நிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை

என் இருப்பிலிருந்து
பிரித்துவிட முடியாதபடிக்கு
ஒன்றி பதுங்கியிருக்கின்றன
எனக்குத்தெரியாமல்
எப்படியோ
எனக்குள் குடியேறிவிட்ட
நிழல்கள்.

எங்கிருந்தோ வந்து
திடீரென நாற்காலி ஏறி
ஒண்டி அமர்ந்துகொள்ளும்
பூனைக்குட்டியைப்போல
என் வெம்மையின் பாதுகாப்பில்
வாழ பழகிவிட்டவை

அவைகளுள்
ஆகப்பெரியது ஒன்று
மாலைநடை செல்கையில்
விட்டு வெளியேறுவது போல
உடலிலிருந்தும் பிரிந்து
விலகி எனை தொடர்ந்து வரும்
கோயில் தெருவை வந்தடைந்து
தேரடித்தெருவில் நுழையும்போது
தடயமின்றி மறைந்துவிடும்

இதோ அகன்று விட்டது
என நிம்மதி அடைந்து
குறுக்குச்சந்தை விட்டு
வெளியேறுகையில்
பழகிய புலியைப்போல்
திரும்ப வந்து
அடைந்துகொள்ளும்

எப்படியாவது
தப்பிவிடலாம் என
விரைந்து ஓடுவேன்
விடாமல்
எனை துரத்தும்
என் நிழல்கள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.