Author: பதாகை

பசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்

தமிழில்: சரவணன் அபி

(Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

அத்தியாயம் – 2

அந்த குதிரைவண்டி ஜெபர்சன் வீதியில், கறுப்பினத்தவரின் தேவாலயம் தாண்டி, வறியவர்கள் விடுதியையும், காலியான மீன் சந்தையும் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. “அவரது மறைவுச் செய்தி என்னை மிக்க சோகத்தில் ஆழ்த்தி விட்டது,” டாக்டர் பெயர்ஸ் சொன்னார். “அன்புக்குரியவர்களுக்கு மட்டுமல்ல, அவரது மறைவு இந்த நகருக்கும், மருத்துவத்துறைக்குமே கூட பேரிழப்பு.”

ஜூலியா ஒன்றும் சொல்லாமல் தலையசைத்துக் கொண்டாள்: ஓர் ஒத்திகை பார்க்கப்பட்ட, பண்பட்டதோர் மௌனம். மழை தூறிக் கொண்டிருக்கும்போதும் தொலைவில் எங்கோ தீயணைப்பு மணி ஒன்று ஒலிக்கிறது.

“இறக்கும்போது அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாரா என்ன?” குறுகிய இருக்கைகளினூடே குனிந்து டாக்டர் பெயர்ஸ் கேட்டார். “உங்களுக்கு சிரமமொன்றும் இல்லையென்றால் சொல்லுங்கள் – ஏனென்றால் இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விஷயம். அவர் திடீரென்று இறந்து போனார் என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.”

“அவர் நீண்ட நாட்கள் உடல்நலமின்றி இருந்தார்.”

டாக்டர் பெயர்ஸ் ஓர் எதிர்பார்ப்புடன் தலையாட்டிக் கொண்டார். ஆனால் மேற்கொண்டு ஏதும் பேசாமல் ஜூலியா தொலைவில் எங்கோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். நகரின்மேல் அந்தி ஓர் தெளிவற்ற மூடுபனி மூட்டம் போல் கவிந்துவிட்டது. நடைபாதையின் விளக்குத் தூண்களிலொன்றின் மேல் ஏணியில் நின்றவாறு விளக்கை ஏற்றுமொருவனின் கைகள் வெளிச்சத்தில் பளிச்சிடுவதை ஜூலியா கண்டாள். வில்லியம் இறந்தபோதிருந்த உடல் அவனுக்கு.

ஈமச்சடங்குகள் முடிந்தபிறகு அவளது மகன் ஜேக்கப்புடன் படியேறி வில்லியமின் படிப்பறைக்குச் சென்றதை அவள் நினைவுகூர்ந்தாள். சிதறிக் கிடந்த குறிப்பேடுகளை அடுக்கியவாறே அவனது கிழிந்த பழைய முகவரிப் புத்தகத்தைத் தேடினாள். மேசைக்குப் பின்னால், செடார் மரப்பெட்டிக்குள் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் பட்டு நூலினால் கட்டப்பட்ட நான்கு காகிதக் கட்டுகளை கண்டுபிடித்தாள். அவனது நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மொடமொடத்துப் போன அந்தக் காகிதங்களைப் புரட்டினாள். பேராசிரியர்களுக்கோ, பதிப்பாளர்களுக்கோ அல்லது எந்தவொரு மருத்துவருக்குமோ, யார் யாருக்கெல்லாம் அனுப்பிய அத்தனைக் கடிதங்களுக்கும் ஒரு பிரதி அவன் எடுத்து வைத்திருந்தது போலிருந்தது. பெட்டிக்கு அடியில், அவளது அழகிய எழுத்தில் எழுதப்பட்ட சிறிய கடிதக்கட்டு ஒன்றும் தென்பட்டது. ஒன்றை உருவி சத்தமாகப் படித்தாள்.

அக்டோபர் 22, 1819

மிக இனிய, ஆனால் வருத்தம் தரும் விதம் தொலைவிலிருக்கும் வில்லியமிற்கு,

குளிர்காலம் துவங்கிவிட்டது. அன்னங்களும், கொக்குகளும், வாத்துகளும் தெற்கு நோக்கி பறந்துவிட்டன, இலையாடையின்றி நிர்வாணமாக நிற்கும் ஓக் மற்றும் மேப்பிள் மரங்களின் குளிர்தென்றலின் வழியனுப்புதலுடன். பறவைகள் தேடும் இதம் காரணமாக இருக்கக்கூடும், பிற மிருகங்களைப் போல் நமக்கும் இதமும் சுகமும் தேவையென்றாலும், நமது ஆசைகளை நாம் ஒழுக்கத்தின் பாற்பட்டு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது அல்லவா? இதுவொரு கொடுமை என்று நான் சொன்னால் நீ ஏற்பாய்தானே?

உன்பால் பிரிய அர்ப்பணிப்புடன்,

ஜூலியா

தோன்றிய புன்னகை ஜூலியாவின் ஒரு சிறிய கேவலில் முடிந்தது. இன்னொரு கடிதத்தை எடுத்தாள்.

ஜூலை 9, 1820

என் பிரிய ஜூலியா,

நமது பிரயாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன். வாக்-இன்-த-வாட்டர் என்ற கப்பலில் ஆகஸ்ட் 7ம் தேதி காலை 6.15க்கு நாம் கிளம்புகிறோம். மறுநாள் மாலை ராணுவ தளத்திற்கு சென்று சேர்வோம். நமது இல்லத்திற்கு தேவையான தட்டுகள், பாத்திரங்கள், துணிகள், திரைச்சீலைகள் கொண்டு வருவாய் என நம்புகிறேன்.

என் அன்பே, என் உடைமையே. நீ இல்லாதவரை நான் எப்படி முழுமையாக முடியும்? என் இதயம் உன் குரலின் நினைவில் துள்ளிக் கொண்டிருக்கிறது. என் குருதி உன் காலடி ஓசையின் வரவில் கொதிக்கிறது.

உன்பால் அர்ப்பணிப்புடன்,

வில்லியம்

அந்தக் கடிதத்தை அவள் கசப்பும், அற்புதமும், துக்கமும் ஒருசேர்ந்த கலவையான உணர்ச்சியுடன் நினைவுகூர்ந்தாள். வில்லியமிடம் அன்பு இருந்தது, பார்வைகளிலும், சில சைகைகளில், கடிதங்களில், சில வரிகளில் மட்டுமே வெளிப்படும் வண்ணம். எப்படி அவளால் அவனது கடுமையை ஏற்றுக் கொள்ளவும் விரும்பவும் முடிந்தது என்று இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஜூலியாவிற்கு திகைப்பாக இருந்தது. ஆனாலும் புருவங்கள் முடிச்சிட இதயத்தின் இறுக்கத்தை இளக்குவது போல் அவன் பார்க்கும் கடும்பார்வை அவளுக்கு விருப்பமாகவே இருந்திருக்கிறது. அவளது இளமையும், எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அவனது கறார்தன்மையும், முதிர்ந்த அணுகுமுறையும் ஒன்றையொன்று சமன்செய்து கொண்டன போலும் என்று தனக்குள் அவள் சொல்லிக்கொண்டாள். உணர்ச்சிக் கிளர்வும் இளமையும் எதனாலாவது சமன் செய்யப்பட வேண்டுமா என்ன? துக்கத்தை மகிழ்ச்சி சமன் செய்து நிம்மதியை அளித்துவிட முடியுமா என்ன?

“அந்தப் புத்தகம் பிரசுரமாகி முப்பத்தியைந்து வருடங்களாகி விட்டன என்றால் நம்பக் கடினமாக இருக்கிறது.” தலையை வியப்பில் அசைத்தவாறு மழை சடசடக்கும் சன்னல் கண்ணாடியைப் பார்த்தார் டாக்டர் பெயர்ஸ். “நான் சின்னஞ் சிறுவன். முழுகால் சட்டைகூட அணிந்திருக்கவில்லை.”

ஒருவேளை அவள் மிக சுயநலமியோ? சொல்லப் போனால், வில்லியமின் படைப்பு அவளை பாரிஸுக்கும், ஹாம்பர்கிற்கும் அழைத்துச் சென்றிருக்கிறது; மென்சிவப்பு முத்துச்சரமும், தந்த கூந்தலணிகளும், அழகிய மொரோக்கோ வேலைப்பாடுகள் கொண்ட விலையுயர்ந்த கண்ணாடி பாத்திரங்களும்… மேலும், அவளுக்கு ஒரு மகனை, ஜேக்கப் இல்லாத வாழ்வை, ஒரு கணம் கற்பனை செய்ய முயற்சித்தாள். அந்த எண்ணம் அரைக்கணம் கூட நீடிக்காமல் கசப்பான சுழலாய் உடனே மறைந்தது. டாக்டர் பெயர்ஸை நோக்கிப் புன்னகைத்தாள்.

“இன்றிரவு நீங்கள் கொண்டாடப்படுவீர்கள்,” அவர் கூறினார். “அவரது பிரபலமான ஆராய்ச்சிகளின் ஒரே சாட்சி நீங்கள் அல்லவா! அந்தச் சிறுவனைத் தவிர.”

“நான் ஒரு சாட்சியல்ல.”

டாக்டர் பெயர்ஸ் கவனமாக தலையசைத்தார்..

“அது முழுக்க முழுக்க, நோயாளிகள் அறையில் வில்லியமும் அந்தப் பையனும் சார்ந்த விஷயம்.” ஜூலியா தோள்களை குலுக்கினாள்: ஒரு தெளிவற்ற, நிராதரவான பார்வையுடன். “அவ்வளவாக என்னால் அந்த நாட்களை நினைவுகூர முடியவில்லை.”

****

செப்டம்பர் மாதம் நீரிணையிலிருந்து குளிர்காலக் காற்றைக் கொண்டு வந்தது. ஜூலியாவை கோடைக்காலம் முழுதும் வாட்டிய சுரத்தையும் நடுக்கத்தையும் போக்கியது. காலையுணவுக்குப் பின் போர் வீரர்கள் தங்குமிடம்தோறும் தொடர்ந்து சென்று அவர்களுக்கு வேண்டியன விற்கும் சட்லர்கள் கடையில் மாவு, முட்டைகள், சில அடி நீளத்திற்கு துணி கொஞ்சம் வாங்கிக்கொண்டு, மெதுவே நதியோர புல்வெளியில் நடந்தவாறே, மெல்லிய பருத்திச் சட்டைகளும் கோவணங்களும், கால்களில் மொக்கஸின் சப்பாத்துகளும் அணிந்த நாடோடிகள் தங்கள் படகுகளில் பொருட்களை ஏற்றுவதை பார்த்தாள். அணிந்திருந்த தடித்த கம்பிளியாடையின் கனம் அவளைச் சோர்வால் நிறைத்தது; அவள் நடுங்கினாள். நீரிணைக்கு எதிரே, அவர்களது குடிலின் புகை கசியும் சிம்னியும், மேற்கூரையும் தெரிய, மனம் சிறிது தெளிந்தது; பின் வில்லியமின் மேல் எண்ணங்கள் குவிந்தன.

பையன் வந்த பிறகு அவன் உற்சாகமாகவே இருந்தான், எனினும் ஒரு தொலைவு இருக்கத்தான் செய்தது: அதிகாலையில் எழுந்து, கணப்படுப்பில் தீயை மூட்டிவிட்டு, பையனைப்  பரிசோதித்துவிட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு விடுவான். அந்தியில் திரும்பி, ஒரு குவளை தேநீர் அருந்திவிட்டு, பையனின் அறைக்குள் மறைந்து விடுவான். சமையலறை மேடையின்மீது நிறைவடையாத ஒரு கடிதமும், அதன் முன்பு ஜூலியாவும் இருப்பார்கள். அவளது பேனா எழுதும் சத்தம் தவிர வேறெதுவும் அற்ற நிசப்தம்.

ஓரிரவு வில்லியம் அந்த அறைக்குள்ளிருந்து அவசரமாக வெளிவந்து அவனது குறிப்பேடுகளைப் புரட்டும் சரசரப்பு கேட்டது; பின் நீண்ட அமைதி. சிறிது நேரம் கழித்து கைகளை இடுப்பின் இருபுறம் வைத்துக்கொண்டு எதிரில் வந்து நின்றான்.

பையனுக்கு ஒன்றுமில்லையே?

கைகளால் காற்சட்டைப்பைக்குள் காசுகளை சலசலத்துக்கொண்டே புருவங்கள் நெரியக் கேட்டான். உணவெடுக்காமல் கிடக்கிறான், பசியெடுக்கிறது. சாப்பிடுகிறான், பசி மறைந்துவிடுகிறது. ஏன் என்று உனக்கு தோன்றுகிறதா?

ஜூலியா எச்சரிக்கையாக புன்னகைத்தாள்.

சொல்லு, என்றான் வில்லியம்.

கிசுகிசுப்பின் கூட்டிசை போல காற்று மரக்குடிலின் கதவைக் அறைந்து கடந்து சென்றது. ஜூலியா தலையசைத்தாள், எனக்குத் தெரியவில்லை.

ஆம், உனக்குத் தெரிந்திருக்காது. அவன் சிரித்தான். அவள் பிடரியின் மயிர்கற்றைகளை கோதினான். யாருக்குமே தெரியாது, அன்பே.

அவள் ஒன்றும் சொல்லாமல் அவன் கைகளை பற்றினாள். ஒரு வலிந்த புன்னகையுடன் அவள் விரல்களை அவன் மணிக்கட்டிலிருந்து பிரித்துவிட்டு சொன்னான். பிறகு முயற்சிப்போம். இன்றிரவு – சத்தியமாக.

மறுநாள் காலை வயிற்றில் ஒரு சுருள்வலியோடு விழித்தாள்.

நீர் கொதிக்க வைத்துவிட்டு, சமையறைக்குள்ளேயே பத்து பன்னிரெண்டு தடவைகள் சுற்றி வந்தாள். மறுபடியும் தோற்றுவிட்டேன், என்று எண்ணிக்கொண்டாள். மனதை இனிய நினைவுகளில் பதிக்கும் விதமாக அடுத்து எப்போது சூசனின் கடிதம் கொண்டுவரும் படகு வருமோ என்று நினைத்தாள். நேற்றிரவு, வில்லியமின் உணர்ச்சிகளைத் தூண்டும் முயற்சியில் மீண்டும் தோற்றுப் போனாள்: அவனது கடுமையான தொடர்ந்த உழைப்பே அவனது வீர்யத்தை செயலிழக்கச் செய்துவிடுகிறதோ என்று கசப்புடன் எண்ணிக்கொண்டாள். நான் தோற்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன், நான் மீண்டும் தோற்றுத்தான் விட்டேன். இந்த வார்த்தைகளை ஒரு துக்ககரமான, படைவீரர்களின் நடைப்பாடலின் சந்தத்தில் தனக்குள்ளே பாடிக்கொண்டாள்.

சமையலறையைக் கூட்டி துடைப்பத்தை தரைப்பலகைகளின் மேல் தட்டினாள். வில்லியமுடனான உரையாடல்களில் நிலவும் எரிச்சலூட்டும் தயக்கங்களை, அவனது ஒவ்வொரு தொடுகையிலுமிருக்கும் தாங்கவே முடியாத நிச்சயமின்மையை, அவள் வெறுத்தாள். இப்போதெல்லாம் அவளுக்கு, அவர்களிருவரும் தலை நரைத்து, இளக்கம் சிறிதுமில்லாது, காலையுணவுக்கு மேசையின் இருபுறமும் ஒரு வார்த்தையும் பேச இன்றி அமர்ந்திருக்கும் இரு அந்நியர்கள் என்பது போல் அடிக்கடி தோன்றும் காட்சி, தவிர்க்க முடியாத சினத்தையும் சோகத்தையும் ஒருசேர ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு குழந்தை அவர்களது பிரச்னைகளை தீர்த்துவிடக்கூடும்: வில்லியமின் சேய்மை, அவளது தனிமை. வீடு முழுதும் அவளது தளர்ந்த, உற்சாகம் குன்றிய மூச்சுக்காற்றினால் நிறைந்திருப்பதாக தோன்றியது.

அடுப்பைக் கூட்டும்போது, பையன் மற்றொரு அறைக்குள் நடக்கும் சத்தம் கேட்டது. கூட்டுவதை நிறுத்தினால், நடப்பதும் நின்றது. பிறகு மணி ஒலித்தது.

அறைக்குள் எட்டிப் பார்த்தாள். காலை வணக்கம், திரு ரோலு.

வணக்கம் மேடம். இந்தப் பனியை நீங்கள்தான் கொண்டு வந்தீர்களா?

ஜூலியா பணிவாக புன்னகைத்தாள். ஒரு குவளை தேநீர் கொண்டு வரவா?

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு பெண், வெண்ணிற கூந்தல் கொண்ட பனிமகள் – தன் தலையசைவில் பனியை கொண்டுவருபவள். வானின் குறுக்கே, பனிமான்கள் இழுக்க விரையும் தங்க ரதத்தில், தன் ஒரு தலையசைவில், தான் செல்லும் வழிதோறும் பனிப்பொழிவை உண்டாக்குபவள். அவள் நீதான் போல, இல்லையா?

அவள் மீண்டும் புன்னகைத்தாள். அவளை விட மூன்றே வயது சிறியவன் எனினும் இன்னும் குழந்தைகள் போல் எளிய பகடிகள் செய்வதில் விருப்பம். ஆனாலும் முட்டாள் அல்லன்: சில மதியங்களில் அவனது அறைக்குள் அவன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்கும், ஆனால் வில்லியமிடம் கையைக்கூட தூக்க முடியாதது போல் பாவனை செய்வான். படிக்கத் தெரியாது, ஆனால் ஓராயிரம் படகுப் பாடல்கள் தெரிந்து வைத்திருந்தான். அவற்றை அவ்வப்போது தனது கரடுமுரடான, ஆனால் அதேசமயம், இனிமையாகவும் தொனிக்கும் குரலில் பாடவும் செய்வான்.

நான் போய் உனக்கு தேநீர் கொண்டுவருகிறேன், என்றாள்.

தயவுசெய்து என்னோடு பேசு. இன்னும் கொஞ்ச நேரம்.

ஜூலியா சமையறைக்குள் சென்றாள், பின்னாலேயே அவனின் முனகல் கேட்டது.

அவளும் பிணியாளர்களை பேணியிருக்கிறாள், ஆனால் மூன்று நாட்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டதில்லை; இந்தப் பையனோ ஐந்து வாரங்களுக்கு மேலாக இங்கிருக்கிறான். சனிக்கிழமை காலைகளில் வில்லியம் பையனின் கட்டை அவிழ்த்துவிட்டு வேறு கட்டு போடுவான். அப்போதெல்லாம் கதவோரம் நின்று கேட்டுக்கொண்டிருக்கும் ஜூலியாவிற்கு, பையனின் பரிதாபமான குரலும், வில்லியமின் திருப்தி தோய்ந்த குரலும் பொறாமையைத் தூண்டும்.

கொதித்த நீரை எடுத்து குவளையில் தேநீர்த் தூளில் ஊற்றிக்கொண்டே ஏதோவொரு, நினைவில்லாத, இனிய பாடல் ஒன்றைப் பாடினாள். அது பையன் பாடும் பல படகோட்டும் பாடல்களில் ஒன்று என்று சட்டென்று தோன்றியபோது திடுக்கிட்டுப் போனாள்.

எனக்குத் தெரிந்த சிப்பேவா இனப்பெண்ணொருத்தியை நீ நினைவுபடுத்துகிறாய், என்றான் அவள் திரும்பி வந்தபோது. இல்லை – தவறாக ஒன்றுமில்லை, கோபப்படாதே.

அவள் தேநீர்க்கோப்பையை அவனிடம் நீட்டினாள். பின் திறந்திருந்த அறைக்கதவினருகே நின்றுகொண்டாள்.

அவள் மணமானவள், ஆனால் அதுவொன்றும் அவர்களினத்தில் ஒரு விஷயமே அல்ல.பெண்கள் பிற ஆண்களுடன் செல்வது அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறது, புரிகிறதா? லாக் டு போய்ஸ் பிளாங்க் அருகே அவர்களது கிராமம் அருகே சில நாள் தங்கியிருந்தோம், புயலொன்று ஓய்வதற்காகக் காத்திருந்தபோது. அப்போது அவள் எங்கள் முகாமுக்கு வருவாள், எரியும் தீயினருகே அமர்ந்திருப்பாள். மிக்க சோகத்துடன் இருப்பாள், உன்னைப் போலவே, எப்போதும் ஒரு சோகப் புன்னகை. அவள் – கண்கள் சுருக்கிக்கொண்டு, உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான் – அவள் ஒரு மரத்தைப் போல, முழுக்க கனிகள் காய்த்து நிற்கும் மரத்தைப் போல இருந்தாள். உனக்குப் புரிகிறதா?

யோசித்துப் பேசு, என்றாள் ஜூலியா, தயவுசெய்து.

நாங்கள் கிளம்புவதற்கு எங்கள் படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருக்கும்போது, என் சட்டையை அவள் பிடித்திழுத்தாள். நான் சியக்ஸ் குழுவால் பிடித்துச் செல்லப்பட்ட அவள் கணவனைப் போலிருக்கிறேன் என்றாள். அவள் பெயர் பசுமைப் பள்ளத்தாக்கின் பெண். அல்லது பசும்பெண், ஏதோவொரு பசுமையின் பெண், அல்லது அது போல் ஏதோவொன்று.

நீ அங்கே அவளை விட்டு வந்துவிட்டாய், அப்படித்தானே.

பையன் சிரித்தான். நான் என் சட்டையை அவளிடம் தந்தேன், அதன்பின் மூன்று வாரங்கள் எனக்கு அணிந்துகொள்ள சட்டையொன்றும் இல்லாமல் போனாலும். அடுத்த கோடையில் அவளைக் கண்டுபிடிப்பேன்.

உனக்கு நல்ல அதிர்ஷ்டம் அமைய வாழ்த்துக்கள், என்றாள் ஜூலியா.

கதவை சார்த்திவிட்டு, துடைப்பத்தை எடுத்துக்கொண்டு முன்னறைக்கு வந்து வீசிக் கூட்டினாள். அவன் சொன்ன கதை அவளுக்கு எரிச்சலூட்டியது; உறைந்து போன நதியில் தன்னந்தனியே அழுதபடி அலையும் ஒரு பழங்குடிப்பெண் அவள் முன் தோன்றினாள். தன் நினைவுகளை வில்லியம் பக்கம் திருப்ப முயன்றாள்: அவன் அந்தியில் வீடு திரும்பிவிடுவான்; அவள் அவனுக்காக வெங்காய சூப்பும் நேற்றைய இரவின் மீன்கறியும் தருவாள். பையனின் உடல்நலம் பற்றி விசாரிப்பாள். அல்லது மருத்துவமனையில் பிற நோயாளிகள் பற்றி கேட்பாள். பசியைப் பற்றி வினவுவாள்.

அவள் மறுபடி பையனின் அறைக்குச் சென்றாள். பையன் இரு கைகளையும் நெஞ்சின் குறுக்கே கட்டியபடி கட்டிலில் சிரித்தபடி அமர்ந்திருந்தான். அவனது செந்நிற சடைமுடி தோள்களில் புரண்டு கொண்டிருந்தது. தேநீர்குவளையை ஜூலியாவிடம் நீட்டினான். அவள் அதைப் பற்றியபோது அவன் குவளையை விடாமல் பிடித்துக் கொண்டான்.

இது நியாயமில்லை இல்லையா?

அவள் மூச்சு ஒருகணம் தடைபட்டது; புன்னகைக்க முயன்றாள். எது நியாயமில்லை?

என் காயத்தை நான் உனக்கு காட்டிவிட்டேன், அவன் கேட்டான், உன் காயத்தை நீ எனக்கு காண்பிக்கவில்லையே?

(தொடரும்)

அத்தியாயம் 1

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

ஒளிப்பட உதவி – PBS

 

அகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா

நரோபா

 உருவாகி வரும் புதிய அலை ஈழ எழுத்துக்களில் அகரமுதல்வனும் ஒரு முகம். 1992ஆம் ஆண்டு பிறந்த அகரமுதல்வன் இறுதிகட்ட போருக்கு சாட்சியாக இருந்தவர். இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். கவிதை தொகுப்புக்கள், கட்டுரைகள், குறும்படம், ‘ஆகுதி’ அமைப்பின் வழியே இலக்கியச் செயல்பாடுகள் என முனைப்புடன் இயங்கி வருகிறார். பதின்பருவத்தில், பதினாறு- பதினேழு வயதில், விழுமியங்கள் நிலைபெறும் காலத்தில், பெரும் அலைகழிப்புகளையும் துக்கத்தையும் அகரமுதல்வன் ஈழத்தில் எதிர்கொண்டிருக்கிறார். இடப்பெயர்வுகளும், மரணங்களும், துயரங்களும் சூழ்ந்த வாழ்வு. இவை அவருடைய படைப்புலகில் என்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும்? அவருடைய முந்தைய தொகுப்புக்கள் வாசித்திராத சூழலில் ‘குக்கூ’ சிறுகதை கூடுகைக்காக அவருடைய அண்மைய தொகுப்பான ‘பான் கீ மூனின் ருவாண்டா’ தொகுப்பை வாசித்தேன்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘பான் கீ மூனின் ருவாண்டா’ பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. ‘பான் கீ மூனின் ருவாண்டா’ எனும் பேரில் ஒரு கதை தொகுப்பில் இல்லாதபோதும், சர்வதேச சமூகம் ஈழ இனப் படுகொலைக்கு மவுன சாட்சியமாக இருந்தது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க இந்த தலைப்பை தேர்ந்துள்ளார். எல்லோரையும் பொறுப்பேற்கச் சொல்கிறார். உங்கள் கரங்களில் குருதிக்கறை உள்ளது பாருங்கள், என நினைவூட்டுகிறார்.

அகரமுதல்வன் எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன் அரசியல் தரப்பை பிரகடனப்படுத்திவிட்டுதான் படைப்புகளுக்குள் செல்கிறார். தனது வலைப்பக்கத்தில் “ஆயுத சத்தங்கள் அற்று அழிக்கப்படும் இனத்தின் நிதர்சனமாக இனத்தின் தேசிய வாழ்வை வலியுறுத்தும் படைப்புக்களை உருவாக்கி கொள்வதனால் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை உடைத்தெறியும் சக்தி என் எழுத்துக்களுக்கு இருக்கிறது” என்று எழுதுகிறார். தொகுப்பில், கதைகளைப் பற்றி விமர்சனபூர்வமாக சில கருத்துக்கள் கொண்ட அபிலாஷின் முன்னுரை இடம்பெற்றுள்ளது. அகரமுதல்வனின் கவிதைகளில் பெண்ணுடல் ஈழ மண்ணுக்கான ஒரு உருவகம், என அவர் குறிப்பிடுகிறார்.

அகரமுதல்வனின் புனைவுலகில் என்னை மிகவும் ஈர்த்தது, அவருடைய ஆகச் சிறந்த பலம் என நான் கருதுவது, அவருடைய மொழி. கவிஞன் என்பதால் இயல்பாக மொழியை வளைக்க அவரால் முடிகிறது. “துயிலின் மேடையில் குளம்படிகள் பற்றிய குதிரைகளை இளம் அகதி சவாரி செய்தான்” (பெயர்), ”மேகங்களைப் பிரித்து நிலவைக் களவாடும் சூரத்தனம் நிறைந்தது” (பெயர்) “ஆன்மா களைந்து கிடுகுகளால் மேயப்பட்ட வெற்றுப் பெட்டிகளாயிருந்தன”, “அரக்கனின் கையில் அடைபட்ட பாம்பைப் போல மூச்சைத் திணறினாள்” (கள்ளு). சில நேரங்களில் மொழிரீதியான தாவலின் வழியாக கதைக்கு கூடுதல் மடிப்புகளை அளிக்கிறார். “மரணத்திற்கு பழக்கப்பட்ட ஒரு மாமிசக் காலத்தின் சுவட்டைப் போலிருந்தது அந்தக் கடைத்தெரு”, “சதா சிரித்துக்கொண்டே நம்மைத் தின்று பெருக்கும் யுத்தத்தின் வயிற்றைத்தான் நாம் இனி பூமி எனப் போகிறோம்” (தாழம்பூ).

அகரமுதல்வனின் இத்தொகுதியின் கதைகளை மூன்றாக வகுக்கலாம். போருக்கு பிந்தைய காலகட்ட வாழ்வை சொல்லும் கதைகள்- ‘பெயர்’, ‘தந்தம்’. போரின் ஊடாக சாமானியரின் வாழ்வை சொல்லும் கதைகள் – ‘முயல்சுருக்கு கண்கள்’, ‘இவன்’, ‘கள்ளு’, ‘தீபாவளி’. போராளிகளின் வாழ்வை சொல்லும் கதைகள் – ‘சங்கிலியன் படை’, ‘தாழம்பூ’, ‘கரைசேராத மகள்’, ‘குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்’.

அகரமுதல்வனின் கதைகளில் ஒருவித வாழ்க்கைச் சரிதைத் தன்மை கொண்ட கதைகள் என “குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்” “கள்ளு” “தீபாவளி” “இவன்” “கரைசேராத மகள்” ஆகிய கதைகளை அடையாளப்படுத்தலாம். இக்கதைகள் தொய்வின்றி வாசிக்க முடிந்தன. குறுநாவல்களாக, நாவல்களாக விரித்து எழுதத்தக்கவை.

அச்சமூட்டும் இருள் நிறைந்த கதைகளில் “முயல்சுருக்கு கண்கள்” மட்டுமே இத்தொகுதியில் சின்ன சிரிப்புடன், நேர்மறையாக முடியும் கதை. இந்தக் கதையில் புற விவரணைகள், காடும் உடும்பு வேட்டை பகுதிகளும் காட்சிகளாக மனதில் நிற்கின்றன. நேரடியாக போரோ வன்முறையோ இல்லாத கதை, போருக்கு அப்பாலான யதார்த்த வாழ்வை சித்தரிக்கிறது. அதே வேளையில் போர் ஒரு பின்புலமாக சன்னமாக கோடிட்டு காட்டப்படுகிறது. ஆதவியின் தந்தை காட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவுகூரப்படுகிறது. கிழவர், நாடும் காடும் பறிபோகிறது, என இயக்கத்திடம் முறையிடுகிறார். உடும்பை வேட்டையாட முயலுடன் சென்றவனின் கதை. இந்தக் கதையின் வடிவத்தை தொடர்ந்து கூர்தீட்டி எழுதும்போது மேலான கலைத்தன்மையை அகரமுதல்வனின் கதைகள் அடையக்கூடும். இக்கதையில் சிக்கல் இல்லாமல் இல்லை. மொழிரீதியாக ‘உவமைக் குவியலை’ அளிக்கிறார். அகரமுதல்வன் பயன்படுத்தும் சில உவமைகளில் அவருடைய மரபிலக்கிய தேர்ச்சி புலப்படுகிறது. சில உவமைகள் ரசிக்கச் செய்தாலும், அவை அதீதமாகி வாசிப்பைக் குலைக்கின்றன. சிறுகதை கவிதைக்கு நெருக்கமான வடிவத்தில் இன்று எழுதப்படுகின்றது என்பது என்னவோ உண்மை. அது கவிதையின் மவுனத்தையும், தரிசனத்தையும், வாசக இடைவெளியையும் கைக்கொள்ள வேண்டும்.

“பெயர்” புலம்பெயர் வாழ்வின் அடையாளச் சிக்கலை சொல்லும் கதை. ஈழத்திலிருந்து தப்பி சென்னைக்கு வருகிறான், தன்னை மறைத்துக்கொண்ட ‘இளம் அகதி’. அவனை அழைத்துச் செல்லும் வாகனக்காரர் பெயர் கேட்டபோது கண் கலங்குகிறான். அவர் சென்ற பிறகு ‘இளம் அகதியின் சிரிப்பு அமுங்கி அமுங்கி அந்த அறையில் எழுந்தது,’ எனும் இடம் இக்கதையில் எனக்கு முக்கியமான இடமாகப் பட்டது. தன் அடையாளத்தை அவன் அஞ்சி மறைக்கவில்லை. அதில் ஒரு சிறு விளையாட்டும் சேர்ந்திருக்கிறது. திரளில் தன்னை அமிழ்த்திக் கொள்ள முயல்பவர்களாகவே இருக்கிறார்கள் ‘இளம் அகதியும்’ ‘அகதியானவளும்’. சாதாரணமாக பணி காரணமாக இடம் பெயர்ந்தவர்களுக்கும் அகதிகளுக்குமான வேறுபாடு என்பது கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளில் உள்ளது. பெயர்ந்தவர்கள் கடந்த காலத்தை மறக்க முயல்கிறார்கள். அகதிகள் அதை இறுகப் பற்றி தங்களுக்குள் பாதுகாக்க விழைகிறார்கள். ஒருவகையில் அவர்களுடைய இறுதி பற்றுகோல் நினைவுகளே. நினைவுகளின் கடந்த காலங்களுக்கும் நிகழ்காலத்திற்கும் இடையேயான ஊசலாட்டத்தால் நிறைந்தது அவ்வாழ்வு.

‘தீபாவளி’ உணர்ச்சிகரமான சித்தரிப்பால் மனதைப் பதறச் செய்த கதை. பதினான்கு முறை தன் வாழ்வில் இடம் பெயர்ந்தவன் கதிர்காமன். இந்திய அமைதிப் படை நிகழ்த்திய குண்டு வெடிப்பில் தன் மனைவியையும் மகளையும் இழக்கிறான். ‘சந்திரா இந்திரா’ என தன் மகளுக்கு பெயரிடுகிறார். ‘குடாநாட்டு வாத்தியார் கடத்தப்பட்டார்’ கதையிலும் ‘எம்.ஜி.ஆர்’ மீதான ஈழ மக்களின் பிணைப்பு வெளிப்படுகிறது. இந்திய அமைதிப் படையின் தாக்குதலின் விளைவாக நேரும் பிஞ்சுக் குழந்தை இந்திராவின் மரணம் வெகுவாக அமைதியிழக்கச் செய்கிறது. தொகுப்பின் இறுதி கதையில் வருவது போல “உலகின் மோசமான நிகழ்வுகளுக்கு கடவுள் காரணமல்ல” என்று சொல்லிவிட முடியுமா எனத் தெரியவில்லை. உணர்ச்சிகளால் சற்று அமைதியிழக்கச் செய்த மற்றொரு கதை என “கரை சேராத மகளை” சொல்லலாம். சாதனாவின் தோற்றம் மனதை தொந்திரவு செய்கிறது. கால்களற்ற, பார்வையற்ற ரத்தக் கன்று போலிருந்தாள். அவளை அந்நிலையில் விட்டுவிட்டு அவளுடைய அன்னை பூ ராணியும் இறந்துவிடுகிறாள்.

“தந்தம்” மற்றும் “குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்” ஆகிய தொகுப்பின் கடைசி இரு கதைகள் வழுக்கிக்கொண்டு செல்கின்றன. “தந்தம்” துரோகத்தின் கதை. போருக்கு பிந்தைய நெருக்கடிகளை சொல்கிறது. ராணுவத்துடன் இணைந்து முன்னாள் புலிகளை காட்டிக் கொடுக்கிறார்கள். அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சித்திரத்தை அளிக்கிறார். தெளிவத்தை ஜோசெப் ‘குடைநிழல்’ இத்தகைய தலையாட்டியின் செயல்பாடுகளை மிகக் கூர்மையாக சொல்லும். “குடாநாட்டு வாத்தியார் கடத்தப்பட்டார்” மனித வெடிகுண்டுகளாக மாறி கொழும்பில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. சன்னமான அங்கதம் சம்பவங்களுடன் இழையோடுகிறது. பல கதாபாத்திரங்களும், கலைந்த வடிவமும் கொண்டிருக்கிறது. நாவலாக விரித்தெடுக்கும் வாய்ப்பு கொண்ட களமும்கூட. கதை சொல்லும் முறை கைவரப்பெற்ற கதை என இதை குறிப்பிடலாம்.

“கள்ளு” ஒரு பெண்ணின் மூன்று காதலர்களைப் பற்றிய வாழ்க்கைச் சரிதை கதை. இதில் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘கண்டி வீரன்’. தன்னை புலி என்று சொல்லிக்கொண்டு அந்நிய நாட்டில் தஞ்சம் புகுந்தவர் என அவரை கிண்டல் செய்கிறார். வேகமாக வழுக்கிச் செல்லும் கதையின் முடிவில் “தாய் நாடுமில்லை, தாய்களுக்கு முலையுமில்லை. யுத்தம் எல்லாவற்றையும் சபித்துவிட்டது” எனும் வரி வலுவாக வெளிப்பட்டது. “சங்கிலியன் படை” கதை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. நெருங்கியவன் தவறிழைக்கும்போது நீதியை நிலை நாட்ட முடிவெடுப்பவன். பின்புலம் வேறென்றாலும் இக்கதையின் உணர்வு நிலை நமக்கு பழகியதாக உள்ளது. “இவன்” திருடனுக்கு மீட்சி அளிக்கும் கதை. யூகிக்கத்தக்க’ கதையின் முடிவு. தொகுதியின் பலவீனமான கதைகளில் ஒன்று. “தாழம்பூ” கதையும் தேய்வழக்காகிப் போன பேசுபொருளைச் சொல்கிறது. எனினும் இக்கதைகளுக்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. சில மனிதர்களின் நினைவுகளை எழுதுவதன் வழியே மட்டுமே கடந்து செல்லமுடியும். அல்லது அவர்களை நிரந்தரமாக நினைவில் நிறுத்த முடியும்.

இது சென்ற ஆண்டு விருது வழங்கப்பட்ட மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமியின் மண்புழுக்கள் நாவல் குறித்து நான் எழுதியது அகரமுதல்வனின் படைப்புலகிற்கும் பொருந்தும் என தோன்றுகிறது. “பிரித்தானிய எழுத்தாளர் ஹிலாரி மாண்டெல் வரலாற்று புனைவுகள் பற்றி ஆற்றிய ரெய்த் உரையில் முன்னோர்களை நினைவுகூர்வது எத்தனை முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார். “மனிதராக இருப்பதற்கான மிக நெருங்கிய இலக்கணமாகவே இதைக் கொள்ளலாம், நாம் துக்கம் அனுஷ்டிக்கத் தெரிந்த மிருகங்கள். இனப்படுகொலையின் மிக முக்கியமான குரூரங்களில் ஒன்று வெகுமக்களின் சவக்குழி, நேசத்துக்குரிய, நம்முடன் வாழ்ந்த மனிதர்கள் பெயரிழந்து பிரிக்கமுடியாத மாமிசப் பிண்டத் தொகுப்பாக மாறுதல் அது.” இப்படியான தேவைகள் ஈழ எழுத்திற்கும் இருப்பதாகவே எண்ணுகிறேன்.

அகரமுதல்வனின் கதைகளில் சுய மைதுனமும், காமமும் பல தருணங்களில் வருகின்றன. அவை பெரும்பாலும் சிறிய மனக் கிளர்ச்சிகளுக்கு அப்பால் எதையும் அளிக்கவில்லை. ஆனால் இந்த பயன்பாட்டிற்கு வேறு காரணங்கள் இருக்க முடியுமா என்று இரண்டாம் வாசிப்பில் யோசனை வந்தது. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 வின்ஸ்டன் ஸ்மித் – ஜூலியா உறவை எண்ணிக் கொண்டேன். ‘பெரியண்ணனின்’ கண்களுக்கு புலப்படாமல் என்ன செய்தாலும், செய்ய முயன்றாலும் அது கலகம் எனக் கருதியவர்கள். மிக இயல்பான உந்துதலால் நிகழும் கலவிகூட ஒடுக்கப்பட்ட சூழலில் அதிகாரத்திற்கு எதிரான கலகமாக இருக்கக்கூடும். அவ்வகையான வாசிப்பை அகரமுதல்வனின் கதைகளுக்கு அளிக்க முடியுமா என்று பரிசீலித்து பார்க்கலாம். “பெயர்” கதையில் அவர்களின் விடுதலை உணர்வும் இளைப்பாறுதலும் தெளிவாகவே வெளிப்படுகிறது. “அகதிகள் புணரும் ரகசியத்தை விடியும் இரவும் பார்த்துவிடக் கூடாது”

இரண்டு கதைகளில், ‘இந்தக் கதை இன்னும் பத்து நிமிடங்களில் முடிந்துவிடும்’, ‘ஏழு நிமிடங்களில் முடிந்து விடும்’, என்றெல்லாம் எழுதுவது ஒரு யுத்தி என்றால், அது துருத்தலாக இருக்கிறது. “மேலும் ’ஈழ ஆதரவு – ஈழ எதிர்ப்பு’ எனும் இருமையை ஒரு கறுப்புக் கண்ணாடியைப் போன்று இக்கதைகள் அணிந்திருக்கின்றன” என்றும் அபிலாஷ் எழுதி இருக்கிறார். அது எனக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. இத்தொகுதியின் பெரும்பாலான கதைகள் வாழ்க்கைச் சரிதை தன்மையுடைவையே. வழமையாக நாம் பழகிவரும் வடிவமான சிறுகதைக்கான இறுக்கமோ கச்சிதமோ அவற்றில் இல்லை. எனினும் புதிய வகைமாதிரியான கதைசொல்லலை நோக்கி செல்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். மேற்கில் வரலாற்று நிகழ்வுகளை ‘கதையாடல்’ (narrative) முறையில் எழுத பத்திரிக்கைத்துறையில் பயிற்றுவிக்கிறார்கள். அவ்வகையிலான முயற்சிகளாக கருதப்படும்போது, இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த தொகுப்பு என்னுள் சில ஆழமான கேள்விகளை எழுப்பியது. எனது வாசிப்புக்கு சவாலாக இருந்தது, அதன் எல்லையை சோதிப்பதாகவும் இருந்தது. காரணம் எனது இலக்கிய நம்பிக்கைகள், வழிமுறைகள் மற்றும் தேவைகள் வேறானவை. வேறு வகையான இலக்கிய படைப்புகளும் இருக்க முடியும், அவை கொண்டாடப்பட முடியும், என்பதை கிரகித்துக்கொள்ள சிரமமாக இருந்தது. எல்லைகளைக் கடப்பதே வாசகனின் கடமை. எதையாவது தவற விடுகிறேனா என்று திரும்ப திரும்ப இக்கதைகளை வாசித்தேன். இறுதிவரை கட்டுரையை திருத்திக்கொண்டே இருந்தேன். ஒரு கதை அல்லது கதையாசிரியர் புதிதாக எதையாவது உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. நவீன இலக்கிய வாசகனாக கருத்தியல் பிரதிகளின் மீது எனக்கொரு மன விலக்கம் உண்டு. நவீன இலக்கியம் என்று நான் நம்பும் ஒன்றின் இயல்புகளில் முக்கியமானது, அதற்கு தம்மவர் அயலவர் எனும் இருமையை கடந்து ஒட்டுமொத்த மானுடத்தை நோக்கி விரியும் குரல் இருக்க வேண்டும். குணா கவியழகனின் “அப்பால் ஒரு நிலம்” நாவல் முழுவதும் ஈழப் போராளிகளின் உளவுப் பிரிவின் கதையை சொல்கிறது. வீர வழிபாடு, வழமையான பெண் பாத்திர வார்ப்புக்கள் என்று பயணித்து, நாவலின் இறுதியில் சிங்கள சிப்பாயை தன்னைப் போன்ற ஒரு காதலனாக அடையாளம் காணும் புள்ளியில் நாவல் உச்சம் அடைகிறது. அது நடைமுறை நோக்கில் முட்டாள்தனம்தான், அவனுடைய உயிரையே காவு வாங்கிவிடுகிறது. ஆனாலும் அதில் நம்மவர் அயலவர் இருமைக்கு அப்பால் ஒரு தாவல் நிகழ்கிறது. அதவே அந்நாவலை மேலான பிரதியாக ஆக்குகிறது.

அகரமுதல்வன் அவர் அறிந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு கதைகளை எழுதுகிறார். ஒரு இலக்கிய பிரதியின் பெறுமதி என்பது அது வெளிப்படுத்தும் உண்மைத்தன்மை மட்டும் சார்ந்ததா? ‘உண்மையை’ அப்பட்டமாக சொல்வதால் ஒரு பிரதி மேலான இலக்கிய பிரதியாகிவிட முடியுமா?  பத்திரிக்கைச் செய்திகள் வழியாக அறிந்ததைக்  காட்டிலும் மேலதிகமாக கதை என்ன அளிக்கிறது? அறக் கேள்வியாக, தத்துவ விவாதமாக விரிகிறதா? அகரமுதல்வனின் பாத்திரங்களுக்கு தங்கள் கருத்தியல் சார்ந்து எந்த அறக் குழப்பமும் இல்லை. மனித குண்டுகளாக வெடித்து சிதறும்போதும்கூட “உலகில் மோசமான நிகழ்வுகளுக்கு கடவுள் காரணமல்ல” என்று சொல்ல முடிகிறது. துரோகிகளும், ஒழுக்கமற்றவர்களும், திருடர்களும் மட்டுமே, அவர்கள் அப்படிப்பட்டவர்கள், அதற்காக தண்டிக்கப்பட்டவர்கள், என்பதாலேயே இயக்கத்தை எதிர்த்தவர்கள் என்பதான ஒற்றைப்படை சித்திரம் கதைகளில் காணக் கிடைக்கிறது (‘கள்ளு’, ‘சங்கிலியன் படை’). கலை எல்லாவிதமான ஒற்றைப்படையாக்கத்திற்கும் (stereotyping) எதிரானது என்பது என் நம்பிக்கை. எங்குமே மானுட அகச்சிக்கல்கள், அற நெருக்கடிகள் வெளிப்படவில்லை என தோன்றுகிறது. தலையாட்டியின், கைகாட்டியின் உளம் என்னவாக இருக்கும்? அவனுடைய நெருக்கடிகள் எத்தகையதாக இருக்கும்? துருவப்படுத்தலுக்கு அப்பால் கதை மாந்தர்களின் சிக்கல்ளின் பல அடுக்குகளை, தரப்புகளை பேச வேண்டும். வாழ்க்கை எங்குமே இத்தனை எளிதாக இருமுனைகொள்ளவில்லை எனும்போது அதைப் பற்றி பேசும் இலக்கியமும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பதுதானே எதிர்பார்ப்பு. மறுபக்கத்தின் மறுபக்கத்தின் மறுபக்கத்தை காட்டுவதே இலக்கியம் என்பதாக ஜெயமோகன் எழுதி இருப்பார்.

‘கண்டி வீரன்’ (ஷோபா), ‘தமிழினி’ ஆகியோர் பற்றிய குறிப்பு கதைகளில் காணக் கிடைக்கிறது. கருத்தியல் ரீதியான விலக்கம் கொண்டோரை விமரிசிக்கும் போக்கு எப்போதும் உள்ளதுதான், ஷோபாவே முத்துலிங்கத்திற்கு அப்படிச் செய்த முன்மாதிரி உள்ளது, என்றாலும் எனக்கு அது உறுத்தலாக இருந்தது. மேலும் கருத்தியலை ஒரு படைப்பாளி கையில் எடுத்தால் தன் மொத்த படைப்பூக்கத்தையும் அதை காபந்து செய்வதற்கே பயன்படுத்துவான் என்றொரு ஐயமும் எனக்குண்டு. கதைகளின் மீதான விமர்சனம் கருத்தியலின் மீதான விமர்சனங்கள் அல்ல. பெரும்பாலான கதைகள் என்னை ஈர்க்காமல் போனதற்கு அவருடைய கருத்தியல் சார்புதான் காரணமா என்றால் இல்லை என்று உறுதியாக சொல்வேன். ஒரு அன்னை போர்க் காலத்தில் தன்னை வன்புணர்ந்த சிங்களச் சிப்பாயை தன் மகளுக்கு முதன்முறையாக தந்தையென அடையாளம் காட்டும் அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகளை’ விடக் கூர்மையான அரசியல் கதையை ஈழ பின்புலத்தில் நான் வாசித்ததில்லை. அ. முத்துலிங்கம் அரசியலற்ற எழுத்தாளர் என பலரால் நிராகரிக்கப்படுகிறார் என்பது வேறு விஷயம். பல கதைகளில் தேய்வழக்காகிப் போன உணர்வுகளை எழுதுவதன் மூலம் தீவிரம் நீர்த்துவிடுகிறது. நம்மை அசைத்துப் பார்க்கும் புதிய சித்திரங்கள் ஏதுமில்லை. பெண்களின் சித்தரிப்புகள் வீரமும் ஈரமும் நிறைந்த அன்னை அல்லது பேதை என்பதற்கு அப்பால் வேறு வகையில் விரியவில்லை (ஓரளவிற்கான விதிவிலக்கு- ‘பெயர்’).

இவை என் ரசனை உருவாகிவந்த பின்புலத்தில் எனக்கிருக்கும் எதிர்பார்ப்புகள். எவ்வகையிலும் இறுதி தீர்ப்பல்ல. ஏனெனில் இவை அதீதமாகவும், தேவையற்றதாகவும் பிறருக்கு இருக்கலாம். புனைவை அளக்கும் உறுதியான அளவை ஏதும் என்னிடம் இல்லை. அகரமுதல்வனின் இத்தொகுதி கதைகள் எனக்கான கதைகள் இல்லை என்பதே என் தரப்பு, அவை கதைகளே அல்ல என்பதல்ல. ஹெரால்ட் ப்ளூம் சொல்வது போல் “இலக்கியத்தில் சமூக நீதிக்கு இடமில்லை” எனும் நம்பிக்கை எனக்கும் உண்டு. அதே சமயம், கருத்தியலையும்கூட மேம்பட்ட கலைத்திறனால் கொண்டு சேர்க்க முடியும் என்பதே என் தனிப்பட்ட நம்பிக்கை. நல்ல வாசிப்பும், மொழியும், வாழ்வனுபவங்களும் கொண்ட அகரமுதல்வன் தனது எல்லைகளை உடைத்து மேலும் பல கதைகளை எழுதுவார் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.

 

அந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

பாட்டு பயிற்சியை
அன்றே நிறுத்தி விட்டது
வடையை பறிகொடுத்த காகம்.
கால் செண்டரில் வேலை முடித்து
வீட்டுக்கு வந்து உடைமாற்றி
சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டு
யோகா வகுப்புக்கு செல்கிறது.
ராயப்பேட்டையிலிருந்து
காரில் வரும் ஒல்லியான பையனுடன்
காதலாம்.

வடையை தின்றாலும்
இன்னொரு கதையில் வந்து
திராட்சையை எட்ட முடியாத நரி
சாலை விபத்தில்
கால் முறிந்து
புத்தூருக்குப் போய்
வைத்தியம்
பார்த்துக்கொண்டதாய் கேள்வி.
அதற்குப்பின்
எங்கே போனதென
அறிந்திலர் எவரும்.

திருவாரூர்
பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில்
மருந்துக்கடை வாசலில் பார்த்தாக ஒருவர்
விழுப்புரம்
அபிராமி திரையரங்கின் எதிரில்
தள்ளுவண்டியின் முன் நின்று
வாழைப்பழம் வாங்கி கொண்டிருந்ததாக
மற்றொருவர்
மும்பை ரயிலின்
முதல் வகுப்பு இருக்கையில்
இருமிக்கொண்டு சென்றதை
கண்டதாக இன்னொருவர்.
தவிர
ஊரை விட்டுச்சென்ற நரி
திரும்பி வந்தாக
தகவல் ஏதும் இல்லை.

கண்பார்வை மங்கி விட்டதால்
வடைக் கடையை மூடிவிட்டு
அறந்தாங்கியில்
பெரிய மகள் வீட்டுக்கு சென்ற பாட்டி
கேட்டராக்ட் செய்தபின்
கீரை ஆய்ந்து, காய்கறி நறுக்கி
வாணிராணியும் பிரியமானவளும் பார்த்து
தான் வடை சுட்டு விற்றதும்
இன்ன பிற
குட்டிக் கதைகளும் சொல்லி
பேரப்பிள்ளைகளுடன்
பொழுதைக் கழிக்கிறாள்.

திருடுபோன வடையும்
புளிக்கும் திராட்சையும் தவிர
சில கதைகள் மட்டும்
ஏன் இவ்வளவு நீளமானவையாக இருக்க வேண்டும்
என்பது மட்டும்
அவளுக்கு விளங்கவே இல்லை.

ஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்

ஆகி

உயிர்ப்பித்தல்

கிளைகள் சொடக்கிடும்
காற்றில்
இலைகளென்ன
சருகுகளும் சலசலக்கும்

செவ்விந்திய மாந்திரிகனின்
மேளம் துடிப்பு எனில்
கருப்பினக் கூத்துக் கலைஞனின்
சாக்ஸஃபோன் மூச்சு

யாழும் பேஸும் இசையின்
அதிநுட்ப வடிவங்கள் எனில்
மேளதாளத்தை மிகுவேகத்தில்
நிகழ்த்தும் பறையாட்டம் இசையின் உச்சம்

இன்மை இருப்பு இவற்றின்
ஊசலாட்டத்தினூடாக கலைகள்
திரும்பத் திரும்ப இருப்பை
சுட்டுகின்றனவே கோருகின்றனவே
உயிர்ப்பித்தலின் அகமகிழ்வா

இசையென்ன ஓவியம் உள்பட
அனைத்து கலைகளும்
இதயத்துடிப்பையும்
மூச்சியக்கத்தையும்
நிகழ்த்திக் காட்டவோ
உணர்த்தவோ
உணர்த்தாது தோற்கவோ
யத்தனிக்கின்றனவே

தூர்வாரிய ஏரியில் நீருக்காக
அலைகழியும் துடுப்பில்லா
மரப்படகுகள்
நாம்
கட்டுமரங்கள்
இயற்கையின் நீட்சிகளா
ஆம் பச்சையத்தின் எச்சங்கள்

……………………………………

மேய்ப்பரற்றவன்

கூண்டுக் கிளியாய்
கேட்டதை ஒப்பித்து
சதாகாலமும்
மாறாதிருக்கும்
அந்த மேய்ப்பர்
இல்லை
என் மேய்ப்பன்

என் மேய்ப்பன்
கூடுகள் கலைத்து
படிநிலை தகர்த்து
கலைகளின் கலவையை
ஒப்பனை செய்துகொள்ளும்
வண்ணத்துப்பூச்சி

பிடிவாதமாய்
வெவ்வேறு
வாதத்தினால்
தாக்குதலுக்குள்ளாகும்
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்

என் மேய்ப்பன்
பேதமின்றி
அனைவரையும்
அனைத்தையும்
தழுவிக்கொள்ளும்
நுண் நன்னுயிரி

அவ்வப்போது
கணவனுக்காய் மனைவியை
மகளுக்காய் பெற்றோரைப்
பழிக்கும் வசைக்கும்
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்

என் மேய்ப்பன்
வசையை உட்கொண்டு
ஆசியை வெளியிட்டு
குட்டிக்கரணமிட்டு
முக்குளிக்கும்
ஓங்கில் குட்டி

மேடையில் லபலபத்து
வீட்டில் லகலகத்து
சுற்றி வளைத்துப்
பேசும் அறிவார்ந்த
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்

என் மேய்ப்பன்
மரம் விட்டு மரம் பாய்ந்து
உச்சக்குரலில் கீறிச்சிட்டு
புட்டுப் புட்டு வைத்திடும்
உள்ளங்கையில் அடங்கினும்
அடங்கா அணிற்பிள்ளை

அடிக்கடி
பெயரளவில்
நற்செய்தி கூறி
சாபங்களைத் தூவி வீசும்
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்

என் மேய்ப்பன்
அகத்தின் கும்மிருட்டில்
ஒளிர்ந்து மகிழ்ந்து
வதைந்து மரித்து
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
மின்மினிப்பூச்சி

இரட்டை உயிரி – ராம் முரளி

ராம் முரளி

கிருஷ்ணமூர்த்தி தனது குடிசையின் வாயிலுக்கு எதிரில் மண்ணில் குந்தி அமர்ந்திருந்த கணபதியிடம் குரல் கொடுத்தபடியே, தனது இடுப்பிலிருந்து அவிழ்ந்து நழுவும் கைலியை ஒரு கையால் இறுக்கமாக பிடித்தபடி பாதையில் இறங்கி உடல் வெடவெடக்க அவசரமெடுத்து ஓடினான். அவசரத்தில் வேலிப் படலையும் அவன் சாத்தவில்லை. குடிசையையும் தாழிட்டிருக்கவில்லை.

கணபதிக்கு செய்தியொன்றும் விளங்கவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் நடை வேகத்தை கண்டவனுக்கு விபரீதம் எதுவோ உண்டாகியிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. கிருஷ்ணமூர்த்திக்கு பின்னாலேயே நீலாவதியும், சக்கரப்பூச்சியும் ஓடிக் கொண்டிருந்தார்கள். மல்லாட்ட கெழவி என்று அழைக்கப்படும் சகுந்தலை வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு தனதுடலை நகர்த்தும் வலுவற்று தரையில் அமர்ந்து அரற்றியபடி கிடந்தாள். கணபதி ஒவ்வொருவராக தன்னை கடந்து ஓடப் பார்த்தபடி மெல்ல சலிப்பு கொண்டவனாய் அவசரமின்றி நிதானமாக எழுந்தான். அவன் பிறரைப்போல விரைந்துச் செல்லும் நிலையில்லாமல் இருந்தான்.

இரண்டு தினங்களுக்கு முன்பு, சீட்டுக்கட்டு ஆட்டத்தில் உண்டான கைத் தகராறில் அவனுக்கு பலமாக அடி விழுந்துவிட்டது. சந்திரன்தான் அவனை அடித்தது. தொடையின் அடியில் சீட்டட்டைகளை மறைத்து வைத்துக்கொண்டு மற்றவர்களின் கவனம் சிதறுகையில் அந்தச் சீட்டை, கையில் பிடித்திருக்கும் சீட்டட்டைகளின் இடையில் சொருகி, தன்னை வெற்றியாளனாக தொடர்ந்து தந்திரம் செய்து வந்தது கண்டு சந்திரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை உருவியெடுத்து வெளுத்துவிட்டான். தொடையில் பலமாக அடி விழுந்துவிட்டது. இயல்பாக நடக்கும் திராணியற்று ஒவ்வொரு அடியாக, கருவாட்டு ருசிக்கு மோப்பம் கொண்டலைகின்ற பூனையினைப்போல தரையில் அடிமேல் அடிவைத்து முன் நடந்துக் கொண்டிருந்தான்.

அவனைக் கடந்தோடும் சண்முகம்கூட அவனிடம், “ஏய்… நம்ம பூபாலன் பைய. தூக்குல தொங்கிட்டான். ஊரே கலவரம் கொண்டலையுது. நீ என்ன கண்ணி வெடிக்கு தடம் பாத்து நடக்குறாப்ல நடந்துட்டு இருக்க. வேகமாக வா நாய..” என்று உதடுகள் துடிக்க சொல்லிவிட்டு போனான்.

கணபதிக்கு எதுவொன்றும் விளங்கவில்லை. அவனது நினைவுகள் முன்னும் பின்னுமாக சிதறி ஓடியது. ஊர் விடலைகளின் முகங்கள் ஒன்றன் மீதொன்றாக விரைவதும் கரைவதுமாக இருந்தது. தனது சட்டையை இழுத்து முகத்தை ஒருமுறை அழுந்தத் துடைத்த நொடியில் சட்டென எதுவோ புரிபட,  வெறித்த பார்வையுடன் உணர்வுகள் வற்றி அப்படியே நிலைத்து நின்றுவிட்டான். பூபாலனின் முகமும், குரலும் அவனது நினைவில் உருத் திரண்டன. ”ஆறேழு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் செஞ்சிக்கிட்ட பூபாலனா,” என தன்னிச்சையாக உச்சரித்த அவனது குரலை கவனித்தவர்கள் யாருமில்லை. கணபதி தன் போக்கில் நடந்துக்கொண்டிருந்தான். அவனது மனம் கிடந்து அடித்துக் கொண்டது. ஊர் முழுவதிலும் பரபரப்பு கூடியிருந்தது.

”அம்சமான பயலாச்சே. அவனுக்கா இந்த கெதி. மாரியாத்தா இந்த பயலுக்கு ஏன் இந்த தண்டனை. அவனொன்னும் விஷமம் புடிச்ச பையனில்லையே. தங்கமா பொண்டாட்டி, நல்ல எடத்தில டியூட்டிக்கு போனான். அவன் வூட்டுல மல்லிகைப்பூ மணம்கூட இன்னும் நின்னப்பாடில்ல. அதுக்குல்ல அவனுக்கா இந்த கெதி”

கணபதிக்கு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டு முகத்தில் கோடுகளாக வழிந்து உருண்டது. தனதெதிரில் உடம்பில் சட்டையின்றி வேகமாக வந்து கொண்டிருந்த சிலம்பரசனை அடையாளங்கண்டவனாய்,

“ஏய் செலம்பு. செய்தி கேட்டீயா.. நம்ம பூபாலப் பெய. கயித்துல தொங்கிட்டானாம். அவனுக்கென்ன அப்படியொரு கேடு”

“நானும் அங்கிருந்துதான் வாரேன். இதுப்போல ஒரு சாவு என் வாழ்க்கையில நான் கண்டதில்லை. வயித்து புள்ளத்தாச்சு தரையில் கெடந்து தவியா தவிக்கிறா. பாக்க மனசு வரல. அதான் போயி ஒரு கட்டிங் ஏத்திட்டு வரலாம்னு இருக்கேன். வரீயா…”

”சாவு சங்கதி கேட்டதுல இருந்து கையும் காலுங் ஓட மாட்டேங்குது. மனசு கெடந்து படபடன்னு அடிச்சிக்குது. என்னால எப்படி சாராயத்த குடிக்க முடியும். நீயே ஊத்திக்க. எனக்கப்புறம் அந்த பழி பாவத்த சுமக்க முடியாது”

“நான் சொல்லுறத கேளு. சாவு நீ நினைக்கிற மாதிரி இல்ல. அவனவன் பேயி புடிச்சி திரியுறானுவோ. பொணத்துக்கு பக்கத்துல போவக் கூட எவனுக்கும் துணிவில்ல. நைனாவும் கிருஷ்ணமூர்த்தியுந்தான் அவன அம்மணப்படுத்திக்கிட்டு இருக்காங்க”

கணபதிக்கு திடுக்கிடல் உண்டானது. ஊரில் அவன் பார்க்காத சாவு ஒன்றுமில்லை. அரளி விதை கடித்து உயிர் துறந்த செங்கனியிலிருந்து, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட ஆராயி வரை அவனது நினைவில் அக்கணத்தில் வந்து போனார்கள். ராவணனின் அப்பா இறந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. சாலை விபத்தில் நிகழ்ந்தேறிய கோர மரணமது. கணபதி அன்றைய தினத்தில் ராவணன் வீட்டை விட்டு துளியும் அகன்றிருக்கவில்லை. அவரது உடலை மருத்துவனையிலிருந்து ஆம்புலன்ஸில் தூக்கி வந்து வாசலில் நிறுத்தியபோது, வீட்டினுள் அதனை தூக்கிச் சென்ற கரங்களுள் ஒன்று கணபதியுடையது. சிறுவயது முதலே அந்தப் பகுதியில் பலபல மரணங்களுக்கு சாட்சியாளனாக அவனிருந்திருக்கிறான்.

“அதென்னப்பா அப்படியொரு சாவு. நான் பார்க்காததா? அந்த பயலோட மொகம்தான் கொஞ்சம்போல இம்சப்படுத்த செய்யுது. ரெண்டு நாளுக்கு முன்னாடிக்கூட பொட்டிக் கடையாண்ட பாத்தேனே. பயலுவோ கூட கூடி நின்னு பேசிட்டிருந்தான். என்ன பாத்து லேசாக சிரிச்சிட்டு போனான். அதுக்குள்ள என்னயா ஆச்சு என் தம்பிக்கு?”

கணபதியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பூபாலனின் முகம் அவனது நினைவை விட்டு அகலாதிருந்தது. துணித் துண்டினை எடுத்து முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டான். சிலம்பரசனுக்கும் அவனது அழுகையை எதிர்கொள்கையில் கண்ணீர் திரண்டுவிட்டது. அவனை மேற்கொண்டு பேசவிடாமல், தனதுடலோடு அவனை அணைத்துக்கொண்டு பனந்தோப்பு பகுதிக்கு இழுத்துக்கொண்டு போனான்.

பனை மரங்கள் அவ்விடத்தில் வரிசை வரிசையாக நிலத்தில் உறுதியுடன் நின்றுக் கொண்டிருந்தன. பனை மரங்களின் அடர்த்தி கருங்கோடுகளைப் போல கணபதியின் கண்களுக்கு புலனாகியது. அசைவுகளற்று நித்திய மெளனம் சாதித்துக் கொண்டிருந்த அவைகளை கண்களை உருட்டிப் பார்த்தபடியே, முன் செல்லும் சிலம்பரசனைப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். நிரந்தர அமைதி அவ்விடத்தில் குடிகொண்டிருந்தது. உயிரியக்கமற்ற நிசப்த வெளியினில் நின்று கொண்டிருப்பதாக கணபதிக்கு ஒருகணம் எண்ணம் தோன்றலாயிற்று. ஒவ்வொரு பனை மரத்திற்கும் இடையிலிருக்கும் வெற்றுவெளியில் கவிந்திருந்த வெறுமையை எதிர்கொள்ள கணபதிக்கு சற்றே கலக்கமாக இருந்தது. வெளியில் சூழ்ந்திருந்த வெறுமை மெல்ல அவனது மனத்துக்குள் சென்று ஆற்றொவொண்ணா துயரை இறக்கியபடி இருந்தது.

சிலம்பரசன் தனது கால்சட்டையில் திணித்து வைத்திருந்த சாராய பாட்டிலை வெளியில் எடுத்து தரையில் வைத்துவிட்டு, செருப்பைக் கழற்றி அதன் மேலேறி அமர்ந்து கொண்டான். கணபதிக்கு உள்ளுக்குள் நெருடலாக இருந்தது. எனினும், தன்னெதிரில் அசைவு கொண்டிருக்கும் ஒற்றை உயிரியான சிலம்பரசனின் துணை அவனை சாந்தமடையச் செய்தது. தனது துண்டை எடுத்து ஒருமுறை உதறிவிட்டு தரையில் மரமொன்றில் தோள் சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.

”என்னயிருந்தாலும், நான் அவன் மொகத்த ஒரு தடவ பாத்திருக்கனும் செலம்பு. மனசு கெடந்து தவிக்குது”

சிலம்பரசன் அவன் பேசுவது எதையும் கவனிக்க விருப்பமில்லாதவனாய் விறுவிறுவென முனைப்புடன் இரண்டு பிளாஸ்டிக் தம்ப்ளர்களில் சாராயத்தை ஊற்றினான். தண்ணீர் பாக்கெட்டை பற்களால் இழுத்துக் கடித்து நீரை அதன் மேல் பீய்ச்சி அடித்தான். நீரோடு கலந்து சாராயம் பொன் நிறத்தில் பிளாஸ்டிக் தம்ப்ளரில் தேங்கியிருந்தது. சிலம்பரசன் கையில் எடுத்து மடமடவென குடித்துவிட்டான். அவன் முகத்தில் சுணக்கம் உண்டானது. ருசி நாவினை எரிச்சல் படுத்தியதைப்போல சட்டென சிறிது தண்ணீரையும் குடித்துக்கொண்டான்.

“ஏய் கணபதி. நான் ஒன்னும் கல் நெஞ்சுக்காரனில்லை. ஊருல எழவு உழுந்து எல்லா பயலுகளும் பேயி புடிச்சி திரியும்போது, இங்க இப்படி ஒக்கார்ந்து சாராயம் குடிக்கிறேன்னு என்னைய ஈனப்பயனுக்கு நெனச்சிடாத”

“அதெல்லாம் நான் ஒன்னும் அப்படி நெனக்கிற ஆளில்ல”

“உனக்கு இன்னும் செய்தி சரியா தெரியல. தூக்குல தொங்குனது பூபாலனில்ல. அது வேற”

கணபதி சிலம்பரசனையே கூர்ந்து நோக்கினான். அவனது உடலில் மயிர்கள் சிலிர்த்துக்கொண்டு எழுந்தன. தலையில் இருபுறமும் சுரீரென உணர்வு உண்டானது. அந்த பனந்தோப்பினை தலையுயர்த்தி மேலே பார்த்தான். பனையோலைகள் கூராயுதத்தைப்போல விரிந்து புடைத்துக் கொண்டு நின்றிருந்தன. வானத்தில் பழுப்பு நிறமேறியிருந்தது. காக்கைகள் கிலி கொண்டலைவதைப் போல தொடர்ந்து நிறுத்தாமல் கரைந்தபடியே இருந்தது. கணபதி இன்னமும் தன் பங்கு சாராயத்தை குடித்திருக்கவில்லை.

“ஏழு மாசமிருக்குமா அவனுக்கு கல்யாணமாகி?”

பேச்சற்ற நிலையிலிருந்த கணபதி சட்டென உணர்வு கொண்டவனாய், “ஆமாப்பா. ஏழு மாசமிருக்கும். முருகன் கோயில் திருவிழா சமயத்துல கட்டுனதுன்னு நெனக்கிறேன்”

“பாவம்யா. அதுக்குள்ள ஆத்தா அவன மேல கூப்டுக்கிட்டா”

“ஏய்… தெளிவா சொல்லுயா. தூக்கில தொங்கினது அவனில்லன்னு சொன்ன..?”

”தூக்குல தொங்குனது பூபாலனோட உடம்புதான். ஆனா உயிரு அவனோடதில்ல. அந்த கோலத்த நீ பாத்திருக்கனும். எனெக்கெல்லாம் உடம்புல கரெண்ட் பாஞ்ச மாதிரி இருந்துச்சு”

கணபதிக்கு இன்னமும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. அவனாக நடந்தவைகளை சொல்லிவிட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவனைப்போல அமைதியுடன் சிலம்பரசனின் முகத்தையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“கிரிக்கெட் விளையாடிக்கினு இருந்த பயலுவோதான்யா மொதல்ல அத பாத்திருக்கானுவோ. பந்து அவன் வூட்டுப் பக்கமா போயி விழுந்திருக்கு. அத எடுக்குறதுக்கு அந்த வூட்டுப் பக்கமா போயிருக்கானுவோ. திடீர்னு வீட்டோட ஜன்னல் சந்து வழியா எதுவோ அந்தரத்துல தொங்குற மாதிரி தெரிஞ்சிருக்கு. என்னுமோ ஏதோனுமுட்டு வீட்டு கதவ தட்டித் தட்டிப் பாத்திருக்கானுவோ. எந்த நெளிவும் சுளிவுமில்ல. ஊமையாவே கெடந்திருக்கு வூடு. திரும்பவும் ஜன்னல் சந்து வழியா பாத்தா, கால் பாதம் ரெண்டு தொங்குறது இவனுங்களுக்கு புரிஞ்சிருக்கு. உடனே லபோதிபோன்னு கத்தி கூப்பாடு போட்டுருக்கானுங்க.. முந்திரி தோப்புல தண்ணி காட்டிட்டு இருந்த என் காதுலயும் எனுமோ சத்தம்  கேட்டுது, அலறியடிச்சிக்கிட்டு போயி பாத்தா…”

உணர்ச்சி வேகத்தில் தடையற்று சொல்லிக் கொண்டிருந்தவன் திடீரென தனது பேச்சினை நிறுத்திவிட்டு சுற்றும்முற்றும் ஒருமுறை தலையை திருப்பிப் பார்த்தான். அவ்விடத்தில் எவ்வித அசைவுமில்லை.

”அந்த பய தன்னோட பொண்டாட்டி புடவைய ஒடம்புல சுத்திக்கிட்டு அந்தரத்துல தொங்கியிருக்கான்”

அதிர்வு கொண்ட கணபதி புருவம் புடைக்க,  ”என்னது பொண்டாட்டி உடுப்பையா..? என்னய்யா அக்கிரமமா இருக்கு. நெஜமாவா சொல்ற..?”

சிலம்பரசன் அவனுக்கு பதில் கூறாதவனாய் கீழே கணபதிக்கு ஊற்றி வைத்திருந்த சாராயத்தையும் எடுத்து மொடமொடவென குடித்தான். அவனால் நிதானமாக இருக்க முடியவில்லை. சுற்றும்முற்றும் எதையோ வெறிகொண்டு தேடுவதைப்போல முகத்தை அங்குமிங்குமென அலையவிட்டான். கணபதிக்கு அவனது செய்கைகள் எதுவும் புரியவில்லை. அரற்றல் அடங்காமல் தொடர்ந்தபடியே இருக்க, அவனது உடலில் மீது கை வைத்து, “ஏய் என்னாச்சுப்பா உனக்கு..? நீயேன் இப்படி கெடந்து உடம்ப ஆட்டுற..?” என்று உதறுலுடன் கேட்க, சிலம்பரசன் தன் மேலிருக்கும் அவனது கையை தட்டிவிட்டபடி,

”நான் மட்டுமில்ல ஊருல எல்லா பயலும் இப்படித்தான் பயங்கொண்டு திரியுறானுவ. நேத்து வரை ஊருல நல்லவிதமா சுத்திக்கிட்டு இருந்த பய, திடீர்னு ஒடம்புல பொடவைய சுத்திக்கிட்டு தொங்குனா உனக்கு எப்புடி இருக்கும். நானெல்லாம் ஆடிப் போயிட்டேன்”

“அவனுக்கென்ன பைத்தியம் கிய்த்தியம் புடிச்சிடுச்சா..? அப்படியொன்னும் தெரியலய்யே…?! நல்லவிதமாத்தான குடும்பம் நடத்திட்டு இருந்தான்…?”

”அங்கத்தான் விஷயமிருக்கு. பூபாலன் தாயில்லாம வளர்ந்த பெய. அப்பன்தான் அவனுக்கு எல்லாமா இருந்து வளர்த்துவுட்டான். பொம்பள பாசமே கெடைக்காத பயலுக்கு, புதுப்பொண்டாட்டி உண்டானது கொள்ள சந்தோஷமாயிருக்கு. அவ முந்தானையே புடிச்சிட்டு திரிஞ்சிருக்கான். ஊருல எல்லாவனும் அத சொல்றானுவோ. அவள எங்கயும் வுடுறது கெடையாது. கடைக்கண்ணி எல்லா எடத்துக்கும் அவனே போயிட்டு வந்திருக்கான். அவள ஒரு இளவரசி கணக்கா பாத்துருக்கான்”

“அந்த கதெதான் எனக்கும் தெரியுமே. பொண்டாட்டிய எப்படி பொத்தி பொத்தி பாத்துக்கிட்டான்னு. ஒரு தடவக்கூட அவள மத்த வூர் பொம்பளங்க மாதிரி வெளியில பாத்ததில்ல. எல்லாரும் பேசிக்கிட்ட மாதிரி கல்யாணமான புதுசில அப்படித்தான் இருப்பானுங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன்”

”மயித்துல இருப்பாங்க. டேய் அவன் உன்ன மாதிரி என்ன மாதிரின்னு நெனச்சியா..? அவள ஒரு கொழந்த கணக்கா பாத்துட்டு இருந்திருக்கான். கிட்டத்தட்ட நம்ம சிவனும் பார்வதியும் மாதிரி, அவன் தன்னோட ஒடம்புலயும் உசிருலயும் அவ சரி பாதியா இருக்கான்னு நம்பிட்டு இருந்திருக்கான்”

“அதுக்கும் அவன் செத்ததுக்கும் என்ன சம்பந்தம்?”

”அவ முழுகாம ஆனதுக்கு அப்புறம், அவள இன்னும் அக்கறையோட பாத்துட்டு இருந்திருக்கான்… இரு இரு..”

சிலம்பரசன் பாட்டிலில் மிச்சமிருந்த சாராயத்தையும் தம்ப்ளரில் ஊற்றி மடமடவென குடித்தான். கணபதிக்கு அங்கிருந்து எழுந்துச் சென்றுவிட வேண்டும்போல இருந்தது. பூபாலனின் சாவு சங்கதி அவனை மேலும் அமைதியுடனிருக்க விடவில்லை. எழுந்து சென்று அவனது முகத்தையும், அவனது மனைவியையும் பார்க்க வேண்டுமென அவனுக்கு தோன்றியது. பின் திரும்பிப் பார்த்தவன், அவ்விடத்தில் எவ்வித அசைவுமில்லை என்பதுணர்ந்து எழும் துணிவில்லாமல் சிலம்பரசனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். நேரம் கடந்துக்கொண்டே போனது.

நீண்ட நேரமாக தலையை கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சிலம்பரசன், திடுதிப்பென நினைவு மீண்டவனாக, “டேய் கணபதி. உனக்கென்ன மயிரா தெரியும். முன்னபின்ன பொஞ்சாதி கட்டியிருந்தா அரும தெரியும். பெருசா பேச வந்துட்ட. நீயும் உம் மூஞ்சியும். நீயெல்லாம் இருக்குற ஊருல அவனெப்படிடா உசிரோட இருப்பான். கருமாந்திரம் புடிச்சவனே எழுந்துப் போடா. செத்தவன் மூஞ்சிய ஒரு தடவயாச்சும் பாக்கனும்னு தோனுச்சா உனக்கு? கழுத மூத்திரம் குடிக்க நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு வந்துட்ட”

சிலம்பரசனின் குரலின் தொனி முற்றிலுமாக மாறியிருந்தது. சிலம்பரசனுக்கு போதை அதிகளவில் ஏறியிருந்தது. அவனால் இவனை எதிர்கொண்டு பார்க்கக்கூட முடியவில்லை. இங்குமங்குமென வசைகளை இரைத்துக் கொண்டிருந்தான். கணபதிக்கு அதற்கு மேலும் அங்கிருப்பதில் விருப்பமில்லை. எதுவானாலும் பார்த்து விடுவதென்றெண்ணி, எழுந்து செருப்பை காலில் மாட்டிக்கொண்டு நடக்கத் துவங்கினான். சிலம்பரசன் தன்பாட்டுக்கு கணபதியை திட்டியபடி அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

கணபதி மெல்ல அந்த பனந்தோப்பில் ஒவ்வொரு மரமாக கடந்துக் கொண்டிருந்தான். மரங்களனைத்தும் பூபாலனின் நிழலை கொண்டிருந்தன. அதனை சந்திக்க துணிவில்லாமல் முகத்தை தாழத் தொங்கப் போட்டபடி முன்னால் நடந்துக் கொண்டிருந்தான். அவனது மனதுக்குள் பெண் உறவு  குறித்தான எண்ணங்கள் எழுந்தன.

நாற்பது வயதுக்கு மேல் கடந்துவிட்ட கணபதிக்கு இன்னமும் திருமணம் நடந்தபாடில்லை. அவனது ஒற்றை உறவுக்காரரான சன்னாசி பலமுறை சொல்லிப் பார்த்தாயிற்று. கணபதிக்கு துளி விருப்பமும் உண்டானதில்லை. ஒரு பெண்ணுடலோடு பந்தமுண்டாக்கிக் கொள்ளும் நினைவே அவனது மனதை உலுக்கக்கூடியதாக இருந்தது. தெருவில், எதிர் நடையில், கோயில் குளங்களில், கடைக்கண்ணிகளில் எங்குமவனது மனது பெண்பிள்ளைகளை கண்டு சஞ்சலமடைந்ததில்லை. பெண் என்றாலே, அவள் பிற குடும்பங்களை சார்ந்தவள், நெருங்கி தொந்தரவுக்குட்படுத்தக் கூடாத அபூர்வர்கள் கணபதிக்கு. அதென்னவோ அப்படியொரு நினைப்பவனுக்கு.

கணபதி உணர்வற்ற நிலையில் பூபாலனின் வெள்ளந்தியான சிரிப்பை அசை போட்டபடியே தலை கவிழ்ந்து நடந்து கொண்டிருந்தான். அவ்வப்போது பொட்டிக்கடை வாசலில் வெட்டியாய் பொழுதைக் கடத்தியபடி சைக்கிளில் கணபதி அமர்ந்திருக்கும் தருணங்களில், ஒரு கண் சிமிட்டலை பரிசளித்தபடி பூபாலன் அவனை கடந்துச்  சென்ற மாலைப்பொழுதுகள் பொலிவுடன் மனதில் துலங்கியது. ”இதெல்லாம் அக்கிரமம்” என்று கைகளில் காற்றில் ஏவி புலம்பிக்கொண்டு முன்சென்ற கணபதிக்கு, திடீரென பின்னாலிருந்து, “கணபதி” என்ற குரல் கிசுகிசுப்பாக கேட்க, வெடுக்கென தலையை திருப்பிப் பார்த்தவன், பின்புறம் ஒரு அசைவுமில்லாதது கண்டு மேலும் மேலும் துணுக்குற்றபடியே நடை வேகத்தை கூட்டினான். பனங்காட்டில் இப்போது சிலம்பரசனின் குரல் மட்டுமே நிரம்பியிருந்தது.

கணபதி நேராக நடந்துச் சென்று வீரன் கோவிலை அடைந்தான். பரந்த செம்மண் தடத்தில், ஒற்றை அரிவாளைக் கையிலேந்தியபடி வெறித்த பார்வையுடன் ஆங்காரத்துடன் வீற்றிருந்த உயரிய வீரன் சிலையின் எதிரில் போய் கணபதி நின்று கொண்டான். அவனது கண்களில் நீர்க்கோடுகள் உருண்டு வழிந்தபடியே இருந்தது. கணபதியின் பார்வை புகாருரைப்பதைப்போல இருந்தது. இனியொருபோதும், உயிர்பெற முடியாத  நினைவுகளின் அரூப தடத்தில் கண் சிமிட்டி விலகிக் கரையும் பூபாலன் வாழ்ந்த காலத்தை வீரன் சிலையின் முன் நின்று காற்றலையில் ஓதினான். மனதில் கொஞ்சம் நிம்மதியுண்டானது.

தொலைவில் கூடி நின்ற ஊராரை மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தான் கணபதி. அதற்குள் அங்கு ஓலைப் பந்தலை நட்டுக்கொண்டிருந்தார்கள். சில பிளாஸ்டிக் இருக்கைகள் போடப்பட்டு, ஊர் பெருசுகள் வாயில் துணி வைத்து மூடியபடியே முகத்தில் எவ்வித சலனமுமில்லாமல் அமர்ந்திருந்தனர். மாலையுங்கையுமாக சிலர் வீட்டினுள் நுழைந்துக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி பாடை கட்டும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அவருக்கு ஒத்தாசையாக இரண்டொருவர் அவரருகில் அமர்ந்து மூங்கில் கழிகளை அரிவாளால் சீவிக் கொண்டிருந்தனர்.  ஆங்காங்கே சில பொடியன்கள் நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். கணபதியின் வருகையை ஒருவரும் அவ்வீட்டில் அக்கணத்தில் பொருட்படுத்தவில்லை. தெரிந்த முகத்தை தேடி சில நிமிடங்கள் அங்குமிங்குமென அலைபாய்ந்து கொண்டிருந்தான். எவரிடம் பேசுவதென்று அவனுக்கொன்றும் புரியவில்லை. உள்ளே பெண்கள் சடலத்தைச் சுற்றியமர்ந்து தலைவிரி கோலமாக ஒப்பாரிப் பாட்டிசைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருமித்தெழுந்த பல குரல்களின் சப்தம் கணபதியின் குரல்வளையை நெரிப்பதைப் போலிருந்தது. அங்கிருக்கச் சகியாமல் வீட்டின் பின்புறத்திற்கு சென்றான்.

அவ்வூரிலிருக்கும் நான்கைந்து ஓட்டு வீடுகளில் பூபாலனின் வீடும் ஒன்று. அதன் சுவர்களில் பூசப்பட்டிருந்த நீல நிறத்தை விரல்களால் தேய்த்தபடியே பின்புறமாக சென்றவன் அங்கு சிலர் கூடியமர்ந்து சாராயம் அருந்திக் கொண்டிருந்ததை கண்டான். அவர்களைக் கடப்பது அவனுக்கு சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முகமும் தனக்கு மிகவும் அன்னோனியமானதுதான் என்றாலும், அவ்வீட்டில் எல்லோரும் புதியவர்களாக, தனக்கொருபோதும் அறிமுகமற்ற மனிதர்களைப்போல நடந்து கொண்டார்கள்.

கணபதி பின்புறத்தில் நின்றபடி அங்கிருந்த மைதானத்தைப் பார்த்தான். சிலம்பரசன் சொன்னது நினைவுக்கு வந்தது. பின் திரும்பி சுவரைப் பார்க்கையில், அங்கு சுவரின் மையத்தில் சிறு துளையிடப்பட்டு இரண்டு இரும்பு கம்பிகள் அதன் குறுக்காக இடப்பட்டிருந்தன. அந்த ஜன்னலின் வழியாகத்தான் பூபாலன் கயிற்றில் தொங்குவதை ஊர் பசங்கள் கண்டிருக்கிறார்கள். கணபதி மெல்ல குனிந்து அந்த ஜன்னல் சந்தினில் எட்டிப் பார்த்தான். உள்ளே குவியலாக அமர்ந்திருக்கும் பெண்களின் ஓலம் அந்த ஜன்னல் துளையின் வழியே கசிந்து கொண்டிருந்தது. கணபதிக்கு சங்கடமாக இருந்தது. சாவின் வாசனை அந்த சுற்றுப் பிரதேசத்தில் ஒன்றுகலந்து பெரும் மரணக் காடாக ஊரே உருமாறியிருந்தது.

மெல்ல எழுந்து கழி வெட்டிக் கொண்டிருக்கும் கிருஷ்ணமூர்த்தியின் அருகில் தரையில் அமர்ந்தான். அவனும் இவனை கவனியாதது போலவே கழியை மும்முரமாக நறுக்கிக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் பேண்ட் வாத்திய குழுவும் வந்துச் சேர்ந்திருந்தது. செம்மண் நிற தலை மயிருடன் அவர்கள் தங்களுக்குள் ஹாஸ்ய கதைப் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். மற்றையவர்களை போல மரணம் குறித்தான அக்கறையற்று வெகு சகஜமாக அவர்கள் அவ்விடத்திலிருந்தது கணபதிக்கு வினோதமாக இருந்தது. பின் இறப்பு வீடுதானே இவர்களுக்கு பொருளீட்டும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது, அதனால் அவர்களது சந்தோஷமொன்றும் அத்தனை குறைபாடில்லை என்று நினைத்தபடியே, தன்னருகில் இருக்கும் கிருஷ்ணமூர்த்தியை பார்த்தான். அவனது முகத்தில் கடுமை ஏறியிருந்தது.

“மனசு ஆறலண்ணே. இப்படி பண்ணுவான் என் தம்பி?”

கிருஷ்ணமூர்த்தி தலையுயர்த்தி கணபதியை ஒருமுறை பார்த்துவிட்டு, “யேய் உன்ன எப்ப வரச் சொன்னன். இப்போ வந்து கேக்குற? எங்க போயி ஊர் மேய்ஞ்சிட்டு வரே”

“அண்ணே நான் அப்பவே உங்க பின்னாடியே கிளம்பிட்டேன். அந்த செலம்பு பயதான் இழுத்துட்டு பனங்காட்டுக்கு இட்டுட்டு போயிட்டான். என்னென்னுமோ சொன்னாண்ணே. அதெல்லாம் நெசமா?”

“என்ன பொம்பள பொடவ கட்டிக்கிட்டு தொங்கிட்டான்னு சொன்னானா?”

“ஆமாண்ணே”

“சங்கடமான செய்திதான். இந்த வீடியோ சமாச்சாரம் எதுவும் சொன்னானா..?”

“வீடியோன்னா..?” ஒன்றும் புரியாமல் கிருஷ்ணமூர்த்தியிடம் கணபதி கேட்க,

”அடேய். இவம் பொண்டாட்டி பிரசவத்துக்காக ஆத்தா வூட்டுக்கு போயி ரெண்டு மாசமாவுது. இவன் கல்யாணம் கட்டினதில இருந்து ஒரு நாளும் அவள பிரிஞ்சி இருந்ததில்லைப் போலிருக்கு. இங்கிருந்து பல மைல் தாண்டியிருக்கிற குள்ளஞ்சாவடி வரைக்கும் தினமும் போயிட்டு போயிட்டு வந்திருக்கான். அத அந்த பொண்ணு கண்டிச்சிருக்கு. உடம்பு என்னத்துக்கு ஆகுறது. ஏன் எப்படி அலையுறீங்க. சொல்ல வேண்டிய நேரத்துல சொல்லி அனுப்புறேன்னு சொல்லியிருக்கு. பய ரெண்டு மூனு நாளைக்கு ஒரு தடவ அங்க போயி வந்துட்டு இருந்திருக்கான். அதுக்கப்புறம் கடைசி ஒரு மாசமா அவன் அங்க போகவே இல்லையாம். பொண்டாட்டிகிட்ட போன்ல பேசுறதோட சரியாம். அவளுக்கும் இவனெ பாக்காம சங்கடமா இருந்திருக்கு. ஆனா அவனோட ஒடம்பு வீணாபூடுமுன்னு அவ அப்படி சொல்லியிருக்கா…”

கிருஷ்ணமூர்த்தி சொல்வதை இமை மூடாமல் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் கணபதி.

“அந்த பயலுக்கு அப்படியென்ன பொண்டாட்டி மேல பிரியம்னு தெரியல. அப்பன் போயி சேர்ந்ததுக்கு அப்புறம் அவனுக்கிருந்த ஒரே ஒறவு இவத்தான். இந்த பயெ என்ன பண்ணியிருக்கான் தெரியுமா? வூட்டுல நடு சாமத்துக்கு அப்புறம், அவள போலவே பொடவ கட்டிக்கிட்டு, நகை நட்டுன்னு மாட்டிக்கிட்டு, மொகத்துல மஞ்சளயும் பூசிக்கிட்டு முழுசா அவள மாதிரியே மாறி அந்த வூட்டுக்குள்ள நடமாடிக்கிட்டு இருந்திருக்கான். அவனோட போன்ல அத பதிவும் செஞ்சி வச்சிருக்கான்”

கிருஷ்ணமூர்த்தி சொல்வதை கேட்கக் கேட்க கணபதிக்கு அதிர்ச்சி கூடிக்கொண்டே போனது. பூபாலன் உடனான தனது அனுபவங்களை அவன் மனதில் அசை போட்டபடியே கிருஷ்ணமூர்த்தி சொல்வதையும் காதில் வாங்கிக் கொண்டிருந்தான்.

“ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல கடைசி இருபது நாளா அப்படித்தான் இருந்திருக்கான். அவ நெனப்பு வரும்போதெல்லாம் அந்த வீடியோ போட்டு பாத்துக்குவான் போலிருக்கு. அவ தன்னோட குடும்பம் நடத்தலங்கறது அவன நிறைய தொந்தரவு பண்ணியிருக்கு. ஒரு கட்டத்துல என்ன ஆகியிருக்கும்னு தெரியல, தூக்குல தொங்கிட்டான் போலிருக்கு”

கணபதி ஒருமுறை வீட்டினுள் பார்வையை மேய விட்டான். பெருத்த பெண் கூட்டம் அவ்வறையில் நிறைந்திருந்ததால் எந்தவொரு முகத்தையும் அவனால் பார்க்க முடியவில்லை. அவனுக்கு அழுகையும், மனவலியும் சேர்ந்து உண்டானது. சுயமாக பிரசவித்து திரண்டொழுகிய கண்ணீரை கிருஷ்ணமூர்த்தி பார்க்காதபடி மறைவாகத் துடைத்துக் கொண்டான். கல்யாணம் குறித்தான யோசனையே பெரும் பாரமாக நெஞ்சை அமிழ்த்திய நிலையிலிருந்த கணபதிக்கு ஒரு பெண்ணின் மீதான நேசத்தால் நேர்ந்திருக்கும் விசித்திரத்தை இயல்பாக உட்கிரகித்துக்கொள்ள இயலவில்லை. அப்பனும் ஆத்தாவும் போய் சேர்ந்ததும், தனக்கொரு நாதியுமில்லை, தன்னால் இனி யாருக்கும் எவ்வித பயனும் இல்லை என்று கூறி, எந்தவொரு உறவு குறித்த யோசனைகளையும் தவிர்த்துவிட்டு, தனது உலகத்தில் தான் மட்டுமே இருந்து கொண்டிருந்த கணபதி முதல் தடவையாக தனக்கெதிரில் ஒரு பெண்ணின் இருத்தலின் மீது தீராக் காதல்கொண்டு தனது உயிரையே மாய்த்துகொண்ட பூபாலனுக்காக கண்ணீர் சாத்தினான்.

“சாவுற வயசாண்ணே இது. ஏன் இவ்ளோ லவ்ஸு அந்த பொண்ணு மேல”

“எனக்கென்னடா தெரியும். இப்படியெல்லாமா பொண்டாட்டிய விரும்புவாங்கன்னு எனக்கே விஷயத்த கேள்விப்பட்டதுல இருந்து ஆச்சர்யமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு. இனி அந்த பொண்ணு என்ன பண்ணும்னு நெனச்சாத்தான் மனசு ஊமையாகிடுது”

கிருஷ்ணமூர்த்தி சில நொடிகள் எதுவும் செய்யாமல் அமைதியோடிருந்தார். கணபதி சுற்றி நின்றிருந்த எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லோரும் அந்த இளம் வயதினனின் மரணத்தில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது புரிந்தது. எல்லோருக்கும் ஏதேனுமொரு வகையில் பூபாலன் அறிமுகமானவன். பெருத்த அமைதி அவ்விடத்தில் நிலவியிருந்தது.

உள்ளே இருந்து சற்றே நேரத்திற்கெல்லாம் பூபாலனின் உடலை தூக்கி எடுத்து வந்து வாசலில் இருத்தினார்கள். கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அந்த உடலை பார்க்கத் துவங்கியது. கிருஷ்ணமூர்த்தியும் நைனாவுமாக சேர்ந்து அந்த உடலுக்கு புது ஆடை உடுத்தினார்கள். கழுத்து நிறைய மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. கணபதி அந்த உடலையே உற்று நோக்கினான். பூபாலனை தான் கடைசியாக சந்தித்த இரவு அவனுக்கு சட்டென நினைவுக்கு வந்தது. அன்றைய தினத்தில் அவன் புடவை கட்டியிருந்ததாக அவன் நினைத்துக் கொண்டான். மஞ்சளும், குங்குமமும் மேனியெங்கும் ஏறி மினுங்கிக் கொண்டிருந்ததாக அவனுக்கு நினைவுக்குள் வந்தது. அவனால் பூபாலனை அக்கணத்தில் ஒரு ஆணாகவே கருத முடியவில்லை. உள்ளே தரையில் கிடந்து வெறித்த பார்வையுடனிருந்த அவனது மனைவியை பார்த்தான். இரண்டொரு பெண்கள் அவளை தாங்கிப் பிடித்தபடி நின்றிருந்தார்கள்.

கணபதி அவளை ஒன்றிரண்டு முறை பாத்திருக்கிறானேயொழிய, அப்படியொன்றும் அவளது முகம் அவனது மனதில் பதிந்திருந்ததாக படவில்லை. எவ்வளவு சாமர்த்தியமாக அவளை பாதுகாத்திருக்கின்றான். அந்த பெண்ணின் கதியை நினைத்துதான் அவனுக்கு பாவமாக இருந்தது. அவளது வயிற்றில் கருக் கொண்டிருக்கும் உயிர் எவ்வித சிரமமுமின்றி வெளியுலகம் பார்க்க வேண்டுமென அவன் தனக்குள்ளாக வேண்டிக் கொண்டான். அவள் எவ்வித அசைவுகளுமற்று பூபாலனின் சடலத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பூபாலனின் உடலை தூக்கி அமரச் செய்து தண்ணீர் கொண்டு அவனை துடைத்து சுத்தப்படுத்தினார்கள். நெருங்கிய ரத்த சொந்தம் ஒன்றிரண்டு அழுதபடியே கையில் காசும் அரிசியும் தானியங்களுன் சுமந்துக்கொண்டு அந்த உடலை சுற்றிக் கொண்டார்கள். நெல்மணிகளுக்குள் பூபாலனின் உடல் புதைந்திருந்தது. கணபதி பூபாலனின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அத்தனை பிரகாசமாக ஒளி பொருந்தியதாக இதற்கு முன்பு அவன் பூபாலனை கண்டதில்லை.  பூபாலனின் மேனியெங்கும் அழகேறியிருந்தது. ஆண் என்பதன் சாயல் அழித்தெறியப்பட்டு, முழு முற்றாக ஒரு பெண்ணாக பூபாலன் பலரின் பார்வைக்கும் தெரிந்தான். அவனது உடலை அள்ளியெடுத்துச் சென்று தனது வசிப்பிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென திடீரென அவனுக்கு வினோதமான பிரேமை உண்டானது. ஒரு ஆணாக அவனைக் கருத முடியாத நிலையிலிருந்த கணபதி இப்படியும் ஒருமுறை தனக்குள்ளாக சொல்லிக்கொண்டான்,

“ஒரு பொண்ணோட உசுரு அவ்ளோ உசந்ததா? ஏண்டா பூபாலா? நீயேன் பொண்ணா மாறுன? உனக்கென்ன அப்படியொரு எண்ணம். இப்பம் சொல்லுறன் கேளு. உன்னால் திரும்பவும் உயிரோட திரும்பி வர முடியும்னா, ஒரு பெண்ணாக மாறியிருக்குற உன்னை, நான் காலம் போற வரையிலும் பத்திரமாக பாத்துக்க தயாரா இருக்கேன்”

உலுக்கியெடுக்கத்தாற் போல அந்நினைவிலிருந்து மீண்ட கணபதி, அர்த்தநாரியாக பூபாலன் சில நாட்கள் சிவ பார்வதியாக வாழ்ந்த காரணத்தை நினைத்துப் பார்த்தான். உடலெங்கும் மயிர்க்கூச்செறிந்தது.

நிகழ்வதற்கு சாத்தியமில்லை என்றாலும், சொந்தம் எனச் சொல்லிக் கொள்ளவிருந்த ஒரே உறவினர் சன்னாசி தாத்தாவிடம் தன் மனத்தை திறந்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட வேண்டும் எனவும் அக்கணத்தில் அவன் விநோதமான முறையில் தனக்குள் அறிவித்துக்கொண்டான்.