ஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை

ஜே. பிரோஸ்கான்

நண்பகலின் சிவந்த மெல்லிய
இருள் பரவிய அந்த இடத்தில்
உன் ஒற்றைத் தொடுதல்
பெரும் தீக்காடென அனல் சொரியும்

கண்மூடா இரவொன்றில்
இறுகிய உலோகம் போல
ஒற்றை நரம்பு முறுக்கேறி
பொருத்திராத தாபத்தின் உச்சியில்
நான்.

அன்பில்
விருப்பில்
நேசத்தில்
முகிழ்ந்திருக்கும்போது
நீ மலர்க்காடு.

வெப்பம் பூசி என் உடலை
விடுபடச் செய்கிறாய்.
நகம் கற்றாழை முட்களாய்க் கீற
ரத்தம் ருசிக்கிறாய்.

துருவேறிய ரணம் வலி தராமல்
தாபத்தின் வெப்பத் தகிப்பை மென்று
ஒரு வனத்தின் அடர் பச்சை நிறத்தை
பூசிக் கொள்கிறது.

மலரொன்றின் நிர்வாணமென
நீ பதியனிட்டிருக்கும்
வியர்வை உப்பின் ஊழி
வாசனை நிறைந்த உடலை
அடித்துச் செல்கிறது.

இப்போது
ஆதித் துளி
பெரும் வனத்தீயின் அனலில்
வெளி வருகிறது
ஒரு சிறு பறவையென.
..

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.