Author: பதாகை

சுரேஷ்குமார இந்திரஜித்:  இடம் / புலம் / கதைகள்- சுகுமாரன்

சுகுமாரன்

Image may contain: 1 person, smiling, close-up

றத்தாழ மூன்றரை அல்லது நான்கு பதிற்றாண்டுகளாக சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் எழுதி வருகிறார். அவ்வப்போது மதிப்புரைகளும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். எழுதுபவர். அவருடைய எழுத்தாக நான் முதலில் வாசித்தது கட்டுரையைத்தான். எழுபதுகளின் இறுதியில் ‘கணையாழி’  யில் பெரியாரைப் பற்றி அதன் மூன்று இதழ்களில் அவர் எழுதிய நீண்ட கட்டுரை கவனத்தை ஈர்த்தது. இன்று அதன் சாரம் நினைவில் இல்லை என்றாலும் அந்த ஈர்ப்பு மறக்க முடியாததாகவே இருக்கிறது. வாசகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட கட்டுரை அது. ஏறத்தாழக் கட்டுரை வெளியான இதழ்கள் ஒன்றிலேயோ அல்லது அதற்குப் பின்போ அவருடைய சிறுகதையும் வெளியானது. அலையும் சிறகுகள் என்ற அந்த முதல் கதை (முதல் கதைதானா?) பரவலான விவாதத்துக்கு உள்ளானது. தொடர்ந்து சிற்றிதழ்களில் அவரது கதைகள் வெளியாயின. இந்தச் செயல் புதிய சிறுகதையாளர் ஒருவரின் வருகையைத் திடமாக அறிவித்தது. ஒருவேளை அவரும் தனக்கான ஊடகம் சிறுகதைதான் என்பதை இந்த நிகழ்விலிருந்து உணர்ந்து கொண்டிருக்கக்கூடும். கட்டுரைகள், மதிப்புரைகளைக் கைவிட்டு புனைவில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டியது இதனாலாக இருக்கலாம் என்பது என் யூகம். பெரியார் பற்றிய கட்டுரையை அவர் நிராகரித்ததன் காரணமும் ஒருவேளை இதுவாக இருக்கக்கூடும்.

முதன்மையாக ஒரு சிறுகதையாளராகவே கருதப்படுபவர். எழுதத் தொடங்கிய காலப் பகுதியில் எழுத வந்தவர்களுடன் ஒப்பிட்டால் சுரேஷ்குமார இந்திரஜித் மிகச் சரளமாகவும் அதிகமாகவும் எழுதியிருக்கிறார் என்பது இந்தக் குறிப்புக்காக அவரது இதுவரையான கதைகளைப் பார்வையிடுகையில் புலனானது. அண்மையில் வெளிவந்த இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பிலுள்ள கதைகளையும் சேர்த்து 82 கதைகளை எழுதியிருக்கிறார். அவரது சமகாலத்தவர் எவரும் இந்த எண்ணிக்கையை எட்டவில்லை.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் இறுதியில் அல்லது எண்பதுகளின் தொடக்கத்தில் அறிமுகமான சிறுகதையாளர்களில் ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித். எழுபதுகளின் தொடக்கத்தில் அறிமுகமான பிரபஞ்சன், பூமணி, வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம் ஆகியோரும் அவர்களுக்குச் சற்று முன்னதாக எழுதத் தொடங்கி இந்தக் காலப்பகுதியில் தங்களது இடத்தை நிறுவிக் கொண்ட அசோகமித்திரன், வண்ணதாசன், அம்பை போன்றோரும் தமிழ்ச் சிறுகதையில் நிகரற்ற பங்களிப்புகளைச் செய்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து சிறுகதையாக்கத்தில் ஈடுபட்ட எழுத்தாளர்களில் அன்று அதிகம் பேசப்பட்டவர்கள் மூவர். சுரேஷ்குமார இந்திரஜித், திலீப்குமார், விமலாதித்த மாமல்லன். எண்பதுகளின் சிறுகதைக் கலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கதையாளர்களாக இந்த மூவரும் நம்பிக்கையளித்தார்கள். அந்த நம்பிக்கையை இவர்கள் எழுதிய கதைகளும் வலுப்படுத்தின. எண்பதுகளில் எழுதப்பட்ட மதிப்புரைகளிலும் கதை விவாதங்களிலும் மூவரும் குறிப்பிடப்பட்டனர். மாறுபட்ட கூறுமுறைகள் கொண்டிருந்தவர்கள்; எனினும் சில பொது இயல்புகளில் ஒற்றுமை கொண்டவர்கள். அநேகமாக இவர்கள் மூவரும் எழுதிய கதைகளில் நகரமே முதன்மையான களமாக இருந்தது. நடுத்தர வர்க்க வாழ்க்கையின் சிக்கல்களே இவற்றில் கதைப் பொருளாக அமைந்திருந்தன. சிறுகதையை நுட்பமான ஒன்றாக முன்வைக்கும் நேர்த்தியும் பொதுவானதாக இருந்தது. இவை ஒப்பீடல்ல; வாசகனாக எனது அனுமானங்கள் மட்டுமே.

ஆரம்பக் காலங்களில் மிக வேகமாகவும் அதிக எண்ணிக்கையிலும் எழுதிய இந்தக் கதையாளர்களின் தொகுப்புகள் ஓரிரண்டு ஆண்டு இடைவெளியில்வெளிவந்ததை இன்னொரு ஒற்றுமையாகச் சொல்லலாம். விமலாதித்த மாமல்லனின் ‘அறியாத முகங்கள்’ , சுரேஷ்குமார இந்திரஜித்தின் அலையும் சிறகுகள்’ இரண்டும் 83-இலும் திலீப் குமாரின் மூங்கில் குருத்து’ 85-இலும் வெளியாயின. எண்பதுகளின் கதைப் போக்கை விளங்கிக் கொள்ள இவை உதவின. ஒன்றுக்கொன்று வேறுபட்ட இந்த எழுத்தின் தனித்தன்மைகள் சிறுகதைக் கலையின் பன்முகத்தன்மையை துலங்கச் செய்தன. சிறுகதையின் அடிப்படை இயல்புகளில் சில கூறுகளைச் சேர்த்தன. நுட்பமாகக் கதை சொல்லுதல், செறிவான மொழியைப் பயன்படுத்துதல், வாசகனின் ஊகத்துக்குக் கதையின் மையத்தை விட்டுவிடுதல் ஆகிய அலகுகளை இவை சேர்த்தன. இந்த அலகுகளை மிகக் கறாராகப் பின்பற்றியவராக சுரேஷ்குமார இந்திரஜித்தைக் குறிப்பிடலாம். நானும் ஒருவன்’ தொகுப்பு முந்தைய கதைகள் பெரும்பான்மையும் இறுக்கமானவை; வடிவக் கச்சிதம் கொண்டவை. சுருங்கச் சொல்வதே சிறுகதை என்ற கருத்தை அவர் கதைகள் எடுத்துக் காட்டின. அவரது எந்தக் கதையும் ஆறு, ஏழு பக்கங்களைத் தாண்டியதில்லை. இருந்தும் அதிக எண்ணிக்கையில் கதைகள் வெளியாயின. குறிப்பிட்ட மூவரில் அதிகமாக எழுதியவரும் தொடர்ந்து எழுதியவரும் சுரேஷ்குமார இந்திரஜித் என்பதை அண்மை வாசிப்பில் அவதானித்தேன். தொடக்க காலக் கதைகளைத் தீவிரமாகவும் வேகமாகவும் எழுதிய மாமல்லனும் திலீப்குமாரும் ஒரு கட்டத்தில் நிதானமான வெளிப்பாட்டாளர்களாகவும் கதை எழுதாப் பருவத்தைக் கொண்டவர்களாகவும் ஆகியியிருக்கிறார்கள். கதையில்லாப் பருவத்தை காணாதவராக சுரேஷ்குமார இந்திரஜித் தொடர்ந்திருப்பதை மீள்வாசிப்பில் கண்டுபிடித்தேன். இந்தத் தொடர்ச்சி எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமல்ல; தனது கதையாக்கத்தின் இன்னொரு கட்டத்தை அடையவும் அவருக்கு உதவியிருக்கிறது. மாபெரும் சூதாட்டம் ‘ என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பவை அலையும் சிறகுகள்’, கிழவனின் வருகை’ ஆகிய முதல் இரண்டு தொகுப்புகளில் வெளிவந்தவையும் வெளிவராதவையுமான கதைகள். இந்தக் கதைகளை அவரது முதல் கட்டமாகவும் நானும் ஒருவன் முதல் ‘இடப்பக்க மூக்குத்தி’ வரையிலான தொகுப்புகளில் இடம் பெறும் கதைகளை இரண்டாம் கட்டமாகவும் எளிதில் வகைப்படுத்திவிடலாம்.

எண்பதுகளில் விமர்சன வசதிக்காக ஓர் அளவீடு கையாளப்பட்டது. தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்களான புதுமைப்பித்தனையும் கு.ப. ராஜகோபாலனையும் முன்னிருத்திச் செய்யப்பட்ட வகைப்பாடு அது. மானுடத்தின் புறம் சார்ந்த சிக்கல்களைச் சொல்லும் கதைகளை எழுதுபவர்கள் புதுமைப்பித்தன் வழி வந்தவர்கள், அகச்சிக்கல்களைப் பேசும் கதைகளை எழுதுபவர்கள் கு.ப.ரா., மரபைச் சார்ந்தவர்கள் என்றும் சுட்டப்பட்டார்கள். இது கறாரான அளவுகோல் அல்ல. ஆனால் ஓர் எழுத்தாளரை அடையாளம் காணவும் வாசிப்பில் நெருங்கி உரையாடவும் இந்த அளவுகோல் துணையாக இருந்தது. புறச் செயல்களும் தோற்றங்களும் அக நடவடிக்கைகளுடனும் உணர்வுகளுடனும் ஒன்றுடன் ஒன்று கலந்து உருவாகும் மனநிலையை மௌனியின் கதைகள் சித்தரித்தன. அந்தக் கதைகளில் புறம் மங்கலாகவும் உணர்வுகள் தீவிரமாகவும் கையாளப்பட்டாலும் இரண்டையும் கடந்த புதிரான நிலையே முதன்மையானதாக வெளிப்பட்டது. புறத்தின் பருண்மையோ உணர்வின் நுண்மையோ அல்ல; இரண்டுக்கும் இடையில் நிலவும் புதிர்த்தன்மையை விளங்கிக் கொள்ளும் எத்தனமே மௌனி கதைகளின் மையம். சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளும் இந்த மையத்தை நோக்கியே செல்பவை. ஆனால் புதிர்த்தன்மையை விளங்கிக் கொள்வதை அல்ல; அந்தப் புதிரை அடையாளம் காட்டுவதையே முக்கியமாகக் கொள்பவை. மௌனியிடமிருந்து அவர் விலகும் புள்ளி இதுவே. அவர் ஒன்றும் இடங்களும் குறிப்பிடத்தக்கவை. மௌனி பாத்திரங்கள் பெரும்பான்மையும் பெயரற்றவை. அநாமதேயமானவை. அவன் அல்லது அவள். கதை சொல்லப்படுவது பெரும்பாலும் தன்மைக்கூற்றாகவே. இந்த இயல்புகளை சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளிலும் காணமுடியும்.

சுரேஷ்குமார இந்திரஜித், மௌனியை முற்றிலும் நிராகரிக்கும் இரு அம்சங்களே அவரது தனித்துவமான இடத்தை நிர்ணயிக்கின்றன. மௌனி புதிரின் மையத்தை விளங்கிக் கொள்ள அலைக்கழிகிறார். அவரே முட்டி மோதி வெளிப்படுத்த இடர்ப்படுகிறார். அங்கே வாசகனுக்கு அனுமதியில்லை. சுரேஷ்குமார இந்திரஜித் புதிரின் மையத்தைத் துல்லியமாக வாசகனுக்குக் காட்டுகிறார். அவனே அதை விளங்கிக் கொள்ளச் சுதந்திரம் அளிக்கிறார். இது முதலாவது அம்சம். மௌனி மையப் புதிரை, புலன்கடந்த நிலைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறார். அதை படைப்பின் ஆன்மீகம் என்று வரையறுக்கிறார். சுரேஷ்குமார இந்திரஜித் மர்மத்தைப் புலன்களின் தத்தளிப்பாகவே சித்தரிக்கிறார். படைப்பில் நிகழும் உலகியல் செயல்பாடாகவே நிலைநிறுத்துகிறார். இது இரண்டாவது அம்சம். இவை இரண்டுமே தமிழ்ச் சிறுகதையில் அவரது இடத்தை உறுதி செய்கின்றன. இதை மேலும் விரித்துச் சொன்னால், பக்தி இலக்கியங்கள், மதச்சார்பான காவியங்கள் நீங்கலாகத் தமிழ் இலக்கியம் இம்மை இயல்பையே கொண்டிருப்பவை. அதன் நவீன கண்ணியாகவே சுரேஷ்குமார இந்திரஜித் படைப்பை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இம்மைசார் இயல்புள்ள கூறுமுறையில் வெற்றிகளை ஈட்டிய படைப்பாளியாக அவரைச் சொல்ல விரும்புகிறேன்.

விரித்த கூந்தல்’ கதையை உதாரணமாகப் பார்க்கலாம். விரித்த கூந்தலுடன் நடமாடும் பெண்களை அறிந்திருக்கும் ஒருவன் அருவியில் குளித்து முடித்து நிற்கும் பெண்ணின் தோற்றத்தால் சஞ்சலமடைகிறான். விரித்த கூந்தல் தொந்தரவு தருவதற்கான காரணம் சட்டென்று விளங்குகிறது. அது திரௌபதியை நினைவுக்குக் கொண்டு வருகிறது. இந்த இடம் வெவ்வேறு தளமாற்றங்களுக்கு ஆதாரமான இடம். திரௌபதியின் கூந்தல் ஒரு உருவகமாகி புலன் கடந்த ஒரு தளத்துக்குச் செல்வது சுலபமும்கூட. ஆனால் சுரேஷ்குமார இந்திரஜித்தின் இம்மைசார் படைப்பாக்க நிலை அதற்கு முற்படுவதில்லை. மாறாக, விரித்த கூந்தல் ஓர் ஆஸ்திரேலியனுக்கோ அமெரிக்கனுக்கோ தாக்கத்தைத் தராது என்று பாத்திரத்தை யோசிக்க விட்டு மனக் கனத்தை இல்லாமலாக்குகிறது. அவரது மொத்தக் கதைகளின் மைய இழை இது என்று தோன்றுகிறது. அவரது படைப்பாக்கத்தில் இந்த இழை அறாமல் நீள்கிறது. அண்மைக் காலக் கதையான மாயப் பெண் அதற்குச் சான்று. எண்பத்து மூன்று வயதான பாத்திரம் தனது பால்ய சகியான ரோகிணியைத் தேடிப் போகிறார். அவளுடைய பேத்தியான மகா நதி அவரை பாட்டியிடம் அழைத்துச் செல்கிறாள். அங்கே நிகழ்வது ஒரு லௌகீக மாயம். ரோகிணியை முத்தமிடுகிறார் கிழவர். அவளும் முத்தமிடுகிறாள். அது கலைந்து தெளியும்போது மாயப் பெண் உதடுகளைக் குவித்துக் காற்றில் முத்தமிடுகிறாள். இவர் தொட நெருங்கும்போது கரைந்து மறைகிறாள். இந்த லோலிட்டாத்தனமான சூழலை அமானுஷ்யமான ஒன்றாக மாற்ற ஆசிரியர் விரும்புவதில்லை. உலகியல் தளத்திலேயே தொடர்கிறார். ‘அவள் ஜொலித்துக்கொண்டே, சிரித்துக்கொண்டே மாயமாக மறைந்து போனாள். நான் தனித்து நின்றேன். காகம் கத்தும் குரல் கேட்டது,’ என்று கதை முடிகிறது. சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளின் தனி இயல்புகளில் ஒன்றாக இதைச் சொல்லாம். இரு கட்டங்களாக அவரது கதைகளை வகைப்படுத்திப் பார்த்தாலும் தொடர்ந்து வரும் குணமாகவே இது தோன்றுகிறது. ‘மறைந்து திரியும் கிழவன், கால்பந்தும் அவளும்’, முதலான பல கதைகளிலும் இந்த இயல்பைப் பார்க்கலாம்.

மாபெரும் சூதாட்டம்‘ தொகுப்பின் பின் அட்டையில் சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளுக்கான அறிமுகக் குறிப்பாக இடம் பெறும் வாசகம் என்னை யோசிக்கச் செய்தது. ‘முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர்’ என்பது அந்த வாசகம். ‘முன்னோடிகளின் பாதிப்பில்லாத தடம்’ என்ற வாசகமே என்னை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைவழியைத் தேடத் தூண்டியது. அப்படி ஒரு தடம் இலக்கியத்தில் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையே தூண்டுதலுக்கு முகாந்திரம். மௌனி எழுத்தின் நேர் பாதிப்பு சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவர் இயங்கும் மொழியில் ஓட்டத்தில் அவர் மேற்கொண்ட தேர்வில் மறைமுகமாக நிகழச் சாத்தியங்கள் அதிகம். இது ஒரு பொருளில் மொழியின் வலு. இன்னொரு பொருளில் படைப்பாக்கத்தின் தவிர்க்கவியலாமை. இந்த்த் தொடர்ச்சிதான் இலக்கியத்தை நிலைநிறுத்தவும் செய்கிறது. இப்படிச் சொல்லிப் பார்க்கலாம். ஆற்றில் முகந்த நீரில் அப்போது நிலவிய தட்பமோ வெப்பமோ நீருடன் கலந்திருக்கிறது. அதை இன்னொரு கொள்கலத்தில் மாற்றிய பின்னேதான் அதன் தட்ப வெப்பம் மாறுகிறது. மொழியில் நிகழும் பாதிப்பும் இது போன்றதுதான் என்று தோன்றுகிறது. இந்தத் தலைமுறைச் சிறுகதையாளர்களான எஸ். செந்தில்குமாரிடமும் குலசேகரனிடமும் சுரேஷ் குமார இந்திரஜித்தின் பாதிப்பை நான் உணர்வது இந்தப் பின்புலத்தில்தான்.

அதிகச் சிரமமில்லாமலேயே சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளை இரு கட்டங்களைச் சேர்ந்தவையாகப் பகுத்து விட முடியும். மாபெரும் சூதாட்டம் வரையிலான கதைகளை முதல் கட்டமாகவும் நானும் ஒருவன், அவரவர் வழி, நடன மங்கை, இடப் பக்க மூக்குத்தி ஆகிய தொகுப்பிலுள்ள கதைகளை இரண்டாம் கட்டமாகவும் பகுக்கலாம். முதற்கட்ட கதைகளை காலத்துக்கு ஆசிரியர் அளித்த கதைகள் என்றும் இரண்டாம் கட்டக் கதைகளைக் காலம் ஆசிரியருக்கு அளித்த கதைகள் என்றும் அழைக்க விரும்புகிறேன். முன்னவை இறுக்கமான வடிவிலும் நெகிழ்ச்சிக் குறைவான நடையிலும் எழுதப்பட்டவை. உணர்ச்சித் ததும்பல்களோ உரத்த குரலோ இல்லாதவை. பெரும்பாலும் மங்கலான பின்புலம் கொண்டவை. அதை அந்தக் காலப் பகுதி எழுத்துக்களின் இருண்மை எனலாம். அதனாலேயே அவற்றைக் காலம் அளித்த கதைகளாக இனங்காண்கிறேன். இரண்டாம் கட்டக் கதைகள் அதிக இறுக்கமில்லாதவையாகவும் நெகிழ்வான நடையைக் கொண்டவையாகவும் அமைந்திருப்பவை. அதுவரை சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் காணப்படாத மெல்லிய அங்கதமும் பகடியும் இரண்டாம் கட்டக் கதைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. ‘பின் நவீனத்துவ்வாதியின் மனைவி கதையை முதற்கட்ட்த்தில் அவர் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. இந்தப் பாகுபாட்டை மீறியும் அவரது ஆதாரக் கூறுகள் இன்னும் தொடர்கின்றன. கதைகளுக்குள்ளிருந்து கதைகளை மீட்கும் அவரது படைப்பியல்பு புதிய கதைகளிலும் செயல்படுகின்றன. முன்பை விட மேலும் துலக்கமாகவே. கதைகளைச் சொல்வதல்ல; கதை நிகழ்வின் மர்மத்தின் முன் வாசகனை அழைத்துச் சென்று நிறுத்துவதே போதுமானது என்ற சுரேஷ்குமார சூத்திரம் செழுமை பெற்றிருப்பதை புதிய கதைகளில் பார்க்கலாம். மட்டாஞ்சேரி ஸ்ரீதரன் மேனோன், வழி மறைத்திருக்குதே, காமத்தின் வாள் ஆகிய கதைகள் மர்மத்தை வெளிப்படுத்தாமலேயே முடிகின்றன. ஆனால் வாசகன் வாசித்துப் புரிந்துகொள்ளும் திறப்புகளை வெளிப்படையாகவே முன்வைக்கின்றன.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளைப் பற்றி ‘கலைகள் கதைகள் சிறுகதைகள்’ என்ற கட்டுரையில் சுந்தர ராமசாமி பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார். ’ சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் ஒதுக்கப்பட்ட மனிதன் சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தின் சக்கரங்களில் தொற்றி ஏற வழிவகை தெரியாமல் வியாகூலம் கொள்கிறான்’. இந்தக் குறிப்பை எழுதுவதற்கான மீள் வாசிப்பில் படித்தவற்றில் ‘மல்லிகைச் சரம் கதையில் யோசனை தயங்கி நின்றபோது மேற்கோள் வரி மனதில் புரண்டது. படைப்பாளியாக சுரேஷ் குமார இந்திரஜித் இந்த மானுடச் சிக்கலை தனது கதைகளில் தொடர்ந்து முன்வைக்கவே எத்தனிக்கிறார் என்று பட்டது. கூடவே சுந்தர ராமசாமியின் வாசகமே இந்தக் கதைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட ஆகச்சரியான மதிப்பீடு என்றும் தோன்றியது. படைப்பை அலகிட்டு வாய்ப்பாடு காண்கிற பிரக்ஞைபூர்வமான செயலைக் காட்டிலும் தற்கண உள்ளுணர்வின் தற்கண மின்னல் வாசிப்பை ஒளியூட்டக் கூடியதாக இருக்கலாம். இருக்கிறது என்பதே இந்தக் குறிப்புக்கு உந்துதல்.

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகளை முன்வைத்து- பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி

Image may contain: 1 person, sitting, shoes and outdoor

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு 1982ல் வெளியானது. அதற்குப் பிறகு பதினோரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ‘மறைந்து திரியும் கிழவன்’ வெளிவந்தது. காலக்கிரமமாகப் பார்க்கையில் ஒவ்வொரு தொகுப்பிலுள்ள கதைகளும் ஒவ்வொரு வகையானவையாக இருக்கின்றன. பகற்கனவைப் போல் விரியும் புனைவுவெளியைப் பொதுவான அம்சமாகச் சொல்லலாம். நிறைய கதைகளில் கதை என்பது இல்லை. புனைவு மட்டுமாக, புகை எழும்பி ஆவியாகி மறைவதைப் போல மறைந்துவிடுகிறது. அந்த விவரணைகளைக் கொண்டு, சம்பவங்களைக் கொண்டு, வாசகர்கள் கதையை உருவாக்க வேண்டியிருக்கிறது.

மனதின் இயல்பே ஒன்றைத் தொட்டு ஒன்றாய் அறிந்து கொள்ளுதல்தான். ஒரு விசயம் குறித்து எண்ணங்கள் குவிகையில் தானாகவே இன்னொன்று ஞாபகத்துக்கு வரும். இரண்டுக்கும் என்ன தொடர்பு என்பது சற்று ஆழ்ந்து கவனித்தால் மட்டுமே பிடிபடும். இந்த வகையான கதைகள் சுரேஷ்குமார இந்திரஜித்திடம் நிறையக் காண முடிகிறது.

சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் தொந்தரவு தரும் ஓர் அம்சம் கதாபாத்திரங்களின் பெயர்கள். ‘ஒரு காரும் ஐந்து நபர்களும்’ என்ற சிறுகதையில் நீலராஜ் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அருகில் 16 வயது மகள் நீலச்செல்வி; பின்னால் மனைவி மகிஷா, தாயார் நீலவேணியம்மாள், மாமியார் பஞ்சரத்தினம்மாள். நீலராஜ் அவருடைய தங்கை நீலகுமாரி வீட்டுக்குச் சென்று தங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருக்கிறார். இந்த விபரங்கள் எல்லாமே முதல் பத்தியில் வந்துவிடுகிறது. இது ஏதோ ஒருவகை மன விலக்கத்தையும், தொந்தரவையும் தருகிறது. ஆசிரியர் பெயர் வைப்பதில் வேண்டுமென்றே கையாளும் இந்த யுக்தியின் நோக்கமும் இந்த விலகலுக்காகவா என்ற கேள்வி எழுகிறது. ‘மாய யதார்த்தம்’ என்ற கதையில் தாயார் பெயர் சூர்யகுமாரி. இரண்டு மகள்களின் பெயர்கள் சந்திரகுமாரி, பூமிகுமாரி.

2013ல் வந்த ‘நடன மங்கை’யில் தான் ஒரு நாவல் எழுத முயன்று கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதோ இன்றைய தேதி 16/10/17 அன்று எதற்கும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று தேடிவிட்டேன். 12 சிறுகதைகள் கொண்ட ‘இடப்பக்க மூக்குத்தி’ என்ற தொகுப்புதான் வந்திருக்கிறது. ஏற்கெனவே சொன்னபடி கதையிலிருந்தும், விவரிக்கும் முறையிலிருந்தும் எழுத்தாளர் வாசகனை கொஞ்சம் தள்ளி நின்று பார்க்க வைக்கிறார். விவரணைகளில் அதிகம் உரையாடல்கள் இருப்பதில்லை. உரையாடல் நிகழுமிடங்களில்கூட அறிக்கையாக மாற்றிச் சொல்லப்படுகிறது. மேலும், அநாவசிய விவரிப்புகள் இல்லாத காரணத்தால், வரிக்கு வரி கதையின் காலகட்டம் வேகமாக நகரும் வண்ணம் உள்ளது. உண்மையில் இவரது நாவலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு கணத்தில் மின்னலாய் வெட்டும் நினைவுகள், பயம், ஆர்வம், ஆசைகள் நீண்டு விரிந்து பின் மனமெனும் பெட்டிக்குள் வந்து அடைகின்றன. ‘மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பில் முதல் கதை ‘திரை’. ஒரு திருமணமான பெண்ணுடன் விடுதியில் தங்குகிறான் குமார். இருவரும் ஒருவருக்காக ஒருவர் பாவனைகளால் நடித்துக் கொள்கிறார்கள். அந்தப் பெண் பார்வதி அவனைப் போல ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்கிறாள். குமார் அது சரிவராது, அப்படி ஒரு குழந்தை பிறந்தால் தான் அதைப் பிரிந்து இருப்பது சிரமம்; மேலும், தன்னுடைய குழந்தையை உரிமை கொண்டாட முடியாமல், அந்தக் குழந்தைக்கு இன்னொருவர் தகப்பனாய் இருப்பதில் தனக்கு உடன்பாடில்லை, என்கிறான். அது அவளுக்குச் சங்கடம் தராதா, என்ற கேள்விக்கு பார்வதியிடம் பதிலில்லை. ஜன்னலை மறைத்துத் தொங்கும் திரை விலக, பார்வதியின் கணவன் வருகிறான். குமாரை வரச் சொல்கிறான். இருவரும் வெளியேறி நடக்கிறார்கள். சாலைகள், தெருக்கள் என்று சென்றுகொண்டே இருக்கிறார்கள். குமார் தன்னை அவள் கணவன் தாக்கக்கூடும் என்றும் அதற்குத் தயாராக வேண்டும் என்று நினைக்கிறான். தன்னுடைய எண்ணங்கள் அவனுக்குத் தெரியுமோ, தெரிந்தால் எப்படி நடந்து கொள்வது என்று யோசிக்கிறான். இது அவனை அயற்சியடைய வைக்கிறது. நடந்து நடந்து அவர்கள் வந்த இடத்துக்கே வருகிறார்கள். பார்த்தால் அருகில் அவள் கணவனைக் காணோம். சோர்வுடன் அறைக்கு வருகிறான். திரை வெறுமனே ஆடிக் கொண்டிருக்கிறது.

‘மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பிலுள்ள ‘பிம்பங்கள்’ என்ற கதையையும் இந்த வகையில் சேர்க்கலாம். வெறும் பாவனைகளாலும், ஜோடனைப் பேச்சுக்களாலும் என்னவெல்லாம் நடக்கலாம் என்பதன் சாத்தியங்கள், அப்படிச் செய்யாமல் பத்தோடு பதினொன்றாக இருப்பதின் பகற்கனவுகள் விவரிக்கப்படுகின்றன. இதில் முக்கிய பாத்திரத்தின் பெயர் சந்திராஜித். (எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு பெற்றோர் வைத்த பெயர் சுரேஷ் சந்திரகுமார். அலுவலகப பெயர் சுரேஷ்குமார்). ஒரு மசாலா படம் பார்த்துவிட்டு சிகரெட் குடித்துக் கொண்டிருப்பவனுக்கு காவியுடை நினைவுக்கு வருகிறது. காவியுடை அணிந்தபடி பங்களாக்கள் நிறைந்த தெருவில் நடக்கிறான். ஒரு வீட்டுக்குள் நுழைந்து, அந்த வீட்டில் ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறது, அதுதான் தன்னை நோக்கி இழுத்து வந்தது என்று சொல்ல, அங்கிருக்கும் பெரியவர் ஆறு வயதில் இறந்த தன் பேத்தியை தெய்வமாக வழிபடுவதாகச் சொல்கிறார். அதைப் பார்க்க சந்திராஜித் சுவாமிகள் கேட்டு உள்ளே சென்று பூஜையறையில் தியானிக்கிறார். அந்தப் பேத்தி பார்வதியின் அம்சம் கொண்டவள் என்று சொல்லி பூஜை செய்கிறான். குடும்பத்தினர் பரவசத்தில் இருக்கின்றனர். அங்கேயே சாப்பிட்டுவிட்டு, அந்தப் பெரியவரின் காரில் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வழியில் சுவரொட்டிகளைப் பார்த்தபடி வருகிறான். ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட், கூலிங் கிளாஸ், கையில் சிகரெட்டுடன் ஒரு பங்களாவுக்குள் நுழைகிறான். தன்னை கன்னட நடிகர் என்றும் தனக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதும் இரசிகையைத் தேடி வந்திருப்பதாகவும் சொல்கிறான். அங்கிருக்கும் பெண்ணும் அவள் கணவனும் அவனுடன் ஆவலுடன் உரையாடுகிறார்கள். தனது சினிமா வாழ்க்கை குறித்துப் பேசுகிறான். அவர்களுக்கு பெரிய நடிகருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதில் ரொம்பவே சந்தோஷம். குளிர்பானம், இனிப்பு சாப்பிட்டுவிட்டு வெளியேறுகிறான். வழியில் சிலர் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதுடன் கதை முடிகிறது.

தமிழ் சேனல்களை இரண்டிரண்டு நிமிடங்களாகப் பார்ப்பது போன்ற தோற்றம் தரும் சிறுகதை ‘அறிக்கை’. துண்டுச்சிதறல்களாக விழும் காட்சித் துணுக்குகளை கொலாஜ் (Collage) தொகுப்பைப் போல் கட்டி அதன் அபத்தத்தைச் சுட்டி நிற்கிறது இந்தக் கதை. ஓர் அஜீரணம் பிடித்த ஊர்வன வகை ஜந்துவைப் போல வருடங்கள் நெளிகின்றன. சினிமாவைத் தின்று சினிமாவை வெளியேற்றுகிறது அது. யாருக்கென்றே தெரியாமல் வாசிக்கப்படாமல் பழைய புத்தகக்கடைக்கு எடைக்கு எடுத்துச் செல்லப்படும் கவிதைத் தொகுப்புகளைப் போல பொருளாதார அறிக்கையை குப்பைக்கூடையில் அள்ளித் திணிக்கிறான் குப்பை பொறுக்குபவன்.

இவரது சிறுகதைகளின் களங்கள் பல்வேறு விதமானவை. திருடர்களும் அவர்களின் வாழ்வியலும் அடிக்கடி வருகின்றன. அறம் என்பதோ, நீதி என்பதோ எங்கும் திணிக்கப்படுவதில்லை. திருடர்களின் குழந்தைப் பருவத்தை இலேசாய் கோடிகாட்டிச் செல்கிறார். ஒவ்வொரு இடத்திலும் அதிலுள்ள பிசகு மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. ‘பறக்கும் திருடனுக்குள்’ என்ற சிறுகதையில் வரும் மஞ்சக்காளைக்கு தாய் யாரென்று தெரியாது. சொந்தமில்லாத ஒரு குஷ்டரோகியான தாத்தாவின் பராமரிப்பில் வளர்கிறான். அவர் ஒரு சிறுமியின் போட்டோவைப் பார்த்து அவ்வப்போது கண்ணீர் விடுகிறார். அவரது காலத்துக்குப் பிறகு அந்த போட்டோவை மஞ்சக்காளை வைத்துக்கொள்கிறான். திருட ஆரம்பிக்கிறான். அந்த போட்டோவை மண்ணுக்குள் புதைத்து வைக்கிறான். போலீஸில் பிடிபட்டு அடிபடும்போது, அம்மா என்று அலறும்போது, அந்தப் புகைப்படச் சிறுமியின் பிம்பம் மனதில் எழுகிறது. யார் கடவுள்? யார் அம்மா? இங்கே மனதுக்கு மனமே சமாதானமளிப்பதாய் இருக்கிறது.

‘அவரவர் வழி’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘பங்குப் பணம்’ என்ற சிறுகதையும் திருமலை நம்பி என்ற திருடனைப் பற்றியதுதான். இதிலும் சிறு வயது வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. தாயும் தகப்பனும் திருட்டுத் தொழில் செய்து சிறைக்குப் போனதால், பள்ளிக்கூடத்தில் இவனையும் எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். ஒருமுறை ஒரு பிள்ளையின் கலர் பென்சில் டப்பா காணாமல் போய்விட, செய்யாத குற்றத்துக்கு பிரம்படி படுகிறான்.

இந்தத் தொகுப்பின் குறிப்பிடத்தக்க இன்னொரு சிறுகதை ‘அவரவர் வழி’. வேறொருவரை மணம் முடித்துக் கொண்ட இரண்டு காதலர்கள், இருபத்தைந்தாண்டுகளுக்குப் பின் ஓர் இரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்குமே தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளைகள் உண்டு. கடந்த காலமும் எதிர்காலமும் எல்லை தெரியாத துக்கக் கடலாய் கிடக்கிறது. நிறுத்தம் வந்தவுடன் இறங்குகிறார்கள். அவர் அவளது பின்புறத்தில் தட்டுகிறார். அவரை முன்னே செல்லவிட்டு அவளும் தட்டுகிறாள். இருவரும் சென்றுவிடுகிறார்கள்.

இந்தத் தொகுப்பில் பிற எந்தக் கதைகளும் மனதில் ஒட்டவில்லை. இதில் ‘புதிர் வழிப் பயணம்’ என்ற கதை ஒரு பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டது. சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் ஒருவனின் மீது, வானத்தில் பாம்பைத் தூக்கிச் சென்ற பருந்து அதைத் தவறவிட்டதால், அந்த சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவனின் மேல் விழுந்து தீண்டி அவன் இறந்துவிடுகிறான். இந்தத் தற்செயலின் ஒழுங்கின்மையில் உள்ள கச்சிதமான ஒழுங்கு எழுத்தாளரைத் தொந்தரவு செய்வதை உணர முடிகிறது. 2014-ல் தமிழ் இந்துவில் வந்த அவரது பேட்டியிலும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இவரது நாலைந்து கதைகளில் இந்தத் தற்செயலின் அபூர்வத்தைச் சொல்லியிருக்கிறார். இந்தத் தொகுப்பில் இதற்கு உதாரணமாய் இன்னொரு கதை இருக்கிறது, ‘ஒரு காதல் கதை’.

2012ல் வெளியான ‘நானும் ஒருவன்’ சிறுகதைத் தொகுப்பு முந்தைய தொகுப்புகளின் அறிக்கைத்தன்மை (passive)-யிலிருந்து விலகி நேரடியாய் கதை சொல்கின்றன. ‘நானும் ஒருவன்’ என்ற தலைப்பிலான சிறுகதையில் சண்டையில் ஆர்வமுள்ள, சண்டை உருவாகும் கணத்தை உள்ளுணர்வால் அறிந்து சண்டை உக்கிரமாகும்போது பரவசமடையும் ஒரு போக்கிரியைப் பற்றிய கதை. சண்டைகளின் மூலம் பேர் வாங்கி, ஒரு பெரும்புள்ளியிடம் வேலைக்குச் சேர்ந்து முன்னேறி, வாழ்க்கையில் ஒரு நிலையை அடைபவனைப் பற்றியது. கத்தியெடுத்தவனுக்குக் கத்தியால் சாவு என்ற பழமொழியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. நாம் அன்றாடம் சந்திப்பவர்களிலும், அரசியல்வாதிகளிலும் இத்தகையவர்களைத்தானே அதிகமும் பார்க்கிறோம்? வாழ்க்கை இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. இதில் அறம்சார் விழுமியங்களின் நிலை இன்று கேள்விக்குறியதாகிறது. இதே போன்ற வாழ்க்கை அபத்தத்தையும், அறம் குறித்த கேள்வியையும் எழுப்பும் இன்னொரு கதை ‘உறையிட்ட கத்தி’. அம்மாயில்லாத குடும்பம். மகனுக்குத் திருமணமாகி விட்டது. மகள் ஓர் அடாவடியான பேர்வழியைக் காதலிக்கிறாள். அப்பா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மகள் பிடிவாதம் பிடிக்க, மருமகளும் காதலுக்கு ஆதரவு தெரிவிக்க, அம்மா இல்லாத பெண் பிள்ளையின்மீது ஏற்பட்ட பரிவில் அவரும் சரியென்கிறார். திருமணத்திற்குப் பிறகு மகளுக்கு நிறையப் பிரச்சினைகள் வருகின்றன. மகளை மாப்பிள்ளை வீட்டில் அடித்து அவளை ஆசுபத்திரியில் சேர்க்கிறார்கள். என்னவென்று கேட்கப் போன மகனுடன் தகராறு ஏற்பட்டு அவனைக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுகிறார்கள். மகளும் கொஞ்ச நாளில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். மருமகள் வயிற்றில் குழந்தையிருக்கிறது. மாப்பிள்ளை வீட்டார் சிறையில் இருக்கிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே வெளியே வந்துவிடுகிறார்கள். அப்பனுக்கு மாப்பிள்ளை வீட்டாரைப் பழிதீர்க்க வேண்டுமென்று இருக்கிறது. மருமகள் தடுக்கிறாள். மாப்பிள்ளை வீட்டாரின் அடாவடிக்கு அவர்களுக்கு நல்ல சாவு வராது, சீரழிவார்கள் என்று நினைக்கிறார். ஆனால் மருமகள் வயிற்றில் கருவோடு ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறாள். தகப்பன் கையில் பாதுகாப்புக்கு எப்போதும் ஒரு கத்தியை வைத்திருக்கிறார். குளிக்கும்போதுகூட கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது அது. இந்தக் கதையில் அந்தக் கத்தி யாருக்கு எதிராக, எதிலிருந்து காத்துக்கொள்ள வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

இந்த வாழ்க்கை அபத்தமும், அறமின்மையும் ஒருவகையில் முன்பு சொன்ன அந்த சைக்கிள் ஓட்டுபவனின் மீது பாம்பு தீண்டிய சம்பவத்தோடு நுட்பமாய் தொடர்புறுகிறது. இதிலுள்ள ‘மூன்று பெண்கள்’ என்ற சிறுகதையும் இதற்கு உதாரணமாகலாம். இதில் கோடியில் ஒன்றாய் நிகழும் அதிசயம், மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டமாக வெளிப்படுகிறது. ஆறு தலைமுறையாக வாரிசு இல்லாமல் போகிறது ஒரு குடும்பத்தில். இந்தப் பிரச்சினையால் அந்தப் பெண்ணை யாரும் மணமுடிக்க முன்வரவில்லை. திருமண வயதைக் கடந்து முதிர்ந்த பெண்ணை 40 வயது இளைஞர் திருமணம் செய்துகொள்கிறார். அவர்களும் தத்தெடுக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையற்ற கணவன், பூமி அந்தரத்தில் சுற்றிக்கொண்டிருப்பதே ஒரு தற்செயல் என்பது போல இதுவும் ஒரு தற்செயல் என்கிறான்.

ஒரு நாத்திகரின் பார்வையோடு ஆண்டாளின் வாழ்க்கையை வைத்து எழுதப்பட்ட சிறுகதை ‘ஒரு திருமணம்’. முன்பு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளநிலை பாடத்திட்டத்தில் எழுத்தாளர் டி. செல்வராஜ் எழுதிய ‘நோன்பு’ என்ற சிறுகதை சேர்க்கப்பட்டிருந்தது. அந்தக் கதையில் ஆண்டாளை தாசிமகளாக அதில் சித்தரித்து பிரச்சினையைக் கிளப்பியது. சுரேஷ்குமார இந்திரஜித் நைசாக தப்பித்துக் கொண்டார். ஆண்டாளின் தாய் பேசிக்கொள்வதுபோல இரண்டு வரிகள் வருகின்றன. ஆனால் அதை வைத்து தாசியினம் என்று சொல்லலாம் அல்லது மறுக்கலாம். (‘என் வாழ்வு அவளைப் பீடிக்கக் கூடாது. என்னைப்போல் அலைக்கழியக் கூடாது என்றுதானே நான் அவ்வாறு செய்தேன்’). மற்றபடி ஆசிரியர் ஆண்டாளின் பாடல்களில் மனம் உருகியிருப்பதை உணர முடிகிறது. கதை முடிவில், ஸ்ரீரங்கத்துக்கு அரங்கரை மணம் செய்துகொள்ளக் கிளம்பிச் செல்லும் 15-16 வயது நிரம்பிய ஆண்டாள், எங்கே அரங்கர் தனக்குக் காட்சி தராவிட்டால் அவமானமாகப் போய்விடுமே, அது அரங்கருக்கு இழுக்கே என்று எண்ணி, விசமருந்தி விடுகிறாள். கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து உடலெல்லாம் நீலம் பாரிக்க இறந்து கிடக்கிறாள். நீலவண்ணன் அவளை ஆட்கொண்டுவிட்டதாக ஊரார் போற்றுகிறார்கள் என்று முடிகிறது கதை.

இந்தத் தொகுப்பிலுள்ள ‘மினுங்கும் கண்கள்’ நல்ல சிறுகதை. இரக்கம் என்ற பெயரிலான பாவனையை, சுய ஏமாற்றை மின்னல் வெட்டைப் போலப் பிளந்து காட்டுகிறது. அதே போல ‘அந்த மனிதர்கள்’ என்ற சிறுகதையும் குறிப்பிடத்தக்கது. சந்திரன் என்னும் அடியாளைப் பற்றிய கதை இது. இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் சண்டையில் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த இருவரை வெட்டுவதற்காக வேனில் கிளம்புகிறார்கள். போவதற்கு முன் வரும் வழியில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பின் கோஷ்டியினருடன் அரிவாளுடன் வெட்டுவதற்குத் தயாராகிறான் சந்திரன். மனிதாபிமானத்துக்கும், கூலிக்குக் கொலை செய்வதற்கும் இடையில் உள்ள கோடு எங்கே சந்திரன் வரைந்து கொள்கிறான்?

2013-ல் வந்த ‘நடன மங்கை’ தொகுப்பில் ‘வீடு திரும்புதல்’ என்ற சிறுகதை இவரது சிறந்த படைப்புகளுள் ஒன்று. திருமணமாகி எட்டு மாதத்தில் இறந்துபோகும் கணவனின் வீட்டைவிட்டு தாய் வீட்டுக்குக் கிளம்பும் பெண்ணைப் பற்றியது. கடந்தகாலத்தைவிட மிகக் கனமாக எதிர்காலம் வந்து உட்கார்ந்துகொள்வதை சித்திரமாய்க் காட்டுகிறது. இது தவிர எந்தக் கதையும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. இதில் ‘புன்னகை’ என்ற சிறுகதை திராவிடர் கழக இதழில் வேண்டுமானால் வெளியிடலாம். அப்பட்டமான பிரச்சாரக் கதை. ‘கால்பந்தும் அவளும்’ மற்றும் ‘எழுத்தாளன், நடிகை, காரைக்காலம்மையார்’ இரண்டும் முன்பு சொன்ன அந்த விதியின் ஒழுங்கின்மையின் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட கதைகள்.

சுரேஷ்குமார இந்திரஜித் யதார்த்த உலகில், யதார்த்த சமூகத்தில் உறவுகளுக்குள் இருக்கும் சிடுக்குகளை, மாயம் காட்டும் அகவுலக யதார்த்தங்களை, அதன் பிரதிபலிப்புகளை புனைவு வெளியில் நிகழ்த்துகிறார். ‘மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பில் மிகச் சிறப்பாக இத்தன்மை கொண்ட கதைகளைக் காணலாம். Passive narration மூலமும், குழப்பமூட்டும் ஊர்ப்பெயர்கள் மற்றும் கதை மாந்தர்களின் பெயர்கள் மூலமும் வாசிப்பவருக்கும் கதைக்கும் நடுவே இடைவெளியை உருவாக்கி, வாசகரின் உணர்வுப்பூர்வமான அணுகலைத் தடுக்கிறார். ‘நானும் ஒருவன்’ சிறுகதைத் தொகுதியில் சில கதைகள் மட்டும் இதை மீறியிருக்கின்றன. கதைகளுக்கான உத்திகளை அந்தந்தக் கதைகளே தீர்மானிக்கின்றன என்று எழுத்தாளர் சொன்னாலும், தனக்கென எழுத்து முறையில் தனி பாணியை கைக்கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. உளவியல் ரீதியாக அலசுதல், புரிந்துகொள்ள முயலுதல், அற விழுமியங்களற்று வாழ்வின் ஒழுங்கின்மையின் ஒழுங்கை, நிதானத்துடன் ஒருவித விலகலோடு அவதானித்து முன்வைப்பவையாக இவரது படைப்புகள் உள்ளன.

 

சந்திப்பும் சந்திப்பு நிமித்தமும் – நரோபா

நரோபா

மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களின் விஷ்ணுபுர விருது விழாவின் போது தான் முதன்முறையாக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தைச் சந்தித்தேன். அவருடன் ஒருங்கமைக்கப்பட்ட உரையாடல் அமர்வில் அவரது கதைகளின் பரிணாமத்தை பற்றி பேசினார். அதற்கு முன் ஒன்றிரண்டு கதைகள் உதிரியாக வாசித்திருக்கிறேன். அச்சந்திப்பின் விளைவாக அவருடைய ‘நடன மங்கை’ தொகுப்பை வாசித்தேன். அதைப்பற்றி ஒரு சிறிய அறிமுகக் குறிப்பையும் எழுதி இருந்தேன். தமிழின் தனித்துவமான குரல் அவருடையது. அதன் பொருட்டே வெகு மக்கள் பரப்பை எளிதில் அடைய முடியாததும் கூட.

பதாகை காலாண்டு எழுத்தாளர் சிறப்பிதழ் எப்போதும் பெரும் உழைப்பைக் கோருவது அதற்கிணையான நிறைவையும் அளிப்பது. எழுத்தாளர் ந. முத்துசாமிக்கு அடுத்த சிறப்பிதழ் என அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதை முன்னெடுக்க இயலவில்லை. இந்நிலையில் மீண்டும் எழுத்தாளர் சிறப்பிதழ்கள் புதுப்பிப்பது பற்றி பேசினோம். சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், கீரனூர் ஜாகிர்ராஜா, திலீப் குமார், யூமா வாசுகி, தமிழ் மகன், கண்மணி குணசேகரன், விட்டல் ராவ், சுப்ரபாரதி மணியன் என்றொரு உத்தேச பட்டியல் மனதில் ஓடியது. நண்பர் எழுத்து அலெக்சின் மரணச் சடங்கில் கலந்துகொள்ள மதுரைக்குச் சென்ற போது ஜெயமோகன் அறையில் சுரேஷ்குமார இந்திரஜித்தை சந்தித்ததும் அவரே சரியான தொடக்கம் எனத் தோன்றி அவரிடம் அனுமதியும் பெற்று வந்தேன். அவருடைய சிபாரிசின் பேரில் முருகேச பாண்டியன், ஜயபாஸ்கரன், சமயவேல், தேவேந்திர பூபதி, சுகுமாரன் என பல மூத்த எழுத்தாளர்களை தொடர்புகொண்டு கட்டுரைகளைக் கேட்டேன். ராமேஸ்வரத்தை பின்புலமாகக் கொண்ட கதையில் நானறிந்த ஒருவரை அடையாளம் காண முடிந்தது, ஆர்வம் தாங்காமல் அவரிடமே கேட்டேன். வியப்படைந்தார். இது வரையிலான ஐந்து சிறுகதைத் தொகுப்புக்களையும், முந்தைய நேர்காணல்களின் பிரதிகளையும் அவரே கூரியரில் அனுப்பி வைத்தார். வாங்கிக் கொள்கிறேன் அதுவே முறை என்றேன். இலவசமாகப் பெறுவதில் ஏதோ கூச்சம், சங்கடம். தயங்க வேண்டியதில்லை என அவரே அனுப்பினார். தீராநதி, பேசும் புதிய சக்தி, காலச்சுவடு, பவுத்த அய்யனார், ஷங்கர் ராம சுப்பிரமணியன் என அவர்கள் எடுத்த நேர்காணல்களை வாசித்து முடித்த போது உண்மையில் சோர்வே உண்டானது. இக்கேள்விகளை மீறி என்ன கேட்டுவிட முடியும் என்று குழப்பம் நேரிட்டது. மேலும் நாஞ்சில் நாடன் மற்றும் சு. வேணுகோபால் ஆகியோரின் நேர்காணல் கோவை நண்பர்கள் உதவியால், குறிப்பாக கண்ணன் தண்டபாணியின் உழைப்பில் உருவானது. கடலூர் சீனுவும் கடைசி நேரத்தில் வர முடியவில்லை. சிறப்பிதழின் மிக முக்கியமான பணி என்பது நேர்காணல்தான். அதுவே இதழின் தரத்தை நிலைநிறுத்துகிறது. அவ்வகையில் இதுவரையிலான மூன்று நேர்காணல்களும் எழுத்தாளர்களின் வாழ்வை, எழுத்தை, துயரங்களை, அவர்களை எழுதத் தூண்டும் ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து இருக்கின்றன. இந்தக் கவலைகளை மனதில் சுமந்து கொண்டு சந்திப்புக்காக நாள் குறித்தோம்.

அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் கூட டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஆலோசகராக திகழ்கிறார் ஆகவே “ரெண்டு நாள் முன்னாடியே சொல்லுங்க” என்றார். நவம்பர் 12, ஞாயிற்றுக் கிழமை அவருடைய வீட்டிலேயே சந்திக்கலாம் என்று முடிவானது. காலையில் காரைக்குடியில் இருந்து கிளம்பி பத்தேகாலுக்கு மாட்டுத்தாவணியில் இறங்கி அவரை அழைத்தேன். வியூகம் அமைத்த ஆட்டோக்காரர்களிடம் இருந்து பிளந்து கொண்டு வெளியே வந்தேன். மதுரை வெயில் உறைக்கவில்லை. இடம் சொல்வதற்காக ஆட்டோக்காரரிடம் கொடுங்கள் என்றார். யாதவா பெண்கள் கல்லூரிக்கு அருகே,பொறியாளர் நகர் என வழி சொன்னார். ஆட்டோ புறப்பட்டதும் தான் “எவ்ளோ வேணும்” என்று கேட்டேன். “ஓங்கட்ட வாங்க வேணாம்னு சொல்லிருகாறு” என்றார் ஆட்டோகாரர்.

மதுரை புறநகர் பகுதிகளில் ஆட்டோ மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியது. வாசல் கம்பி கேட்டின் ஒரு எல்லையில் என்.ஆர்.சுரேஷ் குமார், தாசில்தார் எனும் சிறிய பெயர்ப்பலகை தொங்கியது, மறு எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் என்று மற்றொரு பெயர்ப்பலகை தொங்கியது. தனது கல்வி, பூர்வீகம், பதவி எல்லாவற்றையும் துறந்து நவீன எழுத்தாளராக இரட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என எண்ணிக்கொண்டேன். நேர்த்தியான சட்டை பேண்ட்டுடன் வாசலில் வந்து வரவேற்றார். அவரை எப்போதும் இப்படி நேர்த்தியான தோரணையிலேயே கண்டிருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. அப்படி நானறிந்த மற்றொரு எழுத்தாளர் நாஞ்சில் நாடன். எப்போதும் காலுறை, சப்பாத்துக்கள் அணிந்து, முழுக்கை சட்டை போட்டுத் தான் வருவார். “வீட்ல மக வீட்டுக்கு போயிருக்காங்க. இல்லைனா ஒரு நல்ல சைவ சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம்.” என்றார். ஒற்றை ஆண் தனித்திருக்கும் இல்லங்களைப் போல் அல்லாமல் வீடு நேர்த்தியாக இருந்தது. சொற்சிக்கனம் அல்லது கட்டுப்பாட்டின் மீது மிகுந்த கவனம் கொள்வது என்பதும் கூட அவருடைய ஆளுமையின் நீட்சியாகவே தென்பட்டது. கூடத்தில் தட்டையான எல்.ஈ.டி தொலைக்காட்சியில் கருப்புவெள்ளைப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. காரைக்குடி செட்டிநாட்டு பலகாரங்களையும் எனது இரு மொழியாக்கப் புத்தகங்களையும் அவருக்கு அளித்தேன். “பேரு சுரேஷ்குமார் இந்திரஜித் இல்ல, சுரேஷ்குமார இந்திரஜித், புத்தகத்த படிச்சவங்க கூட இந்த தப்ப பண்ணிருவாங்க” என்று எனது ஃபேஸ்புக் அறிவிப்பைச் சுட்டிக்காட்டி கூறினார். அவர் சொன்ன பிறகுதான் நான் அதைக் கவனித்தேன். ஒரு பெரிய அலுவலக மேஜை, பக்கவாட்டில் இரும்பு அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தன. அவருக்குப் பல வருடங்களாக சர்க்கரை நோய் உண்டு. ஆகவே இன்சுலின் போட்டுக் கொள்கிறார். “என்ன வேணாலும், எப்ப வேணாலும் ஆகலாம் இல்லியா, கண்ணன் கிட்ட சொன்னேன், ஒரு ஆள அனுப்பினார், வண்டில வெச்சு பைண்டு செஞ்ச சிறுபத்திரிக்கைகளை எடுத்துகிட்டு போனார். காலச்சுவடு ஆபீஸ் மாடில ஒரு லைப்ரரி இருக்கு.” என்றார். புத்தக விரும்பிகளின், இலக்கியவாதிகளின் மிக முக்கியமான சிக்கல் இது. தனக்குப் பின் வாசிக்க எவருமில்லை என்றால் இப்புத்தகங்களை என்ன செய்வது எனும் கேள்வி அவர்களைத் தொந்திரவு செய்கிறது. கடிதங்களை கவிஞர் சமயவேல் கணினியில் ஏற்றிப் பின்னர் கே.என்.செந்திலுக்கு அனுப்பியதாகச் சொன்னார். மீட்சி இதழ்கள் மட்டும் மிக முக்கியமானவை எனக் கருதியதால் அதை மட்டும் வைத்திருந்தேன், தற்பொழுது அதையும் தேவேந்திர பூபதியிடம் அளித்துவிட்டேன் என்றார். சுருக்கமாக என்னைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டேன்.  அவருடைய குடும்பத்தைப் பற்றி சொன்னார். கூடத்தில் அவருடைய இரு மகள்களுடன் அவரும் அவரது மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன. உடன் பிறந்தவர்களைப் பற்றியும் தாய் தந்தை  பற்றியும் சுருக்கமாகக் கூறினார்.

“பிரசுரமான நேர்காணல்கள அனுப்பிச்ச உடனேதான் யோசிச்சேன், அனுப்பியிருக்க வேணாம்னு, ஆனா ஒரே கேள்விகளுக்கு வேற பதில்கள் கூட வரலாம்” என்றார். பதினோரு மணியிருக்கும். நேர்காணல் துவங்கலாம் என்றேன். உள்ளே ஒரு ஏ.சி அறையில் துல்லிய நிசப்தத்தில் உரையாடத் துவங்கினோம். ஒரு தட்டில் தட்டுசீடை, முறுக்கு சகிதம் இரண்டு பீர் புட்டி மற்றும் கண்ணாடி லோட்டாவுடன் அமர்ந்தார். என்னிடம் முன்னரே “பீர் சாப்பிடலாமா?” என கேட்டிருந்தார். வழக்கமில்லை என்றேன். “கொஞ்சம் சாப்டாதான் பேச வசதியா இருக்கும்” என்றார். உரையாடலுக்குத் தேவையான ஒரு மனநிலையை உருவாக்கிக் கொண்டார். செல்போனில் குரல் பதிவு ஆப்பை தரவிறக்கி வைத்திருந்தேன். சிறு சிறு பகுதிகளாக சேமித்து அவ்வப்போது பதாகை குழுவில் ஏற்றினேன்.

பேச்சு நீண்டு சுவாரசியமாகச் சென்று கொண்டிருந்தது. இடையிடையே சில குடும்பச் சிக்கலுக்கு சட்ட ஆலோசனைகள் கோரி அவருக்கு அழைப்புகள் வந்தன. தற்செயலாக அறையிலிருந்த கடிகாரத்தை நோக்கினால் மணி இரண்டரை ஆகியிருந்தது. அதுவரை மறைந்திருந்த பசி சட்டென ஆட்கொண்டது. பேச்சு வாக்கில் ஒரு பாக்கெட் தட்டு சீதையை உண்டிருந்தேன். அவரும் இதை கவனித்தார். “சாப்புட போவோமா?” என்று அவருக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்தார். கொஞ்சம் உடல் வெடவெடக்கத் துவங்கியது. “ஒங்களுக்கு சுகர் இல்லையே ..” என்றபடி இரண்டு க்ளுகோவிட்டா மிட்டாய்களை அளித்தார். வாயில் அதக்கிக்கொண்டதும்தான் சற்று சோர்வு நீங்கியது. “வீட்ல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது, ஏதாவது ஆச்சுனா, என்ன பண்ணனும்னு சொல்லிருக்கேன், ஒரு பையில என்னோட புத்தகங்கள், நேர்காணல் ஜெராக்ஸ், இன்னும் புத்தகமா ஆகாத எழுத்துக்கள் என்று எல்லாத்தையும் போட்டு வெச்சுருக்கேன், காலச்சுவடு கண்ணன் கிட்ட அதைக் கொடுத்துருன்னு சொல்லிருக்கேன்” என்றார். ஆட்டோவிலும் பேசிக்கொண்டே போனோம். சற்றுத் தொலைவில் புது நத்தம் சாலையில் உள்ள ரமணா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பிடித்த பிடிக்காத தமிழ் எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டோம். “இதையெல்லாம் நேர்காணல்ல கொண்டு வந்துராதீங்க” எனச் சிரித்தார். சேமியா பாயாசம், வாழக்காய் பஜ்ஜி, மைசூர் பாகு, கூட்டு , கறி என வயிறு புடைக்க உண்டேன். அவருடைய மைசூர் பாகையும் எனக்கே வைக்கச் சொன்னார். மீண்டும் அதே ஆட்டோவில் திரும்பினோம். தெளிவத்தை ஜோசெப் விழாவிற்கு அவர் வந்ததன் நினைவுகளைப் பற்றிப் பேசினோம். “மண்டபம் பிடிச்சு நல்லா பெரிய லெவல்ல கல்யாணம் மாதிரில நடக்குது” என்றார். “ராயல்டி எல்லாம் வருதா?” என்று கேட்டேன். “புத்தகம் வர்றதே பெருசு” எனச் சிரித்தார். எப்போதும் ஒரு கதையை எழுதத் துவங்கினால் முடித்துவிட்டுத் தான் அடுத்த கதைக்குச் செல்வேன் என்றார். ஒரு தருணத்தில் கதை நகராமல் நின்ற போது சரோஜா தேவியின் கருப்பு வெள்ளை நடனம் அந்தத் தடையை உடைத்தது என்று சொல்லிச் சிரித்தார். நடனமங்கை கதையே கூட “ரங்கு ரங்கம்மா” பாடலின் ஒரு காட்சியின் தூண்டுதலில் உருவனாது தான் என்றார்

வீடு திரும்பியதும் மீண்டும் நேர்காணல் தொடர்ந்தது. நாலறை வரை பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ஆட்டோவை அழைத்தார். மீண்டும் அலுவலக மேஜைக்கு வந்தோம். அவருடைய முதல் தொகுப்பு அலையும் சிறகுகள், நேர்காணலில் அவர் குறிப்பிட்ட லாவண்யாவின் ‘the clowns’ , வண்ணநிலவனின் அக்காலகட்டத்து ‘பாம்பும் பிடாரனும்’ (விலை 2 ரூ), ஜெயகாந்தனின் புத்தகங்கள் என எல்லாவற்றையும் காண்பித்தார். அழகாக பைண்டு செய்யபட்டிருந்தது. திலீப்குமார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கும் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் அவருடையதும் இடம் பெற்றிருக்கிறது எனக் கூறித் தொகுப்பைக் காண்பித்தார். மறைந்து திரியும் கிழவன் தொகுப்பு சுந்தர ராமசாமிக்குப் பிடித்திருந்தது, அவர் எழுதிய கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளேன் என்றார். அவரிடம் இருக்கும் இரண்டு கைபேசிகளைக் காண்பித்தார். “நீங்க எதாவது சொல்லனும்னா, போன் அடிச்சுருங்க இல்லன்ன மெசேஜ் போட்ருங்க, வாட்சப் அப்பப்பத்தான் பாப்பேன்” என்றார். நீண்டநேரம் நாற்காலியில் இப்போதெல்லாம் அமர்வதில்லை. முதுகு வலி வந்து விடுகிறது. இன்று ஏதோ ஆர்வத்தில் அமர்ந்து விட்டேன் என்றார். “நீங்க அந்த கட்டில்ல சாஞ்சு வசதியா உக்காந்து இருக்கலாமே சார்” என்றேன். “உக்காந்திருக்கலாம்ல” என்றார். “வீடு சொந்தவீடா?” என கேட்டேன். “அதெல்லாம் இல்ல, வாடக தான்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. தாசில்தார்,, சிரஸ்தாராக இருந்து ஒய்வு பெற்றவர். அதுவும் மதுரைப் பகுதியில். “தீது செய்யாம இருந்தா அதெல்லாம் அடைய முடியாது” என்றார். ஆறு வருடங்களுக்கு முன் நில விவகாரத்திற்கு ஆதரவு வேண்டும் என கண் முன் இருபது லட்சங்களை கொண்டு வந்து காட்டினார்கள். கோடி வரை தருவதாக சொன்னார்கள். ஆனால அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் வழக்குப் போட்டுத் திருப்பிவிட்டேன் என்றார். “இதுவரை விருதுகள் எதாவது வாங்கியதுண்டா?” என கேட்டேன்.”இல்லை” என்றார். “ஆனால் அதற்காக வருத்தமெல்லாம் இல்லை, தமிழில் கிளாசிக் கதைகளே எப்போதும் விரும்பி வாசிக்கபடுகின்றன, நானே கூட கிளாசிக் கதைகளின் ரசிகன் தான்” என்றார். ஒரு மாதிரி மனம் அமைதி இழந்தது. ஆட்டோ வந்தது. வாசல் வரை வந்து வழியனுப்பினார். “வேற நேர்காணல் எல்லாம் கேள்வி கேப்பாங்க , பதில் சொல்லிட்டு அமைதி ஆய்டுவேன், ஆனா இது சம்பாஷன மாறி ஆய்டுச்சு, சரியா வந்திருக்கான்னு தெரியல, இப்பல்லாம் கொஞ்சம் நியாபகம் குறையுற மாதிரி இருக்கு, பேசினதையே திரும்ப திரும்ப சொன்ன மாதிரி இருக்கு” என்றார். எல்லாம் சரி செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் கிளம்பினேன். ஆட்டோக்காரர் பணம் வாங்கவில்லை. காரைக்குடி பேருந்தில் ஏறியதும் அன்றைய நாளின் நினைவுகளை மனம் ஒட்டிக்கொண்டிருந்தது. நிறைவும், அமைதியின்மையும் ஒருங்கே மனதைக் குடைந்தது. எழுத்துக், கலை என்பதொரு மாபெரும் சூதாட்டம். எழுத்தாளன் எனும் சூதாடி எப்போதும் தோற்கிறான். ஒருக்கால் அவனுடைய இன்மையில் அவன் வென்றவனாகக் கூடும். ஆனால் அவனால் ஒருநாளும் சூதாடாமல் இருக்க முடிவதில்லை.

 

Let Down Hair – A translation by Nakul Vāc

It frightened him that so many women let their hair down. Women sat, stood and walked with their hair let down. Quite a few had their clothes drenched. The waterfall loomed large and appeared immense. Swarming beneath it were some twenty-odd males, clinging to the rock as if they made up some kind of beehive. Underneath the narrowest stream of water(so narrow that it could accommodate only one person at a time) women stood in a queue to drench their hair and bodies. Water which fell on each and every woman who stood there coursed its way down their faces and bodies. Faces shimmered, cleansed by the falling water. A woman, her long hair flowing down to her buttocks, walked past his line of vision. Since arriving at this place he had been been telling his friend, both in ways that he could and could not make sense of, about all the trouble caused him by let down hair.

With their hair let down four women alongside their husbands went past him. A leper across the road made noise, clanking change in his tin can. A Monkey sat on a rock, licking something. He was telling his friend that let down hair chased him as if it were a symbol. “It all comes down to what you make of it”, his friend said. They walked towards a densely shadowed area beneath a tree and sat on a rock.

His friend asked him if he met her often now.  He replied that he hardly, if ever, got a chance to see her. “You don’t know about her married life, it is quite tough. She is stubborn like this rock and has complicated her marriage because of that. Her stubbornness should have pushed her husband towards certain limits but it didn’t. It brought out her anger in several ways and ended up toughening his stubbornness even more, I think” he said. They continued to sit without talking anymore.

Her fingers, legs, neck and her face in profile were all very beautiful. He noticed that she had gotten lean and got an opportunity to tell it to her as well. Subsequently she told him that for the first time she was getting to know what married life was about. On that night, she told him that it was the day she felt married for the first time. Her married life with her husband was what it was because of her stubbornness.

“Why do you think let down hair follows you?”, his friend asked. He didn’t reply. Even though his friend could, at times, make some sort of coherent sense of what was related, there was much he couldn’t understand and often he felt he were being dragged into a world of suppositions.

Wanting to see a waterfall situated at the top of the mountain, they got up and walked. They both lit their cigarettes. They had to head towards the road and take the path that forked into the mountain. As they progressed along the road they saw a young girl with disheveled clothes sitting beside a ruined temple chariot. In-lieu of flowers she had inserted bits of colored paper in her hair. He felt as if her image was trying to secure a place in his mind. As he repeatedly tried to shake it off, the image without any signs of faltering casually entered it.  He didn’t know if his friend had also noticed that girl. He felt that asking him now might make him notice and hence kept walking without saying anything. On both sides of that mountain path there were tall trees in strange shapes. As the terrain was uneven they had grown beautifully any which way, as they wished. He thought it would be nice if a girl who had hidden herself amongst the trees suddenly revealed herself.  He also had a doubt whether the lives of other men would also be like his. Looking back, he remembered how he got trapped in the net two other girls had cast for him. She too, out of her own volition had once remarked “You are now trapped by me.”  But their present platonic relationship has grown way too serious for them to take heed of such things. He now recounted how during his teen years he had never had a physical relationship with the girl he instinctively yearned for. Evenas he told himself that the relationship he had with that girl was pristinely pure he also simultaneously realized his own naive innocence. If only that girl’s face would appear amidst the trees, he would be really happy, he thought. No sooner he had this thought than the face of that girl he saw besides the temple chariot briefly appeared amidst the trees and vanished.

A family approached them and as they crossed each other he heard the words “TV Mahabharata”. “Is this when they screen Mahabharata on the TV?” he asked his friend. His friend took a look at his watch and said “Yes”. At that he suddenly thought of something. It felt new and was something he had not thought of before ever since coming there. It was surprising to him that he had not thought of it before.  He felt he could now sort of understand why let down hair bothered him. The memory of Draupadi’s let down hair was the reason for his newfound clarity. He realized that for an Australian or an American, let down hair would not have made such an impact. Perhaps let down hair troubles our unconscious mind only if it had Indian tradition for a background, he thought.

It felt now as if his mind had gotten light. He lit a cigarette joyfully and walked alongside his friend. Chatting freely on several topics they reached the waterfall. Water cascaded from the top of a large rock surrounded by tall trees, only to become a rivulet coursing its way through other rocks. Men and women of three or four families were bathing. He casually watched the let down hair of the women. Shortly after his friend had bathed and dressed they felt hungry and descended.

On their way down they went past the let down hair of two women. The mountain path ended and they reached the road. As they were walking along the road they could hear the music of Nadaswaram piping from the Wedding Hall opposite the temple chariot. He now turned his eyes towards the chariot.  The girl was no longer to be found at the earlier place beside it. As he peered carefully he spotted her sitting between the huge wheels, wearing a dried-out garland, one leg folded and the other upright in the traditional posture of a bride. The let down hair of the women encountered on the road frightened him now.

(A translation of the Tamil Short story, ‘Virittha Koonthal’ (விரித்த கூந்தல்), by Sureshkumara Indirajith)

மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என். செந்தில்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடன மங்கை’

 கே. என். செந்தில்

”அர்த்தங்கள் சார்ந்த புதிய கோணங்களையும் அவற்றுடன் இணைந்த வெளிப்பாட்டு முறையையுமே நான் எப்போதும் விரும்பிக் கொண்டிருக்கிறேன்”
-’மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பின் முன்னுரையில்.

Image result for k.n senthil

வர்ணணைகளையும் அலங்காரங்களையும் தவிர்த்துவிட்டு நேரடியான சித்தரிப்புகளின் வழி உருக்கொள்ளும் காட்சிகளிலிருந்து விரிபவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். அந்தக் காட்சிகளிலிருந்து திரண்டு வரும் ஏதேனுமொன்று (அது சேதனமாகவோ அசேதனமாகவோ இருக்கலாம்) படிமமாக ஆகி அந்த மொத்தக் கதையையும் குவியாடி போல பிரதிபலிக்கச் செய்கின்றது. அவரது புகழ்பெற்ற ‘விரிந்த கூந்தல்’ முதல் இத்தொகுதியிலுள்ள ‘நடன மங்கை’ வரை இதைக் காணலாம். பொறுக்கியெடுத்த அளவான சொற்களால் எதையும் கூடுதலாகச் சொல்லி விடக்கூடாது எனும் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட ஆக்கங்கள் இவருடையவை. இந்த பிரக்ஞையே, தான் அதிகம் எழுத முடியாததற்கு, பெரிய வடிவமாக யோசிக்க முடியாததற்கான காரணியென நேர்காணலொன்றில் சுரேஷ் சொல்கிறார். அவர் சொல்லும் அந்த பிரக்ஞையை ‘இறுகிய’ பிரக்ஞை என அர்த்தப்படுத்திக் கொண்டேன்.

மெளனியும் சா. கந்தசாமியும் இணையும் புள்ளி என இவ்வுலகை தோராயமாக வரையறுக்கத் தோன்றுகிறது. ஏன் ‘தோராயமாக’ என்றால் அதிலிருந்து விலகி கிளை பிரிந்து தன் பிரத்யேக கூறுமுறை நோக்கிச் சுரேஷ் சென்றுவிடுவதே காரணம். ஏனெனில் அகச்சலனங்களை, ஓரிடத்திலிருக்கும்போதே வேறிடத்துக்கு கற்பனையின் துணையால் சட்டென்று போய் அமர்ந்து கொள்வதை, அங்கு ஒரு முழு வாழ்க்கையையே சில நிமிடங்களில் வாழ்ந்து விட்டு திரும்பி வரும் வினோதங்களை, நோக்கிச் செல்பவராக இருக்கிறார் என்பதே. இவர் கூறுமுறையின் தொடர்ச்சியும் அதன் சில சாயைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளில் எழுத வந்த குலசேகரன், எஸ்.செந்தில்குமார் (எஸ்.ரா-வின் பாதிப்பும் இவருக்குண்டு) ஆகியோரிடம் காணக் கிடைக்கின்றன.

‘நானும் ஒருவன்’ என்னும் சுரேஷின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு வெளியான ஓராண்டுக்குள் வந்திருக்கும் ’நடனமங்கை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. தொடர்ந்து எழுதி வரும் காலகட்டத்தின் பகுதியிலிருந்து கிட்டியிருக்கும் தொகுப்பு எனக் கொள்ள முடியும். மனப்புதிர்களின் மேல் அதன் மர்மமான நகர்வுகளின் மேல் ஈடுபாடுடையவர் சுரேஷ். முந்தையக் கணத்தில் தோன்றிய எண்ணத்துக்கு நேரெதிராக அல்லது சம்பந்தமற்ற எண்ணத்திற்குள் செல்லும் மனதை காட்டும் தருணங்கள் கதைகளுக்குள் கலந்து வருகின்றன. (“ஏமாற்றப்பட்டு கையறு நிலையில் செய்வதறியாது அமரும்போது, மறுவினாடியே டெலிபோன் பில் கட்டவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது கோவில் பிரகாரம்’). இந்த புரிபடா நிலையை நிறமற்ற மொழிநடையில் அவரது முந்தைய தொகுதிகளிலிருந்து ஒரு வித தொடர்ச்சி போலவும் (கதை சொல்லும் முறையில்) ஒரு அர்த்தத்தில் தொடர்பற்றும் (கதைக்கருக்களின் தேர்வில்) எழுதப்பட்டுள்ள ஆக்கங்கள் இவை.

தொகுப்பின் தலைப்புக் கதையான ‘நடன மங்கை’ மற்றும் ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து…’ ஆகிய இரண்டையும் அருகருகே வைக்க முடியும். ஏனெனில் பிரதான பாத்திரத்தின் கற்பனை மேற்கொள்ளும் மனப்பயணமே- அதுவும் பெண்ணின் ‘வசீகரம்’ சார்ந்து- இவ்விரு கதைகளும் தொட்டுக் கொள்ளும் அண்மையில் இருப்பதை உணர்த்துகிறது. ஓரிடத்தில் ’இருந்து’ கொண்டே தான் ஆசைப்படுவது பலவும் அடுத்தடுத்து நடப்பதாக எண்ணி மகிழ்ந்து கொள்வது மனித இயல்பிற்குள் உள்ள அம்சமே. ஆனால் அதை கதையினுள் கொண்டு வந்தவர்/ வருபவர் சுரேஷ்குமார இந்திரஜித். சில வாக்கியங்களுக்குள் ஒருவனின் கதையை சொல்லி முடித்து வைப்பதையும் சுட்டத் தோன்றுகிறது. இக்கதைகளில் மனக்கோலங்களின் புள்ளிகளை காண்பதிலிருந்து நகர்ந்து அவற்றைக் கதைகளாகச் சொல்லியிருக்கிறார்.

இத்தொகுதி கதைகளுக்குள் காணக் கிடைக்கும் ஒற்றுமை, பெரும்பாலான மையப் பாத்திரங்கள் பெண்களே. அவர்களே கதையை நகர்த்திச் செல்வதற்கான ஆதார விசையாக இருக்கிறார்கள். ‘புன்னகை’, ‘கணவன் மனைவி’, ‘கால்பந்தும் அவளும்’, போன்றவை அத்தகையவையே. இவற்றுக்குள் தற்செயல்கள் பிரதான காரணியாக இருக்கின்றன. பெரியாரின் பேச்சை அகஸ்மாத்தமாக கேட்க நேரும் நீலமேகம் பத்தொன்பது வயதில் விதவையாகிவிட்ட தன் மகளுக்கு மறுமணம் செய்து வைக்கிறார். பிறகு அவளது வாழ்க்கையில் விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன. இக்கதை அவளது மரணத்திலிருந்து தொடங்கினாலும் நீலமேகம் அந்த உரையைக் கேட்பது தற்செயலே. போலவே ‘கால்பந்தும் அவளும்’. ‘கணவன் மனைவி’ சிறுகதையை வாசித்ததும், தட்டையாக, பல பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதி ஓய்ந்த சக்கையை மீண்டும் மென்று பார்க்கும் உணர்வையே அளித்தது. வெகு சுமாரான கதை. அசேதனப் பொருட்களான டிரான்சிஸ்டர் (’வீடு திரும்புதல்’), கால்பந்து (கால்பந்தும் அவளும்), விசிறியடிக்கப்பட்ட துணி (நடன மங்கை) போன்றவை ஒரு கட்டத்தில் நினைவின் குறியீடுகளாக ஆகிவிடுவதையும் குறிப்பிட வேண்டும்.

இரு பெண்களும் தங்களது வேறுபட்ட தனிமைகளுக்குள் இருந்து விடுபடுவதை (விடுதலை பெறுவதை?) காட்டும் கதைகள் ‘கோவில் பிரகாரம்’, ‘வீடு திரும்புதல்’. இவ்விரு கதைகளும் இயலாமையின் மேல் எழுதப்பட்டிருப்பினும்கூட மனிதனின் விசித்திரச் செயல்களைக் காட்டுகின்றன. ஆயினும் சில ஒளிப்புள்ளிகளை மட்டும் தந்துவிட்டு உடனே அணைந்து விடுகின்றன.

மிகுபுனைவு கதைகளிலும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் மொழியில் மாற்றமேதுமில்லை. அதே சட்டகத்துக்குள்ளேயே நடை போடுகிறது. இது பெரும் குறை. ஆனால் பெண்களின் மீதான ஈர்ப்பைச் சுட்டும் நடையில் ‘மெளனி’யின் நிழல் விழுந்து கிடக்கிறது. மனதில் உள் அசைவுகளை, விளங்காப் புதிரை அறியத்தரும் சில கதைகளே நல்ல வாசிப்பை அளிக்கின்றன. பிற கதைகளைப் பற்றி சொல்ல பெரிதாக ஏதுமில்லை.