மிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை

மலத்திலிருந்து எழுந்து வந்திவன் சொல்வதை கேட்க உங்கள் காதுகள் கூசலாம். ஆனால் உங்கள் உடம்பிலும் உள்ளுறைந்திருப்பதே அக்கூசும் மலம். “அதுவும் நம் பிரம்மம்” என்று எங்கள் பழைய குலக்குரு கூறுவார் , ஆம் அவரும் ஒரு இலையான். அந்த தெருவின் கடைசியிலிருக்கும் மதுக்கடையில் நான் உணவிற்காக வளமையாக செல்வது , நாங்கள் இன்னும் விளைவிக்க பழவில்லை , உணவு சேகரிக்காத நாடோடி நிலையிலிருக்கிறோம். அதுவே எங்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை.

அது ஊரின் முழுக்குடிகாரகளின் முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை. கால் வைத்தால் தட்டுப்படும் குப்பைகள் மட்டுமேயான அமுதவெளி எச்சில் கடல். நின்று நிதானமாக நான் தின்று இளைப்பாறி வரலாம் ஒருவரும் விரட்டும் நிதானத்தில் அங்கிருப்பதில்லை. காலகள் உளைகின்றன சற்று ஆசுவாசமாக கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு போகலாம். நான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு வெளிப்படையான காரணங்கள் இருக்கின்றன.முதல் காரணம் எளிதான உடம்பு நோவாத உணவு. இரண்டு , வித விதமான் பொழுது போக்குக்கதைகள்.

மனிதர்களிடம் கேட்கும் கதைகள் எங்கள் குழுவில் ரொம்ப பிரசித்தம். முருகி ஒரு முறை “நான் செல்லும் வீட்டின் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் கொல்ல தனிமையில் திட்டமிடுகின்றனர். திரும்பி என்னைப்பார்த்ததும் மொத்த குடும்பமும் கையில் ஆயுதங்களுடன் என்ன அடித்து விரட்டின. பார் என் இடது இறக்கைகளில் இருக்கும் கிளிசலை” என்று இறக்கையை விரித்து காட்டி தொடர்ந்தாள் “ஆனால் அவர்கள் சேர்ந்திருக்கையில் சிரிப்பும் கூத்தும் ஆகா களைகட்டுகிறது” என்றாள். விசித்திரமான புரிந்து கொள்ளமுடியா கதைகள்.

சூரியன் தொலைந்ததும் மனிதர்கள் கூட்டமாக வந்து எங்களைப்போல் குவிகின்றனர். தினமுன் நூற்றுக்குமேற்பட்ட கதைகள் சுழன்று அலைந்து பின் அடங்குகின்றன. நமக்கு மெத்த பிடித்தது மரணங்களின் துயரங்களின் கதைகள் தானே!. சந்தோசத்தின் கதைகள் நல்லதாகவேயுள்ளன, ஆனால் ஏனோ அதில் பிடித்தமில்லை , வெறும் அலங்கரிக்கப்ப்ட்ட குப்பைகள். அந்த மேசைகளின் விளிம்பில் கண்ணிமைக்காமல் மோவாயின் கைவித்து கவனித்திருப்பேன். அடிக்கடி தின்பதற்கும் குடிப்பதற்கும் அவர்களே எனக்கும் படியளப்பார்கள் , தர்மவாதிகள்.

தர்மவாதிகள் வரும் நேரமாகிவிட்டது. கடைக்குள் நுளைந்த எனக்கு துக்கம் மனிதர்களின் மூச்சுக்காற்றென சுழன்றடித்தது . குப்பைகள் துடைத்து எறியப்பட்ட சுத்தமான தரையில் மேசைகள் ஒய்யாரமாய் அமர்ந்து நக்கல் சிரிப்புச்சிரித்தன. கனத்த நெஞ்சுடன் இயல்பாக பறக்க முயன்றேன். சொர்க்கம் துடைத்தெறியப்பட்டு விம்மலுடன் நரகமாகியிருந்தது. ஒன்றும் செய்வதற்கில்லை , காத்திருப்போம் இன்றைய பட்சணத்திற்கு. ஒருவர் பின் ஒருவராய் வந்து அமர்ந்து கொண்டிருந்தனர். எங்களுக்குள் இருக்கும் ஒப்பந்தத்தின் படி எனக்கு ஒதுக்கப்பட்ட மேசையின் அமர்ந்து வாசலைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவர் பின் ஒருவராக வந்து என் மேசையைத்தாண்டி சென்று மற்றதில் அமர்ந்தனர். ஆத்திரத்தில் மற்ற மேசைகளுக்கு பறந்து நண்பர்களிடன் அனுதாபம் தேடினேன். அவர்கள் சாப்பாட்டில் மும்முரமாகி என்னை கவனிக்கத்தவறினர். அவர்களுக்கு சோறு கிடைத்து விட்டது. சோறு கண்டயிடம் சொர்க்கம் இல்லையா!

திரும்பி வந்து என் மேசையில் அமரும் பொழுது அங்கு என் மூன்று தர்மர்கள் நிதானமாக அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர். ஆகா , என்ன அற்புத காட்சி. சந்தோசப்பட நேரமில்லை அதற்குள் அடிக்க வருகிறார்கள். சீ…இவர்களா தர்மபிரபுக்கள். அவர்களுக்கு தெரியமாலே படியளப்பார்கள் , யோசித்து செய்வது தர்மமில்லையல்லவா! இருந்தாலும் என்ன , என்னை பிடிக்க இல்லை அடிக்க முடியுமா , ஹா…ஹா….மறைந்திருந்த என்னை அவர்கள் காண்பது எளிதல்ல. பொறுமை எருமையை விட பெரியது , ஆம் முக்குத்தெரு எருமை எவ்வளொ பெரியது. அதன் காதுகளில் ஒளிந்து விளையாட்டு காட்டினால் ஜோராக இருக்கும். இப்பொழுது பசி காதையடைக்கிறது.

ஆ…எச்சில் துப்பிவிட்டான். இவன் சீக்கிரம் செத்து விடுவான் போல ரத்தம் கலந்திருக்கிறது. இறந்தால் இவன் வாய்க்குள் நுளைந்து மூக்கின் வழி வரலாம். பின் அவனே என் முழு உணவு. செத்தும் கொடுக்கும் மனிதர்கள் ஆகா…புண்ணியம் ! புண்ணியம்!. அவன் குடிக்கும் குப்பி , டம்ளர்களைத்தவிர மற்றவற்றில் திரிந்தலையலாம். அது தலையை கிறக்கும். எனக்கிருக்கும் மினுங்கும் கண்கள் மேலும் மினிங்கித்தள்ளும். பச்சை நிற கோழி மாமிசம். இதில் நிற்க முடியவில்லை எண்ணை வழுக்கு. கைகளால் தடவி எடுத்து பறந்து மீண்டும் அமருவோம். பசியாறுகிறது. இனி செவிக்குணவு…

“இங்கேரு , எனக்குல்லாம் செத்தா சொர்க்கொந்தான். அப்பேர்ப்பட்ட வாழ்க்கையாகும். சீதை சீணிச்சி கெடந்து இண்ணையோட ஆறு வருசமாச்சி. ஒரு நாள் அவ பீ மூத்தரம் அள்ளாம இருந்துருப்பனா. பொன்னாட்டுலா பாத்துக்கிடுதேன்”

“மகேசு , நீ பாக்கது லேசுபட்ட காரியமில்ல மக்கா மனசிலாச்சா. பெத்த பிள்ளைய தொட்டில்ல போட்டு உறக்காட்டுக மாரிலா டெய்லி போட்டுட்டு வாற. நீ வெப்ராளப்படாம குடி”

“பரமசிவம் , இவன் பிரங்கத்த கேக்கவா வந்தோம் , மத்தத கைல எடுத்து வச்சாலே இவன் இந்த கதையத்தான் டெய்லி சொல்லிட்டு திரியான். சவத்தெழவு , கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சுல்லா , பொறவு தண்ணிக்குடிச்சி ஒண்ணுக்கடிச்ச கதையாக்கும். செத்தது நம்ம மாஸ்டராக்கும். அந்த கதைய பேசுக மாரினா இன்னிக்கி இங்க இருப்போம். இல்லண்ணா பேறண்டே. ”

“நீ ஏண்டே கெடந்து துடிக்க , அவன் ஒரு ட்ரிப்பு சொல்லிட்டுதா போட்டுமே. உனக்க பொண்டாட்டியா கெடைல கெடக்க. மாஸ்டரு பெரிய மயிரு மாஸ்டரு. குடும்பத்த விட்டுப்போடு பயந்து தொங்கிச்செத்தான். சீ…ரோட்டுல பிதுங்கிச்செத்த நாய் மாரி”

“லேய் ஜஸ்டினே , மாஸ்டர பத்தி தரக்கொறவா பேசுனா கொடல உருவிப்போடுவேனாக்கும் ஆமா”

“ஆமா புடுங்குன மாஸ்டரு , வீட்டுல நாலு பிள்ள இருக்கு , மனசுல ஒரு இது வேணும்ல… பின்ன என்னத்த யூனியன் லீடரு , சப்பு சவரெல்லாம். உனக்க மயிரு மாஸ்டரு செத்து அவனுக்க வீட்டுல கெடக்க எல்லாத்தையும் கொல்லப்போறானாக்கும்”

திரும்ப திரும்ப இவர்கள் ஏன் செத்துப்போவதை இவ்வளவு கொடூரமாக வர்ணிக்கிறார்கள். நாங்களேல்லாம் இவர்கள் கண்களுக்கு தெரிவதேயில்லை. செத்த உடலில் கோடிப்புளுக்கள் துளைத்து தெளிவது உயிர் பெருக்கமல்லாவா. ஹீம்…மடையர்கள்.

“ஜஸ்டினே , இண்ணைக்கி நீ பாக்குற சோலி , உடுத்துக உடுப்பு எல்லாம் நம்ம மாஸ்டரு உழைச்சு நிண்ணு கொடுத்ததாக்கும். ஊரார் குடும்பத்த பாத்து அவரு குடும்பத்த விட்டுப்போட்டாரு”

“செரிதாண்டே மக்கா , குடும்பம் தனிச்சொத்து அரசுண்ணு தானடே நம்ம சட்டம் சொல்லுகு , அப்படிப்பாத்தாக்ககூட குடும்பத்த மொதல்ல வச்சி காப்பத்திருக்கணும்லா”

“சீக்கிரம் போணும் , சவத்துக்கு வெள்ளி கெழமையாக்கும் பதுவா துணி மாத்துகது. மறந்தா அவ வாய்ல நீச வார்த்த கேக்க முடியாதாக்கும்”

“நீ பயராம கொஞ்சம் அமந்து இரி மகேசு. உனக்கு ஜஸ்டினே , ஒரு ஆஃப் எடுப்பமா. எல்லாம் மூத்தரமா போச்சி”

நீராகாரம் நிறைய எடுத்துக்கொள்கிறார்கள். தின்பது குறைவு இடையிடையே புகைத்தல். நேரம் கடந்த பின் முன்பு சொன்னது போல இவர்கள் வாய் வழி போய் மூக்கில் வரலாம் பிணச்சுரணை. இந்த மகேசு எதையும் கேட்டதாக தெரியவில்லை. சீதாப்புராணம் தான். இவன் மாற்றி மாற்றி பேசுவதைப் பார்த்தால் இவனே அவளை கொன்றுவிடுவான் போல.

“நானாக்கும் மொதல்ல பாத்தது , கண்ணு பிதுங்கி வெளிய கெடக்கு. மலம் ஜலம் ரெண்டும் வழிஞ்சி போயிருந்துச்சு. நல்ல கம்பீரமான மொகம் சாகதுக்கு முன்னால எதையோ பாத்து வெறச்சி நின்ன மாதிரி மேலையே பாத்துட்டு இருக்கு. ஒடஞ்ச கொடக்கம்பியாட்டும் கையும் காலும் நிக்கி”

“மாஸ்டரு இப்படி கடன் வாங்கப்பிடாது பரமசிவம். மத்தவனுக்கு இவரு கடன் வாங்கிக்கொடுத்து எவனும் திருப்புத்தரல்ல. கொடுத்தவனுக்கு பேச்சு கேக்க முடியாம பயந்து போயி செத்துப்போனாரு”

“கணக்கு வழக்கு பாக்கத்தெரியாது , கேட்ட குடுக்கதும் இல்லண்ணா வேற இடத்துல வாங்கி கொடுக்கதும் கூடிப்போச்சு. பின்ன இப்படி ஆகாம என்ன செய்யும்”

“நடு வீட்டுல துர்மரணம் நடந்தா அந்த வீட்டையே செதச்சிப்போடும் , கூடத்துல உறங்கி எந்திச்சா தொங்குன மேனிக்கி காலு கை விரலு தெரியும்”

“மூத்த பிள்ளைக்கி ரெண்டு மாசத்துல கல்யாணம் தேதி குறிச்சி வச்சிருக்கு. காசு தேராதுண்ணு மாப்பிள்ள வீடு அனக்கமில்லாம போயாச்சு”

“என்ன இருந்தாலும் இழப்பு இழப்பு தான். பொதச்சாக்கூட போய் தொழுக ஓரெடமிருக்கும். எரிச்சி தடையமில்லாம ஆக்கியாச்சு. இனி ஆடி அமாவாசைக்கி கா…கா…கரைய வேண்டியதான்”

“எனக்க பொன்னு மாஸ்டரே…..முன்ன நிண்ணு ஸ்ட்ரைக் நடத்த , கேட்டப்பம் காசு தர. கண்டனம் கடத்தாம பெச இனி யாரிருக்கா”

“எனக்க பொன்னு மாஸ்டரே”

என்ன இது , சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் தலை தொங்க அழ ஆரம்பித்து விட்டனர். மாஸ்டர் இறந்ததில் எனக்கும் வருத்தம்தான். நல்ல மனிதர். ஆனால் எரித்து விட்டனர் முட்டாள்கள்.

“மாஸ்டருக்கெல்லாம் சாவு வருகு , எனக்க சீதைக்கி ஒரு சாவு வர மாட்டங்கே….”

இவனும் அழுகிறான். ஆனால் யாருக்காக. ஆ….என்ன இது காது கிழியும் சத்தம்.

“லேய் மக்கா , நமக்க பாட்டு…நமக்க பாட்டு”

“அடியே மனம் நில்லுனா நிக்காதடி , அடியே எனக்கண்டு நீ சொக்காதடி”

“சீக்கிரம் செத்துருவா. இந்தா நீ ஆடு….”

மட்டில்லா சந்தோஷம். அழுகையில்லா ஆட்டம். கதை விளங்கவில்லை.

“செரி சகோ , நாளைக்கி காலைல மணி சகோக்கு கல்யாணம் மறந்துராதேயும். மாம்பழ புளிசேரி உண்டுண்ணு பேச்சு. பத்து மணிவாக்குல வந்துரும் கலுங்கு பக்கம். நா வண்டில வந்துருகேன்”

“அப்ப செரி”

“இந்த ஈச்ச….சீ….”

அடித்து விட்டனர். இறக்கைகள் பிரிந்து உதிர்கின்றன. நான் மிதக்கிறேன் ஒசிகிறேன். அலைகிறேன். மேசை என்னை தாங்கிப்பிடிக்க வீழ்கிறேன்.

மரணம் நெருங்குகிறது. இந்த கட்டெறும்பு ஒற்றையாக தொய்வில்லாமல் எனைத்தூக்கி நகர்கிறது. உயிருள்ள உண்ணும் உணவு. இருண்ட குகைக்குள் நுளைகிறேன். மாஸ்டர் இங்குதான் இருக்கிறார் போல தெரிகிறது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.