சைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

சிரிப்பே வரவில்லை
இப்படித்தானே சிரிக்கவேண்டுமென சிரித்துப் பார்க்க
இதுவெல்லாம் சிரிப்பில் அடங்குமா
இடதும் வலதும் உதடுகள் சைடு வாங்கிக் கொண்டதால்
தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்
சிரிக்கிறானென்றே பொத்தாம் பொதுவாக கூறி நகர்ந்தனர்
சிரிக்கவில்லை எனக்குத் தெரியுமாதலால்
பழைய பொசிசனுக்கு வருவதில் ரொம்பச் சிரமமில்லை
இப்பொழுது சிரிக்காமலா இருக்கிறேன் பெரிய பாவம் செய்ய பார்த்தேன்
உதடுகளைப் பழையபடி ரெண்டு பக்கமும் ஒதுக்கி வைத்துக்கொண்டேன்
அக்கேசனாக பார்த்தவர்கள் உள்ளம் களித்திருப்பார்கள்
பக்கத்தில் இருந்தவர்கள் தான்
பெரிய இனா வானா என்று முணுமுணுத்தபடியிருந்தனர்
சிரிப்பது மாதிரி ரொம்ப நேரம் செய்து
முடியவில்லை வாய் வலிக்க ஆரம்பித்துவிட்டது
திரும்பவும் நியூட்ரல் நிலைக்கு வந்து உதடுகளை
பாந்தமாகப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டேன்
என்ன செய்தும் சிரிப்பு வரவில்லை
சிரிப்பை நினைப்பதொன்றே சிரிக்கச் சிறந்த வழியென
காதுக்குள் வந்து பட்சி சொன்னதால் பிழைத்தேன்
அவ்வழியில் போனால் போகப் போக
கொஞ்சம் கொஞ்சமாக கண்ணில் நீர் பூக்க ஆரம்பித்து
ஒரே சிரிப்பு முழக்கம்
என்ன செய்தும் சிரிப்பை அடக்க முடியவில்லை
இப்படிச் சிரிக்கிறேனென்ற சொந்தச் சிந்தையே
கனிய வைத்துக் கனிய வைத்து வளம் குன்றாது காத்தது
சிம்ரன் சிரித்துச் சிரித்துப் பேசி எனக்கு ஒன்று தந்தாரே
அதுவா இது
சிரிப்பதையே வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டிருக்கும் மரியாதை பொருந்தியோரே
உங்களிடம் தான் கேட்கிறேன்
இல்லையென்றாலும் ச்சும்மாவாது சொல்லுங்கள் எதாவதுனாலும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.