அகம்

ஆதித்ய ஸ்ரீநிவாஸ் 

சுஜன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். ஒரு பக்கம் ஒதுங்கியதாக கதவு. மறுபக்கம் நீண்ட திண்ணை நான்கு தூண்களுடன். தூணைப் பிடித்துக்கொண்டு சுற்றி வருவது சுஜனின் வழக்கம். அன்று விளக்கு வைக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மாடத்தில் இன்னும் விளக்கு ஏற்றப்படவில்லை. வாசலிலேயே உட்கார்ந்திருக்க முடிந்ததே ஒழிய உள்ளே செல்ல சற்றும் மனமில்லை. வாசலையே பார்த்துகொண்டு உட்கார்ந்திருந்தான்.

உள்ளே அம்முனி அத்தை பேசும் சப்தம் கேட்டது. இரைஞ்சும் சப்தம் எனலாம். கேட்டதுதான் தாமதம் சுஜன் திண்ணையில் எழுந்து நின்று இரண்டடி பின்னே போய் சிறு ஓட்டம் எடுத்து ரோட்டில் குதித்தான். சுவரோரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த சைக்கிளை எடுத்தான். விசுக் விசுக் கென்று முதலில் மிதிக்கையில் கொஞ்சம் உழட்டும், கொஞ்சம் வேகமெடுத்தப் பிறகு பெடலை கால் இயக்குகிறதா காலை பெடல் இயக்குகிறதா எனத் தோன்றும் மிதப்பு. லகுவாக கணபதி செட்டியார் ஸ்கூலை கடக்கும் போதுதான் தான் எங்கு செல்ல வேண்டும் என முடிவெடுக்கவில்லை எனும் நினைவு வந்தது. சுரேன் ஷாகுல் நிம்மி கௌதம் ஒவ்வொரு நண்பன் வீடாக நினைவுப்படுத்தி விலக்கினான். சரி சைக்கிள் விட்ட திசை செல்வோம் என்று நேராக ஒத்தைத் தெருவின் எல்லையில் தெருவை நோக்கி அமைந்த காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒற்றை தீபம் மங்கலாக ஒரு மஞ்சள் ஒளி பரப்பாக சிறு புள்ளியாக, மாடத்தில் வேனி அக்கா அகல் ஏற்றுகையில் சிறுபுள்ளியாக அவள் முக்குத்தி மினுங்குவது போல ஒளிர்ந்தது. ஒத்தை தெரு பெருசு என்று தோன்றியது.

விசுவநாதர் ஆலயம் வந்ததும்தான் அங்கு பெரிய மாமா கண்மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான். யாருமற்ற கோயில். காசி விசுவநாதர் தன்னை அமைதியில் உடுத்திக்கொண்டு அமர்ந்திருப்பதாய் தோன்றும் அமைதி. சைக்கிளை கோயிலை ஒட்டி நிற்கும் வில்வ மரத்தில் சாய்த்தான். அருகிலிருக்கும் சிறு குளத்தில் காலை கழுவிவிட்டு கோயில் கல்நிலைப்படியில் கால் வைக்காமல் தாண்டிச் சென்றான். சிறு ஆலயம் ஒரு சுற்றுப் பிரகாரம் விசுவநாதரைப் பார்த்து அமர்ந்திருக்கும் நந்தியை ஒட்டி பெரிய மாமா தியானத்தில் அமர்ந்திருந்தார். நான் வந்திருப்பதை மாமா அறிந்திருப்பாரா என யோசித்தபடி சப்தமெழாமல் அடி வைத்து அவர் முன் சென்று அமர்ந்தான். முகத்தில் சிரிப்பில்லை ஆனால் மலர்ந்திருந்தது. மாமா என்று மெல்ல உதட்டை மட்டும் அசைத்தான். சுஜனுக்கு சிரிப்பு வந்தது அங்கு அவ்விதம் கண்மூடி அமர்ந்திருக்கும் மாமா முன் அவர் அறியாமல் அமர்ந்திருப்பதை நினைத்து. மாமா எதை யோசித்துக் கொண்டிருக்கிறார் ? ஒருமுறை கேட்டான் அவரிடம். அன்று ஊரின் பெரிய கோயிலான ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு மாமாவுடன் சென்றிருந்தான்.

“கண்ணமூடி உக்கார்ரப்ப எத பத்தி யோசிப்பீங்க மாமா?”

மாமா மேல் சட்டை அணிவதில்லை. அவன் அறிந்து அவர் மேல் சட்டை அணிந்தே பார்ததில்லை. இடையில் ஒரு வேஷ்டி. இடைசுற்றியோ எப்போதாவது தோளிலோ கிடக்கும் காவித் துண்டு. தரிசனம் செய்யப்போகையில் இடைசுற்றி இருக்கும். முடிந்தபின் தோளில் தளர்வாக கிடக்கும். அப்போது இடையில் சுற்றியிருந்தது.

“எதையுமே யோசிக்கக்கூடாதுங்கறதுதான் நோக்கம்”

“எதுவுமே யோசிக்காமையா… அப்டி இருந்தா என்ன ஆவும்?”

சிரித்தபடி “எனக்கு அப்டி இருக்க பிடிச்சிருக்கு.உனக்கு விளையாட பிடிக்குமில்லையா அதுமாதிரி.”

கோயில் யானை நின்றிருந்தது. சின்ன பையன் போல் சுஜனின் அதே துடிப்புடன் தலை உடலை அலைத்தபடி நின்றிருந்தது. மாமாவைப் பார்ததும் பாகன் “வணக்கம் சாமீ” என்றான். மாமா பதிலுக்கு புன்னகை வீசினார்.

“மாமா இந்த யான தியானம் பண்ணுமா?”

மீண்டும் சிரித்தபடி, “அதுக்கு தியானம் தேவையில்ல. அதோட விளையாட்டுகல்ல தியானங்குற விளையாட்டுகான தேவையில்ல” என்றார்.

அதற்குள் சன்னதிக்குள் வந்துவிட்டார்கள். அன்று சுஜன் சரியாக தரிசிக்க வில்லை. அங்கும் இங்கும் பார்வை பார்த்தபடி நின்றுவிட்டு வெளியே வந்தான். ஆனால் ராகோபாலசுவாமியின் முகம் அவனுக்கு மிகவும் பழகிய முகம். கண்கள் மூடி சாந்தமான முகம். காசி விசுவநாதர் மனித ரூபமில்லையென்றாகும் லிங்க ரூபமாக இருக்கும் அவரிலும் ஒரு சாந்தம். தஞ்சாவூர் அருகே உள்ள மாரியம்மன் கோயில் அம்மனும் சாந்தம். திருவாரூர் தியாகராஜரும் சாந்தம். ஆனால் தஞ்சாவூர் ரோட்டிலுள்ள கீழ்கனபட்டியில் இருக்கும் அவர்கள் குல தெய்வமான வீரன் கையில் அரிவாளுடன் உக்கிரமான முகம் கொண்டு நிற்கும். லாடமுனியும் கோபாவேசத்துடன் நிற்பவர். கருப்பனும் அப்படித்தான். பெரியாச்சி ஒரு பெண்ணை மடியிலிட்டு தொப்புல்கொடியை வாயில் கடித்துக் கொண்டிருப்பவள். ஒரு கையில் குழந்தையை பிடித்திருப்பாள். பாதத்தில் ஒரு மனிதனை மிதித்துக் கொல்லும் கோலம். காட்டேறி கருமை நிறம் கரிய ஆடை கோர பற்கள் நீள ஒரு கையில் தீச்சட்டியுடன் நிற்பவள். அந்த வீரன் கோயிலே கோரமானதுதான். வாசலில் நிற்கும் இரண்டாளுயர குதிரையும் அதன் அருகில் நிற்கும் குதிரைக்காரனும் அருகிலிருக்கும் நாய் சிலையும் கோரமானதுதான். இரவில் அக்கோயிலை நினைக்கவே பயமாயிருக்கும், ஆனால் அக்கோயிலில் வீரன் சிலைக்கு அருகிலேயே இருக்கும் சப்த கன்னியர் மட்டுமே சாந்தமாக அமர்ந்திருப்பார்கள். சுடரொளியில் பார்க்க மனம் நிறையும்.

மாமா அன்று சாந்தமாக அமர்ந்திருப்பதாக தோன்றியது. மாமா எப்பொழுதுமே சாந்தம்தான். எப்போதாவது கோபப்படுவார். அது மற்றவரை சரிப்படுத்த மட்டுமாகவே இருக்கும். மாமா அன்போடு கோபப்படுவதாய் சுஜனுக்குத் தோன்றும். அவன் எதிர்பாராத கணம் மாமா கண் விழித்தார். பேச மனமில்லாதவர்போல் எழுந்து சைகையில் வா என்றார். அவன் உடன் சென்றான். நந்திக்கு பின் புறமிருந்து விசுவநாதரை தரிசித்துவிட்டு நெடுஞ்ச்சான் கிடையாக விழுந்து வணங்கினார். எழுந்து அவனைப் பார்த்தார். அவனும் விழுந்து வணங்கினான்.

“சைக்கிள எடு. வீடுக்குப் போவொம்.” என்றார்.

மாமா எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவார். அவர் இல்லம் காசி விசுவநாதர் ஆலயம்தான். இப்பொழுது ஏன்.. அதுவும் இப்போது போய் ஏன் வீட்டிற்கு ?

“ராஜகோபாலசுவாமிய பாத்துட்டு வரலாமே” என்றான்.

“பாக்கலாம் இப்ப வீட்டுக்கு போயே ஆகணும். ஓட்டு சைக்கிள”

“எனக்கு டபுள்ஸ் பெரியவங்கள வச்சு ஓட்ட வராதே”

சிரித்தபடி “அதெல்லாம் வரும் விட்றா” என்றார்.

“கீழ போட்டுருவேன்”

“விழுந்தா நம்ம ரோடு விழுவோமே” என்றார்.

“இப்ப வீட்டுக்கு வேணாமே வேறெங்காவது போலாமே” என்றபடி அவன் உந்தி சீட்டில் அமர்ந்ததும் சற்று தள்ளிவிட்டு, கடைசியாக ஒரு உந்தலுடன் ஏறி அமர்ந்தார். சுஜனுக்கு மகிழ்ச்சியானது தான் மாமாவை வைத்து சைக்கிள் ஓட்டுவது. யாராவது பார்க்கிறார்களா என மனம் தேடியது, வேனி அக்கா பார்க்கவேண்டும். சின்ன அம்மு பார்க்க வேண்டும் . சிரித்தபடி மிதிவண்டியை விட்டான். மீண்டும் கணபதி செட்டியார் ஸ்கூலை கடந்த போது நாம் ஏன் முதலில் வீட்டிலிருந்து கிளம்பினோம் என நினைவுக்கு வந்தது. அம்முனி அத்தையின் இரைஞ்சும் சப்தம். அதற்குள் வீடு அணுகி விட்டது. நாலு வீட்டிற்கு முன்னாடியே அம்முனி அத்தையின் பேரோலம் கேட்டது. கூடவே அதிர்ந்தெழும் கோபக் குரல்களும் இரைச்சல்களும். சைக்கிளை நிறுத்துவதற்குள் மாமா குதித்து இறங்கினார்.

சைக்கிளை மீண்டும் சுவரோரம் சாய்த்துவிட்டு திண்ணையில் விளக்கு மாடம் ஒட்டி அமர்ந்துகொண்டான். உள்ளே பாத்திரம் உருளும் சப்தமும் மனிதர்கள் போடும் இரைச்சலும் அதிலும் அம்முனி அத்தையின் கீச்சுச் குரல் சுருதி கலைந்த கம்பி வாத்தியம் போலிருந்தது. சின்ன மாமா கத்துவது அவ்வப்போது தெளிவாகக் கேட்டது. ஆனால் முழு வாக்கியங்களை உருவாக்கும் நிலையை அவ்வில்லத்தார் அன்று கடந்துவிட்டிருந்தார்கள். சுஜனுக்கு இது சற்று பழக்கமாகிவிட்டாலும் பதற்றம் என்னவோ முதல் முறை போலவேதான் இருந்தது. அவனால் இச்சச்சரவுகளின் காரணிகளை அறிந்து கொள்ளமுடியவில்லை. தாத்தா பாட்டி மூன்று மாமாக்கள், மூவருக்கும் மூத்த மாமாக்குத்தான் விசுவாநாதர் ஆலயத்தில் வாசம், மூன்று அத்தைகள், தஞ்சாவூர் சித்தி கும்பகோணம் சித்தி, மூன்று மாமாக்களின் பிள்ளைகள் என பெரிய குடும்பம் பெரிய வீடு. மாதமொருமுறை வந்து போகும் அத்தர் விற்கும் நசீம் பாய் போல தவறாமல் ஒரு பெரிய சண்டை.

போனமுறை நன்றாக நினைவுள்ளது சுஜனுக்கு. சுஜன் சின்ன அம்மு முத்து சபரி சுபி என வாண்டுகளாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இட்லி வரத்து கொஞ்சம் தாமதமானது. இது பற்றிதான் அம்முனி அத்தையிடம் தஞ்சாவூர் சித்தி எதோ கேட்கப் போனாள். இட்லி பற்றித்தான் துவங்கியது. வாக்கியங்கள் முழுமையாக உச்சரிக்கப்பட்டன. ஒருவர் பேசி முடிப்பதற்குள் கடைசி இரண்டு மூன்று வார்த்தைகள் மிச்சமிருக்கையிலேயே மற்றவர் பேசத் துவங்குவார். ஸ்கூலில் கண்ட ரிலே ரேஸ் நினைவுக்கு வந்தது சுஜனுக்கு. ஆனால் பேசுபொருள் இட்லியிலிருந்து வெவ்வேறு விஷயங்களுக்கு மாறியது. கொஞ்சம் உயர்ந்த குரல்கள். வழக்கமாக அம்முனி அத்தைதான் கீச்சுக் குரலில் எல்லைமீறிய ஒரு ஓலத்தை எழுப்பியபின் வாக்கியங்களை அமைப்பாள். பின் வெறும் இரைச்சல். அவ்வளவு இரைச்சலிலும் ஒருவர் சொல்வதற்கு மற்றவர் பதிலுரைப்பது போலத்தான் இருக்கும்.

அன்று அம்முனி அத்தை சித்தியை அறைந்துவிட்டாள் பேசிக் கொண்டிருக்கையிலேயே. பின் இருவரும் தலைமுடியை பிடித்துக்கொண்டு கோரமாக சண்டையிட்டார்கள். பாட்டி வேனி அக்கா மற்றோரு சித்தி தடுக்க முயன்றார்கள். சின்ன அத்தை தன் அறை வாயிலிலிருந்து வெறுமனே வேடிக்கை பார்த்தபடி இருந்தாள். சின்ன அம்மு முதலில் அழத் தொடங்கினாள். தொடர்ந்து முத்துவும் சுபியும் இணைந்து கொண்டார்கள். அப்போதுதான் சின்ன மாமா நுழைந்தார். அம்முனி அத்தையை அறைந்து இழுத்து தள்ளினார். அத்தை மறுப்புக்கு நீர் அண்டாவை மூடியிருந்த தாம்பாலத்தை எடுத்து நெட்டுக்குத்தாக வீசினாள். மாமாவின் முகத்தில் ஒரு நிரந்த வடு அன்று உருவானது. இரத்தம் வழியும் முகத்தோடு “உன்ன கொண்ணுருற்றண்டி” என முத்தத்தில் இரங்கி மறு பக்கமிருக்கும் அறைக்குள் ஓட முயன்ற அத்தையை துரத்திப் பிடித்தார், அத்தை வேகுவேகனப் பிராண்டினாள் மாமாவின் கைமுகழுக்க. மீண்டும் அறைந்து தள்ளி கழுத்தை நெரித்தார். அம்முனி அத்தையின் கண்முழிப் பிதுங்கியது. பாட்டி விட்டுற்றா விட்டுற்றா என்று அலரினாள். வேனி அக்கா சித்தப்பா விட்று சித்தப்பா எனக் கெஞ்சினாள். அத்தையின் கருவிழி மேலேறிக் காணாமல் போனது.

அப்போதுதான் ஒரு பலமான அடி ஒன்று சின்னமாமாவின் பிடறியில் விழுந்தது. ஆறடி உயரம் நிற்கும் சின்ன மாமா நிலை குலைந்து விழுந்தார். சித்தி இன்னும் அடங்கிய பாடில்லை. அவளை நிறுத்தும் வழி ஒன்றே. அவள் சக்தியெல்லாம் தீர்ந்து போக வேண்டும். அம்முனி அத்தைக்கும் அப்படித்தான் சின்ன மாமாவின் கழுத்து நெரிப்பொன்றே அவளை பேசச் சக்தியின்றியாக்கும். பெரிய மாமா சித்தியை நோக்கி வந்து கன்னத்தை ஏந்தினார். அவள் வார்த்தைகள் அர்த்தமின்றி வந்துகொண்டிருந்தது. “தங்கம்மா இங்க பாரு.. சரி சரி விடு என்றார்” அவள் தொய்ந்து பெரிய மாமாவின் மீது சாய்ந்தாள். அழுதவளை சறறு தட்டிக் கொடுத்து முற்றத்தின் பக்கம் உட்கார வைத்தார். அம்முனி அத்தை பிராணனின்றிக் கிடந்தாள். பெரிய மாமா கைபிடித்துப் பார்த்து பின் நீர் தெளித்தார். அத்தை மெல்ல கண் திறந்தாள். திறந்தவுடன் அழவும் செய்தாள். வீடு ஓய்ந்தது மெல்ல. ஆனால் காற்றில் ஓலத்தின் அதிர்வுகள் இன்னும் இருப்பதாய்த் தோன்றியது சுஜனுக்கு.

இன்றும் அதே போல்தான் எனப் பட்டது. உள்ளே பெரிய மாமாவின் அதட்டும் குரல்கள் கேட்டது. இன்று மற்ற மூன்று மாமாவும் வீட்டிலிருந்தார்கள். பிரச்சனை ரொம்பவும் பெரிதுதான். ஓலங்கள் சபிக்கும் குரல்களாக மாறியது. கைக்கலப்பு இல்லை எனத் தோன்றியது சுஜனுக்கு. “சின்ன குட்டி நீ வெளிய போ.. சுஜன் அங்க இருக்கான் பாரு அவங்கிட்ட போ” என்று கூறும் பெரிய மாமாவின் குரல் கேட்டது. சின்ன அம்மு வெளியே வந்தாள். சுஜனுக்கும் சின்னவள். அவள் முகத்தில் கீறல்களும் காயங்களுமிருந்தது. சுஜன் அவளை கையைப் பிடித்து அமர வைத்தான். “ஏய் பாப்பு என்ன ஆச்சு? யாரு?” என்றான். சின்ன அம்மு எதுவும் சொல்லும் நிலையில் இல்லை. பதற்றத்தில் சிறிய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

சுஜன் அம்முவின் தோளில் கைபோட்டு அணைத்துக்கொண்டு அருகில் அமர்ந்தான். உள்ளே உச்சஸ்தாயி நோக்கி சென்றது. உள்ளே தள்ளுமுள்ளு நடப்பது குரல்களிலேயே தெரிந்தது. மல்லுக் கட்டும் குரல்கள். அறிவு, வார்த்தை என ஒவ்வொரு எல்லையாக மீறி வெறும் உடல்கள் வெறுப்பின் உருவாக நின்று ததும்புவதன் ஒலி. பின் மடீர் மடீர் எனும் ஒலி. சிவனின் கோபம்தான் இடி என்பார் மாமா. இது பெரிய மாமாவின் அடிதான் என சுஜனுக்குப் புரிந்தது. யாருக்கு விழுகிறது. இம்முறை ஒரு பெண்ணுக்கும் விழுந்தது என்பது தொடர்ந்து வந்த குரலில் தெரிந்தது. மாமா கை ஓங்கினால் பின் மெல்ல அமைதி வரும். இன்னும் ஓயாத ஒரு அமைதி. பேரிரைச்சல் நீங்கும் ஒரு அமைதி.

பெரிய மாமா வெளியே வந்தார். கையில் ஒரு கிண்ணம். “சின்ன குட்டி” என்றவரிடம் மேலும் அழுதபடி சின்ன அம்மு பாய்ந்து கட்டிக்கொண்டாள். கிண்ணத்தை தின்னையில் வைத்துவிட்டு , குழந்தையை அணைத்துக்கொண்டார். சின்ன அம்முவை திண்ணைக்கட்டையில் அமர வைக்கப்பனவர் முழுதும் இருட்டிவிட்டதை உணர்ந்து “வேனிம்மா… ” அதற்குள் வேனி அக்கா கையில் அகலுடன் வந்தாள். அகலை விளக்கு மாடத்தில் வைத்தாள். விளக்கில் ஒளிரும் மூக்குத்தியுடன் அகல் சுடரை தூண்டி நிற்கும் வேனி அக்காவைப் பார்த்தபோது சப்த கன்னியரை நினைத்துக்கொண்டான் சுஜன். விளக்கொளியில் பெரிய மாமா அம்முவின் காயங்களுக்கு மருந்திட்டார். அம்மு இன்னும் கையில் ஏந்திய கோழிக் குஞ்சைப் போல நடுங்கிக் கொண்டிருந்தாள். வேனி அக்கா அழுதபடி மாமாவின் தோளில் சாய்ந்து கொண்டாள். சுஜனுக்கும் அழத் தோன்றியது. மாமா சிரிக்கும் முழியை உருட்டி அழக்கூடாது என செய்கை செய்தார். தோளில் சாய்ந்திருக்கும் வேனி அக்காவிடம் “வேனிம்மா அழக்கூடாது. எல்லா சரியாப் போவும்.” அக்கா மேலும் தேம்ப “ஆச்சுஆச்சு… கிளம்பும்ங்க நாம் ராஜகோபாலசுவாமிய போய் பாத்துட்டுவருவோம்” என்றார். சுஜனுக்கும் துருதுருவென ஆடும் கோயில் யானையை பார்த்தால் தேவலாம் போன்றிருந்தது.

One comment

  1. அகம் : சுஜனின் தவிப்பு , பெடலை கால் இயக்குகிறதா கால் பெடலை இயக்குகிறதா தெரியாத வேகம் சூப்பர், தெய்வங்களை பற்றி சாந்தம் உக்ரம் , கோவிலுக்குள் நுழையும் போது கால் கழுவி நிலைப்படியில் கால் வைக்காமல் ஆசிரியர் கவனம் புரிகிறது.
    தியானத்தின் அர்த்தம் அருமை.
    சப்த்தகன்னியரை ஞாபகப்படுத்தும் மூக்குத்தி அருமை,
    மாமா உடனடியாக வீட்டுக்கு புறப்பட்டு சென்றது உள்ளுணர்வின் வெளிப்பாடோ ? மாமாவை சைக்கிளில் அழைத்துச் செல்லும் சந்தோஷம் அருமை,
    சண்டை பற்றிய வர்ணனை சிறப்பு.
    உறவுகள் கூடும் போது “அகம்” காணமல் போகிறது. (ஆசிரியரின் பாதிப்போ?) காரணம் அற்ற சண்டைகளே அதிகம் , ஆசிரியரும் அதை கண்டு கொள்ளவில்லை !
    சாந்தம் (மனம்) கொள்ள ராஜகோபால் சுவாமி முடிகிறது…
    சிறப்பு…
    அகம் இல்லாதோர் இல்லம் சுகம் தராது !
    தொடரட்டும் …

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.