Author: பதாகை

வாழ்ந்ததன் பொருள்: பறவையும் தாழ்ந்தாடும் மரக்கிளையும் – நித்ய சைதன்யா

வாழ்வாசை ஒருபோதும் மனிதர்களை கைவிடுவதில்லை. விரும்பி தன்னை முடித்துக் கொள்பவர்கள் இங்கு மிக அரிதிலும் அரிதே. வழங்கப்பட்டதை கடைசித்துளிவரை உறிஞ்சிக் குடித்துவிடவேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். அத்தனை பேருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுகிறதா என்ன? எத்தனை துய்த்த பின்னும் மனம் மீண்டும் நுகரும் வேட்கையால் அலையாடிக் கொண்டே இருக்கிறது. எல்லா ஆசைகளும் முதலில் ஒரு துளியென இம்மண்ணில் விழுகின்றது. வேரோடி வாழும் நிலத்தை ஆரத்தழுவியபோது இது நிரந்தரம் என்றும் இன்னும் அதிகக்காலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் நம்புகிறோம். அதனால் ஓயாமல் லௌகீக காரியங்களில் நம்மை இழக்கிறோம். செய்கின்ற அனைத்தும் நம் விருப்பம் ஒன்றினால் மட்டுமே நிகழ்கிறதா?

எக்கணமும் நம் வாய்ப்பு காலாவதியாகலாம். காலடி மண் இல்லாமலாகி பறத்தலின் சாமான்யம் விதிக்கப்பட்டு மீண்டும் இங்கு நிகழ்வனவற்றை கண்ணாடியின் அப்புறம் நின்று வெறிக்கும்போது நம்மால் என்ன செய்துவிட முடியும்? விடைபெற்றுக் கொள்ளும் மனநிலையை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. நம் காற்றை நிறுத்தும் கணம் எங்கிருக்கிறது? எப்படி அதன் தருணமறிந்து நம்மைத்தேடி அடைகிறது? இத்தனை நுண்ணிய நீர்த்துளிகளை பேராழி கணக்கில் வைத்துள்ளதா? பேராழி என்பதே நுண்ணிய நீர்த்திவலைகளின் தொகைதானோ? தொகுப்பதும் பகுப்பதும் எவரின் கரம்?

ஒரு மரணம் நிகழும்போது ஒரு பறவை பறந்து செல்கிறது, தொடுவானம் தாண்டிய தொலைவிற்கு. இனி ஒருபோதும் அது மீண்டு வருவதில்லை. தாழ்ந்தும் உயர்ந்தும் தவித்தாடும் மரக்கிளையே அப்பறவை இருந்ததற்கான பருப்பொருள் சாட்சி. வந்தமரும் பறவையை ஆடி ஓயும் மரக்கிளை எவ்வாறு எதிர்கொள்கிறது? அமர்தலும் பறத்தலும் தவித்தாடுதலும் உலக இயல்பு என்றறியும் கணம் புன்னகையாக அன்றி வேறென்னவாக விரியும்? மரணத்தை எதிர்கொள்ள தர்க்கத்தைவிட சிறந்த கேடயம் வேறு உண்டா?

ஒற்றைச் சிலம்பு

தருணாதித்தன் – 

உமாவுக்கு உருளி என்று ஒரு பாத்திரம் உண்டே அந்த உருளியை வாங்க வேண்டும் என்று வெகு நாட்களாக தீராத ஆசை. உருளி பழைய கால மீனாட்சியம்மாள் சமையல் குறிப்புகளில் திரட்டுப்பால் செய்ய “வாயகன்ற உருளியில் எட்டு ஆழாக்கு பாலை ஊற்றி, சுண்டக் காய்ச்சி, துருப்பிடிக்காத தோசைத்திருப்பி அல்லது தேய்ந்த சாதக் கரண்டியால் விடாமல் கிளறி ” என்று வரும். தற்காலத்தில் உருளியில் தண்ணீர் ஊற்றி வண்ணப்பூக்களை அதில் மிதக்க விட்டு அலங்காரமாக வைப்பது வழக்கமாகி இருக்கிறது. உமா அதற்கு பார்வையாக ஒரு நல்ல உருளி வேண்டும் என்று வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தாள்.

அவள் சினேகிதி லீலா அந்த மாதிரி வேலைப்பாடுள்ள நேர்த்தியான உருளி வேண்டுமானால் கேரளத்தில்தான் கிடைக்கும் என்றும், உள்ளூர்க் கடைகளில் கிடைப்பது எல்லாம் சரியான அமைப்பு இல்லை, அப்படி சமச்சீராக இல்லாமல் வார்த்த பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்தால் சீன வாஸ்து சாஸ்திரப்படி சொத்து நஷ்டமாகும் என்று கேட்காமலேயே ஆலோசனை கொடுத்தாள். டிஸம்பர் கடைசியில்தான் எல்லோருக்கும் லீவு அமைந்து கொச்சினுக்கு போக முடிந்தது.

ஃபெர்ரியில் ஏறி மட்டாஞ்சேரியில் இறங்கிய உடனேயே நிறைய கடைகள் ,ஆனால் ஏனோ ஒரு கடை ஈர்த்தது. வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்த கடை ஆளும் காரணமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குளித்து விட்டு வந்தது போல ஒளி முகம், அதில் நிறைந்த புன்னகை, படிந்து வாரிய ஈரத்தலை, நெற்றியில் விபூதி, கை மடித்து விட்ட வெள்ளைச் சட்டை, அகலக் கரையுடன் வெள்ளை வேட்டி, எழுந்து வந்து வழியை மறித்து அவன் கடையைத் தாண்டிப் போக விடவில்லை.

ஒரு பாரம்பரியமான வீட்டையே கடையாக்கி இருந்தார்கள். வாசலில் திண்ணையிலிருந்து, உள்ளே ரயில் பெட்டிகள் மாதிரி நீளமாக இருந்த பல அறைகள் முழுவதும் பழங்காலப் பொருட்கள்தான். வண்ணக் கண்ணாடி தொங்கும் விளக்குகள், நிலைக் கதவு, பணப் பெட்டி, சிற்பத் தூண்கள், ஊஞ்சல் பலகை, அப்பக் காரை, பித்தளை வெற்றிலைப் பெட்டி, அளக்கும் படி, கிளிக்கூண்டு, நிற்கும் ஆளுயர கடியாரம், மரச் சிற்பங்கள், பெரிய மண் ஜாடிகள், சட்டம் போட்ட கட்டில், பித்தளை டெலிஸ்கோப் என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத பொருட்கள் இறைந்து கிடந்தன.

சில பொருட்களுக்கு விலை ஒட்டி இருந்தது. உமாவுக்கு உருளிகளின் விலை அத்துப்படி ஆகி இருந்தததால், முதலில் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாள். திருப்திகரமாக இருந்தது. மிக அதிகம் இல்லை. அவற்றில் ஒன்றை எடுத்து நல்ல வெளிச்சத்தில் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள். லட்சணமாக இருந்தது. ஓரங்கள் எல்லாம் சுத்தமாக இருந்தது. கைப்பிடிகளில் சித்திர வேலைப்பாடு அழகாக இருந்தது. பல நாட்களாக தேடிக்கொண்டிருந்தது இவ்வளவு சீக்கிரம், திருப்தியாக, அதுவும் நல்ல விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியினால் கண்கள் விரிந்து, குரல் சற்று மிகுந்தது, உடலில் ஒரு விசை ஏறியது. கடை ஆள், நுட்பமாக அதை கவனித்திருக்க வேண்டும். வேறு சில பொருட்களைக் காட்ட ஆரம்பித்தான். “இதோ பாருங்கள், உருளி வைக்கும் இடத்துக்கு மேலே தொங்க விட சர விளக்கு”. உமாவுக்கு அதில் அவ்வளவு இஷ்டமில்லை. அவள் பார்வை சுற்றிலும் அலைந்தபோது ஒரு கணம் அந்த பெரிய பெட்டியின் மேல் நிலைத்தது.

பித்தளைப் பூண் போட்டு, கரும் பழுப்பு நிறத்தில் எண்ணெய் தேய்த்தது மாதிரி மினுக்கியது. உடனே அவன் ஆரம்பித்து விட்டான். இப்போதெல்லாம் இந்த மாதிரி பெட்டி மிகவும் போகிறதாம். வீட்டில் ஹாலில் வைத்து அதன் மேல் சின்ன பித்தளைப் பொருட்களை வைக்கிறார்களாம். உடனேயே சில பொருட்களை வைத்து அலங்காரம் செய்து காட்டினான். ஒரு கஜ லக்ஷ்மி விளக்கு, தூபக்கால், ஒரு பாக்கு வெட்டி, ஒரு பித்தளைக் கரண்டி நடுவில் ஒரு இடம் காலியாக இருந்தது. அவன் சுற்றிலும் தேடி ஒரு வட்டமான பெரிய வளை போல ஒன்றை கொண்டு வைத்தான். வரி வரியாக மணிகளுடன் வேலைப்பாடுடன் அதுவும் நடுவில் பொருத்தமாக இருந்தது. இப்படியாக அந்த பெட்டி மிக அழகாக அமைந்தது. உமாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதிகம் பேரம் இல்லாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விட்டாள்.

உமா வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலை உருளிக்கு நல்ல இடம் பார்த்து வைத்தாள். உள்ளே நுழைந்தவுடன் பார்வையான இடம். அதில் மலர்கள், நடுவில் வெள்ளி தீபம் மிதக்க, வீடே மங்களமாக இருந்தது. பெட்டிக்குத்தான் சரியான இடம் கிடக்கவில்லை. டெலிவிஷன், கண்ணாடி ஷோ கேஸ், டெலிபோன், பத்திரிகை வைக்கும் ஸ்டாண்டு என்று ஏற்கெனவே ஹால் அடைசலாக இருந்தது. ஒரு வேளை பெட்டியை அவசரப்பட்டு வாங்கி விட்டோமோ என்று தோன்றியது. கடைசியாக புத்தக அலமாரியை வேறு அறைக்கு மாற்றி, ஹாலிலேயே இடம் அமைந்தது. எல்லாம் சேர்ந்து வீடு பொலிவாக இருப்பதாக உமாவுக்குத் தோன்றியது. தானே வேறு வேறு கோணங்களில் நின்று, அமர்ந்து பார்த்து மகிழ்ந்து போனாள். அடுத்தது யாரிடமாவது காட்டாவிட்டால் மகிழ்ச்சி பூர்த்தி ஆகாது என்று தோன்றியது.

முதலில் பக்கத்து வீட்டு லக்ஷ்மி வந்திருந்தாள், முகத்தில் பவுடர் வியர்க்க, எங்கோ போகும் அவசரத்தில். சாவியைக் கொடுத்து விட்டு உள்ளே வராமலேயே போய் விடுவாளோ என்று உமாவுக்கு ஒரு சிறு கலக்கம். வந்தவள் வாசலிலேயே உருளியையும் பெட்டியையும் பார்த்து ஒரு கணம் நின்று விட்டாள். ” அட, எப்ப வாங்கின இதெல்லாம்? ” என்று கேட்ட உடனேயே, உமாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் போகிற போக்கில் லக்ஷ்மி “இங்க இருக்கற நிலமைல உருளிய தேய்க்கறத்துக்கு முடியுமா, வேலைக்கு ஆளே சரியாக இல்லை, நம்மால முடியாதுப்பா” என்றாள்.

முதலில் அவள் பொறாமையால் சொல்கிறாள் என்று தொன்றினாலும் சரிதான் என்று தோன்றியது. செல்வி தினமும் வருவதே லேட், அவள் கணவன் வேலுச்சாமி வேலை எதுவும் இல்லாமல் தினமும் குடித்து விட்டு அவர்கள் இருந்த பேட்டையில் ரௌடியாகத் திரிந்து கொண்டு இருந்தான். ஏதாவது காரணம் சொல்லி பாதி நாள் வரமாட்டாள். உமாவுக்கு அவளுடன் அதிக நாட்கள் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனாலும் பல வருடங்களாக பழகினவள், வேலை சுத்தம் என்று வேறு ஆள் பார்க்க இஷ்டம் இல்லை.

புதிய பொருட்களை மற்ற எல்லோருக்கும் காண்பிக்கலாம் என்று யோசித்து, வெள்ளிக்கிழமை அன்று நிறைய பேரை ஏதோ பூஜை என்று அழைத்தாள். லீலா உருளியைப் பார்த்து அதுவும் கேரளத்தில் வாங்கியதை உறுதி செய்து கொண்டு, நல்ல லட்சணமாக இருப்பதாக சொன்னாள். அடுத்தது பெட்டியின் மேல் இருந்த பொருட்களை பார்த்துக் கொண்டு வந்தவள், அந்த வளையைப் பார்த்ததும் ஒரு மாதிரி நெற்றியைச் சுருக்கினாள்.

” இது என்ன தெரியுமா? ” என்றாள்.

“ஏன், இது ஏதோ வளை போல வேலைப்பாடாக இருக்குன்னு வாங்கி வந்தேன்”

“இதெல்லாம் வீட்டில் வைக்க மாட்டார்கள். இது ‘செலம்பு’ன்னு சொல்லுவோம், வெளிச்சப்பாடு கையில வெச்சுட்டு ஆடறது” என்றாள். ‘செலம்பு’ என்றபோது ச்செலம்பு என்று அழுத்தியபடி. உமா சரி இது தமிழில் சிலம்புன்னு சொல்வோமே அந்த மாதிரி என்று புரிந்து கொணடாள். ஆனால் ஏன் சிலம்பை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டாள். ஒரு வேளை ஒற்றைச் சிலம்பினால் கண்ணகி கதை மாதிரி ஏதாவது இருக்குமோ என்று நினைத்தாள். லீலா விவரமாக ஆரம்பித்தாள். வெளிச்சப்பாடு என்பவன் பகவதி கோவில்களில் சாமியாடி மாதிரியாம். சிவப்பு ஆடை அணிந்து ஒரு கையில் மணி கட்டிய வாளும் இன்னொரு கையில் சிலம்பும் ஏந்தி விரிந்த கூந்தலுடனுடன் தாளத்துக்கு இசைந்து ஆடுவானாம். ஆட்டம் அதிகமாகி வெறி கொண்டு, வாளால் அவன் தன் தலையிலேயே ரத்தம் வரும்படி காயப்படுத்திக்கொண்டு ஆடுவானாம். ஆடும்போது அவன் பேசுவது பகவதி வாக்காம். இந்தக் காலத்திலெல்லாம் பகவதி கோவில்களில் திருவிழா முன் போல நடப்பதில்லையாம், பல வெளிச்சப்பாடு ஆட்கள் அதிக வருமானமில்லாமல் அந்தத் தொழிலையே விட்டு விட்டார்களாம். அவள் கடைசியாக அருகில் போய் தொடாமல் உற்றுப் பார்த்து, “இதோ பார் இதெல்லாம் ரத்தக் கறை, எந்த வெளிச்சப்பாடு சோற்றுக்கு வழி இல்லாமல் இதை விற்றானோ, இதெல்லாம் வீட்டில் வேண்டாம்” என்று அடித்துச் சொல்லி விட்டாள். உமாவுக்கு லீலா வழக்கம் போல ஏதோ கதை விடுகிறாள் என்றுதான் நினக்கத் தோன்றியது. அவள் அடிக்கடி யக்ஷிகள், மோகினி, குட்டிச் சாத்தன் என்று நேரில் பார்த்துப் பழகின மாதிரி பேசுவாள்.

உமா அன்று மாலையே ரமேஷிடம் அவன் அலுவலகத்திருந்து வந்தவுடன் சொன்னாள், அவன் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டே அரை குறையாகக் கேட்டு, இதெல்லாம் என்ன பழங்காலம் மாதிரி கதை என்றான். உமாவும் அதிகம் கவலைப் படவில்லை.

முதல் சம்பவம் அடுத்த வெள்ளிக்கிழமை காலை நடந்தது. படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்தே சின்னப் பெண் சண்டி. வென்னீர் சூடு பற்றவில்லை என்று அழுகைக் குளியலுக்குப் பிறகு, ஸ்கூல் சீருடைக்குள் திணித்து, தலையை வாரி, பொட்டு வைத்து அவளைத் தூக்கி பெரிய கண்ணாடியில் காண்பித்து,

” அழாத கண்ணு, இதோ பார் , சின்னு எவ்வளவு அழகு தெரியுமா ?”
சொல்லி முடிப்பதற்குள், பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணாடி திடீரென்று ஒரு ஓரத்திலிருந்து ஆரம்பித்து பெரிய விரிசல் விட்டு உடைந்து போனது. பயந்து போய் சின்னுவை இறக்கி விட்டு சுற்று முற்றும் பார்த்தாள், ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள், கல் எதுவும் விழவில்லை. ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். உமாவுக்கு அதிர்ச்சியில் வியர்த்து விட்டது. அவசரமாக சின்னுவை கொண்டு போய் ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் விட்டு விட்டு, வீட்டுக்கு வந்து அவளுடைய அம்மாவுக்கு ஃபோன் செய்தாள். அம்மா சந்தேகமில்லாமல் சொல்லி விட்டாள் – கண்ணாடி ஒரு மங்கலப் பொருள், வெள்ளிக்கிழமை அதுவும் தை வெள்ளிக்கிழமையில் உடைவது நல்லது இல்லை. ரமேஷ் குளித்து வந்தவுடன், அவனைத் தலை துடைக்கக்கூட விடவில்லை.

“ரமேஷ், இந்தக் கண்ணாடியப் பாருங்க, இப்ப நான் சின்னுவ ட்ரெஸ் பண்ணிட்டு அவளுக்கு காமிச்சிட்டிருந்தேனா, பார்க்கும்போதே விரிசல் விட்டு உடைஞ்சிடுச்சு ”

அவன் கண்ணாடி அருகே போய் ஆராய்ந்தான். விரிசல் ஆரம்பித்த்த இடம் கண்ணாடியை பொருத்தி இருந்த ஒரு ஸ்க்ரூவில்.

“இதோ பார் இந்த ஸ்க்ரூவை அதிகமாக அழுத்தி இருக்கிறது. இப்படித்தான் சமமா அழுத்தம் இல்லா விட்டால் ஒரு பக்கம் உடையும் ”

” இது நம்ம வீட்டில மூணு வருஷமா இருக்கு, எப்பவோ ஆகி இருக்கணுமே”

உமாவுக்கு ஒரு வேளை அந்தச் சிலம்பால் இருக்குமோ என்ற சந்தேகம் வந்து விட்டது.

அடுத்த சம்பவம் ரமேஷின் பிறந்த நாள் அன்று நடந்தது. அவனுடைய அம்மாவும் அப்பாவும் முதல் நாளே வந்து விட்டார்கள், ரமேஷின் அண்ணா வீட்டிலிருந்து. காலையிலேயே எல்லோரும் குளித்து கோவிலுக்குப் போக வேண்டும் என்பதால் சீக்கிரமே எழுப்பி வரிசையாக குளிக்க அனுப்பி, கடைசியாக மாமியாரை அனுப்பினாள். அரை மணிக்கும் மேல் ஆயிற்றே என்று பாத்ரூம் கதவைத் தட்டினால் பதிலே இல்லை. கூர்ந்து கேட்டால் முனகும் சத்தம் கேட்டது. கதவை பலமாக தள்ளி, தாழ்ப்பாள் உடைந்து திறந்தால், ரமேஷின் அம்மா அலங்கோலமாக தரையில். கை கொடுத்தால் கூட எழுந்திருக்க முடியவில்லை. இரண்டு பேராக சேர்ந்து தூக்கி வந்து படுக்க வைத்து, டாக்டரை வரவழத்து, அவர் ஃப்ராக்சர் இருக்குமா என்று பார்க்க எக்ஸ் ரே எடுக்க ஆம்புலன்ஸ் வரவழைத்து, மாடிப் படிகளில் ஸ்ட்ரெச்சரைத் தூக்கி, கடைசியில் நல்ல வேளையாக மிக லேசான விரிசல்தான் எலும்பு உடையவில்லை, இரண்டு மாதம் ஓய்வில் இருந்தால் சரியாகி விடும் என்ற முடிந்த போதுதான் நிம்மதி ஆனது. ஆனாலும் ஒரு வாரத்துக்குள்ளேயே எல்லோரும் படாத பாடு பட்டார்கள்.

செல்வி வழக்கம் போல பாதி நாட்கள் வரவில்லை. வேலுச்சாமி கார்ப்பரேஷன் தேர்தலுக்கு நிற்கப் போகிறானாம். அவளுடைய வீட்டிலேயே நிறைய வேலையாம். வேலைக்காரி சௌகரியம் இல்லாததால், உமா கஷ்டப்படுவதைப் பார்த்து, அவர்கள் ஒரு ஆம்புலன்ஸ் வைத்துக் கொண்டு ரமேஷின் அண்ணா வீட்டுக்குத் திரும்பப் போய் விட்டார்கள். பேச்சு வாக்கில் லீலாவிடம் இதெல்லாம் விவரித்த போது அவள் சொன்னாள் “நான் சொல்றேன்னு தப்பா நினச்சுக்காத, எனக்கெனமோ எல்லாமெ அந்தச் செலம்பாலதான்னு தோணுது, வீட்டில வயசானவங்கள ரெண்டு நாள் கூட தங்க விடல பாரு, இங்க அய்யப்பன் கோவில்ல தந்த்ரி இருக்கார், அவர் சோழி உருட்டிப் பார்த்து சொல்லிடுவார், இப்படியே விட்டா உங்க வீடு மட்டும் இல்ல நம்ம அபார்ட்மென்ட்டுக்கே ஏதாவது வரும்’ என்றாள். உமாவுக்கு பயமாக இருந்தது. ரமேஷிடம் சொன்னபோது அவன் சோழி விவகாரத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

மூன்றாவது சம்பவம் விரைவில் வந்தது. அதுவும் லீலா சொன்னபடியே. ஒரு நாள் பைப்பில் தண்ணீரில் ஏதோ கெட்ட வாடை லேசாக ஆரம்பித்தது. முதலில் வழக்கம் போல ஒரு நாள் தண்ணீர் வராமல் இருந்து, பைப் எல்லாம் காலி ஆகி மறு நாள் வரும்போது, அழுக்கு, இரும்புத்துரு எல்லாம் சேர்ந்து வாடை வருவதுண்டு. அந்த மாதிரிதான் ஏதோ என்று நினைத்தாள். மறு நாள் அதிகமாகப் போகவே, உமா மேலே மொட்டை மாடிக்குப் போய் ஒவர் ஹெட் டாங்கைப் பார்க்கப் போனாள். டாங்கின் மூடி வைக்கும் ஸ்லாப் திறந்து கிடந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் ஏதோ கருப்பாக மிதந்து கொண்டிருந்தது, கீழே போய் டார்ச் கொண்டு வந்து வெளிச்சம் போட்டுப் பார்த்தால் ஒரு காக்கை. லீலா பார்த்த உடனேயே சொன்னாள் ” அதுவும் பார் அண்டங்காக்கா, கழுத்து முழுக்க கருப்பா இருக்கு, நான் முதல்லயே சொன்னேனில்ல, இதுக்கு எங்க ஊரில என்ன சொல்வோம் தெரியுமா “, அதற்கு மேல் கேட்கவில்லை உமாவுக்கு கிலியாகி விட்டது.

வீட்டுக்கு வந்ததும் உமாவுக்கு அந்தச் சிலம்பைத் தொலைத்து விட வேண்டும் என்று தோன்றியது. தொடாமல், ஒரு குச்சியால் அதை எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் போட்டாள். அப்படியே பால்கனியிலிருந்து தூக்கி எறியலாமா என்று தோன்றியது. அது திரும்ப காம்பவுண்டுக்குள்தான் விழும். கீழே கையில் எடுத்துச் செல்ல பயமாக இருந்தது. குளியல் அறை பக்கத்தில் தூக்கி எறிய வைத்திருந்த பிற சாமான்களுடன் வைத்து விட்டு நன்றாக சோப்புப்போட்டு கை கழுவினாள். இத்தனை நாள் வீட்டில் இருந்தது, இன்னும் ஒரு இரவில் ஒன்றும் ஆகக்கூடாது என்று நினைத்தாள். காலையில் செல்வி எடுத்து கீழே மற்ற குப்பைகளுடன் போட்டு விடுவாள், வாரத்துக்கு ஒரு தடவை வரும் கார்ப்பரேஷன் லாரியில் எங்காவது போய்த் தொலைந்து விடும்.

அடுத்த நாள் செல்வி நேரத்துக்கு வந்து விட்டாள். வேலுச்சாமி இப்போது கார்ப்பரேஷன் தேர்தலில் மூழ்கி இருப்பதால் குடி எல்லாம் குறைந்திருக்கிறதாம். அவளிடம் மறக்காமல் அந்தக் ப்ளாஸ்டிக் கவரை குப்பையில் போடச் சொன்னாள். அதற்கு அடுத்த நாள் செல்வி வரவில்லை. நாலு தடவை ஃபோன் செய்த பிறகு எடுத்தாள். அவள் வேலுச்சாமி தேர்தலுக்கு நிறைய உதவி செய்கிறாளாம். அடுத்த வாரம் வருவதாக சொன்னாள்.

நடுவில் சின்னு ஸ்கூலில் ஆன்யுவல் டே போட்டிகள் என்று பிஸியாகி விட்டாள். சின்னுவுக்கு பாட்டுப் போட்டி, க்விஸ் இரண்டுக்கும் தயார் செய்வதற்கே நேரம் சரியாக இருந்தது. என்னதான் வீட்டில் பாடினாலும், கேள்விக்கு பதில் சொன்னாலும், சின்னு ஸ்கூலில் சொதப்பி விடுவாள். சாயங்காலம் அவளை தினமும் உட்கார்ந்து பாட வைத்து, வாங்கி வந்திருந்த புத்தகத்திலிருந்து கேள்வி கேட்டு – நடுவில் சிலம்பு விவகாரம் நினைவில் இல்லை. இந்த தடவை சின்னுவுக்கு இரண்டு போட்டிகளிலும் பரிசு.

ஞாயிற்றுக் கிழமை நிதானமாக எல்லோரும் அமர்ந்திருந்தபோது ரமேஷிடம் விவரமாகச் சொன்னாள்- குப்பையில் எறிய வைத்தது வரை. “ஒரு வழியா அந்தச் சிலம்பு தொலஞ்சுது, இனிமேலாவது வீட்டில கெட்டது எதுவும் நடக்காது, லீலா சொன்னபடி முதல்லயே தூக்கி எறிஞ்சிருக்கலாம், இப்ப பாருங்க நம்ம சின்னு பரிசு வாங்கி இருக்கா, இனிமே எல்லாம் நல்லதுதான் நடக்கும் ”

“அதெல்லாம் மடத்தனம், ஏதோ ஒரு பழைய மெட்டல் துண்டுக்கும், வெயில்ல கண்ணாடி உடையறது, ஈரத்தரையில அம்மா வழுக்கி விழுந்தது, திறந்து வெச்ச தொட்டித் தண்ணீரில காக்கா செத்ததுன்னு என்ன தொடர்பு? இப்ப பரிசு வாங்கினா அதுவும் அந்தச் சிலம்பு போனதுனாலயா? ஆஃபீஸில ரீஜனல் மேனேஜர் பொஸிஷனுக்கு என்னத்தான் ரெகமண்ட் பண்ணி இருக்கேன்னு எம் டி நேத்து சொன்னாரு, அதுவும் சிலம்பு போனதாலயா?” என்றான். “ஆமாம்“ என்றாள் உமா திடமாக, ஒரு வாரமாக அவளுக்கு முதுகு வலி கூட காணாமல் போயிருந்து.

ரமேஷ் அப்போதுதான் நினைவுக்கு வந்தவானாக, “அன்னிக்கு நீ கிளம்பிப் போன பிறகு செல்வி எதையோ காட்டி அம்மா தூக்கி எறிய வெச்சுருக்காங்க போல, நான் எடுத்துக்கறேன்” அப்படின்னு சொன்னா, அவசரத்துல நான் என்னன்னு கூட பார்க்கல. இப்ப நீ சொல்லறத கேட்டா அந்தச் சிலம்புதான்னு தோணுது” என்றான். செல்வி அப்படித்தான். கெட்டுப்போன ட்யூப் லைட், கார் பேட்டரி என்று தூக்கி எறிய வைத்திருக்கும் பொருட்களை எடுத்துக் கொள்வாள். உமாவுக்கு பயம் படர்ந்தது, பாவம் செல்வி அவளுக்கு ஏதாவது ஆகாமல் இருக்க வேண்டுமே என்று பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டாள்.

உடனே செல்விக்கு ஃபோன் செய்தாள். வழக்கம் போல அவள் எடுக்கவில்லை. விவரம் எதுவும் சொல்லி அனுப்பாமல் ஃபோனையும் எடுக்காமல் இந்த மாதிரி ஒரு வாரம் வராமல் இருந்ததில்லையே என்று கவலை அதிகமானது. ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு நேராக அவள் இருக்கும் தெருவுக்குப் போனாள். பஸ் ஸ்டாண்டுக்கு பின் புறம் ஒரு சந்து. பெட்டிக் கடையில் விசாரித்து வீட்டைக் கண்டு பிடித்துப் போனால், வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் இருந்து ஒரு சின்னப் பெண் ஒழுகும் மூக்குடன், வாயில் விரலுடன் எட்டிப் பார்த்து அம்மாவை அழைத்தது.

“என்னம்மா நீங்க என்ன தின மலரா, முந்தா நாள்தான் தந்திலேர்ந்து வந்தாங்க ” என்றாள். உமாவுக்கு எதுவும் புரியவில்லை, கலக்கம் அதிகரித்தது, தினப் பத்திரிகைகளில் வரும் அளவுக்கு ஏதாவது விபரீதமாக ஆகி விட்டதா, ” இல்ல, செல்வி எங்க வீட்டில வேல செஞ்சுட்டிருந்தா, ஒரு வாரமா வரலயேன்னு பார்க்க வந்தேன், என்ன ஆச்சு அவளுக்கு?”

” சொல்லல போல, அவ இனிமே வேலைக்கு வர மாட்டாளுங்க, “, உமா கர்சிப்பை எடுத்து வாயில் வைத்துக் கொண்டாள்.

“ஏன் என்ன ஆச்சு ?”

“ஒரே அதிர்ஷ்டம்தான் அவங்களுக்கு, வேலுச்சாமி கார்ப்பரேஷன் எலக்ஷனுல செயிச்சு நம்ம வார்டு கார்ப்பரேடர் ஆயிட்டாருங்க ” என்றாள்.

உமாவுக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது, அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்பது ஆசுவாசமாக இருந்தது, செல்வி சிலம்பைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும்,

“செல்வி வந்தா உமான்னு தேடிட்டு வந்தாங்கன்னு சொல்லு”, குற்ற உணர்ச்சி கணத்தில் நீங்கியது. திரும்பப் போகும்போதே பஸ் ஸ்டாண்ட் பிள்ளையாருக்குத் தேங்காய் வாங்கி உடைத்தாள்.

ஒரு வாரம் கழித்து செல்வி வந்தாள், முகம் வாடி சோர்ந்து இருந்தாள். வேலுச்சாமி எலக்ஷனை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கிறார்களாம். கள்ள ஓட்டு மற்றும் வன்முறையால்தான் அவன் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி வாதமாம்.

உமாவுக்கு வயிற்றில் கலக்கம், “அந்த சிலம்பை நீ ஏன் தூக்கி எறியல? உங்க வீட்டுக்கு எதுக்கு எடுத்துட்டுட்டுப் போன?“ குரல் குளறியது.

செல்விக்கு அவளது கலக்கம் புரியவில்லை, “எதும்மா, அன்னிக்கு நீங்க, அந்த பொட்டி மேல இருந்த சலங்கைய ஒரு கவருல போட்டு வெக்கிருந்தீங்களே, அதுவா ?“

“ஆமாம், அதேதான், தூக்கி எறியச் சொன்னா, ஏன் எறியல?” குரல் உயர்ந்தது.

“இல்லம்மா, நான் அத ஊட்டுக்கு கொண்டு போய், புளி போட்டு தேச்சனா, பளபளன்னு ஆயிடுச்சு. எங்க ஊட்டுக்காரரு, அம்மா ஏதோ தெரியாம தூக்கிப் போட்டிருப்பாங்க, மரியாதயா அவங்க ஊட்டுலயே கொண்டு போய் கொடுத்திடுன்னு திட்டினாரு”

“அன்னக்கே திரும்ப வந்து வெச்சுட்டேனுங்க,” உமா திடுக்கிட்டு கருப்புப் பெட்டியைப் பார்த்தாள், இடம் காலியாகத்தான் இருந்து.

“கீழ பொட்டி மேல இருந்தா தூசு படிஞ்சு துடைக்க கஸ்டமா இருக்குதுன்னு, கண்ணாடி அலமாரில வெச்சுட்டேனுங்க “

உமா திரும்பினாள், அங்கே கண்ணாடி ஷோ கேஸில் நடு நாயகமாக மற்ற அலங்காரப் பொருட்களுடன் அந்த ஒற்றைச் சிலம்பு வீற்றிருந்தது.

மூத்த குடி

சரவணன் அபி

ஆநிரை கவர்தலில்லை
களவு மணமுமில்லை

உடன்போகிய
பழங்குடித் தலைவனின்
பழங்குடி மகள்
கொண்டவனைக் கொன்ற
இயலும் துறையும்
அறியா
பண்டை மொழி
பண்பட்ட நிலம்

தன் புண்ணரிந்து
தான் நிலையழிவது
போலும்
மகளை எரிப்பதும் கரு
மகவை அறுப்பதும்

மூத்த பழங்குடி
முந்தைய மரபின்
ஏதோவோர்
எச்சம் இதுவெனில்
திருத்தமும்
அத்தன்மையதாய் தானே
இருத்தல் கூடும்

இந்திராவின் ஆசைகள் – அசோகமித்திரனின் இரு சிறுகதைகள்

 அஜய் ஆர்

 

ami

பிரபல வீணைக் கலைஞர் ‘ராமச்சந்திரன்’ பற்றி தன் தோழி சரோஜாவிடம், இந்திரா (‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்’) கேட்கப் போக , அவர் யார் என்றே தெரியாதது போல் முதலில் பதில் சொல்லி, பிறகு “எல்லாம் கேட்டிருக்கிறேன். ஒரு வாத்தியம் என்றால் அதனிடம் மரியாதை, பக்தி எல்லாம் வேண்டாம்? குரங்கை ஆட்டிக் காண்பிப்பது போலவா வீணையை வாசிப்பது” என்று அவரைக் கடுமையாக விமர்சிக்கிறாள் சரோஜா. இவளால் இப்படி நுட்பமாக விமர்சிக்க முடியுமா என்று நம்ப முடியாமல் அவளை இந்திரா கூர்ந்து பார்க்க , தான் வீணை கற்றுக்கொள்ளும் வாத்தியார் தான் அப்படிச் சொன்னார் என்று உண்மையை தயங்கிய படி சரோஜா சொல்கிறாள்.

நாம் மதிக்கும் ஒருவரின் கருத்தை, அதை புரிந்து கொள்ளாவிட்டாலும், நம்முடையது போலவே சொல்வதின் நுண் சித்திரம் இது. தன் ஆசையை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்லும் தந்தை, “அழுத மூஞ்சி சிரிக்குமாம், கழுதைப் பாலைக் குடிக்குமாம்” என கேலி செய்பவர்களை நீங்கள் எனக்கு தம்பி தங்கைகளே இல்லை என இந்திரா பழிப்பது, திருவிழாவுக்கு போவது போல் கும்பலாக கச்சேரி கேட்க கோவிலுக்கு செல்வது, அங்கு தன் சங்கீதம் பற்றி அதிகம் தெரியாத தாய் கேட்கும் கேள்விகளுக்கு பல்லைக் கடித்துக்கொண்டு பதில் சொல்வது, சற்று நேரத்தில் வாயைத் திறந்து கொண்டே அவள் தாய் தூங்கி விடுவது என வீணை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இந்திராவின் ஆசையைப் பற்றிய கதையில் பெரும் பகுதி இத்தகைய சித்தரிப்புக்களால் தான் நிறைந்திருக்கிறது.

இலக்கில்லாமல் செல்வது போல் தோன்றினாலும் வாசகனே அறியாதவாறு அவனை தான் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வார் அசோகமித்திரன். சரோஜாவின் வாத்தியாரைப் பார்த்து விட்டு திரும்பும் இந்திராவைக் கடிந்து கொள்ளும் அவள் தாயிடம் அவள் நடத்தும் உரையாடல் இந்தக் கதையில் அத்தகைய ஒரு இடம். முதலில் இந்திராவின் விருப்பத்துக்கு ஒப்புக்கொள்பவர், வீணை கற்றுக் கொள்ள கட்டணம் 20 ரூபாய் என்றவுடன் ‘இருபது ரூபாயா’ என்று ஒரு கணம் மலைக்கிறார். அவர் தாய் கொத்தமல்லி, பச்சை மிளகாய் வாங்க பேரம் பேசுவது போல் இப்போது செய்வதாக இந்திராவுக்கு தோன்ற, தொடர்ந்து அவர் உடைந்த மூக்குக் கண்ணாடியை தொடர்ந்து உபயோகிப்பது, மாதக் கடைசியில் பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது நினைவில் வர இங்கு ஒரு திறப்பு அவளுக்கு கிடைக்கிறது. நிறைய செலவாகும் என்ற காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு, தான் இப்போது கற்றுக்கொள்ளப் போவதில்லை என அவளே, தாய் வற்புறுத்தியும் உறுதியாக இருக்கிறாள்.

குழந்தைமை மறைந்து இந்திரா முதிர்ச்சி அடையும் கணம் என்ற அளவில் முடிந்திருக்கக் கூடிய கதையில், இந்திராவிற்கும் வாசகருக்கும் இன்னொரு திறப்பை அளிக்கிறார் அசோகமித்திரன். இரவு தூக்கம் வராமல் படுத்திருக்கும் இந்திரா, அம்மா சப்தமில்லாமல் குலுங்கி அழுது கொண்டிருப்பதை உணர்வதோடு கதை முடிகிறது. தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்பதனாலா, அல்லது இளமையில் இதே போல் நிறைவேறாமல் போன தன் ஆசையை எண்ணியா அல்லது இரண்டினாலுமா, எதனால் இந்திராவின் தாய் அழுகிறாள் என்பதற்கான பதிலை வாசகனின் யூகத்திற்கே அசோகமித்திரன் விடுகிறார்.

தாய் அழுவதைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திரா இப்போது மத்திம வயது பெண். (‘இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள முடியவில்லை’). இந்தக் கதையில் அவளின் இள வயது ஆசை நிறைவேறவில்லை என்று தெரிய வருகிறது. தன் மகன் கோபுவை பாட வைக்க அவள் முயல, அவனோ கராத்தே கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று இந்தக் கதையை விமர்சிக்கலாம். ஆனால் கதை இந்திரா தன் ஆசையை மகன் மீது திணிப்பதைப் பற்றியல்ல. அவனின் ஆர்வமின்மைக்காக வருத்தப்பட்டாலும், இந்திரா அவனைக் கடிந்து கொள்வதில்லை.

இந்திராவிற்கு அவள் சகோதரர்களின் நண்பன் சங்கரன், வீணை ராமச்சந்திரன் குறித்த அவன் கருத்துக்கள், பொதுவாகவே அவன் தரப்பை தன்மையாக எடுத்து வைக்கும் அவன் குணம் எல்லாம் இப்போது நினைவில் வருகின்றன. ஒரு நாள் நீ இல்லாமல் நான் இருக்க முடியாது என்று அவளிடம் சொல்லும் அவன், அடுத்த சில நாட்கள் கழித்து அவள் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விடுகிறான். இந்த நினைவலைகளைத் தொடர்ந்து அ.மியின் புனைவில் அதிகம் காண முடியாத, யதார்த்தத்தைக் கடந்து செல்லும் , பகற்கனவின் சித்தரிப்பில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருகிறான். இந்திரா நரைத்த தலைமுடியுடன் இருக்க அவன் மட்டும் அன்று பார்த்தது போலவே இருப்பதாகச் சுட்டப்படுவதில் உள்ள உளவியல் கவனிக்கத்தக்கது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சங்கரனை மீண்டும் அழைத்து வருமாறு அப்போது வீட்டிற்குள் நுழையும் கோபுவை இந்திரா அனுப்ப, அவன் வெளியே யாரும் இல்லை என்கிறான்.

வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இந்திராவின் நிறைவேறாத ஆசை என்று வாசகனுக்குத் தெரியும். இந்திராவின் சங்கரன் குறித்த நினைவுகளும், அதைத் தொடரும் பகற்கனவும் அது ஒன்று மட்டுமே அவளுடைய நிறைவேறாத ஆசை இல்லையோ என்ற உணர்வைத் தருகிறது. அவளில்லாமல் அவனால் இருக்க முடியாது என்று ஒரு நாள் சங்கரன் சொல்லி விட்டுச் செல்ல, இந்திராவிற்கோ தன் மீது அவன் பெரிய சுமையை தூக்கி வைப்பது போல் தோன்றுகிறது. அவன் குறித்து அவளுக்கிருக்கும் நேர்மறையான அபிப்ராயத்தை சுட்டும் சம்பவங்களை வைத்து, அது மற்றவர்கள் அறிந்து விடக் கூடாது என்ற பயம் கலந்த, அதே நேரம் இனிமையும் கூடிய சுமை தான் என்று யூகிக்க முடியும். ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருவது நின்று விடுகிறது.

வீணை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவளின் ஆசையைப் போல் அழுத்தமானதாக இதைச் சொல்ல முடியாவிட்டாலும், சங்கரன் குறித்த நினைவுகள் இத்தனை ஆண்டுகளாக அவள் மனதின் ஒரு மூலையில் அழியாமல் இருந்தது என்பதை அவள் பகற்கனவு உணர்த்துகிறது. இருவருக்கும் ஆண் பிள்ளைகள் மட்டுமே இருப்பதால் சம்பந்தம் கூட செய்து கொள்ள முடியாது என்று சங்கரன் கூறுவதாக இந்திரா காணும் பகற்கனவில், இன்னும் சில சொல்லப்படாத விஷயங்கள் உள்ளன.
வீணை கற்றுக்கொள்ள தனக்கிருந்த ஆசையை அவள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடும். ஆனால் சங்கரன் குறித்து? அவள் யாரைத் தேடுகிறாள் என்று கோபு கேட்பதற்கு ‘சங்கரன்’ என்று இந்திரா சொல்ல அவன் உதட்டைப் பிதுக்குகிறான். ‘அவள் சங்கரன் என்றாலும் சர்தார் சிங் என்றாலும் அவனுக்கு ஒன்று தான்’ என்று அசோகமித்திரன் சொல்லும் போது இந்திராவின் – யாருடனும் பகிர முடியாத – அந்தரங்க சோகம் தெரிகிறது.

ஒரு வேலை சங்கரனை மணந்திருந்தால் அவள் ஆசைகள் நிறைவேறி இருக்கலாம். சங்கரனுக்கு என்ன ஆனது என்பதையும் இறுதியில் புனைவு எழுத்தாளனுக்கு அளிக்கும் ‘எல்லாம் தெரிந்த கதைசொல்லி’ என்ற சலுகையின் மூலம் வாசகனுக்கு மட்டும் சொல்கிறார் அசோகமித்திரன். அதை இதுவரை அறிந்திராத இந்திரா இனியும் அறிய மாட்டாள். அவள் நினைவுகளில் எப்போதும் இனிமையை நிறைக்கும் இளைஞனாகவே சங்கரன் வலம் வருவான்.

நிறைவேறாத ஆசைகளுடன் நடுத்தர வயதை அடைந்துள்ள இந்திராவின் வாழ்வும் அவள் தாயைப் போல சப்தமில்லாமல் குலுங்கி அழுவதில் – இதே போல் யாருக்கும் வெளிக்காட்டாமல் மனதோடு குமறிக்கொண்டிருக்கும் எண்ணற்ற வாழ்க்கைகளோடு – தான் இணைய வேண்டும்.

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

ஒளிப்பட உதவி – இட்லிவடை

ஒரே கேள்வி

எஸ். சுரேஷ்

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: ஹ ஹ ஹ ஹ ஹ. காலேஜ் முடிச்சிட்டு உத்தியோகம் கிடைச்சிருக்கற ஸ்டுடென்ட் கிட்ட இந்த மாதிரி கேள்வியா? ஹ ஹ ஹ. இப்போ தான் சார் இந்திய கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரி வேகமாக வளரும் போல் இருக்கு. நாங்க வேற டாப் கிளாஸ் காலேஜ்லிருந்து பாஸ் ஆகியிருக்கோம். முன்னாடி நிறைய வாழ்கை இருக்கு சார். இப்போ போயி எதுக்கும் வாழணும்ன்னு கேட்டுண்டு.

ஆனா நீங்க கேக்கறது எனக்கு புரியறது. நான் நிறைய நாவல் படிப்பேன். இந்த விஷயத்தை பத்தி பல ஐரோப்பிய நாவலாசிரியர்கள் பேசியிருக்காங்க. காமு, சார்த்தர், தாஸ்தாவெஸ்கி இப்படின்னு பல பேரு. அங்க நிஹிலிசம்ன்னு ஒரு தத்துவம் இருக்கு தெரியுமா? அந்த தத்துவத்தின்படி நமக்கு இந்த உலகத்துல ஒண்ணும் புரியாது. ஒரு மாதிரி சூன்யம் இந்த உலகம்ன்னு அந்த தத்துவம் சொல்லுதாம். புத்தரும் இதே தத்துவத்த சொன்னாரா அப்படின்னு ஒரு கேள்வி இருக்கு. ஆனா புத்தர் சொன்னது வேற நிஹிலிசம் வேறன்னு சொல்றாங்க. தத்துவம் படிச்சா மண்ட குழம்பிடும். நான் ரிலேடிவிட்டி தியரி படிச்சவன். இந்த தத்துவம்லாம் படிச்சா அதுவே சுலபமா இருக்கும் போல் இருக்கு.

ஆனா ஐரோப்பால நிஹிலிசம் பெரிய பாதிப்பு ஏற்படுத்தினதா சொல்றாங்க. பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் தற்கொல செஞ்சிண்டாங்களாம். இதுக்கு எதிரா காமு ஒரு பெரிய கட்டுரை எழுதினதா என் நண்பன் அசோக் சொல்றான். அவனும் நானும் ஒரே கம்பனில சேரப் போறோம்.

வாழ்க்கைல எவ்வளவோ செய்யணும் ஆனா ஒரு அம்பது வயசுல டக்க்னு போயிடணும். எங்க கொள்ளு தாத்தா பாவம். படுத்த படுக்கையா இருந்து, அவரும் கஷ்டப்பட்டு எல்லோரையும் துன்புறுத்தி போனாரு. அது மாதிரி இல்லாம ஒரு ஹார்ட் அட்டாக்ல போயிடணும். அது ஒண்ணுதான் ஏன் அசை,

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: வாங்க சார் வாங்க. போன முறை நீங்க ஏதோ தமாஷுக்கு சொல்றீங்கன்னு நினைச்சேன். நிஜமாவே வந்துட்டீங்க. உங்க திட்டம் நல்லா இருக்கு. பத்து வருஷத்துக்கு ஒரு முறை இந்த கேள்விய கேக்கறது. என்ன மாற்றம் நிகழ்ந்திருக்குன்னு பார்க்கறது.

நான் காலேஜ் விட்டு வெளீல வந்தவுடனே இப்ப தான் வாழ்க்கையே ஆரம்பிக்குதுன்னு நினைச்சேன். ஆனா பத்து வருஷம் கழிச்சி இப்போதான் வாழ்க்கையே ஆரம்பிக்கப் போவுதுன்னு ஒரு உணர்வு இருக்கு. ஏன்னா நான் காதலிக்கும் பெண்ணை அடுத்த மாசம் கல்யாணம் செஞ்சிக்க போறேன்.

நான் வேலைல சேர்ந்த பிறகு ஆபிஸ ஒரு கலக்கு கலக்கிட்டேன். நான் முதல் முறையா கோட் பண்ணத கிளையேன்ட் ரொம்ப பாராட்டினான். வேலைக்கு சேர்ந்த ஆறு மாசத்துல என்னை அமெரிக்காவுக்கு அனுப்பினாங்க. அந்த ப்ராஜெக்ட் சரியா முடிச்சேன். அந்தக் காலம் இப்போ போல் இல்ல. அப்போ எல்லாம் அமெரிக்கா போற கனவே காண முடியாது. நான் போனது பல பேருக்கு அசிடிடி கொடுத்தது. என் நண்பன் அசோக்கும் வயிறு எறிஞ்சான். ரெண்டு வருஷம் அங்க இருந்துவிட்டு திரும்பி வந்தேன்.

என் கதைய விடுங்க. நீங்க கேட்ட கேள்விக்கு என்ன பதில்? இப்போ இது போன்ற கேள்வியெல்லாம் யாரும் கேக்கிறதில்ல. மாணவனா இருந்தபோது நாங்க எல்லோரும் புத்தகம் படிப்போம், விவாதிப்போம். இப்போ புத்தகம் படிக்கிற டைம் இல்ல. படிச்சாலும் விவாதிக்க ஆள் இல்ல. வேலை, வேலை, வேலை. நாமும் முன்னேறுகிறோம். கம்பனியும் முன்னேறுகிறது. காற்றுள்ள போது தூற்றிக்கொள்ள வேண்டும் சார். நின்று நிதானமா யோசிக்கற அளவுக்கு டைம் இல்ல சார். இருக்கவும் கூடாது. அப்ப தான் முன்னேற முடியும்.

எதுக்காக வாழணும்? எதிர்காலத்துக்காகதான். எதிர்காலம் நல்லா இருக்குன்னா வாழ வேண்டியதுதான். நான் ப்ராஜெக்ட் லீட் ஆன பிறகு அவ என் டீம்ல சேர்ந்தா. அன்றைக்கே காதல்வயப்பட்டுட்டேன். அழகியா இல்லையான்னா எனக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனா எனக்கு அவ தான் பொருத்தமான பெண். இவ கூட வாழ போகிறோம் என்று நினைக்கிற பொழுதே எவ்வளவு வருடங்கள் வேணுமானாலும் இந்த உலகத்துல வாழலாம்ன்னு தோணுது சார். இப்ப இந்த கேள்விக்கு அவசியமே இல்ல.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: கரெக்டா வந்துடிறீங்க சார். பத்து வருஷம் ஆனாலும் எப்படியோ என்ன தேடி கண்டுபிடிச்சிடறீங்க.

இந்த முறை உங்களுக்கு ஸ்ட்ராங்கா பதில் சொல்லலாம். நாம நம்ம குழந்தைகளுக்காக வாழணும். எனக்கு இப்போ ரெண்டு குழந்தைங்க. ஒவ்வொரு நாளும் ஆபிஸ்ல இந்த பாலிடிக்ஸ் எல்லாம் டீல் பண்ணிட்டு வீட்டுக்கு சோர்வா வரும்போது அந்த குழந்தைங்க சிரிப்ப பார்த்தா வரும் ஆனந்தம் வார்த்தைல சொல்ல முடியாது சார். க்ளுகோஸ் குடிச்ச மாதிரி இருக்கும்.

குழந்தைங்க இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். முன்ன மாதிரி இல்ல சார் இப்போ. ஆபிஸ் பூரா பாலிடிக்ஸ். நான் எல்லா வேலையும் பண்ணி கஸ்டமர குஷிப்படுத்தி பிஸ்னெஸ் டெவெலப் பண்ணேன். ஆனா என்ன லாபம்? எனக்கு ப்ரமோஷன் குடுத்தாங்க சரிதான். நானும் அப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா அடுத்த நாளே அசோக்குக்கும் ப்ரமோஷன் குடுத்தாங்க. அவன அமெரிக்கா அனுப்பினாங்க. என்ன கேட்டாங்க ஆனா மனைவி கர்ப்பமா இருந்தா. என்னால போக முடியல. அவன் என் அளவுக்கு என்ன வேல பண்ணான்? ஏதோ பாஸ் கூட சிரிச்சி சிரிச்சி பேசுவான். எப்படியோ ப்ரமோஷன் வாங்கிட்டான். எல்லோருக்கும் ப்ரோமோஷன் குடுத்தா வேலை செய்யறவனுக்கு என்ன சார் மதிப்பு? சரி விடுங்க. கார்ப்ரட்ல இதெல்லாம் சகஜம்.

இப்போ உங்க கேள்விக்கு வருவோம். நாம நமக்காக வாழணுமா இல்ல நம்ப சார்ந்து இருக்கிறவங்களுக்காக வாழணுமா? என்ன பொருத்த வரையில இது தான் கேள்வியா இருக்க முடியும். இதுக்கு பதில் சொன்னா உங்க கேள்விக்கு பதில் சொன்ன மாதிரி. நான் பைரப்பா எழுதின ‘வம்ச வ்ரிக்ஷா’ படிச்சேன். அதுல ஒரு குழந்தை தாய் தந்தைக்கு மட்டும் சொந்தம் இல்ல. அவங்க வம்சத்துக்கே சொந்தம்னு அதுல வரும் முக்கியமான கதாபாத்திரம் வாதாடுறாரு. என்னால அத ஏற்க முடியல. குழந்தை அதைப் பெற்றவர்களுக்கு தானே சொந்தம்? ஆனா அந்த ஒரு பாய்ண்ட் ஆப் வியூ தப்புன்னு சொல்ல முடியல. இந்த காலத்துக்கு அதெல்லாம் சரி வராது. என் அப்பா அம்மா என் கூட தான் இருக்காங்க. அவங்களுக்கு பேரன் பேத்தி மேல அலாதி ப்ரியம் ஆனா அதுக்குன்னு அவங்களால நம்ம குழந்தைங்க எதிர்காலத்த டிசைட் பண்ண முடியாது இல்லையா?
ஹ ஹ ஹ. ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: முதல் முறையா நானே என்னை இந்த கேள்வி கேட்டுக்கொண்டேன். உலகம் ரொம்ப மாறிவிட்டது சார். எதுக்குமே மதிப்பில்லாம போயிடிச்சி. பணம் தான் முக்கியம்னு ஆயிடிச்சி. நான் எவ்வளவு வருஷமா இந்த கம்பெனிக்காக பாடு பட்டிருப்பேன். எவ்வளவு உழைச்சேன். என் உழைப்புனால எவ்வளவு புது கஸ்டமர் கிடைச்சாங்க. ஒரு டவுன்ட்டர்ன் வந்தவுடனே யார தூக்கலாம்னு பாக்கறாங்க. லாயல்டி, உழைப்பு எதுக்குமே மரியாத இல்ல. காக்கா பிடிக்கறவங்க தான் வாழறாங்க. என்ன நேரா கூப்பிட்டு “போடா வெளியிலே”ன்னு சொல்லிருந்தா அது மரியாதையா இருந்திருக்கும். ஆனா இவங்க அப்படி செய்யல. என்னை ஒரு பவர் இல்லாத ரோலுக்கு மாத்தினாங்க. ஏழு வருடமா ப்ரமோஷன் இல்ல. ரெண்டு வருஷம் இன்க்ரிமென்ட் இல்ல. இன்க்ரிமென்ட் குடுத்தாலும் ஏதோ ரெண்டு பர்சென்ட் மூணு பர்சென்ட்ன்னு குடுக்கறாங்க. அதே அசோக்க பாருங்க. நல்லா அமெரிக்கால செட்டில் ஆயிட்டான். கம்பனி அவனுக்கு கிரீன் கார்ட் ஸ்பான்சர் செஞ்சது. அவனுக்கு இந்த அஞ்சு வருஷத்துல ரெண்டு ப்ரமோஷன். என்னால உயிர் வாழ்ந்தவன், காக்கா பிடிக்கிறதா தவிர ஒரு டாலேன்ட் இல்லாதவன். அவனுக்கு எப்படி ஒரு வாழ்வு பாருங்க.

போடா கொய்யான்னு ராஜினாமாவ வீசி எறிஞ்சிட்டு வந்துடலாம். ஆனா நம்ப குடும்பத்துக்காக அத செய்யாம இருக்கேன். இப்போ என் கூட வேல செஞ்ச பிஸ்வாஸ்ஸ எடுத்துக்கோங்க. அவனுக்கு ஒரே குழந்தை. அவன் பெண்டாட்டி நல்ல வேலைல இருக்கா. நல்ல சம்பாத்தியம். அவன வேற ரோல் எடுக்க சொன்னாங்க. அவன் உடனே ராஜினாமா செஞ்சிட்டு பெண்டாட்டி பணத்துல சாப்பிட்டுக்கொண்டு ஜாலியா இருக்கான். நமக்கு அப்படி முடியலை. அதுனால பல்ல கடிச்சிண்டு ஓட்டிக்கொண்டிருக்கிறேன். வெளியில வேற என் வயசு ஆளுங்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

இப்போ என்னோட குறிக்கோள் ஒன்றே ஒன்று தான். என் பிள்ளைகள நல்லா படிக்க வச்சு நல்ல future அமைச்சு கொடுக்கணும். அது தான் வாழ்க்கைல முக்கியம். நம்ப வாழ்க்கையே நம்ப குடும்பத்துக்கு தான்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்- மனசு நெறஞ்சிருக்கு சார். போன வருஷம் என்னுடைய அறுபதாம் பிறந்த நாள ரொம்ப கிராண்டா என் பிள்ளைகள் கொண்டாடினார்கள். எல்லாரும் வந்து பார்டிசிபேட் பண்ணங்க. இவ்வளவு பேர் நம்ம கூட இருக்காங்கன்னு நினைக்கும் பொழுது மகிழ்ச்சியா இருக்கு.

அதே போல் இவ்வளவு வருஷம் நாம உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதே இந்த காலத்துல ஒரு சாதனையா இருக்கு. பாவம் அசோக். நல்லா ப்ரோமோஷன் வந்துது. ஆனா என்ன லாபம். ஒரே ப்ரெஷர். சட்டென்று ஒரு நாள் மாரடைப்புல போயிட்டான். எல்லோருக்கும் ஒரே ஷாக். “நல்ல வேள உங்களுக்கு ப்ரோஷன் வரல. அந்த ப்ரெஷர் உங்களுக்கு இல்ல. ஆள் இல்லாம பணத்த வச்சிண்டு என்ன பண்றது?” என்று என் மனைவி கேட்டாள். அதுவும் உண்மைதான்.

ஒரு விதத்துல வேலைய விட்டதும் நல்லது தான். நல்ல டைமிங்க்ள விட்டேன். பையன் ஒரு மாதிரி அமெரிக்கால வேலைல சேர்ந்த பிறகு நான் இங்க வேலைய விட்டேன். பிறகு ஸ்டார்ட் அப்ல கொஞ்ச நாளு, ஒரு காலேஜ்ல லேக்சுரர்ரா கொஞ்சம் நாளுன்னு வண்டி ஓடிச்சி. அப்புறம் டாட்டர்-இன்-லா பிரேக்னேன்ட் ஆனா. பெண்ணு கல்யாணமாகி ஜெர்மனி போயிட்டா. அதுக்கு பிறகு கொஞ்ச நாள் அமெரிக்கா, கொஞ்ச நாள் ஜெர்மனின்னு வண்டி ஓடுது.

எப்பவுமே நான் உங்க கேள்விக்கு டைரெக்ட்டா பதில் சொல்றதில்ல. ஹ ஹ ஹ. இப்போ நான் வாழறது என் பேர பிள்ளைகளுக்காக தான். இப்போ எங்க உலகமே அவங்கதான்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: நீங்க புதுசா தம்பி. அவர் வரலையா? ஒ. என் மனைவியும் கான்சர்ல தான் இறந்தா. லங்க் கான்செர். அவ போன பிறகு எதுக்கு வாழணும் தான் இருக்கு. ஏன் வாழணும்னு கேள்வி எழுந்துக்கொண்டே இருக்கு. பதில் தான் தெரியல. பசங்க ரெண்டு பேரும் வேற வேற எடத்துல இருக்காங்க. எனக்கோ அங்க இருக்க பிடிக்கல. இங்க ஒரே தனிமை. என் மனைவி என்ன பாடு பட்டா. உதவிக்கு யாரும் இல்ல. இந்த நகரத்துல எனக்கு பல சொந்தக்காரர்கள். ஆனா எல்லோரும் அவங்க அவங்க வேலைல இருக்காங்க. நம்ம ஒத்தாசைக்கு வேலைக்கார்கள் தான். அவங்கள் நம்பி தான் பல பேர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கு தம்பி. நம்ப பிள்ளைகள விட வீட்டுக்கு வர நர்சுக்கு தான் நம்மள பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு.

நம்ம பிள்ளைக இங்க இருந்தா நமக்கு ஒரு சந்தோஷம். இப்போ எல்லாம் பேர பிள்ளைகள கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல தான் பாக்க முடியறது. எங்க சம்பந்தி கதியும் இதேதான். என் பையனோட மாமியார் தனியா இருக்கா பாவம். மாமனாருக்கு சுகர். கிட்னி கோளறு. ரொம்ப துன்பப்பட்டு இறந்தாரு பாவம். அவர் போனது எல்லோருக்கும் ஒரு ரிலீப்.

இந்த தனிமைல வாழ்க்கையோட அர்த்தம் என்னனு தேடிக்கொண்டிருக்கிறேன். பல புக்ஸ் படிக்கிறேன். ஆனா ஏனோ மனம் அதுல லயிக்க மறுக்கிறது. என் மனைவியோட நினைவு இன்னும் என்னைவிட்டு நீங்கலைன்னு நினைக்கிறேன். எப்போவும் அவ தான் ஞாபகம் வருகிறாள். ஹ்ம்ம். ஏதோ நம்மள யம தர்மன் அழைக்கும் வரை வாழ்ந்துக்கொண்டிருக்க வேண்டும். அது தான் விதி.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: நீங்க வேற ஆளா? அவர் ரிசைன் பண்ணிட்டாரா? இந்த காலம் அப்படி. நாங்க எல்லாம் முப்பது ஆண்டுகள் ஒரே கம்பனில இருந்தவங்க. அந்த வால்யூ சிஸ்டம் இப்போ இல்லை. மாரல்ஸ் மாறி போச்சு. நீ கேட்ட இல்லையா ஒரு கேள்வி, “எதுக்கு உயிர் வாழணும்’ன்னு. இதுக்கு தான் உயிர் வாழணும். அதாவது என்ன போல் பெரியவங்க, இந்த தலைமுறைக்கு ந்யாயம்னா என்ன, தர்மம்ன்னா என்னான்னு எடுத்து சொல்லணும். அதுக்காக நாங்க வாழணும்.

நான் தினமும் கோவிலுக்கு போறேன். தினமும் அங்க அரை மணி லெக்சர் குடுக்கிறேன். பல ஆர்டிகல்ஸ் எழுதுகிறேன். உலகம் பூரா பல பேர் அத படிக்கறா. எனக்கு எவ்வளு மெசஜ், எவ்வளு மெயில் தெரியுமா. என் பொண்ணு இப்போ ஹாலந்த்ல இருக்கா. அவ ஒரு நாள் போன் பண்ணி, “அப்பா இங்க ஒருத்தர் உங்க ஆர்டிகல் படிச்சி ரொம்ப புகழ்ந்தார். ஐ யாம் ப்ரௌட் ஆப் யூ” சொன்னா. போன முறை பையன பாக்க அமெரிக்கா போன போது அவங்க கோவில்ல மூணு நான் அத்வைதம் பத்தி பேசினேன். என்ன ரெஸ்பான்ஸ் தெரியுமா. பேரன், பேத்திக்கெல்லாம் ஒரே ஆச்சரியம், “யூ ராக் தாத்தா”ன்னு சொன்னா என் பேத்தி. இப்போ கோவில்ல நடக்கற எல்லா விசேஷத்துக்கும் நான் இருந்தாகணும். பல ஏழை பசங்களுக்கு படிக்க உதவற டிரஸ்ட் வச்சிருக்கோம். நீங்க கூட எதாவது குடுக்கலாம். டாக்ஸ் exemption உண்டு. நேத்தி சுவாமிஜி வந்தார். என்னோட நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் நாங்க செய்கிறதெல்லாம் மெச்சினார். ஏதோ பகவான் புண்யத்துல நம்மளால முடிஞ்சத செய்யமுடியறது.

ஓம் சத்குருவாய நமஹா.