Author: பதாகை

வெண்தடம்

பானுமதி. ந

‘சங்கு முகம் ஆடி சாயாவனம் பார்த்து
முக்குளமும் ஆடி முத்தி பெற வந்தானோ!
திங்கள் முகம் காட்டி சின்ன உதட்டால் முலைப் பற்றி
பாலும் வழிந்தோட பாலகனாய் வந்தானோ!’

சரவணனும் ரமணனும் படுத்திருந்த திண்ணையில் காற்றில் மிதந்து வந்த இந்தப் பாடல் இளக்கி இளக்கி சரவணனை உள்ளே அழ வைத்தது; ரமணனுக்கோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவெண்காடு, ஸ்வேதாரண்யம் எப்படிச் சொன்னாலும் உவக்கும் பெயர். பழுப்பும் வெளுப்புமான பெரும் மணல் வெளி தேடி அவர்கள் அந்த ஊரில் காலை முதல் அலைந்து ஒரு மாதிரி கண்டு பிடித்து விட்டார்கள். ஏறக்குறைய செவ்வக வடிவிலான மைதானம்; தென் கிழக்கு மூலையில் சேவல் கொண்டைப்பூக்கள், வானின் வர்ணத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருந்தன. சங்குக் கொடிகளும், தும்பைச் செடிகளுமாக யாரோ ஒருவர் எழுதி வைத்த ஓவியம் போல் அந்த மூலையில் மட்டும் காட்சிச் சித்திரங்கள். மீதி மைதானம் முழுதும் மணல்-அதிகம் வெண்மையும், சிறிது பழுப்பும் கலந்த மண்.

மேற்கூரையற்ற திண்ணை, சற்றே சிதிலமடைந்திருந்தாலும் படுத்துக் கொள்வதற்கு வாகாக இருந்தது. வளர் நிலவின் பதினாலாவது நாளிலேயே முழுமை காட்டும் நிலவு. பூரித்து பொங்கி வழியும் பால் நனைக்கும் நிலம். எதிரே உள்ள மைதானத்தில் பரவியிருந்த மணல் நிரை தன் மீது படரும் வெள்ளொளியில், இடையிடையே காணப்படும் சிறு கற்களின் துகள்களில் பல நிற மணிகள் பதித்த வெள்ளியாபரணமெனத் துலங்கியது.

“எதுக்குடா இந்த அலைச்சல்? என்னவேற கட்டியிழுக்கற?’’ என்ற ரமணனின் கேள்விக்கு, ’’நாளக்கி தெரிஞ்சுப்ப, காலேல எந்துருக்கணும், சங்கு முகத்த கேட்டுண்டே தூங்குடா,” என்றான் இவன்.

அவள்…பூமிஜா இந்தக் காற்றை இப்படி உணர்வாளா? விளிம்புகளற்ற வெள்ளித்தட்டு இது என ஏற்றுக்கொள்வாளா? ஏன் வர இயலாது என்று சொல்லிவிட்டாள்? இந்த எண்ணங்களை உதறுவதற்காக ’ரமணா’ என்று கூப்பிட்டான். மெலிதான குறட்டை ஒலிதான் கேட்டது.

கோயில் காவலர்தான் அவர்களுக்கு இந்தத் தங்குமிடத்தைச் சொன்னவர். ’தம்பிகளா, பொழுதேறிப் போச்சுது. சீகாழி போயி தங்கிக்கிடலாம். அலய வேணாம்னா இங்க படுங்க. பின்பக்கத்துல வாய்க்கா ஓடுது. காலப் பணியாரம், மதிய விருந்து எல்லாம் நம்ம வூட்லதான்; இல்ல, உங்களுக்கு எங்க வூட்ல சாப்ட சங்கடம்னா அய்யரு க்ளப் இருக்கு; ராவைக்கு எங்க வூட்டுக்கு கூட்டிப் போலாம்ணா பொண்ணு புள்ள பெத்து அஞ்சு மாசம்தான் ஆயிருக்கு, அதனாலத்தான் இப்ப கூப்டல. உங்க விருப்பப்படி செய்ங்க’. அவர் அழைப்பை மறுத்து ஏதோ சொல்ல வாய் திறந்த ரமணனை சரவணன் முந்திக் கொண்டான். ’இங்கயே படுத்துக்கறோம்; காலைல உங்க வீட்டு சாப்பாடுதான்,’ என்றான். ’என்னடா,நீயா இப்படிச் சொல்ற’ என்ற ரமணனுக்குத் தெரியுமாகாயங்கள் தெய்வங்களாகக் கூடுமென்று.ஈரம் வற்றிக் காய்ந்து போனதென்றாலும் தடங்கள் இல்லாமலா போய்விடுகின்றன?

‘இங்கே எல்லாமே மூன்று,’ என்றார் கோயில் அர்ச்சகர்; ‘அம்பாள், ஸ்வாமி, ஆகமம் மட்டுமில்ல, தீர்த்தம் கூட மூணுடாப்பா’. ரமணன் ஆவலோடு அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்க இவன் மூன்று என்பதிலியே நின்றுவிட்டான். எந்த மூன்று? இவன், பூமிஜா, பால் கொடுத்துக்கொண்டே இறந்து போய்விட்ட அம்மா!

இப்படி திறந்த வெளியில் இதுவரை படுத்திருக்கிறோமா என சரவணன் நினைத்துப் பார்த்தான்; ரமணனால் எப்படி எல்லாவற்றையும் இயல்பாக ஏற்கமுடிகிறது? முன்னர் அவர்கள் அலுவலகத்தில் பத்து பேர்தான். எல்லோருமே ஆண்கள்; அவர்களின் முக்கிய வேலையென்பதே ‘க்ரியேடிவ்’ஆக இருப்பதுதான். அவர்கள் எந்தப் பொருளைக் கொண்டும் எதையும் வடிவமைக்கலாம்; பின்னர் அதை 3-டி ப்ரின்டரில் அச்சிட்டு நிறுவிவிடுவார்கள். கம்பெனிக்கு பல க்ளையன்ட்ஸ்.

அந்த சேவல் பண்ணைக்கு வந்த முதல் பெண் பூமிஜா; ’பெயரே வித்தியாசமாக இருக்கிறது.ஆளும் அப்படி இருந்தா நாம க்ரியேடிவ் கம்பனின்னு சொல்லிக்கலாம்’என்று மூர்த்தி சொன்னபோது சரவணனுக்கு எரிச்சலாக இருந்தது.அவன் ஊரெல்லாம் தேடிச் சேர்ந்த வேலை இது; பெண்களை வேலையிடத்தில் சந்திக்கவேண்டாம் என்பதே அவனுக்கு நிறைவாக இருந்தது.மூர்த்தி கொண்டாடுகிறான், தான் பயப்படுகிறோம், ரமணா என்ன நினைக்கிறான்? கேட்டபோது சிரித்தான்; அழுத்திக் கேட்டபோது எனக்கு ஜினோஃபோபியா இல்லை என்று சொல்லிச் சிரித்தான். ஒரு கணம் தன் அந்தரங்கத்தை அவன் பார்த்துவிட்டதாக சரவணன் அதிர்ந்தான். ரமணன் தனக்கு ‘எடிபஸ்’ என சந்தேகிக்கிறானோ என நினைத்தான், இது அதுவல்ல, வேறு.ஆனால், அதுவாக மாற வழியில்லாத வேறெதுவான ஒன்றோ?

பூமிஜா பத்து ஆண்களுடனும் இயல்பாகப் பழகினாள்.தான் தனியாக இங்கே வேலை செய்கிறோம் என்ற பதட்டம் அவளிடம் தென்படவில்லை. போலியாக நாணவுமில்லை, மேலே விழுந்து பழகவும் இல்லை. அவள் வயதைவிட மூப்பானவளாகத் தெரிந்தாள். அந்தத் தோற்றம் அவளுக்கு ஒரு ஆளுமையைத் தந்ததாக சரவணன் நினைத்தான். மூர்த்திக்குத்தான் அவளைப் பிடிக்கவில்லை, ஆனாலும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு அவளைப் பற்றி அறிய முயன்று தோற்றுப் போனான். சரவணன் அவள் வேலைக்குச் சேர்ந்த முதல் மூன்று மாதங்கள் அவளை நேராகப் பார்க்கவில்லை, பேசவும் இல்லை. ஆனால்,இவளின் ஆளுமை ஒரு பெரும் குடையாக தன்னைக் கவிந்து கொண்டு கனிவு கொள்ளக் கூடாதா என ஏங்கினான்.

அன்று ஒரு பெரிய ஒப்பந்தம் இவர்கள் கம்பெனிக்குக் கிடைத்தது. ரமணன், பூமிஜா, சரவணன் மூவரும் அந்த ப்ராடக்ட்டிற்கான விளம்பரத்தில் புதிதாக நுட்பமாக, யாருமே இதுவரை சிந்தித்திராத கோணத்தில், பார்வையாளர்களை வியக்க வைக்க வேண்டும் என்பது கம்பெனியின் உத்தரவு. காலையில் தொடங்கிய உரையாடல்கள், வரைபடங்கள், ஸ்லோகன்கள் மாலை எட்டு மணி வரை நீடித்தும் ஒன்றும் சிறப்பாக அமையவில்லை. ’சாப்டப் போலாமா?டயர்டா இருக்கு ரமணன்’ என்றாள் பூமிஜா.

“ஷ்யூர், வாடா நீயும்”

‘இல்லடா, நீங்க போய்ட்டுவாங்க’

“ரமணா, நான் மனுஷங்கள சாப்ட்ற வழக்கமில்ல, தைரியமா வரச் சொல்லுங்க”

அப்படித்தான் தொடங்கினான், அவள் பார்க்காதபோது அவள் முகத்தைப் பார்த்தான், நீண்ட விரல்களுள்ள கால்களைப் பார்த்தான், கிட்டத்தட்ட வேண்டுதல்கள் இல்லை யாசித்தல் கொண்ட பார்வைகள்; அவன் தவித்து மறுகினான். மூன்று மாதக் குழந்தைக்கு அந்த நினைவிருக்குமா.. நெஞ்சு வலியில் அம்மா வலக்கையைஊன்றிகீழே சாய்ந்து உயிர் விட்ட நிலையிலும் அவன் பற்றிக் கொண்டிருந்த அவள் மார்பு. அது பறிபோன பின் அதனை நினைத்து நினைத்து அழுதது, இரண்டு வயதாகையில் அவர்கள் வீட்டில் வேலை செய்த சிகப்பி மாரில் தொற்றிய குழந்தையுடன் உட்கார்ந்து அரிசி புடைக்கையில் தானும் அவள் மடி ஏறி மற்றொரு மாரைப் பற்றியது, அத்தை தன்னை பலவந்தமாகப் பிடித்து இழுத்தது, கண்களில் நீரும், திகைப்புமாக சிகப்பி நின்றது, மறுநாளிலிருந்து அவள் வேலைக்கு வராதது?

எப்போது தூங்கினான் என்றே அவனுக்குத் தெரியவில்லை. ’டேய்,சரூ, ஏந்துருடா’ ரமணன் குளித்து தயாராகி இருப்பதைப் பார்த்ததும் இவனுக்கு வெட்கமாகக்கூட இருந்தது. இரவில் வெள்ளியாபரணமெனத் தெரிந்த மைதானம் காலையில் அந்த சுவடற்று இருந்தது. ரமணன் இரண்டையும் உண்மை என்பான்; இருக்கக்கூடும்.

இட்லியும், பொங்கலும், சட்னியும், டீயும் காலை விருந்து. மரச் சட்டத்திலிருந்து தொங்கிய தூளியில் கருவறைக்குள் துயில்வதைப் போல் ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலே சிறு சிணுங்கலாக ஆரம்பித்த குரல் ஓங்கியது. சமையல்பகுதியில் தன் அம்மாவிற்கு உதவிக் கொண்டிருந்த அவள், முன்னறைக்கு வந்து குழந்தையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டே உள்ளே விரைந்தாள்..

“என்னடா உன் ப்ளேன்? இந்த மைதானத்ல ஓடி விளயாடப் போறமா?’’

‘மணல் சிற்பம் செய்யப் போறோம்டா’

“அந்த க்ளயன்ட்டுக்காகவா? கான்செப்ட் என்ன?”

‘அவங்க பொருள்’மா தூத்’இல்லியா?’

“அதுக்கும் மணல் சிற்பத்துக்கும் என்னடா கனெக்க்ஷன்?’’

‘இருக்குடா. ஒரு அம்மா, மணல் அம்மா, தன் குழந்தய அதுவும் மணல் தான், மடி மேல போட்டுண்டு பால் குடுக்கப் போறா’

“சரி”

‘அப்போ, நிஜக் குழந்த அவ மேல தாவறது’

“இன்ட்ரஸ்டிங்க்”

‘அவ கை நீண்டு ’மாதூத்’தை நிஜக் குழந்த கிட்ட கொடுக்கறது’

“மார்வலஸ், ஐ சே; அம்மாவுக்கு மாத்து இதுதான்னு ப்ராடெக்ட் நிக்குது’’

‘இதை பூமிஜாவோட ரண்டு நா முன்னால டிஸ்கஸ் பண்ணேன். வழக்கம் போல நீ ஆஃபீஸுக்கு வல்லடா; அதுதான் அவகிட்ட பேசினேன், டெட்லைன் வேற பயமுறுத்துதே’

“டோன்ட் பி அபாலொஜிஸ்டிக். அவளும் இந்த ப்ராஜெக்ட்ல இருக்கா, மைன்ட் யு; அவ என்னடா சொன்னா, அவளும் வந்திருக்கலாமில்ல”

‘என்னயே கண் கொட்டாம பாத்தாடா, பின்ன கிட்ட வந்து முதுகுல தட்டிக் கொடுத்தா; அப்றம் நகந்து போனா;எதுத்தாப்ல நின்னுண்டு இத மணல் சிற்பமா செய்யணும். வெள்ளையும், பழுப்பும் கலந்த மண், குழந்த நிஜமா இருந்தா நல்லது, இல்லேன்னா க்ராஃபிக்ஸ் பன்ணுவோம்னா. நீங்களும் வாங்கன்னு சொன்னேன்; அப்பப்ப படம் அனுப்பு, நான் இங்க பேக்ரவுன்ட் செய்யறேன்னுட்டா’

“சரி, நாம ஆரம்பிப்போம்”

இவன் வரைகோடுகள் அமைத்து வர வர ரமணன் இன்றைய இளம் தாயை வரைந்து வந்தான்; சரிதான், மரபார்ந்த தாயின் வடிவம் இதற்கு வேண்டாம், தாய்மை தெரிந்தால் போதும். கைகளே தொட்டிலென அந்தச் சிற்பம் குழந்தையைத் தாங்கியபோது கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். நிஜக் குழந்தைக்கு என்ன செய்வது என்று நினைத்து ‘சரி, அனிமேஷனில் செய்து கொள்ளலாம்’ என்று தீர்மானிக்கையில் தன் பேத்தியை அந்தக் காவலாளி கொடுத்தார். நிலவின் வெண்தடம் இப்போது தெரிய அவன் புன்னகைத்து படங்கள் எடுத்தான்.

ஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்

கடலூர் சீனு

கப்பலில் பணிபுரியும் நண்பர் அழைத்திருந்தார். புவியில் நான் நிற்கும் நிலப்பரப்பின் நேர் பின்பக்கம், எங்கோ கடல்பகுதியில் மிதந்து கொண்டிருந்தார். இயல்பாக அ. முத்துலிங்கம் கட்டுரைத் தொகுதியின் தலைப்பை சொன்னேன். “அங்கே இப்போ என்ன நேரம்?” எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட எட்டு மணிநேர வித்தியாசம். அவருக்கு தற்போதுதான் விடிந்திருந்தது. எனக்கு மதியத்தை கடந்திருந்தது. வியப்பை சொன்னேன். நண்பர் கொட்டாவி விட்டபடி, அதுக்கு என்ன இப்போ, என்றார். இந்த நிமிடத்தில் நின்று என்னைக் கடந்து போய்விட்ட எட்டாவது மணி நேரத்தை ஊடுருவி நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த நிமிடத்தில் நின்று அவருக்கு இனிமேல்தான் வரப்போகிற எட்டாவது மணி நேரத்தை ஊடுருவி அவர் பேசி க்கொண்டிருக்கிறார். அவர், அதுக்கு என்னா இப்போ, என்று கடந்த விஷயம், எனக்கு என் குரலை மட்டும், மொபைல் என்ற காலப்பயண எந்திரத்தில் ஏற்றி அனுப்பி வைத்ததைப் போல பரவசமாக இருந்தது.

பகுத்து அடுக்கும் அனைத்து ஆய்வுகளுக்கும் அப்பால் காலம், லஸ்காக்ஸ் குகை ஓவியங்கள் போல ஒன்றன் மேல் ஒன்றெனப் படிந்திருப்பதாக அன்று மயக்கமெழுந்தது. அந்த குகை ஓவியங்கள் பதினையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலம் வரை, ஒன்றன் மீது ஒன்றென, அடுத்தடுத்த தலைமுறை மூதாதை மனிதர்களால் வரையப்பட்டவை. பொதுப் புழக்கத்துக்கு அல்லாத தனிமையான வழிபாட்டுத் தலம் என காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் குகை. இதே போல உலகின் வேறு பல குகை ஓவியங்களில் ஊகித்து அறிய சிரமம் அளிக்கும் ஓவியங்கள் பல அந்த ஓவியன் தனது கனவில் கண்டடைந்ததாக இருக்கும். அந்தக்கால மனிதனுக்கு கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையே ஆன வேறுபாட்டுக் கோடு அவ்வளவு துல்லியமான ஒன்றல்ல என்கிறது குகை ஓவியங்கள் மீதான ஆய்வு ஒன்று.

காலம், பருண்ம உலகு, நனவு, கனவு, இவை ஒவ்வொன்றிலும் அதன் அலகுகளுக்கு இடையே, துல்லியமாக வேறுபடுத்தும் கோடு ஒன்றினை அறிவியலின் அனைத்து புலங்களும் வளர்த்தெடுக்க முயன்று, நரம்பியலும் குவாண்டம் பிஸிக்சும் கொண்டு அப்படி ஒரு துல்லியக் கோடு சாத்தியம்தானா எனும் நிலைக்கு வந்து நிற்க, கலைவரலாற்றில் பின்நவீனத்துவ அழகியல் வழியே இதே இடத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழ்ப் புனைவுகளில் நவீனத்துவத்துக்குப் பிறகான இந்த பார்வையை, அழகியலை, கொண்டு கலாபூர்வமான உயரத்தை அடைந்த புனைவுகளில் யுவன் சந்திரசேகர் புனைவுகளுக்கு- அதிலிருக்கும் ”கதைசொல்லி” தன்மைக்காவும் அதில் துலங்கி வரும் ஆத்மீக நோக்குக்காவும்- தனி இடம் உண்டு.

யுவன் சந்திரசேகரின் நாவல், ‘ஊர் சுற்றி’. இதிலும் யுவனின் தனித்துவமான, கதைசொல்லி பாணியும் ஆத்மீக நோக்கும், வேறுபட்ட கதைக் களங்கள், காலங்கள், கதைகள், கூறுமுறைகள், வழியே புதிய பரிமாணம் ஒன்றினை நோக்கி பயணிக்கின்றன. திரைத்துறையில் பணிபுரியும் கமலக்கண்ணன். பத்து வருடங்களுக்கு முன்பு,படப்பிடிப்புக்காக சென்ற கிராமத்தில் அவன் சந்தித்த சீதாபதிக் கிழவர் சொன்ன கதைகளை தனது கருவியில் பதிந்து வைத்திருக்கிறான். குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கதைகளை தொகுத்து நூலாக மாற்ற எண்ணுகிறான். சீதாபதிக் கிழவரின் மீதான நினைவுகளாகவும், அவர் ”சொன்ன ” வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள், கேட்டுச் சொன்ன கதைகள், இவற்றின் ”எழுத்து ”வடிவமாகவும், மந்திரவாதி இளவரசி கதைகள், நாட்டுப்புறக் கதைகள் போல பல்வேறு வடிவ கதைகளின் தொகையாகவும் அ-நேர்க்கோட்டு கூறுமுறையில் வடிவமற்ற வடிவம் கொள்ளும் நாவல்.

தாய் தந்தையரின் அகால மரணத்துக்குப்பின் அந்த கிராமத்தில் இருக்க இயலாது [1936-ல் என துல்லியமான கணக்குடன் துவங்குகிறது நாவல்] இலக்கின்றி தனது பதினாறாவது வயதில் தேசாந்திரியாக வெளியேறுகிறான் சீதாபதி. எண்பதுகளைக் கடந்த வயதில் தனது இறுதிக்காலத்தை தான் பிறந்த கிராமத்திலேயே கழிக்க எண்ணி ஊர் திரும்புகிறார் சீதாபதிக் கிழவர். அந்த கிராமத்துக்கு படப்பிடிப்பு காரணமாக வந்து சேரும் கமலக்கண்ணன், தனது இயக்குநருக்காக ”கதை பிடிக்கும் ” உந்துதலில் நிறைய கதைகளை வைத்திருக்கும் சீதாபதிக் கிழவரை சந்தித்து நட்பு கொள்கிறான். சீதாபதி கதைகள் சொல்கிறார். தனது வாழ்க்கைக் கதை, பயணக் கதை, ஆண்கள் கதைகள், பெண்கள் கதைகள், குழந்தைகள் கதைகள், உறவுகளின் கதைகள், பிரிவுகளின் கதைகள், நட்பின், துரோகத்தின் கதைகள், பசியின், காமத்தின் கதைகள், வாழ்க்கைகளின், மரணத்தின் கதைகள், அனைத்தாலும் ஆட்டுவிக்கப்படும் மனிதர்கள் கதைகள், கதைகளாக எஞ்சி நிற்கும் வாழ்க்கைகளின் கதைகள், வாழ்க்கையாக விரிக்கத்தக்க கதைகளாக எஞ்சும் கதைகள். கிராமத்தில், இந்தியாவின் வெவ்வேறு நிலங்களில், வைத்தியர்களுடன், சாமியார்களுடன், வேலை தரும் முதலாளிகளுடன், லம்பாடிகளுடன், பொம்மலாட்ட நாடோடிகளுடன், மும்பை டப்பாவாலா தொழிலாளிகளுடன், அணைக்கட்டு தொழிலார்களுடன், என விதவிதமான வேலைகளுடன், பசி, காமம், தனிமை, பயம், மரணம் என அடிப்படை உணர்சிகளுடன் அலைக்கழிந்து, ஊர் சுற்றி முடித்து தனது அந்திமகாலத்தில் சொந்த கிராமம் வந்து சேரும் சீதாபதி காணும் வாழ்க்கைகள் எல்லாம் அவருக்குள் கதையாக மாறுகின்றன. ஒரு எல்லைக்கு மேல் காலம் கனவு போதமகூட அழிந்து அவருக்கு நிகழ்ந்தது எல்லாமே கதையாகிறது. விதவிதமான மானுடத் தருணங்களை உள்ளடக்கிய கதைகளாகிறது.

சீதாபதியின் பெண் நாட்டக் கதைகள் குறித்து கமலக்கண்ணன் விமர்சிக்கும்போது, எல்லாம் எம்ஜியார் படம் மாதிரி இருக்கு, எல்லா பெண்ணும் சீதாபதியை தானா தேடி வராங்க, அவர் யாரையும் தேடிப் போறதில்லை, என்கிறான். கதைகள் வழியே பெண்கள் சார்ந்து துலங்கும் சீதாபதி ஆளுமை மீது இது கமலக்கண்ணனின் பார்வை. சீதாபதி தனது தந்தை குறித்த கதைகளைச் சொல்கிறார். மர்மமான தினங்களுக்குப் பின் அவர் தந்தை காமாந்தகன் ஆகிறார். தராதரம் இன்றி பெண் பித்தாக அலைகிறார். அவரது கொலைக்குப் பிறகே சீதாபதி கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். அப்பா கொலை செய்யப்பட விதத்தை அவன் காணும் வயது முக்கியம். பதினாறு வயது. பாலுறுப்பு துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அப்பாவின் பிணம். இங்கே துவங்கும் சீதாபதியின் ஓட்டம், அவராக பெண் விஷயத்தில் ‘அத்து மீறும் ‘ நிலை ஏன் நிகழவில்லை என்பதைச் சொல்லிவிடுகிறது. பீகாரில் அவரை எடுத்துக்கொள்ளும் பெண் துவங்கி, காட்டுக்குள் அவரை எடுத்துக்கொள்ளும் நிர்வாணப் பெண் வரை, அவர் ஒப்புக் கொடுப்பவராக மட்டுமே இருக்கிறார். அணைக்கட்டு தொழிலாளியாக இருக்கும்போது வலிய வரும் பெண்ணையும் அவர் புறக்கணிக்கும் பின்புலமும் இதுதான். வீடு புகுந்து பெண்ணை சூறையாடிய ஜமீன் மகன், ஊராரால் அடித்தே கொல்லப்படுவதைப் பார்த்தவர், குறி இழந்த தகப்பனின் நிர்வாண உடலைக் கண்டவர், இதைத் தவிர வேறு என்ன செய்வார் ?

சீதாபதி, அவரது அப்பா துவங்கி இறுதிக்கால வெங்கிட்டு கிழவர் எனும் நண்பர் வரை விதவிதமான ஆண்கள், விதவிதமான குணாதிசயங்கள். ஒழுக்கம் தவறும் ஆண்கள், துரோகம் செய்யும் ஆண்கள், பெண் பித்தேறித் திரியும் ஆண்கள், முதுமையிலும் வாத்சல்யத்துடன் காதல் குறையாமல் குடும்பம் நடத்தும் ஆண்கள், ஆண்மையற்ற ஆண்கள், புணர்ந்து புணர்ந்தே உயிரின் இறுதித் துடிப்பில் நின்று உயிர் விடக் காத்திருக்கும் ஆண்கள், தனது மாட்டை தரைமட்ட விலைக்கு கேட்டவனையும், அத்தகையதொரு அவமதிப்புக்கு தன்னை ஆளாக்கிய தனது காளையையும் ஒன்றாக வெட்டித் தள்ளிவிட்டு போலீசில் சரணடையும் ஆண், மனைவி ஒழுக்கமற்றவள் என அறிந்தும் அவள் மேல் சற்றும் பிரியம் குறையாத ஆண், நித்ய இளமையில் பெண்ணை உறையவைத்து தினம் இரவு அவளைச் சுகிக்கும் ஆண், என சீதாபதி சொல்லும் கதைகள் வழியே விதவிதமான ஆண்கள் மற்றும் ஆண்மை எனும் கருத்துருவை, சொல்லப்பட்ட கதைகள் வழியே, எல்லாம் கதைதானே எனும் மிதமான பாவனை வழியே, அதன் தீவிரத்தை அணுகிப் பார்க்கிறது நாவல்.

கணவனின் நிலைபிறழ்வால் மனம் கசந்து தற்கொலை செய்து கொள்ளும் சீதாபதியின் அம்மா துவங்கி, கணவனை பழிவாங்க தாசியாக மாறும் மிருதுளா தொடர்ந்து, கொள்ளைக்காரனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு,கொள்ளைக்காரனை தருமவானாகவும் நல்ல இல்லறத்தானாகவும் மாற்றி நிறைவாழ்வு வாழும் வசுந்தரா வரை கதைகளுக்குள் விதவிதமான பெண் நிலைகள் துலங்கி வருகிறது. சீதாபதியை விரும்பும் நாடோடிப் பெண் லத்திகா, காதலனால் ஏமாற்றம் அடைந்து குடும்பத்தை உதறி தேசாந்திரி ஆகும் பெண், இறுதிக்காலத்தில் சீதாபதிக்கு தோழியாக அமையும் பால்ய கால நட்புக் கிழவி, தாசி இல்லம் நடத்தும் பெண், அந்த இல்லத்தில் இருக்கும், அந்த தொழிலுக்கு வந்து சேர்ந்த பெண்கள், சர்க்கஸ் கம்பனி பெண், மந்திரவாதியால் சிறை எடுக்கப்பட்ட பெண், சிலை என மாற்றப்பட்ட பெண், காமத்தைச் சுகிக்க கிளியாக மாற்றப்பட்ட பெண், என பெண்களால் அவர்களின் அலைக்கழிப்புகளால் கொட்டி நிறைக்கப்பட்ட கதைகள். குழந்தைகள். கொள்ளை நோய் கொண்டு சாகும் குழந்தைகள், பிரசவத்தில் சாகும் குழந்தை, பஞ்சத்தில் உணவுக்கு அடித்துக் கொள்ளும் குழந்தைகள், அன்னை மடி கிடந்த முலை அருந்தும் அமைதியில் லயித்த குழந்தைகள், முயல், பாம்பு,கிளி என சக ஜீவன்கள் அடங்கிய கதைகளின் உலகம். கதைகளாக சிதறுண்ட உலகம்.

‘என்னை கொசு கடிச்சா உனக்கு வலிக்குமா? அப்டித்தான் நான் சொல்லும் கதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சில கதைகள் கொஞ்சம் தொண்டை கரகரக்க வெச்சி கண்ணை கலங்க வைக்கும். அது அவ்ளோதான், அதுக்கு மேல அதுல ஒண்ணும் இல்லை”. தான் சொல்லும் கதைகளை உம் கொட்டி கேட்கச் சொல்லும் சீதாபதி, தனது கதைகளை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கமலக்கண்ணனுக்கு சொல்லி விடுகிறார். அப்படி விவேகத்துடன் கேட்டாலும் கூட, அதைக் கடந்து உணர்வெழுச்சி கொள்ள வைக்கும் பல சித்திரங்கள் நாவலுக்குள் உண்டு.குறிப்பாக இரண்டு சித்திரங்கள், தற்கொலை மனநிலையில் இருந்த தனக்கு வாழ்வை நோக்கி திரும்பும் சாத்தியங்களை திறந்து காட்டிய தாசியை நடுச்சாலையில் மனைவியுடன் காலில் விழுந்து ஆசி வாங்கும் இளைஞனின் சித்திரம். இரண்டாவது பார் விளையாட்டில், பற்ற வந்த கரங்களை விடுத்து, அப்படியே பறந்து வானில் ஏறி மறைந்துவிடும் சர்க்கஸ் பெண் அம்மணியின் சித்திரம்.

காமம், தனிமை, வாழ்க்கை, ஆத்மீகம் என இலக்கியம் பரிசீலிக்கும் அடிப்படைக் கேள்விகளை, அப்படி மையம் கொண்ட கேள்வி என ஒன்றில்லை என்ற பாவனையுடன் அணுகி பரிசீலித்துப் பார்க்க முனைகிறது நாவல். பெண் கொண்ட காமம் ஏன் இவ்வாறு இருக்கிறது என்றொரு வினா இந்த நாவலின் கதைகள் வழியே தோன்றி வந்தால் அதற்கான பதிலை, காட்டுக்குள் வாழும் அந்த நிர்வாணக் குடும்பத்தின் கதைக்குள் வைத்து வினாவை பரிசீலித்துப் பார்க்கிறது நாவல். இப்படி இந்த நாவலின் கதைகளுக்குள் மையமற்ற ஒன்று போலும் சித்தரிக்கப்படும் ஒவ்வொன்றும் அதற்கான வினாக்களை இந்த கதைச் சிதறல்களில் எங்கெங்கோ பொதிந்து வைத்திருக்கிறது. ஒட்டுமொத்த வாழ்வு சார்ந்த வினாக்களையும் அவற்றின் மீதான பரிசீலனைகளையும் கதைகளை கலைத்துப் போட்டு விளையாடுவதன் வழியே, முதுமையின் கண் கொண்டு இந்த வாழ்வு சார்ந்து துலங்கி வரும் ஒட்டுமொத்தமும் விலகலும் கனிவும் கொண்ட பார்வையை, வாசகனுக்குக் கையளிக்க முனைகிறது இந்த நாவல்.

முற்றிய போக்குவரத்து நெரிசலில் எது குறித்தும் கவலை இன்றி, தனது மழலைக்கு முலையளித்தபடி லயித்து கிடக்கிறாள் ஒரு தாய். அக்காட்சியில் உறைந்து போகிறார் சீதாபதி. மும்பையில் அவரது வாழ்வு அந்த நொடி முடிவுக்கு வந்து தனது தேசாந்திரத்தை தொடர்கிறார். சீதாபதி போலவே அன்னையின் மரணத்தால் மனமுடைந்து, ஆத்மீக அலைக்கழிப்பில் இருந்த சாமியாரைச் சேருகிறார் சீதாபதி. அந்த சாமியார் அவரது அலைக்கழிப்பில் இருந்து இந்த சித்திரம் வழியேதான் மீளுகிறார். சீதாபதிக்கு காட்சியாக அந்த சித்திரம் எதை அளித்ததோ, அது அந்த சாமியாருக்கு தரிசனமாக மாறுகிறது, பூவில் அமரும் வண்டு துவங்கி, அந்திச் சூரியன் வரை அவரைச் சூழ இருக்கும் அனைத்தும் அன்னை மடியில் கிடந்து, அமுதருந்துவதில் லயித்து கிடக்கும் குழந்தையாக, இந்தப் புவி மொத்தமும் அன்னை மடியாக அவருக்கு தரிசனம் அளிக்கிறது.

பதின்பருவத்தில் வீட்டை விட்டு ஓடிய சீதாபதி முதியவராக கிராமம் திரும்புகிறார். மந்திரவாதி கதையில் வரும் இளவரசி, மந்திரவாதியின் பிடி நீங்கியதும் அதுவரை அவள் கொண்ட இளமை நீங்கி தொண்டுக் கிழவியாக காட்சி தருகிறாள். சீதாபதியின் நிலைக்கும் இந்தக் கதைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? ஊரெல்லாம் சுற்றிவிட்டு வருகிறார் சீதாபதி. ஊர் விட்டு எங்கும் போகாதவராக இருக்கிறார் வெங்கிட்டு கிழவர். இந்த இளவரசி கதையை வெங்கிட்டுவாக இருந்து கேட்டால் எழுபது வருடம் கழித்து அவர் சீதாபதியை சந்திக்கும் தருணத்தின் அபத்தம் புரியும். இப்படி கலைந்து கிடக்கும் இந்தக் கதைகளை தொடுத்துக்கொள்ளும் புள்ளிகளும் இந்த நாவலின் கதைகளுக்குள் கலைந்தே கிடப்பதே, முன் பின்னாக கற்பனை ஓடி, இவற்றை தொகுத்து அடைவதே இந்த நாவல் தரும் முதன்மை வாசிப்பின்பம்.

நாவலுக்குள் ‘வக்கணையாக ‘ எழுந்து ஒலிக்கும் சீதாபதி கிழவரின் மதுரை பேச்சு வழக்கு இந்த நாவலின் வாசிப்பு சுவாரஸ்யத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அடுத்ததாக அவரது வர்ணனைகள். மெதுவாகப் போகும் பேசின்ஜர் புகைவண்டியின் வேகத்தை இப்படி விமர்சிக்கிறார்- ”தான் போய்ச்சேரப் போற ஊர் இருக்குற உலகம் பிறக்கரத்துக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கு அப்புறம் என்ன” எனும் வேகத்தில் போகிறது புகைவண்டி. அடுத்ததாக மழையில் கரைந்து மறையும் உடல், சதுரமான யானை, தலையில் சுடருடன் எண்ணைக் கடலுக்குள் இறங்கும் மனிதன் என புத்தம் புதிதான,கனவுகளை கிளர்த்தும் படிமங்கள். இவற்றைப் போல பல நாவலின் பலம் எனில், நாவலின் பலவீனம் [அதைப் பூசி மெழுகும் அத்தனை கூறுகளும் நாவலுக்குள் வெற்றிகரமாக தொழில்பட்ட போதிலும்] இதில் மிக குறைவாக, அல்லது இல்லவே இல்லாத நிலக் காட்சிகள். சீதாபதியை தவிர்த்து கமலக்கண்ணன் வாசகருக்கு சொல்லும் கிராமச் சித்தரிப்பு கூட குறைவாகவே இருக்கிறது. குன்று, அதன் மேல் கோவில், ஊர் முடிவில் ஜமீன் பங்களா, கிராமச் சாலை, பிரதான சாலையுடன் நிகழ்த்தும் சந்திப்பு இவை தாண்டி கிராமம் எனும் சித்தரிப்பில் மேலதிகமாக எதுவுமே இல்லை. வருடத்தில் ஆறு மாதமும் தண்ணி ஓடும் அந்த மதுரை, சோழவந்தான் பக்கத்து தெக்கத்திகிராம வாய்க்காவுக்கு அதன் தண்ணிக்கு மூலம் எது?- வாசகனுக்கு தேவை இல்லை எனக் கருதி கமலக்கண்ணன் விட்டுவிட்டான் என வைத்துக்கொண்டாலும். கிழவர் பாரதம் முழுதும் சுற்றியவர் அவர் சொல்லும் கதைகளில்கூட நிலம் சார்ந்த தனித்தன்மை கொண்ட காட்சிகள் என எதுவும் இல்லை.

நிலக்காட்சி சார்ந்த சித்தரிப்பு இன்மையின் காரணமாக நிகழும் பிரதான பலவீனம் இந்த நாவலின் ஆத்மீக நோக்கை, அது வெளிப்படும் விதத்தை பலவீனப்படுத்திவிடுகிறது என்பதே. இந்த நாவலில் சித்திரிக்கப்படும் ஆத்மீக நிலை அல்லது வியக்தியை ஒரு புரிதலுக்காக பௌத்தத்தின் [அதாவது மதத்துடன் தொடர்பற்ற] சென் நிலை என வகுக்கலாம். நிறுவனமயப்பட்ட ஒன்றின் பிரதிநிதியாக இங்கே சைவ துரையை துரத்தும் நாகா பாபாவும், பௌத்தனும் வருகிறார்கள். நேரெதிராக சீதாபதி சத்திரத்தில் சந்திக்கும் பைராகி இந்த நிறுவனத்துக்கு வெளியில் உள்ளவர். அதாவது மெய்மையை அறிந்தவர். அவர் பசி காமம் என அடிப்படை விசைகளான இவை மட்டுமே கொண்டு, அதற்கு மேலான அனைத்தும் கற்பிதமே என்று இந்த உடலை தூய விலங்காக பார்க்கிறார். இதற்கு மேலான அனைத்தும் கற்பிதமே என்பதற்கு, ஆளுமை ஆளுமையாக மாறி அவரது குரு விளையாடிப் பார்த்த பாவனை விளையாட்டை குறிப்பிடுகிறார்.[சென் குருமார்களின் கதை போல ] இரவில் ஒளிர்கிறார். சென்றபிறகு அவர் அமர்ந்திருந்த திண்ணையில் வாழைப்பூ அளவு பெரிய மல்லிகைப்பூ இருக்கிறது. அந்த திண்ணையில் அமர்ந்து சீதாபதி இயற்கையுடன் கரைகிறான். ஏகாந்தம் என்பதை உணர்ந்து அந்த நொடி முதல் தனிமைத் துயரை இழக்கிறான்.

அகம் சார்ந்த நிலைபேறு எப்போதும் புறம் சார்ந்த ஒன்றால் ஒரு நாணயத்தின் இரு பகுதி போல சமன் செய்யப்பட்டிருக்கும். சாமியார், பால் கொடுக்கும் அம்மாவில் இருந்து அகவயமாக அடைந்த ஒன்று, புறத்தில் அவர் காணும் யாவும் அன்னை தரிசனம் என மாறுவது, என அதன் நிலை இந்த நாவலுக்குள்ளேயே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சீதாபதி அகம் கொள்ளும் படிமங்கள் [சதுர யானை, சுடர் எரியும் தலையுடன் எண்ணைக் கடலில் இறங்குவது,மழையில் உடலே கரைந்து வெறும் வியக்தியாக எஞ்சுவது] அந்தரத்தில் இருந்து அவருக்குள் விழுந்து கவிந்தது போலவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறாகவே எஞ்சுகிறது. அக உணர்வாக இயற்கையில் கரைந்து அழியும் சீதாபதி, நாவலுக்குள் எங்குமே புறவயமாக இயற்கையில் தோய்ந்து லயிக்கும் சித்திரங்களே நாவலுக்குள் இல்லை. காரணமாக அந்த வியக்தி நிலை ஒரு நிலைமாற்றம் என வாசிப்பில் உள்வாங்கப்படாமல் ஒரு கவித்துவ அனுபவமாகவே உள்வாங்கப்படுகிறது. சீதாபதி கொண்ட இந்த நிலை மாற்றம் ”அந்தரத்தில்” நிகழ்வதால் இறுதியாக அவர் கமலக்கண்ணன் வசம் இந்த வாழ்வு குறித்தும், வாழ்ந்துவிட்டுப் போகும் விதம் குறித்தும் சொல்லும்போது, பல விஷயங்கள் கண்டு, கடந்து, வாழ்ந்து முடித்த கிழவன் சொல்லும் விவேக ஞானம் கொண்ட’ கூற்றாக’ ஒலிக்காமல், சீதாபதி சொல்லும் மற்றொரு அபிப்ராயம் போலவே நின்றுவிடுகிறது.

ஒருமுறை பழுதுநீக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த தேர் ஒன்றின் [சக்கரத்தின் அச்சு மையம் ஐந்து அடி உயரத்தில்], முன் பின் சக்கரங்களுக்கு இடையே உள்ள நான்கடி அகல இடைவெளியில் நின்றுதேரின் அடித்தட்டை அண்ணாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கணம் பெண் ஒருவளின் தொடைகளுக்கு இடையே சிறுத்த உருவம் கொண்டு நின்று, அவளது பிரும்மாண்டமான இடைக்கரவை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்றி, சிலிர்ப்போடும் வெட்கத்தோடும் பார்வை நகர்ந்த கணம், அடித்தட்டில் இடுக்கிலிருந்த, கண்மறைவாய் செதுக்கப்பட்டிருந்த அந்த மரச்சிற்பம் கண்ணில் பட்டது. வளைந்த வில்லாக தலைகீழாக நிற்கிறாள் பெண்.அவள் பின்னால் அந்த வில்லின் நாண் என நிற்கிறான் ஆண். கலவி. [விசித்திர கோணத்தில் நிகழும் அந்தக் கலவியை நிஜத்தில் முயன்றால், உச்சம் நிகழ்ந்ததும் பாடையை எண்கோண வடிவில் அமைக்கவேண்டிவரும்]. அந்தச் சிற்பத்தின் உன்மத்தத்தை சமன்வயப்ப்படுத்தும் ஒன்றாக மாற்றிக் கொண்டிருந்தது, தலைகீழாக வளைந்து நிற்கும் அந்தப் பெண் முன் தவழும் நிலையில் அமர்ந்து, அவளிடம் முலையமுதம் அருந்தும் அவளது மழலை.

பாரத நிலம் முழுதும் பரவி ஆட்கொண்ட சிற்பத் தொகைகளில் எங்கும் சேராத, பெரும்பாலும் கண்ணிலேயே படாத, உன்மத்தம் கிளர்த்தும், என்றோ கண்ட அந்தச் சிற்பத்தின்,அது கிளர்த்திய உணர்வு நிலைக்கு, முகம் அளித்தது இந்த ‘ஊர் சுற்றி’ நாவல். காட்டுக்குள் தனது மழலைக்கு முலையளித்தபடியே சீதாபதியுடன் கலவி கொள்ளும் பெண்ணுக்கு, அந்த நாவலில் வரும் பெரும்பாலான பெண்களைப் போலவே பெயர் இல்லை. லஸ்காக்ஸ் குகைக்குள் பதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்களில், ஒரே ஒரு மனித உருவம் உண்டு. அது பெண். வணங்கப்பட்டவளோ, அல்லது வதைக்கப்பட்டவளோ, அவள் பெயர் என்ன என்பது தெரியாது. அந்த குகைப்பெண்ணில் துவங்கி இந்த நாவலின் வனப் பெண் தொடர்ந்து, சீதாபதியின் அந்திமக்கால கிழத் தோழி வரை ஒரு கோடு இழுத்துவிட முடியும். அப்படித் தோன்ற வைப்பதே இந்த நாவலின் உத்தேசம். அந்தக் கோட்டை வாசக மனம் போட முயல்கையில், அதை எவ்வளவு தூரம் அழித்து விளையாட முடியுமோ அவ்வளவு தூரம் அழித்து விளையாடுகிறது இந்த நாவல். இதன் அழகு.

ஊர் சுற்றி -யுவன் சந்திரசேகர் -காலச்சுவடு பதிப்பகம்.

மழைமாலைப் பொழுது

மு. முத்துக்குமார்

பக்கவாட்டில், பளிச்…பளிச்… என தொடுவான மின்னல் விட்டு விட்டு கருமேகங்களைத் துளைத்து வெட்டிச்சீரான இடைவெளியில் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. ஆங்காங்கே இருந்த, பூசிய வெள்ளை வர்ணம் மங்கிய, நாற்கரச் சாலை திட்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த சிமெண்ட் வீடுகளைப் போர்த்தியிருந்தன கருமேகங்கள். மங்கிய அந்த வெள்ளை வர்ண வீடுகளையும் பளிச்சென காட்டின அக்கருமேகங்கள். எந்நேரத்திலும் தன் எடை தாளாமல் பிய்த்துக் கொள்ளும் நிலையிலிருந்த சூல்கொண்ட அம்மேகங்களின் தவிப்பை பயணித்துக் கொண்டிருந்த வண்டியின் கண்ணாடி வழியே உணர்ந்தவனாய், தோளில் சாய்ந்திருந்த மனைவியின் சற்று மேடிட்டிருந்த வயிற்றைத் தடவினேன்.

பாமரனையும் கவிஞனாக்கும் அந்த மழைமாலைப் பொழுது பயணத்தில் என் தோளில் சாய்ந்திருந்தாள் காவ்யா. ஒரு வாரத்திற்கு முன் நான் கல்யாணம் செய்து கொண்ட, என் இரு வருட சென்னை வாழ்க்கையை என்னுடன் பகிர்ந்து கொண்ட காவ்யாவை முதன் முதலில் சந்தித்ததும் இதுபோலொரு ஷிபுயாவின் மழைமாலைப் பொழுதில்தான்.

நெரிசல் மிகுந்த ஷிபுயாவின் பளிங்குத் தெருக்கள் வானுயர் கண்ணாடி கட்டிடங்களை சீராக வெட்டி இருபுறமும் பிரித்து குறுக்கும் நெடுக்குமாக வார இறுதியின் மக்கள் திரளை ஏந்தி நீண்டு கொண்டே சென்றது. அத்தனை பேரின் முகங்களும் ஏதோவொன்றை அடையப்போகிற எதிர்பார்ப்பில் அங்குமிங்கும் பரபரத்துக் கொண்டிருந்தன.

பெரும்பாலும் கேளிக்கை மற்றும் உணவு விடுதிகளே அங்குள்ள தெருக்களின் இருபுறமும் நிரம்பியிருந்தன. நான்கு வருட ஜப்பானிய வாழ்க்கையில் டோக்கியோவிலுள்ள ஷிபுயாவின் இத்தெருக்கள் மிகப் பரிச்சயமாகியிருந்தன. ஆரம்ப நாட்களிலிருந்த ஆச்சரியமும் பிரமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இப்போது முற்றிலுமாக இல்லாமலாகியிருந்தது. இதற்கு இங்குள்ள தெருக்களின் ஒருமுகத்தன்மையும் ஒழுங்கும் ஒரு காரணமாயிருக்கலாம். இங்கிருந்து 5 கி.மீ தூரத்திலிருக்கும் கவாஸகி நகரை அப்படியே பிரதியெடுத்துக் கொண்டிருக்கிறது இந்த ஷிபுயா. ஒவ்வொரு 500 மீட்டருக்கும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் சென்னை தெருக்களின் பன்முகத்தன்மை இப்போது மிக ஆச்சர்யமாக இருக்கிறது.

“ஹேய் கதிர்…” என்று என்னைக் கண்டு கொண்ட சுரேஷை நோக்கி கையசைத்தவாறே புன்னகையுடன் நெருங்கினேன். அந்த மழைநெரிசலில், கவிழ்ந்திருந்த கருமேகங்களை கூர்முனை கொண்ட தடித்த ஊசியால் ஏந்தியது போலிருந்த பெரிய குடையோடு அவன் நின்றிருந்த உணவு விடுதியை அடைவதற்குள் நிறைய பேரிடம் ‘சுமிமா-சென்’ (மன்னிப்பு) கோர வேண்டியிருந்தது. விடுதிக்குள் நுழைந்து கருமேகக் குடைகளை மடக்கி அதிலுள்ள நீர் வழிவதற்கு வசதியாக இருந்த இரும்பாலான கூடையில் வைத்துவிட்டு, மழை மேலாடைகளையும் அதற்கென பிரத்யேகமாக உள்ள தாங்கிகளில் விட்டு விட்டு எங்களுக்கென ஒதுக்கப்பட்ட மூவரமரும் மேசையில் அமர்ந்தோம்.

இன்னொரு இருக்கை சுரேஷின் மனைவி டகுச்சிக்காக காத்திருக்க, பணிவான புன்னகையோடு எங்களை நெருங்கிய கருப்புடையிலிருந்த சிப்பந்தியிடம், எங்களுக்கான பானங்களையும் உணவையும் வரவழைக்கச் சொல்லி காத்திருந்தோம். தன் கையிலிருந்த கையடக்க மின்னணுக் கருவி வழியாக அவற்றை சமையலறைக்குத் தெரிவித்துவிட்டு, தன் முழங்காலுக்குச்சற்று மேலிருந்து இடுப்புவரை நீண்டுபின்னோக்கி கட்டப்பட்டிருந்த வெள்ளைத் துணியின் பாக்கெட்டிற்குள் மிக இலாகவமாக அக்கருவியைச் செருகி மாறாத அப்பணிவான புன்னகையுடன் விலகினார் அச்சிப்பந்தி.

விடுதியின் தரைதளத்தில் அமர்ந்திருந்த எங்களுக்கு அங்குள்ள இரைச்சலும் கூச்சலும் அறையெங்கும் பரவி முதல்தள கூரையில் முட்டிச்சிதறி ஒருவித ஆற்றலைத் தந்தன. வாரநாட்கள் முழுவதும் ஆழ்ந்த தியானத்திலிருப்பது போன்ற நிலைக்கு முற்றிலும் மாறான ஒரு சூழல். தன்னை முழுவதும் திரட்டி எதையாவது விவாதித்துக் கொண்டேயிருந்தார்கள். அனைவரின் மேசைகளிலும் மகிழ்ச்சியும் மதுவும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இதையெப்படி நம்மூரில் கலாச்சார சீரழிவு என்கிறார்கள் என்ற வியப்பு இங்கு வந்த நாள்முதலே உண்டு.

“என்ன கதிர்… வழக்கம்போல சுற்றுப்புறத்தை கூர்ந்து நோக்கலா? “

“இல்ல… சென்னைக்கு திரும்ப போயிடலாமான்னு நினைக்கிறேன்…” என்றதும் சுரேஷ் சற்று திடுக்கிட்டு முன்னகர்வதற்கும், கண்ணாடி கோப்பைகளில் நுரைததும்ப எங்களுக்கான பீர் கொண்டு வரப்படுவதற்கும் சரியாக இருந்தது. கோப்பையை பற்றிக்கொண்டு “சியர்ஸ்…” என்றதற்கு “கம்பாய்…” என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு அதே திடுக்கிடலுடன் “ஏன் தீடீர்னு?“ என்றான்.

பேச எத்தனிப்பதற்குள் “ஹலோ கதிர்…” என்று கன்னக்குழி புன்னகையோடும், இடுங்கிய ஆர்வமான கண்களோடும் டகுச்சி எங்கள் மேஜையை நெருங்கினாள். நீண்ட தோள்பையை இலாகவமாகச் கழற்றி நாற்காலிக்கு மாற்றிவிட்டு அமர்ந்தாள். எனது பதில் புன்னகையை ஏற்றுக்கொண்டு, “மன்னிக்கனும்… வகுப்பு முடிய தாமதமாயிற்று,” என்றவாறு தனக்கான உணவுகளை வரவழைக்கச் சொல்லிவிட்டு “என்ன… ரொம்ப முக்கியமான விஷயம் பேசுறீங்க போல” என எங்களிருவரையும் நோக்கினாள்.

டகுச்சி ஒரு மொழி ஆராய்ச்சியாளர். இங்கு வேலைநிமித்தம் வரும் வெளிநாட்டவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்பிக்கும் ஆசிரியையும்கூட..தகுதியானவர்களிடமிருந்து முறையாக ஆங்கிலம் கற்றுக்கொண்டவள். சுரேஷூம் நானும் அவளிடம்தான் ஜப்பானிய மொழி கற்றுக் கொண்டோம். ஆனால் இதுவரை எனக்கு பேச வருவதில்லை. பேசும் தருணங்கள் வாய்க்கவில்லை, அல்லது வலிந்து வாய்க்கவிடவில்லை. இந்த விலக்கம் பொதுவாக எல்லா விஷயங்களிலும் உண்டு. இதுவே எந்த புதிய விஷயங்களோடும் ஒன்ற நீண்ட கால அவகாசத்தை கோரியது. செயலற்று சோம்பி்யிருப்பதைப் போலிருந்தது.

ஆனால் சுரேஷ் அப்படியல்ல. தான் வாழுமிடத்தோடு தன்னைக் கரைத்துக் கொள்ள தெரிந்தவன். இந்த நான்காண்டுகளில் ஒவ்வொரு வார இறுதியில் சந்திக்கும்போதும் ஏதாவது ஒரு ஆச்சரியத்தில் என்னை ஆழ்த்தி விடுபவன். ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் ‘தன்னம்பிக்கை மனிதர்கள் இறந்தவர்களுக்குச் சமம்’ என்ற வாக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய சித்தாந்தங்களுக்கும் தத்துவங்களுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தவன்.

அவன் அறையெங்கும் ஜெ.கியின் புத்தகங்கள் நிறைந்திருக்கும். எனக்கு எப்போதுமே அப்புத்தகங்கள் புரிந்ததில்லை. சுரேஷைப் பொறுத்தவரை அப்புத்தகங்கள் அவன் வாழ்விலிருந்த அச்சத்தின் கூறுகளை முழுமையாக கலைத்து அழித்தவை. ரோபாடிக் துறையில் அவன் எட்டிய உயரங்கள் பிரமிக்க வைப்பவை. ஆனால் தன்னுடைய அந்த கடந்த கால வெற்றிச் சுவடுகளை சுமந்தலைபவனல்ல. இதுவே அவனை ஒவ்வொரு நாளும் புதிய சுவடுகளைப் பதிக்க வைத்து தேங்காமல் முன்னகரச் செய்கிறது.

அறிமுகமான இரண்டாவது நாளே மிக இயல்பாக என்னோடு ஒட்டிக் கொண்டான். கடலைப்பருப்பை துவரம்பருப்பு என நினைத்துசாம்பார் செய்து கொண்டிருந்த எனக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், ஒருநாள் நான் செய்த அசல் துவரம்பருப்புச் சாம்பாரை டகுச்சிக்கும் பரிமாறச் செய்து “ஒய்சி…” சொல்ல வைத்தான். புரியாமல் முழித்த என்னிடம், “அருமையான ருசி…” என்றாள் சுத்தத் தமிழில். “என் சாம்பாரும் உன் தமிழும் அவனின் கைங்கர்யம்,” என்றேன்.

ரோபோடிக் புரோகிராமராக இருந்தவன், தீடீரென அவற்றைப் பேசவைப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கி வார்த்தைக் கட்டமைப்பு, அவற்றின் ஒலியமைப்பு மற்றும் இவையிரண்டும் சேர்ந்து உருவாக்கும் கருத்து அல்லது அர்த்தம் அல்லது பொருள் என டகுச்சியின் மொழியாராய்ச்சியில் மட்டுமல்லாமல் அவளுள்ளும் புகுந்து கொண்டான். கடந்த மூன்று வருடங்களாக அவளுடன் தன் அறையை பகிர்ந்து கொண்டவன் இரு வாரங்களுக்கு முன்தான் அவளைச் சென்னை அழைத்துச் சென்று தன் பெற்றோர் முன் கல்யாணம் செய்து கொண்டான். தம்பதிகளாக இப்போது தான் இருவரையும் முதன்முதலாகச் சந்திக்கிறேன்.

உணவு விடுதியின் அந்த இரைச்சல் மீண்டும் என் புலன்களை எட்டி நினைவுகளை கலைத்திருந்தபோது டகுச்சியிடம் நான் சென்னைக்கு திரும்பப் போவதைப் பற்றிச் சொல்லியிருந்தான் சுரேஷ். கூரிய முனை கொண்ட அந்த நீண்ட மரக்குச்சியில் முதலில் செருகப்பட்டு அடியில் எஞ்சியி்ருந்த கடைசி கோழி இறைச்சித் துண்டை தன் பற்களால் கவ்விக்கொண்டே, “உண்மையாகவா?” என்ற ஆச்சரியப் பார்வையோடு என்னை நோக்கினாள்.

“ரொம்ப அலுப்பு தட்ட ஆரம்பிச்சிருச்சு இங்க. நான் தேங்க ஆரம்பிச்சுட்டேன்” என்றேன்.

“நீ வேலை பார்க்கிற வங்கி திவாலாகப் போறதா?” என்றாள் சம்பந்தமேயில்லாமல்.

மென்று கொண்டிருந்த அந்த கடைசி இறைச்சித் துண்டை பருகிய பியரால் நனைத்துக் கொண்டே, “நீ ஏன் கதிர் எங்கள மாதிரி ஃப்ரீலேன்சரா மாறக்கூடாது?” என்று தொடர்ந்து கேள்விகளாக கேட்க ஆரம்பித்தாள்.

டகுச்சிக்கும், சுரேஷுக்கும் என்மேல் என்னைவிட அதிக நம்பிக்கையுண்டு. இருந்தாலும் எனக்கான இடம் இதுவல்ல என சில நாட்களாக தோன்ற ஆரம்பித்திருந்தது. டகுச்சி போன்ற ஒரு பெண் அருகிலிருந்திருந்தால் அல்லது சுரேஷ் போல இங்கு ஒன்ற முடிந்திருந்தால் என்ற எண்ணங்களும் கூடவே சேர்ந்து என்னை இயலாதவனாக காண்பித்து என்மேல் கழிவிரக்கம் கொள்ளச்செய்தன.

நமக்கு நெருக்கமானவர்களின் வெற்றி எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதே அளவு பொறாமையையும், சில சமயங்களில் வெறுப்பையும் அளிக்கிறது. இவர்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்தால் நான் தேங்கியிருப்பவனாகவே தோன்றுகிறது. ஒருவகையில் இந்த ஒப்பீடு என்னை வளரத் தூண்டினாலும், இந்த ஒப்பீட்டுப் பிரமையிலிருந்து வெளிவரவே மனம் விரும்புகிறது.

டகுச்சியின் தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்று தோற்று அங்கிருந்து கரைந்து நான் பேருறு கொள்ளும் கனவுகளில் மூழ்க ஆரம்பித்தேன்.

“இல்ல டகுச்சி. இப்போதைக்கு இந்தியாவின் நிதிச் சந்தை புதிதாக நிதி சம்பந்தமான தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகமாக உள்ளது. சில முதலீட்டாளர்களிடம் என்னுடைய திட்டங்களை பகிர்ந்திருக்கிறேன். மிகப் பெரிய வங்கிகளைப் புரட்டிப் போடும் திட்டமிது. பெரிய முதலீட்டாளர்களும் அரசாங்கமும் ஒத்துக் கொண்டால் மூன்றே மாதத்தில்என் சிறிய நிறுவனத்தை சென்னையில் தொடங்கி விடுவேன்”. சுரேஷ் கண்விரித்து, “அந்த திறந்த வெளி வங்கித் திட்டமா?” என்றதற்கு “ஆமாம்” என்று கண் சிமிட்டினேன்.

புரியாமல் முழித்த டகுச்சியிடம், “ஓலா மற்றும் உபேர் போன்ற நிறுவனங்கள் எப்படி கூகுளின் வரைபடத் தகவல்களை உபயோகித்து மக்களுக்கான வாடகைக் கார் சேவையை எளிமைப்படுத்தியதோ, அதுபோலத்தான் இதுவும் “ என்று ரத்தினச்சுருக்கமாக திறந்த வெளி வங்கித்திட்டத்தை விளக்கினான் சுரேஷ்.

“கூகுள் மாதிரி வங்கிகளும் தன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வார்களா?” என்றாள்.

“இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வங்கிகளும் அரசாங்கங்களும் உணர்ந்துள்ளன.இது தகவல்களின் காலம். விளிம்பிலிருப்பவர்களும் மையமாகும் காலம்,” என்றேன்.

“இதெல்லாம் சாத்தியமா?”

“முடியும் டகுச்சி. மையத்திலிருப்பவர்கள், எப்போதும் அங்கேயே இருந்து கொண்டிருக்க முடியாது. விளிம்பிலிருப்பவர்கள், ஒருநாள் மையமாக மாறுவதுதான் ஜனநாயகத்தின் இயல்பு “ என்றேன்.

டகுச்சி சற்று குழம்பி தன் இடுங்கிய கண்களை மேலும் சுருக்கிக் கொண்டு, “ஆனால் கதிர்…” என்றவளை இடைமறித்து, “ஆனால், சமுதாயத்தில் மையம் என்ற ஒன்று இல்லாமல் போவதே கார்ல் மார்க்ஸின் கனவு” என்று அவளை மேலும் குழப்பி மகிழ்ந்தேன்.

மணி ஒன்பதைத் தொட்டிருந்நது. இரைச்சல் இன்னும் அதிகமாகியிருந்தன. டகுச்சியே உணவுக்கான தொகையைச் செலுத்த, மூவரும் வெளியே வந்தபோது தெருக்களில் நெரிசல் அதிகமாயிருந்தது. மழையும்கூட.

எதிர்பார்த்தபடியே கருமேகங்கள் தங்களின் மழைத்துளியை பிரசவிக்க ஆரம்பித்திருந்தன. வண்டியின் முகப்பு கண்ணாடியில் விழுந்த துளிகள் எதிர்த்திசைக் காற்றின் உதவி கொண்டு கண்ணாடியின் மேல்நோக்கி மீன்போல் நீந்த ஆரம்பித்தன. சற்றுநேரத்திற்கெல்லாம் மழைத்துளிகள் எடைமிகுந்து வேகமான மலையருவியாக வண்டியைச் சுற்றி சட.சடவென அறைய ஆரம்பித்து, காவ்யாவை அவளின் மேடிட்ட வயிற்றிலிருந்த என் கையை இறுகப் பற்றிக்கொள்ளச் செய்தது.

“கதிர் சூடா டீ சாப்பிடனும் போல இருக்கு…”

பெருமழைத் துளிகள் பட்டு வெடித்துக் கொண்டிருந்த சாலையிலிருந்து கண்களை அகற்றாமல்,
“அடுத்து வர்ற பெரிய கடைல நிப்பாட்டுரேம்மா” என்றார் ஓட்டுநர் பிரகாசம்.

“நன்றி பிரகாசம். ஆங்..கதிர்…சொல்ல மறந்துட்டேன். டகுச்சி கூப்பிட்டிருந்தா. மூணு வருஷமாச்சா எங்க நினைப்பு வர்றதுக்குன்னா”

”ம்ம்ம்… ஆமால்ல சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் நாம ஒன்னா தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டயே என்னோட கனவு திட்டமான திறந்தவெளி வங்கிக்கான நிறுவனமா மாத்தி, ஒரே வருஷத்துல பேர் வாங்கி, அதுக்குள்ள கர்ப்பமாயிட்ட உன்னை மீசையை முறுக்கிக் கொண்டும்; முகத்தை இறுக்கிக் கொண்டுமிருந்த நம்மிருவரின் பெற்றோரையும் சம்மதிக்க வைத்து கல்யாணம் பண்ணி… என இவ்வளவு செறிவான செயல்களோடு என் வாழ்க்கை இருந்ததில்லை. இந்த பரபரப்பில் சுரேஷும் டகுச்சியும் நினைவுக்கு வரவேயில்லை காவியா…”

“ஆனால் என்னால உன்னை முதன்முதலில் சந்தித்த அந்த மழைமாலைப் பொழுது சிபுயாவை மறக்கவே முடியவில்லை கதிர்’ என்றவளிடம், புன்னகைத்தேன்.

திடீரென மழையின் இரைச்சல் அடங்கி மனிதக்குரல்களின் இரைச்சல் பெருகியது. நானிருந்த சுற்றுப்புறம் தெளிவாக புலப்பட ஆரம்பித்தது. மடக்கி வைத்திருந்த குடையும், கழற்றி வைத்திருந்த மழை மேலாடையும் அங்கேயே இருந்தன.

டகுச்சியும் சுரேஷும் வெகு நேரமாக என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததை கவனித்து இருக்கையிலிருந்து எழுந்து கொண்டேன்.

“என்னாச்சு கதிர்? நீ வேலை பார்க்கும் வங்கி திவாலாயிருச்சான்னு விளையாட்டா டகுச்சி கேட்டதற்கு, நீ ஏதோ ஒரு கனவுலகத்துக்குப் போயிட்ட…”

“ஆமாம் என் கனவுகளுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தேன்…”என்று சொல்லி இருவரையும் அணைத்து விடைபெற்று தெருவில் இறங்கினேன்.

மணி பத்தைத் தொட்டிருந்தது. கண்ணாடிக் கட்டிடங்களில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் தெருக்களைப் பகலாக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தன.நெரிசலும் மழையும் குறைந்திருந்த தெருக்களில் மிக நீண்ட வரிசையில் வாடகை டாக்ஸிக்காக நின்று கொண்டிருந்ததமிழ்ச்சாயல் கொண்ட அந்த இந்திய முகம், அறைக்கு திரும்பிய பின்னும் மனதைவிட்டு அகலமறுத்தது.உணவு விடுதியில் சாப்பிட்ட ஃபார்ஃபெல்லே வகை பாஸ்தா அவள் அணிந்திருந்த வெளிர் பச்சைநிற மழைமேலாடையில் அச்சிடப்பட்டிருந்த வண்ணத்துப் பூச்சிகளை ஞாபகப்படுத்தியது. சற்று அமிழ்ந்த மூக்கும், கண்களுக்கு கீழே அகன்றும் நாடிக்கருகில் சற்று ஒடுங்கியுமிருந்த அந்த கன்னங்களும், ஏனோ தெரியவில்லை திரும்பத் திரும்ப கண்முன் தோன்றிக்கொண்டே இருந்தன. அவள்தான் என் காவ்யா என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

திருடர்கள்

அரிசங்கர்

குணாவும் அவன் அப்பாவும் ஊத்துக்காட்டம்மன் கோவில் தெருவழியாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். இருவருமே ஆறடி உயரம். ஒரே நிறம், மெல்லிய கருப்பு. குணாவின் தலை மயிர் முழுக்க கருப்பாகவும், அவன் அப்பாவினுடையது முழுக்க வெளுப்பாகவும் இருந்தது. இருவரில் எவருக்குத் தெரிந்தவர் எதிரில் வந்தாலும் இவர்கள் தந்தை மகன் என்று உறுதியாகச் சொல்லிவிடும் அளவுக்கு உருவ ஒற்றுமை இருந்தது. இருவரும் மெதுவாகவே நடந்து சென்றனர். வயதில் மட்டுமே 30 வருட வித்தியாசம் இருந்தது.

எதிரில் ரவி ஐயர் டி.வி.எஸ். எக்ஸலில் வருவதை குணாதான் முதலில் பார்த்தான். அவரைப் பார்த்ததும் தலை குனிந்துகொண்டே நடக்கத் துவங்கினான். இவர்கள் அருகில் வந்த ஐயர் குணாவின் அப்பா அருகில் வண்டியை நிறுத்திப் பேச ஆரம்பித்தார். ஆனால் குணா நிற்காமல் தொடர்ந்து நடந்தபடி இருந்தான். இவன் போவதை பார்த்த அப்பா இவனைக் கூப்பிட இவன் காதில் விழாதது போல் சென்று தெருமுனையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மாலை வேளையாதலால் கடலூர் சாலையில் பேருந்துகள் வரிசையாகச் சென்று கொண்டிருந்தன. அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று இவன் ஒருவாறு யூகித்தான். அவனுக்கு வேர்க்கத் துவங்கியது. தன்னுடன் நிமிர்ந்து நடந்து வந்த தன் அப்பா கொஞ்ச கொஞ்சமாக கூனிக் குறுக ஆரம்பித்தார். அவரின் பேச்சு கெஞ்சல் தொனியில் இருப்பதை தூரத்தில் இருக்கும்போதே அவன் உணர்ந்தான். ஒருபுறம் அவனுக்கு கோவமாகவும் மறுபுறம் குற்றவுணர்வாகவும் இருந்தது.

இதே போன்ற ஒரு மாலை வேளையில்தான் எட்டு ஆண்டுகளுக்கு முன் குணா அவன் அப்பாவுடன் கோவிலில் ஐயரைச் சந்தித்தான். அப்போது அவர் முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார். அன்று வெள்ளிக்கிழமை. கோவிலில் யாரோ ஒருவருடைய உபயம். அதனால் அம்மனுக்குப் பூஜைகள் நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் திரையை மூடி அவர் எதோ செய்வார். பிறகு திரையை திறந்து தீபாரதனை காட்டுவார். ஒவ்வொரு முறை அம்மன் ஒவ்வொன்றால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கும். எண்ணெய், விபூதி, சந்தனம், பஞ்சாமிருதம் எனப் பல அபிஷேகங்கள் முடிந்து, மந்திரங்கள் ஓதி வேகமாக மணியடித்து கடைசியாக தரும் பொங்கலுக்காக மட்டுமே காத்திருந்த கூட்டத்துடன் குணாவும் அவன் அப்பாவும் நின்றிருந்தனர். குணாவின் அப்பாவைப் பார்த்ததும் சிரித்துவிட்டுக் குனிந்து குணாவை பார்த்து, “என்ன செட்டியாரே, நம்ம பையனா” என்றார், ஐயர்.

குணாவின் அப்பா சிரித்துக் கொண்டே ஆமாம் என்று தலையசைத்தார். ஐயர் குணாவிடம், “என்னடா படிக்கிற” என்றார்.

“ஏழாவது” என்றான் குணா.

“தினம் கோயிலுக்கு வாடா”

“தினமுமா பொங்கல் தருவாங்க”

“ஏன், பொங்கல்னா தான் வருவியா”

குணா அமைதியாக இருந்தான். பிறகு அவர்கள் இருவரும் எதோ பேசிக்கொண்டிருக்க குணா பொங்கல் சாப்பிடத் துவங்கினான்.

மறுவாரம் அவன் கோவில் பக்கமே போகவில்லை. அடுத்த வெள்ளியும், பொங்கலும் அவன் நினைவுக்கு வரத் திறந்து வைத்திருந்த புத்தகத்தை அப்படியே மூடி விட்டு எழுந்து கோவிலுக்கு விரைந்தான். அவன் இருந்த வன்னியப் பெருமாள் கோவில் தெருவில் இருந்து இரண்டாவது இடது திருப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெரு. தெருவின் கடைசியில் இருந்தது கோவில். ஓட்டமும் நடையுமாகச் சென்றான். கோவில் வாசலில் ஐயர் மட்டுமே இருந்தார். தன் சைக்கிளில் புறப்படத் தயாராக இருந்தார். தூரத்தில் இவனைப் பார்த்ததும் கொஞ்சம் கோவமாக இவனை அழைத்தார். குணா அருகில் சென்றதும், “எங்கடா போற”

“கோவிலுக்குத்தான் வந்த”

“கோவிலுக்கு வர நேரமாடா இது, சரி வந்து சைக்கில்ல ஏறு,” என்றார்.

குணா தயக்கத்துடன் சைக்கிளில் ஏற, அவர் வேகமாகச் சைக்கிளை உப்பளம் சாலையில் உள்ள கோவிலுக்கு ஓட்டிச் சென்றார். அதுவும் ஒரு முத்துமாரியம்மன் கோவில்தான். அங்கு இவருக்காக சில பெண்கள் காத்திருந்தனர். வேகமாக உள்ளே சென்ற அவர் திரையை மூடி தன் வேலையைத் துவங்கினார். குணாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஓடிவிடலாமா என்று யோசித்தபோது, திரையை லேசாகத் திறந்து ஐயர் இவனை அழைத்தார்,

“டேய் தம்பி, அந்த மணிய வேகமா அடிடா,” என்றார்.

கம்பியில் கட்டியிருந்த கயிரை அவிழ்த்து குணா வேகமாக மணி அடித்தான். அவன் மண அடிக்க அடிக்க கோவிலுக்கு ஒருத்தர் பின் ஒருத்தராக வந்தபடி இருந்தனர். இவர் பூஜையெல்லாம் முடித்து தீபாரதனை காட்டி வெளியே வந்து குங்குமம் கொடுக்கும்போதுதான் இவனைப் பார்த்து போதும் என்று கையசைத்தார். அதற்குள் குணா வேர்த்து நனைந்திருந்தான்.

குணாவின் வேலை ஐயருடன் இப்படியே படிப்படியாக தொடர்ந்தது. வெள்ளி என்பது வாரத்தின் அனைத்து நாட்களும் கோவிலுக்கு போக ஆரம்பித்தான். சில நாட்களில் ஐயருக்கு வேறு வேலைகள் எதாவது இருந்தால், குணாவே நேராகக் கோவிலுக்கு சென்று பக்கத்து வீட்டில் சாவி வாங்கி வந்து திறந்து விளக்கு ஏத்திவிட்டு வருவான்.

ஒருநாள் ஐயர் குணாவின் வீட்டிற்கு வந்து அழைத்தார். இவனும் எதோ கோவில் வேலை என்று அவருடன் சென்றான். அவர் வழக்கமாகப் போகும் இரண்டு கோவிலுக்கும் போகாமல் கடலூர் சாலையில் இருந்த பச்சைவாழியம்மன் கோவிலுக்குச் சென்றார். அந்தக் கோவிலின் கதவைத் திறந்து விளக்கு ஏற்றிவிட்டு வரும்போது ஒரு சிலர் கோவிலுக்கு வந்தனர். வந்தவர்களில் ஒருவர் ஐயரைப் பார்த்து, “அப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு” என்றார்.

“இப்ப தேவலாம். நடக்க கொஞ்சம் நாளாகும். சொன்னா எங்க கேக்கறார். மழையில போவாதீங்கன்னா அப்பத்தான் வெளிய போய் கால உடச்சிக்கிட்டாரு” என்றார் அலுப்பாக.

“சரி விடுங்க எல்லாம் சரியாயிடும்” என்று சொல்லிவிட்டு சாமி கும்மிட்டுச் சென்றார்.

அதன்பிறகு கோவிலுக்கு யாரும் வரவில்லை. புறப்படலாம் என்று எழுந்தபோது ஐயர் குணாவை அழைத்தார்,

“டேய் தம்பி, இங்க வாடா”

குணா அவர் அருகில் சென்று அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் வாயையே பார்த்தான்.

“குணா, எங்கப்பாதான் இந்த கோவில பாத்துக்கிறாரு. அவருக்கு உடம்பு சரியில்ல. கொஞ்ச நாள் நான் சொல்ற மாதிரி செய்,” என்றார்.

அவன் எதுவும் பேசாமல் அவர் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இங்க பாரு நாளையிலிருந்து தினமும் நீ இங்க வா, வந்து கதவ திறந்து விளக்கு போட்டுட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு திரும்ப கதவ சாத்திட்டு போய்டு. சாவியை ராத்திரி நான் போரப்ப வந்தி உன் வீட்டுல வாங்கிக்கற. யாருன்னா வந்தா தட்டுல கற்பூரத்த ஏத்தி மூணு சுத்து சுத்தி காமிச்சிட்டு விபூதியும், குங்குமமும். குடு. யாருன்னா ஐயர் எங்கன்னு கேட்டா இதோ வந்துடுவாருன்னு சொல்லிடு,” என்றார்.

“எவ்வளவு நேரம் இருக்கனும்”என்று கேட்டான் குணா.

“ஆறு மணிக்கு வா, ஏழரை மணிக்கு போய்டு. நான் எட்டரை மணிக்கு வந்து சாவியை வாங்கிக்கற. சாயங்காலம் ஐஞ்சு மணிக்குச் சாவியை வீட்டுல தந்திடற.” என்றார்.

குணா தயக்கத்துடன் சரி என்றான்.

“தட்டுல வர காச நீயே எடுத்துன்னு வந்திடு நான் உங்கிட்ட வாங்கிக்கிற” என்றார்.

மறுநாள் மாலை ஐயர் குணாவின் வீட்டிற்கு வந்தார். அவனிடன் சாவியையும், ஒரு நான்கு முழம் வேட்டியையும் தந்தார். அவனை வேட்டி கட்டிக்கொண்டு போகச் சொன்னார். அவன் தெரியாது என்று சொல்ல அவரே அவனுக்கு வேட்டியையும் கட்டிவிட்டார்.

குணா முதல் நாள் வேலையைச் சிறப்பாக செய்தான். சில்லறைகளையும் சாவியையும் ஐயரிடம் அன்று இரவு ஒப்படைத்தான். ஐயர் சில்லறைகளில் கொஞ்சமாக எடுத்து குணாவின் கைகளில் திணித்தார். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. மொத்தமாக இரண்டு ரூபாய்க்கு மேல் அவன் செலவு செய்ததில்லை. ஐயர் சென்றபின் உள்ளே குளியலறைக்கு சென்று எவ்வளவு என்று பார்த்தான். எட்டு ரூபாய்கள் இருந்தது. முதல் நாள் இருந்த தயக்கத்தை அந்த எட்டு ரூபாய் காணாமலாக்கியது. காசை அவன் வீட்டில் தரவில்லை. மறு நாளிலிருந்து அவன் தட்டில் இருக்கும் காசை எண்ண ஆரம்பித்தான். ஒவ்வோரு நாளும் ஒரே மாதிரி தான் காசு வந்தது. சில ரூபாய்கள் கூடக் குறைய இருந்தது. அது ஐயர் கொடுப்பதிலும் எதிரொலித்தது. அன்று ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாகத் தட்டில் அதிக பணம் விழ குணாவின் மூளை வேறு மாதிரியாக யோசித்தது. அதிகமாக வந்த காசையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டான். வழக்கமாகக் கொடுக்கும் காசையே ஐயரிடம் தந்தான். அதைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு மாற்றத்தைக் கவனித்தான். கண்டுபிடித்து விடுவாரோ என்று பயந்தான். அவர் எதுவும் கேட்கவில்லை.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் குணா கோவிலில் இருக்கும்போது, ஒருவர் வந்து, ஐயர் எங்கே, என்று கேட்டார். வழக்கம் போல் இவன், இதோ வந்து விடுவார், என்றான். அதற்கு அவர் கோவமாக, “டேய், எத்தன நாள நீயும் இப்படியே புளுவின்னு இருப்ப” என்றார்.

இவன் கொஞ்சம் பயந்தவாறு அமைதியாக இருக்க, அவர் தொடர்ந்தார்

“நான் எதிர் ஊட்டுல தாண்டா இருக்கன். தெனிக்கும் பாத்துனு தான் இருக்கன் நீதான் வர, நீதான் போற,” என்று கத்தினார்.

அதற்குள் இரண்டு பெண்கள் வர அவர்களிடம் முறையிட்டடார். அவர்கள் இவர் பேசுவதை கண்டுகொள்ளாமல் சாமி கும்மிட, “எவன் எவனோ உள்ள வரான். கேட்க ஆள் இல்லாம போச்சு. நாளைக்கு காட்டற நான் யாருன்னு” என்று கத்திக்கொண்டே சென்றார்.

அனைவரும் சென்றதும் குணா கோவிலை பூட்டிக்கொண்டு, காசை எடுத்துக்கொண்டு வெளியேறினான். இரவு ஐயர் வந்தது அவரிடம் அனைத்தையும் சொன்னான். அவர் கத்தியதும் வந்துவிட்டதாகவும், காசு எதுவும் வரவில்லை எனவும் சொன்னான். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.

அதன்பிறகு ஐயர் குணாவை தேடி வரவில்லை. குணா கோவிலுக்கு ஐயரைத் தேடி சென்றான். அவர் இவனைக் கண்டுகொள்ளவில்லை. தன்னைத் தவிர வேறு யாராவது கோவிலுக்கு போகிறார்களா என்று கோவிலுக்கு சென்று பார்த்தான். அவன் ஐயரின் அப்பா காலில் கட்டுடன் இருந்தார். இவ்வளவு கையில் காசைப் பார்த்துவிட்டு இப்போது காசில்லாமல் குணாவிற்கு கோவம் கோவமாக வந்தது. வெள்ளிக்கிழமை பூஜைக்கு சென்று ஐயர் அழைப்பார் என்று காத்திருந்தான். அவர் அழைக்கவேயில்லை. வேறு சிறுவர்கள் மணியடித்துக் கொண்டிருந்தனர். அவனுக்கு அழுகை வருவது போல் இருந்தது. அனைவரும் போகும் வரை காத்திருந்தான். அனைவரும் சென்றதும் ஐயரே பேச ஆரம்பித்தார்,

“ஏண்டா… எங்கிட்ட எவ்வளவு காச திருடிருப்ப” என்றார்.

நேரடியாக இப்படிக் கேட்டதும் குணா பயந்துவிட்டான். இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. அமைதியாக இருந்தான். மீண்டும் அவர் ஆரம்பித்தார்,

“எத்தன வருஷமா கோவில பாக்கறன், என்னிக்கு என்ன கிழமை, என்ன நாளுக்கு எவ்வளவு தட்டுல விழுமென்னு எனக்குத் தெரியாதா, நீ தெனமும் உனக்குன்னு கொஞ்சம் தனியா எடுத்துக்கின்னுதான் எங்கிட்ட காச தந்திருக்கிற. சரி போனா போவுதுன்னு விட்ட,” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார். அந்த நேரம் யாரோ ஐயரிடம் வந்து பேச்சு கொடுக்க அவன் வீட்டுக்கு ஓடிவந்து விட்டான். அதன் பிறகு இவன் கோவில் பக்கமே செல்லவில்லை. ஐயரை வழியில் எங்காவது பார்த்தாலும் மறைந்துகொள்வான். வளர வளரக் கொஞ்சம் தயிரியம் வந்தது. அவர் எதிரில் வந்தால் இவன் எங்கோ பார்த்த மாதிரி சென்றுவிடுவான்.

“டேய் போலாமா?” என்றார் குணாவின் அப்பா. குணா திரும்பிப் பார்த்தான். ஐயர் போய்விட்டிருந்தார். அவன் அப்பா அவனுடன் எதுவும் பேசவில்லை. இருவரும் வீட்டிற்கு வந்தனர். குணாவிடம் மெதுவாக அவன் அப்பா, “ஐயர் ரொம்ப வருத்தப்பட்டார். நீ பண்ணது தப்பு. கோவில உன்ன நம்பி விட்டா நீ இப்படியா பண்ணுவ” என்றார். கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. பிறகு அவரே தொடர்ந்தார், “நீ போய் அவர்கிட்ட மன்னிப்பு கேளு. எனக்குக் கஷ்டமா இருக்கு. நான் எப்படி இனிமே அவர் முகத்துல முழிப்பேன்,” என்றார்.

குணா அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் கண்களில் கோபம் தெரிந்தது. ஆனால் அதை மறைத்தவாறு தலையை குனிந்து கொண்டான். அப்போது மாடியில் துணி காய்ப் போட்டுவிட்டு அவன் அம்மா உள்ளே வர, அவன் அப்பா, “நாலு மணிக்குப் போ, ஐயிரு வீட்டுலதான் இருப்பாரு” என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.

குணா அவர் போவதைப் பார்த்தவாறு அவரிடம் சொன்னான்,

“என்னால மன்னிப்பலாம் கேக்க முடியாது.” என்று சொன்னான்.

திரும்பி அவர் முறைக்க, இவனும் பதிலுக்கு முறைத்தான். பிறகு அவர் தீர்மானமாக சொன்னார், “இதப்பார், நீ பண்ணத்த அவர் இன்னும் யாருகிட்டயும் சொல்லாம இருக்கறதே பெரிய விஷயம், ஒருவேளை இது வெளிய தெரிஞ்சி நாலு பேரு எங்கிட்ட வந்து, என்ன உன் புள்ள இப்படி பண்ணிட்டானேன்னு கேட்டா, நான் நாண்டுன்னு தான் சாகனும், ஒழுங்கா போய் மன்னிப்பு கேளு,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

அவன் அம்மா நடப்பது எதுவும் தெரியாமல் முழிக்க, இங்கிருந்தால் அம்மாவுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று அவன் வேகமாக வெளியேறினான்.

மாலை நான்குமணி. குணா ஐயர் வீட்டிற்குச் சென்றபோது அவர் வாசலிலேயே நின்றிருந்தார். இவனைப் பார்த்தவுடன் மெல்லப் புன்னகைத்தார். இவன் அமைதியாக அவர் முன் நின்றான்.

“என்னடாப்பா சவுக்கியமா” என்றார் நக்கலாக.

குணா அவர் கண்களை பார்த்து “நான் திருடன்தான். எனக்குப் புரியுது. நீங்க யாரு?” என்று கேட்டுவிட்டு பொறுமையாகத் திரும்பி நடந்தான். அவர் முகம் மெல்ல மாறிக் கொண்டிருந்தது

குருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன்

1

என்னை நானே எதிர்கொள்ள முடியாததால்
இரவை வரவேற்கிறேன்
மனம் உறக்கத்தில் லயிக்கட்டும்
எனது தேடல் இந்த உலகுக்கு
அப்பாற்பட்டதாக உள்ளது
எனது பலகீனங்கள் பாவகாரியத்தைச்
செய்யச் சொல்லி என்னை நிர்பந்திக்கின்றன
இறந்துபோனாலும் இந்த நினைவுகளைச்
சுமந்து கொண்டு என்னால் நிம்மதியாக இருக்க முடியாது
வாழ ஆசைப்படும் மனது
எனது ஆசைகளை வேர்விடச் செய்கிறது
அமைதியற்ற மனம் இங்குமங்குமாய் அலைந்து
எனது சமநிலையை பாதிக்கச் செய்கிறது
வாதைகளோடு போராடும் எனக்கு
புதுவாசல் ஏதேனும் திறக்காதா என்று ஏக்கமாக உள்ளது
மயக்கும் வதனமெல்லாம் மரணத்தின் தூதுவன்தான்
வாழ்வின் நிதர்சனங்களிலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை
தூக்கத்தில் அசைவற்ற உடலைக் காண நேரும்போது
உள்ளம் திடுக்கிடுகிறது
இதற்கு மேல் உடலால் வேதனையைத் தாங்கிக்கொள்ள
முடியாது எனும்போது உயிர் வெளியேற எத்தனிக்கிறது
எனது பிரார்த்தனைகளெல்லாம்
அமைதியைத் தா என்றே உன்னிடம் இறைஞ்சுகிறது
தோற்றத்தில் கிளர்ச்சியடைய விரும்பவில்லை
எதிர்ப்படும் யுவதியின் நித்யமான ஆத்மனை அறிந்துகொள்ளவே
நான் விரும்புகிறேன்
வாழ்வு எனக்கு வருத்தமளிப்பதால் மட்டுமே
இறைவன் எனக்கு சுவர்க்கத்தை பிச்சையிடுவானா என்ன
வாழ்வை அதன் போக்கில் விட்டுவிட்டேன்
எனக்குரியவை என்று எதையும் சொந்தம் கொண்டாடுவதில்லை
இயற்கை ராகங்களை இசைத்துக் கொண்டிருக்கிறது
என்னால்தான் ரசிக்க முடியவில்லை
மனிதர்கள் துயரப்படும்போதுதான் இந்தப் பூமிப்பந்தில்
தாங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணருகிறார்கள்
உலக இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் சக்திக்கு
மனிதன் ஒரு பொருட்டேயில்லை
உலகக் குளத்தில் கல்லெறியாதீர்கள்
அலைகள் அடங்க ஒரு யுகம் கூட ஆகலாம்
நீர்க்குமிழி உலகை வியந்து பார்ப்பதற்குள்
அதன் ஆயுள் முடிந்துவிடும்
கடவுளை எதிர்கொள்ளாத மனிதனே இருக்க முடியாது
நீ உனக்கு வேண்டியதை தேடிக் கொண்டிருக்கும்போது
கடவுளை உன்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை
மனிதன் மரணநிலையை அடையும்போது வாழ்க்கை அனுபவம்
பொய்யாகிப் போவதை உணர்ந்து கொள்வான்
தண்டனையை அனுபவிக்க அனுப்பப்பட்ட இடத்தில் ஒரு மனிதனாவது
குற்றவுணர்ச்சியுடன் நடமாடுகின்றானா
நாம் கைதியாயிருக்கிறோம் என உணரும்போது
இந்த உலகம் சிறையாகி விடுகிறதல்லவா
தப்பித்துப் போனவர்களெல்லாம் உன் அகராதிப்படி
பைத்தியங்கள் அல்லவா
மனிதனின் சுவர்க்கக் கனவுகளை நிறைவேற்ற
கடவுள் என்ன காரியதரிசியா
வேறு எங்கும் தேடி அலையாதே
இந்தச் சிறைக் கதவுகளை திறக்கும் சாவி
உன்னுள் இருக்கிறது
என்று சொல்ல ஒருவன் வேண்டுமா?
அழியக்கூடிய இந்த உலகிற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்தான்
ஆத்மாவை இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்!

2

இந்த நட்சத்திரங்களின் ஒளி என்னை வந்தடைய எத்தனை நாட்களாகின்றன
சலனங்களே வாழ்க்கைக் கடலிலிருந்து அலைகளை உருவாக்குகின்றன
மரணம்தான் தெரியப்படுத்துகிறது அன்பின் மகத்துவம் என்னவென்று
வானத்தின் முகவரியை மேகங்கள்தான் அறியும்
பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதால்
நரகத்தில் கடவுளைத் தவிர எவருமில்லை
நாய்கள் உறங்கும் நடுநிசியில் என் உள்ளம் விழித்திருக்கிறது
ஆதியில் இருந்த வார்த்தைகளிலிருந்தே படைப்புகள் வெளிப்பட்டன
எய்யப்பட்ட அம்புகள் எதிராளியின் குருதியில் நனைகின்றன
காலம் சகல நிகழ்வுக்கும் சாட்சியாக இருந்துவருகிறது
அதிதிகள் இந்த உலகை பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்
ஆட்டுவிக்கும் மன உணர்வுகளுக்கு நான் அடிமைப்பட்டுத்தான்
கிடக்க வேண்டுமா
என்னைக் கொண்டு செல்லும் மரண அலைகளுக்காக
எவ்வளவு நாள் காத்திருப்பது
இரவுகளிலும் நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டிருந்தால்
வேறு எங்கு நான் செல்வது
ஊசலாடும் வாழ்க்கையிலிருந்து எப்போது என்னை விடுவிப்பாய்
எனது துயர வரிகளுக்கு நீதான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை என் ஒருவனுக்காவது அளிக்கக் கூடாதா
இந்த ஒரு இரவாவது என்னை நிம்மதியாக உறங்க விடுவாயா
விதியின் ரேகைகள் துர்பாக்யசாலி என்கிறது என்னை
கனவுகளிலாவது இறக்கைகள் கொடு
இந்த உடலைவிட்டுக் கொஞ்ச நேரம் உலாவி வருகிறேன்
ஓர் இலை உதிர்ந்ததற்காக மரம் துக்கம் அனுசரிக்குமா என்ன
நிலையான ஒன்றை தேடிச் செல்பவர்கள் ஏன்
சித்த சுவாதீனத்தை இழந்து விடுகிறார்கள்
காலவெள்ளம் மனிதர்களை எங்கெங்கோ அடித்துச் சென்று
கடைசியில் மரணப் பள்ளத்தாக்கில் தள்ளிவிடுகிறது
ஜனன வாயிலும், மரண வாயிலும் என்றுமே மூடப்படுவதில்லை
எண்ணக் குவியல்களைக் கிளறும்போது குப்பைகளே வெளிப்படுகின்றன
மாற்றங்களை உற்று நோக்கினால் மரணம் அதற்குள் ஒளிந்திருப்பது தெரியவரும்
வாழ்க்கையில் வெளிச்சம் வருவதற்கு முன்பே
நான் விடைபெற இருக்கிறேன்
கடவுளின் சட்டதிட்டத்தின்படி நானொரு குற்றவாளி
எனது ஆன்மதீபம் சிறிது சிறிதாக அணைய இருக்கிறது
எனது வேர்கள் தன்னைத் தற்காத்துக் கொள்ள அபயக் குரல் எழுப்புகின்றன
விதியின் மாபெரும் இயக்கம் என்னை இங்கும் அங்கும் பந்தாடுகிறது
தந்திரமில்லாதவர்களை உயிரோடு புதைத்து விடுகிறதல்லவா இவ்வுலகம்
இந்த உலக நடப்புகள் என்னை பாதிக்காதவாறு
எனக்கு உணர்வுகளற்றுப் போகட்டும்
இந்த சரீரத்திலிருந்து விடுதலையாகும் நாளை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்
சித்தர்களைப் போல உறவுகளுடனான பிணைப்பினை
உதறித்தள்ள முடியவில்லை
ஸ்தூலமான விதைக்குள் சூட்சுமமான விருட்சம்
மறைந்துள்ளதை அறியத் தவறிவிடுகிறோம்
நித்யமான ஒன்றைத் தேடுபவர்கள்
எனது எழுத்துக்களை வெற்றுப் புலம்பல் என
ஒதுக்கிவிடமாட்டார்கள்.

3

துயிலெழுந்தபோதுதான் தெரிந்தது இந்த வாழ்க்கை ஒரு கனவென்று
உலகம் மாயை என்றவுடன் மரணம் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது
மயானபூமியில் மனிதன் மனதின் இயந்திரமாகத்தான் திரிகிறான்
மரணவூரில் மரணம் நிகழாத வீடொன்றைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா
உலகியல் மனிதர்கள் கடவுளை வரமருளுபவர்களாகவே கருதுகிறார்கள்
ஞான சொரூபத்திடம் பணத்தினை பிச்சையாகக் கேட்பது கேவலமல்லவா
பற்றி எரியும்போததான் தெரிகிறது விட்டில் பூச்சிக்கு
தான் மரணத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தோம் என்று
கண்ணுக்கு அழகாக இருப்பவர்களால் மரணத்தை வென்றுவிட முடியுமா
உங்களுக்கு தெரியாது மரணம் வெவ்வேறுவிதமாக மனிதனை வந்தடைவது
உயிர் பிரியும் வேளையில் தான் செய்த தவறுகளுக்காக
குற்றவுணர்ச்சி கொள்ளும் ஆன்மாவுக்கு பாவமன்னிப்பு கிடைக்கிறது
தான் கைவிடப்பட்டதாக கருதும் ஒருவனுக்கே
கடவுளைக் காண வேண்டுமென்ற ஏக்கம் பிறக்கிறது
படைப்புக்கான அவசியம் கடவுளுக்கு ஏன் ஏற்பட்டது என
நான் அறிய விரும்புகிறேன்
பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து உயிர்களால் விடுபட முடியவில்லை
துன்பகரமான விளையாட்டை கடவுள் ஆரம்பித்திருக்க வேண்டாம்
விதிவசத்தால் மனிதன் துயரப்படுவது அவனுக்கோர் விளையாட்டு
அவனுக்கு உகந்ததை நிகழ்த்திக் கொள்ள
மனிதர்களை அவன் கருவியாகப் பயன்படுத்துகிறான்
அவனுடைய கடுமையான சட்டதிட்டங்களை
மரணத்திற்கு பிறகுதான் நாம் அறிந்து கொள்கிறோம்
உலக நடப்புகள் ஒவ்வொன்றும் கடவுள் கருணையற்றவன்
என்பதையே நிரூபிக்கின்றன
தனது குமாரரர்களில் ஒருவனுக்கு மட்டுமே மரணத்தை வெல்லும்
வாய்ப்பை அவன் வழங்கியிருக்கிறான்
துயரத்தின் வலியினால் அரும்பும் கண்ணீரில்
புனிதத்தன்மை மிகுந்திருக்கிறது
கொடுப்பதும் கெடுப்பதும் அவன்தான்
மனிதனின் சுயத்தை உதாசீனப்படுத்தும் நரமாமிசதாரி அவன்
ஆசாபாசங்களற்ற அவனின் ஆளுகைக்கு
கீழேதான் இந்த உலகம் இருந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை நதியை அதன் போக்கில்
செல்லட்டும் என விட்டுவிட வேண்டும்
விடை தேடிக் கொண்டிருப்பவர்கள்தான்
உங்கள் முன் திருவோடுடன் அலைவது.

4

வாசலை திறந்தே வைக்கிறேன் எப்போது
வேண்டுமானாலும் மரணதேவதை உள்ளே நுழையலாம்
இறையச்சம் கொண்டவர்கள் பழி பாவத்துக்கு
பயப்படவே செய்வார்கள்
ஜீவிதம் துன்பகரமாக அமையும்போது
சுவர்க்கத்தைப் பற்றிய கனவே மருந்தாகும்
மேய்ப்பன் இல்லாதது மந்தை ஆடுகளுக்கு
சுதந்திரம் தந்ததாய் ஆகாது
கடல் நீரைக் கையில் எடுக்கும்போதுதான்
அதற்கு நிறமில்லாதது தெரிகிறது
விண்ணுலகம் சத்தியத்தின் வழி செல்பவர்களை
மட்டும் சோதனைக்கு உள்ளாக்குகிறது
கடவுள் தன்மை என்பது இந்தப் பூவுடலை
கடவுள் காரியத்திற்கு பயன்படுத்த இடமளித்துவிடுவது
இயற்கை என் இருப்பை நிராகரித்திருந்தால்
நான் இங்கே உயிருடன் இருந்திருக்க முடியாது
பிரபஞ்சவிதியிலிருந்து சிலருக்கு விதிவிலக்கு
அளிக்கப்பட்டுள்ளது எனக்கு வியப்பாய் இருக்கிறது
இருளில் ஐந்தடி தூரம்வரை வெளிச்சம் கொடுக்கும்
விளக்கினை கையில் ஏந்திக் கொண்டு
ஐந்து மைல்களைக் கடந்துவிடலாம் அல்லவா
மணலில் பதிந்துள்ள கடவுளின் காலடித்தடத்தை
உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
கனவை விதைத்த பொருளினை அடைந்துவிட்ட பிறகு
இன்னொன்றை நோக்கி ஓடுகிறோமில்லையா
வாழ்வின் உண்மைகளை மனிதர்கள்
அறிந்துவிடக்கூடாது என்பதற்காக
இயற்கை பல கவர்ச்சிகரமான அம்சங்களால்
மனிதர்களை மயக்கி வைத்துள்ளது
கோபிகைகளிடம் ஆன்மனைக் கண்ட கண்ணனை
உங்கள் தவறுக்கு நியாயம் கற்பிக்க துணைக்கு அழைக்காதீர்கள்
எல்லோருக்கும் கடவுளிடம் அன்பிருக்கும்
ஆனால் கடவுளுக்கு பிடித்தமானவர்களின் பட்டியலில்
உங்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்பதே முக்கியம்
அழகு கவர்ந்திழுக்கும் அம்சமாக உள்ள வரைக்கும்
சாத்தானுக்கு சேவகம் புரிபவர்களாகத்தான் நாம் இருப்போம்
மலத்தின் மீதமரும் ஈக்களைப் போன்ற மனதால்
கடவுளைக் காண முடியாது
உனக்கு கண்கள் வாய்க்கப்பெறும்போது
இந்தப் பூமியில் இன்னொரு உலகம்
இயங்கிக் கொண்டிருப்பதைக் காண்பாய்
எல்லைக்குட்பட்ட மனதால் அப்படி என்ன
சுதந்திரத்தை அடைந்துவிட முடியும்
எவ்வளவு முயன்றாலும் அலைகளால்
வானத்தை தொட்டுவிட முடியுமா என்ன
எவ்வளவு காணிக்கை செலுத்தினாலும்
கடவுள் செயல்படும் விதியில் கைவைத்து
உன்னைக் காப்பாற்ற துணியமாட்டார்
வாழ்க்கை என்பது ரயில் பயணம்தான்
அவரவர் தங்கள் நிறுத்தம் வந்தவுடன்
இறங்கிச் சென்றுவிடுவார்கள்
ரயில் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும்
உனக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு கதவிருக்கிறது
அதை நீ தட்டுவதேயில்லை
கடவுள் உன்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்
அதை நீ காது கொடுத்து கேட்பதேயில்லை
இவ்வுலக மக்கள் கடவுள் குடிசையில் வாழும்
ஒரு ஏழை என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
அறிவுக் கனியினால் மனிதனிடம்
கள்ளம் கபடமற்ற தன்மை மறைந்து போனது
கைவிடப்பட்ட இவ்வுலகில் வாழும்
நாமெல்லோரும் சாத்தானின் பிரதிநிதிகள்தான்.