காட்சிப்பொருள் – சரவணன் அபி கவிதை

சரவணன் அபி

ஏன் போக வேண்டும்
யாரும் வழியறியா ஓரிடம்
ஏறும் இறங்கும் பயணிகள்
கலையாத சாம்பல் முகங்கள்
இறப்பதற்காக காத்திருக்கிறார்கள்
இறப்பதற்காக போகிறார்கள்
எரித்துவிட்டு
எரிக்கப்பட வருகிறார்கள்
இருப்பதினிமித்தம் மரணம்
இருண்மையின்
இருநிலைகளினிடையே
இழப்பதற்கேதுமற்ற
இந்த மனமும் உடலும்
போர்க்களங்களிலும்
போரல்லாத களங்களிலும்
பகடைகளாக மடிந்துபோகும்
அத்தனை உடலங்களிலும்
மரிக்காது நினைவில்
தரிக்கும் இவை
அவரவர் பிறந்த பூமி
யாரெங்கிலும்
எங்கேயேனும்
பாடிவிடுங்கள்
நேற்று நேர்ந்ததே
நாளையுமென
ஆயிரம் கோடி
உயிர்களை மூட்டியெரித்த
எங்கள் சிதைகள்
இன்று எரியும்
இந்த மண்
எங்கள் நிலம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.