Author: பதாகை

பச்சை – ஹரீஷ் கண்பத் சிறுகதை

ஹரீஷ் கண்பத்

அம்மா காலையிலேயே மதிய உணவுக்குத் தயார் செய்யத் துவங்கியிருந்தாள். கிராமம் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் சிறுநகரமாய் மாறிக் கொண்டிருக்கும் இது போன்ற ஊர் ப்ரியாவுக்குப் புதிது. நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவள். நகரத்திலிருக்கும் எல்லாமும் இங்கேயும் வரத் துவங்கி விட்டாலும் ஒரு மெல்லிய இழையில் இரண்டும் வித்தியாசப்பட்டுக் கொண்டே இருப்பது இயல்புதான்.

அதன் பல சாட்சிகளுள் ஒன்றாய் சின்னச் சின்னக் கூரை வேய்ந்த வீடுகளையும், மாலையானால் வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு அரட்டை அடிக்கும் சனங்களும், வழியில் தென்படும் எல்லா வீடுகளிலிருந்தும் உணவுண்ண அழைப்பும் என்று பார்த்துப் பார்த்துக் கண்கள் விரிய ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் ப்ரியா.

மெல்ல வெளியிறங்கிப் படலைத் திறந்து கொண்டு நடக்கத் துவங்கினோம். முந்தைய நாளின் கோடை மழை இலை செடி கொடிகளைத் துடைத்து வைத்திருந்தது. பச்சை மணம் வீசிக் கொண்டிருந்தது. ஆளரவமற்ற சாலையை ப்ரியா வெகுவாக ரசித்தபடி நடந்து கொண்டிருந்தாள். அவ்வப்போது கடக்கும் எக்ஸல் சூப்பர் அல்லது எம் 80 யின் ஒலிகள் தவிர காற்று அமைதியாயிருந்தது.

பத்து நிமிட நடையில்தானிருந்தது கோவில். திடீரென்று வெயில் காணாமல் போய் மேகம் மூட்டம் போட்டது. சட்டென்று சுதாரிப்பதற்குள் சடசடவெனத் தூறல் விழத் துவங்கியது. வேகமாய் அருகிலிருந்த மரத்தடிக்கு ஓடி நின்றேன். ப்ரியாவும் பின்னோடு ஓடி வந்தாள்.

“ மழை பெய்யும்போது மரத்தடில நிக்கக் கூடாது தெரியும்ல. சய்ன்ஸ்” என்றாள் மூச்சு வாங்கலின் நடுவே சிரித்துக் கொண்டே. அவள் நெற்றியிலிருந்து பிரிந்திருந்த ஒற்றை முடியின் நுனியில் அமர்ந்திருந்த மழைத்துளி எப்போது வேண்டுமானாலும் கீழே விழக் கூடும்.

“ இது பாஸிங் க்ளவுட்தான். உடனே நின்னுரும் பாரு மழை,” என்று நான் சொல்லி முடிக்கச் சட்டென்று தூறல் நின்றது. அசட்டுப் பெருமையாயிருந்தது எனக்கு. மீண்டும் நடையைத் தொடர்ந்தோம். வழியில் கோமதியக்காள் எதிர்ப்பட்டாள். இதான் சம்சாரமா, என்றாள். ப்ரியாவின் கன்னத்தை வருடினாள். குசல விசாரிப்புகள் முடிந்து “தம்பி வூட்டுக்கு எப்ப சாப்புட வர்ற? ந்தா இன்னிக்குதான் வர்றது” என்றாள்.

எனக்குப் பிறக்கும் குழந்தையின் சிரிப்பு இப்படி இருந்தால் எவ்வளவு அழகாயிருக்கும் என்று சட்டென்று தோன்றியது கோமதியக்காவின் சிரிப்பைப் பார்த்து. அவ்வளவு துலக்கம். சிரித்துச் சமாதானம் சொல்லிக் கடந்தேன்.

பத்து நிமிடம் நடந்து கோவிலை அடைந்தோம். “இந்த ஊர்ல இவ்ளோ பெரிய கோவிலா?” என்றாள் வியப்பாய், செருப்பைக் கழற்றியபடியே. பிரதான சன்னிதி கூட்டமின்றி இருந்தது. ஓரிருவர் நின்றிருந்தனர். ஒரு சிறுவன் அவனைவிடச் சின்னப் பெண் ஒன்றை சிரமப்பட்டுத் தூக்கி மணி அடிக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

அர்ச்சகர் தரிசனம் செய்வித்துவிட்டு பிரசாதம் கொடுக்கையில் கல்யாணம் பற்றி விசாரித்தார். நல்லபடியாய் முடிந்தது சந்தோஷம், என்றார். பிரசாதம் வாங்கிக் கொண்டு அகன்றோம். கோவிலைச் சுற்றி வரும்போது பின்புறமிருந்த அரச மரத்தடி நாகரை வணங்கிக் கொண்டோம். அவ்வளவு பெரிய அரசமரத்தை விடுத்துச் சற்றுத் தொலைவில் சுவர் விரிசலில் லேசாய்க் கீறிக் கொண்டு முளைத்திருந்த அரசஞ்செடி மீது கவனம் பதிந்தது. அது லேசான காற்றில் சிலிர்ப்பது போல் அசைந்தது முதல் துளி மழை உடம்பில் பட்டதும் வரும் சிலிர்ப்புக்கொப்பாயிருந்தது.

அரச மரத்தின் பின்புறம் எங்கிருந்தோ வந்திருந்த ஒற்றை ஆடு முன்னங்கால்களில் எக்கித் தழை தின்ன முயன்று கொண்டிருந்தது. மெல்லப் பிரகாரச் சுற்றை முடித்து விட்டுக் கோவில் வாசலுக்கு வந்தோம்.  கோவிலின் அகன்ற திண்ணையைப் பார்த்ததும், “கொஞ்ச நேரம் உக்காந்துட்டுப் போவோம்” என்றேன். திண்ணையில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்காராமல் உட்தள்ளிச் சுவரில் சாய்ந்து சப்பணங்காலிட்டு அமர்ந்தோம். வெயில் தெரியவில்லையென்றாலும் திண்ணைக்கென வேயப்பட்டிருந்த கூரையின் நிழல் அலாதியாயிருந்தது.

சற்றைக்கெல்லாம் மீண்டும் சடசடவெனத் தூறல். “இதுவும் உங்க ஊர் மழை தானே? இது எப்ப நிக்கும்னு சொல்லு” என்றாள் ப்ரியா என்னைப் பார்த்துக் குறும்பாக. அவள் “உங்க ஊரு மழை” என்று சொன்ன பதம் பிடித்திருந்தது.  தூறல் கோடுகளினூடே மெதுவாக ஒரு எக்ஸல் சூப்பர் கடப்பது தெரிந்தது. கோவிலைக் கடக்காமல் நின்றது. வண்டியிலிருந்து இறங்கி வரும் வெள்ளை வேட்டி மனிதரின் நடையை எங்கோ பார்த்தது போலிருந்தது.

அருகில் வர வர நீர்க் கோடுகளை மீறி ஆள் அடையாளம் தெரிந்தது. ரங்கன் பெரியப்பாதான். என்னைப் பார்த்து விட்டிருக்கிறார். புன்னகையுடன் வந்தார். மழை அவரை ஒன்றும் செய்யவில்லை. திடீரென்று அவர் அருகில் வருவதற்குள் கோவிலுக்குள்ளே தரையில் நீர்த் துளிகள் விழுந்து தெறிப்பதைக் காண வேண்டும் என்று ஆவல் எழுந்தது. திரும்பி உள்ளே பார்ப்போமா என்று யோசனையினூடே பெரியப்பா வந்து சேர்ந்து விட்டார்.

“என்னாடா எப்பிடி கீற” என்றார். சங்கடமாய் நெளிந்தேன்.  “நல்லாருக்கேன் பெரிப்பா” என்றேன். ப்ரியாவிடம் “என் பெரிப்பா” என்றேன். அவள் புருவம் சுருக்குதலில் “இவர் கல்யாணத்துக்கு வரலியே?” என்ற கேள்வி தெரிந்தது.

“இதான் உன் சம்சாரமா. வணக்கம்மா. நல்லாக்கீரியா?” என்றார் நிறைவாக. “நல்லாருக்கேங்க” என்றாள், என்ன சொல்லி அழைக்க வேண்டுமென்ற குழப்பத்தில் எந்த உறவு முறையும் கூறாமல். மழை விட்டிருந்தது. கூரையின் நுனியிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

“செரி நட வீட்டுக்கு போவலாம்” என்றார். திடுக்கிட்டேன். “அது… வந்து… பெரிப்பா” என்று இழுத்தேன். “என்னாடா இழுக்குற. உங்கப்பன் என்னிய கல்யாணத்துக்கு கூப்புடலன்னு எனக்கு வருத்தம்தான். அதுக்கு நீ என்னா செய்வ. பெரிம்மா பாத்தா சந்தோசப்படுவாடா. என்னா வரியா” என்றார்.

அவர் அழைப்பின் தொனியில் “தயவு செய்து வாயேன்” என்ற விண்ணப்பமிருந்தது. ”சரி பெரிப்பா போலாம்… ஆனா சாப்பாட்டுக்கு….” என்றேன்.

“அது தெரியும். உங்கம்மா ஏற்கனவே செய்ய ஆரம்பிச்சிருப்பாங்க. நீ அங்கயே சாப்புடு. நம்மூட்ல எதுனா கலரு கிலரு முறுக்கு சாப்புட்டு போ. இல்ல காப்பித் தண்ணிதான் குடிச்சிட்டுப் போ. இன்னொரு நாளிக்கி சாப்டுக்கலாம். என்னா ஓகேதான” என்றார். என்ன ஒரு புரிதல். அந்த நொடி பெரியப்பாவைத் தோளோடு அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.

“செரி. உனுக்குதான் வீடு தெரியும்ல. ந்தா அஞ்சு நிமிசம் நடந்தா வருது. நீ நடந்து வந்துர்றியா. நான் மருமவளக் கூட்டிகினு வண்டில போறன் முன்னாடி. என்னாமா வரியா” என்றார். ப்ரியா என்னைப் பார்த்தாள். மெல்லக் கண் காட்டினேன்.

“சரிங்க போலாம்” என்று வெகு இலகுவாகக் கிளம்பி விட்டாள். அவர்கள் இருவரும் வண்டியில் ஏறிக் கோவில் முனை தாண்டி மறைந்ததும் நடக்கத் துவங்கினேன். இப்படி மழை அவ்வப்போது நீர் தெளித்து இந்தச் செடிகளையெல்லாம் மேலும் மேலும் பச்சையாக்கிக் கொண்டிருக்கிறதே, ஒரு கட்டத்தில் இதற்கு மேல் செடியில் பச்சைக்கு இடமில்லை என்று செடியில் பட்டு வழியும் நீரெல்லாம் பச்சையாய் வழியப் போகிறதென்று நினைத்துக் கொண்டேன்.

நினைத்தவுடன் திரும்பி சாலையோரச் செடியைப் பார்த்தேன். அமைதியாயிருந்தது. பெரியப்பா இந்த ஐந்து நிமிட வண்டிப் பயணத்திலேயே ப்ரியாவுக்கு எங்கள் குடும்பக் கதையையும் அப்பாவுக்கும் அவருக்குமான உப்பு பெறாத ஏதோ ஒரு கவுரவச் சண்டை பற்றியும் அதனால் உண்டான பத்து வருஷப் பகை பற்றியும், ஆடு பகை குட்டி உறவு கணக்காகப் பெரியப்பா என்னையும் என் தம்பிகளையும் உறவாடுவதைப் பற்றியும் என் அப்பாவும் பெரியப்பாவின் பெண் மீது பாசமாயிருப்பதைப் பற்றியும்  விவரித்திருக்கக் கூடும்.

பெரியப்பா வீட்டுக்குப் போனால் தெரியும். பெரிய்ப்பா வீடு கோவிலுக்கு அருகிலேயே இருந்தது. ஐந்து நிமிஷ தூரம். இவ்வளவு அருகருகே இருந்து கொண்டு எப்படி பகையை தினந்தோறும் காலையில் எழுந்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அதை உயிர்ப்புடன் வைத்திருக்க முடிகிறதென்று ஆச்சரியமாயிருந்தது. யோசனையினூடே நடந்ததில் பெரியப்பாவின் வீடு வந்து விட்டது.

பால்யத்தில் நான் பார்த்த பெரியப்பா வீட்டின் வாசல் வேலிப் படல் இரும்பு கேட்டாக மாறியிருந்தது. உள்ளே வீட்டுக்குச் செல்லும் வழிகூட சிமெண்ட் வேயப்பட்டிருந்தது. கூடையைத் திறந்து விட்டிருப்பார்கள் போல. கோழிகள் ஆங்காங்கே சிதறிச் சுற்றிக் கொண்டிருந்தன. ப்ரியா பெரியப்பாவுடன் வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள்.

கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். சரியாக பெரியம்மா வெளியே வந்தார். முகத்தில் அவ்வளவு மலர்ச்சி. பாதி வழியிலேயே மறித்தார். வாடா இப்பதான் இந்த கெழவிய பாக்கறதுக்கு வழி தெரிஞ்சிதா, என்று என் கன்னம் வழித்தார். பின் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துப் போனார். பெரியம்மா கொஞ்சம்கூட மாறவில்லை. வாசலுக்குச் சென்றதும் நிப்பாட்டினார்.

“இங்கயே நில்லு வரேன். இது யாரு உன் சம்சாரமா. அழகா இருக்கா. நல்லாருங்க ரெண்டு பேரும். இந்தா வந்துர்றேன்,” என்று உள்ளே போனார். லேசான பரபரப்பு இருந்தது அவர் நடையில். உள்ளிருந்து இன்னதென்று இனம் பிரித்தறிய முடியாத ஏதோ ஒரு உணவு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் வாசனை வந்தது.

ஆரத்தித் தட்டுடன் வந்து வரவேற்றார் பெரியம்மா. “கல்யாணம்லா நல்லபடியா நடந்துச்சா” என்றார். “போயி அவங்களுக்கு காப்பி போடு”, என்று பெரியம்மாவிடம் சொன்ன பெரியப்பா, “காப்பி குடிக்கிறிங்கள்ல?” என்றார் எங்களைப்  பார்த்து. தலையசைத்தோம். “இந்தா போறேன் இருங்க. பையன் வந்துகுறான் வூட்டுக்கு. இன்னா அவசரம்” என்று என் அருகில் வந்து கன்னத்தை வழித்தாள்.

சிறு வயதில் மடியில் போட்டுத் தூங்கப் பண்ணிய பெரியம்மாவின் சேலை வாடை மீண்டும் இத்தனை வருடங்களுக்குப் பின் இவ்வளவு அருகே. நிமிர்ந்து பெரியம்மாவைப் பார்த்தேன். கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. இவ்வளவு சந்தோஷம் தாங்காது என்பது போல இருந்தது அவளின் செய்கைகள்.

வீட்டின் பின்புறம் ரயிலின் ஓசை கேட்டது. பெரியம்மா விலகி சமையலறைக்குள் நுழைந்தார். “சின்ன வயசுல இங்க பெரியப்பா வீட்டுக்குப் பின்னால இருக்கற காம்பவுண்டு செவுரு எகிறி குதிச்சிதான் நானு பாஸ்கரெல்லாம் ரயில்வே கிரவுண்டுல போயி விளையாடுவோம்,” என்றேன் ப்ரியாவிடம்.

“அந்த செவுரெல்லாம் இப்ப ரொம்ப பெருசா கட்டிட்டானுக. அப்புறம் அந்த ரயில்வே ஸ்டேசன் வாசல்லருந்து பாய்ஸ் ஸ்கூலு போவோமுல்ல. அந்த ரோட்டையும் ரயில்வே பிராப்பர்டினு சொல்லி கேட்டு போட்டு அந்த பக்கம் போவ முடியாம செஞ்சிட்டானுங்க. இப்ப மெயின் ரோடுல சுத்திகினு ஆனந்தா ஓட்டலாண்ட போயிதான் பாய்ஸ் ஸ்கூல் போவணும். இல்லனா ட்ராக்குலயே நடந்து போவணும்,“ என்றார் பெரியப்பா.

ஏனோ ஊரின் முகம் பெரியப்பா சொன்ன ஒரு வாக்கியத்தில் சட்டென்று மாறி விட்டது போலிருந்தது. “ பாஸ்கர் எங்க?” என்றேன். இன்னும் சகஜமாய்ப் பெரியப்பா என்று அழைக்க வாய் வரவில்லை. “அவன் நால் ரோடு வரைக்கிம் போயிருக்கறான். வந்துருவான்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எம் 80 சத்தம் கேட்டது.

வ்ண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவன் எங்களைப் பார்த்ததும் சட்டென்று நின்று விட்டான். சூழலை கிரகித்துக் கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு. எழுந்து அவனை நெருங்கினேன். தோள் மேல் கை போட்டு அணைத்தேன். “எப்படி இருக்க பாஸ்கரு” என்றேன். தயங்கிப் பின் அவனும் அணைத்தான். “டேய் எப்பிட்றாகீற. நான் நல்லாகுறன். என்றவன் இயல்பாய் ப்ரியாவைப் பார்த்து, “இன்னாமா நல்லாகுறியா” என்று புன்னகைத்தான்.

“பெரியப்பா பையன். எனக்கு அண்ணன். ஆனா பெஸ்டு ப்ரெண்டு,” என்று ப்ரியாவிடம் அறிமுகம் செய்தேன்.

பெரியம்மா காபிக் கோப்பைகளை ஒரு பெரிய தட்டில் வைத்து கூட பிஸ்கட், சீடை, முறுக்கு என்று எதையெதையோ கொண்டு வந்தார். கவனிப்பும் அனுசரிப்பும் பேச்சுகளும் விசாரணைகளும் நீண்டபடியிருந்தன. கவனமாய் அப்பா பற்றிய பேச்சு மட்டும் எழாமல் பார்த்துக் கொண்டார் பெரியப்பா.

நேரமாகி விட்டதென்று சொல்லிக் கொண்டே கிளம்புவதற்கு எழுந்தேன். பெரியப்பா “எப்படி போற?” என்றார். “ நடந்துதான் “ என்றேன்.

“இரு நான் கொண்டு வுடறேன்,” என்றார். திடுக்கென்றது. இதென்ன தர்ம சங்கடம்? “இல்ல… நாங்க ரெண்டு பேரு… நடந்தே….” என்றேன். “அட அதுக்கென்ன. என் வண்டி கீது. பாஸ்கர் வண்டி கீது. போலாம் வா,” என்றார். பாஸ்கரும் குழம்பினான். ஆனால் தயாரானான். விஷயத்தின் வீரியம் புரியாததால் ப்ரியா வேடிக்கை மட்டும் பார்த்தாள்.

“என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்துடன் கிளம்பினேன். பெரியப்பா வண்டியில் ப்ரியா ஏறிக் கொள்ள, பாஸ்கருடன் நான் கிளம்பினேன். வீடு நெருங்க நெருங்க குழப்பம் அதிகரித்தது. ஒன்றிரண்டாய்த் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. போகும்போது இருந்த தூறலை ரசிக்கிற மனநிலை இப்போது இல்லை.

யோசித்து முடியாமல் வீடு வந்து விட்டது. இறங்கிக் கொண்டு எதுவும் சொல்லாமல் மௌனமாய்த் தலையாட்டினேன். அவர்களைக் கிளம்பச் சொல்லி நேரிடையாய்ச் சொல்ல முடியாது. அப்பா வெளியே வந்து விடக் கூடாதென்பதே என் வேண்டுதலாயிருந்தது.

சட்டென்று ப்ரியா, “ உள்ள வாங்க பெரியப்பா,” என்றாள். சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திராமல் உள்ளே நுழைந்து விட்டாள். ஒரு நொடி என்னைப் பார்த்த பெரியப்பா பின் எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தார். உயிர் போய் விடும் போலிருந்தது. இந்த ரயில் வேறு நேரம் காலம் தெரியாது கூவித் திரிந்து கொண்டிருந்தது.

வாசலில் அரவம் கேட்டு அம்மா தான் முதலில் வந்தாள். அதிர்ச்சியை மெல்ல மென்று முழுங்கியவள் “ வாங்கணா. வா பாஸ்கரு,” என்றாள் மெல்லிய குரலில். படி வரை வந்தவரை எப்படி வர வேண்டாமென்று சொல்வது என்பது தவிர அவள் வரவேற்க வேறு காரணங்களில்லை. பயம் அப்பிக் கிடந்தது அவள் கண்ணில்.

“தம்பி நடந்து வர்றன்னு சொன்னான். அதான் எதுக்கு நடக்கணும்னு நாங்க கூட்டினு வந்தோம். கல்யாணமெல்லாம் நல்லா நடந்துச்சா?” என்றார்.

“ஆங்… நல்லா… நடந்துச்சு,” என்றாள் அம்மா. குக்கர் விசிலடித்தது. இப்போது இந்த நொடி சோவென்று பெருமழை பெய்யத் துவங்கி பேச்சுக் குரல்களை அமுக்கி விடாதா என்றிருந்தது எனக்கு.

அப்பா வெளியில் வந்தார். நின்றிருப்பவர்கள் எல்லாரையும் பார்த்தார். பின் அப்பாவின் பார்வை பெரியப்பா மீது நிலை கொண்டது. சில நொடிகள். யுகங்களுக்கான மௌனங்களைத் தமக்குள் பொதிந்து வைத்திருந்த நொடிகள். மீண்டும் குக்கர் கத்தியது. “வா. எப்படிகீற” என்றார் அப்பா பெரியப்பாவைப் பார்த்து.

“ நல்லாகுறன். நீயி?” என்றார் பெரியப்பா.

“ நல்லாதான் இருக்குறன். வா வந்து உக்காரு,” என்றார். பெரியப்பா சுவாதீனமாய் அமர்ந்து கொண்டார்.  “கல்யாணத்துக்கு கூப்புட…” என்று தொடங்கிய அப்பாவை அவசரமாய் இடை மறித்து “அது பரவால்ல” என்றார் பெரியப்பா.

“எப்படிகிற பாஸ்கரு” என்றார் அப்போதுதான் பாஸ்கரைப் பார்த்த அப்பா.

“நல்லாகுறன் சித்தப்பா” என்றான் பணிவாய்.

பின் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு “புள்ளைக்கி கல்யாணம் ஆகிருக்குது. அதான் நம்ம வூட்டுக்கு சாப்புட கூப்புடலாம்னு. நாளைக்கி அனுப்பி வெக்கிறியா?” என்றார். இத்தனை உரையாடல்களின் இடையேயும் இருவரும் ஒருவரையொருவர் கண் பார்த்துக் கொள்ள தவிர்த்தனர்.

“அதுக்கென்னா. வருவான்” என்றார் அப்பா.

“செரி அப்ப நான் கெளம்பறேன்” என்று திரும்பியவர் மீண்டும் ஒரு முறை தயங்கி நின்றார். சட்டென்று அப்பாவின் பக்கம் திரும்பி அவர் தோளைத் தொட்டு, “நீயும் வாயேன். சம்சாரத்தையும் கூட்டினு வா. எல்லாரும் வாங்க. ரெம்ப நாளாச்சி” என்றார். இப்போது அப்பாவின் கண்ணை நேருக்கு நேர் பார்த்தார்.

“செரி என்னா வேல கீதுன்னு பாத்துகினு நாளிக்கி எல்லாரும் வந்துர்றோம். அண்ணியாண்ட சொல்லிரு,” என்றார் அப்பா. மெல்லத் தலையசைத்த பெரியப்பா வாசலை நோக்கி பாஸ்கருடன் நடந்தார்.

நான் பின்னாலேயே சென்றேன். திரும்பி, “வரேன் தம்பி. நாளிக்கி அப்பா அம்மா எல்லாரையும் இட்டுகுனு வந்துரு” என்றார். “சரிங்க பெரியப்பா” என்றேன். மஹை பெருந்தூறலாய் விழத் துவங்கியிருந்தது. கோவில் மணிச் சத்தம் தீனமாய்க் கேட்டது. குக்கர் மீண்டும் சத்தம் போட்டது.  பெரியப்பாவின் வண்டி கிளம்பித் தெருமுனை சென்று திரும்பி மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தேன். ரயில் சத்தம் கேட்கத் துவங்கியது.

காட்சிப்பொருள் – சரவணன் அபி கவிதை

சரவணன் அபி

ஏன் போக வேண்டும்
யாரும் வழியறியா ஓரிடம்
ஏறும் இறங்கும் பயணிகள்
கலையாத சாம்பல் முகங்கள்
இறப்பதற்காக காத்திருக்கிறார்கள்
இறப்பதற்காக போகிறார்கள்
எரித்துவிட்டு
எரிக்கப்பட வருகிறார்கள்
இருப்பதினிமித்தம் மரணம்
இருண்மையின்
இருநிலைகளினிடையே
இழப்பதற்கேதுமற்ற
இந்த மனமும் உடலும்
போர்க்களங்களிலும்
போரல்லாத களங்களிலும்
பகடைகளாக மடிந்துபோகும்
அத்தனை உடலங்களிலும்
மரிக்காது நினைவில்
தரிக்கும் இவை
அவரவர் பிறந்த பூமி
யாரெங்கிலும்
எங்கேயேனும்
பாடிவிடுங்கள்
நேற்று நேர்ந்ததே
நாளையுமென
ஆயிரம் கோடி
உயிர்களை மூட்டியெரித்த
எங்கள் சிதைகள்
இன்று எரியும்
இந்த மண்
எங்கள் நிலம்

எனதறைச் சுவர்கள் – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்

வான்மதி செந்தில்வாணன்

எனதறைச் சுவர்கள்
கரிக்கோல் மற்றும் வண்ணக்கோல் கொண்டு
பிஞ்சுவிரல்களால் அலங்கரிக்கப்பட்டவை.
எனக்கு மிக பிடித்தமானவை.
எவ்வளவு குமுறலுடன் நுழைந்தாலும்
ஆற்றுப்படுத்தலை
மிகவும் கெட்டிக்காரத்தனமாகச் செய்து வருபவை அவை.
எப்போதும் எனதறைச் சுவரோவியம் குறித்த
ஒரு மிதகர்வம் எனக்குண்டு.

நேற்று
இரயில்வே ஸ்டேஷனை ஒட்டியிருந்த
பொட்டல் வெளியில்
நான்கு குச்சிகள் நட்டு
சுற்றிலும் துண்டுச் சீலைகளைத் தொங்கவிட்டவாறு
குடியமர்ந்திருந்தன
சில குடும்பங்கள். குழந்தைகள் உட்பட.

நடுவயதுப் பெண்ணொருத்தி
கற்கள் கூட்டி அடுப்பு மூட்டி
அதன்முன் அமர்ந்திருந்தாள்.
கரித்துண்டைக் கையிலேந்திய பிஞ்சுகள்
அவளது வெண்முதுகில்
ஓவியம் தீட்டியபோது
எனதறைச் சுவர்கள் என் காதில்
மெல்ல கிசுகிசுத்தன,
“சுவர் மட்டுமே சுவரல்ல”.

oOo

என் தனியறைச் சுவர்கள் மிகவும் அச்சுறுத்துகின்றன.
பெரும்பாலும்,
என்னுடன் நேரம் செலவிடவே
பெரிதும் விரும்புகின்றன.
ஆம். என்னுடன் மட்டுமே.
தவிர, அறைத்தோழர்களுடன்
கலகலப்பாய் பேசிச்சிரிக்கையில்
சுவரின் மொத்த வெறுப்பும்
என்மீது படிகிறது.
இப்படித்தான்
ஒரு பகல் அலுவல் முடித்து
ஓய்வெடுக்கும் பொருட்டு
அறையினுள் திடுமென பிரவேசித்தபோது
நான்கு சுவர்களும் மெல்ல மெல்ல நகர்ந்து
எனை நெருக்கி
தம்மைத்தானே அதிபலத்துடன் பூட்டிக்கொண்டுவிட்டன.
எனக்கே தெரியாமல், இவ்வளவு நாள்
மரணத்துடன்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன் என்பதை
முதன்முறையாக உங்களிடம்தான் பகிர்கிறேன்.

மரணத்திற்கெதிரான கலகம்- ஜிஃப்ரி ஹாஸன் கவிதை

-ஜிஃப்ரி ஹாஸன் – 

என் வீட்டின் எல்லா மூலைகளிலும்
பதுங்கி இருக்கிறது
யாரும் விரும்பாத மரணம்
எல்லாவற்றின் முடிவையும்
அது நுட்பமாய் அறிந்து வைத்திருக்கிறது
கனவுகளிலிருந்து அது என்னைத் தூரப்படுத்துகிறது
ஒரு பெண்ணை நேசிப்பதிலிருந்தும்
கலவியிலிருந்தும் அது என்னை தள்ளிவைக்கிறது

மரணம் பதுங்கி இருக்கும்
வீட்டு மூலைகளுக்குள்ளிருந்து
அதை ஓலத்துடன் விரட்ட முனைகிறேன்

ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்
கதவின் சாவித்துவாரங்களிலிருந்து
சாவிகளைக் கழற்றி வைக்கிறேன்
சுவர்க்கண்களின் திரைச்சீலைகளை விலக்கி வைக்கிறேன்
மரணத்தை அச்சுறுத்தும் சமிக்ஞைகளை
இடைவெளியின்றி எழுப்புகிறேன்
வீட்டின் வளர்ப்புப் பிராணிகளை
கலவரம் செய்யத் தூண்டுகிறேன்
பிரார்த்தனைக் கூடத்தை நிரந்தரமாகத்
திறந்து வைக்கிறேன்
எல்லா சுவர்க்கண்களிலும்
ஊதுபத்திகள் எரிகின்றன
உச்சாடனங்களை இடைவிடாது முணுமுணுக்குமாறு
சுவர்ப்பல்லிகளிடம் கேட்கிறேன்

அது யாரையும் வெளியேற்றும் நுட்பத்துடன்
வீட்டின் சுவர்களில்
சிமென்ட் கலவையாய் ஒட்டியிருக்கிறது
மூலைகளில் இன்னும் பதுங்கித் திரிகிறது
நான் உன்மத்தம் பிடித்தவனாகி
என்னில் மீந்திருக்கும் அச்சத்தால்
என் காலத்தையும் தடுமாறச் செய்கிறேன்
மரணம் என்னை நெருங்காமலே
உன்மத்தம் கொண்டு நான் மரணத்தை நெருங்குகிறேன்

கூபோ – எஸ். சுரேஷ் சிறுகதை

எஸ். சுரேஷ்

நான் முதலில் பார்த்தது என் பெயரை. இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அவள் அந்த காகிதத்தை பிடித்துக்கொண்டிருந்தாள்.

“கூபோ ஸான்?” என்று நான் கேட்டவுடன். “ஹை”, “நீங்கள் தான்..” என்று என் பெயரை தப்பாக உச்சரித்தாள். நான் சிரித்தபடி, ‘எஸ்’ என்றேன்.

நரீதா விமானநிலையத்திலிருந்து நாங்கள் ஒரு ரயிலில் ஏறினோம். மணி இரவு ஏழு மணி. உயேனோ என்னும் ஸ்டேஷனில் ரயிலைவிட்டு இறங்கி இன்னொரு ரயிலை பிடித்தோம். வழி நெடுக எங்கும் வண்ண வண்ண மின்சார விளக்குகள் மின்னிக்கொண்டிருந்தன. அதை தவிர சிக்னலுக்காக நிற்கும் வண்டிகளின் விளக்குகள். நான் இது போன்ற காட்சியை இதுவரை பார்த்ததில்லை. ஒரு நீளமான தெரு முழுக்க விளக்குகள். சுவரில் ஏதோ டிவி ஸ்க்ரீன் போன்ற ஒன்று படத்தை காட்டிக்கொண்டிருந்தது. அந்த தெருவில் எங்கும் இருட்டு என்பது இல்லை. குதூகலத்துக்காகவே உருவாக்கப்பட்ட தெரு போல் இருந்தது. மனிதன் சொர்க்க லோகத்தை மண்ணுக்கு கொண்டு வரும் முயற்சி இது என்று எண்ணிக்கொண்டே, “வாவ்” என்று உரக்க கூவினேன். கம்பார்ட்மெண்டில் ஒரு சிலர் என்னை திரும்பி பார்த்தார்கள். எனக்கு வெக்கமாக இருந்தது. அவளை பார்த்து, “ஐ ஆம் ஸாரி” என்றேன்.

அவள் புன்னகைத்தாள், “இட் இஸ் ஓகே. இது கின்சா. எப்பொழுதும் கோலாகலமாக இருக்கும். நான் இந்த தெருவை முதலில் பார்த்தபொழுது இப்படித்தான் கத்தினேன்” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

“ஒ. நீ ஜபனீஸ் இல்லையா?”

மறுபடியும் சிரித்தாள். “நான் பிறந்து வளர்ந்தது ஒரு கிராமத்தில். படிப்பு முடிந்த பின் வேலைக்காக டோக்யோ வந்தேன்” என்றாள்

“ஜப்பானில் எல்லா இடங்களும் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்”

அவள் மறுபடியும் சிரித்தாள். “ஜப்பான் கிராமங்களை பார்த்தால் டோக்யோ வேறு ஒரு உலகம் என்பது புரியும்” என்றாள்

நாங்கள் இறங்கவேண்டிய கவாசாகி ஸ்டேஷனில் வண்டி நின்றது. அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்துக்கொண்டு நான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு சென்றோம். நான் செக் இன் செய்த பிறகு அவள் கிளம்பினாள். அடுத்த நாள் காலை வந்து என்னை அலுவலகத்துக்கு அழைத்து செல்வதாக சொன்னாள்.

“எல்லா ஜப்பான் பெண்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். நாளை உன்னை அடையாளம் கண்டுக்கொள்வேனா என்று சந்தேகமாக இருக்கிறது” என்று சொன்னவுடன் ‘களுக்’ என்று சிரித்துவிட்டு அந்த சிரிப்போடு இரண்டு முறை சிரம் தாழ்த்தி விடை பெற்று சென்றாள்.

அடுத்த நாள் காலை அவள் வந்து என்னை அலுவலகத்திற்கு அழைத்து சென்றாள். எனக்கு ஸ்டேஷனிலிருந்து நடந்து ஹோட்டலுக்கு நடந்து செல்ல வழி காட்டுவதற்காக மாலையில் என்னுடன் வந்தாள். நாங்கள் நடந்து செல்லும் வழியில் சாலையோரமாக சற்று வயதான பெண்மணி கையில் ஒரு ஹாண்ட்பாகுடன் நின்றுக்கொண்டிருந்தாள். மூஞ்சி முழுவதும் பவுடர் அப்பியிருந்தாள். யாருக்காகவோ காத்துக்கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டேன்.

“ஏன் இவ்வளவு பவுடர் பூசியிருக்கிறாள்? இங்கு மற்ற பெண்கள் எல்லாம் இது போல் பூசிக்கொல்வதில்லையே. இந்த வயதில் ஏன் இப்படி மேக்கப் செய்துக்கொண்டிருக்கிறாள்?” என்று கேட்டேன்

அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள் ஆனால் ஒன்றும் கூறவில்லை. அடுத்த நாள் ஜப்பானில் ஒரு வருடத்திற்கு மேலாக வேலை செய்துக்கொண்டிருந்த முருகானந்தத்திடம் இதை பற்றி கேட்டேன். “தெரிஞ்சாலும் நீ ஒண்ணும் செய்யமாட்டே” என்று சொல்லிவிட்டு உரக்க சிரித்தான். அன்று மாலையில் நான் திரும்பி செல்லும் பொழுது வேறொரு நடுவயது பெண்மணியை அதே இடத்தில் நிற்பதை பார்த்தேன். சாலையை கடந்து எதிர்புறமாக நடந்து சென்றேன்.

இரண்டு நாட்கள் கழித்து அவள் அலுவலகத்தில் என் மேஜை பக்கம் வந்தாள். “உன் அழகான முகத்தை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன” என்றேன். சற்று நாணினாள். இரண்டு முறை தலையை குனிந்து ‘நன்றி’ என்றாள். ‘இந்த சனிக்கிழமை ஹகானோ என்னும் இடத்துக்கு செல்கிறோம். நீ வருகிறாயா?” என்று கேட்டாள். “நீ அழைத்தால் நான் எங்கு வேணாலும் வருவேன்” என்றேன். மறுபடியும் புன்னைகத்தப்படி இரண்டு முறை தலையை குனிந்து நன்றி சொல்லிவிட்டு சென்றாள்.

சனிக்கிழமை கவாசாகி ரயில் நிலையத்தில் அவளை சந்தித்தேன். அவள் தன காதலனை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். அவனை அறிமுகம் செய்தாள். (அவன் பெயர் எனக்கு மறந்துவிட்டது.) “யூ ஆர் லக்கி. இவ்வளவு அழகான பெண் உனக்கு கிடைத்திருக்கிறாள்” என்று சொன்னேன். அவனுக்கு ஆங்கிலம் தெரியாது என்றாள் கூபோ. சிரித்துக்கொண்டே அவனிடம் ஜப்பான் மொழியில் ஏதோ சொன்னாள். அவன் சசிரித்தபடி என்னை பார்த்து “எஸ். எஸ்.” என்றான். இருவரும் ஒரே சமயத்தில் தலை குனிந்து நன்றி சொன்னார்கள். நானும் இரண்டு முறை தலை குனிந்தேன்.

“அந்த பெண்ணை பார்த்து எப்பவும் ஏண்டா ஜொள்ளு விடற. நீ வழியறதுக்கு ஒரு அளவே இல்லையா” என்று முருகானந்தம் ஒரு நாள் என்னிடம் கேட்டன். “சும்மா இருடா. நான் ஒண்ணும் வழியாலே”. “எவ்வளவு வழிஞ்சாலும் அந்த பெண் உன்னோடு வந்து பேசறா பாரு, அதுதான் ஆச்சரியமா இருக்கு. வேற பெண்கள் ஓடியிருப்பாங்க”. “ஒனக்கு பொறாமை” என்றேன்.

நான் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியிருக்கும். ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து, காப்பி கலந்து குடிப்பதற்கு தயாராக இருந்த போது யாரோ என் அரை கதவை தட்டினார்கள். நான் இரண்வாரங்களுக்கு முன் ஹோட்டலிலிருந்து ஒரு அபார்ட்மென்ட் ரூமுக்கு மாறியிருந்தேன். யாராக இருக்கும் என்ற குழப்பத்துடன் கதவை திறந்தேன். கூபோ நின்றுக்கொண்டிருந்தாள். நான் குஷியாக “ஹாய்” என்று சொல்ல வாயெடுத்தேன். அவள் முகத்தை பார்த்தவுடன் மௌனமானேன். அவள் முகம் வாடியிருந்தது. அவளை எப்பொழுதும் இன்முகத்துடன் பார்த்தே பழகிவிட்ட எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அவள் உள்ளே வரச்சொல்ல மறந்துவிட்டேன். “உள்ளே வரலாமா?” என்றாள். “வா வா வா” என்று அவளை உள்ளே அனுப்பி கதவை மூடினேன். அவளிடம் சென்று “என்ன நடந்..” என்று கேட்கும் முன் என்னை கட்டிக்கொண்டாள். கட்டிக்கொண்டவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தேன். இரண்டு நிமிடங்கள் கழிந்த பின், அவள் தன்னை விடுவித்துக்கொண்டு, “ஐ ஆம் ஸாரி. வெறி ஸாரி” என்று சொல்லிக்கொண்டே மூன்று நான்கு முறை தலை குனிந்து குனிந்து வணக்கம் செய்துவிட்டு, “நான் செல்லவேண்டும்” என்று சொல்லிவிட்டு கண்ணில் நீர் தளும்ப வேகமாக சென்றுவிட்டாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இரவு முழுவதும் இதன் அர்த்தம் என்ன என்று யோசித்தபடியே வெகு நேரம் தூங்காமல் இருந்தேன்.

அடுத்த நாள் அவள் என் மேஜைக்கு வந்து எப்பொழுதும் போல் சிரித்த முகத்துடன், “என்னுடன் லஞ்ச் சாப்பிட வருகிறாயா?” என்றாள். அருகில் இருந்த ஒரு இட்டாலியன் ஹோட்டலுக்கு சென்றோம். “இங்கு ச்பாகேத்தி அருமையாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு இருவருக்கும் அதை ஆர்டர் செய்தாள். பிறகு, “நேற்று நடந்ததை மன்னித்துவிடு. ஏன் காதலன் என்னை விட்டு பிரிந்து விட்டான். எங்களுக்குள் நேற்று பெரிய சண்டை வந்தது. கடைசியில் அவனை நான் வேணாம் என்று சொல்லிவிட்டேன். அவனும் நீ இல்லாமல் என்னால் இன்னும் நன்றாக வாழ முடியும் என்று சொல்லிவிட்டு சென்றான். எனக்கு அப்பொழுது யாரிடமாவது சென்று அழ வேண்டும் போல் இருந்தது. உன் ஞாபகம் வந்ததால் உன்னிடம் வந்தேன்” என்றாள். “ஒ. அப்படியா? எதற்காக உங்களுக்குள் சண்டை?” என்றேன். “காதலர்களுக்கு சண்டை சகஜம் தான்” என்றாள். “என்ன சண்டை?” என்று மறுபடியும் கேட்டேன். “நத்திங்” என்றாள்.

அவளை தினமும் பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ என்னுடன் இருக்கும் பொழுது அவளுக்கு மன நிம்மதி கிடைக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். அவளும் மறுபடியும் எப்பொழுதும் போல் சிரித்தபடி பழகினாள்.

ஒரு நாள் இரவு டின்னெருக்கு அவள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு ஜபனீஸ் ரெஸ்டாரன்டுக்கு சென்றோம். எங்களுடன் அவள் தோழி ஒருத்தி வந்தாள். அவர்கள் ஏதோ ஆர்டர் செய்தார்கள். நான் “எனக்கு வெஜிடேரியன் ஆர்டர் செய்யுங்கள்” என்றேன். “ஒ. நீ வெஜிடேரியனா?” என்று அந்த தோழி கேட்டாள். “இல்லை. ஆனால் ஜப்பானில் மாமிசம் சாப்பிடுவது கடினமாக இருக்கிறது. உப்பு காரம் எதுவும் இருப்பதில்லை. எங்கள் ஊரில் நல்ல மசாலா கலந்த சாப்பட்டை சாப்பிட்டுவிட்டு இங்கு இதை சாப்பிட முடியவில்லை. இந்த விஷயத்தில் எங்கள் ஊர் உங்கள் ஊரைவிட மேலானது” என்றேன். அந்த தோழி சிரித்தாள். “எந்த ஒரு பண்டத்த உண்ணும் போதும் அதன் சுவை தான் நாம் அறிய வேண்டும். எங்கள் சமையல் இந்த  கொள்கையை கொண்டது. நீங்கள் எல்லா பண்டங்களிலும் மசாலா சுவையை தான் காண்கிறீர்கள். அதற்கு தான் உங்களால் உண்மையை சட்டென்று கண்டு பிடிக்க முடிவதில்லை. எல்லாவற்றையும் மசாலா மறைக்கிறது” என்று கூறிவிட்டு சிரித்தாள். “அவள் தத்துவத்தில் டாக்டரேட் வாங்கியவள். அதனால் அப்படி பேசுகிறாள். நீ தவறாக நினைக்காதே” என்றாள் கூபோ. “அப்படியில்லை. இந்தியாவில் உண்மையை பற்றி ஆராய்ந்த பல தத்துவ ஞானிகள் இருக்கிறார்கள். வேதம் கொடுத்த ரிஷிகள், சங்கரர், ராமானுஜர், மாதவசாரியார்” எனக்கு இவர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள் என்று தெரியாவிட்டாலும் எல்லா பெயர்களையும் அடுக்கினேன். “இவர்கள் எல்லாம் மாமுனிவர்கள்” என்றேன். “அவர்கள் மசாலா இல்லாத சாப்பட்டை சாப்பிட்டிருப்பார்கள்” என்று கூறிவிட்டு அந்த தோழி சிரித்தாள்.

“அவள் சொல்லுவதெல்லாம் நீ பொருட்படுத்தாதே. அவள் எப்பொழுதும் அப்படிதான் எல்லோருடனும் வாக்குவாதம் செய்வாள்”. டின்னருக்கு பின் கூபோவுடன் அவள் வீட்டிற்கு வந்திருந்தேன். இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது. “அதை விடு. அதை நான் அப்பொழுதே மறந்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டு விளையாட்டாக, “உனக்கு அடுத்த காதலன் கிடைத்தானா இல்லையா?” என்று கேட்டேன். அவள் சிரித்துக்கொண்டே, “விரைவில் கிடைப்பான் என்று நம்புகிறேன்” என்று சொல்லிவிட்டு என்னை பார்த்தாள். “உன் போன்ற அழகான பெண்களுக்கு காதலர் கிடைக்கவில்லை என்றால் என்ன தேசம் இது. ஜப்பானிய ஆண்களுக்கு அழைகை மதிக்க தெரியாது போலிருக்கிறது”. “ஜப்பானிய காதலான் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லையே” என்றால். “அதவும் சரிதான். இங்கு அமெரிக்கர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்றேன். “சரி, நான் கிளம்பவேண்டும். விடை பெறுகிறேன்”.

“மணி பதினொன்றை தாண்டிவிட்டது. நீ இங்கேயே படுத்துக்கொள். நாளை சண்டே தானே. மெதுவாக எழுந்து ரூமுக்கு செல்லலாம்” என்றாள். “ஐயோ வேண்டாம். நான் இங்கு இருந்தால் பக்கத்தில் இருப்பவர்கள் ஏதாவது தவறாக நினைத்துக்கொள்வார்கள்.” “இங்கு யாரும் ஒன்றும் நினைத்துக்கொள்ளமாட்டார்கள். அவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை.” “ஆனால் எனக்கு உன்னை பற்றி கவலை இருக்கிறது. யாரும் உன்னை பற்றி தவறாக நினைக்ககூடாது. நான் இப்பொழுது செல்கிறேன். நாளை ஆபீஸில் சந்திப்போம்” என்று புறப்பட்டேன். செல்லும் முன், “நீ இந்த ட்ரஸில் ஒரு ஏஞ்சல் போல் இருக்கிறாய்” என்றேன். அவளுக்கு மகிழ்சியை அடக்கிக்கொள்ள முடியவில்லை. என்னை சட்டென்று கட்டிக்கொண்டு ‘தாங்க்யு, தாங்க்யு” என்றாள்.

நாங்கள் தினமும் சந்திப்பதும், ஒன்றாக சாப்பிட போவதுமாக இன்னும் ஒரு மாதம் கடந்தது. டோக்யோவில் பல இடங்களை எனக்கு காட்டினாள். இப்பொழுது நான் இந்தியா திரும்பும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. “நீ சென்று விட்டு மறுபடியும் வருவாயா?” என்று கேட்டாள். “ஆம். ஒரு மாதம் கழித்து வரவேண்டும். வந்து இங்கு மூன்று மாதம் வேலை செய்யா வேண்டும்”

“அப்படியென்றால் இந்த பிரிவு நிரந்தரமில்லை” என்று சிரித்துக்கொண்டே கூறினாள். “நீ செல்வதற்கு முன் நான் உன்னால் மறக்கமுடியாத பரிசு ஒன்றை கொடுக்க போகிறேன்.”

“அப்படியா. என்ன அது”

“நீ ஊருக்கு என்று கிளம்புகிறாய்?”

“வரும் சனிக்கிழமை”

“நான் வெளிக்கிழமை மாலை உன் ரூமுக்கு வந்து அந்த பரிசை கொடுக்கிறேன்”

வெள்ளிகிழமை மதியம் நண்பன் மோகன்ராஜ் ரூமுக்கு வந்திருந்தான். நான் பாக் செய்ய உதவி செய்துவிட்டு அடுத்த நாள் வழி அனுப்பிவிட்டு செல்வதற்காக வந்திருந்தான்.

மாலை ஏழு மணி அளவில் அழைப்பு மணி ஒலித்தது. கதவு சற்று திறந்து வைத்திருந்தேன். கதவை திறந்து கூபோ ரூமுக்குள் நுழைந்தாள். வேகமாக என்னை நோக்கி வந்தாள். அவள் ரொம்ப மகிழ்சியாக இருந்தாள் என்று அவள் முகம் காட்டியது. அப்பொழுது பாத்ரூமை விட்டு மோகன்ராஜ் வெளியே வந்தான். அவனை கண்டதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது போல் இருந்தது.

நான் உரக்க சிரித்துவிட்டேன். “பயப்படாதே. இவன் என் நண்பன். என்னுடன் இன்று இரவு இருந்துவிட்டு நாளை என்னை வழியனுப்ப வந்திருக்கிறான்.”

“ஒ” என்றாள். அவள் முகத்தில் மகிழ்ச்சி மறைந்து விட்டிருந்தது. பயத்திலிருந்து இன்னும் அவள் மீளவில்லை என்று நான் நினைத்துக்கொண்டேன்.

நான் சாமான்களை பெட்டிக்குள் அடக்கிக்கொண்டு அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவள் அதிகம் பேசவில்லை. ஊர் திரும்பி செல்லும் உற்சாகம் என்னிடம் இருந்தது. நான் பேசிக்கொண்டே வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஞாபகம் வர, “நீ ஏதோ எனக்கு அன்பளிப்பு கொடுக்க போவதாக சொன்னாயே? என்ன அது” என்றேன்.

அவள் முகம் குழப்பத்தில் இருந்தது போல் எனக்கு தோன்றியது. அவள் தன் கைப்பைக்குள் தேட ஆரம்பித்தாள். ஒரு பேனாவை எடுத்து, “இது நான் சிறு வயது முதல் உபயோகித்த பேனா. இதை பத்திரமாக வைத்துக்கொள்” என்றாள். நான் மறக்கமுடியாத பரிசு என்றால் ஏதோ காஸ்ட்லி ஐடம் இருக்கும் என்று நினைத்தருந்தேன். இதை கண்டவுடன் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அது என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும், “உனக்கு பிடிக்கவில்லையா?” என்று கேட்டாள். “இல்லை இல்லை நன்றாக இருக்கிறது”, என்றேன்.

“நான் குளித்துவிட்டு வருகிறேன். நீ எங்களுடம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு செல்” என்றேன். “இல்லை நான் இப்பொழுது கிளம்ப வேண்டும். எனக்கு வேறு வேலை இருக்கிறது”.

நான் லுங்கியில் இருந்ததால் மோகன் அவளுடன் வெளியே சென்றான். அவளை ஸ்டேஷன் வரை விட்டுவிட்டு வருவதாக சொன்னான். நான் குளித்துவிட்டு வெளியே வந்தபொழுது மோகன் ரூமில் இருந்தான். “ஏன்டா. அந்த பெண் ரொம்ப கோவத்துல இருந்தா. என்னை கூட வரவேண்டாம்னு ரொம்ப கறாரா சொன்னா. அவ குரலை கேட்டா அழுதுவிடுவா போல இருந்தது. சரின்னு நான் அவளோட போகல”

“அவ எப்போவும் சிரிச்ச மாதிரி தான் இருப்பா. கோவமா எதுவும் பேசமாட்ட. நீ எதாவது அவகிட்ட பேசினாயா?”

“நான் பேசவே இல்லடா”

இந்தியாவுக்கு திரும்பிய பிறகு கூபோவுடன் தொடர்பு அறுந்து போனது. என்னை வேறு ப்ராஜெக்ட்டுக்காக அமெரிக்கா அனுப்பினார்கள். மூன்று வருடங்களுக்கு மேல் அமெரிக்காவில் வேலை செய்தேன். ஒரு நாள் மதியம் உணவு உண்ணும் பொழுது சட்டென்று அவள் எதற்காக அன்று மோகனிடம் கோபமாக பேசினாள் என்பது புரிந்தது.