உருமாற்றம்

ஹேமந்த் குமார் 

நான் பிச்சையெடுக்காத
தெருக்களே இல்லை
கையில் திருவோடு எடுத்து
கால் வலிக்க நடக்கிறேன்
பசிப்பிணியால் துடிக்கிறேன்
ஹோட்டலுக்கு வெளியே நின்று
காதுகளில் உணவருந்தி
மனதின் வயிற்றை நிரப்புகிறேன்
‘கருவாடு, மீன், கோழி’
என்ற சொற்களை
காதில் கேட்கும் போதெல்லாம்
நான் ஒரு பூனையாக
உருமாறுகிறேன்
என் பற்கள்
கூர்மையடைகின்றன
மூக்கு இரத்த வாடையை
நுகர்கிறது
கண்கள் வெண்மையடைந்து
என் மென்மையான மீசை
முறுக்கு கம்பிகளைப் போல்
நீண்டு நிற்கிறது
வயிற்றில் பசி மட்டுமே
குடியிருக்கிறது
உடலில் ரோமங்கள்
சிலிர்த்துக் கொள்கின்றன
நகங்கள் தோலிலிருந்து
முளைத்து வளர்கின்றன
எனக்கு பிச்சையிடாதவர்களை
கடித்து குதற காத்திருக்கிறேன்
வால் மட்டும்தான் இல்லை
முழுமையடையாத மனிதப்பூனை.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.