யாதனின் யாதினும் நீங்கி

காஸ்மிக் தூசி 

பறவைகள் அணில்கள்
பூச்சிகள் புழுக்கள்
பூ பழம் காய்
இலை குருத்து
யாதனின்
யாதினும் நீங்கி,

பிடுங்கி
தலைகீழாய்
நட்டது போல்
பற்றற்று
பிரபஞ்சப் பெருவெளியில்
தனித்து நின்றிருக்கும்
அந்த பெரும் பிர்ச்மரம்.

துக்கம்
விசாரிக்க வந்த
பழைய தோழனைப்போல்
எதிர்பாராமல்
எங்கிருந்தோ
வந்து சேர்ந்து விட்டது
ஒரு கரும் பறவை.

சிலை போல
நிலை பெயராது
எதுவும் சொல்லாது
கைபற்றி அமைதியாய்
அமர்ந்திருந்து

குசலம் முடித்து
எம்பித் தாவி
ஒலி எழும்ப
சிறகடித்து பறந்து செல்ல,

இலையற்ற
கிளை அசைத்து
விடையளித்த பின்,

வழமை போல
தன் தியானத்துக்கு
திரும்பி விட்டது
மரம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.