தூய வெண்மையின் பொருளின்மை

காஸ்மிக் தூசி 

தனிமையின் விஷமேறி
நீலம்பாரித்து நிற்கும்
வானம்
மேகங்கள் அற்று
மேலும் வெறுமை கூட
நீலம் அடர்கிறது.

இலைகளற்ற கிளைகளில்
விளையாட யாருமற்று
நிறங்களை துறந்த கிரணங்கள்
உக்கிர வெண்மையை
ஓலமிடுகின்றன

நிறங்களின் வெறுமையில்
நிறையும் வெண்மையில்
திசையெங்கும் பிரதிபலித்து
மீண்டு வந்து சேரும்
மேலும்
சிறிதளவு
வெண்மை.

பனி பூத்து
பனி கொழிக்கும்
வனமெங்கும்
தானே எதிரொளித்து
சோம்பிக் கிடக்கும்
தூய வெண்மையின்
பொருளின்மையில்,

எப்படியாவது
ஒரு துளி அர்த்தத்தை
சேர்த்துவிட
முயல்வது போல்

பசியில்
வளை நீங்கி
வந்து நிற்கும்
மெலிந்த அணிலின்
மரத்தின் வேரோரம்

பனியில் புதைந்து துழவும்
என் கால்கள்
நெருங்கி நிலைப்பட
அசையாமல் ஆகும்
அணில்

இப்போது
எங்களுடன்
ஏரி தியானிக்கிறது
காற்று தியானிக்கிறது
வானம் தியானிக்கிறது
மரங்கள் தியானிக்கின்றன.
மலைத்தொடர்கள் தியானிக்கின்றன

அணிலின் விழித்திரையில்
ஒரு புராதன
ஓவியமாய்

அசைவின்றி
எஞ்சி
ஒருங்கும்
இப்பிரபஞ்சம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.