அந்தியில் பூக்கின்றன
ஏலக்காய் வாசம் பொதிந்த
வெள்ளைப் பூக்கள்.
கொத்துக் கொத்தாய்
பச்சை இலைகளுக்குள்
பொங்கித் தெரிகின்றன.
மோகம் தலைக்கேறும்
அடர் வாசம்
அப்பெருமரத்தில்
குர்கானின் பனிக்காலம் வரை
மோனத்தவம் வீற்றிருந்து
நறுமணம் கிளர்ந்தெழும்
குளிர்க் காற்றில்
தாபமாய் மெல்லச் சூழ்கிறது.
காலநிலை தடம் மாறும்
ஓர் நாளில்
சுற்றி அலையும் பட்டாம்பூச்சி போல்
நகரின் மேல் தீராக் காமமென
கவிந்து விரிகிறது.
யாருமற்ற அதன் காலடியில்
அவள் தீராக் காதலை
எல்லா இரவுகளும் சுவாசிக்கிறேன்