Author: பதாகை

புதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

பிறப்பு /படிப்பு/ குடும்பம் பற்றி ?

என்னுடைய மிகச்சிறிய வயதுகள் இடப்பெயர்விலேயே வளர்ந்தன.எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதும், உலங்குவானூர்திகள் மேலிருந்து சுடுவதும்தான் எனது சிறியவயதின் நினைவுகளாக அடர்ந்து நிற்கிறது. நான் முதன்முறையாக ஒரு தொகையான சனங்களின் பிணங்களை இடப்பெயர்வு ஒன்றில் நடந்துகொண்டே பார்த்தேன். அந்த இடத்தைவிட்டு அம்மா என்னை மிகவேகமாக இழுத்துக்கொண்டு ஓடினாள். அம்மா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் என்னை எந்த திசைக்கு இழுத்துக் கொண்டு ஓடினாலும் எங்கும் பிணங்களே நிறைந்திருந்தன. இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையேதான் என்னுடைய பள்ளிக்கூட வாழ்வும் இருக்கிறது.எத்தனை எத்தனை ஊர்கள் எத்தனை பள்ளிக்கூடங்கள் பிறகு அவையே குண்டுத்தாக்குதலால் தகர்க்கப்பட்டும் இருக்கின்றன.எனக்கு பள்ளிக்கூடப் படிப்பின் மீது இருந்த ஒருவிதமான ஒவ்வாமையும் பிடிப்பின்மையும் தாண்டியும் எழுதத் தெரியும் என்கிறவரை படித்துவிட்டேன்.

முதல் கதை/ கவிதை எப்போது பிரசுரம்? எழுத வந்தது எப்படி? எழுத்தாளன் என எப்போது உணர்ந்தீர்கள்?

எழுத வந்தது எப்படியென்று நானறியேன். ஆனால் எனக்கு தேவாரப் பதிகங்கள் மீது வியப்பு தோன்றியதன் பிறகே எல்லாவற்றையும் உற்றுக் கவனித்தேன்.

“யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைப்பேன் ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே”

இப்படியாக முடியும் திருவாசகம் எனக்குள் போய் நின்றது.பிறகு பதிகங்களுக்குள்ளேயே உழன்றேன். சைவ இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு ஞானப்பால் தந்திருக்கின்றன என்று தெரியுமளவுக்கு ஓரளவு அதிலேயே கசிந்து கிடந்தேன். அதன் விளைவாக என்னுடைய பத்தாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்தேன்.அன்றைய காலகட்டத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளும், காசி ஆனந்தனின் கவிதைகளும் என்னை வெகுவாகப் பாதித்து உசுப்பின. இருவரின் கவிதை நடைகளையே நான் பின்தொடர்ந்தேன். எனது கவிதைகளை மேடைகள்தான் முதலில் வெளியிட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருக்கும் மேடைகளில் கவிதை வாசிப்பிற்கு தரப்பட்ட வாய்ப்புக்களை நான் தவறவிடவில்லை. அடிப்படையில் என்னுடைய தன்னியல்பான கலையார்வம் என்பது கவிதை, மற்றும் நாடகத்தில் தான் இருந்தது.நிறையக் கதைகளையும், கவிதைகளையும் ஏதேவொரு பதுங்குகுழியில் கைவிட்டுவிட்டேன். அவைகளின் இரத்தப் பிசுபிசுப்பும் சூடும் நான் மட்டுமே அறிந்தது. புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்ததற்கு பிறகு சில வருடங்கள் கழித்து எழுதத் தொடங்கினேன். கவிதைகளை எழுதுகிற மொழியின் வல்லபம் என்னிடம் தகித்துக் கிடந்தது. கவிதைகளை எழுதிக் கொண்டிருந்த காலங்களில் சிறுகதைகளை எழுதடா தம்பி என்று இந்தப்புலம்பெயர்வு வாழ்வில் நான் பெற்ற மகத்தான சகோதரர்களில் ஒருவரான எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சொன்னார். தோழர் தியாகுவும் ஒரு கூட்டத்தில் என்னிடம் கோரிக்கை விடுத்தார். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்களோடு ஒரு படப்பிடிப்பில் இருந்த சில நாட்களில் அவர் எனக்கு முன்வைத்துக் கொண்டிருந்த ஒரு கோரிக்கை சிறுகதை எழுதுங்கள் முதல்வன் என்பதுதான். எழுதுவதற்கு திட்டமிட்டு இருந்தாலும் தாமதித்துக் கொண்டிருந்த சிறுகதைகளை பெரியவர்களின் உந்துதலில் எழுதத் தொடங்கினேன். என்னுடைய “பைத்தியத்தின் தம்பி” என்கிற முதல் சிறுகதையை தமிழ்நாட்டின் “உயிர் எழுத்து” பத்திரிக்கை வெளியிட்டது.

ஆதர்ச எழுத்தாளர் தமிழில், உலக இலக்கியத்தில்?

அடிப்படையில் நானொரு வாசிப்பாளன். இலக்கியங்களை தேடிக் கண்டடைகிற சுகம் அலாதியானது. அப்படியான பயணத்தில் தமிழ் மட்டுமே தெரிந்திருக்கும் ஒருவனாக இருப்பதால் ஆங்கில நூற்களை வாசிக்க முடியாத கவலையும் இருக்கிறது. நான் ஆதர்ச எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்படியாக எவருமில்லை. ஆனால் சிலரின் எழுத்துக்களை நான் தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன். என்னளவில் அவர்களின் எழுத்துக்கள் புதிய உலகில் என்னை சங்கமிக்கச் செய்கின்றன. ஆதலால் நான் எவற்றையும் தட்டிக் கழிப்பதில்லை. அசலான வாசகன் என்பவன் ஒரு பேரலையைப் போல ஓய்ந்துவிடாமல் கொந்தளிக்க வேண்டும். இந்த வாசக அவதாரத்தில் நிலையான அமைதியோ ஓய்வோ அவனுக்கில்லை. என்னை வசீகரம் செய்த எழுத்தாளர்களின் பெயர்களை குறிப்பிட்டால் அது நீளமான பட்டியலாக இருக்கும்.

உங்கள் கதைகளுக்கு பொதுவாக எத்தகைய கவனிப்பும், விமர்சனமும் கிடைத்துள்ளது?

பொதுவாகவே ஈழ இலக்கியத்தை தொடக்க காலத்தில் வாசிப்பவர்கள் ஈழப் போராட்டம் பற்றி அறிந்தவர்களாகவே இருந்து வந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் அதனைத் தெரிந்துகொள்ளவே ஒரு பெருந்திரளானோர் ஈழ இலக்கியங்களை படிக்கிறார்கள். என்னுடைய கதைகளில் வருகிற சம்பவங்களும் பாத்திரங்களும் ஒரு வீரயுகத்தின் சுவடுகள். அவர்களின் உடல்மொழியில் இருந்து நிலத்தின் வாசனை வரைக்கும் என்னுடைய இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. எழுச்சியும், உக்கிரமான யுத்தமும், களச்சமர்களும், போரில் தமிழர் தரப்பு இறுதி வரை கடைபிடித்துவந்த ஒழுக்கமும், விடுதலைக்காய் நாம் செய்த தியாகமும், இயக்க அத்துமீறல்களையும், அரசினால் எம்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையையும், அதன் பின்னர் ஆண் பெண் என இருபாலருக்கும் நடந்த உடல் சித்ரவதைகளையும் இரத்த சாட்சியாக எழுதுகிறேன். அதற்கான கவனமென்பது எனது கதைகளுக்கானது மட்டுமென நான் புரிந்து கொள்ளவில்லை. அப்படியான காலகட்டத்தை வாசகர்கள் அரசியல் ரீதியாக புரிந்துகொள்ள முனைகிறார்கள். தமிழர்களின் இரத்தமும் கண்ணீரும் தோய்ந்த போராட்ட வாழ்வையும், அவர்களின் அறம் கொண்ட போரையும் வரலாற்றில் தெரிந்துகொள்ள விரும்புபவர்களின் கவனிப்பு எனது கதைகளுக்கு கிடைத்திருக்கிறது. நான் எதிர்கொண்டிருக்கும் விமர்சனங்கள் என்னளவில் சில கோஸ்டிகளால் உருவாக்கப்பட்டமை. அது குறித்தெல்லாம் எனக்கு கருத்துமில்லை கவலையுமில்லை.

இசை/நடிப்பு/ பயணம்/ சினிமா என உங்களின் பிற ஆர்வங்கள் என்ன?

இப்போது நிறைய எழுதவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறேன். கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு பாதியிலேயே நிறுத்திவிட்டேன். எழுதுவதற்குத்தான் மனம் கொதிக்கிறது. கடந்து வந்த நாட்களுக்கு நினைவுகளால் பயணம் செய்கிறேன். அங்கு போவதே பயங்கரமாய் இருக்கிறது. நெஞ்சு பதைபதைக்கிறது. நினைவின் கால்களில் குழந்தைகளின் மாம்சம் தட்டுப்படுகிறது. அய்யோ நந்திக்கடலே!

குறிப்பாக சினிமாவில், முழுநீள திரைப்படம் இயக்க உள்ளீர்கள். அந்த முயற்சிகளைப் பற்றி?

தமிழ்த்திரையுலகில் ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு எந்தப் பின்னணியும் இல்லாமல் இருக்கிற ஒருவன் படக்கூடிய அத்தனை பாடுகளையும் இப்போது அனுபவிக்கிறேன். திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறேன். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒருவர் வசனம் எழுதுகிறார். இந்த ஆண்டிற்குள் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிவிட வேண்டுமென்று மிகத் தீவிரமாக உழைக்கிறேன்.

முதன்மையாக நீங்கள் கவிஞரா அல்லது சிறுகதை எழுத்தாளரா? அல்லது இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லையா? கவிதை சிறுகதைகளின் மீது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

நான் கவிஞனும் அல்லன்; எழுத்தாளனும் அல்லன். நானோர் ஏதிலி. விடுதலைக்காய் காத்திருக்கும் ஒரு தலைமுறையின் உயிரி. என்னுடைய சிந்தையின் உள்வீதியெங்கும் நான் விட்டுவந்த எனது வீடும் கோவிலும் ஊர் சனங்களும் உலாத்திக்கொண்டே இருக்கின்றனர். உலகில் எந்தத் தரையில் நித்திரை கொண்டாலும் கனவில் குண்டுகளுக்கு பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன். நான் கவிதைகளை எழுதத் தொடங்கினேன். பிறகு கதைகளை எழுதத் தொடங்கினேன். ஆனால் இவை இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. கவிதையை மிக லேசில் எழுதிவிட்டு அதிலிருந்து கழல முடியாது. அவை மீண்டும் மீண்டும் எழுதியவனையே தாக்கும். என்னுடைய கவிதைகள் வார்த்தைகளால் கட்டுமானம் செய்யப்படும் கலையல்ல. அதற்குள் ஜீவிதத்தின் தீனக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதனை நெய்துமுடிப்பதே ஒரு சித்ரவதை. கூடவே மீண்டும் படுகொலைக்கு உள்ளாவது போலானது. கதைகள் சற்று இளைப்பாறல் என்று சொல்லலாம். கவிதையும் சிறுகதையும் அர்த்தத்தில் வேறுவேறானவை. ஆனால் கவிதையிலிருக்கும் ஓரிழை சிறுகதைக்குள் சேர்கிறபோது கதைக்குள் ஜொலிப்பின் ஜ்வாலை கூடுகிறது என்று நான் அனுபவிக்கிறேன். என்னுடைய கதைகளில் நான் கவிதை எழுதுவதாகக்கூட சிலர் சொல்லுவதுண்டு.அதற்காக நான் அதனைக் கைவிடுவதில்லை.

உங்கள் கதைகளில் உவமை பயன்பாடு சற்று மிகையாகவும் பொருத்தமற்றதாகவும் இருப்பதாக கூறப்படும் விமர்சனத்தைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? அது உங்கள் தனித்தன்மையா?

உவமைகள் அதிகம் கொண்டு என்னுடைய சில கதைகள் இருக்கின்றன. இருக்கவும் செய்யும். அதுவொன்றும் குற்றமில்லை. நான் ஒரு கதையின் ஆன்மாவை உவமையால் அழித்தொழிக்கமாட்டேன். பல கதைகளில் உவமையை உரித்தும் எழுதுகிறேன். ஆனால் பொருத்தமற்று உவமையை பயன்படுத்துவதாக இதுவரைக்கும் விமர்சனத்தை கேட்டதில்லை. நீங்கள் கூட ஒரு அமர்வில் அதிகமாக இருக்கிறது என்று சொன்னீர்கள். அடிப்படையில் “உவமை”யை நான் தீண்டாமைக்கு உட்படுத்த விரும்பவில்லை. பிறகு அவைகளை அதிகமாக பயன்படுத்துவதாக எனக்கு இன்னும் தோன்றவுமில்லை. உண்மையில் சொல்வதனால் அதனை நான் எனது தனித்தன்மை என்று புரிந்துகொள்கிறேன். என்னுடைய கதைகளில் கலைத்தன்மையும் அழகியலும் குறைவாக இருக்கிறது என்று கூட சில எழுத்தாளர்கள் சொல்லக் கேட்டதுண்டு. முள்ளிவாய்க்காலிலிருந்து வந்து கலைத்தன்மையைக் காப்பாற்ற எழுதவில்லை என்று எனக்குத் தீர்மானமாய் தெரியுமென்பதால் நான் குழம்பிப் போவதில்லை.

உங்கள் கதைகளில் சமநோக்கு இல்லை. புலி ஆதரவு கருத்தியல் வலுவாக, ஏறத்தாழ பிரகடனமாக உள்ளதாக கூறப்படும் விமர்சனத்தைப் பற்றி?

நான் உண்மைகளை எழுதுகிறேன். ஊழிக்காலத்தின் ஒவ்வொரு கணங்களையும் அதிலிருந்து மீண்டவன் என்கிற வகையில் எழுதுகிறேன். நான் எனது மண்ணுக்காகவும் விடுதலைக்காகவும் போராடிய விடுதலைப் போராளிகளை ஆதரிப்பேன். அது என்னுடைய தார்மீகப் பொறுப்பு. புலிகள் இயக்கம் செய்த தவறுகளையும், குற்றங்களையும்கூட என்னுடைய கதைகள் பேசுகின்றன. ஆனால் அவர்கள் செய்யாத குற்றங்களை எல்லாம் செய்தார்களென பொய்யுரைக்க முடியாது. நான் விடுதலைப் போராளிகளான புலிகளை என்னுடைய இலக்கியத்தில் பிரகடனம் செய்கிறேன், ஏனெனில் நான் வாழ்ந்த காலத்தின் தியாகிகள் அவர்கள். நிலத்தின் விடுதலைக்காய் போராடியவர்களை நான் இன்னும் இன்னும் போற்றுவேன். எனது விடுதலையை பிரகடனம் செய்தவர்கள் அவர்கள்.அவர்களை நானும் என் இலக்கியத்தில் பிரகடனம் செய்வேன்.

புலி எதிர்ப்பாளர்களை உங்கள் கதைகள் ஒற்றை நிறமுடையவர்களாக காட்டுவதாக தோன்றுகிறது. ஆதரவு- எதிர்ப்பு இருமையை கடந்து மகத்தான மானுட அற மோதல்களை களமாக்க தவற விடுவதாக எனக்கொரு எண்ணம் இந்த விமர்சனத்தைப் பற்றி உங்கள் பதில் என்ன?

உங்கள் கேள்வியே என்னை கொதிப்படையச் செய்கிறது. புலி எதிர்ப்பாளர்கள் என்று நீங்கள் வகைப்படுத்துபவர்கள் எழுதும் கதைகளை ஒரு ஈழத்தமிழனாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. புலிகள் சனங்களுக்கு கிளைமோர் வைத்தார்கள் என்று எழுதுகிறவன் எப்படி இந்தக் காலத்தில் ஈழ எழுத்தாளன் என்கிற வகைமைக்குள் கொண்டுவரமுடியும். புலிகளை எதிர்க்கிறேன் என்கிற பேரில் ஒரு அரசு உலகோடு சேர்ந்து செய்த இனப்படுகொலையை சமன் செய்யத் துடிக்கும் அநீதியாளர்கள் அனைவருக்கும் ஒரு நிறம்தான். புலிகள் சனங்களிடம் தங்கத்தை வாங்கி அதில் துப்பாக்கி ரவைகள் செய்தனர் என்று எழுதப்படும் கதைகளை எனது தலைமுறை ஏற்றுக்கொள்ளாது. புலி எதிர்ப்பு வாதம் தன்னை நிரந்தரமான ஒரு சக்தியாக தக்கவைக்க விரும்புகிறது. ஆனால் அவர்களால் பேருண்மையை எதிர்கொண்டு நிலைக்க முடியவில்லை. ஆதரவு –எதிர்ப்பு இருமையைக் கடந்து மானுட அறமோதல்களை பேசவில்லையா? நான் பேசுகிறேன். இன்றைய காலகட்டத்தில் புலியெதிர்ப்பு வாதிகளின் கதைகளுக்கு எதிராக தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு எழுதுவது என்பதே மானுட அற மோதல்தான் என்பதை உங்களால் (தமிழக அறிவுஜீவிகள்) புரிந்துகொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.

அனுபவங்களை கதையாக்கும்போது உள்ள சவால் என்ன, உணர்ச்சிகரமான கதைகள் மெலோடிராமாவாக எஞ்சிவிடும் அபாயம் உண்டே?

எல்லா அனுபவங்களையும் எழுதிவிடுகிற காலம் எனக்கு இன்னும் வாய்க்கவில்லை. அவலங்களை எழுதவே முடியவில்லை என்பது பேரவலம். ஆனால் எழுதும் கதைகளில் உணர்ச்சிகரமான நிலையை நான் அடைகிறேன். அதற்காக மென்சோக/மென்இன்ப நாடகமாக அவைகள் எஞ்சிவிடுமென நான் அஞ்சுவதில்லை. அப்படி சில கதைகள் உருவானாலும் அதொன்றும் சமூக குற்றமோ, இலக்கியத் தவறோ கிடையாது. எல்லோர் வாழ்க்கையிலும் மெலோடிராமாக்கள் இருக்கவே செய்கின்றன.

சமகால ஈழ இலக்கியத்தைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

இனி வருகிற நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கியத்தின் செழுமையும், பெருமையும் தமிழீழர்களால் எழுதப்படுகிற படைப்புக்களினாலேயே பெருகப் போகிறது. போரும் போர் சார்ந்த வாழ்வும் தமிழ்மொழியின் நவீன இலக்கியத்திலும் ஒரு புறநானூறாக இப்போது எழுகிறது. தமிழ் மொழிக்கு புதிய சொற்களை ஈழத்தமிழரின் போரிலக்கியம் தந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஈழத்தமிழ் இலக்கியம் என்பது ஒரு அரசியல் பூர்வமான சொல்லாடல். அதுவும் மறுக்கப்பட்ட நீதிக்காய் மானுடத்தின் குரலாக எழுகிற எழுத்து ஊழியம். வெறும் ஈழத்தமிழனாக பிறந்திருப்பதாலேயே அவர் எழுதுவதை ஈழ இலக்கியம் என்கிற வகைப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது என்பது எனது கருத்து. நாம் இந்த நூற்றாண்டில் சந்தித்த மாபெரும் மனிதப் படுகொலையின் பின்னர் ஒரு எழுத்தாளனுக்கு புனைவுத்திறனைப் பார்க்கிலும் அறம் முக்கியமான தகமையாக இருக்கிறது. இந்தப் புள்ளியில் இருந்துதான் நீங்கள் சரியான ஈழ இலக்கியத்தை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.தமிழிலக்கியத்தின் போரிலக்கியமும் பேரிலக்கியமும் ஈழ இலக்கியங்கள்தான்.

முக்கியமான ஈழ இலக்கிய ஆக்கங்கள் – ஒரு பட்டியலிட முடியுமா?

பஞ்சமர் – டானியல்
ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் கதை- என்.கே ரகுநாதன்
பெண் போராளிகள் எழுதிய கவிதைகள்/கதைகள்
சிவரமணி கவிதைகள்
செல்வி கவிதைகள்
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகள
நிலாந்தனின் கவிதைகள்
தீபச்செல்வன் கவிதைகள்
எஸ்.போஸ் படைப்புக்கள்
எனது நாட்டில் ஒரு துளிநேரம் – ந.மாலதி
காலம் ஆகிவந்த கதை –அ.இரவி
மலைமகள் கதைகள்
மாயினி ,வரலாற்றில் வாழ்தல் –எஸ்.பொ
சேரன் கவிதைகள்
சண்முகம் சிவலிங்கம் கவிதைகள்
வ.ஐ.ச ஜெயபாலன் கவிதைகள்
சு.வில்வரத்தினம் கவிதைகள்
க. சச்சிதானந்தன்
அ.யேசுராசா கவிதைகள்
பார்த்தீனியம் –தமிழ்நதி
விடமேறிய கனவு –குணா கவியழகன்
எழுதித் தீராத பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்
போர் உலா –மலரவன்
ஜெப்னா பேக்கரி –வாசு முருகவேல்
தமிழகத்தின் ஈழ அகதிகள் – பத்திநாதன்

அடுத்தக்கட்ட திட்டங்கள் என்ன?

திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறேன். என்னுடைய கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியில் தீவிரமாய் இருக்கிறேன். ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் மிக விருப்பத்தோடு என்னுடைய கதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். மிக விரைவில் ஆங்கிலத்தில் என்னுடைய கதை வெளியாகிவிடும்.

ஏன் எழுதுகிறீர்கள் எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

மனுஷத்துவம் அவலப்பட்டு அழிந்துபோன முள்ளிவாய்க்கால் ஊழியிலிருந்து உயிர் பிழைத்திருக்கிறேன். நெம்பிக் கிடக்கும் மானுட சோகத்தை இவ்வுலகிற்கு தெரியப்படுத்த வேண்டுமென்பதில் தீர்மானமாயிருக்கிறேன். லட்சோப லட்ச மக்களை கொன்றும் உயிர் தப்பிய மக்களை நிர்வாணப்படுத்தியும் ஆயுதங்களின் முன் சரணாகதி அடையச் செய்த அநாகரிகமான இவ்வுலகத்தினரோடு நான் உரையாடுகிற தொடர்பு சாதனமாக எனது எழுத்தை வரித்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமில்லை வேடனுக்கும் சிங்கத்திற்கும் நடக்கும் சண்டையில், சிங்கத்திற்கென தனியான வரலாற்றாசிரியன் இல்லையென்றால் வேடன் சொல்வதே வரலாறாகும் என்ற சினுவ அச்சிபியின் வார்த்தையைத்தான் ஒரு தமிழீழனாக நானும் சொல்ல விரும்புகிறேன். வென்றவர்களும்,கொன்றவர்களும் அரச படுகொலையாளர்களுக்கு சார்பானவர்களும் எழுதுகிற இலக்கியங்கள் சனங்களின் இரத்தத்தின் மீதே கட்டியெழுப்படும் பொய்களாகவே இருக்கிறது. நான் அவற்றுக்கு எதிராகவும் ஒரு சமரைச் செய்து கொண்டிருக்கிறேன். எழுத்தென்பது எனக்கு அறம். அறம் வெல்லும் அஞ்சற்க என்பது என் எழுத்தின் வேட்கை. நான் அறத்தின் உயிருக்காக என் ஆயுள் முழுக்க எழுதுவேன்,எழுதுகிறேன்.

அப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)

(தமிழாக்கம் – மைத்ரேயன்)

நான் ஹோமரைப்[1] பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.  அவருடைய இரண்டு புத்தகங்களும் இரண்டு அடிப்படை அதிபுனைவுக் கருக்களைக் கொண்டவை என்று அப்போது தோன்றியது: போரும், நெடும்பயணமும்.

எனக்கு நிச்சயமாகத் தெரியும், இதே எண்ணம் பலருக்கும் தோன்றி இருக்கும். அதுதான் ஹோமர். ஜனங்கள் அவருடைய புத்தகங்களை நாடிப் போய், புதுப் புது விஷயங்களை அவற்றில் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அல்லது பழையவற்றை, அல்லது முதல் தடவையாக எதெதையோ, அல்லது ஏற்கனவே கண்டவற்றை மறுபடியும் ஒரு தடவையாகக் கண்டு பிடித்து அவற்றைப் பற்றிப் பேசுகின்றனர். இரண்டு அல்லது மூன்று ஆயிரம் ஆண்டுகளாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எதுவுமே, இத்தனை காலமாக யாருக்காவது அர்த்தமுள்ளதாகத் தென்படுகிறது என்பதே ஒரு அதிசயம்தான்.

அது எப்படியானாலும், தி இலியட்[2] என்பது போர் (உண்மையில் அதன் ஒரு பகுதிதான் அப்படி, இறுதிப்பகுதிக்கு அருகில், ஆனால் இறுதிப் பகுதி அப்படி அல்ல). த ஆடிஸி[3] என்பதோ நெடும்பயணம் (அங்கே, பிறகு திரும்பி இங்கே- என்று பில்போ[4] சொல்கிற மாதிரி).

போரைப் பற்றி எழுதிய பல எழுத்தாளர்களை விட புத்திசாலித்தனமாக ஹோமர் நடந்து கொண்டிருக்கிறார், அவர் எந்த சாரியையும் சார்ந்திருக்கவில்லை.

ட்ரோஜன் போர் [5] நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடந்த போர் அல்ல, அதை அப்படி நாம் மாற்றி விடவும் முடியாது. அது ஒரு போர், அவ்வளவுதான். அழிவைக் கொணர்ந்த, பயனேதுமற்ற, தேவையற்ற, முட்டாள்தனமான, நீண்ட, கொடுமையான குழப்பம் அது. தனி நபர்களின் துணிகரமான செயல்களும், கோழைத்தனமும், மேன்மையுள்ள நடத்தையும், காட்டிக் கொடுக்கும் செயல்களும், கால்-கைகளை வெட்டி எறிவதும், குடலை உருவும் காட்சிகளும் நிரம்பிய போர்.

ஹோமர் கிரேக்க நாட்டவர்.[6] கிரேக்கர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கக் கூடும், ஆனால் அவரிடம் நீதி நாடும் அல்லது சமநிலை தேடும் புத்தி இருந்திருக்கிறது, அது கிரேக்கர்களுக்கே உரிய குணம் போலத் தெரிகிறது. ஒருக்கால் அவருடைய மக்கள் அவரிடம் இருந்து இந்தக் குணத்தின் பெரும் பங்கைப் படித்துக் கொண்டார்களா? அவருடைய சார்பின்மை உணர்ச்சிகளற்றதல்ல; அந்தக் கதை உணர்ச்சி பொங்கும் செயல்களும், தாராளமானதும், வெறுப்பூட்டுவதும், பிரமிக்கத் தக்கதும், பொருட்படுத்தத் தேவை இல்லாததும் பெருக்கெடுத்தோடும் வெள்ளம். ஆனால் அது சார்பற்றது. அது சாத்தான்- எதிர் -தேவதைகள் என்ற எதிரிடை இல்லாதது. புனிதப் போராளிகள்- எதிர்- நாத்திகர் என்பதாக இல்லாதது. அதில் ஹாப்பிட்கள்- எதிர்- ஆர்க்குகள் இல்லை. அதில் ஜனங்கள்- எதிர்- ஜனங்கள்தான் இருக்கிறது.

ஒருவர் ஒரு தரப்புக்குச் சார்புள்ளவராக இருக்கலாம், அனேகமாக எல்லாரும் அப்படிச் செய்கிறார்கள். அப்படிச் செய்யாமல் இருக்க நான் முயல்கிறேன், ஆனால் அது பயனற்ற முயற்சி. எனக்குக் கிரேக்கர்களை விட ட்ரோஜன்களைக் கூடுதலாகப் பிடிக்கிறது. ஆனால் ஹோமர் உண்மையிலேயே தரப்புச் சாய்வு கொள்ளவில்லை, அதனால் அவர் கதையை சோகக் கதையாக ஆக அனுமதிக்கிறார். சோகத்தால், ஆன்மாவும் மனமும் வருத்தப்படுகின்றன, பெரிதாகின்றன, உயர்த்தப்படுகின்றன.

அதனளவில் போர் என்பது ஒரு சோகக்கதையாக உயர முடியுமா, அது ஆன்மாவை விரிவடையச் செய்து உயர்த்துமா, இதையெல்லாம் போரில் என்னை விட உடனடியாகப் பங்கெடுத்திருப்பவர்களுக்குக் கேள்விகளாக விடுகிறேன். சிலர் அது அப்படிச் செய்யக் கூடியது என்று நம்புவதாக நான் கருதுகிறேன், அவர்கள் வீர சாகசங்களுக்கு அங்கு வாய்ப்பு கிட்டுவதாகவும், சோகங்கள் போருக்கான நியாயங்களைக் கொடுப்பதாகவும் சொல்லக் கூடும். எனக்கு அது தெரியவில்லை; எனக்குத் தெரிந்ததெல்லாம் போரைப் பற்றிய காவியம் என்ன செய்யக் கூடும் என்பதுதான். எப்படி இருந்தாலும், போர் என்பது மனிதர்கள் செய்வது, அவர்கள் அதை நிறுத்துவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை, அதனால் அதைக் கண்டனம் செய்வதை விட, நியாயப்படுத்துவதை விட, அதைச் சோகமானதாகக் கருதுவது முக்கியமானது.

ஆனால் ஒரு முறை நாம் ஒரு தரப்பின் பால் சாய்ந்தால், அந்த விதமாக போரைக் கருதுவது நமக்கு இயலாமல் போகும்.

நல்ல மனிதருக்கும் தீய மனிதருக்கும் இடையில் போர் நடக்க வேண்டுமென்று நாம் விரும்புவதற்குக் காரணம் நம்முடைய பிரதான மதம்தானா?

நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போரில் தெய்வ அல்லது அமானுஷ்ய நீதி இருக்கலாம், ஆனால் மனித சோகம் இருக்காது. நியதிப்படியே அதுதான் வரையறை. நன் முடிவு: (டாண்டேயின் ‘த டிவைன் காமெடி’யை உதாரணமாகக் கொள்ளலாம்) நல்லவர்கள் வெல்ல வேண்டும். அதன் முடிவு மகிழ்ச்சியாக இருக்கும். தீயவர்கள் நல்லவர்களைத் தோற்கடித்தால் அது துன்பமான முடிவு, அது எதிரிடை, காசைச் சுண்டினால் மறுபுறம் விழுவது போல. படைப்பவர் இங்கு சார்பில்லாமல் இல்லை. சீர்கெட்ட உலகு என்பதே சோகக் கதையாகாது.

கிருஸ்தவரான மில்டன், ஒரு புறம் சார்பு கொள்ள வேண்டியிருந்தது, அதனால் அவரால் மகிழ்வான முடிவைத் தவிர்க்க முடியவில்லை. சோகக் கதையாக ஆக்க, அவர் தீமையுருவான லூஸிஃபரை, பேருருவாக, நாயகக் குணம் கொண்டவனாக, பரிவோடு கூட அணுகிச் சித்திரிக்க வேண்டி வந்தது- அதை அவர் பொய்யாகத்தான் செய்ய வேண்டி வந்தது. அவர் நன்றாகவே பொய்ப் பாவனை செய்திருந்தார்.

ஒருக்கால் இந்தச் சிந்தனைப் பழக்கம், எதிரிடை வழி நோக்குவது, கிருஸ்தவத்துக்கு மட்டுமானதாக இல்லாமல் இருக்கலாம், மாறாக நாம் எல்லாருமே வளரும்போது எதிர்கொண்ட துன்பங்கள், நீதி என்பது நன்மையைச் சார்ந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவோராக நம்மை ஆக்கி இருக்கின்றன போலும்.

எப்படி இருந்தாலும், “சிறந்தவர் வெல்லட்டும்” என்று சொல்வதற்குப் பொருள் நல்லவர் வெல்லட்டும் என்பதில்லை. அதற்குப் பொருள், “இது ஒரு நியாயமான போராட்டம், ஒரு முன் முடிவும் இல்லாதது, இடையீடு ஏதும் இல்லாதது- எனவே சிறந்த போராளி வெல்வார்,” என்பதுதான். சதி செய்யும் முரடன் நேர் வழியில் நல்லவனைத் தோற்கடித்தால், சதிகார முரடன் வென்றவனாக அறிவிக்கப்படுவான். அது நியாயம்தான். ஆனால் இந்த வகை நீதியைக் குழந்தைகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் அதற்கெதிராக ஆத்திரப்படுவார்கள். இது நியாயமில்லை! (என்பார்கள்).

ஆனால், அதைச் சகித்துக் கொள்ளக் குழந்தைகள் பழகிக் கொள்ளவில்லை என்றால், வெற்றி அல்லது தோல்வி என்பன, போர்க்களத்திலும் சரி, அல்லது முழுதுமே ஒழுக்கத்தையே பற்றி இராத எந்தப் போட்டியிலும் (அது என்ன போட்டியானாலும்) சரி, ஒழுக்கத்தில் மேன்மை என்பதோடு சம்பந்தப்படாதவை என்பதைக் கற்க மாட்டார்கள்.

வலிமை என்பதே சரியானதாகி விடாது- அப்படித்தானே?

அதனால் சரி என்பதே வலிமையாகாது. இதுவும் சரியா?

ஆனால் நாம் அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதாவது “என் இதயம் சுத்தமாக இருப்பதால், என் வலிமை என்பது பத்துப் பேரின் வலிமைக்கு ஈடானது,” என்பதை.

நிஜ உலகில் இறுதியாக வெற்றி பெறுபவர் நல்லவராகத்தான் இருக்க முடியும் என்று நாம் வற்புறுத்தினால், நாம் நல்ல நடத்தையை வலிமைக்குப் பலியிட்டு விடுகிறோம். (போர்கள் முடிந்த பின் வரலாறு இதைத்தான் சாதிக்கிறது. வென்றவர்களை அவர்களின் மேலான நற்குணங்களுக்காகப் பாராட்டுவதையும், அவர்களின் மேம்பட்ட தாக்கும் சக்தியையும் பாராட்டும்போது வரலாறு செய்வது இதைத்தான்.) நல்ல மனிதர்கள் எப்போதும் யுத்தங்களில் தோற்கும்படியாகவும், இறுதிப் போரில் வெல்லும்படியாகவும் போட்டிகளை நாம் திரித்து அமைத்தால், நாம் நிஜ உலகை விட்டுப் போய், அதிபுனைவு உலகுக்குள் நுழைந்து விடுகிறோம்- நம் விருப்பத்துக்கு எல்லாவற்றையும் அமைக்கும் நாடாகி விடும் அது.

ஹோமர் அப்படி கற்பனைக்கு எதார்த்தத்தை வளைக்கும் செயலைச் செய்யவில்லை.

ஹோமரின் அக்கீலஸ் கட்டுப்பாடற்ற ஒரு அதிகாரி, முகம் கோணியவன், தன்னிரக்கத்தில் ஊறிய இளைஞன், மூக்குடைபட்டதால் தன் அணியின் சார்பில் போரில் கலந்து கொள்ள மறுப்பவன். அவனுடைய நண்பன் பாட்ரோக்ளொஸ் மீது அவன் கொண்ட அன்பு ஒன்றில் அவன் ஒரு நாள் வளர்ந்து மன முதிர்ச்சி பெற்றவனாக வாய்ப்பு இருக்கிறதாகச் சுட்டுகிறது. அப்படி வளர, அவனுக்குச் சற்று அவகாசம் தேவை. ஆனால் அவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதற்குக் காரணத்தை நோக்கலாம்- அவனுக்கு வன் புணர்வு செய்து அடைவதற்கு ஒரு பெண் கொடுக்கப்பட்டிருக்கிறாள், அவளை அவன் தன் மேலதிகாரியிடம் திருப்பிக் கொடுக்கும்படி ஆகிறது என்பது அந்தக் காரணம். என்னைப் பொறுத்தவரை இது அவனுடைய காதல் கதையை (பாட்ரோக்ளொஸ் மீது கொண்ட அன்பை) ஒளியிழக்கச் செய்கிறது. என்னைப் பொறுத்தவரை அக்கீலஸ் நல்லவன் அல்ல. ஆனால் அவன் ஒரு நல்ல போர்வீரன், சிறப்பாக யுத்தம் செய்பவன் – ட்ரோஜன்களின் சிறந்த போர்வீரனான ஹெக்டரை விடவும் மேலான வீரன். ஹெக்டர் எப்படிப் பார்த்தாலும் ஒரு நல்லவன் – அன்பான கணவன், அன்புள்ள அப்பா, எல்லா விதங்களிலும் பொறுப்பானவன் – மேன்மை பொருந்திய கனவான். ஆனால் நல்ல குணம் என்பது வலிமையாகாது. அக்கீலஸ் அவனைக் கொல்கிறான்.

தி இலியட் காவியத்தில், புகழ் பெற்ற ஹெலனுக்கு உள்ள பங்கு மிகச் சிறியது. அவள் மொத்தப் போரிலிருந்தும் அவளுடைய நன்கு கழுவி, சீராக வாரப்பட்ட தங்க நிற முடிகூடக் கலையாமல் மீண்டு விடுவாள் என்பது எனக்குத் தெரியும், அதனால் அவளை ஒரு சந்தர்ப்பவாதி, ஒழுக்கமற்றவள் என்றும், சுடும் உலையிலிருந்து சேதமில்லாமல் மீளும் உலோகத் தகட்டிற்கு இருக்கிற அளவு உணர்ச்சிகள்தான் அவளது உணர்வுகளின் ஆழம் என்றும் நான் கருதுகிறேன். ஆனால் நல்லவர்கள்தான் வெல்வார்கள் என்று நான் கருதினால், பரிசு நல்லொழுக்கம் உள்ளவர்களுக்கே போய்ச் சேரும் என்று நான் கருதினால், அவளை பழியற்ற அழகி, அவளுக்கு விதியிழைத்த கொடுமையிலிருந்து கிரேக்கர்கள் அவளை மீட்டனர் என்று நான் கருத வேண்டி வரும்.

மக்களும் அவளை அப்படியே பார்க்கின்றனர். ஹோமர் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி ஒரு ஹெலனை உருவாக்கிக் கொள்ள இடம் கொடுக்கிறார்; அவள் அதனால் இறப்பற்ற நித்தியம் உள்ளவளாக ஆகி விடுகிறாள்.

இப்படிப்பட்ட மேன்மை எந்த நவீன கால அதிபுனைவு எழுத்தாளருக்காவது சாத்தியமா என்பது (வாயுக்களில் ’மேன்மை’ பொருந்திய வாயுக்கள் என்று ஏதும் உண்டென்றால் அந்த வகை மேன்மை என்று எடுத்துக் கொள்ளுங்கள்) எனக்குத் தெரியவில்லை. நாம் வரலாற்றை புனைவிலிருந்து பிரித்து எடுக்க அத்தனை துன்பம் மேற்கொண்டிருப்பதால், நம் அதிபுனைவுகள் தீவிர எச்சரிக்கைகளாக, வெறும் இரவு வேளைக் கொடும் கனவுகளாக, அல்லது விருப்ப நிறைவேற்றல்களாக மட்டுமே ஆகி இருக்கின்றன.

வேறெந்தக் கதையாவது த இலியட்டோடு ஒப்பிடக் கூடிய போர்க்கதையாக இருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை. ஒருக்கால் அந்த பிரும்மாண்டமான இந்தியக் காவியம், மஹாபாரதம் வேண்டுமானால் ஒப்பிடக் கூடியதாக இருக்கலாம். அதன் ஐந்து சகோதர நாயகர்கள் நிச்சயமாக பெருநாயகர்கள் எனலாம். அது அவர்களின் கதைதான் – ஆனால் அது அவர்களுடைய எதிரிகளின் கதையும் கூட, எதிரிகளும் நாயகர்களாகவே இருக்கிறார்கள், அவர்களில் சிலர் பிரமாதமான மனிதர்களாகவும் இருக்கிறார்கள் – அதில் எல்லாமே பிரும்மாண்டமாக, கடும் சிக்கல்கள் கொண்டதாக, ஏகமாக நல்லதும், கெட்டதும் அவற்றின் விளைவுகளும், கிரேக்கக் கடவுள்களையும் விட நேரடியாகவே எல்லாவற்றிலும் தலையிடும் கடவுள்களும் உண்டு- ஆனால் அதன் இறுதி முடிவு சோகமானதா, இன்பமானதா?  அதெல்லாவற்றையும் பார்த்தால் ஒரு பெரும் கொப்பரையில் அள்ள அள்ளக் குறையாத உணவு இருப்பது போலவும், நாம் நம் கரண்டியை அதில் போட்டு எடுத்து நமக்கு வேண்டும் உணவைக் கொண்டு நமக்குத் தேவையான சத்துணவைப் பெற முடியும் என்றும் தோன்றும். ஆனால் அடுத்த முறை அதுவே வேறு விதச் சுவையோடு இருக்கும்.

மொத்தமாகப் பார்த்தால் மஹாபாரதத்தின் சுவை தி இலியட்டிலிருந்து மிக மிக வேறுபட்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், தி இலியட் (நியாயமற்ற தெய்வீக இடையீடுகளை விட்டு விட்டுப் பார்த்தாலும்) கடூரமான முறையில் எதார்த்தமாகவும், இரக்கமற்று ரத்த வெறியோடு போரில் என்ன நடக்கிறது என்று கவனிப்பதாகவும் இருக்கிறது. மஹாபாரதம் பிரமிக்க வைக்கும் வகையில் அதிபுனைவாக உள்ளது, சூபர்ட்யூபர் ஆயுதங்களின் அமானுஷ்ய சாதனைகள் பற்றியதாக உள்ளது. அவர்களுடைய ஆத்மத் துயர்களில்தான் இந்திய நாயகர்கள் திடுமென்று இதயத்தைப் பிளக்கும் விதமாக, மனதை மாற்றும் படியாக எதார்த்தமாக மாறுகிறார்கள்.

பயணம் பற்றி என்ன என்றால்:

தி ஆடிஸியின் நிஜமான பயணப் பகுதிகள், யாரோ ஒருவர் கடல் அல்லது நிலப் பகுதி வழியே பெரும்பயணங்கள் மேற்கொண்டு, அசாதாரணமான அதிசயங்களையோ, பயங்கரங்களையோ அல்லது ஆசை காட்டுதல்களையோ அல்லது சாகசங்களையோ எதிர்கொள்வதாகவும், அவ்விதத்தில் வளர்ந்ததாகவும், சில சமயங்களில் இறுதியாகச் சொந்த ஊருக்குத் திரும்புவதாகவும் அமையும் அதிபுனைவுகளை நாம் எல்லாரும் அறிந்திருப்போம், அவற்றை ஒத்தது.

ஜங்கியச் சிந்தனையைப் பின்பற்றுவோரில் ஒருவரான, ஜோசஃப் காம்ப்பெல், இந்த வகைப் பயணங்களை ஒரு சில ஆதி முன்மாதிரி சம்பவங்களாகவும், படிமங்களாகவும் பொதுமைப்படுத்தி இருக்கிறார். இந்த பொதுமைப்படுத்தல்கள் விமர்சனங்களுக்கு உதவலாம், ஆனால் அவை (சீர் தூக்கப்படும் விஷயத்தை) குறுக்குவதால், அழிக்கின்றன என்று நான் கருதுகிறேன், அதனால் அவற்றை நான் நம்புவதில்லை. “ஆ, இரவுப் பயணம்!” என்று நாம் கூவுகிறோம், முக்கியமான எதையோ நாம் புரிந்து கொண்டு விட்ட மாதிரி உணர்கிறோம் – ஆனால் நான் அதை அடையாளம் கண்டு கொள்வதை மட்டுமே செய்திருக்கிறோம். அந்தப் பயணத்தை நாமே மேற்கொள்ளாத வரை, நாம் எதையும் புரிந்து கொள்வதில்லை.

ஒடிஸீயஸின் பயணங்கள் அத்தனை பிரமாதமான சாகசங்களைக் கொண்டவை என்பதால், அந்தப் புத்தகத்தில் எவ்வளவு அவனுடைய மனைவியையும், மகனையும் பற்றியது – அவன் பயணத்தில் இருக்கும்போது அவனுடைய வீட்டில் என்ன நடக்கிறது, எப்படி அவனுடைய மகன் அவனைத் தேடிப் பயணம் மேற்கொள்கிறான் என்பதோடு, வீடு திரும்புவதில் ஒடிஸீயஸிற்கு என்னென்ன சிக்கல்கள் எழுகின்றன- போன்றவற்றை நான் மறக்கத் தலைப்படுகிறேன். டொல்கீனின் ’த லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ புத்தகத்தில் எனக்குப் பிடித்த அம்சம், நாயகன் தன் ஆயிரம் முகங்களை உலகெங்கும் கொண்டு போகும்போது, நாயகன் பின்னே விட்டுச் சென்ற விவசாயப் பண்ணையில் என்ன நடக்கிறது என்பதன் முக்கியத்துவத்தை டோல்கீன் அறிந்திருக்கிறார் என்பதுதான். ஆனால் ஃப்ரோடோவுடனும், மற்றவர்களுடனும் நீங்கள் திரும்பி அங்கே போகும் வரையில், டோல்கீன் ஒரு போதும் உங்களை வீட்டுக்கு அழைத்துப் போவதில்லை. ஹோமர் அழைத்துப் போகிறார். அந்தப் பத்து வருடப் பயணம் பூராவும், வாசகரே பெனலபியை எப்பாடு பட்டாவது சென்றடைய முயலும் ஒடிஸீயஸ், மற்றும் எல்லா இடர்களையும் தாண்டி ஒடீஸீயஸுக்காகக் காத்திருக்க முயலும் பெனலபி- பயணியும், இலக்கும் அவரே. இது காலத்தையும் இடத்தையும் ஊடுபாவாகப் பின்னும் பிரமாதமான கதைப் பரப்பு.

ஹோமர், டோல்கீன் ஆகிய இருவருமே தொலை தூரம் பயணம் மேற்கொள்ளும் ஒரு பயணிக்கு வீடு திரும்புவது என்பது எத்தனை துன்பகரமானது என்பதை எழுதுவதில் கவனிக்கத்தக்கபடி நேர்மையாக இருக்கிறார்கள். ஒடீஸியஸோ, ஃப்ரோடோவோ நீண்ட நாள் வீட்டில் தங்கி இருப்பதில்லை. அரசர் மெனலேயஸ் தன் மனைவி ஹெலனைத் திரும்பப் பெறுவதற்காக மற்ற கிரேக்கர்களுடன் சேர்ந்து கொண்டு, ட்ராய் நகரைச் சுற்றிப் பத்தாண்டுகள் போர் புரிந்திருக்கிறார். அவர் மனைவி ஹெலனோ பத்திரமாக ட்ராய் நகரின் கோட்டைச் சுவர்களுக்குப் பின்னே இருந்திருக்கிறாள், எல்லா அலங்காரங்களுடனும், சுந்தர புருடனான பாரிஸுடன் காலம் கழித்திருக்கிறாள் (அவன் கொல்லப்பட்டபின் அவள் அவனுடைய சகோதரனைத் திருமணம் செய்து கொள்கிறாள்). இந்த மெனெலேயஸ் தன் மனைவி ஹெலனுடனும், இதர கிரேக்கர்களுடனும் தன் வீட்டுக்குத் திரும்புவது அவருக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றி ஹோமர் எழுதி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றும்.

கொட்டும் மழையில் அந்தக் கடற்கரையில் நின்று காத்திருக்கும், தன் முதல் கணவர் மெனெலேயஸுக்கு, ஒரு மின்னஞ்சலோ, அல்லது ஒரு டெக்ஸ்ட் செய்தியோ அனுப்ப வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை போலிருக்கிறது. ஆனால் மெனெலேயஸின் குடும்பம், ஓரிரு தலைமுறைகளாகவே, கவனிக்கத் தக்க விதத்தில் நிரம்ப துரதிருஷ்டத்தில் சிக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அல்லது இன்று இதை நாம் சொல்கிறபடி வருணித்தால் அந்தக் குடும்பம் சீர் கெட்டக் குடும்பமாகவே இருந்திருக்கிறது.

ஹோமர் ஊற்றுக் கண்ணாக இருந்தது அதிபுனைவுக்கு மட்டுமல்ல என்று சொல்லலாமோ?

***

[1] ஹோமர்- உலகப் பிரசித்தி பெற்ற இரு கிரேக்கக் காவியங்களைப் படைத்தவர் என்று அறியப்படுபவர்

[2] தி இலியட் – ஹோமரின் இரண்டு காவியங்களில் ஒன்று.

[3] த ஆடிஸி- ஹோமரின் இரண்டாவது காவியம்.

[4] டோல்கீன் என்ற பிரிட்டிஷ் நாவலாசிரியரின் புகழ் பெற்ற நூல்- ‘த ஹாப்பிட்’ என்பதன் நாயகன். டோல்கீனின் மற்றொரு புகழ் பெற்ற நாவலான, ‘த லார்ட் ஆஃப் த ரிங்ஸி’லும் பில்போ முதல் பகுதியில் ஒரு உப பாத்திரமாக வருகிறார். ஆடிஸி என்கிற காவியத்தின் நாயகன் ஒடிஸேயஸைப் போல பில்போவும் நெடும் பயணங்கள், சாகசங்கள், சாவிற்கு அருகில் கொண்டு போன பேராபத்துகளில் எல்லாம் தப்பி மீண்டு வந்து நெடுநாள் வாழ்ந்து மறைகிற பாத்திரம்.

[5] இலியட், ஆடிஸி காப்பியங்களின் மையத்தில் உள்ள ட்ரோஜன் போர் என்பது கிரேக்கர்களால் ட்ராய் நகரின் மீது இடப்பட்ட முற்றுகை, மற்றும் போரைப் பற்றியது. சுமார் பத்தாண்டுகள் நீடித்த இந்த முற்றுகையில் ஏராளமான கிரேக்க நாயகர்களும், ட்ராய் நகரைச் சார்ந்த நாயகர்களும் இறக்கிறார்கள். ட்ராய் என்பது ஸ்பார்டன் என்ற சமூகக் குழுவினரின் நாட்டுத் தலை நகர்.

[6] கிரேக்கம் என்பது லத்தீன் சொல். கிரீஸ் என்று இன்று அறியப்பட்ட நாட்டின் சொல் அல்ல. கிரேக்கர் என்று நாம் அழைக்கும் மக்களின் பண்டைப் பெயர் ஹெலெனி என்றிருந்தது. எப்படி இந்தியாவில் மக்கள் பலவேறு மொழிக்குழுக்களின் உறுப்பினர்களாக முதல் படியிலும் பின்புதான் இந்தியராகவும் தம்மை அறிகிறார்களோ அதே போல கிரேக்கர்கள் தம்மை ஸ்பார்டர்கள், அதீனியர்கள் என்று தாம் மையமாக வசித்த நகர நாட்டின் பிரஜைகளாகவே தம்மை அறிந்திருந்தனர்.

From ‘Papa H’, No Time to Spare, Ursula Le Guin

(This is an unauthorised translation intended for educational, non-commercial display at this particular web page only).

கல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை

-ஜிஃப்ரி ஹாஸன் – 

இருள் கவியத் தொடங்கியதும் புத்தர் சிலை ஒளிரத்தொடங்கியது. சிறு நியான் விளக்குகள் கற்களில் வைத்துப் பொருத்தப்பட்டிருந்தன. அவை கல்விளக்குகள் என அழைக்கப்பட்டன. நானும் அதை கல்விளக்கு என்றுதான் அழைக்க விரும்பினேன். மாலையானதும் ஒளிரத் தொடங்கும் கல்விளக்கின் ஒளியில் புத்தரின் அமைதி ததும்பும் தியானத் தோற்றம் பகல் வெளிச்சத்தில் வெளிப்படுத்தாத மர்ம சாசுவதத்தை நியான் ஒளியில் வெளிப்படுத்தியது.

அந்தப் பகுதியில் ஒவ்வொரு சந்தியிலும் அரசமரத்தின் கீழ் கல்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த புத்தர் சிலைகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த நகரத்திலுள்ள சிறிஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஒரு கற்கை நெறியைத் தொடரும்போது எனக்கு சரத் ஆனந்தவுடன் நட்பு ஏற்பட்டது. அவன் மாத்தறையிலிருந்து இந்தக் கோர்ஸ் செய்வதற்காக வந்திருந்தான். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் எங்களுக்கு விரிவுரை வகுப்புகள் நடைபெற்று வந்தன. பொரலஸ்கமுவயிலுள்ள சமுத்ரா தேவி பிரிவேனாவில்தான் வகுப்புகள் நடந்தன. பிரிவேனாவின் நுழைவாயிலில் இரண்டும், பிரிவேனாவின் உள்ளே எட்டுமாக மொத்தம் பத்துக் கல்விளக்குகள் பல் வர்ண அழகுடன் புத்தர் சிலையைப் போர்த்தி இருந்தன. மாலைப்பொழுதில் அதிலிருந்து கசிந்து வரும் வர்ண ஒளி ஒருவித மர்ம அழகை வளாகத்தின் சூழலுக்கு கடத்தியது.

சரத் ஆனந்த வர்ண ஒளியில் ஜொலிக்கும் புத்தர் மீது எந்தவித ஈடுபாடும் அற்றவன் போல் அவரைச் சட்டை செய்யாமல் பிரிவேனாவுக்குள் நுழைவதையும், வெளியேறுவதையும் நான் அவதானித்திருக்கிறேன். அவன் எதிலும் கூடுதல் ஆர்வமற்றவன் போலிருந்தான். அதிலும் குறிப்பாக இந்த மத விசயங்களில் பெரியளவு உடன்பாடான அபிப்ராயங்களை அவன் சொல்லி நான் கேட்டதில்லை.

நான் ஒருவித விறுவிறுப்பான ஆர்வத்துடனும் (மேலும் துல்லியமாகச் சொல்வதானால் ஆர்வக்கோளாறுடனும்), உற்சாகத்துடனும், சரத் ஆனந்த ஒருவித சலிப்புடனும், அலைச்சலுக்குள்ளான வேட்கை குன்றிய மனநிலையுடனும் விரிவுரைகளில் கலந்துகொண்டோம்.

இந்தக் கோர்ஸ் ஆங்கில இலக்கியக் கோர்ஸ். நான் ஓர் ஆங்கில ஆசிரியராகவும், இலக்கிய ஆர்வலனாகவும் இருந்ததே இந்தக் கோர்ஸைத் தொடர்வதற்கான காரணமாக இருந்தது. ஆனால் சரத் ஆனந்த இந்தக் கோர்ஸைத் தெரிவு செய்ததற்கான காரணம் விநோதமானதாகத் தோன்றியது. இதே கோர்ஸைத் தொடரப் பதிவு செய்திருக்கும் லுக்மினியை காதலித்து திருமணம் செய்வதுதான் அவன் இந்தக் கோர்ஸைத் தொடர்வதற்கான உயர்ந்தபட்ச இலக்காக இருந்தது. என்னவொரு இலட்சியம் என அவன் குறித்து ஓர் இளக்காரமான பெருமிதம் எனக்குள் தோன்றியது. லுக்மினியை நான் நேரில் கண்டிராத குறையை ஒரு நாள் சரத் ஆனந்த போக்கினான்.

பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையை அண்டிக் கிடந்த பென்ஞ்சில் இரண்டு உருவங்கள் உட்கார்ந்திருந்ததை என் கண்கள் ஆர்வமாக நோக்கின. அந்த ஆண் உருவம் சரத் ஆனந்த என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும் பார்வை மற்ற உருவத்தை நோக்கி அநிச்சையாக நகர்ந்தது. மங்கல் வெளிச்சத்திலும் பளபளப்பான அவள் முகம் பிரகாசமாகத் தெரிந்தது. ஒரு மெல்லிய புன்னகை அவள் உதடுகளில் பூப்பதும் மறைவதுமாக இருந்தது. அருகிலிருந்த கல்விளக்கின் ஒளி அவள் மீது மெல்லிதாகப் படர்ந்து கொண்டிருந்தது. கல்விளக்கின் ஒளியில் அவள் முகத்திலும் புத்தரின் முகத்தில் ஓடிய அதே சாஸ்வதம் தெரிகிறதா எனப் பார்ப்பதற்கு நான் ஏனோ தவறி இருந்தேன். அந்த செக்கல் பொழுதில் ஒரு மெல்லிய புன்னகையுடன் ஒரு நாகரீகம் கருதி நான் அவர்களைக் கடக்க முற்பட்டபோது, என்னை அடித் தொண்டையால் அன்பாக அழைத்தான் சரத் ஆனந்த.

“மச்சான், இங்க வா…”

மாத்தறைச் சிங்களம் சற்றுக் கரடுமுரடானதாக எனக்குத் தோன்றியது. நான் பசப்பும் வார்த்தைகளால் அழைப்பை மறுதலித்துச் சைகை செய்துவிட்டு வந்த வழியே நகர ஒரு பூனையைப் போல் தருணம் பார்த்தேன். அவன் முகம் இறுகுவது மங்கலான நியான் வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரிந்தது. இறுகிப் போயிருக்கும் இப்படியான ஒரு பெளத்த சூழலில் அவன் நட்பை நான் ஓர் அரசியல் நோக்கமும், சுய பாதுகாப்பு நோக்கமும் கருதி விரும்ப வேண்டி இருந்தது. அதனால் அவன் மீண்டும் ஒரு முறை அழைப்பதற்காக காத்திராமலே ஒரு விசுவாசமுள்ள பிராணியைப் போல் வாஞ்சையுடன் அவன் பக்கமாக நடந்தேன்.

அவள் கழுத்துக்குக் குறுக்காக சரத் ஆனந்த தன் கைகளைப் போட்டபடி இன்பத்தில் சற்று அசைந்துகொண்டிருப்பது மங்கலான ஒளியிலும் எனக்குத் துல்லியமாகத் தெரிந்தது.

அப்போதும் அவனது கைகள் அவளது கழுத்துக்குக் குறுக்காக இருந்தன. ஆனால் பிடி சற்றுத் தளர்ந்திருந்தது. நியான் வெளிச்சத்தில் அவள் வெட்கத்தில் நெளிவதை நான் மீண்டும் ஒரு முறை பார்ப்பதில்லை என அப்பாவித்தனமாக எனக்குள் முடிவுசெய்து கொண்டேன்.

எனக்கு முதன் முதலில் அவன் லுக்மினியை அறிமுகம் செய்து வைத்தான்.

நானும் பென்ஞ்சில் உட்கார்வதற்கு வசதியாக இருவரும் சற்றுத் தள்ளி உட்கார்ந்தனர். ஆனால் நான் நின்றுகொண்டிருப்பதையே அப்போதைக்கு விரும்பினேன்.

“இது லுக்மினி…நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புறம்”

கல்விளக்கின் வெளிச்சம் இப்போது லுக்மினியில் படுவதை நான் என் உடலால் தடுக்கும் தோரணையில் நின்றிருந்தேன். அது எதேச்சையாக நடந்துவிட்டது. ஆனாலும் அவள் முகத்தில் இயல்பாக இருந்த ஒளியில் அவளது நாணத்தை நான் கண்டேன். அப்போது அவர்கள் இருவரின் உடல்மொழியிலிருந்து சரத் ஆனந்த மிகவும் வெளிப்படையானவன் எனவும், லுக்மினி ஒளிவுமறைவுள்ளவள் என்றும் என் மனதில் இருவரையும் பற்றிய சித்திரத்தை வரைந்தேன்.

சந்திப்பின் முடிவு வரைக்கும் நான் நின்றுகொண்டே இருந்தேன். அது பற்றி இருவரும் அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. வேறு பல சோடிகளும் வளாகத்தின் மறுகோடியை நோக்கி வேகமாக நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. இந்த மாலைப்பொழுதுகள்தான் அவர்களது காதலை மேலும் வளர்த்துக்கொள்ள உகந்த நேரம் என்ற உண்மை நியான் ஒளியில் எனக்கு வெளிச்சமாகியது.

கெண்டினைச் சூழ்ந்து காதலர்களுக்கு விசுவாசமுள்ள நாய்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்துக்கிடந்தன. சில நாய்கள் கெண்டினுக்குள்ளேயே அலட்சியமாக படுத்துக்கிடந்தன. அவற்றின் கண்களில் எப்போதும் பசியின் ஏக்கம் குடிகொண்டிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவற்றுக்குப் பிரத்தியேகமாக ஏதும் உணவுகள் வாங்கிக் கொடுத்ததில்லை. சிலவேளை சரத் ஆனந்த தான் லுக்மினியுடன் காதல் இன்பத்தில் சுகித்துக்கிடந்தபோது எதையேனும் நாய்களுக்கு விட்டெறிந்திருக்கலாம். அதன் அடையாளமாக அவனை எப்போதும் ஒரு நாய் நன்றியுடன் பார்த்துக் கொண்டு படுத்துக்கிடந்தது.

லுக்மினியின் அறிமுகம் கிட்டிய அந்த மாலைப்பொழுது என்னால் என்றுமே மறக்க முடியாததாக என்னைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அதன் அர்த்தம் கொஞ்சமும் எனக்குப் பிடிபடுவதாக இல்லை. அவளுடன் நட்பாக இருப்பதில் எனக்குள் ஒரு தனிப்பட்ட ஆர்வம் முளைவிட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் சரத் ஆனந்தவைப் போல் என்னுடனும் அவளது நட்பு ஓரளவு வளர்ந்துகொண்டு சென்றது. சரத் ஆனந்த பின்னர் சில வார நாட்களில்  அவசியம் கருதி லீவெடுக்கும் சந்தர்ப்பங்களில் லுக்மினிக்கும் எனக்குமிடையில்  நட்பு தங்குதடையின்றி முன்னேற்றங்கண்டு வந்தது.

இங்கு பொதுபலசேன எனும் தீவிரமான பெளத்த இயக்கம் ஒன்று முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரத்திலும், பள்ளிவாசல்களையும், முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளையும் உடைப்பதிலும் தீயிட்டுக் கொளுத்துவதிலும் மும்முரமாக இருந்தது. சிறிஜெயவர்தனபுர போன்ற இடங்கள் அவர்களின் பிரதான கோட்டைகளாக இருந்தன. இந்த நகரத்தில் முஸ்லிம்கள் அவ்வளவாக இல்லை. இங்கு தனிமையில் இருப்பது ஆபத்தானது என்பதால்தான் இதுபோன்ற நட்புகளை நான் பெரிதும் விரும்பி வளர்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. நான் ஒரு முஸ்லிம் மதவாதியோ, இனவாதியோ இல்லாவிட்டாலும் அது அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் என்ற அச்சத்தில் நான் சரத் ஆனந்த, லுக்மினி போன்றவர்களின் தயவுக்குள் ஒளிந்துகொள்ள வேண்டி இருந்தது. ஆனாலும் எனக்குள்ளிருந்த ஒரு தாழ்வுணர்ச்சியும் அந்த நட்பை நான் பூசிக்க காரணமாயிற்று. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதுவும் லுக்மினி போன்ற அழகான தலைநகரத்துப் பெண்ணுக்கு நாட்டின் யுத்தம் நடைபெற்று அழிபாடுகளுக்குள்ளான பின்தங்கிய கிராமமொன்றிலிருந்து சென்ற, ஒரு பெண்ணைக் கவரக்கூடிய அழகில்லாத சிறுபான்மை இனத்தவனான என்னை அவள் தன் இதயத்தில் வைத்திருப்பதோ அல்லது குறைந்தபட்சம் அப்படியான ஒருவனை அவள் தெரிந்து வைத்திருப்பதோ எனக்கு கௌரவமான ஒன்றாகப் பட்டது.

சரத் ஆனந்த வெளிப்படையாகவே பொதுபலசேன எனும் இந்த பௌத்த தீவிரவாத அமைப்பை கடுமையாக எதிர்ப்பவன். பெரும்பான்மைச் சமூகத்தில் அவன் ஒரு மாற்றுக்குரலாக இருந்தான். சரத் ஆனந்த நாட்டில் உருவாகி வந்த முஸ்லிம் மக்களுக்கெதிரான பொதுபலசேன போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும் அடிப்படைவாத அரசியல் சித்தாந்தங்களுக்கும் எதிரானவனாக இருந்தான். அவன் அரசியல் சார்ந்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக எனக்கு ஏனோ தோன்றியது. அவன் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகள் விசயத்தில் தெளிவாக இருந்தான். அனைவரும் இலங்கையர் என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. மிக அபூர்வமாக சிரிக்கும் குணம் கொண்ட அவனிடம் உள்ளூர ஈரம் இருப்பதை நான் தெரிந்துகொண்டது இதுமாதிரியான உரையாடல்களின்போதுதான். பின்னர்தான் அவனுடனான நட்பை நீடிக்க விரும்பி இருந்தேன்.

ஒரு நாள் இரவு சமுத்ராதேவி பிரிவேனாவின் விடுதியில் நாங்கள் தங்கி இருந்தோம். விடுதி புத்தரின் தியானத்தை ஒத்த ஓர் ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தது. பிரிவேனாவில் பிரித் ஓதி முடிந்து எல்லோரும் அமைதிக்குத் திரும்பி இருந்தனர். வெளியில் கல்விளக்கின் வெளிச்சத்தில் புத்தர் ஜொலித்துக்கொண்டிருந்தார். பிரிவேனாவின் வளாகத்தில் இப்படி எட்டு வெவ்வேறு இடங்களில் அவர் எந்தக் கவலையுமற்று ஜொலித்துக்கொண்டிருந்தார்.  அப்போது பொதுபலசேனவின் கருத்துகளைத் தீவிரமாக ஆதரிக்கும் இளம் பிக்கு ஒருவரும் எங்களுடன் தங்கி இருந்தார். நான் முஸ்லிம் என்பதை அறிந்துகொண்ட அவர் என்னுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். இந்தப் பிரிவேனா விவாதம் எங்களுக்குள் இடம்பெறுவதற்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்னர்தான் இலங்கையின் புராதன நகரங்களுள் ஒன்றான குருநாகலவில் பள்ளிவாயல் ஒன்றை பொதுபலசென ஆதரவாளர்கள் தீயிட்டுக் கொளுத்தி இருந்தனர்.

இளம் ஹாமதுரு தனது கொள்கைக்கு ஏற்ற விதத்தில் கடுகடுப்பானவராகவும் சரியான புரிதலற்றவராகவும் இருந்தார். சிலவேளைகளில் அவர் உளறுவது போன்றும் எனக்குத் தோன்றியது. இலங்கையில் ஒரு உன்னத நாகரீகமோ அறிவெழுச்சியோ நிகழ்வதாக இருந்தால் அது சிங்கள சமூகத்திடமிருந்துதான் உருவாகும் என்ற எனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவே நான் இதுவரை சந்தித்த சிங்கள நண்பர்கள் இருந்து வந்துள்ளனர். ஆனால் இலங்கையை ஒரு சாக்கடை நாடாக மாற்றும் சிந்தனையுடனும் சிலர் இருப்பதை இந்த ஹாமதுரு மூலமாக நான் அறிந்துகொண்டேன்.

நடுநிசி நேரம். பிரிவேனாவில் நிலவிய அமைதியை பிரிவேனாவின் எல்லைக்குள் வாசஸ்தலத்தை அமைத்திருந்த நாய்களின் ஊளைச்சத்தம் கலைத்தது. நான் அப்போதும் விடுதிக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். கல்விளக்கின் வெளிச்சத்தில் புத்தர் சரமாரியாக ஜொலித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ஊளைச் சத்தத்தையடுத்து விடுதிக்குள்ளிருந்த இளம் ஹாமதுரு பேசத் தொடங்கினார்.

“முஸ்லிம்கள் ஒரு புதிய சவர்க்காரம் ஒன்றைப் பாவிக்கிறீர்கள். அது என்ன சவர்க்காரம்? அதுதான் ஹலால் சவர்க்காரமா?” என ஹாமதுரு என்னிடம் கேட்டார். அவர் தொனியில் ஒரு நையாண்டி இழையோடியது. அப்போது சரத் ஆனந்த ஹாமதுருவை ஒருவித ஏளனத்துடனும் அலட்சியத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அதுமாதிரியான உரையாடல்களில் ஆர்வமற்றவன். போதாக்குறைக்கு அவன் பொதுபலசேன போன்ற அமைப்பின் கருத்துகளுக்கு மிகவும் எதிரானவனாகவும் இருந்தான். முஸ்லிம் கடைகள், பள்ளிகளை எரியூட்டுவது மகா முட்டாள்தனம் என ஹாமதுருவிடம் சற்றுக் கடுமையாகவே பேசிவிட்டு மரியாதை கருதி அவன் அமைதியானான். ஆனால் நான் ஹாமதுருவுக்கு பதில் வழங்க வேண்டி இருந்தது. ஹாமதுருவின் முகத்தில் இருந்த ஏளனமும் வெறுப்பும் தொடர்ந்தும் நீடிப்பதை நான் அவதானித்தேன். அது பெரும்பாலும் என்னைக் குறித்ததாக இருந்தது.

“நாங்க அப்படி ஒரு சவர்க்காரமும் பாவிக்கல ஹாமதுரு,“ என நான் பணிவாக பதிலளித்தேன். அந்த பதிலால் ஹாமதுரு திருப்தியடையவில்லை என்பதையும் அது அவரது ஏளனத்தையும் வெறுப்பையும் மேலும் அதிகரித்திருப்பதையும் நான் அவரது முகபாவத்திலிருந்து புரிந்து கொண்டேன். அப்போது இரண்டு பூனைகள் மறியேறும் சத்தம் ஈனக் குரலில் தொந்தரவூட்டும் சத்தமாக கேட்டது. சரத் ஆனந்த மூர்க்கம் அடைந்தவனாக கடுமையான தூஷண வார்த்தைகளால் அந்தப் பூனைகளைத் திட்டினான். அவன் உண்மையிலேயே கோபம் கொண்டிருந்தான். அந்தக் கோபம் பூனைகள் மீதன்றி ஹாமதுரு மீதுதான் என்பதை நான் புரிந்துகொண்டேன். பூனைகளை திட்டுவதற்காக சரத் ஆனந்த பாவித்த சொற்கள் ஒரு ஹாமதுருவின் முன்னால் ஒரு பௌத்தன் சாதாரணமாக பயன்படுத்தி நான் கேட்டதில்லை. அது ஹாமதுருவுக்கும் தெரிந்திருந்தது. சரத் ஆனந்தவுக்கும் தெரிந்திருந்தது. ஆனால் ஹாமதுரு சரத் ஆனந்தவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படித்தான் சரத் ஆனந்தவும் ஹாமதுருவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றியது. அவன் அப்போதும் லுக்மினியைத்தான் நினைத்துக் கொண்டு இருந்திருக்கக்கூடும்.

“சந்துபொந்துகளிலெல்லாம் பள்ளிவாசல்கள கட்டுறதாலதான் பள்ளிகள உடைக்காங்க,” எனச் சொல்லி நான் என்னை ஒரு மாற்றுக் கருத்தாளன் எனவும் இனவாதி இல்லை எனவும் நிரூபிக்க முற்பட்டபோது சரத் ஆனந்த அதை மறுத்துரைத்தான்.

“இங்கு பௌத்த விகாரைகளுந்தான் சந்திக்குச் சந்தி இருக்கே,” கல்விளக்கின் வெளிச்சத்தில் அமைதிச்சுடராக வீற்றிருந்த புத்தரைச் சுட்டிக்காட்டியபடி சொன்னான். நான் தர்க்கத்தை தவிர்க்கும் பொருட்டு அவனை ஆமோதித்தேன். ஒரு மின்னல் போல்தான் அவனது பேச்சில் எப்போதும் ஒரு வெளிச்சமும் அதிர்வும் இருக்கும். ஆனாலும் நான் எனது கருத்தில் உறுதியாகவே இருந்தேன். தலைநகரத்தில் முஸ்லிம் வர்த்தகத் தளங்களிலும், பள்ளிவாசல்களிலும் பல கசப்பான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருந்தன.

டுத்த வாரம் சனி மாலை கெண்டினில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நாளை உன்னால் லுக்மினியைச் சந்திக்க முடியுமா?” என்று என்னிடம் கேட்டபடியே என்னை நோக்கி நெருங்கி வந்து என் எதிரே கிடந்த கதிரையில் உட்கார்ந்தான் சரத் ஆனந்த. அவன் அப்படிக் கேட்டதிலிருந்தே நாளை விரிவுரைகளில் கலந்து கொள்ளாமல் இன்றுடன் கிளம்பப் போகிறான் என்பதை ஊகித்துக்கொண்டேன். எனக்கும் நாளை கலந்துகொள்ளாமல் இன்றுடன் கிளம்பிவிடும் ஓர் எண்ணம் இலேசாக இருந்தது. அவன் சார்ந்து லுக்மினியிடம் எனக்கு ஒரு வேலை இருப்பதை உணர்ந்து கொண்டு நான் அதை வெளிப்படுத்த விரும்பாமல் மறைக்க விரும்பினேன். சரத் ஆனந்தவுக்கு உதவுதன் மூலம் அவனுக்கும் எனக்குமிடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் அதேநேரம் லுக்மினிக்கும் எனக்குமிடையிலான உறவும் வலுவடையும் என நான் எண்ணினேன்.

சரத் ஆனந்தவின் அன்பை மேலும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தயக்கமின்றி “ஆம் நான் சந்திக்கிறேன்“ என்றேன்.

அப்போது என் கடைவாயிலிருந்து ஒரு அசட்டுத்தமான புன்னகை வழிந்துகொண்டிருந்ததை அவன் பெரும்பாலும் கவனித்திருக்கக்கூடும். அதை அலட்சியம் செய்தபடி கெண்டின் சர்வரை பார்த்து இரண்டு முட்டை ரொட்டிக்கும் இரண்டு பிளேண்டிக்கும் ஓர்டர் கொடுத்தான். சென்ற வாரம் நான் அவனுக்கு இதேபோன்று முட்டை ரொட்டியும் டீயும் வாங்கிக் கொடுத்திருந்தேன். அதனால் இந்த வாரம் அவன் எனக்கு வாங்கித் தருகிறான். அந்த விஷயத்தில் அவன் மிகவும் கறாராக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஒரு வாரம் அவன் வாங்கினால் மறு வாரம் நான் வாங்க வேண்டும் என்ற ஒழுங்கை அவன் கடைப்பிடிப்பதில் மிகவும் உறுதியாக இருந்து வந்தான். சாப்பிடுவதற்கு முன் ஹராமா ஹலாலா எனக் கேட்டுக்கொள்வான். பொதுபலசேனா சில ஆண்டுகளுக்கு முன் ஹலால் உணவுப் பிரச்சினையைக் கிளப்பி இருந்தது. அப்போதிருந்துதான் அவனுக்கு உணவில் ஹலால் பிரச்சினை ஒன்று இருப்பது தெரிய வந்திருக்க வேண்டும். ஹலால் உணவுகளை மட்டும்தான் நாங்கள் சாப்பிடுவோம் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. மனிதர்களை மதம், இனம், சாதி பார்த்து வகைப்படுத்தி அணுகுவது அவன் நோக்கமில்லை. இருந்தாலும் அவரவர் உணர்வுகளுக்கு, எண்ணங்களுக்கு அவன் வாய்ப்பளிப்பதையே பெரிதும் விரும்பினான். கிட்டத்தட்ட நானும் அதே மனோநிலையில்தான் இருந்தேன். மதரீதியாக எனக்குள்ளும் பெரிய கற்பனைகள் ஈடுபாடுகள் இருந்ததில்லை. மதம் குறித்து விவாதம் புரியுமளவுக்கு அதில் ஆர்வமோ ஈடுபாடோ எனக்கு இருப்பதாக நான் நினைக்கவுமில்லை.

நாளடைவில் லுக்மினிக்கும் எனக்கும் கல்விளக்குக்கும் புத்தருக்குமிடையிலான நெருக்கம் போல் அதிகரித்தது. சரத் ஆனந்தவுக்கும் லுக்மினிக்குமிடையிலான காதலை விடவும் எனக்கும் லுக்மினிக்குமிடையிலான நட்பு அசுர பலம் கொண்டு மேலெழுவதாகத் தோன்றியது. சரத் ஆனந்த என் நினைவிலிருந்து மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருந்தான். அவன் இருந்த இடத்தில் லுக்மினி வந்துவிட்டிருந்தாள்.

லுக்மினியும் அவனுடனான தொடர்பை நான் அறியாத வேறு சில காரணங்களுக்காக குறைத்து விட்டிருந்தாள். அவர்களின் காதல் கெண்டின் அருகில் கிடக்கும் பென்ஞ்சில் கல் விளக்கின் வெளிச்சத்தில் அநாயாசமாக வளர்ந்து வந்ததைப் போல இப்போது எங்களுக்குள் அது இருட்டில் நடப்பவனைப் போல் தட்டுத்தடுமாறிக் கொண்டு வளர்ந்தது. இது என்னை அறியாமல் நடந்துவிட்டது என்று என் மனம் நம்பியது. நாளடைவில் லுக்மினிக்காக நான் அவனைத் தவிர்த்தேன். லுக்மினி எனக்காக அவனைத் தவிர்த்தாள்.

லுக்மினி அன்று மிகவும் அட்டகாசமாக உடுத்தி வந்திருந்தாள். அவள் ஆடைகள் அவளின் அழகை மேலும் மெருகூட்டியது. அதை உள்ளூர இரசித்துக்கொண்டு வெளியில் அதைக் கண்டுகொள்ளாதவன் போல் பாவனை செய்தேன். அவள் அன்று ஏதோ ஒரு பரபரப்பில் இருப்பது தெரிந்தது.

“ஷேக்ஸ்பியர் கவித நோட்ஸ் முழுசா இருக்கா?” என்னிடம் அது முழுமையாக இருந்தபோதும் நான் அவளை சும்மா கேட்டேன்.

“இருக்கு” சொல்லிக்கொண்டே ஹேன்ட் பேக்குக்குள் கைவிட்டுத் துளாவினாள். வேறு வேறு விசயங்கள் அவள் கையில் சிக்கிக் கொண்டிருந்தன.

“இன்றைக்கு நான் நண்பி ஒருத்தியின் பேர்த்டே பார்ட்டிக்குப் போகனும்… ஃபைவ் மினிட்ஸ்ல பஸ்…” தேடிக்கொண்டே சொல்லிக்கொண்டிருந்தாள். நான் அவள் பதட்டத்தை இரசித்துக்கொண்டிருந்தேன்.

“பரவால்ல… பிறகு எடுப்பம்” நான் சமாளித்தேன். அவள் கைக்கு அது கிடைக்காத அவதியும், அவசரமும் அவள் முகத்தில் உறைந்திருந்தன. சரத் ஆனந்தவுக்கு இந்தப் பயணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரிந்திருந்தது. நானும் அது பற்றி அவளிடம் கேட்கவில்லை. அவன் அந்த பென்ஞ்சில் அவளுக்காக காத்திருப்பான். இருவரும் வேறு வழியால் வெளியேறினோம். பூக்கள் அள்ளிச்சொரிந்திருந்த பல வர்ணக்குடையை எடுத்து விரித்துப் பிடித்தபடி பேவ்மெண்டில் அவள் நிதானமாக நடந்து வந்தாள். நான் அவள் விருப்பம் பற்றி அக்கறை கொள்ளாது அவளை சற்றே உரசினாற்போல் நடந்து சென்றேன். சரத் ஆனந்தவின் நினைப்பு அவளுக்கு வராத வகையில் அவளை சூழலுக்கு மாற்றிக்கொண்டு வந்தேன். தேவையற்ற ஜோக்குகள் சொல்லி அவள் மனதில் இடம்பிடித்தபடி கூடவே இழுபட்டுக் கொண்டிருந்தேன். அவளை பத்திரமாக பஸ் ஏற்றிவிட்டு அவள் அழைப்பு இல்லாததால் சற்றே ஏமாற்றத்துடன் மீண்டும் பிரிவேனா நோக்கி நடந்தேன். சரத் ஆனந்த எப்போதும் உட்கார்ந்திருக்கும் பென்ஞ் வெறுமையாய்க் கிடந்தது.

அடுத்த வாரம் எங்கள் பண்டிகை உணவுகளை அவளுக்காகப் பொதி செய்து கொண்டு வந்திருந்தேன்.

“இது எங்கட பண்டிகை உணவு” எண்ணெய் ஊறிய வெள்ளைக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த பலகாரங்களை அவளிடம் நீட்டினேன். அதை தன் அகலத் திறந்த அழகான ஆச்சரிய விழிகளோடு பெற்றுக் கொண்டாள். எனக்குள் உள்ளூர மகிழ்ச்சி திரண்டது. சரத் ஆனந்தவின் கண்களில் படாமல் இந்த கலாசார உணவுப் பரிமாற்றம் நடந்து முடிந்தது. ஆனால் கல்விளக்கின் ஒளியில் புத்தர் மட்டும் அதனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

சரத் ஆனந்த வழமையான அந்த பென்ஞ்சில் லுக்மினிக்காக காத்திருந்து ஏமாறத் தொடங்கினான். லுக்மினியும் நானும் அவனை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காகவே பிரிவேனாவை விட்டு வெளியேறுவதற்கு வேறு வாயிலைத் தெரிவுசெய்திருந்தோம். அந்த வாயிலிலும் கல்விளக்கின் ஒளியில் புன்னகைக்கும் புத்தர் அந்தரத்துடன் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

கல்விளக்கின் வெளிச்சத்தில் பிரகாசமாக ஒளிர்ந்த சரத் ஆனந்தவின் காதல் இப்போது மங்கலாகி முழுமையாகவே இருளாகிவிட்டிருந்தது. சரத் ஆனந்தவின் கண்களில் இப்போது புதிதாக ஒரு நெருப்பு எரியத் தொடங்கி இருந்தது.

”அடோ..! தம்பிலா, என் காதல் கோட்டைய உடைச்சிட்டு நீ இடத்தப் புடிச்சிட்டாய்… எனடா…?” சரத் ஆனந்தவின் குரல் மேலும் தடிப்பேறி இருந்தது. சிங்களவர்கள் முஸ்லிம்களை ஏளனமாக அழைக்கப் பயன்படுத்தும் “தம்பிலா“ என்ற வார்த்தையை அன்றுதான் அவன் முதன் முதலாகப் பயன்படுத்தியதைக் கேட்டேன். அது எனக்கு ஒருவித குற்றவுணர்ச்சியைத் தந்தது. என்னை பூமி விழுங்கிக்கொள்வது போல் உணர்ந்தேன். என்னில் உரசினாற் போல் வந்துகொண்டிருந்த லுக்மினி சற்று மிரட்சியுடன் விலகி நகர்ந்தாள். சரத் ஆனந்தவின் நட்பு அது உருவாகிய அதே இடத்தில் அதே போன்றதொரு மாலைப்பொழுதில் அஸ்த்தமனமாகிப் போனது.

யாரும் பார்வையில் புலப்படாத மாலைப்பொழுது என்பதால் என்னை அடிக்கும் ஆவேசம் சரத் ஆனந்தவுக்குள் கனன்று கொண்டிருந்தது. அவன் என்னை அடிக்க முனைந்தபோது லுக்மினி அதைத் தடுத்து விட்டாள். அதுதான் அவனைக் கடுமையாகப் பாதித்தது. மிகவும் கடுமையான வார்த்தைகளால் என்னைத் திட்டிக்கொண்டே அன்று என் பார்வையிலிருந்து மறைந்து சென்றான் சரத் ஆனந்த.

அதன் பின் சில வாரங்களாக சரத் ஆனந்தவை நான் காணவில்லை. பிரிவேனா விடுதியில் அன்றிரவு தங்கி இருந்தேன். லுக்மினியுடன் தொலைபேசி உரையாடலை முடித்துவிட்டு படுக்கைக்குச் செல்லும்போது வெளியில் பரபரப்பான சத்தம் ஒன்று கேட்டது. பிரிவேனா விடுதியின் மேல்மாடி அறையின் சாளரத்தை திறந்து சத்தம் வந்த திசையை நோக்கி பார்வையை வீசினேன். அடுத்த தெருவில் தீக்கதிர்கள் ஆவேசமாக மூண்டெழுவது தெரிந்தது. அந்த இடத்தில் முஸ்லிம் பள்ளி ஒன்று இருப்பது எனக்கு சடுதியாக நினைவுக்கு வந்தது. வெளியேறிச் செல்வதா அல்லது உள்ளேயே ஒளிந்து கொள்வதா என்ற பதட்டத்தில் சில கணங்கள் அப்படியே சமைந்து நின்றேன். விடுதிக்குள்ளிருந்த மாணவர்கள் சிலர் சத்தமிட்டுக்கொண்டு வெளியே ஓடுவது தெரிந்தது. அதில் என்னைத் தெரிந்த சிலர் வெளியே வராமல் உள்ளே இருக்கும்படி சொல்லிக்கொண்டு ஓடுவதை அசைவற்றுக் கேட்டுக்கொண்டு நின்றேன். இது பிரிவேனா என்பதால் எனக்கு சற்றுப் பாதுகாப்பான இடம் என்றும் தோன்றியது. சிறிது நேரத்தின் பின் திரும்பி வந்த நண்பன் ஒருவனிடம் களநிலவரங்களை விசாரித்தேன்.

“உங்கட பள்ளிவாசலத்தான் பத்த வெச்சிருக்கு”

மிக நிதானமாகச் சொன்னான். என் மீது ஒரு பரிதாபப் பார்வை பார்த்தான். தன் செல்போனில் அவன் பிடித்த காட்சிகளை காட்டினான். நான் சில கணங்கள் திடுக்கிட்டுப் போனேன். பள்ளிக்குத் தீமூட்டும் பொதுபலசேனக் கும்பலில் மிக முக்கியமானவனாகவும் மும்முரமாகவும் ஆவேசமாக இயங்கிக் கொண்டிருந்தான் சரத் ஆனந்த. அந்தக் குளிர்ச்சியான இரவிலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. அவனது இந்த சடுதியான மாற்றம்  கண்ணாடிச் சில்லுகளாக என்னை உடைத்துக் கொண்டிருந்தது.

அந்த இரவு  எனக்கு வெறுமையாகத் தெரிந்தது. பிரிவேனாவின் மேல்தளத்தில் தூணில் சாய்ந்துகொண்டு உணர்ச்சியற்ற கண்களால் சாளரத்தின் வழியே வெளியை நோக்கினேன். பலவர்ண நியான் ஒளி மாறி மாறி தன் பிரகாசத்தை வெளிப்படுத்தியது. அருகில் கிடந்த பென்ஞ் தனிமையாய் இருந்தது. அந்த பென்ஞ்தான் லுக்மினிக்கும், சரத் ஆனந்தவுக்கும் மிகப்பிடித்தமானது. அதன் அருகில் சரத் ஆனந்தவுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் நாயொன்று பசித்த கண்களால் அவனில்லாத பென்ஞை வெறித்தபடி படுத்துக்கிடந்தது.

கல்விளக்குகள் இப்போது எனக்கு ஒளியற்றுத் தெரிந்தன. புத்தரின் முகம் தன் வழமையான பொலிவை இழந்து ஒரு வித இறுக்கத்துள் புதைந்திருப்பதாக எனக்கு ஏனோ தோன்றியது.

 

சார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது- நரோபா

நரோபா

ஏப்ரல் மாத ‘மரப்பாச்சி இலக்கிய கூடுகை’யை வழக்கமான காவேரி மருத்துவமனை வளாகத்திலிருந்து மாற்றி எங்காவது வெளியே வைத்துக் கொள்ளலாம் என்றொரு யோசனை துளிர்விட்டபோது நண்பர் டாக்டர். சலீம் நேமம் கோவிலில் சந்திப்பை நிகழ்த்தலாம் என்றொரு யோசனையை முன்வைத்தார். நல்ல ஏற்பாடாக தோன்றியது. இப்பகுதியில் அழகிய சிற்பங்களும் அமைதியான சூழலும் ஒருங்கே அமைந்த இடம். எப்போதுமில்லாத அதிசயமாக இம்முறை கூடுகைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கைத் தொட்டது. மொத்தம் பதினொரு பேர், அதில் நால்வர் பெண்கள்.

இந்தக் கூடுகையில் நாங்கள் விவாதிக்கவிருந்த கதை சார்வாகனின் ‘யானையின் சாவு’. யானையைப் பார்த்தது முதல் அது தனக்கு வேண்டும் என அடம் பிடிக்கிறது ஆறு வயது குழந்தை. ஒருநாள் கோவில் வாசலில் கிளிப்பச்சை நிறத்தில், தங்க நிற வேலைப்பாடும், ரோஸ் நிற வாயும், எலுமிச்சை மஞ்சள் நிற தந்தமும் கொண்ட யானையை கேட்கிறது. தன் அழகுணர்ச்சி மீது நம்பிக்கை கொண்டவனுக்கு இது யானை குலத்தையே பரிகாசம் செய்வதாக தோன்றுவதால் வாங்காமல் எரிச்சல் அடைகிறான். ஓரளவு யானை அமைப்பு கொண்ட மர யானையை வெளியூரிலிருந்து குழந்தையின் நச்சரிப்பு தாங்காமல் வாங்கி வருகிறான். அந்த யானையுடன் எப்போதும் தன் நேரத்தைக் கழிக்கிறது குழந்தை. அது அவனை நெருடுகிறது. ஒருநாள் பொறுக்க முடியாமல் இது பொம்மை என கடிந்து கொள்கிறான். ஒருநாள் முழுக்க குழந்தை அவனோடு பேசவில்லை எனும் வருத்தத்தில் இது நிஜ யானைதான், சரியாக பார்க்காதது தன் குற்றம் என சொல்லி சமாதானப்படுத்துகிறான். இருவருமாக அந்த யானையுடன் விளையாடத் துவங்குகிறார்கள். ஊருக்குச சென்றுவிட்டு வீடு திரும்பும்போது யானையுடன் விளையாட விதவிதமான விளையாட்டுக்களை யோசித்தபடி வருகிறான். குழந்தையையும் யானையையும் காணவில்லை. பிறகு குழந்தை தூங்கிவிடுகிறது. காலையில் எழுந்தவுடன், யானை எங்கே எனக் கேட்கிறான். “இங்கேதான் எங்கேயாவது கிடக்கும்,” என்று அசிரத்தையாகச சொல்கிறது குழந்தை. மூலையில் அழுக்குத் துணி குவியலில் யானை கிடக்கிறது. ஐயோ பாவம் அதற்கு காய்ச்சல் இருக்கும் என ரங்கநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, குழந்தை, இது என்ன நிஜ யானையா வெறும் பொம்மைதானே, அதற்கு காய்ச்சலும் பேதியும் வருமா, எனக் கேட்டுவிட்டு எதிர்வீட்டு அம்மா கொடுத்த தகர காரை காட்டுகிறது. ரங்கநாதன் திகைத்து நிற்கிறான். செத்துப்போன யானையின் சடலம் “நான் வெறும் மரம். யானையில்லை,” என்று சொல்லிவிட்டும் திரும்பவும் செத்தது என்று கதை முடிகிறது.

வளர்ச்சிப் போக்கில் உதிரும் நினைவுகள், நம்பிக்கைகள் பற்றி பரிவுடன் பேசும் கதை. சிறுவர்கள் உலகில் கால மாற்றம், மனமுதிர்ச்சி சட்டென ஏற்படும் போது பெரியவர்களின் உலகம் அத்தனை எளிதாக மாற்றங்களை ஏற்பதில்லை. வேறொரு நண்பர் என், ‘பேசும் பூனை’ கதையில் ஹர்ஷிதா டாக்கிங் டாமை விட்டுவிட்டு வேறோர் விளையாட்டை பின் தொடர்ந்து சென்றுவிடுவாள், ஆனால் தேன்மொழி அந்த விளையாட்டை விட்டு வெளியேற மாட்டாள், என்பதை இக்கதையுடன் ஒப்பிட்டுச சொல்லியிருந்தார்.

இந்த கதை விவாதத்தில் சில நுட்பங்கள் விவாதிக்கப்பட்டன. குழந்தை எந்த பாலினம் என்பது சொல்லப்படாமல் உள்ளது ஒரு உத்தியா, குறைபாடா, என்றொரு கேள்வியை டாக்டர் ரவி எழுப்பினார். நான் வெகு இயல்பாக ஆண் குழந்தை என்றே வாசித்தேன். வேறு சிலர் பெண் குழந்தையாக வாசித்திருந்தார்கள். யானை பொம்மை மீது ஈர்ப்பு கொண்டதால் பெண்ணாக இருக்கலாம் என்றும் ஆனால் காரின் மீது ஈடுபாடு உள்ளதால் ஆணாக இருக்கலாம் என்றும் பேசிக்கொண்டோம். குழந்தைக்கு தந்தை ரங்கநாதன் மட்டுமே உள்ளார். அன்னை பற்றிய குறிப்பே இல்லை. தகர காரைக்கூட எதிர்வீட்டு அம்மாதான் வாங்கித் தருகிறார் என்பது கவனிக்கத்தக்கது. கதையில் ‘அந்த பொம்மை யானை உயிருள்ள யானை மாதிரி அதுவும் செல்லம் கொடுத்து கெட்டுப்போன ஒரு குழந்தை யானை மாதிரி லூட்டியடிப்பது,’ தாங்க முடியவில்லை என்று வருகிறது. இந்த விவரணை அந்தக் குழந்தைக்கும் பொருந்துகிறது. அதன் இயல்பைச் சுட்டுவதாகவும் இருக்கலாம். பொய்யிலிருந்து பொய்க்குத் தாவுகிறது மனம், பொய்யைக் கைவிடவும் தயாரில்லை. இந்த கதையில் அவன் பச்சை யானையை அழகுணர்ச்சியின் பாற்பட்டு நிராகரிக்கிறான். தன் அழகுணர்ச்சியின் மீது கர்வம் கொள்கிறான். பொய் எனும் பிரக்ஞையுடன் இருக்கிறான், பொய்யை உண்மை என ஒரு பேச்சிற்கு கட்டமைக்கிறான், அதற்குள் சிக்கிக் கொள்கிறான். குழந்தை அதை உதறிவிட்டுச் சென்றுவிடுகிறது. ரங்கநாதன் திகைக்கிறான். கதையின் முடிவில் சடலமாகக் கிடக்கும் யானை திரும்ப எழுந்து தானொரு மரம் என சொல்லிவிட்டுச் சாகிறது. அதாவது இருமுறை, குழந்தையின் பிரக்ஞையிலும் ரங்கநாதனின் பிரக்ஞையிலும், சாகிறது. குழந்தை வளரும்போது ஏற்படும் திகைப்பின் கணத்தை அழகான நேரடி கதையாக ஆக்குகிறார். அதுவே இக்கதையின் வலிமை.

‘Toy story’ திரைப்படம் இப்படியான உணர்வுநிலையை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படம். ஜெயமோகன் யுஜின் ஃபீல்ட் எழுதிய ஒரு கவிதை பற்றி எழுதிய கட்டுரை இந்த கதையுடன் சேர்ந்தே நினைவுக்கு வந்தது.

நீலக்கண் குட்டிப்பயல்

சின்ன நாய்ப்பொம்மை தூசிபடிந்திருக்கிறது
ஆனால் திடமாக காலூன்றி நின்றிருக்கிறது
சின்ன பொம்மைப்படைவீரன் துருவால் சிவந்திருக்கிறான்
அவன் தோளில் துப்பாக்கி நிமிர்ந்திருக்கிறது
அந்த நாய் புதிதாக இருந்த காலமொன்றிருந்தது
படைவீரன் அழகாக இருந்திருக்கிறார்
ஆனால் அது நம் நீலக்கண் குட்டிப்பயல்
அவற்றை முத்தமிட்டு அங்கே வைத்தபோது!

”நான் வருவது வரை போகவே கூடாது என்ன?”
என்று அவன் சொன்னான் ”மூச்,சத்தம் போடக்கூடாது!”
அதன் பின் தளர்நடையிட்டு தன் குட்டிப்படுக்கைக்குச் சென்று
அவன் அழகிய பொம்மைகளைக் கனவுகண்டான்
கனவுகாணும்போது ஒரு தேவதையின் பாடல்
நம் நீலக்கண் பயலை எழுப்பியது
அது எத்தனையோ காலம் முன்பு
வருடங்கள் பல சென்றுவிட்டன
ஆனால் பொம்மை நண்பர்கள் விசுவாசமானவர்கள்

நீலக்கண்குட்டிப்பயலின் கட்டளைக்குப் பணிந்து அவர்கள்
அதே இடத்தில் நின்றிருக்கிறார்கள்
அவனுடைய குட்டிக்கைகளின் தொடுகை வந்து எழுப்புவதற்காக
அவன் குட்டி முகத்தின் புன்னகைக்காக
வருடங்களாகக் காத்திருக்கையில்
அந்த குட்டி நாற்காலியின் தூசுப்படலத்திலிருந்தபடி
அவர்கள் எண்ணிக்கொண்டார்கள்
அவர்களை முத்தமிட்டு அங்கே நிற்கவைத்துச் சென்ற
நீலக்கண் குட்டிப்பயலுக்கு என்ன ஆயிற்று என்று

உயிருள்ளவைக்கும் உயிரற்றவைகளுக்குமான வேறுபாடு நம் அக்கறையில், பிரக்ஞையில்தான் இருக்கிறது போலும். அண்மைய ஊட்டி விஷ்ணுபுர அரங்கில் திருமூலநாதன் தேர்ந்தெடுத்த திருக்குறள் பற்றிய விவாதத்தில் இந்த குறள் பற்றியும் பேசப்பட்டது.

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். (குறள்: 1070, அதிகாரம்: இரவச்சம்)

இரப்பவருக்கு யாசகம் மறுத்து அவன் இறந்தபின்தான், அவருக்கும் உயிர் இருந்தது என்பது நம் பிரக்ஞையில் உதிக்கிறது என்றொரு வாசிப்பை அளிக்கலாம் என்று சொல்லப்பட்டது. உயிருள்ளவர்களும் ஜடப் பொருட்களாகத்தான் இருக்கிறார்கள். உயிரற்றவையும் உயிர் கொள்ள முடியும்.

கதையைப் பற்றி பேசி முடித்ததும், நேமம் கோவில் அர்ச்சகர் அங்கு வந்த எங்களைப் பற்றி விசாரித்தார். “இந்த பிள்ளையார் கோவில் வாசல்ல இருந்த ரெண்டு கல் யானையை காணும்… நீங்க வேற யானை செத்துப் போச்சுன்னு என்னென்னமோ பேசுறீங்க… சிசிடிவி பாத்து மெட்ராஸ்லேந்து ட்ரஸ்டி போன் அடிச்சார்… ரொம்ப நேரமா மூணு கார் நிக்குதேன்னு விசாரிக்கச் சொன்னார்,” என்றார். இப்படியாக இலக்கியக் கூட்டம் சிலை திருடும் கும்பலாக ஆனது.

அர்ச்சகருக்கு அவர் அறிந்த யானை செத்ததைப் பற்றி கவலை இருக்கத்தானே செய்யும். நாங்கள் அந்த யானையைப் பற்றி பேசவில்லை என்றறிந்தபோது அவருக்குள் மற்றுமொருமுறை யானை செத்திருக்கும்.

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10615

https://www.jeyamohan.in/2010#.WwulaEgvzIU

கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘டொரினோ’- பீட்டர் பொங்கல்

பீட்டர் பொங்கல்

இத்தொகுப்பில் உள்ள பன்னிரெண்டு கதைகளில் ‘முடிச்சுகள்’, ‘இரு கோப்பைகள்’, ஆகிய இரு கதைகளும் கார்த்திக் பாலசுப்ரமணியனை நம்பிக்கை மிகுந்த சிறுகதையாளராக அடையாளப்படுத்துகின்றன, என்கிறார் எம். கோபாலகிருஷ்ணன், தன் முன்னுரையில். இவை போக, ‘பார்வை’, ‘லிண்டா தாமஸ்’, ‘பொதுப்புத்தி’ ஆகிய மூன்று கதைகளையும் மென்பொருள் துறை சார்ந்த களம் காரணமாய் முக்கியமான கதைகளாய் குறிப்பிடுகிறார் (‘ஐ போன் எக்ஸ்’ கதையும் இந்த வரிசையில் வருவதே). இவை போக ‘டொரினா’, ‘விசுவாசம்’ கதைகளும் கவனிக்கத்தக்கவை. பிற கதைகளான ‘யயகிரகணம்’, ‘ஒரு காதல் மூன்று கடிதங்கள்’, ‘வழிபோக்கன்’, ‘நிழல் தேடும் ஆண்மை’, வேறு சிலரை ஈர்க்கலாம்.

அலரறிவுறுத்தல் என்ற அதிகாரத்தில் ‘கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்/ திங்களைப் பாம்புகொண் டற்று,’ என்ற குறளின் உரையில் ‘யயகிரகணம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் கலைஞர் கருணாநிதி (கூகுளில் தேடும்போது அது ஒன்றுதான் முதல் பக்கங்களில் கிடைக்கிறது). குறள் அளிக்கும் பொருளில் பொருத்தமாகவே தலைப்பு அமைந்திருக்கிறது. முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தோன்றும் கதையை குறள் விளக்க பொருள் கொண்டு வாசித்தால், கனம் கொண்டதாகவும் நுட்பமானதாகவும் தோன்றுகிறது. ஆனால் கதையின் வாசிப்புக்கு தலைப்புச் சொல் இந்த அளவு முக்கியத்துவம் கொண்டதாக இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. வாசகன் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

‘ஒரு காதல் மூன்று கடிதங்கள்’ சிறுகதை முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் கொண்டதாக  இருக்கிறது. ‘யயகிரகணம்’ கதையின் தலைப்புச் சொல் நாம் வாசித்த கதையை வேறு வகையில் வாசிக்கச் செய்கிறது என்றால் இந்தக் கதையின் இறுதியில் வரும் சொல் நாம் வாசித்த எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விடுகிறது. ஒரு சொல் இத்தனை முக்கியமாக இருக்கும்போது அது உத்தி சார்ந்ததாக மட்டும் இல்லாமல் உணர்வு சார்ந்ததாகவும் இருக்கும்போது அது அளிக்கும் நிறைவு வேறு வகைப்பட்டது.

கார்த்திக் கதைகள் பலவும் நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறான ஒரு பார்வையை, முடிவை அளிக்கின்றன, அதைச் செய்யும்போது உணர்வுத் தளத்தைத் தொடும்போது வெற்றி பெறவும் செய்கின்றன. ஆனால் அதே சமயம் கதைசொல்லி தன்னை மையம் கொண்டவராய் பல கதைகளில் இருப்பதால், நம் புரிந்துணர்வுகளுக்கான பாத்திரம் வேறொரருவராய் இருக்கும்போது போதிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன. ‘வழிப்போக்கன்’ கதையில் வரும் நொய்டா வழிகாட்டியை நாம் கடைசி வரை வீடு பார்த்துக் கொடுக்கும் ப்ரோக்கர் என்றே நினைக்கிறோம். ஆனால் கடைசி வரை அவனைப் பற்றிப் பேசாமல் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் கதைசொல்லியால் முடிவு ஒரு ஆச்சரிய உணர்வாய் மட்டுமே அமைந்து விடுகிறது. இலக்கிய வாசிப்பில் நம் எதிர்பார்ப்புகள் அதனோடு நிற்பதில்லை. இந்தத் தொகுப்பில் மிகச் சிறந்த கதையாக பலராலும் சொல்லப்படும் ‘இரு கோப்பைகள்’ கதையிலும் கதைசொல்லியின் தற்கூற்றுப் பார்வை ஒரு குறையாகவே அமைகிறது. சாவு வீட்டில் அழுகையைப் பார்ப்பவன், அந்த வீட்டில் உள்ளவர்களின் துயரத்தை நமக்கு கடத்தித் தருகிறானா அல்லது அவனது உணர்வுகளைச் சொல்லுவதோடு நின்று விடுகிறானா என்பதில் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

மேற்சொன்ன கதைகளைப் போலவே ‘நிழல் தேடும் ஆண்மை’ கதையும் கடைசி வரி திருப்பத்தில் அதன் உரிய பொருள்படுகிறது. மனைவியைப் பிரிந்த கணவனின் பிரிவாற்றாமைதான் கதை என்கையில் கதையின் முடிவில் நாம் அவன் உணர்வுகள் குறித்த புரிதலில்தான் அக்கறை கொண்டிருக்கிறோம், அவனது மனநிலை நாம் அறிந்த ஒன்றே. அதன் ஆச்சரியங்கள் நிறைவளிப்பதில்லை.

மென்பொருள் துறை சார்ந்த கதைகள் என்ற அளவில், ‘பார்வை’, ‘லிண்டா தாமஸ்’, ‘பொதுப்புத்தி’, ‘ஐ போன் எக்ஸ்’, ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கவை என்பதில் சந்தேகமில்லை. பொதுவாகவே வசதியானவர்கள் வாழ்க்கை குறித்து புரிந்துணர்வுடன் எழுதப்பட்ட கதைகள் தமிழில் அவ்வளவாக காணப்படுவதில்லை. பொருளாதாரச் சிக்கல்கள், பணம் மட்டும் போதுமா, போன்ற வகையில் எழுதப்பட்ட கதைகளும் செல்கின்றன. மென்பொருள் துறையில் உள்ளவர்கள் வாழ்க்கை முறை சாதாரணர்களின் பார்வையில் பணக்காரத்தனமாக இருக்கிறது என்றாலும் அவர்களில் பலரும் மத்திய வர்க்கத்துக்கு சற்று உயரே சென்றவர்கள், அவ்வளவே. அடிப்படையில் மத்திய வர்க்கத்தினரின் அத்தனை பிரச்சினைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன.

டெட்லைன்கள், அவற்றை வைத்துக் கொண்டு உயர் அதிகாரிகள் அளிக்கும் அழுத்தம், குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியாத பெண் நிலை, வேலைக்குப் போகும் பெண்ணைப் பொதுவாகவே சமூகம் எதிர்கொள்ளும் விதம் என்று பலவற்றை ‘பார்வை’ தொடுகிறது. மென்பொருள் துறைக்கே உரிய பிரச்சினைகளைப் பேசும் இக்கதையின் முடிவும் தாக்கம் கொண்டதாக இருக்கிறது. ‘லிண்டா தாமஸ்’ கதையும் மென்பொருள் துறையில் மட்டுமே நிகழக்கூடியது. தன் பணியை வேறொருவருக்கு பயிற்சி அளித்து தாரை வார்ப்பவர் பற்றிய கதை- இதன் பலகீனம், கடைசி வரியில்தான் கதை இன்னது என்று நாம் தெரிந்து கொள்கிறாம். இது கார்த்திக்கின் பலகீனமும்கூட.

‘பொதுப்புத்தி’, ‘ஐபோன் எக்ஸ்’ இரு கதைகளிலும் வரும் இரு முக்கிய பாத்திரங்கள் மென்பொருள் துறையில் கேட்டுக்கு வெளியே நிற்பவர்களும் உள்ளே செல்பவர்களும். இருவருக்கும் உள்ள இடைவெளி இக்கதைகளில் மிக நன்றாகவே வெளிப்படுகிறது, ‘பொதுப்புத்தி’ கதையைவிடக் கூர்மையாய் ‘ஐபோன் எக்ஸ்’ கதையில். ‘ஐபோன் எக்ஸ்’ கதையில் உள்ள நுண்விவரணைகளில் நாம் நல்ல ஒரு கதைசொல்லியைப் பார்க்கிறோம். பொதுவாகவே கதைகள், அவற்றின் முடிவுகள், களம் என்று குறைகள் சொன்னாலும் கார்த்திக் பாலசுப்ரமணியனின் கதைசொல்லலில் குற்றம் காண முடியாது. பெரும்பாலான சமயம் அவரது கதைகள் சுவாரசியமளிக்கத் தவறுவதில்லை.

இலக்கிய வகைமை என்ற அளவில் ‘டொரினோ’ கதை ஏற்கனவே வாசித்து வாசித்து அலுத்துவிட்ட அக்காக்களைப் பற்றியதாக இருப்பதால் முக்கியமில்லாததாக இருக்கலாம். ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்களைத் தவிர, காதலிகளாக இல்லாதபோது, அக்கா, தங்கை, அத்தை, சித்தி, என்று உறவுகளாய்தானே பெண்கள் இருக்க முடியும்? அந்த உறவுகளுக்கேற்ற வாழ்க்கையை வாழ்ந்து மறைகிறார்கள் அவர்கள். இவர்களைப் பற்றி எழுதக்கூடாது என்றால் நம் வாழ்வின் பெரும்பகுதி பேசப்படாமலே மறையும். எல்லாருக்கும் ஒரே கதைதான் என்றாலும் எத்தனை அம்மா கதைகள் இருக்கின்றனவோ அத்தனை அக்கா கதைகளுக்கும் அவசியம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இது செண்டிமெண்ட்டாக இருக்கலாம், ஆனால் அக்காக்கள் விஷயத்தில் செண்டிமெண்ட் உண்மையான உணர்வாகவே இருக்கிறது.

‘டொரினோ’ கதை குறித்து எம். கோபாலகிருஷ்ணன் எழுதியிருப்பது குறித்து வேறுபடுகிறேன் என்றால், ‘முடிச்சுகள்’ கதைக்கு அவர் அளிக்கும் வாசிப்பு குறித்து ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு புனைவெழுத்தாளன் மட்டுமே அளிக்கக்கூடிய வாசிப்பு அது. சாதாரண கதையாக நாம் வாசித்தது எவ்வளவு அபூர்வமான கதையாக இருக்கக்கூடியது என்பதை எம். கோபாலகிருஷ்ணன் எழுதுவது உணர்த்துகிறது.

‘இரு கோப்பைகள்’ கதையில் இன்றுள்ள இணைய இலக்கிய உச்சத்தின் தளத்தைத் தொட்டு விடுகிறார் கார்த்திக் பாலசுப்ரமணியன் என்று நினைக்கிறேன். இந்த ஒரு கதைக்காக மட்டுமே இவரை நம்பிக்கைக்குரிய எழுத்தாளராக கருதலாம். ஆனால் அதற்கு முன் அவர் கடைசி வரி ஆச்சரியங்கள் அளிப்பதைத் தவிர்க்க ஒரு வழி கண்டாக வேண்டும். தனிப்பட்ட முறையில், ‘விசுவாசம்’ கதையில் அவரது ஆற்றல்கள் அத்தனையும் பொருந்தி வருவதாய் காண்கிறேன். அதன் கடைசி வரி ஆச்சரியம் கதையில் ஒரு திருப்பமாக அமைந்தாலும் கதைக்கு அன்னியமாக இல்லை, ஒரு வகையில் அந்த முடிவை நோக்கிதான் கதை போய்க் கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கச் செய்கிறது, கதைகூறலும் யார் மீது அழுத்தம் விழ வேண்டுமோ அவரையே மையம் கொண்டிருக்கிறது. தலைப்பும்கூட கதையின் மையத்திலிருந்து எழுகிறது, அது ஒரு மந்திரத்தன்மை கொண்ட திறப்புச் சாவியாக இல்லை.