Author: பதாகை

சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா

நரோபா

‘தற்செயல் என்பது ஒரு சொகுசு அல்ல, அது விதியின் மறுபக்கம், அதைத் தவிரவும் வேறேதோவும்கூட… மறு எல்லையில் தற்செயல் என்பது பூரண சுதந்திரம். தற்செயல் எந்த விதிகளுக்கும் உட்பட்டதில்லை, ஒருவேளை அப்படியே கட்டுப்பட்டாலும் அவை எவை என்று நாமறிய முடியாது. தற்செயல், இந்த உவமையை பயன்படுத்த நீங்கள் அனுமதித்தால், நமது கோளில் ஒவ்வொரு நொடியும் கடவுளின் இருப்பை பறை சாற்றுவதை போன்றது. நோக்கமற்ற கடவுள் நோக்கமற்ற சமிக்ஞைகளை நோக்கமற்ற ஜீவராசிகளை நோக்கிப் புரிகிறார்.’ – ராபர்டோ போலனோ, 2666

‘எந்தப் போக்கும், வாழ்வினுடைய காலத்தினுடைய சூதாட்டங்களினால் கணிப்பிற்குட்படுவதில்லை. நடந்த காரியத்தின் காரணங்களை ஆராய்ந்து அடுக்குவது சுலபம். வலுவான காரணங்கள் இருக்க, அவற்றிற்கான காரியங்கள் ஏன் நடக்கவில்லை என்பதை எவரும் அறிய முடியாது. நடந்ததை நடக்க விதிக்கப்பட்டதாக நினைத்து ஏற்றுக்கொள்ள, சூதாட்டம் வெற்றிகரமாக ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது’- மாபெரும் சூதாட்டம், சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் தனித்துவமான எழுத்தாளர். தமிழில் உருவாகியுள்ள எந்த படைப்பாளி வரிசையிலும் அவரை அத்தனை சுலபமாக பொருத்த முடியாது. கதைக் களம் மற்றும் கூறுமுறை காரணமாக சிறிய நவீன தமிழ் இலக்கிய பரப்பில்கூட மிகச் சிலர் மட்டுமே அவரை தொடர்ச்சியாக வாசித்தவர்கள். அவர் வாசிக்கப்பட வேண்டியவர், விவாதிக்கப்பட வேண்டியவர், அதற்கொரு தொடக்கமாக பதாகை இந்த எளிய முயற்சியை முன்னெடுப்பதில் பெருமை கொள்கிறது. சிறப்பிதழ் முடிவாகி அது வெளியாவதற்கு ஏறத்தாழ ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டோம். தங்கள் கட்டுரைகளை எங்களுக்கு அளித்த படைப்பாளிகளிடம் கால தாமதத்திற்காக மன்னிப்பு கோருகிறோம். படைப்பாளிகளாக இத்தகைய சிறப்பிதழை கொணர்வதில் உள்ள சவால்களை அவர்கள் அறிந்தவர்கள் என்பதால் எங்கள் நிலையை புரிந்து கொள்வார்கள். இன்னும் பல செறிவான கட்டுரைகள் வந்திருக்க வேண்டியது. ஆனால் இனியும் காத்திருந்து காலம் தாழ்த்த முடியாது என்பதால் இப்போது கொணர்ந்துள்ளோம். கட்டுரைகளை அளித்த, அளிக்க எண்ணிய, அத்தனை எழுத்தாளர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

எனது வாசிப்பின் எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளை முழுக்க பின்நவீனத்துவமாக அடையாளப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. நவீனத்துவத்தின் பேசுபொருளையே புதிய கதைசொல்லல் உத்தியில் கொண்டு சேர்த்தவர் என்று சொல்லலாம். சொற்சிக்கனமும் மொழி மற்றும் கதைகள் குறித்தும் தீவிர பிரக்ஞை உடையவர். இவைகூட நவீனத்துவ எழுத்தின் முக்கிய தன்மைகளில் ஒன்று. இந்த பிரக்ஞையே நாவல்கள் எழுத முடியாததற்கு காரணம் என்று அவரே ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். அவ்வகையில் இது அவருடைய தனித்துவமும் எல்லையும் ஆகிறது. அவருடைய கதைகளில் சூழல் விவரணை என்பது அறவே இல்லை. புறத்திணை மறைந்து அகத்திணை மட்டுமே உள்ளது. இந்த தன்மையில்கூட காஃப்கா பாணியை அவர் கைகொள்ளவில்லை. காஃப்கா அளிக்கும் பீதி உணர்வை, நம்பிக்கையின்மையை சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள் அளிப்பதில்லை. மாறாக பெரும்பாலான கதைகள் உணர்வு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. சில மெல்லிய கோடுகள் மட்டுமே தீட்டப்படுகின்றன. வாசகனே முழு உருவையும், விழைவையும் கற்பனை செய்து கொள்ள வேண்டும். உணர்வுகளின் தீவிரத்தை அடைய வேண்டிய பொறுப்பும் அவனைச் சார்ந்ததே.

அவருடைய கதைகள் நுட்பங்கள் புதைந்த ‘புதையல் வேட்டை’ விளையாட்டை ஒத்தது. வாசகன் சிறு சிறு குறிப்புகளைக் கொண்டு கதையை தன் மனதில் பின்னியபடி வருகிறான். நுட்பங்களின் சங்கிலிப் பிணைப்பு இதில் முக்கியம். நுட்பங்களைத் தவறவிட தவறவிட கதை அவனுக்கு பிடிபடாமல் ஆகிறது. இறுதியில் அவன் இலக்கை அடையும்போது அது கதாசிரியர் உத்தேசித்த இலக்காக இருக்க வேண்டியதில்லை. இன்னும் சொல்வதானால் எழுத்தாளன் எந்த இலக்கையுமே உத்தேசிக்கவில்லை என்பதே உண்மை. ஜெயமோகன் ‘இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும், என்று கூறினார். அவருடைய கதைகளின் ஒன்றிற்கு தலைப்பே அவருடைய கதைகளின் இந்தத் தன்மையை சுட்டுகிறது. ‘ஓர் இடத்திற்குப் பல வரைபடங்கள் ஒரு காலத்திற்குப் பல சரித்திரங்கள்’ (மாபெரும் சூதாட்டம் தொகுப்பு). தமிழில் வாசக சுதந்திரத்தை அதிகமாக அளிக்கும் எழுத்துக்கள் என்று சுரேஷ்குமார இந்திரஜித் மற்றும் யுவன் சந்திரசேகரின் எழுத்துக்களை கூறலாம். நாம் எண்ணுவது போல் வாழ்க்கையோ காலமோ நேர்க்கோட்டில் இல்லை. எத்தனையோ தளங்கள் உள்ளன. இணை வரலாறுகள் இயங்குகின்றன. ’மறைந்து திரியும் கிழவன்’, சமூரியா கதைகள், போன்றவை அப்படி அவர் உருவாக்க முனையும் இணை வரலாறின் பிரதிகள். நியதிகள் அற்ற அல்லது நியதிகள் பிடிபடாத இந்தச் சிடுக்குகள் மிகுந்த பேரியக்கத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தை காணும்போது ஏற்படும் பிரமிப்பை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் வாசகருக்கு கடத்த முயல்கின்றன.

அவருடைய ‘புனைவுகளின் உரையாடல்’ கதையில் கதைசொல்லி ஒரு கதையை சொல்லிக்கொண்டே வருகிறார், அந்தக் கதை முடிவதற்குமுன் இப்படி எழுதுகிறார்- “நடந்த சம்பவமாக நான் கூறியது அனைத்தும் புனைவு என்று கூறினேன். நண்பர் சிகரெட்டை இழுத்து புகையை விட்டார். ‘உண்மையைச் சொல்லிவிட்டுப் புனைவு என்று ஏமாற்றுகிறீர்களா?’ என்றார். ‘இல்லை; புனைவை உண்மை போலச் சொன்னேன்’ என்றேன். நண்பர் மௌனமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்”’. இது சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளை புரிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான பகுதி. நம்பகமற்ற கதைசொல்லி நம்முடன் விளையாடுகிறான் எனும் பிரக்ஞை வந்துவிடுகிறது. ‘நள்ளிரவில் சூரியன்’, ‘ஆங்கிலப் புத்தகம் வாசிக்கும் பெண்’ இப்படி பல கதைகளை இதற்கு உதாரணம் அளிக்கலாம். நேர்காணலில் அவரே தனக்கு ‘ரீல்’ விடுவது பிடிக்கும் என்று சொல்கிறார். புனைவு உண்மையை சொல்லவில்லை என்றாலும் உண்மையின் சாரத்தை வெளிப்படுத்துகிறது என்பது பரவலான கூற்று. ஆனால் சுரேஷ்குமார இந்திரஜித் உண்மை, பொய், புனைவு, எனும் பிரிவினையை அழித்து வாசகனுடன் விளையாடுகிறார். இதை உணர்ந்து தானும் விளையாட்டில் பங்கு பெரும் வாசகனுக்கு அவர் கதைகள் அளிக்கும் வாசிப்பின்பம் வேறு வகையானது. ஒரு வகையில் நவீனத்துவ எழுத்துக்களின் சத்தியம், தரிசனம் போன்றவற்றின் பகடி என இவற்றைச் சொல்லலாம். இத்தன்மை காரணமாகவே அவரது எழுத்து பிற நவீனத்துவ எழுத்துக்களில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளிகள் மறைந்து, அவரவர் அவரவருக்கான உண்மையை உற்பத்தி செய்துகொள்ளும் இந்த காலகட்டத்தில் சுரேஷ்குமார இந்திரஜித்தை தமிழின் பின்னை வாய்மைக்கால எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தலாமா என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்.

பதாகை சிறப்பிதழின் தனித்துவம் என்பது எழுத்தாளரின் விரிவான நேர்காணல்தான். ‘பாரிஸ் ரிவ்யு’ நேர்காணலை லட்சியமாகக் கொண்டு எழுத்தாளரின் படைப்பு விசையை வெளிக்கொணர்வதே விரிவான நேர்காணலின் நோக்கம். அவ்வகையில் இந்த நேர்காணல் மிகுந்த நிறைவை அளித்தது. கதைகளின் பின்னணி, அவற்றின் நுட்பங்கள் பற்றி விரிவாக உரையாடியுள்ளார். ராமேஸ்வர வாழ்க்கை, அவருடைய பணிச்சூழல், அவர் வாசித்த எழுத்தாளர்கள் என அவர் எழுத்தை பாதித்த, உருவாக்கிய அம்சங்களை அடையாளம் காண முடியும். “நான் எழுதும்போது மிக கவனமாகத்தான் எழுதுவேன், வாக்கியங்கள் சரியாக அமைகிறதா, என்று பார்ப்பேன். செண்டன்ஸ் சரியா அமையுதா, என்னன்னு. அப்படியும் பிரசுரம் ஆன பிறகு வாக்கியங்களை மாற்றிப் போட்டிருக்கலாமோ என்று நினைப்பேன். அதில மிகவும் பிரக்ஞைபூர்வமாகத்தான் இருப்பேன். எனக்கு வளவள என்று சொல்வது ஒத்து வராது. ஒரு விஷயத்தைச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என பார்ப்பேன். எதற்காக வளவள என்று இழுக்க வேண்டும்? சுருக்கமாகச் சொல்லுங்கள்,” என்று நேர்காணலில் தனது மொழியைப் பற்றி சொல்கிறார். “என்னுடைய எழுத்து மற்றும் பாணி கொஞ்சம் அறிவார்ந்த எழுத்தாளர்கள், அறிவார்ந்த வாசகர்களுக்குதான் பிடிக்கும் எனும் எண்ணம் எனக்குண்டு. பெரிய பரப்பை என்னால் அடைய முடியாது எனும் எண்ணமும் உண்டு. இதுதான் தலை எழுத்து என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்,.” என்று தனது விசனத்தைப் பதிவு செய்கிறார். அவருடைய படைப்புலகின் அலகுகளை அவரே ஒட்டுமொத்தமாக இப்படி சாராம்சப்படுத்தியிருக்கிறார்- “பழைய சமூக மதிப்பீடுகளைக் கலைப்பதிலும், மாயத்தன்மை வாய்ந்த பாணியினால் பல வழிகளைத் திறப்பதிலும், தர்க்கத்திற்கு புலப்படாத வாழ்வின் அபத்த திருப்பங்களைக் கூறுவதிலும், பிடிபடாத வாழ்வின் மர்மங்களைக் காண்பிப்பதிலும் நான் ஈடுபாடாக இருந்தேன்.”

நேர்காணலுக்காக அவரைச் சந்தித்து வந்த அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதி இருக்கிறேன். “மதுரை புறநகர் பகுதிகளில் ஆட்டோ மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியது. வாசல் கம்பி கேட்டின் ஒரு எல்லையில் என். ஆர். சுரேஷ் குமார், தாசில்தார், எனும் சிறிய பெயர்ப்பலகை தொங்கியது, மறு எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் என்று மற்றொரு பெயர்ப்பலகை தொங்கியது. தனது கல்வி, பூர்வீகம், பதவி எல்லாவற்றையும் துறந்து நவீன எழுத்தாளராக இரட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என எண்ணிக் கொண்டேன்.” அவருடைய ஆளுமையின் சில அம்சங்களை அதில்கொண்டு வர முடிந்தது.

மொழியாக்கங்கள் பிற மொழியிலிருந்து தமிழுக்கு வருகின்ற அளவில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்படுவதில்லை எனும் குறை நெடுங்காலமாகவே உள்ளதுதான். இம்முறை சிறப்பிதழுடன் தேர்ந்தெடுத்த கதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யலாம் என்று ஒரு எண்ணம் வந்தது. இச்சிறப்பிதழில் முதன் முதலில் தயாரானது ‘விரித்த கூந்தல்’ மொழியாக்கமே. மொழியாக்கத்தில் மிகுந்த தேர்ச்சியும் மொழிவளமும் கொண்ட நண்பர் நகுல் வசன் (Nakul Vāc) இக்கதையை மொழியாக்கம் செய்துள்ளார்.

நண்பர் வெங்கடேஷ் ஸ்ரீனிவாசகம் ”இயல்பான காமத்தை காலந்தோறும் விதம் விதமாய் இலக்கியம் பதிவு செய்துகொண்டுதானிருக்கிறது. காதலும், அழகின் தரிசன மனவெழுச்சியும் எந்த மென் புள்ளியில்/கோட்டிற்கு அப்பால், காமத்தைத் தொடுகிறது என்பது இன்னும் பலரும் அறியாத புதிராகத் தானிருக்கிறது,” என்று அவருடைய நினைவுகளுடன் தொடர்புபடுத்தி ‘விரித்த கூந்தல்’ கதையை பற்றிய தனது வாசிப்பையும் எழுதி இருக்கிறார்.

எழுத்தாளர் சுகுமாரன் எண்பதுகளின் தமிழ் இலக்கிய சூழலில் சுரேஷ்குமார இந்திரஜித் எழுத வந்ததில் இருந்து தனது அவதானிப்புகளை துவங்குகிறார். மௌனியின் தொடர்ச்சியாகவும், அவரிடமிருந்து வேறு பார்வையை தேர்ந்தவராகவும் சுரேஷ்குமார இந்திரஜித்தை அடையாளம் காண்கிறார். “’முன்னோடிகளின் பாதிப்பில்லாத தடம்’ என்ற வாசகமே என்னை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைவழியைத் தேடத் தூண்டியது. அப்படி ஒரு தடம் இலக்கியத்தில் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையே தூண்டுதலுக்கு முகாந்திரம். மௌனி எழுத்தின் நேர் பாதிப்பு சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவர் இயங்கும் மொழியில் ஓட்டத்தில் அவர் மேற்கொண்ட தேர்வில் மறைமுகமாக நிகழச் சாத்தியங்கள் அதிகம். இது ஒரு பொருளில் மொழியின் வலு. இன்னொரு பொருளில் படைப்பாக்கத்தின் தவிர்க்கவியலாமை. இந்த்த் தொடர்ச்சிதான் இலக்கியத்தை நிலைநிறுத்தவும் செய்கிறது.”

எழுத்தாளர் கே. என். செந்தில் ஏறத்தாழ சுகுமாரன் முன்வைத்த அதே கருத்தை எழுதுகிறார். சுகுமாரன் அடையாளம் காட்டியது போல் இவரும் குலசேகரன் மற்றும் எஸ். செந்தில்குமார் ஆகியோரை சுரேஷ்குமார இந்திரஜித்தின் நீட்சியாக காண்கிறார். ‘நடன மங்கை’ தொகுப்பை முன்வைத்து எழுதிய கட்டுரையில் “வர்ணணைகளையும் அலங்காரங்களையும் தவிர்த்து விட்டு நேரடியான சித்தரிப்புகளின் வழி உருக்கொள்ளும் காட்சிகளிலிருந்து விரிபவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். அந்தக் காட்சிகளிலிருந்து திரண்டு வரும் ஏதேனுமொன்று (அது சேதனமாகவோ அசேதனமாகவோ இருக்கலாம்) படிமமாக ஆகி அந்த மொத்தக் கதையையும் குவியாடி போல பிரதிபலிக்கச் செய்கின்றது. அவரது புகழ் பெற்ற ‘விரிந்த கூந்தல்’ முதல் இத்தொகுதியிலுள்ள ‘நடன மங்கை’ வரை இதைக் காணலாம்,” என்று எழுதுகிறார். மேலும் “மெளனியும் சா.கந்தசாமியும் இணையும் புள்ளி என இவ்வுலகை தோராயமாக வரையறுக்கத் தோன்றுகிறது. ஏன் ‘தோராயமாக’ என்றால் அதிலிருந்து விலகி கிளை பிரிந்து தன் பிரத்யேக கூறுமுறை நோக்கி சுரேஷ் சென்றுவிடுவதே காரணம்,” என சுரேஷ்குமார இந்திரஜித்தை தமிழ் இலக்கிய மரபில் பொருத்திப் பார்க்கிறார்.

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் தமிழ் இலக்கிய வரலாற்றின் சித்திரத்தை அளித்துவிட்டு அதில் சுரேஷ்குமார இந்திரஜித்தை அவருடைய ‘நானும் ஒருவன்’ தொகுப்பைக் கொண்டு வரையறை செய்ய முயல்கிறார். “மனம் கொள்ளும் நுட்பமான சஞ்சலங்களை இக்கதைகள் காட்சிப்படுத்துகின்றன. எளிமையின் மூலமாகவே நமக்குள் நுழையும் தன்மை கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சிறுகதை மரபின் வலுவான பின்னணியில் தன் குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கின்றார் சுரேஷ்குமார இந்திரஜித்,” என்று சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் உள்ள உளவியல் நுட்பங்களை அடையாளப்படுத்துகிறார்.

விஞரும் விமர்சகருமான க. மோகனரங்கன் மதுரை வட்டார எழுத்தாளர்கள் பற்றிய கருத்தரங்கில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பற்றி வாசித்த கட்டுரையை இச்சிறப்பிதழுக்காக பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவருடைய புனைவுலகைப் பற்றிய பருந்துப் பார்வை அளிக்கும் முக்கியமான கட்டுரை. “தமிழில் பெரும்போக்கிலான யதார்த்தவாத கதைகளுக்கே உரிய நாடகீயமான திருப்பங்களோ, கதாபாத்திரங்களின் உள் மனமோதல்களோ, சூழல் வர்ணனைகளோ அதிகம் இல்லாத இவர் கதைகள் கடல் மீது மிதக்கும் தனிப் பாறைகளை ஒத்தவை. கண்ணுக்கு புலனாகும் அளவை விடவும் நீரில் மறைந்திருக்கும் பகுதி கூடுதலாக இருக்கும். அவற்றைப் போலவே இவர் கதைகளிலும் தட்டுப்படுவதைக் காட்டிலும் மறைந்திருப்பன அதிகம் எனலாம். சொல்லும் விஷயத்தினால் அல்ல, சொல்லிய விதத்தாலேயே தம்மை கதைகளாக ஒருங்கிணைத்துக் கொள்ளும் தன்மை கொண்ட இக்கதைகள் சமகால நடப்புகளின் மீதான விமர்சனத்தையும் உட்கிடையாக கொண்டவை என்பதே இவற்றின் சிறப்பு,” என்று அவருடைய புனைவுலகின் தனித்தன்மையை சுட்டிக்காட்டுகிறார்.

இணையமோ நவீன தொழில்நுட்பமோ அண்டாத மாறுபட்ட கவிஞர் ந. ஜயபாஸ்கரன். அவரிடம் கட்டுரை கேட்டு அவருடைய மதுரை கடைக்கு தொலைபேசி செய்யும்போதும் பின்னர் அவரே அழைக்கும்போதும் அவருடைய குரலில் உள்ள தயக்கமும் மென்மையும் என்னை வியப்பில் ஆழ்த்தின. அவருடைய கட்டுரையும் கவிஞருக்கு உரிய அடங்கிய தொனியில், அதே வேளை கவித்துவமாக, சுரேஷ்குமார இந்திரஜித்தின் ஆளுமையையும் அவருடைய படைப்புலகையும் நுட்பமாக இணைக்கிறது. ‘பகலில் மட்டும் தெரியும் வாண வேடிக்கை’ எனும் கவித்துவமான தலைப்புள்ள கட்டுரையில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் மொழியைப் பற்றி இப்படி சொல்கிறார் “குறைச் சொல் மூலமே வெற்றி கண்டவர்” என்று கு.ப.ரா.வைப் பற்றி சிட்டி செய்திருக்கும் மதிப்பீடு, சுரேஷ்குமாருக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. எந்தக் கணத்திலும் சொற்கள் தன்னை மீறிச் செல்வதை சுரேஷ்குமார் அனுமதிப்பதில்லை- ஒரு கறாரான அதிகாரியைப் போல எந்த இடத்திலும் அவர் சொற்களை அழுத்துவது இல்லை; திருகுவதும் இல்லை. உணர்ச்சி அதிகம் கலக்காத சிறிய சொற்கள்; சிறிய தொடர்கள்; சிறிய அசைவுகள்- இவற்றின் மூலமே ஒரு புதிரான அக உலகத்தை சிருஷ்டிக்க அவரால் முடிந்திருக்கிறது.

“சுரேஷ்குமார இந்திரஜித் யதார்த்த உலகில், யதார்த்த சமூகத்தில், உறவுகளுக்குள் இருக்கும் சிடுக்குகளை, மாயம் காட்டும் அகவுலக யதார்த்தங்களை, அதன் பிரதிபலிப்புகளை, புனைவு வெளியில் நிகழ்த்துகிறார்… உளவியல் ரீதியாக அலசுதல், புரிந்துகொள்ள முயலுதல், அற விழுமியங்களற்ற வாழ்வின் ஒழுங்கின்மையின் ஒழுங்கை, நித்தனத்துடன் ஒருவித விலைகளோடு அவதானித்து முன்வைப்பவையாக இவரது படைப்புகள் உள்ளன,” என்று தன் அவதானிப்புகளையும் சில விமர்சனங்களையும் கவிஞர் பாலா கருப்பசாமி தனது கட்டுரையில் எழுதுகிறார். சுரேஷ்குமார இந்திரஜித்தின் மூன்று தொகுதிகளை வாசித்து இக்கட்டுரையை எழுதி இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

ஈழ எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாசன் எழுதிய கட்டுரையில், “இவரது கதைகளில் நவீன, பின்-நவீனத்தன்மைகள் ஒருசேர கலந்திருப்பதைக் காண முடியும். ஒரு படைப்பின் கோட்பாட்டுத் தனித்துவத்தை மீறினாலும் கலைப் படைப்பு எனும் நிலையில் அது ஒரு வெற்றியாகும். ஒரு வகையில் பார்த்தால் அது கோட்பாட்டு வரையறைகளை மீறி மனிதர்களை, நிகழ்வுகளை, இலக்கியத்தைப் பார்க்கும் ஒரு செயல்பாடு. ஒன்றை முழுமையாகப் புறக்கணித்து இன்னொன்றில் முழுமையாக அமிழ்ந்து செல்லும் போக்கைப் புறக்கணித்த ஒரு தனித்துவமான போக்கு. தமிழ் படைப்புலகை மேலும் முன்கொண்டு செல்லும் முயற்சி இது,” என சுரேஷ்குமார இந்திரஜித்தின் தனித்துவத்தை, அவரது எழுத்து கோட்பாட்டு புட்டியில் அடைபடாததை சுட்டிக் காட்டுகிறார்.

வளரும் எழுத்தாளர் அரிசங்கர் ஒரு வாசகராக தான் முதன்முதலாக வாசித்த ‘அவரவர் வழி’ தொகுப்பை முன்வைத்து தனது பார்வையை இப்படி எழுதி இருக்கிறார். “பல நேரங்களில் என்ன இது இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என ஏங்க வைக்கும். திரும்பத் திரும்ப அதை நோக்கியே நம்மை இழுக்கும். அப்படிப்பட்ட ஒரு நடனத்தைத்தான் சுரேஷ்குமார இந்திரஜித் தன் கதைகளின் மூலமாக நிகழ்த்தியிருக்கிறார்.”

நண்பர் ஆர். அஜய் சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘மாய யதார்த்தம்’ மற்றும் ‘ஒரு காதல் கதை’ ஆகிய இரண்டு கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் உள்ள ஆண் பெண் உறவு, பாலியல் சிடுக்குகள் குறித்து தனது அவதானிப்புகளை கட்டுரையாக்கியிருக்கிறார்.

“சர்வாதிகாரிகள் தம் அதிகாரத்தின் எல்லையைச் சோதிப்பது வன்முறையால் அல்ல- தாம் நிர்ணயிக்கும் உண்மையை யார் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கொண்டுதான்,” என்று பீட்டர் பொங்கல் ‘எலும்புக்கூடுகள்’ கதை குறித்து தனது பார்வையை எழுதியிருக்கிறார்.

நேர்காணலும், ஒரு மொழியாக்கமும், பனிரெண்டு கட்டுரைகளும் கொண்ட காத்திரமான தொகுப்பாக இச்சிறப்பிதழ் மலர்ந்திருக்கிறது. சிறப்பிதழைக் கொண்டு வருவதற்கு ஒத்துழைத்த சக பதாகை நண்பர்களுக்கு நன்றி. தங்கள் கட்டுரைகளை அளித்த படைப்பாளிகளுக்கும், விரிவான நேர்காணல் அளித்து சிறப்பிதழுக்கு மதிப்பளித்த எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

கதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து- அரிசங்கர்

அரிசங்கர்

சில கலைஞர்களின் நடனம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த நடனத்தில் நாம் நம்மை மறந்து திளைத்திருப்போம். அருகில் யார் இருந்தால் என்ன, எது நடந்தால் என்ன என்று அந்த நடனம் நம்மைக் கட்டிப்போடும். சில அசைவுகள் நம் உணர்ச்சிகள் பலவற்றைத் தூண்டிவிடும். அந்த நடனம் நம்மை அவ்வாறு கட்டிப் போட்டிருக்கும். பல நேரங்களில், என்ன இது, இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே, என ஏங்க வைக்கும். திரும்பத் திரும்ப அதை நோக்கியே நம்மை இழுக்கும். அப்படிப்பட்ட ஒரு நடனத்தைத்தான் சுரேஷ்குமார இந்திரஜித் தன் கதைகளின் மூலமாக நிகழ்த்தியிடுக்கிறார்.

புத்தகத்தின் தரத்தை அதன் பக்க அளவைக் கொண்டோ, அல்லது கதைகளின் எண்ணிக்கையைக் கொண்டோ வகைப்படுத்த முடியாது என்பதை இந்தத் தொகுப்பு நிறுவியிருக்கிறது. மிகவும் சிறிய அளவிலான இந்தத் தொகுப்பு பத்து கதைகள் கொண்டது. அனைத்து கதைகளும் இதழ்களுக்காக எழுதப்பட்டவை. அதனாலேயோ என்னவோ, ஒவ்வொரு கதையும் கிட்டத்தட்ட ஒரே அளவைக் கொண்டு இருக்கிறது. பல கதைகள் விரைவில் முடிந்துவிட்டதே என்ற குறை நிச்சயம் படிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளுக்கும் பொதுவானது என்னவென்றால் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் வேறு ஒரு கோணம் இருப்பதுதான். பெரும்பாலான கதைகள் ஒருவர் பார்வையில் மட்டுமே நிகழ்வதில்லை. வாழ்க்கையின் வேறு ஒரு பரிமாணத்தை தன் கதைகளில் திறந்துவைக்கிறார். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் பார்வை மற்றொருவருக்கு இருக்காது என்பதே பல கதைகளின் ஆதார முடிச்சாக இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் நான் முதலில் படித்தது தொகுப்பின் கடைசி கதையை. சிறிய கதை என்பதால் வாங்கியவுடன் நின்றுகொண்டே படித்தேன். ஒரு மனிதனுக்கு மிகவும் படபடப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் சிலவற்றில் (முக்கியமாக ஆண்களுக்கு) ஒன்று, தன் மனைவி அருகில் இருக்கும்போது முன்னாள் காதலியைச் சந்திப்பது. ‘அவரவர் வழி’ என்கின்ற இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதை இதைப் பற்றியதே. இந்தக் கதையும் அதன் முடிவும் தந்த பரவசமே அடுத்தடுத்த கதைகளை நோக்கி என்னை நகர்த்தியது. எதிர்பார்க்காத ஒரு விஷயம் நம் எல்லோர் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக நடந்ததே தீரும். அந்த நொடியில் நடக்கும் அந்த மாயாஜாலத்தையே பெரும்பாலும் தன் கதைகளாக்குகிறார்.

அந்தத் தருணம் எல்லா நேரத்திலும் நமக்கு பரவசமூட்டுவதாக அமைவதில்லை. சில நேரம் அது நம்மை மரணத்தின் விளிம்பிற்கே அழைத்துச் செல்கிறது. வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறது. வாழ்வின் முடிவை நோக்கி நகர்த்தக்கூடியதாகவும் அமைகிறது. இதை தன் ‘பங்குப் பணம்’ கதையில் நிகழ்த்துகிறார். இந்தக் கதையில் ஒரு திருடனுக்கும் பெருமாளுக்கும் இருக்கும் ஒப்பந்தம்தான் மையம். தான் திருடுவதில் பத்து சதவீதம் பெருமாளுக்குத் தந்துவிடுவதாக வேண்டிக் கொள்ள அன்றிலிருந்து திருட்டுத் தொழில் அமோகமாக நடக்கிறத. சொன்னபடி முதலில் செய்யும் திருடன் பிறகு தன வேண்டுதலை நிறைவேற்றுவதில்லை. அதன் பிறகு திருடப்போகும் இடத்தில் அவன் கால் பிசகிவிட ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதவனாகிறான். விடியத் துவங்குகிறது. விடிந்ததும் தான் மாட்டிக்கொள்வோம் என்று அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. தான் பங்குப் பணத்தை தராததினாலேயே தண்டிக்கப்பட்டதாக அவன் நம்புகிறான்.

மனிதனுக்குள் ஏற்படும் மனத்தடையும், மனக்குழப்பமுமே இன்றைய நவீன வாழ்வின் பெரும் சிக்கலாக இருக்கிறது. இத்தகைய விஷயங்களையே இந்தத் தொகுப்பு கையாள்கிறது. மனிதன் எதிலுமே திருப்தியடைவதில்லை. ஆனாலும் அவன் விட்டுக் கொடுப்பதுமில்லை. அவன் தன் ரகசியங்கள்தான் உலகின் மிக முக்கியமாக ரகசியம் என்று நினைக்கிறான். ஆனால் அது அடுத்தவர் பார்வையில் ஒன்றுமே இல்லாத ஒன்றாகத்தான் இருக்கிறது. ‘நிகழ்காலமும் இறந்தகாலமும்’ என்ற கதையும், ‘மாய எதார்த்தம்’ என்ற கதையும் அப்படித்தான்.

இந்தத் தொகுப்பில் முக்கியமான கதையாக நான் கருதுவது ‘அழியாத சித்திரங்கள்’ என்ற கதைதான். எனக்கு மிகப் பிடித்தமாக கதையும் இதுதான். நமக்கு பிடித்தமானவர்களின் மனதில் நாம்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதோ அல்லது நாம்தான் இருக்கிறோம் என்று நம்புவதோ எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதே இந்தக் கதையின் மையம். சிரித்துப் பேசுவதினாலும், கூடப படுப்பதினாலும், உடன் வாழ்வதினாலும்கூட அவர்கள் நமக்கானவர்கள் என்று நம்புகிறோம். இன்றைய நவீன உலகத்தில் வேலை, தொழில் என மனிதன் அலைந்துகொண்டே இருக்கிறான். சேர்ந்து வாழ்வது என்பதோ, கணவன் காலையில் சென்று மாலையில் வீட்டுக்கு வரவேண்டும் என்பதோ நகர வாழ்க்கையில் எல்லாருக்கும் நடக்காதது. இப்படியான காலகட்டத்தில் அவரவர்களுக்கான ரகசியங்கள் இருந்தே தீரும். ஆனால் இந்தக் கதை இன்றைய மன ரகசியங்களை பற்றியது அல்ல. அன்றைய மன ரகசியங்களை பற்றியது. போன தலைமுறையை பற்றியது. அவர்கள் ஆழ்மன ரகசியங்களைப் பற்றியது.

இதுதான் நான் வாசிக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் தொகுப்பு. நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரிலேயே இதை துவங்கினேன். மேலும் சில கதைகளை இணையத்தில் வாசித்தேன்.

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் ‘மாயப்படகு’ என்ற பெயரில் ஒரு மாயாஜால கதையை எழுதினேன். அது நண்பர்களிடத்தில் ரசிக்கப்பட்டது. அது மேலும் கொஞ்சம் மெருகேற்றியபின் ‘புதுவை பாரதி’ என்ற சிற்றிதழில் 12 வாரம் தொடராக வெளிவந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘புதுவை பாமரன்’ என்ற சிற்றிதழில் மூன்று சிறுகதைகள் வந்தன. அதன் பிறகு எழுதவில்லை. பிறகு 2013 ல் சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தனிமை என்னை மீண்டும் எழுதத் தூண்டியது. இருப்பினும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் எதையும் வெளியிடவில்லை. 2018 பிப்ரவரி மாதம் ‘மலைகள்’ இதழில் என் முதல் கதை வந்தது. இந்த மூன்று மாதத்தில் ‘பதாகை’, ‘மலைகள்’ மற்றும் ‘திண்ணை’ இணைய இதழ்களில் பத்து கதைகள் வெளிவந்துள்ளன. அனைத்தும் பல்வேறு காலகட்டத்தில் எழுதியது.

வாசிப்பையும் அதன் தொடர்ச்சியாக எழுத்தையும் நோக்கி என்னை நகர்த்தியது எனது தனிமையே. இதுவரை எழுத வருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் சில கடினமான விஷயங்களைக் கடந்து செல்ல எளிதாக முடியவில்லை. மனிதர்கள் எளிதாகக் கடந்து சென்றுவிடும் அடுத்தவர்களின் துயரங்களை நான் கொஞ்சம் அருகில் சென்று பார்க்க விரும்புகிறேன். எதுவும் செய்ய முடியாத இந்த கையாலாகாத்தனம்  குறித்து எனக்குள் இருக்கும் குற்ற உணர்விலிருந்து மீள எழுதுவது எனக்குக் கொஞ்சம் உதவுகிறது. மனிதர்களை எப்படி அணுகுவது, அனுபவங்களைச் சுவையான கதையாக மாற்றுவது எனச் சில விஷயங்களை நான் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் இருந்து கற்றேன். அவ்வகையில், தமிழ்ச் சிறுகதையின் தவிர்க்க முடியாத மாயாஜாலக்காரர் சுரேஷ்குமார இந்திரஜித்.

 

 

விடுவிப்பு- அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

 “லெட்சுமி ஊங்கிட்ட ஒரு அம்பதுருவா இருக்குமா…”

“நானே உங்கிட்ட இருக்குமானு கேக்கலாம்னு இருந்தன்” என்றாள் வடிவு.

“கொடுமன்னு கோயிலுக்கு வந்தாக்கா, இங்க ஒரு கொடும அவுத்து போட்டு ஆடுது,” என்று லட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பக்கமாக சூப்ரவைசர் வருவதைப் பார்த்த வடிவு லட்சுமியிடம் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினாள். இருவரும் அவன் போவதையே ஓரக்கண்ணால் பார்த்தபடி தங்கள் வேலையைப் பார்த்தனர்.

“மொதல்ல இவங்கிட்ட இருந்து தப்பிச்சி ஓடனும்” என்றாள் லட்சுமி.

“எங்கனு போவ, எங்க போனாலும் இவன போல ஒருத்தன் கைலப்புடிச்சிகினு வருவானுங்கதான். போறதுனா அது சம்பளத்துக்குனுதான் இருக்கனும்” என்றாள் வடிவு.

“நீ சொல்றத பாத்தா எதோ எடம் பாத்துட்ட போல”

“க்கும் டீ… இன்னும் நல்லா கத்து, எல்லத்துக்கும் கேக்கட்டும்” என்று கோவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் வடிவு.

“ஆமா மிஷின் ஓடற சத்தத்துல நான் பேசறதுதான் இப்ப கேக்கப்போவுது. எதுனா நல்ல கம்பேனினா நாமளும் வரலாம்னுதான் கேட்டன்,” என்று சமாதான தொனியில் சொன்னாள் லட்சுமி. வடிவு பதில் எதுவும் சொல்லவில்லை. வடிவு எதாவது சொல்வாளா என்று இரண்டு முறை அவளைப் பார்த்தவாறே இருந்தாள். ஆனால் அதன் பிறகு அன்றைய வேலை முடியும் வரை வடிவு எதுவுமே பேசவில்லை. மதிய நேரத்தில்கூட சாப்பிட வராமல் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள். லட்சுமிக்கு அவளைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. தனக்குள் சொல்லிக் கொண்டாள், “ச்சீ… இன்னா பொம்பள இவ, சின்ன வயசுலருந்து ஒன்னாவேதான இருக்கோம். ஒன்னாதான் படிச்சோம், கட்டிக்கினு போனதுகூடப் பக்கத்து பக்கத்து தெருவுலதான். இத்தினி நாளுக்கும் ஒன்னாவேதான் இருக்கோம். ஒரு நல்ல கம்பேனியா வந்தா நமக்குச் சொன்னா இன்னா. இவ சொத்தயா நாம கேக்கறோம்,” லட்சுமி இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே வடிவு வந்து வேகமாகச் சாப்பிட்டு லட்சுமியுடன் முடித்தாள்.

லட்சுமியும், வடியும் முத்திரைப்பாளையத்தில்தான் ஒன்றாகப் படித்தார்கள். ஒன்றாகவே பத்தாவது ஃபெயில் ஆகி ஒருவர் பின் ஒருவராகச் சிறிய இடைவெளியில் திருமணம் செய்துகொண்டு இப்போது இருவருமே ஐயங்குட்டிப்பாளையத்தில் பக்கத்துப் பக்கத்து தெருவில் வசிக்கிறார்கள். மேட்டுப்பாளையத்தில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் கம்பேனியில் வேலை பார்க்கிறார்கள். இருவருமே மாநிறம், சம உயரம்தான். லட்சுமி எப்பவுமே ஒரே மாதிரிதான் இருந்தாள், எலும்பும் தோலுமாக. ஆனால் வடிவு திருமணத்திற்குப்பின் நன்றாக சதை போட்டு இருவருக்குமான வயது வித்தியாசம் அதிகமாகப் பார்ப்பவர்களுக்கு காட்டியது. தான் சீக்கிரம் கிழவியாகிவிட்டோமே என்று லட்சுமியைப் பார்க்கும்போதெல்லாம் வடிவுக்குத் தோன்றுவதுண்டு.

மாலை வேலை முடிந்து இருவருமே மேட்டுப்பாளையம் சறுவலில் சாலையில் இறங்கிவந்து கொண்டிருந்தனர். வழக்கமாக அப்படியே குறுக்கு வழியாகச் சென்று முத்திரைப்பாளையம் வழியாகச் செல்வதுதான் அவர்கள் வழக்கம். ஏதேனும் அவசர வேலைகள் இருந்தால் கீழ் ரோட்டுக்கு வந்து டெம்போ  பிடித்துச் செல்வார்கள்.

வடிவு பேச்சைத் துவங்கினாள், “லெட்சுமி, மதியம் அந்த புது கம்பெனி மேனேஜருகிட்ட தாண்டி பேசிகினு இருந்தன்.” என்றாள்.

லட்சுமி பதில் எதுவும் சொல்லவில்லை.

“உனுக்கும் சேத்துதாண்டி பேசனன்”.

இப்போதும் லட்சுமி பதில் சொல்லவில்லை. ஆனால் காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு, வடிவு என்ன சொல்லப் போகிறாள் என்று கவனித்தாள். வடிவு தொடர்ந்தாள், “அந்தாளு என்னாடானா கம்பேனிதான் மேட்டுபாளையத்துல இருக்கு, ஆனா ஆப்பீஸ் பாண்டில இருக்கு மொதல்ல அங்க வந்து பாருங்கனு சொல்றான். நீ என்னாடி சொல்ற நாளைக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாமா?” என்றாள்.

லெட்சுமி யோசித்தாள். அவள் கணவன் துரைராஜ்க்கு லட்சுமி வடிவுடன் பழகுவது சுத்தமாகப் பிடிக்காது. வேலை நேரம் தவிர அதிகம் அவள் வடிவுடன் செலவிடமாட்டாள். வடிவைப் பற்றி வீட்டிலும் பேசமாட்டாள். அப்படித்தான் ஒரு நாள் வடிவு சும்மா இல்லாம எதோ கேட்க போக துரைராஜ் அடித்த அடியை இன்று நினைத்தாலும் லட்சுமியின் உடல் நடுங்கும். அவளால் வலி தாங்க முடியாமல் அவன் காலிலேயே விழுந்தாள். அவன் கேட்கும் நிலையில் இல்லை. இவள் குழந்தையை துக்கிக்கொண்டு பக்கத்துத் தெருவில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து கொண்டாள். பிறகு துரைராஜே வந்து சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான். இதை இவள் வடிவிடம்கூட சொல்லவில்லை. அவள் என்றுமே தன் கணவனை விட்டுக் கொடுத்ததில்லை. இப்போது போய் புது கம்பேனி, அதுவும் வடிவுடன் என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டான். ஏன், இந்த கம்பேனியில் என்ன பிரச்சனை என ஆயிரம் கேள்விகள் வரும். நீ வேலைக்கே போக வேண்டாம், என்று கூட சொல்லிவிடுவான். எதோ கொஞ்சம் கஸ்டமில்லாம இருக்கு அதுக்கும் உல வெச்சுக்க வேண்டாம், என்று லட்சுமிக்குத் தோன்றியது.

“இன்னாடி, நான் கேட்டுனே இருக்கன். நீ கனவு கண்டுனுவர” என்றாள் வடிவு.

“நீ கேட்டததான் யோசிச்சினு வரன். நாம ரெண்டு பேரும் ஒண்ணா போனா சரிவராது. தனித்தனியா கிளம்புவோம். பாண்டி பஸ் ஸ்டாண்டுலருந்து ஒண்ணா போலாம்,” என்றாள்.

வடிவு சரி என்று சொல்ல இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர்.

மறுநாள் லட்சுமி கிளம்பி சரியாக பாண்டி பேருந்து நிலையத்துக்கு வந்துவிட்டாள். அவர்கள் பேசிக்கொண்டதுபோல் பேருந்து நிலையத்தை ஒட்டி இருந்த சைக்கிள் ஸ்டாண்ட் அருகில் காத்திருந்தாள். ரொமப நேரம் ஆகியும் வடிவைக் காணவில்லை. வடிவுக்கு கைபேசியில் அழைத்தாள். கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. லெட்சுமிக்கு எரிச்சலாக வந்தது. இவளை நம்பி வந்தது தப்பா போச்சே, என்று நொந்துக்கொண்டாள். காலையிலிருந்து பச்சை தண்ணிகூட குடிக்கவில்லை என்று நினைவுக்கு வந்தது. மிகவும் சோர்வாக இருந்ததால் எதிரில் இருந்த ஒரு டீக்கடைக்கு சென்று, ஒரு டீ, என்றாள். அப்படியே வடிவு வருகிறாளா என்று பார்த்துக்கொண்டே இருந்தாள். டீ மட்டும்தான் வந்தது. டீக்கடை ஒட்டியே ஒரு லாட்ஜ் இருந்தது. யாரும் உள்ளே போன மாதிரியும் தெரியவில்லை, வந்த மாதிரியும் தெரியவில்லை. இவள் லாட்ஜையே பார்த்துக் கொண்டிருந்ததை உள்ளே இருந்து பார்த்த ஒருவன் அவளிடம் வந்து, “உள்ள உங்கள கூப்பிடறாங்க” என்றான்.

“என்னயா” என்றாள் லட்சுமி.

“ஆமாம்மா” என்றான் அவன்.

“எதுக்கு” என்றாள்.

“அட என்னானுதான் வந்து கேட்டு போயேன்மா” என்றான்.

இவள் டீக்கு காசை நீட்ட, அவன் தடுத்தான். அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம், என்று அவளை உள்ளே கூட்டிச் சென்றான். அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிந்த டீக்கடைக்காரனுக்கு உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே அவள் பெரிதாக கத்துவது கேட்டது. அவளுக்குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் உதிர்த்தாள். வேகமாக வெளியே வந்து டீக்கடைக்காரனிடம் காசை வீசிவிட்டுச் சென்றாள். அழைத்துச் சென்றவன் வெளியே வந்தான். அவனிடம் டீக்கடைக்காரன், “இன்னா படியிலயா” என்றான்.

அவன் இல்லை என்பது போல் உதட்டைச் சுளித்தான்.

லட்சுமி பேருந்தில் போய்க்கொண்டிருந்தாள். வடிவின் மேல் அவளுக்கு ஆத்திரமாக வந்தது. இப்போது பிரச்சனை வடிவோ அல்லது அந்த லாட்ஜ்காரனோ இல்ல. இவள் லாட்ஜில் இருந்து வெளியேறியதைப் துரைராஜின் நண்பன் ஒருவன் பார்த்து விட்டான். அதை நினைத்துத்தான் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. இவள் அவனை பார்த்தமாதிரியே காட்டிக்கொள்ளாமல் வந்து பேருந்தில் ஏறினாள். இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. “இவன் போய் அவனிடம் சொல்லிவிட்டால் அவ்வளவு தான். அவன் அடித்தே கொன்றுவிடுவான். அதுக்கு நாமலே செத்துடலாம். அய்யோ புள்ளய என்ன பண்றது,” இப்படி பல திசைகளில் அவள் மனம் ஓடிக்கொண்டிருந்தது. தனக்கு இது தேவைதான் என்று நினைத்துக்கொண்டாள். இந்த வடிவுக்கு நாளைக்கு இருக்கு, என்று நினைத்துக் கொண்டாள்.

பேருந்து மேட்டுப்பாளையம் வந்தது. மணி ஒன்பதரைதான் ஆகியிருந்தது. வேலைக்கே போகலாம் என்று வேகமாக மேடு ஏறினாள். தனக்கு பின்னாலேயே யாரோ வருவது போல் இருக்க, பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் வந்து கொண்டிந்தான். இந்தச் சனியன் புடிச்சவன் ஏன் நம்ப பின்னாடி வரான், என்று எரிச்சலானாள். மீண்டும் திரும்பிப் பார்த்தாள் அவன் தன் முழுப்பல்லை காட்டிச் சிரித்தான். இவள் வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொண்டு வேகமாக கம்பேனிக்குள் நுழைந்து, தாமதமாக வந்ததற்கான வசையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். அங்கே வடிவு அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் லட்சுமிக்கு அவளை அப்படியே மிதிக்க வேண்டும் என்பது போல் இருந்தது.

லட்சுமியின் முகத்தை பார்ர்கும்போதே வடிவுக்குப் பயமாக இருந்தது. தாமதமாக வந்ததால் முதலில் லட்சுமி எதுவும் பேசவில்லை. அமைதியாக தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். மதியம் உணவு இடைவெளியின்போது லட்சுமி திட்டியதில் வடிவு அழுதேவிட்டாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.

“இல்ல லெட்சுமி, நான் நேத்து என் வீட்டுகாரர்கிட்ட சொன்னேன். அவரு உடனே நானே உன்ன கூட்டினு போறன்னிட்டாரு. காலைலயே கிளம்பிட்டோம். போன வீட்டுலயே வச்சிட்டன்னு பாதி வழியிலதான் தெரிஞ்சிச்சி. நீ வரத்துக்குக் கொஞ்சம் முன்னாடிதான் வந்தன். அஞ்சி நிமிசத்துல நானே யாருகிட்டயாது போன் வாங்கி உன்ன கூப்பிடலாம்னு இருந்தன். அதுக்குள்ள நீயே வந்துட்ட. நான் வேணும்ன்னுலாம் ஒண்ணும் பண்ணல லெட்சுமி,” என்றாள்.

ஆனால் லட்சுமியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் மீண்டும் வடிவிடம் ஏறினாள்.

“இப்ப அந்தச் சனியன் புடிச்சவன் வேற பின்னாடியே வரானே நான் என்ன பண்றது. என் வூட்டுக்காரங்கிட்ட சொல்லிட்டா இன்னா பண்றது,” என்றாள்.

“ஏய், அண்ணன் அதெல்லாம் நம்பாதுடீ,” என்றாள் வடிவு.

“நீ ஏன் அங்க போனன்னு முதல்ல உத உழும். வந்து வாங்கிக்கறியா?”

வடிவு அமைதியாக இருந்தாள். அன்றைய வேலை முடிந்து இருவரும் குறுக்கு வழியாகச் சென்றனர். அவன் வருகிறானா என்று அவ்வப்போது பார்த்தவாறே வந்தாள் லட்சுமி.

மறுநாள் தெருமுனையிலிருந்து பின்னாடியே வந்தான். பார்க்கும்போதெல்லாம் பல்லைக் காட்டினான். இது தினமும் தொடர ஆரம்பித்தது. லட்சுமிக்கு வீட்டிலும் வேலை ஓடவில்லை, கம்பெனியிலும் வேலை ஓடவில்லை. தூக்கம் தொலைந்தது. எந்த தப்பும் பண்ணாமல் ஏன் இந்த நரக வேதனை என்று நினைத்துக் கொண்டாள். இது இன்னும் எத்தனை நாள் தொடருமோ தெரியவில்லையே.

“பேசாம உன் வீட்டுக்காருகிட்ட சொல்லிடு” என்றாள் வடிவு. அவள் புது கம்பெனிக்கு மாறியதிலிருந்து அவளைப் பார்க்க முடியவில்லை லட்சுமியால். அதான் கடைக்கு போகிற சாக்கில் வடிவு வீட்டிற்கு வந்தாள். இருவரும் பல யோசனைகளை ஆராய்ந்தனர். முடிவில் எதுவும் திருப்தியாக இல்லை. லட்சுமி கிளம்பினாள்.

“சரி வடிவு நான் கிளம்பறன்,” என்றாள்.

இருவரும் வீட்டு வாசலுக்கு வந்தனர். எதிர்க்கடை வாசலில் அவன் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் வடிவு ஆவேசமாக விளக்குமாற்றை எடுத்து அடிக்கப் போனாள். லட்சுமி அவளைத் தடுத்துவிட்டாள். ஆனால் வடிவின் வாயை அவளால் தடுக்க முடியவில்லை. அவன் லட்சுமியை முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான். வடிவு மீண்டும் தனக்கு உலை வைத்துவிட்டாள் என நினைத்துக்கொண்டாள்.

சில தினங்களாக அவன் வரவில்லை. லட்சுமிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அவன் சும்மா இருப்பான் என்று மட்டும் தோன்றவில்லை. ஒரு நாள் அவள் வேலைவிட்டு வரும்போது ஒரு சந்தில் அவளை மடக்கி நேரடியாகவே கேட்டான், “உங்கிட்ட முதலும் கடைசியுமா கேக்கறன் என் கூட ஒருவாட்டி வர முடியுமா முடியாதா?” என்றான்.

லட்சுமிக்கு காதில் யாரோ அமிலத்தை ஊத்தியதுபோல் இருந்தது. அவன் முகத்தில் காரித்துப்பிவிட்டு வேகமாகச் சென்றாள். அவன் அப்படிக் கேட்டதை அவளால் தாங்க முடியவில்லை. இரவு முழுவதும் அழுதாள். மறுநாள் உடம்பு சரியில்லை என்று வேலைக்குப் போகவில்லை. விட்டில் இருந்த வேலைகள் அன்று அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எந்த நினைப்பும் வரவில்லை. பின் மதியத்தில் அவள் கணவன் துரைராஜ் கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்தான். அவனுடன் சில நண்பர்கள் வந்தார்கள். துரைராஜ் முகத்தில் சில இடங்களில் வீங்கியிருந்தது. சட்டை முழுவதும் கிழிந்து தொங்கியது. லட்சுமி பதற்றமாக அவனிடம் ஓடினாள். அவன் நண்பர்கள் அதற்குள், “ஒண்ணும் இல்லமா, சின்னா ஒரு தகராறு. எல்லாம் பேசி முடிச்சாசு. பதறாத” என்றனர். பிறகு துரைராஜிடம் திரும்பி, “துரை இத இத்தோட விடு. அவன்லாம் ஒரு ஆளுனு அவன்கூட போய்… சரிவிடு. நாளைக்கு நல்ல ரெஸ்ட் எடு பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு வெளியேறினர்.

அனைவரும் போனபின் லட்சுமி மெல்ல அவனிடம் “எதுக்கு சண்ட” என்றாள்.

சிறிது அமைதியாக இருந்தவன் அவளிடம், “அந்தப் பரதேசி இல்ல, செல்வம்” என்றான்.

லட்சுமிக்கு பகீர் என்றது. அவன்தான் என்று நினைத்துக்கொண்டாள். துரை தொடர்ந்தான், “அந்த நாயி எங்கிட்டயே வந்து உன்னப்பத்தி தப்பா சொல்றான். உன்ன அங்க பாத்தேன் இங்க பாத்தேன்னு. அதான் அடிச்சி அவன் வாய உடச்சிட்டன்.”

லட்சுமி தான் எதிலிருந்தோ விடுவிக்கப்பட்டது போல் உணர்ந்தாள். அவள் கண்களில் நீர் வந்துகொண்டே இருந்தது. இவள் அழுவதைப் பார்த்த துரைராஜ், “அட நீயேன் அழற, அவன் கிடக்கறன் பொறம்போக்கு” என்றான்.

தந்நலா, பெரியவரின் சொர்க்கம் – ஆகி கவிதைகள்

ஆகி

தந்நலா

தெய்வமா இவன்
கடவுளே
இவன் ஆடும் தாண்டவத்தைக் கண்டு
கண்டது படிக்கும் நான்
பொறுக்கமாட்டாமல்
எரிந்து விழுகிறேன்
சாம்பலாய் விழுந்ததும்
மூன்று நாழிகைகளில் போதும்
போதும் விட்டால் போதுமென்று
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுந்தும் விடுகிறேன்
எரிந்து விழும் என்னை
பெருக்கியெடுத்து இவள் ஏன் ஒருபோதும்
குப்பைக்கூடையில் இடுவதில்லை
இட்டால் எப்படி உயிர்த்தெழுவதாம்
பைபிள் படிக்கும் இவள்
இவனது தாண்டவத்தைக் கண்டு
எரிந்து விழுகையில்
இவளது சாம்பலை
நான் பெருக்கியெடுத்து விட்டால்
மூன்று நாழிகைகளில்
எப்படி உயிர்த்தெழுவாளாம்
மீண்டும் மீண்டும் எப்படி
எரிந்து விழுவாளாம்
அப்படி சற்று தள்ளி நின்று
ஆட்டம் போடுங்கள் நடராசரே
அனைத்தையும் இயக்குபவள் தந்நலம்
எனில் என்னுள்ளும் அவளுண்டு
எச்சமாய் ஆட்டிவைக்கும்
ஊக்குவிக்கும் இச்சையாய்
பன்மையா குழந்தைமை
குழந்தையா இவன்
கடவுளே
இவன் எடுக்கும் அவதாரங்களை
சொல்லிமாளாது
ஆனாலொன்று இருவரும்
ஒரே சமயத்தில் எரிந்து
விழுந்துவிடாமல் கவனமாய்
இருந்துகொள்ளவேண்டும்
செயல் பிசிறினாலும்
பெருக்கியெடுக்கத் தயங்காக் குழந்தைக்கு
நடராசாத்தி இயக்கி குறித்த
இயலுணர்வு இருப்பினும்
பெருக்கியெடுப்பது குறித்து
என்ன தெரியப்போகிறது

oOo

பெரியவரின் சொர்க்கம்

கனவுகளை நனவாக்க
இயன்றோர்
தங்கள் மென்கனவுகளை
கடுங்கனவுகளாக்குகின்றனர்
கற்காலத்தில்
மென்னுடலைச் சாடியோர்
பிற்காலத்தில்
மின்னுடலைப் பாடுகின்றனர்
இல்லாததைத் தேடுவோர்
இல்லாததைத் தேடி
தேவையில்லாததைக்
கண்டடைகின்றனர்
வனவெளியில்
திரிந்துறங்கியோர்
விண்வெளியில்
கண்விழித்திருக்கின்றனர்
கனவுகளை நனவாக்க
இயலாதோர்
தங்கள் ராக்கனவுகளை
பகற்கனவுகளாக்குகின்றனர்
இதெல்லாமிருக்கட்டும்
பெரியவரொருவர் இருந்தார்
அவர் யெகோவாவின் சாட்சிகள்
கட்சிக்குத் தாவி சொர்க்கம் சென்றார்
சொர்க்கம் சென்றவர் செவத்த யெகோவாவைத்
தேடி கருத்த கிறிஸ்துவைக் கண்டார்
கிறிஸ்துவைக் கண்டவர்
சற்று தயங்கி நின்றார்
தயங்கி நின்றவரை கிறிஸ்து
அதோ அங்கே பாருங்களென்றார்
அங்கு சீலையைப் பார்த்து
பூரிப்படைந்தவர் அருகில் சென்று
கண்ணிமைத்து இதுவா யெகோவா
யெகோவியாக இருக்கும் என்கின்றார்

நம் வீட்டு மனிதர்கள் – வண்ணநிலவனின் “கடல்புரத்தில்” வாசிப்பனுபவம். -வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

நான் பிலோமி அக்காவைப் பார்த்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். அல்லது, பிலோமி அக்காவைப் போன்ற வேறொரு அக்காவை. முட்டத்தில், என் பதின்ம வயதுகளில். அப்பா கூடப் பிறந்த அத்தை, அப்போது முட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராயிருந்தார். மருத்துவமனை அருகிலேயே வீடு. பள்ளி விடுமுறைகளில் சில வாரங்கள் முட்டத்தில் அத்தையின் குட்டிக் குழந்தைகள் சாய், வித்யாவுடன் விளையாட்டுகளில் கழியும்.

வீட்டிற்கு முன்னால் ஒரு மரமல்லி இருந்தது. எப்போதும் மல்லிகள் மரத்தினடியில் சிதறிக் கிடக்கும். ஒரு விடுமுறையில், சாய், வித்யாவுடன் சிறிய மூன்று சக்கர சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கையில் மீன் கூடையுடன் ஒரு அக்கா வாசலுக்கு வந்து நின்று “டாக்டரம்மா” என்று அத்தையைக் கூப்பிட்டார். திரும்பி எங்களைப் பார்த்து சிரித்தார். அத்தை உள்ளிருந்து வந்து, அந்த அக்காவை பேர் சொல்லி கூப்பிட்டு “வந்துட்டியா? உள்ள வா” என்று கூப்பிட்டுப் போனார். அக்கா அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள் போல; சாயிக்கும், வித்யாவிற்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. நானும், சாய், வித்யாவும் மீன்களை வேடிக்கை பார்க்க உள்ளே ஓடினோம். “இது விஜயன்; அண்ணன் பையன். லீவுக்கு வந்துருக்கான்” என்று என்னைக்காட்டி சொன்னார் அத்தை. அக்கா கன்னத்தை நிமிண்டிவிட்டு சிரித்தார்.

எனக்கு இப்போது முட்டம் நிகழ்வுகள் பெரும்பாலும் கலங்கலாய்த்தான் நினைவிலிருக்கின்றன (ஒருவேளை ஜெனிஃபர் டீச்சரும் கண்ணில் விழுந்திருப்பார்களோ!). அத்தையும், மாமாவும்கூட வெகுநாட்கள் முட்டத்திலில்லை. அத்தை அங்கிருந்து வெள்ளலூருக்கும், நத்தத்திற்கும், அலங்காநல்லூருக்கும் வேலை மாற்றலாகிக் கொண்டிருந்ததால், என் விடுமுறை நாட்களும் அங்கங்கு மாறிக்கொண்டிருந்தன.

இப்போதெல்லாம் எந்தப் புத்தகம் படித்தாலும் மனது பின்னோக்கித் திரும்பி, நினைவுகளில் மூழ்கி, வாசிக்கப்படும் வாழ்வுடன் நோஸ்டால்ஜியாவையும் பின்னிவிடுகிறது. சமீபத்தில் தமிழினி வசந்தகுமார் வெளியிட்டிருந்த பாமயனின் அபுனைவு நூலான “வேளாண்மையின் விடுதலை” படிக்கும்போதுகூட, மனம் தாத்தாவின் வேளாண்மை கொழித்த கிராமத்து வீட்டிலேயே இருந்தது. கமலையும், மாடுகளும், வேர்க்கடலைக் குவியலும் மனதை நிரப்பித் தளும்பின.

நெய்தலின் நான் படித்த முதல் புத்தகம் குரூஸின் “ஆழி சூழ் உலகு”. அவ்வாழ்க்கையை மனதுக்கு நெருக்கமாய் அறிமுகப்படுத்தியிருந்தது. “கடல்புரத்தில்” குறுநாவல்தான்; ஆனால் அந்த மனிதர்கள், அவர்களின் உலகம், அவர்களின் குணம், அவர்களின் பேச்சு… அச்சு அசலானதாய், நானே அருகிலிருந்து பார்ப்பதைப் போலிருந்தது; அதனால்தான் பிலோமி அக்காவைப் பார்த்திருப்பேனோ என்ற பிரமையுண்டானது. இப்புனைவு ஆரம்பமும், முடிவுமில்லாதது; ஆம் அவ்வாழ்வின், அம்மனிதர்களின் ஒரு குறுக்குவெட்டு, 112 பக்கங்களில். சாரத்தைப் பிழிந்து கொடுத்தது மாதிரி; பெரும் புனைவாக விரித்தெடுக்க எல்லாச் சாத்தியங்களும் கொண்ட நறுக்கான, செறிவான குறுநாவல். முன்னுரையில் வண்ணநிலவன் சொன்னதுபோல், ஓரத்தில் ஒதுங்கி நின்று, எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து எழுதிய கலைஞனின் மொழி. எழுத்தாளன் அவ்வாழ்க்கையினூடே பார்வையாளனாக மட்டுமே இருக்கிறான்; கிஞ்சித்தும் ”தன்”-னை வெளிக்காட்டிக் கொள்ளாமல். பெரும் ஆசுவாசம். ஆனால் ஒட்டுமொத்தப் புனைவின் வழியே எழுத்தாளனின் அகம் வெளிப்பட்டு விடுகிறது.

ஒரு விமர்சனம் படித்தேன்; இக்குறுநாவலில் எல்லோருமே அதீத நல்லவர்களாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்; அதனாலேயே செயற்கையாகத் தெரிகிறதென்று. என்னுள் புன்னகை எழுந்தது. என்னவொரு மனநிலைக்கு வந்துவிட்டிருக்கிறோம்! நல்லது ஏதும் கண்ணில் பட்டால், அல்லது நல்லதாகவே கண்ணில் பட்டுக் கொண்டிருந்தால், ”ஏதோ சரியில்லை” என்று நமக்குத் தோன்றுகிறது; கூடவே ஒரு ஐயமும் இது மிகுகற்பனை கொண்ட மெலோடிராமாவாகத்தான் இருக்கவேண்டும் என்று. எனக்கென்னவோ படிக்கும்போது இந்நாவல் மிகுகற்பனையாகவே தெரியவில்லை. நாடகத்தனமாயும் உணரவில்லை.

*

வல்லத்தையும், வீட்டையும் விற்றுவிட்டு தன்னுடன் வந்து இருக்குமாறு செபஸ்தி, அப்பச்சி குரூஸிடம் சொல்கிறான்; அவனுக்கு அந்தப் பணம் வேண்டும், சாயபுவுடன் சேர்ந்து சைக்கிள் கடை வைக்க; குரூஸ் உயிரே போனாலும் மணப்பாட்டைவிட்டு வரமாட்டேன் என்கிறார். செபஸ்தியின் அம்மை மரியம்மைக்கு மகனுடன் செல்ல விருப்பம்தான். மரியம்மைக்கும் வாத்திக்கும் ஸ்நேகம்; அது குரூஸிற்கும் தெரியும்தான். செபஸ்தியின் தங்கை பிலோமிக்கு சாமிதாஸின் மேல் காதல்; சாமிதாஸூம் பிலோமியை விரும்புகிறான்.

பக்கத்து வீட்டில் லாஞ்சி வைத்திருக்கும் ஐசக்; அவனின் நோயாளி மனைவி கேதரின். ஐஸக்கிற்கு கேதரினை அடித்து விரட்டிவிட்டு, பிலோமியை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை.

பிலோமியின் அண்ணன் செபஸ்தியை காதலித்தாலும், உவரியூர் மாப்பிள்ளைக்கு வல்லத்துடன் வாக்கப்படும், பிலோமியின் நெருங்கிய ஸ்நேகிதி ரஞ்சி. ரஞ்சியின் மேல் மிகுந்த நேசம் வைத்திருக்கும் ரஞ்சியின் கொழுந்தன்.

குரூஸின் வல்லத்தில் உடன்வரும் சிலுவை. சிலுவைக்கும் பிலோமியின் மேல் ஒரு கண் உண்டு. சிலுவையின் மனைவி இன்னாசி.

குரூஸின் குடும்பத்திற்கு உதவும், குரூஸின் மீன்களை வாங்கிக்கொள்ளும், பிலோமியுடன் சகஜமாய்ப் பேசும் தரகனார்.

லாஞ்சிக்காரர்களுக்கும், வல்லத்துக்காரர்களுக்குமான பகைமையும், உரசல்களும். பாதிரியாருக்குப் பிரியமான ரோசாரியாவும் லாஞ்சி ஓட்டுகிறான். பிலோமியும் சாமிதாஸூம் ஒருநாள் உடலால் இணைகிறார்கள்.

மணப்பாட்டின் ஒரு கிறிஸ்துமஸ் திருவிழாவின்போது, கள் குடித்த மரியம்மை தூக்கக் கலக்கத்தில் வீட்டுப்படியில் தவறி விழுந்து இறந்து போகிறாள். குரூஸ் நடைபிணமாகிறான். காரியங்கள் முடிந்து செபஸ்தியின் மனைவி போகும்போது பிலோமியிடம், “இனிமே நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்,” என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

ஐஸக்கிற்கும், ரோசாரியாவிற்கும் சண்டை வருகிறது. ரோசாரியாவின் மனைவிக்கும், பாதிரியாருக்கும் தொடர்பிருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். ஒருநாள் ஐஸக்கின் லாஞ்சியில் தீப்பிடிக்க, ரோசாரியாதான் வைத்திருப்பான் என்று கோபத்தில் கள்ளுக்கடையில் ரோசாரியாவைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறான் ஐஸக். ஐஸக்கிற்கு பைத்தியம் பிடிக்கிறது.

நாட்கள் நகர்கின்றன. பிலோமிக்கும், மரியம்மையின் வாத்திக்கும் இடையே நட்புண்டாகிறது. மணப்பாட்டில் அறுப்பின் பண்டிகை வருகிறது. ஊர் விழாக்கோலம் பூணுகிறது. குரூஸ் வல்லத்தையும், வீட்டையும் விற்க முடிவு செய்கிறான். வல்லம் பிரிவதை தாங்கமுடியாமல் மனம் பேதலித்து குழந்தையாகி விடுகிறான்.

*

நான் நெகிழ்ந்த இடங்கள் பல.

பிலோமிக்கு தாத்தா தாசையாவை ரொம்பப் பிடிக்கும்; தாத்தா இறப்பதற்கு முந்தைய டிசம்பரில் கிறிஸ்துமஸ் கோயிலுக்குக் கடைசியாய் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி நடந்து வருகிறார். வரும்போதே அடிக்கொருதரம் “பிலோமிக் குட்டிக்கி தாத்தாவால் கஸ்டமில்லையே?” என்கிறார். “அதெல்லாங் கிடையாது தாத்தா” பிலோமி பதில் சொன்னதும் “நீ மவராசியா இருப்பே…” என்கிறார் தாத்தா.

*

”பிலோமி உள் நடைப்படியில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மடியில் செபஸ்தியுடைய இரண்டு பையன்களும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இந்தப் பிரியமான அத்தையை விட்டுப்போகக் கொஞ்சங்கூட மனசில்லை.

“லே கீழ இறங்கி உட்கார்ந்தா என்ன? அவ பாவம், நோஞ்ச ஒடம்புக்காரி…” என்று செபஸ்தி அதட்டல் போட்டான்.”

*

”கிறிஸ்துமஸூடன் பனியும் வந்துவிடுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அழகைத் தருவதே இந்தப் பனிதான். பனியினூடே கிறிஸ்துமஸ் ஆராதனைக்குப் போகிறதும், பனியைப் பிளந்துகொண்டு கேட்கிற கோயில் மணியோசையும் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

இரவு பதினொன்றரை மணிக்கு எல்லோரும் ஆராதனைக்குப் புறப்பட்டார்கள். கோயிலில் குலசேகரப்பட்டினத்திலிருந்து வந்திருந்த ரேடியோ, கிறிஸ்தவ கீதங்களைப் பாடிக்கொண்டிருந்தது லேசாகக் கேட்டது. தெருவில் போகும் அந்தப் பிள்ளைகளுக்குள் யார் பிலோமியுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு போவது என்பதில் சிறு சச்சரவு மூண்டது. அமலோற்பவத்துடைய புருஷன் தன் பிள்ளைகளைப் பார்த்து சத்தம் போட்டான். அதிலே ஆசிர் மட்டும் அரைகுறை மனசுடன் தன் அப்பச்சியுடைய கையைப் பிடித்துக்கொண்டான். மெர்ஸி கேட்கவில்லை. அவள் பிலோமியுடைய கையைத்தான் பிடிப்பேன் என்றாள்.”

*

சாய்-ம், வித்யாவும் இப்போது டாக்டர்களாகி விட்டார்கள். மரமல்லி எனக்குப் பிடித்த மரமாகி விட்டது. மரமல்லியும், கீழே மண் தரையில் சிதறிக் கிடக்கும் நீண்ட வெண்பூக்களும், அந்தக்காட்சி அப்படியே மனதில் பதிந்துவிட்டது. பத்து வயதில் பிடித்துப்போன மரமல்லிகளின் வாசம் இப்போதும் மனதில். அதன்பின் பள்ளி முடித்து, தோட்டக்கலை இளங்கலையில் சேர்ந்தபோதும், அந்த நான்கு வருடங்களில் நிறைய பூமரங்கள் அறிமுகம் ஆனாலும், பிடித்த பூமரமாக மரமல்லியே இருந்தது.

பிலோமி அக்காவுடன் பயணிக்கையில் மனது மேல் கொண்டு வந்த இன்னொருவர் ஓடைப்பட்டியில் சின்னக் குடிசையில் கடை வைத்திருந்த காமாட்சி பாட்டி. காமாட்சி பாட்டி தடிமனான கண்ணாடி போட்டிருப்பார்; காதுகளில் கனமான தண்டட்டி. அப்போது நான் ஆரம்பப் பள்ளியில் இருந்தேன். உணவில் கருவாட்டின் மணத்துக்கும், சுவைக்கும் பழகி எந்த சாப்பாடாயிருந்தாலும் தட்டில் ஒரு கருவாட்டு துண்டிருந்தால் மனம் சந்தோஷம் கொள்ளும். அப்பாவிற்கும் கருவாடு பிடிக்கும். காய்கறி ஏதும் சமைக்காதபோது, அம்மா பாட்டி கடையில் கருவாட்டு துண்டுகள் வாங்கிவரச் சொல்லுவார். ஊரிலேயே காமாட்சி பாட்டி கடையில் மட்டும்தான் கருவாடு கிடைக்கும். எங்கள் கிராமத்து வீட்டிலேயே, வீட்டினுள் கொடியில், பண்டிகைக்கு எடுத்த இறைச்சியின் மிச்சங்கள், உப்புக்கண்டமாய் காய்ந்துகொண்டிருக்கும். அம்மா அதைப் பண்ணித் தருகிறேன் என்றாலும், வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாட்டி கடைக்குத்தான் ஓடுவேன்.

முன்னுரையில் வண்ணநிலவன் “மனம் உய்ய வேண்டும்; அதற்குத்தான் இலக்கியம்” என்கிறார். கடல்புரத்தில் எல்லோரும் முழுமையான அன்பும், கோபமும் ஒருங்கே கொண்ட மனிதர்களாயிருக்கிறார்கள்; செபஸ்தி அப்பாவின் மீது அன்பாகவும் இருக்கிறான்; கோபப்படவும் செய்கிறான். குரூஸிற்கு, மரியம்மையின் மேல் வெறுப்பும் இருக்கிறது; அன்பும் இருக்கிறது. பிலோமிக்கு, சாமிதாஸின் மேல் அன்பு துளியும் குறையவில்லை, அவன் பிரிந்தபோதிலும்.

*

பிலோமியைப் பார்க்க வீட்டிற்கு வருகிறான் சாமிதாஸ். இன்னும் சில நாட்களில் அவனுக்கு திருமணம் உவரியூர் பெண்ணுடன்.

”அவன் மெதுவாகக் குனிந்துகொண்டே வீட்டினுள் வந்தான். அந்தக் கால்களுக்கு அந்த வீட்டினுள் நுழைய அதற்குள் எப்படி இவ்வளவு தயக்கம் வந்தது.

“சும்மா உள்ளே வாங்க. இது அசல் மனுஷர் வூடு இல்ல. உங்களுக்க பிலோமி வூடுதா இது…”

அவனுக்கு வார்த்தைகள் இல்லை.

“பிலோமிக்கு நா பண்ணியிருக்க பாவத்துக்கு ஆண்டவர் என்னயத் தண்டிக்காம வுடமாட்டார்”

அவள் மௌனித்திருந்தாள். மீண்டும் அவனே பேசினான்.

“நீ என்னய மன்னிக்கணும்…எனக்கு மாப்பு தரணும்.”

“இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது.”

“நாளச்செண்டு கல்யாணம். ஒன்னயப் பார்க்கணும் பேசணும் போல இருந்திச்சு. அதான் வந்தேன். நீயும் கண்டிஷனாட்டு வரணும். நா ஒன்னயத்தா ரொம்ப நெனச்சுக்கிட்டிருப்பேன். சரின்னு சொல்லு…”

“ம்…”

பிலோமி சிரித்தாள்.

“என்ன சிரிக்கா? வருவியா?”

“வாரேன்…” என்று சிரிப்பினூடே சொன்னாள் .”

அந்தச் சிரிப்பின் முதிர்ச்சியையும், அன்பின் தளும்பலையும் அடைந்துவிட்டால் இந்த ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடாதா என்ன?