Author: பதாகை

கட்டு

ஸிந்துஜா

படுக்கை அறையிலிருந்து வெளியே வந்து கதவைச் சார்த்தி விட்டு மாடிப்படிகளில் இறங்கத் திரும்பிய மாதங்கி ஒரு கணம் உறைந்து போனாள். படிக்கட்டு கீழே முடியும் இடத்திலிருந்து சற்று முன் தள்ளி அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு கோபி நின்றிருந்தான். அவன் அந்த விடிகாலையில் அங்கு நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. எதற்காக இங்கு வந்து நிற்கிறான்? அண்ணனைத் தேடி வந்தானா? அவ்வளவு விடிகாலையில் அதுவும் அண்ணன் இருக்கும் படுக்கை அறையில் சந்திக்கும் வண்ணம் அவசரம் என்ன? அவன் காதில் சற்று முன்னால் எழுந்த ஒலிகள் விழுந்திருக்குமோ? அவன் நின்ற இடத்துக்கும் மாடியில் இருக்கும் படுக்கை அறைக்கும் அதிக தூரமில்லை. இப்போது கூட ஆறு மணி அடிக்கும் கடிகார ஒலி அங்கிருந்து கேட்கிறதே? மாதங்கிக்குத் தான் குறுகிப் போய் நிற்பதாகத் தோன்றும் உணர்விலிருந்து தப்பிக்க முடியவில்லை.

கீழே இறங்கி அவனை நெருங்கியபோது அவனுக்கு அவளது அருகாமை தெரிந்திருக்கும். ஆனாலும் திரும்பாது கோபி கல்லைப் போல நின்றான். இது அவள் மனதில் முளைத்த சந்தேக விதை ஆல மரமாக விரிந்து எழுவதை உறுதிப்படுத்தியது.

“கோபி, விடிகாலேல இங்க நின்னு என்ன செஞ்சுகிட்டு இருக்கே?” என்று அவள் கேட்டாள்.

திரும்பிப் பார்த்த அவனைக் கண்டு அவள் திடுக்கிட்டாள். எப்போதும் புன்னகையில் மலர்ந்து கிடக்கும் அந்த முகம் இப்போது ஏதோ கைபட்டவுடன் தலை குனிந்து விழும் தொட்டாற்சுருங்கி இலை போல சுண்டிக் கிடந்தது. என்ன ஆயிற்று அவனுக்கு?

“ஏன் என்னமோ போல இருக்கே? ஒடம்பு சரியில்லியா?”

“இல்லியே. ஐம் ஆல்ரைட்” என்று சொல்லிக் கொண்டே வாசல் பக்கம் சென்றான். அங்கிருந்து திரும்பிப் பார்த்து “ஒரு வாக்கிங் போயிட்டு வந்திர்ரேன்” என்று வெளியே நடந்தான்.

மாதங்கி இருந்த இடத்தை விட்டு நகராமல் நின்றாள். அவளைப் பார்த்ததும் சிரித்தபடியே “குட் மார்னிங் அண்ணி” என்றும் “காப்பி தரீங்களா?” என்றும் “இன்னிக்கி என்ன டிபன்?” என்றும் அவனிடம் இருந்து வரும் வார்த்தைகள் ஏன் இன்று காணாமல் போய் விட்டன? அவள் நினைத்தது சரிதானா?

அவளுக்கு அவளது கணவன் மேல் கோபம் பீறிட்டது. எல்லாம் அவனால் வந்த வினை. நேற்றிரவு மூன்று முறை ஆன பின்பும் விடிகாலையில் அவள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது அவளை இழுத்துப் படுக்கையில் தள்ளினான் ராம்பாபு.

“ஐய, என்ன இது? விடுங்க. வெள்ளிக்கிழம. சீக்கிரம் எழுந்து எண்ணெ தேச்சுக் குளிக்கணும்” என்று அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள்.

“யார் உன்னய எண்ணெ தேச்சுக் குளிக்க வேணாம்னு சொல்றாங்க? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சிரித்தபடி அவளைத் தன் மேல் இழுத்து விட்டுக் கொண்டான். “இஸ்ரேல்ல எல்லாம் காலேல நாலு அஞ்சு மணிக்குத்தான் அப்பிடி ஒரு லவ் வருமாம்!’

“அப்ப இந்த ஊர்ல யாரு உங்களக் கலியாணம் பண்ணிக்கச் சொன்னாங்க?”என்று கேட்டாள் வெடுக்கென்று. குரலில் அவளது விருப்பமின்மை சிறிய சாயலுடன் வெளிப்பட்டு விட்டதாக நினைத்தாள். ஆனால் அவன் கண்டு கொள்ளாதவன் போல இன்னும் இறுக்கமாக அவளை அணைத்தான்.

மாதங்கிக்கு எரிச்சல் மண்டியது. வெள்ளிக்கிழமை, எண்ணெய் தேய்த்துக் குளியல் எல்லாம் சாக்குதான். அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க அவளால் முடியவில்லை. என்னமோ ஒரு மாதமாக அவளைக் காணாதது போலவும், அப்போதுதான் கண்டது போலவும்… அப்படி ஒரு வெறி. தினமும் இப்படியே நடக்கிறது.

அவள் தன் விருப்பமின்மையைச் செயலால் காண்பிக்க விரும்புபவளைப் போல பலவந்தமாக அவனிடமிருந்து விடுபட்டாள். படுக்கையிலிருந்து எழுந்துதன் உடையைச் சரி செய்து கொண்டாள்.

“நான் சொல்லிகிட்டே இருக்கேன். உனக்கு அவ்வளவு ராங்கியா?” என்று எழுந்து அவள் மீது பாய்ந்தான். சேலை மூடாதிருந்த அவளது இடுப்பில் வேகமாக அவனது கை விழுந்தது. சரியான அடி.

அவள் வலி பொறுக்க மாட்டாமல் “ஐயோ அம்மா !” என்று கத்தி விட்டாள்.

ராம்பாபு அவளைப் பார்க்க விரும்பாதவன் போலப் படுக்கையில் திரும்பிப் படுத்துக் கொண்டான். அவள் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு அறையைவிட்டு வெளிவந்த போதுதான் கோபி நின்றிருந்ததைக் காண வேண்டியதாயிற்று. அவன் எதற்காக மாடிப்படி அருகில் வந்தான்? யதேச்சையாகவா? இல்லை வேறு காரணம் இருந்ததா? ஆனால் அதைப் பற்றிய விசாரம் தேவையற்றது. வந்தவன் அறிந்து கொண்டிருந்தால் அதுதான் அவளைக் கொல்லும் விஷயமாக இருக்கும். அறிந்து விட்ட முகத்தைத்தான் அவள் பார்த்தது போல அவளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவனும் பழைய மாதிரி அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாது என்பது போலத்தானே இப்போது வெளியே சென்றான்?

மாதங்கி மனதில் ஏற்பட்ட வலியையும் குமுறலையும் அடக்கிக் கொண்டு தின அலுவல்களில் ஈடுபட முயன்றாள்.

கோபி பார்க்கில் உட்கார்ந்திருந்தான். மனது வெதும்பிக் கிடந்தது. சுற்றிலும் காற்றுடன் சரஸமாடிக் கொண்டிருந்த மரப்பச்சை இலைகளும் செடிகளில் விரிந்திருந்த வண்ணப்பூக்களும் அவனை ஈர்க்கவில்லை. இன்று அதிகாலையில் அவன் எதற்குக் கிணற்றுப் பக்கம் போனான்? போகாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஒரு வாரத்துக்கு முன்னால் வீட்டிலிருந்த சிறிய தோட்டத்தில் போட்டிருந்த ரோஜாப் பதியன் எப்படி இருக்கும் என்று
நினைப்பு வந்து கிணற்றுப் பக்கம் போனான். அதைத் தாண்டித்தான் தோட்டத்துக்குப் போக வேண்டும். செடியில் பச்சை இலைகள் தலை காட்ட ஆரம்பித்திருந்தன. அவன் அருகே வைத்திருந்த உர மூட்டையில் இருந்து ஒரு பிடி உரத்தை அள்ளி வட்டமாகத் தூவினான். பிறகு கிணறு அருகே இருந்த வாளியிலிருந்து நீரை மொண்டு செடியைச் சுற்றி விட்டான். திரும்ப செம்பை வாளியில் போட்டுவிட்டுத் தனது அறைக்குக் கிளம்பும் சமயம்தான் ‘பளார்’ என்ற சத்தமும் “ஐயோ அம்மா!” என்ற அண்ணியின் குரலும் கேட்டன. அவன் பதறிப் போய் மாடிப்படியை நோக்கிப் பாய்ந்தான். இரண்டு படிகள் ஏறியதும் சட்டென்று நின்று விட்டான். இப்போது தீனமான சத்தம் எதுவும் மாடியிலிருந்து வரவில்லை. அவன் தயங்கியபடி படிகளில் இருந்து கீழே இறங்கினான். அண்ணிக்கு என்ன ஆயிற்று என்று மனது படபடத்தது.

அவன் சென்னையிலிருந்து ஆபீஸ் டிரெய்னிங், ஒரு மாதம் தங்க வேண்டும் என்று பெங்களூருக்கு வந்தான். அப்போதுதான் அவனுக்கு ஒன்று விட்ட அண்ணனான ராம்பாபு அவனைத் தன்னுடன் வந்து தங்கச் சொன்னான். ‘இங்க வீடு வசதியா இருக்குறப்போ எதுக்கு வெளீல தங்கிகிட்டு ஓட்டல்ல சாப்பிட்டு வயித்தைக் கெடுத்துகிட்டு’ என்று சத்தம் போட்டான். மாதங்கியும் கோபிக்கு
தூரத்து உறவுதான். கணவனும் மனைவியுமாக வற்புறுத்தியதால் அவன் வந்தான். எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது. சற்று முன்பு வரை.

மாதங்கி கீழே விழுந்தோ, கட்டில் அல்லது நாற்காலியில் இடித்துக் கொண்டோ அம்மாதிரி கத்தவில்லை என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அவள் எழுப்பிய சத்தத்திற்கு முன்பு காதில் விழுந்த ‘பளாரெ’ன்ற சத்தம் ராம்பாபு அவள் மீது கை வைத்தான் என்று அவனுக்குத் தெரிவித்து விட்டது. புருஷன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அது அதிகாலையில் கூட நிகழலாம். ஆனால் ஒரு பெண்ணை, அவள் மனைவியாய் இருந்தாலும் கூட அடிப்பது என்பதை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் ராம்பாபுவிடம் ஒருவித கெட்ட குணமும் கிடையாது என்று எல்லா உறவினர்களும் வாய்க்கு வாய்
சொல்லுவார்கள். இப்போதுதான் முன்கோபம் உண்டென்று தெரிகிறது. முன்கோபம் இருந்தாலும் கூட மனைவியை அடிப்பது என்பது…

கோபி தலையை உலுக்கிக் கொண்டான். அவ்வளவு கோபம் வருமளவுக்கு அண்ணி என்ன செய்தாள்? அவர்கள் இருவருக்குள் அவள்தான் கெட்டிக்காரத்தனம், பொறுப்பு, இனிமை என்று சற்று ஓங்கி நிற்பவள். ஆனால் ராம்பாபு இதற்காக நெஞ்சை நிமிர்த்திக் கொள்பவனே தவிர மற்ற கணவன்மார்களைப் போல் அசூயையில் சுருங்குபவனல்ல என்று கோபி அறிந்திருந்தான்.

சற்று முன்பே அண்ணி அவனைப் பார்த்த போது அவளிடம் அவன் கேட்டிருக்கலாம் – ஏதேனும் அடிகிடி பட்டுவிட்டதா அவளுக்கு, ஏன் அவள் அலறினாள் என்றெல்லாம். ஆனால் அண்ணியின் முகத்தைப் பார்த்த கணத்தில் வாய்க்கு வருமுன்பே வார்த்தைகள் தொண்டைக்கு வந்து அங்கேயே அடைத்துக் கொண்டு நின்று விட்டன. வழக்கமாக அவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் மலரும் புன்னகைக்கு என்ன நேர்ந்து விட்டது? அவள் முகத்தில் கலவரத்தின் நிழல் படிந்திருந்தது போலத் தோன்றியது அவனது பிரமையா? அவள் குரலும் கூடச் சரியாக இல்லை.

கோபி வீட்டுக்குள் வருவதைப் பார்த்து மாதங்கி கடிகாரத்தை நோக்கினாள். மணி பத்து.

“ஏன் இன்னிக்கி டிரெய்னிங் க்ளாஸ் போகலியா?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் குரல் இயல்பாக இருந்தது.

“இல்ல. இன்னிக்கி மத்தியானம்தான் போகணும்” என்றான் அவன்.

“சரி, டிபன் சாப்பிட வா. டெய்லி எட்டரை மணிக்கு சாப்பிட்டுருவே. அப்போலேந்து எங்க போயிட்டேன்னு கவலையா இருந்திச்சு” என்றாள் மாதங்கி.

“இல்ல. நான் டிபன் சாப்பிட்டு விட்டேன்” என்றான் அவன்.

“என்னது? இது என்ன புதுசா இருக்கு!” என்றாள் மாதங்கி.

அவன் அவள் கண்களை நோக்காமல் தலையைக் கீழே கவிழ்த்தவாறு “இல்ல. வழில ஒரு பிரெண்டைப் பார்த்தேன். ரெண்டு பேரும் போய் ஓட்டல்ல சாப்பிட்டோம். அதான் இவ்வளவு நேரம் ஆயிருச்சு வீட்டுக்கு வரதுக்கு” என்றான்.

“அட, கூப்பிட்டிருந்தா நானும் வந்திருப்பேனே!” என்றாள் மாதங்கி. அவள் சமையல் அறையிலிருந்து எடுத்து வந்த இட்டிலிகளை ஒரு தட்டில் போட்டு மேஜை மீது வைத்தாள்.

அவள் குரலின் உஷ்ணம் கேட்டு அவன் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.

“பொய் சொல்றதுக்கு எல்லாம் தனி திறமை வேணும் சார்” என்றாள். தட்டில்சட்டினியையும் சாம்பாரையும் போட்டாள்

அவன் பேசாமல் சாப்பிடத் துவங்கினான்.

“காலேல என்ன நடந்திச்சின்னு உனக்குத் தெரியும்?” என்று மாதங்கி கேட்டாள்.

அவன் கிணற்றுப் பக்கம் வந்த காரணத்தையும், மாடியிலிருந்து கேட்ட ஒலிகளைப் பற்றியும் அவளிடம் சொன்னான். சில சமயங்களில் அவள் முகம் சிறுத்து மீண்டும் பழைய நிலைக்குச் சென்றது.

“அதுக்கு எதுக்கு வீட்டுல சாப்பிடமாட்டேன்னு அடம் பிடிக்கிறே?” என்று அவள் கேட்டாள்.

“அண்ணன் உங்களை அடிச்சாருல்ல?” என்று அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.

மாதங்கி அவனை உற்றுப் பார்த்தாள்.

“நான் இல்லேன்னு உன்கிட்ட பொய் சொல்லப் பிரியப்படல” என்றாள்.

“நீங்க வலி பொறுக்க முடியாம அப்பிடி கத்தற அளவுக்கு என்ன தப்பு பண்ணீங்கன்னு அவரு அடிச்சாரு?” என்று கோபத்துடன் கேட்டான். “பொம்பளைப் பிள்ளைக மேல கை வைக்கிறவன்லாம் ஆம்பிளைன்னு நான் எப்பவுமே நினச்சதில்லே.”

அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். அவனுக்கு ராம்பாபு மீது மிகுந்த பிரியம் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் இப்போது யாரோ மூன்றாம் மனிதன் மீது காறி உமிழுவது போல அவன் பேசுவது உண்மையில் ராம்பாபு மேலேதான்.

“நீ இப்பிடியெல்லாம் உங்க அண்ணன் கிட்ட பேச முடியாது” என்றாள் மாதங்கி.

“நீங்க என்ன காரணம்னு சொன்னா நான் அண்ணன் கிட்ட எப்படிப் பேசணும்னு முடிவு பண்ணிக்குவேன்” என்றான் கோபி.

அவள் திகைத்தாள். எதுவும் பேசாது நின்றாள்.

“சரி விடுங்க. அது எங்க குடும்பப் பிரச்சினை, நீ தலையிடாதேன்னா நான் சொல்ல என்ன இருக்கு? நான் இந்த மாதிரி கோபப்படறது கூட சரியில்ல. கூப்பிட்டு உக்கார வச்சு சோறு போட்டு காப்பாத்துறீங்க. ஐ ஷுட் நோ மை லிமிட்ஸ்” என்றான்.

“என்ன சொல்றே? உன்னைய கீழ கிடக்கிறவன் மாதிரி நான் பாக்கிறேன்னா?” என்று கேட்டாள்.

அவன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டான்.

“அண்ணி, இப்பிடியெல்லாம் என்னைப் போட்டுக் கொல்லாதீங்க” என்றான் நடுங்கும் குரலில்.

“நான் காரணத்தைச் சொன்னா நீ இன்னும் வருத்தப்படுவியேன்னுதான்” என்றாள் மாதங்கி வருத்தம் தொனிக்கும் குரலில்.

அவர்கள் இருவரும் சற்று நேரம் பேசாமல் இருந்தார்கள். சுவரில் இருந்து பல்லி கொட்டும் சத்தம் கேட்டது. சாதாரணமாக இருந்தால் சத்தம் வரும் திசை பார்த்து நல்ல சகுனமா அல்லது கெட்டதா என்று அவனுடைய அம்மா சொல்லுவாள். இப்போது கெட்ட திசையில் இருந்து கொண்டுதான் சத்தம் வருகிறது என்று கோபி நினைத்தான்.

எழுந்து தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு போய்க் குழாயில் கழுவி உள்ளே வைத்து விட்டு வந்தான். டைனிங் டேபிளைச் சுற்றிப் போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் மாதங்கி உட்கார்ந்திருந்தாள். அவள் முகமும் கவலையில் தோய்ந்து களை இழந்திருந்தது.

அவன் மாதங்கிக்கு எதிரே வந்து உட்கார்ந்தான். அவளிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்று நினைத்தான். ஒரு வேளை அவளே ஒன்றும் சொல்லாமல் சற்றுக் கழித்து எழுந்து போகக் கூடும். அப்படிப் போனால் இதற்கு ஒரு முடிவு கட்டியாயிற்று என்று அவனும் நிம்மதியாய் இருக்கலாம். அவளும்.

“இது ஒரு மாசமா நடந்துகிட்டு இருக்கு. யாருட்டயும் போயி சொல்லற விஷயமா இல்லியே? அப்பா அம்மா அக்கான்னு போயி அழுதுட்டு நிக்கற காரியமா என்ன? வெட்கக்கேடுன்னு உள்ளுக்குள்ள புதைச்சு வச்சு தனியா சாகற விஷமால்ல இருக்கு? இல்லே அப்பிடியே யாரு கிட்டயானும் போயி கால்ல விழுந்து என்னயக் காப்பாத்துங்கன்னு சொல்லிட முடியுமா?” என்று கேட்டாள் மாதங்கி.

அவை தன்னிடமிருந்து பதில்களை எதிர்பார்த்து இறைக்கப்பட்டவை அல்ல என்று கோபி நினைத்தான். அவளுடைய ஆற்றாமையை வெளிப்படையாகச் சொல்ல முடியாத கூச்சத்தில் வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஆனால் குரலில்தான் என்ன ஒரு சோகம்? அவளது வார்த்தைகளின் மூலம் கிடைக்கும் சித்திரம், ஜன்னலின் மீது படர்ந்திருக்கும் புழுதியின் மேல் மழை தூறி விட்டுப் போன பின் காணக் கிடைக்கும் கலைந்த கோடுகளால் ஆனது போல. இருக்கிறது. சொல்லியதில் புரிந்தது கொஞ்சமாகவும், புரியாதாது அதிகமாகவும் என்பது போல அவன் உணர்ந்தான்.

அவள் தொடர்ந்தாள்.

“இது திடீர்னு வந்த கோளாறுதான். எதையாவது படிச்சிட்டு வந்து கெடுத்துக்கிட்ட மனசா? எவனாவது சினேகம்னு உருப்படாதது வந்து உளறிக் கொடுத்த முட்டாள்தனமா? கச்சடாவா சினிமான்னு எதாவது அசிங்கத்தைப் பாத்து புழு பூச்சியா ஆயிடணும்னு வேண்டுதலா? ஒண்ணும் புரியலையே. ராத்திரி பகல்னு வித்தியாசம் கிடையாதா? நீ ஊர்லேந்து இங்க வந்தது நல்லதா ஆச்சுன்னு மனசு ஓரத்துல துளி சந்தோஷம் இருந்திச்சுன். ஆனா போன ஞாயத்திக்கிழம நீ உன் பிரெண்டோட மாட்டினி ஷோ போறேன்னு சொன்னதும் உங்க அண்ணனுக்கு வந்த கிளுகிளுப்ப நீ பாத்தேல்ல?”

கோபி அந்தத் தினத்தை நினைவு கூற முயன்றான். ஆமாம். அண்ணன் அவனைப் போயிட்டு வா என்று சொல்லி செலவுக்குப் பணம் வேணுமான்னுகேட்டது ஞாபகத்துக்கு வந்தது. அண்ணி சொல்வது போல குரலில் உற்சாகம்எகிறியதாக இப்போது நினைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. அடக்கண்ணராவி !

“உன்கிட்டயும் இதையெல்லாம் நான் சொல்லக் கூடாது. ஆனா நீ என்கிட்டே கேட்ட மாதிரி உங்க அண்ணன் கிட்ட கேக்கப் போயிட்டேன்னா? மொதல்ல அவருக்கு கோபம் மண்டிக்கிட்டு வரும். நீ யார்ரா இதெல்லாம் பேசன்னு உனக்கு வாசலைக் காமிச்சா?”

“காமிச்சா ஒடனே போயிட வேண்டியதுதான்” என்றான் கோபி.

“ஆனா அதோட எல்லாம் நின்னு போயிடுமா? ‘நீதாண்டி அவன் கிட்ட போயி அழுதிருக்கணும்’னு என் மேலே பாஞ்சா? என் வார்த்தைக்கு அவர் வார்த்தைதான் கேள்வியும் பதிலும் ஆனா உண்மை என்னங்கறது நம்பிக்கை வச்சு செய்யற காரியம் ஆச்சே. உன்கிட்ட தன்னோட மரியாதை கெட்டுப் போச்சுங்கிற கோபம் கண்ணை மறச்சிட்டா உண்மைய எங்க போய் திரையை விலக்கிக் காட்டுறது?”

“அப்ப இப்பிடியே சும்மா விட்டிற வேண்டியதுதானா? நீங்க அடியையும் வாங்கிகிட்டு, வாய மூடிக்கிட்டு வீட்டு வேலை செஞ்சிட்டு இருக்கணுமா?”

“சரி. நீ போய்யான்னு விட்டு விலகிப் போயிரலாம். ஆனா அதுக்கு அப்புறம் எங்கப்பா அம்மாவைத்தான் நான் போய் நொறுக்கணும். அப்படியே நொறுங்கிப் போகாட்டாலும் அவுங்க எவ்வளவு காலத்துக்கு என்னை வச்சுக் காப்பாத்துவாங்க? அவங்க எனக்குக் கலியாணம் செஞ்சு அனுப்பி வச்சதே இந்த சுமைய இறக்கி வைக்கத்தானே? அவங்களை விடு நம்ம உறவு ஜனத்துக்கு தெரியும் போது ஊரு உலகத்துல நடக்காததா இப்ப நடந்திருச்சுன்னு வழிச்சுகிட்டு சிரிப்பாங்க. இல்லே நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி நிப்பாங்க. படிச்சிருந்தாலும் வேலைக்கு போயி சொந்தக் கால்னு நிக்கலாம். அதுவும் இல்லாம போச்சு. வேணும்னா பத்துபாத்திரம் தேய்க்கலாம். இல்லே சமையக்காரியாப் போய் வேலை பார்க்கலாம்…” என்றாள்.

அவள் சொல்வதைக் கற்பனை செய்து பார்க்க கோபிக்கு நடுக்கமாக இருந்தது!

“கதப் புஸ்தகத்துல வர்ற பொண்ணா இருந்தா கொடி பிடிச்சுகிட்டு எதிர்த்துப் போராடறான்னு எழுதிரலாம். சினிமாலேன்னா அவ அவனுக்கு திருப்பி செஞ்சு பழி வாங்கினான்னு இன்னொரு ஆம்பிளையோட வாழ வச்சிரலாம். ஆனா குடும்பம் ஊரு உறவுன்னு நடைமுறைல கட்டிப் போட்டு வச்சிருக்கிற ஜென்மமா இருந்தா மறுகிக்கிட்டே கிடக்க வேண்டியதுதான். என்னாலயும்
இதுக்கு எதுவும் பண்ண முடியாது. உன்னாலயுந்தான்” என்றாள்.

தெளிவு

ராதாகிருஷ்ணன்

இன்று சனிக்கிழமை, எல்லா பிள்ளைகளுக்கும் விடுமுறை நாள், ஆனால் ராஜுவுக்கு மட்டும் வேலை நாள், அவன் அப்பா விடுமுறை நாட்களில் அவனை workshop இழுத்துக் கொண்டு போய் விடுவார், அப்பாவிற்கு வேலை என்பது டிங்கர் என சொல்லப்படும் வாகனங்களில் இரும்பு சார்ந்த பகுதிகளை சரிசெய்யும், அதாவது அடிப்பட்டால் அதை ஒடுக்கு நீக்கி மீண்டும் பழைய வடிவம் கொண்டு வரும் வேலை, உடைந்த பகுதிகளை கேஸ் வெல்டிங் பயன்படுத்தி ஒட்ட வைக்கும் வேலை, மொத்தக்காக வாகனங்களில் கட்டமைப்புகளில் வரும் பழுதுகளை சரிசெய்யும் பணி என்று சொல்லலாம்.

ராஜுவின் அப்பா லாரி டிங்கர், லாரிகளில் மட்டுமே பார்க்கும் அனுபவம் கொண்டவர், ஒன்று இரண்டல்ல, இருபத்தைந்து வருட பணி அனுபவம் கொண்டவர். அவர் பணிபுரியும் இந்த லாரி பேட்டைக்கு 10 வயதில் அண்ணனுக்கு துணையாக வந்து சேர்ந்தவர், அன்றிலிருந்து இப்போது வரை இங்குதான் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அண்ணனிடம் சம்பளம் சேர்த்தி கேட்கவும் அவர் தனியாக நீயே வெளியே போய் ஆரம்பித்துக் கொள் என்று சொல்லி கழட்டி விட பிறகு கிருஷ்ணன் அண்ணன் மெக்கானிக் ஷாப்பில் கொஞ்சம் இடம் பிடித்து அமர்ந்தவர், இப்போதுவரை தொடர்கிறார், ஹெல்ப்ர் வேலைக்கு ஆட்கள் வைத்து கொண்டால் சம்பளம் கொடுத்து சமாளிக்க முடியாது என்பதால் அவரே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்வார், அதனாலேயே விடுமுறை நாட்களில் ராஜுவை உடனழைத்து கொள்கிறார், சிலசமயம் அப்பா மதிய உணவிற்கு சாயங்காலம் வந்து அப்படியே ராஜுவையும் அழைத்து கொண்டு போய் விடுவார். இன்றும் அவ்வாறுதான் அழைத்து செல்ல காத்திருந்தார்.

ராஜுவுக்கு அப்பாவுடன் போவது என்பது பிடிக்கும் பிடிக்காது இரண்டும் சேர்ந்துதான். அவனுக்கு பெரிதாக எல்லாம் வேலை இருக்காது, ஸ்பானர் எடுத்து தருவது, வெல்டிங் செய்ய கம்பி எடுத்து தருவது, கடைக்கு போய் டீ வாங்கி வருவது மாதிரியான சில்லறை வேலைகள்தான், சிலசமயம் மட்டும் ஏதாவது அசையாமல் இருப்பதற்காகவோ, தாங்கி பிடிப்பதற்காகவோ பிடிக்க சொல்வார், வெல்டிங் சமயத்தில் ஆடாமல் இருக்க வேண்டும், ஆடினால் வெல்டிங் சரியாக வைக்க முடியாது. இது போன்றவைகள் மட்டுமே ராஜுக்கு வேலைகள், எப்போதாவது அப்பா ராஜுவை வெல்டிங் நாசில் கொடுத்து வெல்டிங் வைத்து பழக கொடுப்பார், அப்படி கொடுத்து கொடுத்து ஓரளவு வெல்டிங் வைக்கவும் ராஜு கற்று கொண்டான்.

ராஜு பரத்தம் பிடித்தவன், பார்த்த எல்லாமே வாங்கி சாப்பிட வேண்டும் அவனுக்கு, அப்பாவுடன் வரும்போது கேட்டதல்லாம் கிடைக்கும், இப்போது 8 வகுப்பு வந்துவிட்டதால் கொஞ்சம் கேட்கும் விரும்பும் விஷயங்கள் குறைவாகி விட்டன, இளநி பார்த்தான், அப்பாவிடம் அப்போது பணம் இருந்தால் அடம் பிடித்து வாங்கி விடுவான், டீ சமயங்களில் இரண்டு போண்டாக்கள் அவன் வாய்க்குள் போய் விடும். வெங்காய போண்டா, உருளை கிழங்கு போண்டா இரண்டிலும் ஒன்றை தூக்கி விடுவான். பிறகு பரோட்டா அப்பா பணம் ஏதும் வசூல் வந்தால் வாங்கி தருவார், கூட ஆம்லெட்டும். இதெல்லாம் நல்ல விஷயங்கள் தான். ராஜுவுக்கு கெட்ட விஷயங்களும் கூட கிடைக்கும், எதாவது கஸ்டமர் கூட சண்டை என்றால், கஸ்டமரிடம் காட்ட வேண்டிய கோபத்தை அவனிடம் காட்டுவார், சாங்காலம் போவதற்குள் எப்படியாவது ஒன்றிரண்டு அடி விழுந்து விடும். இனிமேல் வரவே கூடாது, கூப்பிட்டால் வீட்டை விட்டு ஓடி விட வேண்டும் என்று திட்டமெல்லாம் போடுவான், ஆனால் அது எல்லாம் கொஞ்ச நேரம்தான், அப்பா கோபம் மறைந்ததும் டீ கடைக்கு கூட்டி போய் போனதும் ராஜு எல்லாவற்றையும் மறந்து விடுவான். ராஜுக்கு அப்பாவிடம் பிடிக்காத குணங்கள் சில இருந்தது, அதில் ஒன்று அப்பா வேலைக்கான பணத்தை மிக அதிகமாக சொல்வது, அப்பா கேட்கும் தொகை அதிகமானது என்று எண்ணுவான், அப்பா இந்த விஷயத்தில் ஏமாற்றுகாரர் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. இன்று அதில் ஒரு இடி விழுந்தது அவனுக்கு.

வழக்கம் போல நான் வரவில்லை என்று காலையில் அப்பாவிடம் போராடினான், அம்மாவிடமும் சென்று கெஞ்சினான், அவனுக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும், தெரு பிள்ளைகள் எல்லாம் பிளாஸ்டிக் பந்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது அவன் மட்டும் அப்பாவுடன் சென்று கொண்டிருப்பான். அப்பாவுடன் கூட சென்று கொண்டிருப்பதை இவனது தெரு நண்பர்கள் அணிவகுப்பு நடை என்று கிண்டல் செய்வார்கள், வீட்டின் தெரு முடியும் வரை அவனுக்கு விளையாட முடியாத ஏக்கத்துடன் இருப்பான், தெரு தாண்டி விட்டால் பிறகு பார்க்கும் விஷயங்களில் அவன் கவனம் போய் விடும், ஒவ்வொன்றும் என்ன என்ன என்று கேட்டு அப்பாவை கொன்று எடுப்பான். இன்றும் அப்படியே கேட்டபடி வேடிக்கை பார்த்தபடி லாரி பேட்டை நோக்கி அப்பாவுடன் சென்று கொண்டிருந்தான்.

லாரி பேட்டையை லாரி தொழுவம் என்று சொல்லலாம், எப்படியும் நூறு லாரிகளுக்கு மேல் இருக்கும், அதிகமும் தமிழ்நாடு, கேரளா ரெஜிஸ்டரேசன் லாரிகள், மிக சிலவை மட்டும் வேறு மாநிலங்களாக இருக்கும். லாரி புக்கிங் ஆபிஸ்கள் இங்கு மிகுதி, அதனால் உருவான இடம் இது, கூடவே லாரி பழுது பார்க்கும் workshop களும் ஏகப்பட்டது இருந்தன, வரிசையாக இருபுறமும் workshop ம் புக்கிங் ஆபிஸ்களும் மாறி மாறி இருக்கும், ஆனால் எதுவும் சாலையின் மையத்தில் இருந்து பார்த்தால் தெரியாது லாரிகள் மறித்து மறித்து நின்றியிருக்கும், வண்டி ரிவெர்ஸ் எடுக்க லாரி பின்னால் நின்று லாரி கிளீனர் போடும் சத்தம் எப்போதும் கேட்டு கொண்டிருக்கும். கிளீனரை கிளி என்றும் விளிக்கும் வழக்கம் இங்கு உண்டு.

ராஜு அப்பாவுடன் கூட நடந்து கொண்டே வண்டியின் முகப்பின் மேலிருக்கும் பெயர்ப்பலகையில் இருக்கும் ஒவ்வொரு பெயரையும் படித்து கொண்டு வருவான், சரியா என்று அப்பாவிடம் கேட்டு சரி செய்து கொள்வான், அப்பா பள்ளிக்கு 3வரைதான் போயிருக்கிறார் என்றாலும் அவருக்கு தமிழ், மழையாளம், ஆங்கிலம் எழுத படிக்க வரும், அப்பா எப்படி இதை கற்று கொண்டார் என்ற ஆச்சிரியம் ராஜுவுக்கு எப்போதும் உண்டு.

நடந்து இருவரும் அவர்களின் workshop வந்து சேர்ந்தனர், அப்பா டூல்ஸ் பெட்டியை நீக்கி ஊதுபத்தி பற்ற வைத்தார், அது சந்தன நிற கெட்டியான ஊதுபத்திகள், நின்று எரியும், அந்த வாசம் ராஜுவுக்கு பிடிக்கும், அப்பா வெல்டிங் கேஸ் உருளை செட்டை நகர்த்தி முன்னே எல்லோரும் பார்க்கும் படியாக வைத்தார், எப்போதும் யாராவது காத்திருப்பார்கள், இன்று கஸ்டமர் யாரும் அப்படி காணாததால் அப்பா முகத்தில் கொஞ்சம் கவலை தெரிந்தது. அப்பா அருகில் இருந்த லாரி பெயிண்ட்ர் அருகில் போய் அமர்ந்து அவரோட பேச ஆரம்பித்து விட்டார், ராஜுவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பிறகு அவனும் பெயிண்ட்ர் அருகில் போய் நின்று அவர் பெயர்ப்பலகை வரைந்து கொண்டிருந்ததை பார்த்தான். மயில் என பாதி எழுதி இருந்தார் ஆங்கிலத்தில், அடுத்து வாகனம் என்று வரும் என்று ராஜு அறிவான், ஏனெனில் இந்த workshop ல் வரும் பாதி லாரிகள் மயில்வாகனம் டிரான்ஸ்போர்ட்டுடையதுதான்.

கொஞ்சம் நேரம் போயிருக்கும், பனியன் போட்டு லுங்கி கட்டி சீவாத தலை கொண்ட ஒரு இளைஞன் வந்தான், டிங்கர் யாரு என்று அங்கிருந்த மெக்கானிக் கோபால் அண்ணனிடம் கேட்டான், கோபால் அண்ணன் திரும்பி அப்பாவை கைகாட்டும் முன்னரே அவர் அங்கு வந்து நின்று விட்டிருந்தார். அப்பா ” என்ன” என்று கேட்டார். அந்த இளைஞன் “சைலன்சர் கட்டாகிடுச்சு, வாங்க ” என்றான். அப்பாவும் அவனும் முன்னே நடந்தார்கள், அவர்களோடு ராஜு ஓடிப்போய் சேர்ந்து கொண்டான்.

10 வண்டிகள் காட்டிய லாரி நின்றிருந்தது, அவன் கிளீனர், அங்கே டிரைவர் காக்கி சட்டை போட்டு லுங்கி கட்டி கொண்டு நின்றிருந்தார். அப்பாவை பார்த்ததும் “குட்டப்ப அண்ணா, சைலன்சர் கட்டாகிடுச்சு, வண்டி புக்கிங் ஆகிடுச்சு, சீக்கிரம் கிளம்பனும், கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணி கொடுங்க” என்றான். அப்பா பெயரை டிரைவர் சொன்னபோது ராஜு ஆச்சிரியப்படவில்லை, ஒருமுறை கேரளாவில் ஒரு கல்யாணத்திற்காக அம்மா, அப்பா, அவன், அக்கா எல்லாம் சாலையில் சென்றிருந்தபோது, அந்த சாலையில் சென்று கொண்டிருந்த லாரி இவர்களை தாண்டியதும் நின்று, அப்பாவை பெயர் சொல்லி டிரைவர் அழைத்து பேசி மகிழ்ந்தான், கோவை வழியாக செல்லும் எந்த லாரியும் உக்கடம் லாரி பேட்டை வரும் நீண்ட நாள் டிரைவராக இருந்தால் அப்பாவை அந்த டிரைவருக்கு தெரிய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் உணர்ந்த ராஜுக்கு அப்பாவை தெரிந்த நபர்கள் லாரி பேட்டையில் பார்க்கும் சூழல் என்பது சாதாரண விஷயமாகதான் இருந்தது.

அப்பா குனிந்து லாரிக்கு அடியில் போய் பார்த்தார், சைலன்சரின் உடைந்த பகுதியை தட்டி பார்த்தார், பிறகு வெளியே வந்தார், ” பெருசா கட் ஆகி இருக்கு, பீஸ் வைக்கணும் 400 ரூபா ஆகும்” என்றார். டிரைவர் ”இது ஜாஸ்தி 200 ரூபாவே அதிகம்” என்றான், அப்பா “இப்ப கேஸ், கார்பைடு என்ன விலை விக்குது னு தெரியுமா, நல்லா பண்ணித்தரேன், 400 கொடுத்துடுங்க” என்றார். டிரைவர் “குட்டபண்ணா, 300 ரூபா தரேன், சீக்கிரம் முடிச்சு கொடுங்க” என்றான். அப்பா “சரி, முதல் போணி 350 கொடுத்துடுங்க” என்றார். டிரைவர் “சரி சீக்கிரம் பண்ணுங்க” என்றார். அப்பா உற்சாகமாக வெல்டிங் gas உருளை செட்டை எடுத்து கொண்டு வர போனார். ராஜுவுக்கு அப்பா கேட்ட தொகை அதிகம் என்று தோன்றியது, 20 நிமிடத்தில் முடியும் வேலைக்கு இவ்வளவு கேட்பது அதிகம் என்று நினைத்தான்,100-150 ரூபாய் தான் சரியான தொகை என்று எண்ணினான், ஆனால் அதெல்லாம் மறைந்து அப்பாவிற்கு பணம் கிடைக்க போகும் சந்தோசம் அவனுக்குள் தொற்றி கொண்டு அவனும் உற்சாகமானான்.

இருவரும் வெல்டிங் சாதனங்களை நகர்த்தி கொண்டு லாரி பக்கம் வந்தார்கள், அப்பா வெல்டிங் சிலிண்டர், கார்பைடு போடும் டேங்க் எல்லாம் சேர்த்து ஒரு பலகை தொட்டியில் வைத்து அதன் கீழ் நான்கு இரும்பு உருளையும் மாட்டி இருந்தார், எங்கு வேண்டுமானாலும் தள்ளி கொண்டு போக முடியும்.

வண்டி பக்கம் வந்தவுடன் வேகமாக நாசிலை பிரித்து சைலன்சரின் உடைந்த பகுதி பக்கம் கொண்டு சென்றார், அந்த நாசில் சிலிண்டர் உருளை மற்றும் கார்பைடு டேங்க் உடன் ரப்பர் குழாய் வழியாக இணைக்கப்பட்டிருந்தது, நாசில் தேவைக்கேற்ப டூல்ஸ் வெளியிடும் கருவி அப்படி வெளிவரும் gas உயர் அழுத்த தீயாக ஆகி வெல்டிங் அடிக்க வெல்டிங் கம்பியை உருக்கி கொடுக்கும், கூடவே வெல்டிங் பகுதியை வெப்பமாக்கும், அப்படி வெப்பமாக்கப்பட்ட பகுதியில் உருகிய கம்பி இரும்பு படர்ந்து உடைந்த அல்லது இணைக்க வேண்டிய பகுதியை இணைக்கும். வரிசையாக போட்டு வைத்து வருவது போல இப்படி இணைத்து கொண்டு இணைக்க வேண்டிய பகுதியை இணைப்பார்கள், வெல்டிங் முடிந்த பிறகு அந்த அந்த இடத்தில் இரயில் பூச்சி ஒட்டிக்கொண்டிருப்பதை போல இணைப்பு பகுதியில் வெல்டிங் இருக்கும்.

அப்படி இணைக்க லாரிக்கு அடியில் போனார், நாசிலை தீப்பெட்டி திறந்து பற்ற வைத்தார், அதற்கு முன்பே, லாரிக்கு அடியில் போகும் முன்பே gas சிலிண்டரை திறந்து தேவையாக gas நாசிலுக்கு வர திறந்து வைத்திருந்தார். சரியாக நாசில் பற்றிக் கொள்ளவில்லை போல, வெளியே வந்தார், கார்பைடு டேங்க்கை  ஆட்டிப் பார்த்தார், பிறகு தன்னையே நொந்து கொண்டவர் போல முகம் வைத்து கொண்டு, “கார்பைடு முடிந்துச்சு” என்றார், பிறகு ட்ரைவரை நோக்கி “கார்பைடு கல்லு மட்டும் வாங்கிட்டு வந்துடறேன், ஒரு 200 கொடுங்க” என்றார். ட்ரைவரின் முகத்தில் கோபம் தெரிந்தது “கார்பைடு கூட வாங்கி வைக்காம என்னத்த தொழில் பண்றீங்க” என்று கடிந்தான், பிறகு புலம்பியவாறே பாக்கெட்டில் கையை விட்டு 100 ரூபாய் நோட்டு இரண்டு எடுத்து கொடுத்தார், அப்பா ஆர்வமாக வாங்கி ராஜுவை நோக்கி “இங்கயே இருடா, இப்ப வந்துடறேன் ” என்றார்.

ராஜுவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது, கார்பைடு டூல்ஸ் பெட்டிக்குள் அப்பா எப்போதுமே குறைந்தது 2 கிலோ வைத்திருப்பார், இன்றும் பெட்டிக்குள் இருந்ததை அவன் பார்த்தான், அப்பா ஏன் இப்படி பொய் சொல்கிறார் என்று உள்ளுக்குள் பொருமினான், ஏன் இவ்வளவு பணத்திற்கு பறக்கிறார் என்று கோபம் கொண்டான். இந்த அங்கலாய்ப்பு அப்பாவுக்குள் எப்போது வடிந்து தொலையுமோ என்று நொந்து கொண்டான், அப்பாவை மிக மோசமான நபராக எண்ணினான். அப்பா 10 நிமிடத்தில் கார்பைடு பொட்டணமோடு வந்தார், அவசர அவசரமாக கார்பைடு மாற்றினார், பிறகு வண்டிக்கு அடியில் போனார், நாசில் அழுத்த நீலநிற தீயை வேகமாக தந்து கொண்டிருந்தது, அப்பா வெல்டிங் செய்யும்போது அவர் மனம் முழுதும் அதிலேயே இருக்கும், அவருக்கு வெல்டிங் வைப்பது ஒருவகை தியானம் போல, முடித்து கொண்டு வெளியே வந்தார், நாசில் இருந்த ரப்பர் குழாயை சுற்றி கார்பைடு டேங்க் மீது வைத்தார், பிறகு டிரைவரை பார்த்தார், “முடிஞ்சது” என்றார். டிரைவர் “குட்டப்பண்ணா, பில்லு கொடுங்க, டிரைவர் நம்ப மாட்டாரு இவ்வளவு பணம் ஆச்சுன்னு” என்றான், அப்பா கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லி வெல்டிங் செட்டை நகர்த்தி workshop கொண்டு போனார், ராஜுவும் சேர்ந்து தள்ளினான், அப்பா டூல்ஸ் பெட்டிக்கு அருகில் இருந்த பில் புக்கை எடுத்து பில் எழுதினார்,அந்த பில்லில் மேலே கே பி குட்டப்பன் டிங்கர் ஒர்க்ஸ் என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது, ராஜு அதை காணும் போதெல்லாம் படித்து பார்ப்பான். அப்பா பில் போட மட்டுமே எழுத வாய்ப்பு கொண்டவர் என்பதால் ஆசையாக எழுதி முடித்தார். பின் வண்டி நோக்கி நடந்தார், ராஜுவும் கூடவே போனான்.

அப்பா அதிர்ச்சியில் உறைந்தார், அங்கு வெல்டிங் பணி செய்த லாரியைக் காணவில்லை, அப்பா சுற்றி சுற்றி தேடினார், வண்டியை காண முடியவில்லை. அப்பா “தாயோளிக, தேவிடியா மவ,” என்று காணாமல் போன வண்டியின் டிரைவரை திட்டி கொண்டிருந்தார். ராஜுவுக்கு டிரைவர் பணம் தராமல் ஏமாற்றி போனதை விட எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் வண்டியோடு காணாமல் போனார்கள் என்று ஆச்சிரியம் கொண்டான். பிறகு அவனும் டிரைவரை மனதிற்குள் திட்டினான். பிறகு சற்று நேரம் கழித்து இருவரும் டீ கடை சென்றனர், அப்பா “கார்பைடுக்கு பணம் வாங்காம போயிருந்தா எல்லா காசும் போயிருக்கும்” என்றார்.

படுக்கை

கா. ரபீக் ராஜா 

திடீரென்று நா வறண்டது போன்ற உணர்வு. எதிரில்தான் முதலிரவுச் செம்பு இருந்தது. செம்பின் மேல் டம்ளர் ஒருக்கணித்து படுத்திருந்தது. சற்று நிமிர்ந்து செம்பை எடுக்கலாம் என்ற போது உடம்பின் உள்ளே பூச்சி ஊர்ந்து மூளை நோக்கி செல்வது போன்ற உணர்வு. இதே உணர்வோடு செம்பை எடுத்து டம்ளரில் நீரை ஊற்றும் முன்னே கை சக்தியை இழந்திருந்தது. கடைசியாக செம்பு விழுந்த சப்தமும் டிவியில் செய்திப்பெண் வணக்கம் சொல்லவும் சரியாக இருந்தது.

விழித்துப் பார்த்தபோது ஒரு செவிலிப் பெண் வான நிறத்தில் பேன்ட், சட்டை அணிந்திருந்தாள். என்னைப் பார்ப்பதும் எழுதுவதுமாய் இருந்த அவளிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வார்த்தைகள் வரவில்லை. சைகையாக பேச கைகளை இயக்க முயற்சிக்கையில் அது முத்தி அடைந்து மூன்று வாரங்கள் ஆயிருக்கும் என்று தோன்றியது. சற்று எட்டிப்  பார்த்தேன். கழுத்தை இயக்க முடிந்தது. ஒரு தற்காலிக மகிழ்ச்சி. சற்று எட்டிப் பார்த்தேன். கால் கட்டைவிரல் தெரிந்தது. அசைக்க முடிகிறதா என்ற முயற்சியை தொடங்கினேன். ம்ஹூம், கட்டளையை ஏற்க கட்டைவிரல் தயாராக இல்லை. சரியாக ஒரு ஈ ஒன்று அதில் உட்கார்ந்து எல்லா திசையும் சுற்றி பார்த்தது. கழுத்துக்கு கீழே செயலிழந்துள்ளன என்பதை அறிய கொஞ்ச நேரம்தான் ஆனது.

சற்று நேரத்தில் மகன் வந்தான். முகத்தில் சோகம். பேச முற்பட்டேன். வாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினார்கள். மீண்டும் பேச முற்பட்டேன். மீண்டும் தண்ணீர். இந்த இடத்தில் மனதை புரிந்துகொள்ள ஒரு உறவு இருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும் என்றிருந்தது.

என் தாய்க்கு ஐந்து ஆண் பிள்ளைகள். நான் மூத்தவன். எனக்குப் பிறகு அடுத்தவன் பிறக்க ஏழு வருடமானதால் தாயிடம் ஆறு வயது வரை பால் குடித்து வளர்த்தேன். நன்றாக நினைவில் உள்ளது. விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது அம்மாவை தேடுவேன். அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு மூலையில் சோகத்துடன் உட்காந்திருக்கும் தாயிடம் சென்று மடியில் படுத்துக் கொண்டு பால் குடிப்பேன், தாய்ப் பால்தான். தெருவில் விளையாடி விட்டு தாகத்தோடு வரும் சிறுவர்கள் பானையில் தண்ணீர் குடிப்பதை போல, அம்மா என்ன நிலையில் இருந்தாலும் அவள் மார்பை எட்டி பால் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

சரியாக ஒரு இரண்டு மணி நேரம் கழித்து என்னை வீட்டுக்கு தூக்கி வந்தார்கள். ஏன் மீண்டும் என்னை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வருகிறார்கள். சிகிச்சை முடிந்து விட்டதா? இல்லை மருத்துவம் என்னை கைவிட்டு விட்டது. இது எனக்கு எப்படி தெரியும்? தெரியும், என் அப்பாவை நாங்கள் அப்படிதான் தூக்கி வந்தோம். என் தாத்தாவையும் கூட அப்பா இப்படித்தான் தூக்கிக்கொண்டு வந்திருப்பார். எனக்கும் இதுவே சரியென்று பட்டது. கழுத்தில் எதோ துளை போட்டிருகிறார்கள். பேசினால் என்ன, பேச நினைத்தாலே வலி. மிக துயரமான வலி.

வீட்டில் ஒரு அறையை ஒதுக்கி என்னை அங்கு ஒதுக்கி வைத்திருந்தார்கள். மனைவி செத்து ஆறு வருடமாகிறது. அந்த புண்ணியவதியை என்றுமே நான் புரிந்து கொள்ள முயற்சித்தது கிடையாது. அவள் இறப்புக்கு பின்பு என் வாழ்க்கை திண்டாட்டமாகி விடும் என்று எனக்கு முன்பே தெரியும். இந்த புரிதலும் என் அப்பாவிடம் பெற்றது தான்.

அலட்சியப்படுத்தப்பட்ட குப்பையாக இதோ ஒரு ஓரத்தில் கிடக்கிறேன். சாப்பாட்டு வேலைக்கு மட்டும் வாயில் உணவை திணிக்கிறார்கள். உணவில் எனக்கு விருப்பமா என்று யாரும் கேட்பதில்லை. பசி என்கிற உணர்வே எழாத ஒருவனிடம் புகுத்தப்படும் உணவு மலத்துக்கு சமம்.

எனக்கு ஒரு மகன், ஒரு மகள். பொதுவாக அப்பன்களுக்கு மகளை பிடிக்கும். ஆனால் எனக்கு மகனே பிடிக்கும். குழந்தை வளர்ப்பை பொறுத்தவரை கூடுமானவரை பேதம் காட்டினேன். படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் மகளை விட ஒருபடி மேலே மகனுக்கு செய்தேன். கூடவே செய்யக்கூடாத ஒன்றை செய்தேன். அது பணத்தின் முக்கியத்துவம் குறித்து மகனுக்கு எடுத்துரைத்த போதனைகள்தான். உலகத்தில் பணத்தை விட உயரியது எதுவுமில்லை அதற்காக எந்த அறத்தையும் மீறலாம் என்றேன். மகன் அதையே செய்தான். இதோ படுக்கையில் விழுந்து ஒரு வாரமாகிவிட்டது மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்தவன் இன்னும் என்னைப்  பார்க்க வரவில்லை.

சிறு குழந்தைக்கு போல மல, ஜலம் கழிப்பை உறிஞ்சிக் கொள்ளும் துணி கொண்ட ஒரு பொட்டலத்தை எனக்கு உள்ளாடையாக அணிவித்து அழகு பார்த்தார்கள். புரண்டு படுக்க திராணியற்ற ஒருவனுக்கு இது எத்தகைய அசௌகரியம் கொடுக்கும் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். இணைப்பாக சர்க்கரை வியாதி எனக்கு முப்பது வருடமாக இருக்கிறது. கால் மூட்டுக்கு கீழே இருந்த காயம் ஆறாமல் அதற்கு தனியாக ஒரு சிகிச்சை ஓடிக்கொண்டிருந்தது. எதோ ஒரு களிம்பை தடவிச் செல்வார்கள். ஒரு நாள் உணவு கொடுக்க வந்த மருமகள் பதறியடித்து அலறினாள். என் காலில் எறும்புகள் மொய்த்துக் கிடந்ததாக கூறினார்கள். உயிருடன் இருக்கிறேன் என்பதற்கு சான்றாக காலையாவது ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும் போல!

ஒருத்தி என்னை பார்ப்பதற்காக வந்திருந்தாள். அவளை பல வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன். என் மாமன் மகள். முன்னாள் காதலி வேறு. மரணப்  படுக்கையில் கிடக்கும் ஒருவனுக்கு  இதைவிட கொடுமை ஒன்றும் இருக்காது. எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த காதல் யாருக்கும் புரியாமலே போனது. குடலிறக்க சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுக்கும் ஒருவனை பார்க்க வந்தது போல ஆரஞ்சு பழம் வாங்கி வந்திருந்தாள் அவள். உண்மையில் ஆரஞ்சு பழ தோளைக்கூட என்னால் தொட முடியாது. எனிலும் வாங்கி வந்தவளின் திருப்திக்காக பழங்களை என் தலைமாட்டில் வைத்தார்கள். என்னை நலம் விசாரித்துவிட்டு வெளியே சென்றாள். இவனை கட்டியிருந்தால் இந்நேரம் நாம்தான் அவன் தலைமாட்டில் உட்காந்திருக்க வேண்டும் என்று நிம்மதி பெருமூச்சுடன் போயிருக்க வேண்டும்.

வாங்கி வந்த ஆரஞ்சுகளை பேரப்பிள்ளைகள் தின்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. ஆனால் தின்றுவிட்டு தோல்களை என் அருகிலேயே போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். எனை பார்க்க வரும் உறவினர்கள் அந்த தோலையும் என்னையும் பார்ப்பது கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. ஒரு ரத்த சொந்தம் சுகரோட இவ்வளவு ஆரஞ்சு சாப்பிடவே கூடாது என்று சொல்லியே விட்டான். திங்க வழியில்லாமல் இருப்பவனுக்கு இது என்ன சோதனை?

ஒருசில நாளில் சாப்பாட்டுக்கு தவிர யாரும் என் அறைக்கு வருவதில்லை. அப்படி இருக்கும் போது குழந்தைகள் என் அறையில் ஒளிந்து கொள்ள வருவதே ஆறுதலாக இருக்கும். சில நேரம் என் கட்டிலை சுற்றி வந்து விளையாடுவார்கள்.

ஒருநாள் பூசாரி வந்து அறையில் எதோ மந்திரங்கள் சொல்லி தண்ணீர் தெளித்துவிட்டு போனார். அவரை பார்க்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தாலும் ஒரு புதிய மனிதரை சந்தித்த உணர்வை தந்தது. எனையே உற்று பார்த்துவிட்டு காதுக்குள் எதோ ஓதிவிட்டு கட்டிலை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுத்தி வந்தார். வீட்டின் இருந்த உறவுகள் பயபக்தியோடு இதை பார்த்துக்கொண்டு நின்றார்கள். சோகையாக ஓடிக்கொண்டு இருந்த மின்விசிறியை அணைக்க சொன்னார். அணைத்தார்கள். கூக்குரலிட்டு கத்தினார். எனை எந்திரிக்க வைக்கும் முயற்சியாக இருக்குமோ என்று நம்பினேன். பின்பு எல்லாம் முடிந்து கிளம்பும்போது சொன்னார் அந்த பூசாரி, “கவலைப்படாதீங்க, இன்னும் பத்து நாளில் முடிஞ்சிரும்!” இதற்கு தலையணையில் என் மூச்சை நிறுத்தினாலும் எந்த எதிர்ப்பையும் காட்டியிருக்க மாட்டேனே என்று கண்ணீர் ஓடி காதுக்குள் போனது.

படுத்தே கிடப்பதால் முதுகெங்கும் புண் மற்றும் கொப்புளம் வரத் தொடங்கியுள்ளது. இதை மருமகளுக்கு நான்கு முறை சொல்ல முயற்சி செய்தேன். பதிலுக்கு அவள் எனக்கு நாப்கின் மாற்றி விட்டு சென்றாள்.

பரம எதிரி ஒருவன் என்னை பார்க்க வந்தான். எதிரியாக இருந்தாலும் நம்மை பார்க்க வந்திருக்கிறானே என அவனது பெருந்தன்மையை என் வீட்டில் இருப்பவர்களே புகழக்கூடும். அவன் முன் இப்படி சுருண்டு படுத்துக் கிடப்பது எனக்கு அவமானமாக இருந்தது. எதிரியின் எகத்தாள பார்வையை கூட புரிந்து கொள்ள முடியாவிட்டால் அவன் என்ன எதிரி? என் நிலை இவனுக்குக்கூட வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.

ஒருவனுக்கு பச்சையாக துரோகம் செய்திருக்கிறேன். அவனும் என்னை காண வந்தான். பாவம் அவனுக்கு தெரியாது. நான் செய்தது துரோகம் என்று. எதிரில்தான் நிற்கிறான். எனக்கு தைரியம் சொல்கிறான். இப்போது அவனிடம் செய்த துரோகத்துக்கு மன்னிப்பு கேட்க முனைகிறேன். முடியவில்லை. செய்த தவறுக்கு மன்னிப்பு கூட கேட்க முடியாத நிலையை என்னவென்று சொல்வது? மீட்டமுடியாத மன்னிப்பு தரும் குற்றஉணர்வு ஓராயிரம் முள்படுக்கைக்கு சமம். என் கண்ணீரால் மன்னிப்பு கோரினேன். புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை.

ஒருநாள் மருமகள் ஓடி வந்தாள். கையில் மொபைல் போன். போன் திரையில் மகன் தெரிந்தான். இதை எதோ வீடியோ அழைப்பு என்றார்கள். அவன் பேசுவதும் புரியவில்லை. உயிருக்கு உயிரான மகன் இப்போது தான் பார்க்கிறேன்.  அந்த வீடியோ அழைப்பில் வெகு நாட்களுக்கு பின்னால் என் முகத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. இனி காணவே கூடாது.

இப்பொழுதெல்லாம் உணவை ஏற்றுக் கொள்ள உடல் முற்றிலும் மறுக்கிறது. மனமும் தான். கொஞ்ச உணவு உள்ளே போனாலும் அது செரிமானமாகும் வரை செய்யும் பாடு நரகத்தை விட கொடியது. திருமண பந்திகளில் போட்டிபோட்டு தின்ற நாட்களை எண்ணியே காலம் தள்ள வேண்டியிருக்கிறது. சாப்பாடு எடுக்க மாட்டுது ரொம்ப நாள் தாக்கு பிடிக்காது, என்று வெளியே பேசிக்கொண்டது காதில் விழுந்தது. கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இப்பொழுதே வைத்து எரித்துவிடுவார்களோ என்று அவர்கள் குரலில் தெரிந்த அவசரம் குறித்து கொஞ்சம் கவலையாகவும் இருந்தது.

ஒரே விட்டத்தை பார்ப்பதை தவிர எனக்கு பிரதான பொழுதுபோக்கு எதுமில்லை. இன்று இரண்டு பல்லிகள் சந்தோசமாக இருந்ததை பார்த்து வேடிக்கையாக இருந்தது. புழு, பூச்சி, வண்டுகளை கூட கவனிக்க கூட நேரமிருக்கிறது. அவைகள் தான் நேரத்துக்கு வருவதில்லை. கம்பி கட்டிய ஜன்னல் வழியே ஒரு அணில் தினம்தோறும் எட்டிப்பார்க்கும்.

கண்களை மூடுகிறோனோ இல்லையோ எதோ ஒரு கனவு வந்துவிடுகிறது. அதில் பெரும்பாலும் நான் எழுந்து நடப்பது போலவே இருக்கும். எழுந்து நடப்பதே பகல் கனவாக மாறும் என்று’ யார் கண்டது. எனிலும் கனவுகளில் கொஞ்சம் பாதுகாப்பாகவும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது உண்மை. கழுத்துக்கு கீழே உணர்வு இல்லாதது கட்டி இழுத்த மலையை சற்று கழட்டிவிட்ட உணர்வை தருகிறது. அப்படியே ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரும் போய்விட்டால் வேலை முடிந்தது. பாவம் வீட்டிலும் வேறு எங்கேயும் போக முடியாமல் இருக்கிறார்கள். இரவிலும் பாதுகாப்புக்கு யாரேனும் இருக்க வேண்டும். இவர்களுக்காகவே கிளம்ப வேண்டும்.

எதோ பொங்கல் பண்டிகை வந்திருக்க வேண்டும். வெளியில் பெயின்ட் அடித்து கொண்டிருக்கும் வாசம் வந்தது. எனது அறைக்கும் வேறு வண்ணம் பூசினால் நன்றாக இருக்கும். காரணம் எதிரே இருக்கும் சுவரில் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு ஓவியம் இருந்தது. இப்போது அதில் வேறு வண்ணம் பூசினால் நிச்சயம் என்னால் இன்னொரு ஓவியத்தை கண்டு பிடித்திட முடியும். மனம் எதற்கெல்லாம் ஆசைப்படுகிறது.

இப்போதெல்லாம் கனவுகள் மறைந்து மாய உருவங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டது. கொஞ்சம் திடமாகவே இருக்க விரும்பினேன். மரணிக்கப்  போகும் உண்மை அறிந்த மணம் காட்சி பிழை என்றாலும் படுக்கையே பிணியாக இருப்பவனுக்கு இதுவும் ஒரு சுவாரஸ்யம் தான்.

காலை முதல் மூச்சு விடுவதே சிரமமாக இருக்கிறது. இயல்பாக செய்ய முடிந்த ஒரே விஷயமும் இப்போது உடம்பில் கல் உடைக்கும் வலியாக மாறிப்போனது. ஒருமுறை சுவாசம் விடுவதென்பது ஒரு செங்குத்து மலையில் ஏறிவிட்டு இறங்குவது போல இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த என் அறையில் இருவதுக்கு மேற்பட்டோர் குழுமியிருந்தனர். பாதி பேர் என்னை உறுதியாக வழியனுப்ப வந்திருந்தார்கள். நெஞ்சில் இருந்து கிளம்பிய சுவாசம் இப்போது இன்னும் கடினமாக மாறிவிட்டது. கை கால்களை உதறினால் கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் என்று அப்போதும் நம்பினேன். இதற்கு மேல் முடியவில்லை. மார்புக்கும் தொண்டைக்கும் இடைப்பட்ட ஒரு கயிறு அறுந்து விழுந்தது போல இருந்தது. அது கொடுத்த வலியில் கொஞ்சம் கண்ணீர் கசிந்திருந்தது. மெதுவாக கண்ணை மூடினேன். இதுவரை இரைச்சலாக இருந்தவை ஒரு கணம் அமைதியானது. ஒரு இலவம் மூட்டையையே காதில் அடைத்தது போன்ற பேரமைதி அது.

 

வான்நீலம்

ஆதித்ய ஸ்ரீநிவாஸ்

ராகவ் குண்டக்கல் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தான். இங்கிருந்து பெல்லாரி செல்ல வேண்டும். பெல்லாரியிலிருந்து ஜின்டால் ஸ்டீல் செல்ல வேண்டும். அங்கு வேலைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. முதல் முறை தமிழ்நாடு தாண்டி ஒரு நிலம். புதிய பாஷை. தெலுங்கு கன்னடம் இரண்டும் பேசப்பட்டது குன்டக்கல்லில். பெல்லாரியிலும் அப்படித்தான் என மாமா சொல்லியிருக்கிறார்.

இயல்பாக ஒரு பதற்றம் பரவியிருந்தது. முதுகில் ஒரு பை கையில் ஒரு பெரிய பை. பையை இறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். ப்ளாட்பாரத்தில் விற்றுச் செல்பவர்களிடம் வாங்கி சாப்பிடலாமா அல்லது ஹோட்டலில் சாப்பிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கையில் ரயில் நிலைய அறிவிப்பு ஒலித்தது. எம்மொழி என்று சொல்ல இயலவில்லை. பெல்லாரிக்கான ரயில் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என டிக்கெட் கவுன்டரில் கேட்டு அறிந்திருந்தான். பையை இறுக்கியது போதுமென மெல்ல தளர்த்திக் கொண்டான். இயல்பாக அமர முயன்றான். அம்மாவின் முகம் அக்காவின் முகம் தங்கையின் முகம் என முகங்களாக வந்தன. அப்பாவின் முகமும். அந்த மெக்கானிக் யூனிபார்ம் – சாம்பல் நிறத்தில் சற்றே அழுக்கு படிந்த உடையுடன் நினைவுக்கு வந்தார். வெற்றிலைச் சிவப்பு வாயுடன்.

பாக்கெட்டில் செல்போன் அதிர்ந்தது. எடுத்து ப்ரௌஸரை திறந்தான். “Africa a land of varied climate from rainforests to deserts. The land of great game” எனும் வரிகளைப் பார்த்தான். மழைக்காடுகளிலிருந்து பாலைவனம் வரை -ஆம் மழையில் செழிக்கும் மண்ணிலிருந்து ஆண்டுகளுக்கு நீர் அறியாத மண். கேலரியைத் திறந்தான். மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருப்பதாகக் காட்டியது எண்ணிக்கை. நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பிக்கள், அம்மா அக்காவுடன் வண்டலூர் சென்றபோது எடுத்துக்கொண்டவை, தங்கை புத்தகத்தின் மீது தலை தாழ்த்தி படிக்கும் நிலையில் தூங்கும் படம், கமலா அத்தை சப்தமாக சிரிப்பது பதிவாகியிருந்தது, அம்மா காலை நேரப் பதற்றத்துடன் மூக்குக்குக் கீழ் வியர்வை அரும்பியிருக்க தோசை வார்க்கும் படம், அக்கா தன் புது நீல நிறச் சுடியில் ஒற்றைக் காலை மடித்து பின்புறமாக சுவரில் ஊன்றிக்கொண்டு கைக்கட்டி எங்கோ பார்த்துக்கொண்டு கொடுத்த போஸ், தன் முகத்தில் அரும்பிய பருக்களை இவன் எடுத்து வைத்திருந்த போட்டோக்கள், செல்வி சித்தியின் கல்யாண படங்கள் கொத்தாக மஞ்சள் நிற விழாவின் குதூகல ஒளியில் வரிசையாக இருந்தன. நண்பர்களுடன் சினிமா தியேட்டரில் எடுத்துக்கொண்ட செல்பிக்கள், அப்பா கொக்கியில் தொங்கும் தன் யூனிபார்மை எடுக்கும் படம், பின் வந்தது அவளின் ஒரு போட்டோ. அவள் நடக்கும் போது யாருமறியாமல் க்ளிக் செய்த போட்டோ. வான்நீல சுடிதார் வெள்ளை நிற ஷால், வெள்ளை மணிக்கட்டில் கருப்பு நிற வாட்ச், டயல் உள்முகமாகக் கட்டப்பட்டிருக்கும். அப்புகைப்படத்தில் பெரம்பூர் ரயில் நிலையம் எனும் வார்த்தைகளும் இருந்தன. ப்ளாட்ஃபாரத்தின் துவக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிற அறிவிப்புப் பலகையல்ல. ப்ளாட்பார்ம் கூரையை தாங்கி நிற்கும் இரும்பு பில்லர்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறு வெள்ளை நிறப் பலகையில் இருக்கும் அடர் நீல நிற எழுத்துக்கள். அவள் பார்வை சற்று தாழ்ந்து தரையைப் பார்த்திருக்கும் படம்.

அன்று காலை உணவை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்தான். அம்முவை பள்ளியில் ட்ராப் செய்யவும் முடியாது என மறுத்துவிட்டிருந்தான். “அக்கா, சும்மதான இருக்க, பொழுதனைக்கும் யு ட்யூப் ஷார்ட்ஸ் பாத்துட்டு இருக்கதுக்கு அவள போய் ட்ராப் பண்ணேன்” என்று விட்டு வேகவேகமாக நடந்தான், புன்னகைத்தபடி. தான் எப்பொழுதுமே புன்னகைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கவும் மேலும் புன்னகை, வெட்கத்துடன். பால ஆஞ்சநேயர் ஆலயம் கடந்து வில்லிவாகம் ரயில் நிலையம். அப்பா கண்டிப்பாகச் சொல்வதுண்டு, “எதுக்கு வேலமெனக்கிட்டி படி கட்டி வெச்சிருக்கான். அதவுட்டு கொரங்கு மாறி தண்டவாளத்த தாண்டினுருக்கது” என்பார். “உடம்புல பெலம் இருக்கணும். ரென்டு படி ஏறலன்னா நீ என்னத்த கீக்க போற லைப்புல.” ஓட்டமாக ஏறினான். படியில் ஏறி ஓடிக்கொண்டிருக்கையில் அவனுக்கு நேர் கீழே ரயிலும் வந்துவிட்டது. ஏறவும்தான் தாமதம். சிறு ஆட்டத்துடன் சீராகக் கிளம்பியது மின்சார ரயில்.

மஞ்சள் நிறச் சுடிதார் மஞ்சள் லெக்கின்ஸ் கழுத்தில் மெல்லிதான மிக மெல்லிதான சற்று மெலிந்தால் சிலந்தி நூலிழை எனும் அளவிற்கு மெல்லிய ஒரு தங்க செயின். கையில் உள்முகமாகக் கட்டிய கருப்பு வாட்ச். அன்று அவனுக்கு வாழ்வில் முதல் முறையாகத் தோன்றியது, “என் மாலை வானம் இவள்” என்று.

எம் ஸி ஸியில் படித்தாள் அவள். தாம்பரத்தில் எம் ஸ் ஸி எதிரில் இருக்கும் பஸ் நிலையத்திலேயே ஒரு நாளைக் கழிக்க முடிந்தது அவள் எதிரில் இருக்கும் கல்லூரியின் எண்ணற்ற பழைய கட்டிடங்களில் ஏதோ ஒன்றில் அமர்ந்திருக்கிறாள் எனும் நினைப்பொன்றுடன். பின் தினமும் பெரம்பூரிலிருந்து சென்ட்ரல் செல்லும் தூரம்தான் அவனை மலர்களை விரும்பச் செய்தது. சிரிக்கும் வெட்கத்துடன், “நான் ஒரு மலர்க்காடா மாறிட்டேன்” என டைரியில் எழுதி வைத்தான். வாழ்வில் இரண்டாவது முறையாக இப்படித் தோன்றியது.

அன்று பெரம்பூரில் சற்று கூட்டம் அதிகம். மழை வேறு, அக்டோபர் பாதி கடந்து கொண்டிருந்தது. ரயில் நிற்கும் முன்னமே அவளைக் கண்டு கொள்ளும் இவன் கண்கள் வெகு நேரம் கூட்டத்தைத் துழாவின. அங்கங்கு ரெயின் கோட்டுகளும் குடைகளும். அவள் இல்லை. ஏறிவிட்டாளா? இல்லை என உறுதியாகத் தோன்றியது. அந்த ரயிலில் அவள் இல்லை என்பதை அவ்வளவு உறுதியாய் உணர்ந்தான். ரயில் கிளம்பும் நேரம் ரயில் விட்டு இறங்கிவிட்டான். மரத்தைச் சுற்றி அமைந்த கல் இருக்கையில் அமர்ந்துகொண்டு அவள் வழக்கமாக வரும் திசையை பார்த்துக் கொண்டிருந்தான். வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு பெண் வந்தாள், ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் ஒரு பெண். ஆனால் அவள் இல்லை. திடீரெனத் தோன்றியது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என.

ஆறு மாதமாக ஒரு பெண்ணை காதலிக்கிறான். ஒரு முறை கூட பேசியது கிடையாது. பார்க்க சக வயதினளாக தெரிகிறாளே ஒழிய மூத்த பெண்ணாகக் கூட இருக்கலாம். ஒருநாள் அவள் தோழி அழைத்ததை வைத்துதான் பெயரை அறிந்துகொண்டான்.வர்ஷா அவள் பெயர். மழை என்று அர்த்தம். அதை அறிந்த நாள், “என் மழை, அவள் என் மழை, வான் அவள், என் மழைக் காடு,” என எழுதி வைத்தான். ஆனால் இப்போது ஒரு கேள்வி எழுந்தது. நான் என்ற ஒருவனின் இருப்பை அவள் அறிவாளா? கண்டிப்பாக அறிவாள் எனத் தோன்றியது. அவளால் என் உலகம் தலை கீழாக திரும்பும் போது ஒரு சிற்றலை கூடவா அவள் ஏரியில் எழுந்திருக்காது. கண்டிப்பாக அவள் என்னை அறிவாள். ஒரு நாளை ஒரு வாரத்தை ஒரு மாதத்தை அவளால் நிரப்பிக்கொண்டிருக்கையில் ஒரு க்ஷணமாவது அவள்…. இல்லை அவள் என்னை நிறைக்கும் அளவிற்கே நானும் அவளை நிறைக்கிறேன். ஆனால் அவள் அதை இன்னும் அறியவில்லை. சிறு மேடுதான், ஏறினால் அப்பக்கம் பெருங்கடலொன்று. வெறும் வார்த்தைகளும் ஸ்தூலமுமான விஷயங்களால் மட்டுமானதல்ல உலகம். “World is not just physical” என எண்ணிக்கொண்டான். அப்பொழுது வந்தாள். நீல நிறச் சுடியில் வெள்ளை நிற ஷாலுடன். பார்த்துக்கொண்டே இருந்தான். அவனைக் கடக்கையில் அவளும் பார்த்தாள். மெல்லிய புன்னகையொன்று.

உடலுக்குள் ஒரு சூடான பெருங்குமிழி வெடித்தது போல் இருந்தது. முகத்திலெல்லாம் ரத்தம் வேகமெடுப்பதை உணர்ந்தான். அசையாமல் அமர்ந்துவிட்டான். கையில் குடையுடன் சற்று தள்ளிதான் நின்றாள். என்ன மணம்? மூக்கை நன்றாக இழுத்தான். “மழைவாசம் அவளுடையது,” எனத் தோன்றியது. சிரித்துவிட்டாள். உண்மையில் சிரித்தாளா என மனம் துழாவிய போது, அவ்வளவு உறுதியாக அவள் ரயிலில் இல்லையென்று அறிவித்த ஒன்று உறுதியாகச் சொன்னது, அவள் அவன் கண்கோத்து புன்னகைத்ததை. வழக்கமாக கடந்த ஆறு மாதமாக அவனுள் ஓயாமல் இருக்கும் ஒரு மகிழ்ச்சி வெடித்துச் சிதறியது. சிரித்தான் வாய்விட்டு. ஓட வேண்டும் போலிருந்தது. flash ஓடுவானே அவனைபோல். க்ஷணத்தில் முழு சென்னையையும் ஏன் பாண்டிச்சேரி வரை ஏன் கன்னியாகுமரி வரை ஓடவேண்டும் போலிருந்தது. மழைத் தூறல் வலுத்தது. எல்லோரும் ப்ளாட்ஃபாரத்தின் கீழ் ஒதுங்கினர். அவள் மரத்தடியில் ஒதுங்கிக்கொண்டாள், அவனருகில்.

அன்று மாலைதான் அப்புகைப்படம் எடுக்கப்பட்டது. அன்று முழுவதும் சென்னையின் மழையில் எம் ஸி ஸி எதிரில் அமர்ந்திருந்தான். பின் அவளுடனேயே திரும்பினான். ஆனால் பேசக்கூடவில்லை. பெரம்பூரில் இறங்கினாள் அவள். மின்சார ரயிலில் வாயிலோரம் நின்றபடி கிளிக் செய்தான். க்ளிக் செய்யவும் லோ பாட்டரியில் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகவும் சரியாக இருந்தது. பெரம்பூரில் வானத்தில் ஏறி மழைமேகங்களூடே பயணித்து வில்லிவாக்கத்தில் தரை இறங்கியது ரயில். மழை பொருட்டின்றி வீடு நோக்கி நடந்தான். மீண்டும் அந்த பால ஆஞ்சநேயர் ஆலயம். வீட்டிற்கு போனதும் சார்ஜ் போட்டு அந்த போட்டோவைப் பார்க்க வேண்டும். “என் வாழ்வின் மழைக்காலம் பெரம்பூர் ரயில் நிலையத்தில் வீழ்ந்த சிறு துளிகளாலானது,” என எழுதவேண்டும்.

வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் கமலா அத்தையிடம் கேட்டான். அவள் அழுதபடி விஷயத்தைச் சொன்னாள். “அப்பா வேல பாக்குற எடத்துலேந்து போன் வந்ததுப்பா.. நெஞ்சு வலியாம்… உனக்கு யாரும் ஃபோன் பண்ணலயா,” என்றாள். போனைக் கொஞ்சம் போல சார்ஜ் செய்து அவன் அக்காவிற்கு அடித்தான். மழையோடு மழையாக எக்மோரில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான். அப்பா இறந்து விட்ட செய்திதான் அவனுக்குக் காத்திருந்தது. எதுவும் புரியாத நிலை. அம்மா கொஞ்சம் நகையைக் கொடுத்து பேங்கில் வைத்து பணம் வாங்கி வரும்படிச் சொன்னாள். மாமா இன்னும் வரவில்லை. வந்திருந்தால் அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். மீண்டும் மழையோடு மழையாக பாங்கிற்கு விரைந்தான். “கோல்ட் மேல லோன் வேணும் ஸார்” என்றான், கவுன்ட்டரில் இருப்பவரிடம். அவர் மற்றோரு கவுன்ட்டரைக் காட்டினார். அங்கு யாருமில்லை. வருவார் என்றார்கள். எப்போது என சொல்லப்படவில்லை. இருபது நிமிடம் கழித்து வந்தார். பாஸ்புக் கேட்டார். தன்னிடம் பாஸ்புக் இல்லை என்றான். அக்கவுண்ட் நம்பர்?. அதுவும் இல்லை. சிரித்தபடி எப்படி லோன் கொடுப்பது என்றார். ‘கோல்ட் வெச்சுகிட்டு தர முடியாதா?’ என்றான். “ஸேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கணும், ஒண்ணு ஓப்பன் பண்ணிக்கப்பா’ என்றார். ‘ஆதார் கார்ட் பான் கார்ட் ரெண்டு போட்டோ’ என்றார். எல்லாம் வீட்டிலிருந்தது. தொடர்ந்து ‘அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆக ஒரு நாள் வேணும். க்ளொஸிங் டைம் நெருங்கிருச்சு. அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டுப் போங்க நாளைக்கு காலையிலேயே லோன் எடுத்துக்கலாம், என்றார். ‘இல்ல இப்பவே வேணும் ஸார் ப்ளீஸ்’ என்றான். அவர் கோபமாவது தெரிந்தது. ‘அப்போ பேமிலில யாருக்காவது இங்க ஸேவிங்ஸ் அக்கவுன்ட் இருக்கா?’ என்றார். அக்காவிற்கு போன் அடித்தான். எந்த கிளையில் இருக்கிறாய் எனக் கேட்டு அங்கு வந்தாள். அவளுக்கு அக்கவுண்ட் இருந்தது. நகைக் கடன் தாமதமானது. அன்றைய மழை மேலும் தாமதமாக்கியது விஷயங்களை. மற்றதெல்லாம் படு வேகமாக நடந்தேறியது. ராகவை ஜின்டால் ஸ்டீல்ஸுக்கு வேலைக்கு அனுப்புவது வரை.

அவனுக்கு மழைநிலத்திலிருந்து தன் வாழ்வு எவ்வளவு வேகமாக பாலைக்கு பயணித்தது என்பதை நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. அக்காவிற்கு கருணை அடிப்படையில் அப்பாவின் பணி கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். அக்கா டிகிரி முடித்திருந்தாள். இவன் டிப்ளமோ முடித்து மூன்றாண்டுகள் பணியிலிருந்துவிட்டு அப்போதுதான் பொறியியல் சேர்ந்திருந்தான். அக்காவின் வரன் பார்க்கும் படலம் காலவரையறையற்று ஒத்திப்போடப்பட்டது. நல்ல சம்பளம் எனச் சொல்லப்பட்டு மாமாவின் வழி ஒரு சிபாரிசின் பேரில் அவனுக்கும் ஜின்டால் வேலை உறுதியானது.

குன்டக்கல் ரயில் நிலையம் அமைதியாய் கிடந்தது. பகல் பதினொன்று மணி. சஞ்சாரமில்லாமல் கிடந்த நிலையத்தில் நாயொன்று ஒவ்வொரு இருக்கையாக முகர்ந்தபடி ஓடிக்கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது. பின் சத்தம். எந்த அறிவுப்பும் இல்லையே? என யோசித்துக்கொண்டிருக்கையில் அந்த சரக்கு ரயில் சூர வேகத்தில் வருவதை உணர்ந்தான். ரயில் நிலையத்தின் மோனத்தை கத்தியால் கிழிப்பதுபோல் அலறியபடி கடந்தது. அதன் வேகத்தில் புழுதி கிளம்பிப் பறந்தது. தடக் தட்க் அதிர்வுக்கு கூரை இடியக்கூடும் எனும் வேகம். இவன் அமர்ந்திருந்த கல் இருக்கை அதிர்ந்தகொண்டிருந்தது. நாய் ஆனால் எதையும் சட்டை செய்யாமல் சற்று தள்ளி ஓடிக்கொண்டிருந்தது. கரி ஏற்றிச் செல்லும் ரயில் – ஒரு ஆம்புலன்ஸ் இவ்வளவு வேகமெடுப்பதில் சற்று நியாயம் இருப்பதாகத் தோன்றியது. ஒரு கரியேற்றிச் செல்லும் சரக்கு ரயிலுக்கு அசுர வேகம் ஏன்? சரக்கு ரயில் நீங்கிய பின்னும் வெகு நேரம் அது அங்கேயே இருப்பது போலிருந்தது.

பெல்லாரிக்கான ரயில் சரியாக பதினொன்று நாற்பதுக்கு வந்தது. எந்த அறிவுப்புமில்லை. எப்படியோ விசாரித்து அன்ரிஸர்வ்டில் ஏறி அமர்ந்துகொண்டான். குறைந்தது ஒரு மணி நேரத்தில் பெல்லாரி. ஒரு நிமிடம் கூட ஆகியிராது, கிளம்பியது ரயில். இருபக்கமும் பசுமை அருகிய காட்சிகள். பாறைகள். பாறைகளால் ஆன சிறு குன்றுகள். ஒரு குன்றின் மீது சிறு புள்ளிகளாக ஆடுகள் மேய்வது தெரிந்தது. அனல் ஏறிக் கொண்டே வந்தது. ஒரு பெருமூச்சுடன் போனை எடுத்தான். கேலரியை எடுத்து இரண்டு மூன்று ஸ்வைப்பில் வான் நீல சுடிதாரும் மேக வண்ண ஷாலுமிருக்கும் போட்டோவை எடுத்தான். குப்பைத்தொட்டி படமிட்டிருக்கும் டெலீட் ஆப்ஷனை ஒத்தினான். “Are you sure you want to delete this image?”

பேசுகிற கலப்பை -மலையாளம் மூலம்- பொன்குன்னம் வர்க்கி [ 1910 –2004] ஆங்கிலம் : நாராயண மேனன் தமிழில் : தி. இரா. மீனா

தி. இரா. மீனா

காளை என்று வருகிற போது, அவுசுப் சேட்டன் எல்லாவற்றையுமே மறந்து விடுவார். மற்ற விவசாயிகள் அவரை ’காளை பைத்தியம்’என்று அழைப்பார்கள். கண்ணனைப் பார்த்து அதியசப்படாத ஒரு விவசாயிகூட இல்லை. கண்ணன்தான் அவரது வாழ்க்கை. சாம்பல் நிறம், உறுதியான உடல்கட்டு, குள்ளம், வளைந்த கொம்பு, வடிவான கூனல், விரைப்பான தோல், பெரிய கண்கள், கண்ணனின் நடைகூட விசேஷமானதுதான். நடவு வயல், மற்றும் பிற இடங்களிலும் அவுசுப்பின் மனதில் என்ன இருக்கிறதென்பதைச் சிறிதும் சந்தேகமின்றி கண்ணன் புரிந்து கொள்வான். கருவிப் பட்டறை அல்லது வயல்வெளி என்று எந்த இடமாக இருந்தாலும் அவுசுப்பின் மனதில் என்ன ஓடுகிறதென்பது கண்ணனுக்கு நன்றாகத் தெரியும்.

கண்ணன் மேல் ஒருபோதும் அவுசுப் சாட்டையைப் பயன்படுத்தியதில்லை. அதை லேசாக உயர்த்துவார். மற்ற விவசாயிகளைப் போல, குரலுயர்த்தி தன் காளையை அழைப்பது, அது இது என்றெல்லாம் அவர் செய்ததில்லை. ஒரு சிநேகிதனிடம் பேசுவதைப் போலத்தான் அவர் கண்ணனிடம் பேசுவார். எவ்வளவு காளைகள் இருந்தாலும், அவைகளுக்கு கண்ணன்தான் தலைவன். வயலின் ஒரு பகுதியை உழுத பிறகு, அடுத்த பகுதிக்கான தூண்டுதல் அவனுக்குத் தேவையில்லை. அவை எப்படி, எப்போது செய்யப்பட வேண்டுமென்று அவனுக்குத் தெரியும். சில சமயங்களில், அடுத்த வயலுக்குள் அவன் காலெடுத்து வைக்கும் போது, அவுசுப் அவனிடம் ஓய்வு வேண்டுவார். “ஏய், கொஞ்சம் பொறு. நான் வெற்றிலை போட்டுக் கொள்கிறேன். போட்டு ரொம்ப நேரமாகிவிட்டது.”

அதைக் கேட்டவுடன், கண்ணன் நின்று விடுவான். வெற்றிலை போட்டுக்கொண்ட பிறகு, ’ஹூம்’ என்று அவுசுப் குரல் கொடுக்க,கண்ணன் மீண்டும் வேலையைத் தொடருவான். வயலின் ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதியில் கால் வைக்கும் போது எவ்வளவு கவனமாக அவன் வரப்பைக் கடப்பான்! அவனுடைய குளம்புகள் வரப்புகளில் பதியாது. ஒரு குதியலில் அவைகளை எப்படிக் கடப்பதென்ற கணக்கு அவனுக்குத் தெரியும்.

தன்னிடம் சொல்லப்பட்டவற்றை அவன் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதால் அவனைக் கட்டிப் போட வேண்டிய அவசியமில்லை. உழவு வேலை முடிந்த பிறகு, சுதந்திரமாக மேய அவன் அனுமதிக்கப்படுவான். அப்படிச் சுதந்திரமாக விடும்போது அவுசுப், “போய் ஏதாவது சாப்பிட்டு உன் வயிற்றை நிரப்பிக் கொண்டு வா. வாழை மரங்கள் மீது கண் போடாதே,” என்று எச்சரிக்கை செய்வார். கடும் உழைப்போடும் கவனத்தோடும் பயிரிடப்பட்டிருக்கும் வாழை மரங்கள் அல்லது இளம் தென்னங் கன்றுகள் ஆகியவற்றை கண்ணன் ஒரு போதும் தொட மாட்டான். அவற்றை அழிப்பதென்பது, அதைப் பயிரிட்டவர்களை கொம்புகளால் முட்டுவதை விடக் கொடுமையானதென்று அவனுக்குத் தெரியும். அன்றைய உழவு வேலை முடிந்ததும், உடலில் இருக்கும் சேறு போகும்படி அவுசுப் தவறாமல் அவனைக் குளிப்பாட்டுவார்.

“இடது காலை இந்தப் பக்கம் உயர்த்து — ஏன் தலையை அசைத்துக் கொண்டேயிருக்கிறாய்? இங்கே பார், உன் கொம்புகள் என்னைத் தொட்டால் என்ன செய்வேன் என்று உனக்குத் தெரியும்! அசையாதே , பேசாமலிரு…”

அவுசுப்பின் ஒவ்வொரு வார்த்தையையும் கண்ணன் புரிந்து கொள்வான். ஆனால் கண்ணனுக்கு குறிப்பாக இந்தப் பேச்சு பிடிக்காது. குளிப்பதை அவன் வெறுத்தான். ஆனால் அவுசுப்பை பிடிக்கும் என்பதாலேயே அவன் பேசாமலிருந்து விடுவான். அன்பாலும் அரவணைப்பாலும் மனங்களை கவரத் தெரியாதவர்கள், “மோசமான எந்தக் காளை மாட்டை அவுசுப்பிடம் விட்டாலும், அவர் கையால் தரும் ஒரு வேளை உணவைச் சாப்பிட்டுவிட்டு, அது ஒரு வித்தியாசமான மாடாகி விடும்.” என்று சொல்வார்கள். அவர் அவைகளிடம் மிக இயல்பாகப் பேசுவார். தன் காளைக்காகத் தீவனம் தேடியலைவதிலேயே நாளின் பெரும்பான்மைப் பொழுது போய்விடும். கால்நடைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த தடுப்புச் சட்டம் பற்றிப் பேசினால், அவர் தன் பொறுமையை இழந்து விடுவார். ”கால்நடைகளைக் காப்பாற்றுங்கள், நாம் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று எல்லோரும் வகுப்பெடுக்கின்றனர். எந்தச் சபையிலிருந்தாவது அரசாங்கம் ஒரு பிடி அரிசியையாவது கொடுக்கிறதா? உங்கள் கால்நடைகளை உங்கள் தாடியால் காப்பாற்ற முடியுமா? ” என்று கேட்பார்.

கண்ணனுக்கு தீனி கொடுத்து முடித்த பிறகுதான் அவுசுப்பின் பசி தணியும். கால்நடைகள் பசியோடிருந்தால், குடும்பம் அழிந்து விடும் என்று நம்பினார். மரவள்ளியின் தண்டை கண்ணனுக்குக் கொடுக்கும்போது அதை நன்றாக மசித்த பிறகுதான் கொடுப்பார். அல்லது, அன்னாசி கொத்தைக் கொடுக்கும் போது முட்களை நீக்கி விட்டு, இலைகளைத் துண்டுகளாக்கிக் கொடுப்பார்

வயலில் சுற்றித் திரிந்து விட்டு கண்ணன் காம்பவுண்டிற்குள் நுழைந்த கணத்தில் “ஏ, கண்ணா” என்று குரல் கொடுத்தால், அவரது குரலைக் கேட்ட நொடியில் அங்கேயே நின்று விடும். அவுசுப் தன்னருகே வரும்வரை தலையைத் நிமிர்த்திக் கொண்டு காத்திருக்கும். கை நிறைய பசும்புல் அல்லது இரண்டு மூன்று வாழைப்பழத் தோல் –இப்படி ஏதாவது சின்ன பரிசோடு அவுசுப் அவனருகில் போவார். அன்பாக நீவி விடும் போது கண்ணன் அவரை நக்கத் தொடங்குவான். அந்த உப்பான வியர்வை கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது.

எந்தக் கூட்டத்திலிருந்தாலும் அவுசுப்பின் குரல் கண்ணனுக்குக் கேட்டுவிடும். அதைக் கேட்டவுடன் இடியோசை கேட்ட மயிலாய் குதூகலிப்பான். வயலில் அவுசுப்தான் கலப்பை ஓட்ட வேண்டும் என்று விரும்புவான். அவுசுப் தவிர மற்றவர்கள் வந்தால் தன் கைவரிசையைக் காட்டுவான். அதைத் தடுப்பதற்கு, அவுசுப் வந்துதானாக வேண்டும்: “வேண்டாம் கண்ணன், இது நம்முடைய குட்டப்பன்தான். உனக்கு அவனைத் தெரியாதா என்ன?” என்று அவுசுப் சமாதானப்படுத்துவார். வயல்களில் ஓர் ஆலாபனை–வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ இல்லாத ஆலாபனை. அவுசுப் வானத்தை எட்டுமளவிற்கு குரலை உயர்த்தி அழகாகப் பாடுவார் :“ ஹோ… ஓ…ஓ… ஒன்றிரண்டு நிமிடங்கள் அந்த மெல்லிசை மிகத் தெளிவாக நிற்கும். அது, காதல் பாடல்களிலிருக்கும் இன்னிசை போல இருக்கும் குறிப்பாகச் சொல்லப் போனால் அது தெய்வீகமான பாடல் அல்லது ஆயர்பாடி இன்னிசையாக இருக்கும்.அவுசுப் பாடத் தொடங்கும் போது, கண்ணன் தன் நோய், வேதனை, வேலை எல்லாவற்றையும் அந்த இசையில் மறந்து விடுவான்.

கழுத்தில் இருக்கும் மணிகளும், குளம்புகளும் மண்ணில் புதைந்து தாளத்தை ஏற்படுத்தும். ஒரு நாள் வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. லேசான காய்ச்சல் இருந்ததால் அவுசுப் வீட்டில் படுத்திருந்தார். அவுசுப்பின் காளை மாடுகள் இல்லாமல் அண்டை வீட்டு பச்சனால் அன்று தன் வயலில் வேலை செய்ய முடியாது. அதனால் அவுசுப் கண்ணனையும், அவன் துணையையும் அனுப்பியிருந்தார். கண்ணனும், அவன் துணையும் மற்ற காளைகளோடு வயலுக்குள் நுழைந்தனர். பச்சன் ஒரு சுற்று உழுது முடித்துவிட்டான். இரண்டாவது சுற்றை ஆரம்பித்தவுடன் பச்சனுக்கு பாட வேண்டுமென்ற ஒரு வேகம் வந்து விட்டது; கண்ணனின் பின்னாலிருந்து ஒரு ராகத்தின் ஆலாபனையை ஆரம்பித்தான். இசை பற்றியெதுவும் தெரியாத அவனுக்கு ஏன் பாடவேண்டுமென்ற ஆசை வந்தது ?அவனுக்குப் பாடவேண்டும் என்ற ஆசை. அவ்வளவுதான். பரிதாபமாக அந்த இசை தொடங்கியவுடன், கண்ணனுக்கு வெறுப்பு வந்துவிட்டது. தன் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ,தன் தலையை இரண்டு புறங்களிலும் வேகமாக ஆட்டினான். பச்சன் இதை கவனிக்கவேயில்லை; அவன் தான் நன்றாகப் பாடுவதாக நினைத்துப் பாடிக் கொண்டிருந்தான். இசையைப் பொறுத்தவரை, தாங்கள் எவ்வளவு மோசமாகப் பாடுகிறோம் என்பதைக் கலைஞர்கள் உணர்வதில்லை. வெளிப்படையாகவே கண்ணன் தன் வெறுப்பைத் தொடர்ந்து காட்டிய போதும் பச்சன் பாட்டை நிறுத்தவில்லை. பச்சனின் நண்பர்களைப் பொறுத்தவரை, உலகத்தின் எல்லா ராகங்களும் அவர்களுக்கு ஒன்றுதான். கண்ணனுக்கு எந்த அனுதாபமும் அவர்களிடமிருந்து இல்லை. பச்சன் இசையை அவமதித்து விட்டான், கண்ணன் அவனது இடது காலில் ஓங்கி ஓர் உதை உதைத்தான். மூன்று நாட்கள் அந்தக் கலைஞன் வீட்டிலிந்து ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று.

பன்னிரண்டு வருடங்கள் கண்ணன் ஓய்வின்றி அவுசுப்பிற்காக உழைத்தான். பல வசந்தங்களும், இலையுதிர் காலங்களும், பனியும், குளிரும் என்று பல பருவங்கள் வந்து போயின. வீராப்புடன் தங்களைக் காட்டிக் கொள்ளும் வகையில் அரசாட்சி செய்தவர்களின் மகுடங்கள் பிரஜைகளின் முன் கீழே விழுந்தன. நம்பமுடியாத மாற்றங்கள் ஏற்பட்டன. அரசின் புதிய அமைப்பில்— மனிதன் மனிதனைச் சுரண்டக்கூடாது –என்பது போன்ற மகிழ்ச்சியான வாசகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தன் அன்புக்குரிய காளைகளை விற்க அவுசுப்பிற்கு சில கட்டுப்பாடுகளிருந்தன. ஏற்கனவே தன் அதிர்ஷ்டத்திற்குரிய நெல் வயலை அவர் அடமானம் வைத்திருந்தார். அதை விருப்பப்பட்டு வைக்கவில்லை. வேறு வழியில்லை, ஒரு தகப்பன். திருமண வயதைக் கடந்து விட்ட மகளின் அன்புத் தந்தை. மாப்பிள்ளை வீட்டார் ஏழையாக இருந்த போதும் மூவாயிரம் ரூபாய் வரதட்சணையாகக் கேட்டனர், தன் வயலை ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு அடமானம் வைத்து, வரதட்சணையைச் சமாளித்தார். ஆனால் திருமணச் செலவுகளுக்கு அதிகப் பணம் தேவையாக இருந்தது. அதனால் தனக்கு மிக அருமையானவைகளாக இருந்த காளைகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போனது.

இருபது வருடங்களாக கடுமையாக உழைத்த, நன்கறியப்பட்ட விவசாயி. ஆனால் என்ன பயன்? முடி நரைத்து விட்டது. கண் பார்வை மங்கிவிட்டது. எந்தக் கத்தியும் சதையைத் துளைக்க முடியாத அளவிற்கு அவர் கைகள் உழைப்பால் உரமேறியிருந்தன. சுருக்கங்கள். வாத நோய் சார்ந்த தொல்லைகள். அவரால் என்ன செய்யமுடியும்? ஐயாயிரம் ஆண்டு பழமையான நிலத்தில் அவர் உழைத்துக் கொண்டிருந்தார். மண் வளம் இழந்து விட்டது. எந்த உரமுமில்லை. கடைசியில் அவுசுப் ரிக் வேத பாடல்களின் நிலைப்பாட்டை நாடினார். தன் நிலத்தைக் காக்குமாறு மேகம், தண்ணீர், மலை, காற்று என்று எல்லா கடவுளரையும் வேண்டினார். பயனற்றுப் போன அந்த நீண்ட கால வழிபாடுகளிலிருந்து அவர் இன்னும் மீட்சி அடையவில்லை. ஆனால் கடைகள் அதிகரித்ததால் சுரண்டல்களின் வழியும் பலவாயின. இவ்வாறு அவரை அவமதிக்கும் நிகழ்வுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போனது.

கண்ணனை விற்ற போது அவுசுப் அந்த இடத்தில் இல்லை . விலைப் பத்திரத்திற்கான கட்டணத்தைப் பெறவேண்டியிருந்த போதிலும் அவர் கண்ணீரோடு அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். எவ்வளவு பணம் தந்தாலும் நிறுத்த முடியாத அழுகை அது. அந்த இடத்தை விட்டுப் போவதையே கண்ணன் வெறுத்தான். தன் தலையைத் தூக்கி தன் எஜமானன், தன் வாழ்க்கையின் வாழ்க்கையானவன் அங்கிருக்கிறானா என்று சுற்றிலும் பார்த்தான். ஏதோ தவறாக இருக்கிறதென்னும் பாவனையில் ஒன்றிரண்டு முறை தலையைக் குனிந்து கொண்டான். அந்த நேரத்தில் பலா மரத்தினடியில் நின்று, அவுசுப் அமைதியாக வார்த்தைகளின்றி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். வார்த்தைகளையும், செயல் விளக்கங்களையும் அன்பு எதிர்பார்ப்பதில்லை. அன்பு, மனதின் துக்கம் என்பதை அவுசுப், கண்ணன் என்ற இருவர் போல யாரும் உணரமுடியாது. அவர்கள் தங்களின் துயரங்களை ஒருவரிடம் ஒருவர் சொல்லிக் கொள்ளவில்லை. அதனால் இரண்டு இதயங்களுக்குமே வலி மிக அதிகமாக இருந்தது.

தன்னுடைய சொந்த முகாமிலேயே ஆதரவற்றும், அவமதிப்பு செய்யவும் படுகிற ஒரு சிப்பாய் சில சமயங்களில் எதிரியைப் பார்க்க நேரிடலாம். தன் கிராமத்திலேயே கையற்றும் மதிப்பற்றும் போன சில விவசாயிகள் அறியாத, கேட்டிராத வயநாடு’ நிலங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். உறவினர்களையும், நண்பர்களையும் அணுக முடியாத நிலை. மலேரியா தன் கொடுமையைப் பரப்பிக் கொண்டிருந்த நேரம். “இவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட பின்பும், உன்னை அங்கே போக நாங்கள் அனுமதிப்போமா அவுசுப்?” என்று கேட்டார் பக்கத்து வீட்டுக்காரரான கிட்டு சார். மலபாரைப் பற்றியும் அவுசுப் விசாரித்துக் கொண்டிருந்தார்.

“நான் என்ன செய்வேன் கிட்டு சார்? உயிரோட்டமான ஒரு சிறு நிலத்தை எனக்குத் தாருங்கள். மண்ணின் மணத்தை என்னால் சுவாசிக்க முடியாதெனில் ,என் மனம் சாம்பலாகிவிடும்,” என்றார்.

அவுசுப்பின் வாழ்க்கை, வேதனையான ஒரு வாழ்க்கை, சலித்துப் போன சிறகாய் நகர்கிறது. அவருடைய மலபார் பயணம் தினமும் தடைப்படுகிறது. அது மட்டுமில்லை, தன்னிடம் இப்போது இருக்கிற ஏழு சென்ட் நிலத்தையும் நல்ல விலைக்கு விற்க விரும்புகிறார். இன்னொரு பிரச்னை, அவுசுப்பின் மகள் கேத்ரி கர்ப்பிணியாயிருக்கிறாள். தன் முதல் பேரக் குழந்தையையும், அதன் பிஞ்சு முகத்தையும் பார்க்க அவர் ஏங்குகிறார். ஈஸ்டரும் வரப்போகிறது. ஏழ்மையான கிறிஸ்தவர்களின் வீடுகளில் கூட இந்த நாள் மிக மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஒவ்வொரு அடுப்படியிலிருந்தும் சமைக்கப்பட்ட கறியின் அருமையான மணம் வெளிப்படும் நாள் இது. வாணலியில் பொரியும் அப்பங்கள், மயக்கம் தரும் வாசனையை எங்கும் பரப்பும். தேங்காய், கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட சூடான புழுக்கல் கறியின் மணம் எங்கும். இதுதான் மகிழ்ச்சி. இந்த நாளில் இவை இல்லாமல் கூட சில வீடுகள் இருக்கும். ஆனால் அவுசுப் எதற்காகவோ ஏங்கி அங்கே உட்கார்ந்திருந்தார். அருகிலுள்ள வயலில் யாரோ உழுது கொண்டிருந்தனர். உழவனின் அருமையான குரலையும் அவரால் கேட்க முடிந்தது. அது அவரது மனதை, ஒரு விவசாயியின் மனதை வருத்துவதாக இருந்தது. ஒட்டடை படிந்திருந்த, உயரத்தில் மாட்டியிருந்த தனது கலப்பையைப் பார்த்த போது நெஞ்சு கனத்தது. கண்ணனைப் போன்ற ஜோடிக் காளைகள், ஐந்தாறு ஏக்கர் நல்ல நிலம், இந்தக் கலப்பையின் பயன்பாடு இனி வாழ்க்கையில் அவருக்கு இன்னொரு முறை கிடைக்குமா ?அந்த மாதிரியான அதிர்ஷ்டமான நாள் தனக்குக் கிடைக்குமா என்று நினைத்தார்.

“எவ்வளவு நேரம் இப்படி இருக்கப் போகிறீர்கள்? நடந்தது நடந்து விட்டது. கோட்டயத்திற்குப் போகவேண்டாமா? மகளை அனுப்பி வைக்க வேண்டாமா? அப்பாவாக அதையெல்லாம் செய்ய வேண்டுமல்லவா?” மனைவி மரியா கேட்டாள்.

அடுத்த நாள் மகளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவளுக்குக் கொடுக்க வேண்டிய புது உடைகளை இன்னும் அவர் கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டாமென்பதில்லை; கையில் பணமில்லை. அவளுடைய மாமியாரும் நாத்தனார்களும் அவளைக் கிண்டலாகப் பேசுவார்கள். மகள்தான் தாயிடம் இதையெல்லாம் சொன்னாள். தாய் வீட்டிலிருந்து மூன்று துண்டு ஆடைகள், பாடிகள் அவளுக்குத் தர வேண்டும். மற்றவைகளை அவர் விட்டு விடலாம். அது பற்றி யோசிக்க வேண்டியதில்லை. அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது அதிர்ஷ்டம் ஒரு கோடாக அவர் பக்கம் வந்தது. மரியா தான் போட்டிருந்த இருபது ரூபாய் சீட்டோடு வந்தாள். அந்த சீட்டைக் கட்டுவதற்காக அவர்கள் ஒவ்வொரு அரிசியையும் மிக கவனமாகப் பயன்படுத்தி, தங்கள் வயிற்றைக் கட்டி வந்திருக்கின்றனர். மரியா அந்தப் பணத்தோடு அவரருகில் வந்தாள்.

அவரால் அதைச் செய்திருக்க முடியாது, ஆனால் அதை அவள் சாத்தியப்படுத்திவிட்டாள். கடைக்குப் போவதற்காக அவர் எழுந்தபோது, “அப்பா, ரவிக்கைத் துணி கொஞ்சம் கனமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்,” கேத்ரி எச்சரித்தாள்.

“நாம் இன்னும் நில வரி கட்டவில்லை. அதையும் கட்டி விடுங்கள்,” என்றாள் மரியா.

“நீ அரசாட்சியே செய்ய நினைப்பாய்,இதை வைத்துக் கொண்டு.” என்றார் அவுசுப்.

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எனக்கு ஒரு துண்டு உடை வேண்டும். இடுப்பாடை கிழிந்து விட்டது,” என்றாள் மரியா.

“ஒன்று செய். நீயே போய் விட்டுவா. நான் அடுப்படியைக் கவனித்துக் கொள்கிறேன்.”

“அப்படியானால் உங்கள் தாடியையும் கொடுத்து விடுங்கள்,” என்று மரியா சொன்னாள்.

“ஆமாம், எனக்கு தாடி இருக்கிறது. ஆனால் கடன் தரும்படியான விவகாரம் எனக்குத் தேவையில்லை. உனக்கு தாடியிருந்தால், திருச்சபையில் நீ ஒரு ஆணைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டாய்,” என்று உறுமினார்.

குடையை கக்கத்துக்குள் வைத்து, தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு, இடுப்பில் வெற்றிலையைச் சொருகியபடி அவர் கிளம்பினார். ஈஸ்டர் கொண்டாட்டத்தின் உற்சாகமும், கலகலப்பும் கோட்டயத்தில் சிறிதும் குறைந்ததாயில்லை. கிறிஸ்தவக் கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. ஆனால் நிறைய துணிக் கடைகளிருந்தன. ஒன்றிரண்டு கடைகளுக்குள் போய் துணிகளின் தரத்தையும், விலையையும் விசாரித்தார்.

“கடவுளே ,என்ன விலை!” ஆடைகளின் மிக அதிகமான விலையைப் பார்த்த ஒரு முதியவரின் அபிப்பிராயம் இது. “எதுவாக இருந்தாலும் இரண்டு மூன்று கடைகளில் விசாரிக்கிறேன். ஓரணா குறைவு என்றாலும் அது எந்தக் கடையில் என்று யாருக்கும் தெரியாது,” என்று சொல்லிக்கொண்டே மற்ற கடைகளைப் பார்த்து நடந்து, மாநகராட்சிக் கட்டிடத்தின் கேட்டை அடைந்தார். அங்கே, கிணற்றுக்கு அருகே பல காளைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றின் உடலிலுள்ள ஒவ்வொரு எலும்பையும் எண்ணி விடலாம். வாழ்வின் இறுதிக்கு வந்து விட்ட முதிய காளைகள்; முறிந்த வாலோடு சில ; பல வருடங்கள் கழுத்தில் வண்டியைச் சுமந்திருந்ததால் அந்த அடையாளங்களோடு சில; மிக வளைந்து விட்ட கொம்புகளுடன் சில; மனிதனின் அன்பை வாழும் உயிர்களிடம் வெளிப்படுத்தத் தெரிந்தவை சில- இம்மாதிரி இயல்புடைய காளைகள் இருந்ததை நம்மால் பார்க்கமுடியும். மாநகராட்சியின் கருப்பு முத்திரை ஒவ்வொன்றின் உடம்பிலும் சாவின் அடையாளத்தைக் காட்டுவதற்காக குத்தப்பட்டிருந்தது. அவைகளிடம் மிஞ்சியிருக்கிறவைதான் ஈஸ்டர் விழாவிற்கு கறியாகப் போகிறவை. முத்திரை குத்தப்படாத விலங்கைக் கொல்பவர்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுத்தது.

எல்லாவற்றிற்கும் தலைமையான மாநகராட்சி பொது மக்களின் உடல்நலம் குறித்து கவனம் எடுத்துக் கொண்டதால் இந்தச் சோதனை கட்டாயமானதாக இருந்தது. இந்தச் சோதனையில் மனிதனுக்கு அபாயம் விளைவிக்கும் எந்த விலங்கையும் இரக்கமின்றி கசாப்புக் கடைக்காரர்கள் வெட்டித் தள்ளினார்கள். இந்த விஷயத்தில் அவுசுப் மாநராட்சிக்கு ஆதரவு தருபவர். துன்பத்திலிருந்து அவைகளை விடுவிப்பதான இந்தச் சாவு பெரும்பாலான காளைகளுக்கு மிகப் பெரிய நிம்மதி. அவைகளால் முடிந்தபோது நேரம் காலமின்றி உழைத்தன. பலவீனமாகும்போது, கொடூரமாகவும், முறைகேடாகவும் அவற்றின் விதி அமைகிறது. கொடுமைக்கும் , அவமதிப்புக்கும் ஆளாவதற்கு முன்னால் சாவு எவ்வளவு உயர்வானது! அங்கு நின்று அவைகளைச் சிறிது நேரம் பார்த்தபோது மனம் வலித்தது. மொத்தமாக நாற்பது தலைகள் இருந்தன, தர அடையாளத்திற்காக இன்னும் பல காளைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். அவைகளை வேதனையோடு பார்த்துவிட்டு அவர் புறப்பட்டார்.

திடீரென அவுசுப்புக்கு நடுக்கமேற்பட்டது. நம்பமுடியவில்லை. தன் கண்பார்வைக் குறைவு தன்னை ஏமாற்றுகிறதோ என நினைத்தார். எலும்பும், தோலுமாக ஒரு விலங்கைப் பார்த்தவுடன் மனம் நலிந்து, கண் முன்னால் எல்லாம் இருட்டாய்த் தெரிந்தது. ஆமாம், அது கண்ணன்தான். நடுங்கிப் போனார்.

“கண்ணன்!” அடி நெஞ்சிலிருந்து கத்தினார். ஒரே குதியலாக அதனருகில் ஓடினார். ஆறுதலையும் அன்பையும் தருவதாக இருந்த குரல்.. அந்தப் பெரிய கட்டிடத்தின் முன்னால் கண்ணன் தலை குனிந்து நின்றிருந்தான். வாழ்வின் நடப்பு நிகழ்வு அவன் காதுகளில் எதிரொலித்தது. தலையைத் தூக்கிச் சுற்றுமுற்றும் பார்த்தான். “உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா மகனே? நான் இப்படியான நிலையில் உன்னைப் பார்க்க வேண்டுமா?” அவுசுப் கண்ணனைத் தழுவி, அதன் உச்சியை நீவினார். அந்தக் கைகளின் ஸ்பரிசம் பட்டதும் அது வாலை உயர்த்தியது. வாயால் அழாமல், மனதால் அழுதது. கண்ணனின் உடலில் தர அடையாள விவரமிருக்கிறதா என்று பார்க்க விரும்பினார். ஆமாம், அதன் முன்னங்காலில், அது இருந்தது. அதை அழித்து விட விரும்பினார்.
ஆனால் நகராட்சியின் கருப்பு அடையாளத்தை அவ்வளவு சீக்கிரமாக அழித்து விட முடியாது.

வயிற்றுப் பகுதியில் சீழ் பிடித்த காயமிருந்தது. அதைச் சுற்றி ஈக்கள் மொய்த்தன.

“ஒரு காலத்தில் இந்தக் காளை உங்களுடையதாக இருந்ததல்லவா?’ கசாப்பு கடைக்காரர்களில் ஒருவர் கேட்டார்.

“நீங்கள்தான் அவனை இங்கு அழைத்து வந்தீர்களா ”அவுசுப் கேட்டார்.

“ஆமாம்.”

கண்ணன் தன் எஜமானனின் வியர்வை நிறைந்த உடலை நக்கினான். வாழ்வின் பெரும் பகுதியில் அந்த வியர்வையை அவன் குளிர வைத்திருக்கிறான். தனது கடைசி நேரத்திலும் அவன் வியர்வையை நக்குவான். அது அவனுக்குச் சுவையானது என்பதோடு மட்டுமல்லாமல் அவன் வாழ்வின் ஓர் அங்கமுமாகும். அந்த முதிய விவசாயியின் சூடான கண்ணீர் கண்ணனின் முகத்தில் விழுந்தது.

“நாம் போகலாம். நேரமாகி விட்டது. நான் இந்த இறைச்சியை கடையில் கொடுத்தாக வேண்டும்,” கடைக்காரர் மற்றொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்களில் ஒருவர், கண்ணனோடு சேர்த்து இரண்டு ,மூன்று காளைகளை கூட்டிச் சென்று விடுவார். ஆமாம், இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கண்ணன் ஈஸ்டர் விருந்துக்கு கறியாகி விடுவான்.

இருட்டிக் கொண்டிருந்தது. “விளக்கை ஏற்றுவதற்கு முன்னால் இந்த இடத்தைச் சுத்தம் செய்து விடு,“ என்று மரியா தன் மகளிடம் சொன்னாள். அவர்கள் அவுசுப்பின் வரவிற்காக காத்திருந்தனர்.

“அப்பா வர ஏன் இவ்வளவு நேரமாகிறது ?”மகள் கேட்டாள்.

“வேலையை முடித்துக் கொண்டு வருவார். வரட்டும்,” மரியா மகளை அமைதிப்படுத்தினாள்.

“அவர் கோட்டயத்திற்குப் போயிருந்தால் இதற்குள் திரும்பியிருக்க வேண்டும்,“ தனது புத்தாடைகளுக்காக காத்திருந்த மகள் பொறுமையின்றி பேசினாள். அவள் கண்கள் சாலையின் மேலேயே பதிந்திருந்தன. மரியாவின் கண்களும்தான். அவுசுப் வருவதாகத் தெரியவில்லை. விளக்கை ஏற்றினர்.

மகள் பார்த்து விட்டாள். “அப்பா, ஆமாம், அப்பாதான்,” மகள் உற்சாகமாகச் சொன்னாள். தான்தான் அப்பாவை முதலில் பார்த்தோம் என்று மகிழ்ந்தாள். அம்மாவும், பெண்ணும் ஒரே சிந்தனையில் நின்றனர்.

“அது அவுசுப்பா?” பக்கத்து வீட்டுக்காரரான மாத்யூ கேட்டார். அவர் ஒரு தையல்காரர். இன்றிரவிற்குள் மூன்று ரவிக்கைகளைத் தைத்தாக வேண்டும். கேத்ரி காலையில் கிளம்புகிறாள். எல்லாவற்றையும் இரவில் முடித்து விடவேண்டுமென்பதால் மாத்யூவும் தயாராக இருந்தார்.

தனது புத்தாடைகளைப் பார்க்க வேண்டுமென்று காத்திருந்த அந்தக் கண்கள் அவுசுப் கண்ணனோடு நுழைவதைப் பார்த்தன.

“ஆ.. அது கண்ணன்தான்,” கேத்ரி வியப்பாகச் சொன்னாள்.

“எங்கே புதுத்துணி? இதுதான் நீங்கள் வாங்கி வந்ததா?”மரியா கேட்டாள். கண்ணன் தனது பழைய இடத்திற்குப் போய் நின்றான்.

அவர்கள் பல கேள்விகள் கேட்டனர், குரல்கள் உயர்ந்து கொண்டே போயின. தாடையில் கை வைத்தபடி அமைதியாக அவுசுப் உட்கார்ந்திருந்தார்.மரியா விரக்தியோடு தலையை ஆட்டினாள். கேத்ரி துக்கம் தாங்க முடியாமல் அழுதாள். அவுசுப் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் உடல் வியர்வைக் குளமானது.

“அப்பா, நீங்கள் இப்படிச் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” கேத்ரி அழுதுகொண்டே சொன்னாள்.

“மகளே,” குரல் தழுதழுக்க, “கண்ணனும் நீயும் எனக்கு ஒன்றுதான். கசாப்புக் கடைக்காரர்…” துண்டால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அந்த வாக்கியத்தை முடிக்க முடியவில்லை.

அந்த இரவு கொடியதான ஓர் இரவு. தூங்காமலே அவர்கள் இரவைக் கழித்தனர்.

பொழுது விடிந்தது. கண்ணனின் வயிற்றுப் பகுதியிலிருக்கும் சீழ் புண்ணிற்குத் தானே தயாரித்த மருந்தை எடுத்துக் கொண்டு அவுசுப் மாட்டுக் கொட்டகைக்குப் போனார். காளைகளுக்கான வியாதிகளுக்கு அது மிக நல்ல மருந்து. “உன் கால்களை நீட்டு, தலையைத் தூக்கு,” என்று படுத்துக் கொண்டிருந்த கண்ணனிடம் சொன்னார்.

“கண்ணன்!” கூப்பிட்டார். கண்ணன் இனி எழுந்திருக்கவே மாட்டான் . அவுசுப்பின் மனம் கரைந்தது. அவுசுப்பின் குடும்பம் அவரைக் காயப்படுத்துவதை அவனால் பொறுக்க முடியாமல் போயிருக்கலாம். இந்த உலகை விட்டு அவன் போக அது காரணமாக இருந்திருக்கலாம். கண்ணனின் உடல் ,நொறுங்கிப் போன அவுசுப்பின் மனம்… மேலே ஒட்டடை படிந்து கிடந்த கலப்பையின் மேலிருந்த ஒரு சிறிய பல்லி சோகமாக குரல் கொடுத்தது.
—————————————————————-

நன்றி : Contemporary Indian Short Stories Series 1,Sahitya Akademi

கவிதை, சிறுகதை,நாடகம், கட்டுரை திரைப்படம் என்று பல துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கும் பொன்குன்னம் வர்க்கி மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளியாக மதிப்பிடப்படுகிறார். சமூக அக்கறை, சமூக அநீதிக்கு எதிரான சமரசமற்ற எழுத்து இவருடையது என் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். வள்ளத்தோள், எழுத்தச்சன், லலிதாம்பிகா மற்றும் முட்டத்து வர்க்கி விருதுகளைப் பெற்றவர். நிவேதனம், தாகம், வெளியில் எனக்கு ஸ்தலமில்லை, பேசுகிற கலப்பை உள்ளிட்ட சிறந்த சிறுகதைகளை எழுதியவர்.
———————————————————————