. பழக்க வழக்கமெல்லாம் தெரியும்,”என்றாள். அங்கு இங்கு தாவி பின் நாட்டு நடைமுறையைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இடது பக்கத்திலிருந்தவள், “தம்பி உங்க போட்டாவை சுயம்வர மேளாவில பாத்ததும்… இந்தப் பொண்ணை பாக்கலாமா அண்ணின்னார்,” என்று கார்த்திகாவிடம்கிசுகிசுத்தாள். அவள் என்ன முகபாவம் காண்பிப்பது என்று தெரியாமல் விழித்தாள்.

“வீட்லயே இருக்கனுன்னு நினைக்க வேணாம். நானிருக்கேன்,”என்றாள்.

அந்த அம்மாள், “பெரியவங்க பேசிக்கிட்டு இருக்காங்கல்லம்மா,” என்றாள்.

“சரிங்கத்த,” என்றவளின் முகம் கூம்பியது. நீண்ட மூக்கின் வைரமூக்குத்தியின் ஔியை விட இவள் மெல்லிய எண்ணெய் படர்ந்த முகத்தில் ஔி கூடியிருந்தாள். செப்பு உதடுகள் என்ற பாடல் வரிகளுக்குப் பொருத்தமானவள்.

“நீங்க எங்க படிச்சீங்க,”என்று மிக மெதுவாக அவளின் காதருகில் கார்த்திகா கேட்டாள்.

“சீதாலட்சுமி ராமசாமி. யூ.ஜி முடிக்கறப்ப இதுங்க கண்ணில பட்டுட்டேன்,” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

“பின்ன என்னங்க ஜாதகம் பொருந்தவும்தான் வந்தோம். ஜாதகத்தாலதான் தம்பிக்கு இத்தன தாமதம்,” என்ற அந்த அம்மாவின் குரலால் நகர்ந்து அமர்ந்தார்கள்.

பிள்ளையின் அப்பா, “பேசிட்டு சொல்லுங்க. எப்படியும் நீங்களும் யோசிச்சிருப்பீங்க. விசாரிச்சிருப்பீங்க. பிள்ளைங்களுக்கு பிடிச்சிருந்தா எவ்வளவு சீக்கிரமா அவ்வளவு நல்லது.முப்பது வயசுக்கு மேல நிக்கிறாங்க,” என்றார்.

“நான் மூணு வருசமா கிளாஸ், எக்ஸாம்ஸ்ன்னு கஷ்டப்பட்டு இப்பதான் ஆறு மாசமாதாங்க வேலக்கு போறேன்,” என்ற கார்த்திகாவின் குரலால் அவர் முகம் மாறியது.

“அதனால என்னம்மா? பணத்துக்காகதானே. ஒரு பாதுகாப்புக்குத்தானே. அதுக்கு நம்ம வீட்ல எந்தக் குறையும் இல்ல.சிவனேன்னு இருக்கலாம். கார்ல போயிட்டு காரில வரலாம்”

“இல்ல…வேலக்கு போறது ஒண்ணும் சிரமமில்ல. மத்ததையும் மேனேஜ் பண்ணிப்பேன். இப்ப ஜூனியர் அஸிஸ்டெண்ட் எக்ஸாம் கிளியர் பண்ணி வெரிபிகேசன் முடிச்சாச்சு. வேணுண்னா ஸ்ரீரங்கம்… திருச்சி பக்கத்தில வர முடியும்,”

அவர்கள் பேசத் துவங்கினார்கள்.

அழைத்த அலைபேசியை தம்பி கொடுத்தான். எழுந்து சமையலறை வாசலில் நின்றாள்.

“சரிங்க. நாளைக்கு ஆபிசுக்கு வாங்க”

“….”

“சொன்னா சொன்னதுதாங்க. அடுத்தவங்க மனசையும் பாருங்க. உங்களமாதிரிதானே அவங்களும் அந்த நிலத்தில ஜம்பது வருஷமா விவசாயம் பண்றாங்க. சரிங்க….நாளைக்கு ஆபிஸ்ல பாக்கலாம்,” என்றாள்.

கார்த்திகாவின் குரலால் சபை அமைதியாகி அவளைப் பார்த்தது. அவளின் மைவழிகள் விரிந்தது மட்டும் மனதில் மறுபடியும் வருகிறது. உருண்ட மிரளும் விழிகள்.

அவர்கள் கிளம்பினார்கள். அம்மா மதிய உணவுக்காக உள்ளே சென்றாள். அப்பா கடைக்கு, இவன் பைக்கை எடுக்கும் சத்தம் கேட்டது. உள்ளிருந்து அம்மாவும்,வெளியிலிருந்து ஜெயாஅக்காவும் பேசினார்கள். அவள் மறுக்கப் போவது அனைவருக்கும் புரிந்திருந்தது.

ஜெயாஅக்கா, “உன்னால மனம் கலங்கிப் போறாரு அப்பா. அப்படி என்னத் திமிர். இவ்வளவு நல்ல மனுசங்க. ஏழு தலமுறைக்கு குந்தித் திங்கலாம்,”என்றாள்.

“எவ்வளவு பிள்ளங்க படிச்சு வீட்ல இருக்காங்க.வீட்ல இருக்கற பிள்ளைகளுக்கா குறச்சல்,” என்றாள்.

“உன்னய பிடிச்சிருக்கு. இத்தன வயசுக்கு மேல இப்படி ஒரு சம்மந்தம்!”

உள்ளிருந்து அம்மா, “கார்த்தி… கிருஷ்ணாவுக்கா கிளம்பற? முன்ன பின்ன இருக்காத. சரியா வந்திருவான்.சாப்பாடு என்ன வேணும்?” என்றாள்.

வெளியே வந்து, “ஜெயா…அவங்ககிட்ட நான் பதில் சொல்றேன்,”என்றாள். அக்கா தலையாட்டியபடி திரும்பி நடந்தாள். அம்மா, “காலையில இருந்து யாரோ போன் பண்ணிக்கிட்டே இருந்தாங்களே,” என்றாள்.

“ம்,” என்றாள். கார்த்திகாவின் உயர்படிப்பால் உடைந்தது கூட்டுக்குடும்பம். அம்மா படிக்க வைக்க ஆசைப்பட குடும்பம் திருமணம் செய்து கடனை முடிக்க காத்திருந்தது. இத்தனை ஆட்கள் இருக்கற வீட்ல ஒரு பிள்ளை படிப்புக்கு இவ்வளவு செலவு தாங்காது என்றதும் அவரவர் வாழ்க்கை என்றானது.

கடையிலிருந்து அப்பாவின், “பித்த னென்றனை உலகவர் பகர்வதோர் காரணம் இது கேளீர்…” குரல் கேட்டது. இந்தப் பாட்டெல்லாம் சிலநேரம் தனக்கென்று அவளுக்குத் தோன்றியது. முற்றத்திலிருந்த கல்தொட்டி நீரை எடுத்து முகத்தைக் கழுவினாள். நேற்று பாலம் விரிசல் கண்டதை பார்க்க சென்றபோது முள்செடி அவள் முகத்தில் பட்ட கீறல் சுள்ளென்று எரிந்தது. கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“கார்த்தி… கார்த்தி…”கடையிலிருந்து அப்பாவின் குரல். பேரீச்ச பழத்தை எடுத்து வைத்திருப்பார்.

“என்னப்பா..?” என்றதும் பொட்டலத்தைக் கொடுத்தார்.

சங்கர் அண்ணா, “கெளம்பணுமாடா?” என்றார். தலையாட்டினாள்.

“இங்க பாருய்யா… கையில இருப்பில்லாம எதுலயும் முழு முதலையும் போடக் கூடாது.”

சங்கர் அண்ணா, “இல்லப்பா…துணிஞ்சு வாங்கியிருந்தா இப்ப கொள்ள லாபம்,”என்றார்.

“இல்லாத லாபத்துக்கு தவிக்கற. வியாபாரத்தில இன்னும் அடி வாங்கல… அதான். மனசு அப்படித்தான் நீயா நிறுத்தாத வரைக்கும். போய்யா…எங்கயாச்சும் வெளிய போயிட்டு வா”என்று சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.

அவள் முற்றத்தில் இறங்கி மாடிப்படிகளில் ஏறினாள். மேலிருந்து எட்டிப் பார்த்தாள். சங்கர் அண்ணா சைக்கிளை எடுத்தார். அப்பா இவரிடம் மட்டும் நீண்டநேரம் பேசுவதும், அண்ணன் இவரிடம் வருவதும்புதிர்தான். சங்கர் அண்ணா முகத்திலிருந்த புன்னகை கார்த்திகாவிடமும் வந்தது. எடுத்து செல்லவேண்டிய பையில் பொருட்களை அடுக்கத் தொடங்கினாள்.

அவளுக்கு மனம் லேசாகி காற்றில் எழும்பிப் பறப்பது போல இருந்தது. அவளின் உள்மனம் அவனைப் பார்த்தவுடன் சொல்லிவிட்டது. அதை ஏமாற்ற அவளே முயன்றும் முடியவில்லை. தொடுவதற்கு மென்மையாக, அடர் வண்ணத்தில் இருந்த கொன்றைப் பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணா நேரத்துக்கு வந்துவிடுவான் என்ற நினைப்பு வந்ததும் எழுந்து பையைத் தூக்கிக் கொண்டு, அப்பாவின் குரலை எதிர்பார்த்தபடி கீழிறங்கினாள். பசி நேரம் கடந்திருந்ததால் அவளின் வயிற்றில் குத்தலெடுக்கத்தொடங்கியிருந்தது.

 

 

 

 

 

 

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.