அர்ஜூன் ராச்
மிக வேட்கையிலுள்ள
என் ஆன்மாவுக்கான சுனை
தொடுவான் வழி ஓதவானக்கோட்டின்
நிலைகொண்டிருப்பதாக கேள்வி
பாதம் பதைக்க, பாதை பற்றிய
எந்த உணர்தலுமற்று நா வறண்டு
நாள்தோறும் அவ்வே தொடர்ந்தேன்
ஒருநாள் சிறு முள்ளேற்றிக் கொண்டதில்
வழிந்த குருதித்துளி கொண்டு
தாகமாற்றிக் கொண்டேன்
பிரிதொரு நாள் பள்ளமொன்றில்
விழுந்தேறிய
மயிர்கூச்செரிதலின் வழிந்த வியர்வையைக் கொண்டு
விடாய் போக்கிக் கொண்டேன்
மற்றொரு நாள் வாகனமொன்று
தாக்குவது போல் உரசிப் போன பயத்தில்
கழிந்த மூத்திரத்தின் ஈரநீர்மை முகர்ந்துகொண்டு
தொடர்ந்து இலக்கின் வழி முன்னேறினேன்
நாள்களில் ஒருநாள் புறப்படும்போது
என் பார்வையில்
எலியொன்றை துரத்தியபடி
பூனையொன்று குறுக்கிட்டுப் பாய்ந்தது
நிச்சயமாக அது அவசகுனமில்லையென
நித்யமாக அவதானித்துக் கொண்டிருந்தேன்
அவை ஒன்றையொன்று
பிடிபடாமலும் பிடிக்க முடியாமலும்
ஓடி களைத்துக் காணாமல் போனதுகள்
கவனம் கலைந்து தொடுவானம் தொடர
முற்படும்போது
பாட்டமாக கார்மேகம் சூல் முனைந்து
இடி இடிக்கத்தொடங்கியது
நாளையென வீட்டுக்கு திரும்பி,
‘வீதி நிறைப் பெய்யும் மழை ‘
ஓய்ந்து ஓய்ந்து வானம் தெளிவதில்
களித்துக் கொண்டிருக்க ‘அ’சாளரத்தின்
கீழ்ச்சட்டக்கோட்டில்
என்னால் அநாதியாக மனமறதியாக்கப்பட்டிருந்த
மீச்சிறு ஆசைகள் முத்து முத்தாக சிரித்துக் கொண்டிருந்தன
அதிலொன்றை மெல்ல விரல்கொடுத்து
தொட்டுப் பார்த்தேன் என் வேட்கைக்கு
அவை குளிர்ப்பாக
நாபிக்கமலம் வரை நனைத்து பாவிடத் தொடங்கின
நானதில் முழுவதுமாய்
மூழ்கி முக்தித்துக் கொண்டிருந்தேன் யாரோ என்னை கூப்பிடுவது போலிருந்தது
நான் செவிமடுக்கவே இல்லை
மேலும் குறியீடாக
சொல்லக் காத்திருந்தது இதுதான்
என் பெயர் ‘மைத்ரேயன் ‘ என்று,
என்னையும் சேர்த்தே நம்பவைக்கப்பட்டு
அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்