வெற்றி என்பது யாதெனில் -ஆங்கிலம், விகாஸ் பிரகாஷ் ஜோஷி, தமிழில் வைஜெயந்தி ராஜேந்திரன்

வைஜெயந்தி ராஜேந்திரன்

அவள் பெயர் பல்லவி. அவள் புனேவில் உள்ள செயின்ட் வின்சென்ட் உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள்.

அந்த வகுப்பில் படிக்கும் மற்ற எல்லா ஆண் பிள்ளைகளைப் போலவே நீரத்துக்கும் பல்லவி மேல் ஒரு ஈர்ப்பு. அவன் அவளை மிகவும் விரும்பினான்.

இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், அவளின் அழகிய கவர்ச்சிகரமான தோற்றம், நல்ல கட்டமைப்புடன் கூடிய உடல்வாகு, மென்மையான அவளின் தேகம், அழகிய புன்னகை இவையெல்லாம் யாரையும் அவளைப் பார்த்தவுடன் அவளிடம் நட்பு கொள்ளவே தூண்டும்.

நீரத் அவளை தூரத்திலிருந்தே ரசித்துக்கொண்டிருப்பான். அவன் பெண்களுடன் அவ்வளவு சீக்கிரத்தில் பேசிப்பழகக்கூடியவன் அல்ல. அதனால் பல்லவியை தூரத்திலிருந்து பார்த்து ரசிப்பதிலேயே திருப்தி அடைந்தான் அவன்.

பள்ளியில் ஆண்டுதோறும் நடக்கும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மூன்று மாதங்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் நீரத். அவன், “இந்தப் போட்டியில் நான் வெற்றி பெற்றால், பல்லவி என்னுடையவளாகிவிடுவாள்” என்று அடிக்கடி தன் மனதுக்குள் சொல்லிக் கொள்வான்.

அவன் எதிர்பார்த்தது போலவே போட்டி நடைபெற்ற நாளன்று பல்லவி கூட்டத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்தாள்.

நீரத் சமீபத்தில் வெளியான ஹிந்திப் படத்திலிருந்து “தன்ஹா தில்” (தனிமையான இதயம்) என்ற ஹிட்டான பாடலான பாடலைப் பாடினான். அவன் பாடலைக்கேட்டு அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அவன் மிக நன்றாக பாடினான் என்பது அந்த கைதட்டலில் இருந்து தெரிந்தது. பல்லவி பாரட்டிய விதம் நீரத்துக்கு மிகவும் பிடித்திருந்தது.

நிறைய பாடகர்கள் வந்து பாடிவிட்டுச் சென்றார்கள் ஆனால் அவர்களில் அன்று நீரத் மட்டுமே உண்மையில் நட்சத்திரமாய் ஜொலித்தான்.

இப்போது பத்தாம் வகுப்பைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா, பாடப் போகிறான் என்ற அறிவிப்பு வந்தது. அவன் 10ஆம் வகுப்பின் மாணவர் தலைவன். ஆனால், சுதிர் முறையாக சங்கீதம் கற்றவன் அல்ல. இருந்தாலும், புதிதாக எதையாவது முயன்று பார்க்க வேண்டும் என்ற ஆவலில் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறான்.

சுதீர் பாட ஆரம்பித்தவுடன் நீரத் மற்றும் அவனது மற்ற நண்பர்கள் அனைவரும் பலத்த சத்தத்துடன் சிரிக்கத் ஆரம்பித்தனர்.

அவர்கள் “ஓ…!” “ஓ…l” என கூட்டலிட்டபடி அரங்கத்தில் எழுந்து நின்று கத்தத் தொடங்கினார்கள்.

சுதீர் பாடி முடித்ததும் மேடையை விட்டு அமைதியாக கீழே இறங்கினான்.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே நீரத் முதல் பரிசு பெற்றான். கோப்பையை பெற்றவுடன் நீரத்தின் கண்கள், கூட்டத்தில் பல்லவி எங்கே இருக்கிறாள் என ஆவலுடன் தேடியது. ஆனால், அவள் அங்கு இல்லை.

நீரத் ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தான்.

ஓரிடத்தில் பல்லவி சுதீருடன் அமந்திருப்பதையும், அவள் சுதீருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருப்பதையும் பார்க்கிறான் நீரத்.

நீரத்தைப் பார்த்தவுடன் கோபமாக எழுந்து நின்றாள் பல்லவி.

ஏய் முட்டாள், ஏன் அவனை கேலி செய்தாய் என்று நீரத்தைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் பல்லவி.

சுதிர் மௌனமாய் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தான்.

“சுதிர் ஒரு நல்ல பாடகரான இல்லாமல் இருக்கலாம், அவன் உன்னைப் போல் நன்றாக பாட முடியாதவனாய் இருக்கலாம். ஆனால், அதுவே அவனை கேலி செய்யும் உரிமையை உனக்குத் தராது என்பதை நீ புரிந்துகொள்ளவில்லையா?.

அவனுக்கு பாடத் தெரியாது என்றாலும் அவன் பாட முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக போட்டியில் கலந்து கொண்டான். ஆனால் நீ எப்பொழுதாவது அது போல் முயற்சி செய்திருக்கிறாயா? நீ நடந்துகொண்ட விதத்தில் அவன் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை நீ கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தாயா ? என படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தாள் பல்லவி.

அமைதியாக அமர்ந்திருந்த சுதீருக்கு ஆறுதல் கூறுவது போல் அவன் தோளில் கை வைத்திருந்தாள் பல்லவி.

சில நொடிகள் அமைதியாக நின்றிருந்தான் நீரத். பிறகு தன் தவறை உணர்ந்தவனாய், “சுதிர், நாங்கள் செய்த தவறுக்கு மிகவும் வருந்துகிறோம். நாங்கள் அப்படி நடந்து கொண்டது தவறு தான் என்பதை ஒத்துக்கொள்கிறோம் என்றான் நீரத்.

சுதீர் பரவாயில்லை என்பது பல் தலையை மெதுவாக அசைத்து தனது கண்ணீரை அடக்கிக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து, பல்லவியைப் பார்த்து “பல்லவி, வீட்டிற்கு போகலையா ?” என்றான் நீரத்
சிறிது நேரம் ஏதும் பதில் சொல்லாம் அமைதியாக இருந்தாள் பல்லவி.

பிறகு, சற்றே தயங்கிய குரலில், “என் வீடும் சுதீரின் வீட்டுக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது. சுதீர் அப்பா வந்ததும் நான் அவனுடன் சேர்ந்து சென்று கொள்கிறேன்” என்று ஒரு தீர்மானத்துடன் சொன்னாள் பல்லவி.

ஏதும் சொல்லாமல் திரும்பி தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான் நீரத். அவனுடைய கைகளில் இருந்த வெற்றிக்கோப்பை இப்போது அவனுக்கு மிக மலிவான இரும்பு கோப்பையாகக் கனத்தது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.