Author: பதாகை

கம்பனின் அரசியல் அறம் – வளவ.துரையன் கட்டுரை

மணக்கோலத்தில் கண்ட தன் மகன் இராமனுக்கு மாமுடி புனைவித்து மன்னனாக்க எண்ணம் கொண்டான் மாமன்னன் தயரதன். அமைச்சர் பெருமக்களும் அதனை ஏற்றனர். உடனே தயரதன் தன் குலகுருவான வசிட்டரை அழைத்து, ”இராமனுக்கு நல்லுறுதி வாய்ந்த உரைகளைக் கூறுவாயாக” என்றான்.

வசிட்ட முனிவன் இராமனை அடைந்து, “ நாளை உனக்கு இந்த நானிலம் ஆளும் உரிமை வழங்கப்பட இருக்கிறது. எனவே நான் ஒன்று கூறுவதுண்டு உறுதிப் பொருள். நன்று கேட்டுக் கடைப்பிடி” என்று கூறி அரசன் கைக்கொள்ளவேண்டிய அறங்களை எடுத்துக் கூறுகிறான்.

வசிட்டன் உரைப்பனவாகக் கம்பன் பதினைந்து பாடல்களை இயற்றி உள்ளான். தெளிந்த நல்லறம், மனத்தில் செப்பம் உடைமை, கருணை ஆகிய மூன்றையும் ஆள்பவர் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறும் வசிட்டன்,”சூது என்பதுதான் அனைத்துக் குற்றங்களுக்கும் மூலகாரணமாகும்; அதை அறவே விலக்க வேண்டும்” என்கிறான்.

”சூதானது பொருளை அழிக்கும்; பொய் சொல்லத் தூண்டும்; அருளையும் கெடுக்கும்; அல்லவையும் தரும் “ என்ற பொருளைத் தரும் குறளான,

”பொருள்கொடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்[து]

அல்லல் உழப்பிக்கும் சூது”

என்பது நினைவுக்கு வருகிறது. மேலும், “ஆள்வோர் எவரிடத்தும் பகைமை பாராட்டலாகாது. பகைமை இல்லாத அரசனின் நாட்டில் போர் இல்லாமல் போகும்; அவனது படையும் அழியாது; அவன் புகழ் பெருகும்” எனும் கருத்தில் ‘போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது” என்று கூறுகிறான். போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இன்றைய உலக அரசியலுக்கு இது முக்கியமான அறவுரையாகும். சிறந்த அரசாட்சி எதுவென்பதற்கு வசிட்டனின் கூற்றாகக் கம்பன் ஓர் இலக்கணம் வகுக்கிறான்.

”கோளும் ஐம்பொறியும் குறைய பொருள்

நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின்

ஆளும் அவ்வரசே அரசு அன்னது

வாளின் மேல்வரும் மாதவம் மைந்தனே” என்பது கம்பனின் பாடல்.

அதன்படி, “மெய்,வாய், கண்,மூக்கு எனும் ஐம்பொறிகள் உண்டாக்கும் ஆசைகளை அடக்கி, தனது நாட்டுக்குத் தேவையான பொருளை நாள்தோறும் நல்ல வழியில் சேர்த்து, நடுநிலைமையில் நின்று ஆளுகின்ற அரசாட்சியே உண்மையான சிறந்த அரசாட்சியாகும் என்பது விளக்கமாகிறது. இப்படி நடத்துவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை விளக்க ”அந்த ஆட்சி வாளின் முனையில் நின்று செய்கின்ற பெரிய தவம் போன்றதாகும்” என்ற உவமையும் கம்பனால் கூறப்படுகிறது.

மேலும் அறிவுசால் அமைச்சரின் சொற்படிதான் ஆட்சியாளர் செயல்பட வேண்டும் என்பதை விளக்க மும்மூர்த்திகளின் தோள்வலிமையை ஒருவரே பெற்றிருந்தாலும் “அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே” என்று வசிட்டன் இராமனிடம் கூறுகிறான். அத்துடன் “ஐம்புலன்களை அடக்கினால் மட்டும் போதாது; மனத்தில் அன்பு கொள்ள வேண்டும்; ஏனெனில் அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?” என்றும் வசிட்டன் கூறுகிறான்.

“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பதுதான் பண்டைய தமிழ் இலக்கிய மரபாகும். இதன்படி இவ்வுலக மக்களெலாம் உடலாகவும், அவர்தமை ஆளும் மன்னன் உயிராகவும் சித்தரிக்கப் படுகிறான். கம்பன் இதை அப்பட்ரியே மாற்றுகிறான்.

”உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்”

”வையம் மன்உயிர்ஆக அம்மன்உயிர்

உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னன்”

எனும் அடிகள் மக்களை உயிராகவும், அவ்வுயிரைப் பேணும் உடலாகவும் மன்னனைக் காட்டி மக்களாட்சித் தத்துவத்தைக் காட்டுகின்றன.

அடுத்து, அரசன் கொள்ளவேண்டிய குணங்களைக் கூறும் வசிட்டன் அவற்றைப் பட்டியலிடுகையில், ”இன்சொல், ஈகை, நல்வினையாற்றல், மனத் தூய்மை, வெற்றிபெறல், நீதிநெறி நடத்தல்,” என்ற குணங்களை முன் நிறுத்துகிறான். அரசன் கொள்ள வேண்டிய நடுநிலையைக் கூறும் போது, ”சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்” என்று வள்ளுவர் கூறும் துலாக்கோல் உவமையையே கம்பனும் பின்பற்றி, “செம்பொன் துலைத்தாலம் அன்ன” என்று பொன்னைத் துல்லியமாக நிறுத்து நடுநிலைமையைக் காட்டும் தராசைப் போன்று ஆட்சிபுரிவோர் இருக்க வேண்டும் என்று கூறுகிறான்.

மேலும் ஆட்சியாளர்க்கு அறிவு சார்ந்த சான்றோரிடம் தொடர்பு கொள்வதும், அவர் வாக்கின்படி ஒழுகுவதும் முக்கியமானவையாகும்.

அதனால்தான் கண்ணகி நீதிமுறை தவறிய பாண்டியனின் நாட்டில் “சான்றோரும் உண்டுகொல்” என்று கேட்கிறாள். எனவேதான் ஆன்றோரிடம் செலுத்தும் அன்பு ஓர் அரசனுக்கு ஆற்றல் மிக்க ஆயுதமாக விளங்கும் என்று வசிட்டன் இராமனுக்கு விளக்குகிறான்.

’தூமகேது’ எனும் பெயருடைய வால் நட்சத்திரம் தோன்றினால் உலகிற்குக் கேடு சூழும் என்பது ஒரு நம்பிக்கையாகும். மங்கையர் மீது வரும் தீராக்காமமான பெண்ணாசை அத்தகைய தூமகேது போன்றது. அதை விலக்கினால் அரசர்குக்க் கேடு இல்லை எனும் பொருளில்,

”தூமகேது புவிக்கு எனத்தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனின் கடுங் கேடுஎனும்

நாமம் இல்லை நரகமும் இல்லையே”

எனக் கம்பன் பாடுகிறான்.

வசிட்டன் கூறும் இந்த அறமுறைகளை எல்லாம் இராமன் நன்றாக மனத்துள் வாங்கிக் கொள்கிறான். கிட்கிந்தைக்கு அரசனாக, சுக்ரீவனுக்கு இலக்குவனைக் கொண்டு முடி சூட்டுவித்த பின்னர் இராமன் சுக்ரீவனுக்கு அரசியல் அறங்களை எடுத்துக் கூற வசிட்டன் உபதேசம் மிகவும் உதவுகிறது.

“மங்கையர் பொருட்டால் மாந்தர்க்கு மரணமுண்டாகும்; அத்துடன் பழிப்பும் உண்டாகும்; இதற்கு உருமையைக் கவர்ந்த வாலியே சாட்சி” என்று சுக்ரீவனிடம் இராமன் உரைக்கிறான்.

சுக்ரீவனுக்கு இராமன் கூறும் அறவுரைகளாகக் கம்பன் ஒன்பது பாடல்கள் இயற்றி உள்ளான்.

“அமைச்சர்கள் வாய்மைசால் அறிவில் மேம்பட்டவராய் இருக்க வேண்டும். படைத்தலைவர்கள் குற்றமில்லாத நல்லொழுக்கத்துடன் கூடியவராய் இருக்க வேண்டும். ஆள்வோர் இவ்விருவரோடும் மிகவும் நெருங்காமலும், அதே நேரத்தில் விட்டு விலகாமலும் பழகி ஆட்சி செய்ய வேண்டும்.

புகை எழுந்தால் அங்கே எரியும் தீ இருக்கிறது என்று ஊகிக்கும் திறனோடு, நூல் வல்லார் அறிவையும் அரசன் பெற்றிருக்க வேண்டும்; பகைமை கொண்டவர்க்கும் அவரவர் தகுதிக்கேற்பப் பயன் உண்டாகும் படி நடக்க வேண்டும்.

சுக்ரீவனே! ஆட்சி புரிவோரிடம் சில நல்ல குணங்கள் இருக்க வேண்டும். செய்ய வேண்டியவற்றைச் செய்தல், மற்றவர் தம்மைப் பற்றி வசைமொழி கூறிய போதும் தாம் அவர் பற்றி இனியவையே கூறல், உண்மை பேசுதல், தம்மால் முடிந்த மட்டும் இரப்பவர்க்கு ஈதல், பிறர் பொருளைக் கவராமல் இருத்தல் என்பனவே அவை.

மேலும் ஆட்சியாள்வோர் தாம் வலிமையுடையவர் என்று எண்ணி எளியவரை அவமதிக்கக் கூடாது. அவ்வாறில்லாமல் நான் கூனிக்குச் சிறு கேடு செய்ததால் துன்பக் கடலுள் வீழ்ந்தேன்.

ஆள்வோர் “இவன் நம் தலைவர் அல்லர்; நம்மைப் பெற்றெடுத்த தாய் போன்றவர் என்று குடிமக்கள் கூறுமாறு அவரைப் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நாட்டிற்கு எவரேனும் தீமை செய்தால் அத் தீயவரை அறத்தின் எல்லை மீறாமல் தண்டிக்க வேண்டும்.

அறத்தினது இறுதி வாழ்நாட்டுக்கு இறுதி; அதாவது அறவழியிலிருந்து தவறுதல் ஆயுளின் முடிவுக்கே காரணமாகி விடும், எனவே செல்வத்துக்குக் காரணமான நல்லவற்றைச் செய்யாமல் வறுமைக்குக் காரணமான தீயவற்றைச் செய்யலாகாது.”

இவ்வாறு ஆள்வோர் பின்பற்ற வேண்டிய அறநெறிகளையும், ஆளவேண்டிய முறைகளையும் இராமன் சுக்ரீவனிடம் எடுத்துக் கூறுகிறான்.

இவற்றோடு வசிட்டன் கூறும் அரசியல் அறங்களாகக் கம்பன் மொழிந்திருப்பதையும் சிந்தித்தால் அவை எல்லா நாட்டு ஆட்சியாளர்க்கும் எப்பொழுதும் பொருந்துவனபோல் தோன்றுகிறது. கம்பன் கூறும் இந்த அரசியல் அறங்களப் பின்பற்றும் ஆட்சியாளரால் வழி நடத்தப்படும் நாடு மிகச் சிறந்ததாய்த்தான் விளங்கும் என்று துணிந்து கூறலாம்.

கம்பன் காட்டும் வணிகம்

ஏற்றுமதி வணிகம்

முறைஅறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்

இறைஅறிந்து உயிர்க்கு நல்கும் இசைகெழு வேந்தன் காக்கப்

பொறைஅறிந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில் பொன்னின்

நிறைபரம் சொரிந்து வங்கம் நெடுமுதுகு ஆற்றும் நெய்தல்

[அவா=ஆசை; முனிவுழி முனிந்து=சினம்கொள்ளவேண்டிய இடத்தில் சினந்து; இசை=புகழ்; நிறை பரம் சொரிந்து=அருமையான பொருள்கள் இறக்கி]

கோசல நாட்டில் நடந்த வணிகத்தைப் பற்றிக் கம்பன் கூறுகிறான். வங்கம் என்றால் கப்பம் என்று பொருளாகும். ஆண்டாள் தம் திருப்பாவையின் 30-ஆம் பாசுரத்தில், “வங்கக் கடல் கடைந்த” என்று கப்பலைச் சொல்வார். கோசல நாட்டில் பொருள்கள் மிகுதியாக விளைந்தன. அந்நாட்டில் தங்களுக்குத் தேவையானது போக எஞ்சிய பொருள்களை கப்பல்களில் ஏற்றிச் சென்று ஏற்றுமதி செய்தார்கள். அப்படிப் பல பொருள்களை ஏற்றிச் சென்று இறக்கிய பிறகு அக்கப்பல்கள் தம் பாரத்தைச் சுமந்த வருத்தத்தை ஆற்றி நிற்குமாம்.

சிறந்த நெறிமுறையில் அரசாளும் மன்னன் ஆளுவதால் பாரம் சுமந்த வருத்தம் நீங்கிய பூமிதேவியை அக்கப்பல்களுக்கு உவமையாகக் கூறுவான் கம்பன். கோசல நாட்டில் கடலே கிடையாது. கப்பல்கள் எங்கு வந்தன என்ற கேள்வி எழலாம். சரயு நதியே கப்பல்கள் செல்லும் அளவுக்கு அகலமாகவும், ஆழமாகவும் இருந்ததாம்.

அறநெறியை அறிந்து, பொருளாசையை நீக்கி, சினம் கொள்ள வேண்டிய நேரத்தில் சினம் கொண்டு, மக்களிடம் வரிப்பொருள் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என அறிந்து பெற்று, தன் ஆட்சியின் கீழ் வாழும் உயிரினங்களிடத்தில் இரக்கம் கொள்கிற புகழ் பெற்ற அரசன் பூமியைப் பாதுகாத்து வந்தான். அதனால் பூமியைச் சுமக்கின்ற தம் பாரத்தை இறக்கி இளைப்பாறுகின்ற பூதேவியைப் போலக் கப்பல்கள் அருமையான பொருள்களின் நிறைந்த பாரத்தை இறக்கிவிட்டு நெய்தல் நிலத்தில் பாரத்தைச் சுமந்த வருத்தத்தை ஆற்றிக் கொள்ளும்

கம்பன் காட்டும் ஐவகைத் தேன்

ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும்

சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும்

மாலைவாய் உகுத்த தேனும் வரம்புஇகந்து ஓடி வங்க

வேலைவாய் மடுப்ப உண்டு மீன்எலாம் களிக்கும் மாதோ [41]

[அரிதலை=அரியப்பட்ட நுனி; தொடை இழி இறால்= அம்பு தொடுக்கப்பட்ட தேன்அடை; வரம்பு=எல்லை; வங்கம்=கப்பல்; வேலை=கடல்; மடுத்தல்=கலத்தல்; மாதோ=அசைச்சொல்]

கரும்பாலைகளில் இருந்து கருப்பஞ்சாறாகிய தேன் ஓடி வருகிறது. தென்னை, பனை மரங்களின் நுனி அரியப்பட்டு அதன் பாளைகளிலிருந்து கள்ளாகிய தேன் ஓடுகிறது சோலைகளில் உள்ள மரங்களின் பழங்களிலிருந்து பழச் சாறாகத் தேன் ஓடி வருகிறது. அம்பு தொடுக்கப்பட்ட தேன் அடைகளிலிருந்து தொடர்ந்து தேன் ஓடி வருகிறது. மக்கள் அணிந்திருந்த மாலைகளிலிருந்து தேன் ஓடி வருகிறது. இந்த ஐவகைத் தேனும் எல்லை கடந்து ஓடிக் கப்பல்கள் உலவும் கடலில் போய்க் கலக்கின்றன. அவற்றை மீன்கள் எல்லாம் உண்டு களிக்கின்றன.

’தொடை இழி இறால்’ என்பது அருமையான சொல்லாட்சி. இது கம்பன் காட்டும் புதுமையான தேன். இதன் மூலம் கம்பன் அக்காலத்தில் வேடர்கள் தென் எடுத்த விதத்தைச் சொல்கிறான். வேடர்கள் தேனெடுக்க தேனடையை நோக்கி அம்பு எய்வார்கள். அம்பு அந்த அடையில் துளையிடும். அத்துளை வழியே தேன் இடைவிடாது அம்பின் வழியே அம்பின் அடி நுனியில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் ஒழுகும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அடைக்கும் சேதமேற்படாதவாறு, தேனீக்களுக்கும் துன்பம் செய்யாமல் தேனெடுக்கும் வழியைக் கம்பன் அறிந்திருக்கிறான். கடலுக்கு அடைமொழியாக வங்கம் எனும் சொல்லைக் கையாள்கிறான். அது வங்கக்கடல் என்று திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் சொல்வதாகும்.

நாடோடி – ராம்பிரசாத் சிறுகதை

அதிகாலை ஐந்து மணிக்கு தெருமுனைக்கு வந்திருந்தேன். அங்கே ஒரு கடை இருக்கிறது. நாளிதழ் கடை. அன்றைய தினத்துக்கான அத்தனை பத்திரிக்கைகளும் அங்குதான் வரும். அங்கிருந்து வெவ்வேறு கடைகளுக்கு பிரித்து அனுப்பப்படும்.

“திலகா வந்துடுச்சா?” என்றேன்.

“ஒங்க கதை வந்திருக்கா?” என்றார் கடைக்காரர். ஆம் என்பதாய் தலையாட்டினேன். திலகா வாராந்திரியை எடுத்து நீட்டினார். ஏழு ரூபாய் தந்துவிட்டு வாங்கிக்கொண்டு வீடு நோக்கி நடந்தேன்.

வீட்டிற்கு வந்ததும் பத்திரிக்கையைப் பிரித்துப் பார்த்தேன். முப்பத்தியிரண்டாவது பக்கத்தில் என் சிறுகதை வெளியாகியிருந்தது. நான் எழுதிய கதையை யாரோ வாசிக்கிறார்போல் ஒரு முறை வாசித்துப்பார்த்தேன். எனக்கு திருப்தியாக இல்லை. சரியான பாதையில் தான் சென்றுகொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. நாம் எழுதியது நமக்கே திருப்தியாக இருந்துவிடவே கூடாது. அப்போதுதான் அந்த திருப்தியை எட்டிவிடும் முயற்சியாக இன்னுமொரு கதை எழுதத் தோன்றும். அதையும் சற்றே குறையாகத்தான் எழுதவேண்டும். அதுதான் நம்மைத் தொடர்ந்து எழுதவைக்கும். இது ஒரு தந்திரம் தான்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நான் பத்திரிக்கையில் எழுதுவதற்கான அசலான காரணம் வேறு.

என் வீடு ஒரு மத்தியவர்க்க அபார்ட்மென்ட் ஒன்றில் இரண்டாவது மாடியில் இருந்தது. குடும்பம், மாதா மாதம் சம்பளம், அந்த சம்பளத்துக்குள் சந்தோஷம், துக்கம் இப்படியானவர்களுக்கு மத்தியில் வாழ ஒரு தகுதி இருக்கிறது. அது இருப்பதாகக் காட்டிக்கொள்ளத்தான் இந்த ‘எழுத்தாளன்’ பிம்பம்.

நான் திருடன் இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்வரை ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். அங்கே நான் சமர்ப்பித்த சான்றிதழ்கள் போலி என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். நீதிமன்றம், வழக்கு என்றெல்லாம் போகாமல் விட்டுவிட்டார்கள். அதற்குக் காரணம் இருந்தது. அந்தக் கல்லூரி ஒரு அங்கீகாரம் பெறாத கல்லூரி. என் விஷயத்தைப் பெரிதுபடுத்தினால், அவர்களின் முகத்திரையை நான் கிழிக்க வேண்டி வரும். ஜென்டில்மேன்கள் போல் அவரவர் பாதையில் விலகிக்கொண்டோம்.

இந்தத் தந்திரம், அதிலிருக்கும் புத்திசாலித்தனம் என் தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்தது. என் தகப்பனார் (அப்படித்தான் எனக்கு அவர் அறிமுகப்பட்டிருந்தார்) ஒரு அக்மார்க் நாடோடி. அப்போது இந்திய பிராந்தியத்தில் முகலாயர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அது சுமார் எழுநூறு ஆண்டுகள் இருக்கலாம். அதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. காட்டு வாழ்க்கை எந்த ஆட்சியையும் சாராதது. அத்திப்பூ பூத்தாற்போல் அவ்வப்போது எந்த அரசனாவது, படை பரிவாரங்களுடன் காட்டுக்குள் வேட்டைக்கு வந்து பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்.

என் தந்தை எனக்கு முன்பே சுமார் பத்தாயிரம் ஆண்டுகளாக பூமியின் வாழ்ந்துகொண்டிருப்பதால், காடுகள் தாம் தமக்கேற்ற இடம் என்று அவ்வப்போது சொல்லக் கேட்டிருக்கிறேன். காடுகளில் தான் அவர் மூப்படையாததை யாரும் பார்க்க முடியாது. காடுகள் மூப்படைவதில்லை. அதே நேரம் காடுகள் வெளி உலகு குறித்த தகவல்களைப் பூடகமாகச் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்று அவர் எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தார். அதன் படி அவர் நாகரீகங்களை பகுத்தார். அதன்படி முதலில் காடுகள் ஆதிக்கம் செலுத்தும் நாகரீகங்களே உருவாகும் என்றார். அதுதான் கற்காலமாக இருந்திருக்கிறது என்று நான் புரிந்துகொள்ள அது உதவியது. எகிப்தின் கீசா பிரமிட் கட்டுமானத்தின் போது நைல் நதிக்கரையில் இருந்தபடி கூலி ஆளாக அவர் வேலை பார்த்த கதைகளை அவர் சொல்ல நான் பல முறை கேட்டிருக்கிறேன்.

பின், நாகரீகங்கள் காடுகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் என்று கணித்தார். அதைத்தான் முகலாயர்கள், பின் அவர்களைத்தொடர்ந்து கிருத்துவ மதத்தினர் ஆதிக்கம் செலுத்திய காலகட்டமாக நான் புரிந்துகொள்ள அந்த கணிப்பு உதவியது. இந்தக் காலகட்டங்களில், அவ்வப்போது போர்களின் நிமித்தம் இரவுகளிலும் இரண்டு பிரதேசங்களின் போர் வீரர்கள் காடுகளுக்குள் பதுங்கித் திரிய நானும் என் தந்தையும் அவதானித்திருக்கிறோம். அப்போதெல்லாம் காட்டு விலங்குகள் தங்களை அண்டாமல் இருக்க, மிகச் சத்தமாக தண்டோரா போட்டபடியே காடுகளுக்குள் செல்வார்கள். அப்படித்தான் இசை எனக்குப் பரிச்சயமானது. தொடர்ந்து, மூங்கிலைக் கொண்டு புல்லாங்குழல் மூலமும், மூங்கிலை கொடியால் வளைத்துக் கட்டி அந்தக் கொடி நரம்பை மீட்டுவதன் மூலமும் இசையை என் தந்தை என் பொருட்டு விரித்துக் காட்டினார். பொழுது போகாத தருணங்களில் நாங்கள் அவைகளைக் கொண்டு இசையை உருவாக்கி மகிழ்வோம்.

பின் ஒரு கட்டத்தில், பூட்சு அணிந்த வெள்ளை மனிதர்கள் காட்டுக்குள் வந்து வன விலங்குகளை வேட்டையாடிவிட்டுச் செல்வதை அவர்கள் வீசி எறிந்த மது போத்தல்களை வைத்து கண்டுகொண்டிருக்கிறோம். அந்த மது பொத்தல்களில் எழுதியிருக்கும் வாசகங்களை அவர் படித்துக் காட்டுவார். அவ்விதம் ஆங்கிலத்தை எனக்கு அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் எனக்கு அந்த மொழியை கற்றுக்கொடுக்கவும் செய்தார். நான் பிறக்கும் முன்பே அவர் பல கண்டங்கள் நாடோடியாகச் சென்று வந்திருக்கிறார் என்பதை எனக்கு புரிய வைத்த கணமும் அதுவே. அப்போதெல்லாம் நாங்கள் காட்டை விட்டு வெளியே செல்ல நான் ஆலோசனை சொன்னபோதெல்லாம், காடுதான் பாதுகாப்பு என்று என் தந்தை தொடர்ந்து வலியுறுத்தி நான் பார்த்திருக்கிறேன். காடுகளை வைத்து நகர மாற்றங்களை பகுத்ததை வைத்து, பின், நாகரீகங்கள் காடுகளை ஆதிக்கம் செலுத்தும் என்று கணித்தார்.

என் தகப்பனார் என்னைக் காட்டிலேயே வளர்த்தார். குடகு மலையில் சில பொந்துகள் இருந்தன. ஒரு காலத்தில் போர்களின் போது மறைந்திருந்து தாக்கப் பயன்பட்டிருக்கலாம். புதர்களால் மறைக்கப்பட்ட அந்த பொந்துகளில் ஒன்றில் தான் எங்கள் வசிப்பிடம். காட்டில் என்ன கிடைக்கிறதோ, அதை அவர் எடுத்து வந்து தருவார். தானும் உண்பார். சில நேரங்களில் அணிலோ, முயலோ எது கிடைத்தாலும் வேட்டையாடி நெருப்பில் சுட்டுத் தின்போம். அவர் எனக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுத்தார். தமிழில் என்ன எழுதியிருந்தாலும் படித்துவிடக்கூடிய அளவிற்கு மட்டுமே இருந்தது என் கல்வி ஞானம். அதை அடிப்படையாக வைத்து, கிரகங்கள், சூரியன், சந்திரன், கிரகணம் என்று என் தந்தை தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் எனக்குக் கற்றுத்தந்தார். அவருக்கு அதெல்லாம் எப்படி தெரிந்தது என்று நான் சமயத்தில் வியந்திருக்கிறேன். தான் சுமார் மூவாயிரம் வருடங்களாக இப்பூமியில் உலவிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். தான் ஒரு தீவொன்றில் பிறந்ததாகவும் அது தற்போது கடலுக்கடியில் இருப்பதாகவும், அவருக்கு ஒரு தமிழ்ப்பெண் மீது முதலும் கடைசியுமாக வந்த காதலில் நான் பிறந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

அமாவாசை பவுர்ணமி தினங்களில் திடீரென காணாமல் போய்விடுவார். நான் அவரைக் காடு முழுக்கத் தேடித்தேடி அலைவேன். அலைந்து அலைந்து சோர்ந்து கிடைத்த இடத்தில் தூங்கிவிடுவேன். முதல் முறை அப்படி ஆனபோது கிட்டத்தட்ட அவரைத் தேடி நான் சோர்ந்திருந்த சமயம் அவராகவே என்னை வந்தடைந்தார். அன்று நான் அவர் முகத்தில் ஒரு வித்தியாசமான ஒளியை முதன் முதலாகப் பார்த்தேன்.

அதை எப்படி விளக்குவது என்று எனக்கு இப்போதும் தீர்மானமில்லாமல் இருக்கிறது. ஆனால், ஏதோ ஞானமடைந்தவன் போல, ஏதோ பிரபஞ்ச ரகசியங்களை உணர்ந்துகொண்டவன் போல இருந்தது அவர் முகம். அதன் பிறகு பல முறை காணாமல் போயிருக்கிறார். நானும் கண்டுகொண்டதில்லை. எப்படியேனும் திரும்பிவிடுவார் என்று நான் அறிந்தே இருந்தேன். என்னை அவர் ஏமாற்றியதே இல்லை.

ஒரு முறை ஓர் இரவில் என்னை என் தந்தை எங்கோ அழைத்துப்போனார். அது ஒரு பள்ளத்தாக்காக இருந்தது. நாங்கள் மெல்ல இறங்கினோம். பாறைகளுக்கிடையே முளைத்திருக்கும் செடியொன்றில் வேரைப் பற்றி, கற்களின் மேடு பள்ளங்களில் இருந்த இறுக்கங்களையும், தளர்வுகளையும் லாவகமாகப் பயன்படுத்தி நான் இறங்கிக்கொண்டிருக்க, எனக்கு வழிகாட்டும் முகமாய் அவர் எனக்குக் கீழே இறங்கிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் என் கால்களை எதுவோ பற்றி இழுக்க நான் குனிந்து கீழே பார்த்தேன். விக்கித்துப்போனேன். என் கால்களைப் பற்றி இழுத்தது என் தந்தை தான்.

இருவரும் கீழே விழுந்தோம். கும்மிருட்டாக இருந்தது. அது எங்களுக்கு வழமை தான் குகைக்குள் இரவுகளில் அப்படித்தான் இருக்கும். என் தந்தைக்கு அந்த இடம் பரிச்சயமாகியிருந்தது. பசிக்கு அங்கிருந்த சில இலைகளைப் பிடுங்கி சாறு பிழிந்து தந்தார். அதை உட்கொண்டதும் நான் சுய நினைவை இழந்துவிட்டேன். நான் திரும்ப எழுந்தபோது வாய் கசந்தது. மற்றபடி வேறெந்த பக்கவிளைவுகளும் இல்லை. இனிமேல் எனக்கு வயதே ஏறாது என்றார். ஒரு நாள் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டு பின் திரும்பி வராமலேயே போய்விட்டார்.

அவரின்றி காட்டில் இருக்கப்பிடிக்காமல், தான் நான் நாடடைந்தேன். என் தந்தை கணித்தது போல், நகரங்களை காடுகளைச் சிறிது சிறிதாக விழுங்கி ஜீரணித்தே வளர்ந்தன. என் போன்ற சக மனிதர்களைப் பார்த்தேன். பழகினேன். அவர்கள் தங்களைப் போல் உள்ள ஒருவனையே தங்களுக்கிடையே அனுமதிக்கிறார்கள் என்று அறிந்து அவர்களைப் போல் நடிக்கத்துவங்கினேன். அதில் பல சங்கடங்களை அனுபவிக்க நேர்ந்தது. எனக்கு என் தந்தை அந்த பச்சிலைச்சாற்றைப் புகட்டியபிறகு எனக்குப் பசிப்பதே இல்லை. ஆனால், மற்றவர்கள் மதிய உணவு இடைவேளைக்குப் போனால் நானும் உணவகம் போகிறேன் என்று எழுந்து கொள்ளத்துவங்கினேன். எங்கேனும் ஒரு மணி நேரம் சுற்றிவிட்டு திரும்பிவிடுவேன். மற்றவர்கள் போல் ஏதேனும் ஓர் வேலையில் ஒண்டியிருக்க முனைந்தேன். இப்போது வரை பலவிதமான வேலைகள் பார்த்திருக்கிறேன்.

பிரியாணி மாஸ்டராக, லாரி டிரைவராக, கணக்கு வாத்தியாராக, சாமியாராக, மருத்துவராக, செவிலியராக, போர் வீரனாக, துப்புறவுத் தொழிலாளியாக, கொலைகாரனாக, இரவுத்திருடனாக, அலைபேசிகள் மற்றும் கணிணி முதலான சாதனங்கள் விற்பவனாக, இப்படி எத்தனையோ வேலைகள். ஒரே இடத்தில் வெகு நாட்கள் இருப்பதில்லை. இருந்தால் நான் மூப்படையாததை யாரேனும் கண்டுபிடித்துவிடக்கூடுமென்று இடம்மாறிக்கொண்டே இருப்பேன். இந்த காரணத்துக்காகவே நான் திருமணமும் செய்துகொண்டதில்லை, அந்தந்த காலகட்டத்தில் சரித்திர நிகழ்வுகளில் பங்கேற்றதில்லை. ஏனெனில் என் போன்றவர்கள் மூப்படையாதது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது. நிரந்தரமாக வீடு இல்லை. வாடகை வீடு தான். வாடகை தர, மின்சார கட்டணம் செலுத்தப் பணம் தேவைப்பட்டது.

என் தந்தை எனக்குப் பரிச்சயப்படுத்திய மூங்கில் இசை, வெகுவாக பரிணமித்து இசையை ஒரு சிறிய டேப்பில் சேகரித்து, தேவைப்படும் போது கேட்டுக்கொள்ளும் வகைக்கு வேறொரு கட்டத்தை அடைந்திருந்தது. எனக்குப் பிடித்த இசையைக் கேட்க வானோலி, டேப் ரிக்கார்டர், சி.டி, பென் டிரைவ், கணிணி போன்ற மிண்ணனு சாதனங்கள் வாங்க வேண்டி இருந்தது. இதற்கெல்லாம் பணம் தேவைப்பட்டது. எத்தனையோ விதமான இசையை பல நூற்றாண்டுகளாக அவற்றின் பரிணாம வளர்ச்சியோடு அவதானித்தது, இசை என்பது முறையாகச் சேர்க்கும் பிழைகளோ என்றே எனக்கு தோன்றியிருக்கிறது.

வேலை நேரம் போக, குடும்பம் என்று ஏதும் இல்லாததால், வீட்டில் பெரும்பாலும் ஓய்வு நேரங்களாகவே இருக்கும். அதில் நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். இசை கேட்பேன். அதன் மூலம் நிறைய கற்றிருந்தேன். அதை வைத்துத்தான் அந்தப் பச்சிலைச்சாறு என்னை என்ன செய்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. நம் உடல் செல்களால் ஆனது. அது தினம் தினம் பிறக்கும், தினம் தினம் இறக்கும். சாதாரண மனிதர்களுக்கு அந்தச் செல்கள் இறக்கும் வேகத்தில் மறுபடி பிறப்பதில்லை. மறு பிறப்பு விகிதம் குறையக் குறைய உடல் மூப்படைகிறது. ஆக, மூப்பு என்பது நம் உடலில் உள்ள செல்களின் மறுபிறப்பு விகிதத்தைப் பற்றிக்கூறுவது. அந்தச் சாறு என் உடல் செல்களின் இறப்பு விகிதத்தையும், மறுபிறப்பு விகிதத்தையும் ஒன்றாக்கிவிட்டது. அந்த மூலிகை எது என்று எனக்கு என் தந்தை சொல்லித்தரவே இல்லை. ஆனால் அந்த மூலிகை என் உடலில் ரத்தத்தில் கலந்திருக்கிறது என்பதால் நான் யாருக்கும் ரத்த தானமோ, உடல் உறுப்பு தானமோ செய்யக்கூடாது என்று கூறியிருந்தார்.

ஆனால், இப்பொது என் பிரச்சனையே வேறு.

தேனீக்களை எடுத்துக்கொண்டால், அவைகள் சதா பூக்களை அண்டி அவற்றிலிருந்து மகரந்தங்களை சேகரித்துக்கொண்டே இருக்கும். ஏன் சேகரிக்கிறோம், எதற்கு சேகரிக்கிறோம் என்ற எந்த கேள்வியும் இல்லை. இறுதியில், அவைகள் பாடுபட்டுச் சேர்த்த அத்தனை தேனையும் மனிதர்கள் வந்து அள்ளிக்கொண்டு போவார்கள். இந்த தேனீக்கள் மீண்டும் வேறொரு கிளையில் மகரந்தங்கள் சேகரிக்கப் போய்விடும். இதை ஒரு குறியீடாகப்பார்க்கிறேன். இப்படி சில மனிதர்கள் இருக்கிறார்கள். சம்பாதிப்பார்கள். வேலை, வீடு, குடும்பம் தவிர வேறொன்றும் தெரியாது. இறுதியில் சேர்த்த பணத்தையெல்லாம் நகையாக்கி பெண்ணின் திருமணத்துக்கு செலவு செய்துவிட்டு ஓட்டாண்டியாய் நிற்பார்கள்.

யானைகளை எடுத்துக்கொண்டால், அவைகள் அச்சமூட்டும் உருவத்தைக் கொண்டிருந்தும், இரண்டு கால் மனிதனுக்கு கட்டுப்பட்டு கோயில் வாசலில் கடந்து செல்லும் மனிதர்களைக் கும்பிட்டு நிற்கும். இதையும் ஒரு குறியீடாகப் பார்க்கிறேன். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். தன் அசலான பலமே தெரியாமல் அடுத்தவனுக்கு சலாம் போட்டு நிற்பார்கள்.

சிலர் கடினமாக உழைத்து மிகப்பெரும் செல்வம் சேர்த்து உயர்ந்த இடத்துக்குச் செல்வார்கள். சட்டென அத்தனை செல்வத்தையும் இழந்து திருவோடு ஏந்தும் நிலைக்கு வந்துவிடுவார்கள். அவர்களைக் குறிப்பால் சுட்டுவதாகவே நான் சர்ப்பங்களைப் பார்க்கிறேன்.

மற்றவர்கள் ஏங்கும் ஒன்று கிடைத்துவிடுவதாலேயே, வாழ்வின் அத்தனை பேறுகளையும் பெற்றுவிட்டதாக வாழ்நாள் முழுவதும் நினைத்துக்கொண்டே எந்த பேறுமற்ற ஒரு சாப வாழ்வை, அது சாப வாழ்வென்றே தெரியாமல் வாழ்ந்து தீர்த்துவிடுவார்கள் சிலர். இவர்களை பொந்துக்குள் தலைவிட்டுக்கொள்ளும் நெருப்புக்கோழியாகவே நான் பார்க்கிறேன்.

இப்படி நிறைய சொல்லலாம். இப்பூலகில் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவிட்டேன். நான் அவதானித்த வரையில், மனித வாழ்வின் மையம் என்பது ஒரு உயிரினத்தின் இயங்குமுறையோடு ஒப்பிட இயலுவதாகத்தான் எக்காலமும் இருந்திருக்கிறது. வேறு விதமாகச் சொல்வதானால், ஒரு உயிரினத்திடம் ஒரு குறிப்பிட்ட இயங்குமுறை காணப்பட்டால், அது ஏதாவதொரு மனிதனின் வாழ்க்கையின் மையமாக இருக்க மிக அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது.

என் அவதானங்களை மூன்றாகப் பகுத்துவிட முடியும். இந்த மூன்று விஷயங்களே என்னை, இப்பூவுலகில் என் இருப்பை அச்சுறுத்துவதாக இருக்கிறது.

முதலாவது, எனக்கு இந்த பூவுலகில் ‘விழிப்பு’ ஏற்பட்ட போது எனக்கு தந்தை என்று ஒருவர் இருந்தார். அப்போது முகலாயர்கள் இங்கே ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். அப்போதே பண்டமாற்று ஒழிந்து பணம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மக்கள் விவசாயம் செய்தார்கள். நிலச்சுவாந்தார்கள் கூலிகளை உருவாக்கினார்கள். நிலச்சுவாந்தார்களை சிற்றரசர்களும், சிற்றரசர்களை பேரரசர்களும், பேரரசுகளை சூழ்ச்சியால் வியாபாரிகளும் கட்டுப்படுத்தினார்கள். எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த அமைப்பில் பெரிய மாற்றங்கள் உருவாகவில்லை. இது, பெரிய மாற்றங்கள் உருவாக மீக நீண்ட காலம் ஆகும் என்ற எண்ணத்தை எனக்குள் வலுவாக விதைத்துவிட்டது.

இரண்டாவது, இந்த உலகில் ஒவ்வொரு மனிதனின் குணாதிசயத்திற்கும் ஒரு உயிரினத்தை என்னால் சுட்டிவிட முடியும். நான் இந்த எழுநூறு வருடங்களில் எண்ணற்ற உயிரினங்களையும், மனிதர்களையும் கூர்ந்து அவதானித்திருக்கிறேன். இந்த அவதானத்தைக் கொண்டு, என்னால், ஒரு மனிதனை, அவனை முதன் முதலில் பார்த்த மாத்திரத்தில் அவனது பூவுலக வாழ்வின் மைய இயக்கத்தை எட்டிவிடமுடியும். அதை எட்டிவிட்டபிறகு எனக்கு அந்த மனிதன் சலித்து விடுகிறான். அதற்கு மேல் அவனிடம் புதிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை என்றாகிவிடுகிறது. இந்த என் அவதானத்தை பொய்பிக்கும் ஒரு மனிதனை நான் இதுகாறும் பார்த்ததே இல்லை. அவன் தனக்கு முன் வாழ்ந்த தன்னைப் போன்ற ஒருவனிடமிருந்து அதிகம் வேறுபடுவதில்லை. இதுவே என்னை சலிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் எங்கு திரும்பினாலும் இப்படி சல்லிசாக ஊகித்துவிடக்கூடிய மனிதர்களே என் கண்களுக்குத் தெரிகிறார்கள்.

இது பரவாயில்லை என்று உங்களுக்குத் தோன்றலாம். அங்குதான் மூன்றாவதுக்கான காரணங்கள் உருவாகிறது.

மூன்றாவது என்னவெனில், இப்படி சல்லிசாக ஊகித்துவிடக்கூடிய மனிதர்களையெல்லாம் தாண்டி பிரத்தியேகமான, ஊகிக்கவே முடியாத சில மனிதர்களும் இந்தப் பூமியில் பிறக்கிறார்கள் தான். ஆனால், இரண்டாவதாக வரும் சல்லிசாக ஊகித்துவிடக்கூடிய மனிதர்கள் இந்த மூன்றாமவர்களை வாழவே விடுவதில்லை. இதுவும் ஒரு கட்டத்துக்கு மேல், எளிதில் ஊகித்துவிடக்கூடிய ஒரு இயக்கமாக ஆகிவிடுகிறது.

இவர்களுக்கு மத்தியில் என் வாழ்க்கை சுவாரஸ்யப்படுவதில்லை. யாரைப் பார்த்தாலும் சலிக்கிறது.

சரி, ஒரேயடியாய்ப் போய்ச் சேர்ந்துவிடலாமென்றால், என் தந்தை எனக்களித்த மூலிகைச்சாறு இறப்பையே நெருங்க அனுமதிப்பதில்லை. இரண்டு மூன்று முறை விஷமருந்தியும் பார்த்தாகிவிட்டது. என் உடலில் செல்கள் மறுபிறப்பு விகிதம் நூறு சதம் என்பதால் விஷம்தான் தோல்வி அடைகிறதே ஒழிய என்னுடல் அப்படியே தானிருக்கிறது. விபத்துக்களில் சிக்கி வலியெடுத்துச் சாக எனக்கும் விருப்பமில்லை.

எத்தனையோ யோசித்துவிட்ட பிறகு ஒரு திவ்விய தருணத்தில் அது எனக்குத் தோன்றியது. உடல் இயங்க பிராணவாயு முக்கியம். அதை மட்டுப்படுத்திவிட்டால்? மூளைக்கு ஆக்சிஜன் செல்லாமல் மூளை இறக்க நேரிடும். மூளை இறந்தபிறகு உடல் உயிருடன் இருந்து என்ன பயன்?

ஆம்.

அதைத்தான் செய்ய இருக்கிறேன். என் மூளையைக் கொல்ல இருக்கிறேன். அதற்கென ஒரு பெட்டி செய்யத்துவங்கியிருந்தேன். அது இந்த நாளின், திலகாவில் என் சிறுகதை வெளியான தினத்தில் தான் பூரணமாகவேண்டுமென்று இருந்திருக்கிறது. இதைக்கூட நான் ஒரு வாரம் முன்பே கணித்துவிட்டிருந்தேன். பார்த்தீர்களா? இந்தச் சின்ன விஷயத்தில் கூட எனக்கு எவ்வித ஆச்சர்யமோ, எதிர்பாராத தன்மையோ இருக்கவில்லை.

நான் இரவு வரும் வரை காத்திருந்தேன். இரவாகி நகரம் அடங்கிவிட்டபிறகு சற்று தொலைவிலிருந்த மயானத்திற்கு அந்தப் பெட்டியுடன் சென்றேன். இறந்த ஒருவரைப் புதைக்கும் போது அவர் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துப் புதைப்பது தானே தமிழர் மரபு. அதன்படி, நான் பயன்படுத்திய மடிக்கணிணி, நூல்கள் ஆகியவைகளையும் எடுத்துச்சென்றிருந்தேன். மயானத்தில் ஆறடி ஆழத்தில், இரண்டடி அகலத்தில் குழி தோண்டினேன். அதில் அந்தப் பெட்டியைக் கிடத்தினேன். அதனுள் நான் பயன்படுத்திய அனைத்தையும் கிடத்தினேன். பிறகு நானும் என்னை அதில் நிறைத்துக்கொண்டு பெட்டியை இறுக மூடி உட்புறமிருந்து ஆணியால் காற்று கூட புக முடியாத அளவிற்கு அந்தப் பெட்டியை அறைந்து மூடினேன்.

என்னிடம் திட்டம் தெளிவாக இருந்தது. அது ஒரு பழைய மயானம். அருகாமையிலிருந்த மலையொன்றிலிருந்து உருவாகி கடலை நோக்கிச்செல்லும் ஒரு ஆற்றின் ஓரமாய் அமைந்திருந்தது அந்த மயானம். நாளை அந்த மலை மீது அமைந்திருந்த நீர்த்தேக்கத்தைத் திறக்க இருக்கிறார்கள். மதகைத் திறந்தவுடன் பெருகி வரும் நீர் நான் வெட்டிய குழியின் மீது மண்ணையும், குப்பைகளையும் கொண்டு மூடிவிடும். பிராணவாயு இன்றி என் மூளைக்கு மரணம் சாத்தியமாகிவிடும். வேறெப்படியும் என்னால் இந்த வாழ்வை முடித்துக்கொள்ள முடியாது.

பெட்டியை இறுக மூடிய கொஞ்ச நேரத்தில் எனக்கு மயக்கம் வந்தது. கண்களை மூடிக்கொண்டேன். எழுநூறு ஆண்டுகள்!! தேவைக்கும் அதிகமாய். இந்த பூவுலக வாழ்வை தரிசிக்க வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், என் தந்தைக்கும் என் நெஞ்சார்ந்த நன்…………………………………………………………………………………………………………………………..

உடலில் வெய்யிலின் வெக்கை படிவதைப் போல் உணர, மங்கலாய் எதுவோ தோன்றி அதனிலிருந்து உயிர்ப்பெறுவது போல் நான் திடுக்கிட்டு எழுந்தபோது அது ஒரு பாரிய நிலப்பிரதேசமாகத்தான் இருந்தது. எங்கும் வெறும் பாறைகள். மலைகள். என் நரம்புகள் புடைத்து, விரைத்தன. முயங்க வேண்டுமென்று ஒரு உத்வேகம் உடலில் எந்தப் பகுதியிலிருந்தோ முளைத்து உடல் முழுவதும் வியாபித்துக்கொண்டிருந்தது. வானில் சூரியன் பிரகாசமாய்த் தோன்றியது.

என்னைச்சுற்றி என் மடிக்கணிணி சிதைவுண்ட நிலையில் கிடந்தது. ‘சுவர்க்கம் இப்படியா இருக்கும்?’ என்றெண்ணியபடி நடந்தேன்.

அதுகாறும் உறக்கத்தில் இருந்ததாலோ என்னவோ, புதிதாக நடை பயிலும் குழந்தை போல, நான் நடந்து கொண்டே இருந்தேன். நிற்கவேண்டும் என்றோ, அமர வேண்டும் என்றோ தோன்றவே இல்லை. நடக்க நடக்க எங்குமே ஒரு சின்னச் செடி கூட இல்லை. பூமி முற்றிலுமாக மலடாகிப்போனது போலிருந்தது. நீரின் சுவடு கூடத் தெரியவில்லை. காகம், ஈக்கள், பூச்சிகள் என எந்த சிற்றுயிரும் கண்ணில் தென்படவில்லை. ஏதோ வரண்ட பாலைவன மலைப்பகுதியில் நடப்பது போலிருந்தது. நடந்து நடந்து ஒரு மலையை அடைந்தேன். அது ஏதோ பரிச்சயமான மலை போல் தோன்ற கூர்ந்து கவனித்ததில் அது என் தந்தை என்னை அழைத்துச்சென்று ஒரு பள்ளத்தாக்கில் கால் பிடித்து இழுத்தாறே அதே மலை தான் என்பது புரிந்தது.

‘அப்படியானால் இன்னமும் பூமியில் தான் இருக்கிறோமா? எங்கே எல்லோரும்?’

கேள்விகளுடன் எதுவும் புரியாமல், மலையை நோக்கி நடந்தேன். இது தான் நான் முன்பு வாழ்ந்த பூமியின் தற்போதைய நிலை எனில், நான் குறைந்தபட்சம் பத்தாயிரம் வருடத்திற்காவது புதையுண்டே இருந்திருக்கவேண்டும். அந்த மலையைத் தொடர்ந்து சுற்றிவர, நான் என் தந்தையால் இடறப்பட்டு விழுந்த பள்ளம் தென்பட்டது. என் தந்தையின் நினைவு உந்த நான் அந்தக் பள்ளைத்தை எக்கி முழுமையாகப் பார்த்தேன். பின் பள்ளத்திற்க்குள் இறங்கினேன். சிறிதாய், மிகம்மிகச் சிறிதாய் ஒரு செடி முளைத்திருந்தது. அந்தச் செடியின் இலைகளைக் கண்ணுற்றேன். அருகே நெருங்கிப் பார்க்கையில் அந்த இலையிலிருந்து வந்த வாசம் எனக்கு முன்பே பரிச்சயமாகியிருப்பதை உணர முடிந்தது. என் வாய் கசந்தது.

அதில் நான் பார்த்தது என்னை மலைக்க வைத்தது. அவைகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன். அவைகள் விட்டத்தில் ஒன்றரை மில்லிமீட்டர் அளவே உள்ள எட்டு கால்களைக் கொண்ட சின்னஞ்சிறு ஜந்துக்கள். பெயர் டார்டிகிரேட்.

டார்டிகிரேட்கள் மைனஸ்272 டிகிரி குளிரிலும் உயிர்வாழக்கூடியவை. பிராணவாயுவே இல்லாத வெற்றிடத்தில் விட்டால், க்ரிப்டோபையோசிஸ் எனப்படும் நீள் உறக்கம் கொள்ளக்கூடியவை. சாதகமான சூழல் வரும்போது மீண்டும் உயிர்பெற்று வாழக்கூடியவை. இத்தகுதிகளுடன் அவைகள் கிரகம் விட்டு கிரகம் கூட பயணிக்க வல்லவை.

நான் இத்தனை காலமும் சாகவே இல்லை என்பதும், இதுகாறும் வெறும் ஒரு நீள் உறக்கத்தில் தான் இருந்திருக்கிறேன் என்பதும் இப்படித்தான் எனக்குப் புரிய வேண்டுமென்றிருந்திருக்கிறது. என் தந்தை இந்த இலைகளைக் கசக்கி சாறு பிழிந்து எனக்குத் தந்திருக்க வேண்டும். இந்த இலைகள் மீதுள்ள டார்டிகிரேட்களின் மரபணுக்களை இந்த இலைச்சாறு என் மரபணுவில் கலந்து விதைத்திருக்க வேண்டும். இந்த இயக்கங்களின் கூட்டு பலனாய் நான் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு நீள் உறக்கத்தில் மூழ்கியிருந்திருக்க வேண்டும். என்ன நடந்திருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

சாவு என்ற ஒன்றே இல்லாமல் எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக நான் வாழ்ந்திருந்தபோதான வாழ்க்கை என்பது ஒரு இசைக்குறிப்பை, அதன் முழுமைத்தன்மையை வெளியிலிருந்து அவதானிப்பது போலாகிவிட்டிருந்தது. அந்த இசை எனக்குப் புரியாதவரை, அந்த இசை என்னை ஈர்த்தது. அந்த இசையை நான் கேட்கத்தலைபட்டேன். அதில் திளைத்தேன். அதில் பிரபஞ்சத்தை உணர்ந்தேன். அதில் கடவுளை உணர்ந்தேன்.

ஆனால், அந்த இசைக் கோர்வையின் ரிஷிமூலம், நதிமூலம் தெரிந்தவிட்டபிறகு, அந்த இசை, அதன் முழுமைத்தன்மை, அதன் ஏற்ற இறக்கங்கள் என எல்லாமும் தெரிந்துவிட்டபிறகு, அந்த இசைக்கோர்வை ஒரு இசைக்கோர்வையாக உருவாக எதையெல்லாம் உள்ளடக்க வேண்டும், அப்படி உள்ளடக்க வேண்டியதன் நிமித்தம் எதையெல்லாம் தவர விட வேண்டும், புறக்கணிக்க வேண்டும் என்பது என் கண்களுக்கு தென்படலாயிற்று. எந்த இசைக்கோர்வையும் எல்லாவற்றையும் உள்ளடக்கி உருவாகலாகாது, அது சாத்தியமல்ல என்கிற பேருண்மை எனக்கு உரைத்தபோது நான் அதிர்ந்துபோனேன். ஏமாற்றமாய் உணர்ந்தேன். இந்த அதிர்ச்சி, ஏமாற்றம் இறைவன் என்பவன் அப்படி ஒன்றும் எட்டிவிடமுடியாத கலை ஞானம் கொண்டவனல்ல என்பதைப் புரியவைத்தபோது அது என் ஏமாற்றத்தை பன்மடங்கு கூட்ட மட்டுமே உதவியது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இசையை ரசிக்க வேண்டுமானால், அதன் முழுமைத்தன்மையைத் தெரிந்துகொள்ளக்கூடாதோ என்கிற தோற்றம் வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ஆனால், ஒரு ரசனை என்பது அறிவின் மூலமாக பெறுகவேண்டுவது தான் எனும்போது, அறிவின் பெறுக்கம் ஒரு கட்டத்தில் ரசனையைக் கொன்றுவிடும் எனும்போது, இசைக்கோர்வையின் நோக்கம் தான் என்ன?

இப்போது என் முன் பூமி என்கிற இந்தக் கிரகமும், கொஞ்சம் டார்டிகிரேட்களும், ஒரு செடியும் இருக்கின்றன. இந்த பிரபஞ்சம் இனி தன் கையிலிருப்பவற்றை வைத்து உருவாக்க இருக்கும் எந்த இசைக்கோர்வையின் எந்த அசைகள் நானும், பூமிக்கிரமும், அந்தச் செடியும், டார்டிகிரேட்களும் என்கிற கேள்வி ஒரு கரையான் போல என் சிந்தையை அரிக்கத்துவங்கியிருக்கிறது.

வலசையை துறந்த பறவையின் வாழ்க்கை சரித்திரம் – அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ குறித்து நரோபா

புலம்பெயர் இலக்கியத்தில் முதல் தலைமுறையினரின் எழுத்துக்கள் பலவகையிலும் முக்கியமானவை. அடையாள சிக்கலின் ஆவணங்களும் கூட. பிறந்து வளர்ந்த மண் அவர்களை வடிவமைத்திருக்கும். வாழ்வையும் வளத்தையும் கனவில் சுமந்தபடி புதியநிலத்தில் வேர்விட அத்தனை ஆண்டுகாலம் அவர்களை வடிவமைத்த வார்ப்புகளை உடைத்துக்கொண்டு புதிய வார்ப்புகளுக்குள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். இந்த மாற்றம் புறத்தில் எளிதில் நிகழ்ந்துவிடக்கூடும். ஆனால் அகத்தில் இவை நிகழ்வது அத்தனை எளிதல்ல. பொருந்தா காலனியின் கட்டைவிரல் வலியைப்போல், அல்லது அளவுகுறைந்த சட்டையின் பிதுக்கங்கள் போல் சில தொந்திரவுகள் வெளிப்படவே செய்யும். ஒன்றை கைவிட்டு மற்றொன்றை கைக்கொள்ளும்போது ஏற்படும் உராய்வுகள் வலுவான கதைகளை உருவாக்க உதவும். இந்த பின்புலத்தில்  எட்டு கதைகள் கொண்ட அழகுநிலாவின் சங் கன்ச்சில் ஒரு நல்ல வரவாக கருத முடியும்.

 

புலம்பெயர் எழுத்தை பற்றி பேசும்போது இயல்பாக பெண்களின் வாழ்வியல் எழுத்தும் (இது பெண்கள் எழுதுவதல்ல) சேர்த்தே வாசிக்க முடியும். இந்திய சூழலில் திருமணம் வழியாக பெண் புலம் பெயர்கிறாள். தன் அடையாளங்களை மறுவரையறை செய்துகொள்கிறாள். கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ போன்ற ஒரு நாவலை அஞ்சலையின் புலம்பெயர்வு மற்றும் அடையாள சிக்கலாக வாசிப்பதற்கு இடமுண்டு என்றே எண்ணுகிறேன். ஆகவே வெளிநாட்டிற்கு வரும் பெண் குடும்பத்திலிருந்து திருமணத்தின் வழியாக புலம்பெயர்ந்து பின்னர் தேசத்தை விட்டும் புலம் பெயர்கிறாள். புலம்பெயர்வை ஆண்களை விட பெண்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் முடிகிறது என தோன்றுகிறது. பதின்மம், முதல்தலைமுறை புலம்பெயர்வு என இரண்டு அடுக்குகள் கொண்டதாக அழகுநிலாவின் கதைகளை வாசிக்கலாம்.

 

அழகுநிலாவின் இரண்டாம் தொகுப்பான சங் கன்ச்சில் வாசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு தான் அவருடைய முதல் தொகுப்பான ஆறஞ்சு வாசித்தேன். ஆறஞ்சு வாசித்து முடிக்கும்போது சங் கன்ச்சில் தொகுப்பு அவருடைய முதல் தொகுப்பிலிருந்து ஒரு பெரும் தாவல் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. சிங்கப்பூர் வாழ்வை அனைத்து தளங்களிலும், அனைத்து கோணங்களிலும் அள்ளிவிட் வேண்டும் எனும் முனைப்பு இருந்த அளவிற்கு மொழியும் சித்தரிப்பும் முதல் தொகுதியில் வசப்படவில்லை.  ‘ஒற்றைக்கண்’ ஒரு நல்ல படிமமாக நிலைபெற்று வளர சாத்தியமுள்ள கரு எனினும் மொழியின் தேய்வழக்குகள், உணர்வுகளின் தேய்வழக்குகள் கதைக்கு தடையாகி விடுகின்றன. இவற்றை மீறி முதல் தொகுப்பில் எழுத்தாளரின் ஆதார கேள்விகள் நிச்சயம் வெளிப்படும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஆறஞ்சு தொகுதியில் சில நுட்பமான அவதானிப்புகளை காண முடிகிறது. உதாரணமாக ஒரு கதையில் ஊரில் வியர்வை உழைப்பின் அடையாளமாக கருதப்படும் போது சிங்கப்பூரில் அது நாகரீக குறைவாக பார்க்கப்படுவது பற்றிய ஒரு குறிப்பை எழுதி இருப்பார். தலைப்பிற்குறிய கதையான ‘ஆறஞ்சு’ அழகுநிலாவின் வலுவான கதைபுலத்தின் துவக்க புள்ளியை அடையாளம் காட்டுகிறது என சொல்லலாம். சிங்கப்பூர் கல்வி முறை அளிக்கும் அழுத்தத்தின் மீதான சன்னமான விமர்சனத்தையும் பதின்மவயதினரின் சிக்கல்களையும் பேசுகிறது. இந்த தொகுப்பில் சங் கன்ச்சில், முள்முடி, விலக்கு ஆகிய மூன்று கதைகளும் பதின்மவயதினரை சுற்றி நிகழ்கிறது. பொங்கல், வெள்ளெலிகள் கதையிலும் சிறுவர்கள் வருகிறார்கள். பதின்மத்தின் தயக்கங்கள், கொந்தளிப்புகள் வெறும் வயது சார்ந்த அக தத்தளிப்புகள் என்ற அளவில் சுருக்கிவிடாமல் அவை பண்பாட்டு தளத்தில் விரிகிறபோது பதின் பருவத்தை முதல்தலைமுறை புலம்பெயர்வுக்கு இணையாக, அதன் குறியீடாக வாசிக்க இயலும் என தோன்றுகிறது. புலம்பெயர்தலின் தத்தளிப்பை பதின்மத்தின் தத்தளிப்புடன் இணைப்பதில் அழகுநிலா வெற்றிபெறுகிறார்.

சங் கன்ச்சில், தொகுப்பின் தலைப்பிற்குறிய கதை. சிங்கப்பூரில் வளரும் பதின்ம வயதினனின் கதை. விகாசம், பொன் முகத்தில் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ ஆகிய கதைகளுடன் சேர்த்து வாசிக்க முடியும். தொழில்நுட்பம் மனிதர்களை அவர்களின் இடத்திலிருந்து வெளியேற்ற பயன்படுத்த முடியும். வாழ்வர்த்தத்தை அழிக்கவும் அவற்றை ஏவ இயலும். ஸ்ரீதர்  நாராயணனின் ஒரு கதையும் பதின்ம வயது பெண் குழந்தை பாலியல் படம் பார்த்ததாக குற்றம் சாட்டப்படுவதை களமாக கொண்டது. புலம்பெயர் எழுத்தாளர்களின் முக்கிய சிக்கல்களில் ஒன்றாக இது உருவாகி வருவதை காட்டுகிறது. முதலை மீது தாவி கரையை கடக்கும் கன்ச்சிலின் கதையும் பாம்பின் தலைமீது நடனமாடும் கிருஷ்ணனின் கதைக்கும் இடையே சுவாரசியமான ஒரு முரணை உருவாக்க முயன்றுள்ளார். இரண்டு பாட்டிகள், வெவ்வேறு சமூக படிநிலைகளை சார்ந்தவர்களாக வருகிறார்கள். ஆனால் அது அத்தனை துல்லியமாக உருபெறாமல் சற்றே அலைவுரும் கதையாக உருவாகியுள்ளது. குறிப்பாக ரத்னாவின் பாத்திர விவரிப்பு அனாவசிய சுமை என தோன்றியது. சிவாவின் நடத்தை இரண்டு வகையில் எனக்கு முக்கியமாக தோன்றியது. அவனுடைய தந்தை அடித்திருந்தாலும், தாய் திட்டியிருந்தாலும் மனக்காயத்தை மீறி அவர்களுடன் இயல்பாக ஒன்ற முடிகிறது. அவனுடைய நடத்தையை தொலைபேசியில் வெளியே எவருடனோ பகிர்ந்து கொண்ட, இறந்து போன பாட்டியின் இடத்தில் இருக்கும் லட்சுமியிடம் தான் அவன் கணக்கை நேர் செய்து பழி தீர்க்கிறான். ஒருவகையில் மனிதர்கள் ஆக பலவீனமான புள்ளியில் தங்கள் வெற்றிகளை நிலைநாட்டுவார்கள் என சொல்வதாக உணர்ந்து கொண்டேன். மூன்று தலைமுறையினரிடையே உள்ளே உறவு சிக்கல்களை பக்க சார்பற்று சித்தரிக்க முடிந்தது இக்கதையின் வெற்றி.

விலக்கு இந்த தொகுதியில் உள்ள நல்ல கதைகளில் ஒன்று.‌ சென்றாண்டு சிங்கப்பூர் சென்றிருந்த போது சிறுகதை முகாமிற்காக வந்த கதைகளில் இக்கதையை வாசித்தது நினைவில் இருந்தது. பதின்ம வயது பெண் பூப்படைவதில் உள்ள பண்பாட்டு சிக்கலை சொல்லும் கதை. லாவண்யாவின் அம்மா தமிழ் அடையாளங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டிருப்பவள். லாவண்யா அடையாள கலப்பின் மீது ஈர்ப்புடைய பதின்ம வயது பெண். சீன இந்திய ஜோடியை காணும்போது சூசன் பூக்கள் நினைவுக்கு வருகிறது. ஒரு ஏக்கமாக வெளிப்படுகிறது. காதலிக்க சீனனை விழையும் பெண் வகுப்பில் இந்திய நட்புகளையே எதிர்பார்க்கிறாள் என்பது சுவாரசியமான முரண். பள்ளியில் தான் ஏற்கனவே வயதடைந்ததாக காட்டிக்கொள்பவள். அவளுடைய ரகசியத்தை வெளிக்காட்ட விரும்புவதில்லை‌. ஆனால் அம்மாவின் ஆசைகள் வேறாக உள்ளன.‌ பருப்பு சோறை நண்பர்கள் கேலி செய்ததை மனதில் கொண்டு அவளும் சுணங்கி சிக்கன் கேட்கிறாள். இந்த கதையில் முக்கியமான இடம் என்பது தமிழ் வாத்தியார் கூற்றாக வரும் ஒரு வரி- தமிழை நாம் விலக்க கூடாது‌. தமிழ் அடையாளத்தை பேண நினைக்கும் ஒரு தலைமுறைக்கும் அதை விட்டு விலகி வெளியேற நினைக்கும் ஒரு தலைமுறைக்கும் இடையிலான முரணை சொல்லும் கதை. முள் முடி இந்த தொகுதியின் மற்றுமொரு பதின்ம வயதினரின் கதை. தொகுப்பின் பலவீனமான கதையும் கூட‌. கதைக்குள் முரண் போதிய அளவு வலுவாக உருவாகவில்லை என தோன்றியது.

கீலா, இத்தொகுப்பின் முதல் கதை. அல்ஷிமர் நோய் வந்து கணவரை, லிக்வான்யூவை, கவனித்து வந்த மகளை என எல்லோரையும் மறக்கிறாள். ஆனால் மரண தருவாயில் ‘கீலா’ அதாவது மலாயில் பைத்தியம் என பொருள் வரும் ஒரு சொல்லை மட்டும் மகளிடம் விட்டுச்செல்கிறாள். அந்த சொல் ஒரு செய்தியாக மகளை துரத்துகிறது. அம்மாவின் வாழ்விலிருந்து அதற்கான விடையை கண்டடைகிறாள். அம்மாவின் நாட்குறிப்பில் குறிப்பிடப்படும் கடந்தகால சம்பவம் வலுவான ஒரு முடிச்சை கொண்டிருக்கிறது. யார் கீலா? என்பதே கேள்வி. கீலா என்று முத்திரையிடப்பட்டு அடைக்கப்பட்ட பெண் அல்ல தானே என அம்மா புரிந்து கொள்கிறாள்.‌ இறுதி வரி இதை மகளும் உணர்ந்து கொண்டதை குறிப்புணர்த்துகிறது. அம்மாவின் முன் கதைக்கு இருக்கும் கணம் மகளின் பகுதிக்கு இல்லை என்பதே இக்கதையின் ஒரு எல்லை என கூறலாம். ஆகவே அந்த இணைப்பு உத்தியாக மட்டும் நின்றுவிடுகிறது. அம்மாவின் கதை மகளுக்கு, அவளுடைய வாழ்க்கைக்கு என்ன அளிக்கிறது? என்ன இடையீட்டை நிகழ்த்துகிறது? அம்மாவை அறிந்துகொள்கிறாள் என்பதோடு நின்றுவிடுகிறது.

அக்ரோன், உயரம் அல்லது உச்சி என பொருள். இந்த தொகுப்பில் எனக்குபிடித்த கதைகளில் ஒன்று. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ஜொலிக்கும் உயர்ந்த கோபுரத்தின் அடியில் ஓடும் கறுப்பு ரத்தம் எனும் கரு புதிதல்ல. ஆனால் சொல்லப்பட்ட முறை இதை முக்கியமாக்குகிறது. கதைகளின் இயங்கு தளம் மிக குறுகியதாக, சரியாக சொல்லவேண்டும் என்றால் வளரிளம்பருவத்து நினைவுகள் மற்றும் அக தத்தளிப்புகள் சார்ந்ததாக மட்டும் கதைப்புலம் இயங்கும்போது எழுத்துக்கள் விமர்சிக்கப்படுகின்றன. அழகுநிலா பெண் தன்னிலை கதை சொல்லலை முதல் தொகுப்பிலேயே தாண்டுகிறார். ஆண்களின் அகவுலகிற்குள்ளும் பயணித்து, புற உலகத்துடனும் உறவுகொண்டு தனது எல்லைகளை கடக்க முயல்கிறார். நண்பனை இழந்தவனின் ஒருநாளை நுணுக்கமாக சித்தரிக்கிறார். அவனுடைய வெறுமை, மிரட்சி, வாழ்க்கை சிக்கல், நண்பனின் நினைவுகள் என எல்லாமும் இயல்பாக கடத்தப்படுகிறது. போலியான கரிசனம் அல்லது உரத்து வலிந்து  மிகையாக்காமல் வாழ்க்கை பாடை சொல்ல முடிந்திருக்கிறது. மேலும் சிங்கப்பூர் சூழலில் சிங்கப்பூர் வாழ்வு குறித்து  விமர்சன குரல்கள் எழுவது மிக முக்கியம் என எண்ணுகிறேன். வேறு யாரும் சொல்லாத, சொல்ல தயங்கும் விமர்சனங்களை எழுப்ப வேண்டியது எழுத்தாளரின் கடமை. வர்ணங்களில் ஜொலிக்கும் சிங்கப்பூரை சிங்கப்பூர் ப்ளையரில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும்போது கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டும் அவன் காலடியில் எல்லா வண்ணங்களும் கலந்து கறுப்பாக தெரிவதாக முடித்திருப்பார். ஆறஞ்சு தொகுப்பில் இல்லாத ஒரு கூறு என இப்படி வலுவான படிமத்தை கதையில் கையாளும் திறன் இக்கதைகளில் வெளிப்படுவதை கூறலாம். யோசித்துப் பார்த்தால் நாம் கதைகளை மறக்கக்கூடும் ஆனால் கதையின் ஆன்மாவை கடத்தும் ஒற்றை படிமம் கதையை நினைவில் தூக்கி நிறுத்தும். காலந்தோறும் வாசிப்பில் விரியும். அர்த்த அடர்வுகளும் கூடும். இந்த தன்மை அபாரமாக வெளிப்பட்ட கதை என வெள்ளெலிகள் கதையை சொல்லலாம். இத்தொகுதியின் சிறந்த கதை என இதையே சொல்வேன். மகனின் வளர்ப்பு பிராணி ஆசை மற்றும் சிக்கல்களை பற்றி பேசும் கதையாக தொடங்கி அதன் இறுதியில் ஒரு பெண்ணின் அளவுகடந்த ஆத்திரத்தை பறைசாற்றி முடிகிறது. பிரேமா நான்கறை கொண்ட தன் வீட்டை கணவரின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஊழியருக்கு தற்காலிகமாக உள்வாடகைக்கு விடுகிறாள். ஊரிலிருந்து ஒவ்வொருவருடமும் மூன்றுமாதம் மனைவி மாலதியை அழைத்து பிள்ளை பேறுக்கு இருவருமாக முயற்சிகிறார்கள். பிரேமாவின் மகன் ஆகாஷ் செல்லப்பிராணியாக வெள்ளை எலிகளை கூண்டில் அடைத்து வளர்க்கிறான். அவை குட்டிகள் ஈனுகின்றன. அவற்றை விற்று, இதை தொழிலாகவே கருத தொடங்குகிறான். மாலதிக்கு வெள்ளெலிகளின் இனப்பெருக்கத்தின் மீது பெரும் ஆர்வம் ஏற்படுகிறது. இரவெல்லாம் முழித்துக்கொண்டு அதையே பார்க்கிறாள். மாலதி மூன்றுமாத வாசம் முடித்து ஊர் திரும்புகிறாள். ஆண் எலியை காணவில்லை என தேடுகிறார்கள். கதை இப்படி ஒரு காட்சியுடன் முடிகிறது- ‘துணிகளை தொங்கவிடும் நீண்ட கம்பியில் ஒரு வெள்ளெலி தூக்கிடப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது.’ ஒவ்வொரு வருடமும் பிள்ளை பேறுக்காக மூன்றுமாதம் வந்து வெறுமனே செல்லும் மாலதியின் ஆற்றாமை, ஆத்திரம் என எல்லாவற்றையும் இந்த ஒரு வரி முழு தீவிரத்துடன் வெளிப்படுத்துகிறது. ஒரு படிமமாக துணிக்கம்பியில் தொங்கும் வெள்ளெலி ஆழ்ந்த மன தொந்தரவை அளிக்கிறது. அக்ரோன் மற்றும் வெள்ளெலிகள் என இவ்விரு கதைகளுமே உள்ளுறையும் வன்மத்தை மிகைப்படுத்தாமல் கச்சிதமாக கடத்துகிறது. சங் கன்ச்சில் கூட வன்மத்தையே உள்ளுறையாக கொண்டிருக்கிறது.

பொங்கல், சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் மீதான எள்ளல் கலந்த விமர்சனம் என இந்தக்கதையை வாசிக்க முடியும். பொங்கல் பானையில் happy deepavali என எழுதுவது, மாடு குட்டி என கன்றை சொல்வது, பொங்கல் போட்டியில் எப்போதும் வெல்லும் சீன பெண், மாட்டை பார்த்து குழந்தைகள் ஈயஈயவோ பாடுவது, விவசாயத்தை விட்டுவிட்டு சிங்கப்பூர் வந்திருக்கும் கிழவர் அருகே அமர்ந்திருக்க விவசாயி சேத்துல கால வெச்சாத்தான் நாம சோத்துல கால வைக்க முடியும் என வீர வசனம் மேடையில் பேசுவது என எல்லாமும் அபத்தமாகவும் மிகையாகவும் சித்தரிக்கப்படுகிறது. ‘பொங்கல்’ என பொருத்தமாகவே தலைப்பிட்டிருக்கிறார். உள்ளீடற்ற வெற்று உணர்ச்சி பொங்கல். பண்பாடும் கூட சந்தை பொருளாக மாற்றப்பட்டு விற்கப்படும் அபத்தத்தை இக்கதை சொல்கிறது. முதல் தொகுப்பில் இருந்த தமிழ் பெருமிதம் எல்லாம் மறைந்து மறுபக்கத்தை அணுகும் பார்வையை இக்கதைகளில் அடைந்திருக்கிறார் அழகுநிலா. ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோனி நாவலில் அங்கதம் தெறிக்கும் மதுக்கூட உரையாடலை நாம் மறக்க முடியாது. எதன் மீது நமக்கு மெய்யான அக்கறையும், உள்ளார்ந்த மதிப்பும் உள்ளதோ இயல்பாக அதை பகடிசெய்யும், விமர்சிக்கும் உரிமையையும் நாம் அடைகிறோம். ஒன்றை இயல்பாக தயக்கமின்றி நம்மால் பகடி செய்ய முடிகிறதோ அப்போது அதை நாம் நம்முடையதாக ஏற்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

வெண்ணிற இரைச்சல் ஒரு மகாபாரத கதை. ஆறஞ்சு தொகுப்பிலும் தர்மனை மையமாக கொண்ட ஒரு கதை உண்டு.‌ ஆனால்  இக்கதை மொழிரீதியாகவும் குறியீட்டு ரீதியாகவும் மேலான ஆக்கமாக ஆகிறது. போருக்கு பின்பான பாஞ்சாலியின் கதையை சொல்கிறது. ஒரு பக்கம் உபபாண்டவர்களை இழந்த சோகமும் மறுபக்கம் போரின் அழிவுக்கு தான்தான் காரணம் எனும் குற்ற உணர்வும்  அவளை வதைக்கிறது. சமையல் பாத்திரத்தில் குருதி தெரிவது கடோத்கஜன் தெரிவது என மாயத்தன்மையும் கதைக்கு வலு சேர்க்கிறது‌‌. போரின் இரைச்சல் அவளுக்கு தாலாட்டாகிறது. தன்னிலை மறந்து உறங்குகிறாள். கிருஷ்ணனும் கிருஷ்ணையும் அழிவின் கடவுள்கள். அழிவின் கடவுளே எப்போதும் அறத்தின் கடவுளும் கூட. மகாபாரதம் போன்ற கதைகளை மறுஆக்கம் செய்யும்போது அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். புதிய கோணத்தை, புதிய திறப்பை அளிக்க முடிகிறதா? அத்திறப்பு மனித அகத்தினுடையதாக இருக்க வேண்டும். இக்கதையில் அப்படியொன்று நிகழவில்லை என்பது இதன் எல்லை.

‘மண்வாசனை தேடும் வலசை பறவை’ என அழகுநிலா அவருடைய முதல் தொகுப்பின் முன்னுரைக்கு தலைப்பிட்டிருந்தார். தானொரு வலசை பறவை எனும் தன்னுணர்வும் இங்கே தனது வசிப்பிடத்தை கண்டடைய வேண்டும் எனும் பதட்டமும் ஒருங்கே வெளிப்படும் தலைப்பு. இந்த இரண்டாம் தொகுதியில் தன்னை பொருத்திக்கொள்ள வேண்டும் எனும் பதட்டம் தணிந்து அமைதலின் நிதானம் கைகூடி வந்திருக்கிறது. சிங்கப்பூர் பற்றி அவருடைய முதல் தொகுதியில் வெளிப்பட்ட கற்பனாவாத எதிர்பார்ப்புகள், யோசனைகள் இந்த தொகுப்பில் சுத்தமாக இல்லை. சட்டென வெகுளித்தனம் மறைந்து அறிதலின் கசப்பு விமர்சனமாக வெளிப்படுவதை கண்டுகொள்ள முடிகிறது. புலம்பெயர்ந்த இடத்தில் சிலவற்றை ஏற்றும் சிலவற்றை நிராகரித்தும் பயணிக்கிறார். இந்த ஏற்பும் நிராகரிப்பும் முழுக்க தர்க்கப்பூர்வமான முடிவாக இருப்பதில்லை. பதின்ம வயது மகனின் முள் முடியை ஏற்கும் அன்னையால் மகளுக்கு பூப்பெய்தல் சடங்கு நடத்த வேண்டும் எனும் அவாவை கைவிட இயலவில்லை. இதை கொண்டாட்டமாக அணுகக்கூடாது என கருதி லாவண்யாவிற்கு விலக முடிந்தது போல் எளிதாக சிவாவிற்கு தான் கேட்டு வளர்ந்த கிருஷ்ணனின் கதைகளை விட்டு வரமுடியவில்லை. இந்த ஏற்பிற்கும் நிராகரிப்பிற்கும் இடையிலான ஊசலாட்டமும் திட்டமின்மையுமே அழகுநிலாவின் கதை மாந்தர்களை உண்மைக்கு நெருக்கமாக்குகிறது. சிறுகதைகளில் துல்லியம் மிக முக்கியமான அம்சம். அழகுநிலாவின் சில கதைகளில் ஒருவித அலைவு துல்லியமின்மையாக வெளிப்படுகிறது. எனினும் அதை நான் எதிர்மறையாக காணமாட்டேன். தனது தனித்த குரலை கண்டடைய முற்படும் எழுத்தாளரின் தேடல் என்றே கருதுவேன்.

வாழ்த்துக்கள்..

கடுவா – இவான்கார்த்திக் சிறுகதை

ஒன்று :

“எவ்ளோ டோஸ் கொடுக்கலாம் இப்போதைக்கு” என்றான் சிபு

“வயசாச்சு , கொறச்சு குடுக்கதுதான் நல்லது , சைட் எஃபெக்ட்ஸ் நிறைய இருக்கும். ஆனா இது இல்லாம அவரால தூங்க முடியாது” என்றார் டாக்டர்

டாக்டர் முடிப்பதற்குள் சிபு “ராத்திரல எந்திரிச்சு கத்துராரு என்னல்லாமோ சத்தம் கேக்குது அந்த ரூமுக்குள்ள. நாலு வயசுல பொண்ணு இருக்கா. எங்கயையாவதுகொண்டு போய் விடவும் முடியல வச்சுக்கவும் முடியல”

“அவரோட உலகம் அது , அதுக்குள்ள உங்களுக்கு இடமில்ல” என்றவாறு தன் பெட்டியுள் இருந்த மருந்தை ஊசியினுள் ஏற்றிக்கொண்டிருந்தான்.

“அவரு வந்த அன்னிக்கு நைட் எம்பொண்ணு தாத்தா கத்துறாறுண்ணு பாக்க போயிருக்கா ,  நாங்க தூங்கிட்டோம் அவ கத்துற சத்தம் கேட்டுதா நாங்க ஓடிப்போய் பாத்தோம். கதவிடுக்குல அவரோட பின்பக்கம் மட்டும்தா தெரிஞ்சிது , அப்படியே நாலு கால்ல ஊந்து போறாரு. அப்பா நெஞ்சுல கைவச்சிட்டு நின்னுட்டிருந்தாரு. அவரோட மொகத்துல ஒரு பயம் இருந்துச்சு. அம்மா முட்ட வரும் போது பயந்துட்டே பால் குடிக்க போகுற கண்ணுக்குட்டி மாதிரி” என்று எங்கோ பார்த்து நினைவு படுத்திச்சொன்னான், நினைவு வந்தவனாய் “கதவுக்கு பக்கத்துல பொண்ணு மயங்கி கெடந்தா. கதவ மூடிட்டு அவள எழுப்புனா பீஸ்ட்..பீஸ்ட்னு கண்ண மூடிக்கிட்டா. அதுக்கப்பறம் அவ அந்தப்பக்கம் போறதேயில்ல” அவன் முகம் சிவந்து அதிகமாக பேசிவிட்டோமோ என்பது போன்றிருந்தது.

“காலைல எப்படி இருக்காரு. எதாவது அம்னாரமலிட்டி தெரியுதா” என்றார் டாக்டர்.

“அவர் எப்போவுமே நார்மலா இருந்தது கிடையாது. அவர அப்பா ஐயான்னு கூப்டுவாரு. சாகும் போது அப்பாக்கு தொண்ணூறு வயசு. எப்படியும் இவருக்கு ஒரு நூத்திபத்து வயசுக்கு மேல இருக்கும். இவர வந்து விட்டுட்டு அவரு போய் சேந்துட்டாரு” என்று சங்கடமாக சிரித்தான் “ஆனா பாத்தா வயசு தெரியாது பிசிக்கலி ஹீ ஸ் ஸ்ட்ராங்க். என்னால இப்போகூட தூக்கமுடியாத வெயிட்ட அவரால தூக்க முடியுங்குற மாதிரி இருக்கும். என்ன கேட்டிங்க….ஐயம் ஜஸ்ட் டைவர்ட்டிங் த டாப்பிக்”

“இல்ல பகல்ல எப்படி பிஹேவ் பண்றாரு”

“அது நார்மல்னு சொல்லலாம் , ரூம் விட்டு வெளிய வந்ததில்ல. எதவாது தேவண்ணா இருமுவாறு நம்ம கிட்ட போய் நிண்ணோம்னா தேவையானத கேப்பாரு. அவருக்கு கொஞ்சம் ஹார்மோன் பிராப்ளம் இருக்கும்னு நினைக்குறேன். அவரோட வாய்ஸ் கீச்சுக்கொரல்ல நல்ல ஜானிகி கொழந்தைங்க ஸ்டைல்ல பாடுற மாதிரி கேக்கும். ஒரு செயர் மேசை மாதிரிதா அவரொட இருப்பும் இருக்கும் இந்த விட்டுல. பட் நைட்ல உங்களால இமாஜின் பண்ணி பாக்கக்கூட முடியாது அவ்ளோ சத்தம். அப்பா இறந்ததுக்கு அப்பறம் அவர் அதிகமா கேட்டது செயிண்ட் தாமஸ் மவுண்ட்கு போகாணும்னு திரும்ப திரும்ப “அங்க அங்க அங்க” அப்டின்னு சுட்டிக்காட்டுனதுதான். ரொம்ப கம்மியாதா சாபிட்டாரு. ஒரு குருவிக்கு அது பத்துமானு கேட்ட இல்லனுதா சொல்ல தோணும்” என்று சோபாவில் அமர்ந்தவாறே தலையை மட்டும் திருப்பி அந்த அறையை திரும்பிப்பார்த்தான்.

அந்த அறை சலனமற்றிருந்தது. அவர் அந்த நாற்காலியில் ஜன்னலின் வழியே தெரிந்த செயின்ட் தாமஸ் குன்றை பார்த்துக்கொண்டு மேல் சட்டையில்லாமல் அமர்ந்திருந்தார். பழுப்பேறிய வெள்ளை வேட்டி காற்றில் ஆடியது. கைகள் எரிந்த பழுத்த மரத்தின் கட்டைகள் போலிருந்தன. அடித்தால் நாம் இரண்டாக பிளந்து விடுவது போலிருந்தது. நரைபிடித்த தலை. தாடியுடன் நெஞ்சும் பஞ்சடைந்திருந்தது. உணர்கொம்புகள் போல மீசை சிலிர்த்துக்கொண்டிருந்தது. அவர் உடலே பொன்னிறத்திலிருந்தது. இவர்கள் இருவரும் பேசியதை அவர் கேட்டது போல தெரியவில்லை. அவர்கள் இருப்பதையே உணராததுபோல தோன்றியது.

விமானம் பறக்கும் சத்தம் மிக அருகாமையில் கேட்டது. சிபு சோபாவில் திரும்பி உட்காரவும் அதன் ஸ்பிரிங் கிரீச்சிட்டது.

டாக்டர் அந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டார். “அடிக்கடி இப்படி போகும் பக்கத்துல தான் ஏர்ப்போர்ட்” என்றான் சிபு.

எதிரே இருந்த டாகடர் “உங்க அப்பா அவர பத்தி எதும் சொல்லலையா”

“தெளிவா அவரும் எதும் சொல்லல , உங்களுக்கு அவலாஞ்சி தெரியும்ல.. ஊட்டிக்கு பக்கத்துல..நிறைய படம் கூட எடுத்துருக்காங்க அங்க. அந்த டாம் ரொம்ப ஃபேமஸ். நாங்க கூட அப்பா சொன்னதுக்கு அப்புறம் அங்க போயிருக்கோம். எங்க விட்டேன்” என்று சிபு டாக்டரிடம் கேட்டான். அவர் பதில் சொல்வதற்கு முன்பே “ஆ…அது நம்ம காமராஜர் டைம்ல கட்டுனது அதுக்கு முன்னாடி அங்க ஒண்ணும் கிடையாது வெறும் காடுனு அப்பா சொல்லிருக்காரு நமக்கு அத பத்திலா ஐடியாயில்ல. அங்கதா இவரு இருந்ததா அப்பா சொன்னாரு. அங்க மனுசங்க யாரும் இல்லன்னுதா ஃபாரஸ்ட் ரிப்போர்ட் சொல்லுது ஆனா ஒரு நாள் அப்பா நைட்டு பவர் ஸ்டெசன்ல எதொ ஓவர் லோட்னு பாக்க போய்ட்டு திரும்ப வரும் போது இவரு ஜீப் போற பாதைல மயங்கி விழுந்துருக்காரு. ரிசர்வ் ஃபாரஸ்ட்ல இருக்கக்கூடாதுன்னு ஊட்டிக்கு அனுப்பிடாங்க எதோ மடத்துல இருந்தாருண்ணு நெனைக்குறேன்” டாக்டர் அமைதியாக கேட்டார்.

“அதுக்கப்பறம் அப்பா அவர ஊட்டிக்கு போய் அடிக்கடி போய் பாத்துட்டு வருவாறு. திடீர்னு ஒரு நாள் இவர கூட்டிடு வந்து இங்க வச்சிட்டாரு”

டாக்டர் எழுந்து அவர் அமர்ந்திருந்த அறைக்குள் சென்றார். அந்த சலனம் அவரை எதும் செய்யவில்லை. அவர் கண்கள் விலங்கின் கண்களைபோல கருவிழி ஒற்றைக்கோடென சுற்றி பழுப்பேறிக்கிடந்தது போல டாக்டருக்கு தோன்றியது. அவரின் கையில் பஞ்சைவைத்து தடவி ஊசியை நுழைத்தார். அவர் திரும்பிப்பார்க்கவில்லை எந்தவொரு அதிருப்தியையும் தெரிவிக்கவில்லை. அறையின் மூலையில் சிலம்பம் போன்ற கம்பொன்று சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. டாக்டர் அதை கவனித்து பின் அறையிலிருந்து வெளியே வந்தார்.

“பாத்தீங்களா நீங்க போனது கூட அவருக்கு தெரியல” என்று ரூமுக்குள் எட்டிப்பார்த்தான் சிபு.

“பகல் அவருக்கு ஒரு ஆழ்ந்த காத்திருப்பு மாதிரி தெரியுது எதையோ எதிர்பார்த்து. என்னோட தொடுகை கூட அவருக்குள்ள போன மாதிரி தெரியல.  நா முன்னாடியே சொன்ன மாதிரி அவரோட உலகுத்துல நாம இல்ல சொல்லப்போன நம்மள அவர் அனுமதிக்கல” என்று அவர் முன்பிருந்த அதேயிடத்தில் அமர்ந்தார்.

“சரிதான்…ஆனா அப்பாவ ராத்திரல கூட அவரு அனுமதிச்சாரு. அப்போவும் சத்தம் வரும். மொத்தமா எட்டு நாள்தா இவரு வீட்டுக்கு வந்ததும் அப்பா இங்க இருந்தாரு. திடீர்னு இறந்துட்டாரு. நாங்க யாருமே அப்பாடியாகும்னு நினைக்கல.”

“அப்போ அவரு இங்க வந்தே பத்து நாள்தா ஆகுது”

“ஆமா” என்றான் சிபு

“இன்னிக்கு நைட் நல்லா தூங்குவாரு , ஒரு டோஸ் எக்ஸ்ட்ராவாதா கொடுத்திருக்கேன். என்ன மாதிரி சத்தம் வரும் ?”

“அது தெளிவா சொல்ல முடியாது , ஒரு உறுமல்…வலில வர முனங்கல்…பூன அழுகுற மாதிரி அப்புறம் யாரோ ஓடுற மாதிரி சம்டைம்ஸ் செவத்துல ஓடுற மாதிரிகூட கேக்கும். அப்பா இருக்குறவர நாங்க அத கண்டுக்கல அவராச்சு அந்த ஆளாச்சுன்னு விட்டுட்டோம். அவரு மெண்டலி இல்னு ஃபீல் பண்றீங்களா ? என்று கேட்டு அவர் பதில் சொல்லும் முன்பு “எங்களுக்கு அப்படிதான் தோணுது. இவர் யாரு எங்கருந்து அப்பா கூட்டிடு வந்தாங்க எதும் தெரியாது. ஹோம்ல சேக்கனும்ணா யாரு என்னனு கேக்குறாங்க. ஒண்ணும் புரியல நீங்க என்ன நினைக்குறீங்க. அப்பா இருக்கும் போதே கேட்டோம் ஆனா அவரு அதுக்கு சம்மதிக்கல.” பேசுவதை நிறுத்தி , டாக்டரை உற்றுப்பார்த்து தன் அந்தரங்கத்தைக்கூறுவதை தவிர்க்கமுடியாமல் சோபாவில் மாறி அமர்ந்தான் அது மீண்டும் கிரீச்சிட்டத்து. “அப்பாக்கு அவர எங்கயும் கொண்டு போய் சேக்கிறது புடிக்கல அத நேரடியாவே சொல்லிட்டாரு” அவன் அதை பேச விரும்பாதது போலிருந்தது. சொல்லவந்ததை சொல்லமல் அப்படியே விட்டுவிட்டு தலைக்கும்மேல் சுத்திக்கொண்டிருந்த ஃபேனைப்பார்த்துக்கொண்டிருந்தார்

“அப்பா சாகும்போது அவர் எப்படி பிஹேவ் பண்ணாரு” என்று சம்பந்தமில்லாமல் கேட்டார்.

“அவர் அந்த ரூம விட்டு வரவேயில்ல” என்றுகூறி பதற்றத்துடன் “அப்பா மேல உள்ள மரியாதைக்காவாச்சும் வெளிய வந்திருக்கலாம். எனக்கு தெரிஞ்சி இந்த ஆள இவ்ளொ நாள் அப்பாதான் நல்லா பாத்துக்கிட்டு இருந்திருக்காரு. அந்த நன்றிக்காவது வந்திருக்கலாம். காசு பெரிய விசயம் இல்ல ஆனா பொணத்த கூட பாக்கலன்னா எப்படி” என்றவன் சட்டென உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டான். பின் அவரைப்பார்த்து சிரித்தான். அது அவன் தன்னை பற்றி வெளிக்காட்டியதற்கு வருத்தப்படுவதைப்போலிருந்தது.

“உங்க பொண்ணு என்ன சொன்னங்க. கொஞ்சம் டீட்டெய்லா சொல்றீங்களா. அவரோட ட்ரீட்மெண்ட் ப்ரொசிஜர் அத வச்சுதா நான் தொடங்கனும். நா அவரோட இன்னிக்கு தங்குனா உங்களுக்கு எதும் பிரச்சன இல்லைல” என்றார் டாக்டர்

“இல்ல நீங்க தங்கலாம். ஆனா எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. எம்பொண்ணு சொன்னத வச்சு பாத்தா டேஞ்சர்னு கூட தோணுது”

“இல்ல நீங்க மறைக்குறீங்க. முதல் விசயம் உங்க அப்பா இறந்ததுக்கு அப்பறம் அவர நீங்க பழைய எடத்துக்கு கொண்டு போய்ருக்கலாம். இல்லனா எதாவது பண்ணிருக்கலாம் அது முடியாதுன்னு சும்மா எண்ட சமாளிக்குறீங்க. ஆனா ஏன் அவர சரி பண்ணனும் எதுக்கு அவர பாத்துக்கணும்னு நீங்க தெளிவா சொல்லல. இரண்டாவது உங்க பொண்ணு உள்ள என்ன பாத்தாங்க அத நீங்க தெளிவா சொல்லியே ஆகணும். இல்லனா என்னால ட்ரீட்மெண்ட் கண்டினுயூ பண்ண முடியாது மன்னிச்சிருங்க” என்றார் டாக்டர்

சிபு கைகளை பிணைந்துகொண்டே இருந்தான். நிர்வாணாமாய் நிற்பதைப்போல நெளிந்தான். கால்களை மாற்றி இடது கால் மேல் வலது கால் போடு அமர்ந்தான். பின்பு கைகளை விரித்து பெருமூச்சு விட்டான்.

“அவரு எங்க குல தெய்வம் , அவர நாங்க பத்தரமா பாத்துகணும். நேரம் வரப்போ அவரே போய்ருவாரு. எல்லா வெள்ளியும்  ஒரு கெடா வெட்டி பலி கொடுக்க சொன்னாரு” என்று அவரின் முகத்தைப்பார்ர்காமல் தன் கால் நகங்களில் இருந்த அழுக்கையே பார்த்துக்கொண்டு சொன்னான்.

“இத நீங்க நம்புறீங்களா?” என்றார் டாக்டர்

“நம்பல ஆனா அது எங்கப்பாவோட ஆச , அத என்னால முழுக்க மறுக்க முடியல. ஆனா ஒரு வேள அப்பா இவர நல்லா பாத்துக்கணும்னு எங்ககிட்ட பொய் சொல்லிருக்காரோனு சந்தேகம் இருக்கு.”

“கண்டிப்பா அது பொய்தா. அவ்ளோ பெரிய அந்த்ரொபாலஜிஸ்ட். கடவுள் சாமினு நம்பி உங்கள்ட சொன்னாருன்னு என்னால யோசிக்க முடியல” என்றார் டாக்டர்

“நா நம்பல” என்று முனங்கினான் சிபு. அவன் கண்கள் சிவந்திருந்தன.

“உங்க பொண்ணு பாத்தது”

“அவ எதும் பாக்கல , ஞாபகம் இல்லனு சொல்லிட்டா” என்றான் சிபு

“நீங்க சொல்லாம என்னால எதையும் ஆர்ம்பிக்க முடியாது”

சிபு அமைதியாக இருந்தான். ஐயா இருந்த அறையை எட்டிப்பார்த்தான்.
ஐயா அந்த வீட்டிற்கு வந்த முதல் நாள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவன் நினைவில் உள்ளது. கனவுகளை நாமே தொகுத்துக்கொண்டு அது உண்மையா இல்லை பொய்யா  என்று தெரியாமல் கூறுவது போன்று  யோசித்துக்கொண்டிருந்தான். அது அவனுக்கு அந்த நேரத்தில் அந்த சம்பவத்தின் மொத்த உண்மையையும் உணர்த்தியது  போலிருந்தது.

“எங்க அப்பா மேல தேவயில்லாத எந்த ஒரு கருத்தும் மீடியால வரது எனக்கு புடிக்கல அவரோட மேதைமைய வச்சிதா இந்த உலகம் அவர பாக்காணும். முட்டாள்தனத்த வச்சியில்ல. நா இந்த விசயத்த சேர் பண்றதே அவரோட ரெபுடேஷன் சொசைட்டில கொறைய கூடாதுன்னுதா. உங்களுக்கு புரியும்னு நினைக்குறேன்” என்றான் சிபு

“நீங்க என்ன நம்பாலாம்” என்று டாக்டர் அவன் நட்பார்ந்த முறையில் சிரித்தார்

“நீங்க அவள கேட்குறதுதா நல்லாருக்கும். புவனா….” என்றான் சிபு

அந்த பெரிய வீட்டில் அவனது சத்தம் எதிரொலித்தது. மாடிப்படியிலிருந்து புவனா மெதுவாக இறங்கிவந்து சிபுவின் மடியில் அமர்ந்தாள். வெளியாட்கள் இருக்கும் போது அவளின் சுதந்திரங்கள் அனைத்தும் கட்டிவைக்கப்படும். தன்னை எல்லா சுவரின் மூலைகளும் கண்காணிப்பதைப்போல உணர்வாள். டாக்டரையும் சிபுவையும் திரும்ப திரும்ப பார்தவள் சிபுவின் கழுத்தைக்கட்டிக்கொண்டு டாக்டரைப்பார்ப்பதை தவிர்ப்பதைபோல  நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அது எப்பொழுதுமே வெம்மையுடன் பாதுகாப்பை அவளுக்கு அளிக்கும்.

“அன்னைக்கீ ஐயா ரூம்ல…பாப்பா என்னம்மா பாத்துச்சி….மாமாட்ட அத சொல்றியா…..” என்று அவளின் நாடியைப்பிடுத்து தூக்கியவாறு அவளின் கண்களைப்பார்த்து டாக்டரைகாட்டி கேட்டான். ஒவ்வொருவாக்கியத்திற்கும் இடைவெளிவிட்டு இழுத்து பேசினான்.

கதை சொல்வதென்பது அவளை சகஜ நிலைக்கு கொண்டுவரும் என்பதை சிபு அறிவான். அவள் சொல்ல ஆரம்ப்பித்தாள் “நா போகும்போ கதவு பூட்டிருந்தா…கதவுல்ல ஒரு கண்ணிருக்கும்ல அதுக்குள்ள பாத்தா நல்ல கோல்ட் கலர் டைகர்ப்பா ரெண்டுபேர் படுத்தா எப்டியிருக்கும் அந்தமாரி நீளம் வால ஆட்டி ஆட்டி நடக்குது….” என்று கண்கள் விரிய கைகளை ஆட்டி பின் அவன் மடியில் இருந்து இறங்கி நடித்து காட்டினாள் “மொதல்ல எனக்கு வாலுதா தெரிஞ்சிச்சி….உள்ள இருட்டு கதவுகண்ணுல என் கண்ண வச்சு பாத்தேனா….மொதல்ல வாலு ரெண்டாவது நல்லா நீள வயிறு அதுல பிலாக் கலர்ல கோடு கோடா இருந்துச்சி….தாத்தா கையில கம்ப வச்சிட்டு நின்னாரா…புலி போய் அவரு காலுக்கிட்ட போச்சா….தாத்தா கம்ப ஆட்டுனாரா….புலி ஓடிச்சா….தாத்தா கம்ப கீழ போட்டாரா….அப்புறம் அது வந்து என்ன பாத்து சிரிச்சிச்சா…நானும் சிரிச்சனா….அதுக்கு வாய்லாம் செவப்பா இருந்துச்சிப்பா….அது கிட்ட வந்துச்சா….எனக்கு அதுக்க பல்ல பாத்தத்தும் பயந்து பயந்து வந்துச்சா….அப்றம் பாப்பா துங்கிட்டா….” என்று மறுபடியும் சிபுவின் மடியில் போய் அமர்ந்துகொண்டாள்

“சோ , உங்க பொண்ணு உள்ள பாத்தது புலி வேசம் போட்ட அந்த ஐயா.” என்றார் டாக்டர்

“ஆமா , ஆனா மனுசனால புலி வேசம்தா போட முடியும் புலியாக முடியாது” என்றான் சிபு

“வேசமில்லப்பா….புலி….” என்று அவள் கைகளை குவித்து நகங்களை காண்பித்தாள். கூடவே உறுமினாள். பறவை கிரீச்சிடுவது போலிருந்தது.

“ஆமா , அவரு புலியாவே ஆகிற்றாரு. அதும் நம்ம கண்ணு முன்னாலயே. நம்ம அந்த வித்தியாசத்த பாக்கலாம். இப்போ சாதரணமா இருக்காரு ஆனா அந்த வேசத்த அவரே போட்டு முடிக்குற நிலைக்கு வந்ததும். அந்த புலி அவருக்குள்ள முழுசா வந்திருது. நீங்க சொன்னமாரி அந்த நேரத்துலதா அவரு சுவத்துல கூட ஓடுறாரு” என்றார் டாக்டர்.

சிபு அமைதியாக இருந்தான்.

டாக்டர் தொடர்ந்தார் “இது சிப்ம்பிள் , நீங்க சொல்றபடி பார்த்தா இவரு ஒரு ஆதிவாசி. மலைலைருந்துதா உங்க அப்பாவே கூட்டிட்டு வந்துருக்காரு. அவரு ஒரு  பழங்குடி மதத்த கண்டிப்பா ஃபாலோ பண்ணிருக்கணும். அந்த மதத்தோட தெய்வம் அல்லது அந்த இனத்தோட குலக்குறி புலியா இருந்திருக்கும். சாதரணமாவே அவங்க அந்த குலக்குறியோட சந்ததியாதா தங்கள நினச்சுக்குவாங்க. சொல்லப்போனா அவங்க புலிக்கு பொறந்தவங்கனு கூட நம்புறாங்க. அத ஒரு பலி நாள்ல வெளிக் கொண்டுவந்து அந்த தெய்வம் இருக்கிறதா அவங்களோட ஆழ்மனசு காட்டும். இத கார்ல் யுங் ரொம்ப விரிவாவே பேசிருக்காரு. ஒரு மாசம் நீங்க கன்சல்டிங்க்கு அனுப்புனீங்கன்னா அவர பூரணமா குணப்படுத்திரலாம்.”

“அவர குணப்படுத்தனும் வைஃப் பயப்படுறாங்க. ஆனா அப்பா அத விரும்பல. ஈவன் நானும் அத விரும்பல.” என்று பேச நினைத்தவன் நிறுத்தினான். “நீங்க இங்க இன்னிக்கு இருங்க நம்ம நாளைக்கு பேசுவோம். அவரோட் ரூம் கதவு உள்ள லாக்ல இருக்காது. நீங்க ராத்திரி போய்க்கோங்க நாங்க யாரும் வர்ல” என்று அவருக்கான அறையைக்காட்டி மாடிக்கு செல்வதற்கு முன் ஐயாவின் அறையை மூடிவிட்டிருந்தான்.

“அப்பா….புலிய கொண்டு போய்ருவாங்களா” என்றாள் புவனா.

ஐயா இருந்த அறையிலிருந்து முனங்கல் சத்தம் கேட்கவும் டாக்டர் அந்த அறைக்கு சென்றார். அறையின் கதவு சிபு சொன்னது போல தாழிடப்படவில்லை. அறைக்குள் வனமிருகத்தின் வாடை அடித்தது . அறையின் இருளில் ஒலியை மட்டும் உணர்ந்தவராய் உள்ளே நுழைந்தார். விழிக்கு ஒளி பழக பொன்னுருகி ஓடும் உடலில் கருநாகங்களேன வரிகளுடன் ஓர் புலி அவரின் முன் உறுமியபடியே முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தது. அதனைச்சுற்றி ஈக்கள் மொய்த்திருந்தன , அவற்றின் ரீங்காரம் அறையில் நிறைந்திருந்தது. உடம்பிலிருந்த வண்ணப்பூச்சு வழிந்து தரையில் மஞ்சள் தடங்களாயிருந்தன. கைகளாலேயே பூசப்பட்டிருந்ததால் உடம்பில் ஆங்காங்கே திட்டுகளாயிருந்தது.

அதன் கால்கள் நீட்டி மடங்க , கண்கள் சிவந்திருந்தன. தலையை தரையில் தாழ்த்தி முகர்ந்தது. வயிறு ஒட்டி எலும்புகள் தெரிந்தன. உணர்கொம்புகளை சிலுப்பி விட்டு நாவால் அதன் கருத்த மூக்கை நக்கியது. நடப்பது போலல்லாமல் ஒரு புறமிருந்து மறுபுறம் தாவிக்கொண்டிருந்தது. பின்னங்கால்களை அழுத்தி திடீரென்று டாக்டரை நோக்கி பாய்ந்தது. அவர் அருகில் இருந்த் கம்பை எடுக்கவும் அது தன் எல்லைக்குள் போய் நின்று கொண்டது ஆனால் அது அடங்கவில்லை உறுமிக்கொண்டேயிருந்தது. அவர் கம்பை முன்னும் பின்னும் ஆட்ட அது கம்பை முன்னங்காலால் தட்டிவிட முயன்றது.

“யார் நீ” என்றார் டாக்டர்

“கடுவா…” என்றது பின் “ஊணு ஊணு” என்று உறுமியது

கையில் வைத்திருந்த ஆட்டின் தொடைக்கறியை அதன் பக்கமாக எறிந்தார்.

“இன்ணும் இன்ணும்” என்றது கடுவா

“காட்டுக்கு கொண்டு போய்விடுகேன் வறியா” என்றார் டாக்டர்

“காட்டுக்கு போணும் காட்டுக்கு போணும்”

“போகலாம்”

“அது யாரு” என்று பத்மநாபனின் போட்டோவை சுட்டிக்காட்டி கேட்டான்.

அதன் முகம் மலர்ந்தது. முகத்தில் பதிந்திருந்த ரத்தத்தை நாவால் நக்கியவாறு தும்மியது.

“கடுவா கொண்டாடி”

இரண்டு :

அப்பாவை நெருங்கி அறிந்துகொள்ள அவரது ஆய்வு புத்தகங்களே போதுமானவை என்று அவரது இறப்புச்சடங்குகளின் பொழுது அவரது சக ஆய்வாளர்கள் கூடி பேசுவதை சிபு கேட்டிருந்தான். ஆனால் அவை அவனுக்கு தேவையில்லாத பழைய அழுக்கடைந்த தலையணைகளை நினைவுறுத்தும். அவனால் வாசிக்க முடிந்தது அவரது நாட்குறிப்புகள் மட்டுமே. இரண்டு நாட்களாக அதனை வாசித்துக்கொண்டிருக்கிறான். அவை அப்பாவை ஆமை முதுகின் ஓடு போன்று அவர் பிறப்பிலிருந்து தன் கூடவே வைத்தும் அவன் அறியாத அவரின் வாழ்க்கையை காட்டியது. அந்த குறிப்பு புத்தகத்தின் முன்அட்டையில் தெளிவாக தெரியாத ஒரு புலியின் திறந்த சிவந்த வாயின் உருவம் அனைத்து பற்களும் தெரிய அப்பா வரைந்திருந்தார். முன் கோரைப்பற்கள் மட்டும் தெளிவாக தெரிய அதில் ரத்தம் அடர் சிவப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. வாயின் உள்ளே ஒருவன் நிர்வாணமாக வாயின் ஒரு புறம் தலை கைகளுடனும் மறுபுறம் கால்களும் தொங்க கிடந்தான்.

1.

வெளியே மழைபெய்துகொண்டிக்கிறது. மென் சாரல் நான் தங்கியிருக்கும் அறையின் இடது நோக்கி சரிவாக பெய்து கொண்டிருக்கிறது. அவை நிலத்தை அடைவதேயில்லை. ஒதுங்கி நிற்கும் வரை சாரல் மழையின் வீரியம் தெரியாது. நனைய ஆரம்பித்தால் ஒரு நிமிடத்திற்குள் முழுவுடலும் நனைந்துவிடும்.

மழைக்காலம் என்பது ஒரு முடிவில்லா என்ணங்களைப்போன்றது. சில நேரங்களில் மென்மையான சாரல் , சில நேரங்களில் அடித்து செவிடாக்கும் இடியுடன் நீள் துளி மழை. ஆனால் அவை ஓய்வதேயில்லை. நான் காடுகளை தேர்ந்தெடுத்தது என் உலகியல் பணிக்காக அல்ல , என் ஆத்மார்த்த  உள்ளொளிப்பணிக்காக. மனிதன் எப்படி தன் பண்பாடுகளை உருவாக்கிக்கொண்டான் , தெய்வங்கள் அவனை எப்படி ஆட்கொண்டன , அதன் சடங்குகள் எப்படி உருவாகின ,  அவை எப்படி அலைந்து திரிந்த அவனை ஒரு சமூகமாக உருமாற்றி ஒரு தங்கி வாழும் மனிதனாக்கியது , இதில் தெய்வங்கள் பெரும் பங்காற்றுகின்றன இதுவே என் கேள்விகள். நான் அதன் இப்போதைய கடைசி துளி. என் குருதியில் ஓடும் அந்த பழந்தெய்வங்கள் எவை அதன் ஊற்றேடுக்கும் இருதயம் எது. அது இங்கெங்கோ இந்த காட்டில் இலைகழுக்கடியில் கண்காணா சுனையில். ஆழ நதியில். மறைந்துள்ளது. அதை தரிசித்து அதன் வழி நான் தொடங்க நினைக்கிறேன்.

பத்மநாபன்.

2.

நேற்றிரவு நாங்கள் தங்கியிருக்கும் அறைகளின் பின் புறம் உள்ள சரிவில் புலி ஒன்று சாவகாசமாக அமர்ந்து மழைக்கு காத்திருக்கும் கரிய வானத்தை நோக்கி கொட்டாவி விட்டக்கொண்டிருந்த பொழுது ,  நான் என் பின் முற்ற அறையில் புகைத்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து அதனை சரியாக பார்க்க முடியும் ஆனால் அதன் பார்வையில் நானில்லை. அதன் வாய் சிவந்திருந்தது. சில பற்கள் உடைந்திருந்தன. அதன் கண்களுக்கு கீழிருந்த சதை தொங்கிக்கொண்டிருந்தது. வயிறு எலும்புகள் தெரிய ஒட்டியிருந்தது. ஒரு வயதான் புலி. அது கர்ஜிக்கவும் எதிர் பக்கமிருந்த சோலை மலைகளில் இருந்து எதிரொலித்தது. அந்த ஒலிக்கு , கையிலிருந்த சிகெரெட் கீழேவிழ நான் பதறி கதவில் போய் விழுந்து விட்டேன். ஆச்சரியம் புலி என்னைபார்த்து சிரித்தது. புன்னகையல்ல நல்ல வாய்விட்ட சிரிப்பு. அதன் சிரிப்பு சத்தத்தை கூட நான் கேட்ட உணர்வு. அதற்குள் நான் இருமுறை பாசி ஈரத்தில் வழுக்கி விழுந்து அறைக்குள் சென்றிருந்தேன். அதன் நீண்ட நெடிய வால் செல்வதை நான் கடைசியாக பார்த்தேன். பின் அந்த பொன்னிறம் மட்டுமே நினைவிலிருந்தது.

3.

நான் பார்த்த புலியை எங்களுடன் வேலை செய்யும் ஓடையன் அவர்களின் தெய்வம் என்றான். அவனது மொழி தமிழ் போலில்லை சில இடங்களில் குழைந்து பின் இறுகியது. அது அனைவருக்கும் இவ்வளவு அருகாமையில் கண்களில் படுவதில்லை , அது சிரிப்பதென்பது தன் பூசாரியைக்கண்டு கொள்ளும் தருணம் என்றான் ஓடையன். என்னை பார்த்து ஏன் அது சிரிக்க வேண்டும் நான் தான் பூசாரியா ? சுத்த கிறுக்குத்தனம். நாய்கள் கூட சிலசமயம் மூச்சு வாங்கும் பொழுது நமக்கு சிரிப்பது போல தோன்றும். இதுவும் அதே போலத்தான். ஆனால் அந்த சிரிப்பு அவ்வளவு மனிதத்தன்மையுடன் இருந்ததே. ஆம் அது சிரித்தது. அவ்வளவு அரவணைப்புடன்.

4.

அந்த புலியை பின் காடுகளில் தேடி நான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடையன் சொல்லியது போல அது நமக்கு அருள் கொடுக்கும் சமயம் மட்டுமே கண்முன் வரும் போல. நேற்று அதனை நான் என் கனவில் கண்டதாலேயே இதனை எழுதுகிறேன். திசைகள் தெரியாத அடர்ந்த காட்டில் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் ஆனால் என்னை யாரும் துரத்துவது போல தெரியவில்லை. அதனை உணர்ந்திருந்தும் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். பசுந்தழைகளில் உள்ள ஈரமானது என் உடல் முழுவதையும் நனைத்திருந்தது. உதிர்ந்த இலைகள் நீரில் விழுந்து அதன் அழுகும் மணம் புத்துணர்வைக்கொடுத்தது. எதிரே போவதிற்கில்லாத பெரிய காங்கிரீட் சுவர் , அதன் பின் எங்கும் செல்வதற்கில்லை என்ற பொழுது புலி மெதுவாக உடல் குலுங்க அடிவைத்து , உணர்கொம்புகள் சிலிர்க்க என்முன் வந்து நின்று கனத்த மூச்சுக்காற்றுகளை விட்டுக்கொண்டிருந்தது. திடீரென்று அது  என் மேல் பாய்ந்து வந்த தருணத்தில் எங்கிருந்தோ கிடைத்த ஒரு கம்பைக்கொண்டு நான் அதனை அடிக்க முயன்றேன். பின் அது தன் எல்லைக்குள் மீண்டும் போய் நின்று மூச்சு விட்டது. என்னை சுற்றி சுற்றி வந்து வாலை சுழற்றி பின் கால் மாத்தி மாத்தி வைத்து தலையை சுழற்றியது , கோரப்பல்லைக்காட்டி , நாக்கை மடித்து சீறியது. நான் கம்பைக்கொண்டு அதனை கட்டுப்படுத்தினேன். பின்பு அது என் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து சிரித்தது. அதே மனிதச்சிரிப்பு. நான் கம்பை வைத்துவிட்டு அதனை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினேன்.

5.

இப்பொழுது அந்தக்கடுவா என் அறைக்கு தினமும் வருகிறது. என்னுடன் அமர்ந்து கதைகள் பேசுகின்றது. நான் அதன் நண்பன் என்று கூற முடியவில்லை ஆனால் அது பேசுவது அன்பின் வெளிபாடாகவே இருக்கின்றது. அதனுடன்  என்னுறவை விளக்க முடியவில்லை. ஒரு தந்தையின் இடத்தில் நான் அதனை சில நொடிகள் உணர்கிறேன். இந்த இடத்திற்கு ஒவ்வாததொரு அந்நியனின் இருப்பாக சில நொடி. அதன் கண்களில் அத்தனை கருணை.

இருவரும் நடனமாடுவோம். சில சமயம் இருவரும் பச்சைகறியை உண்போம். என் சக அலுவலக நண்பர்களை என் அறைக்குள் நான் அனுமதிப்பதில்லை. நான் கண்டடைந்த , என்னை கண்டடைந்த அந்தக்கடுவா இந்த நிலத்தில் இருக்க தகுதியற்றதாக அவர்கள் கூறி அதனை விரட்ட வேண்டும் எங்கின்றனர். யார் தகுதியற்றவர் கடுவா நீயே சொல்…ஆனால் கடுவா என்னருகில் இருக்கையில் என்னிடம் எப்பொழும் கம்பிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த அதனை என் நிலையில் வைக்க எனக்கு அந்த கம்பு அவசியமாகிறது. நான் அதனை இங்கிருந்து விரட்ட அதை வைத்துக்கொள்ளவில்லையே. அது என் பாதுகாப்புக்கானது மட்டுமே என்பதை நீயே அறிவாய்…

6.

நான் இருக்கும் விடுதியறை மக்கள் நடமாட்டமில்லாத தெருவின் ஓரத்தில் இருக்கின்றது. இங்கு என் தெய்வத்தை நான் சாந்தி படுத்தி வைக்க முயல்கிறேன். காட்டில் அதற்கு இடமில்லையாம். அது மனிதர்கள் நடமாடகூடாத காடாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. மூடர்களே அது தெய்வங்களின் நிலமென நீங்கள் அறியவில்லையா. மனிதர்களில்லா இடத்தில் தெய்வங்கள் சஞ்சரிக்கும் என்பது தெரியாதா உங்களுக்கு. தெய்வத்திற்கில்லாத இடத்தில் பூசாரிக்கென்ன வேலை. இங்கு என் படையலை ஏற்றுக்கொள் கடுவா. நான் படைக்கிறேன் கையில் கம்புடன்.

மூன்று :

சோலைக்காடுகளில் அவன் நடந்து கொண்டிருந்தான். அவன் குடிகள் இருக்கும் இடத்திலிருந்து இருபது கல் தூரம்  இருக்கலாம் என்பது அவனது கணக்கு. அவன் குடிகள் இருந்த இடத்திலிருந்து சோலைகாடுகளை பார்க்கும்பொழுது மொத்த நிலப்பகுதியும் புற்களால் நிரம்பியது போலிருக்கும். ஆனால் அருகில் சென்று பார்க்கையில்தான் இடைவெளிகளை அவனால் உணரமுடிந்தது. ஆளுயரத்திற்கும் அவை வளர்ந்திருந்தன.

செந்நிற மேகங்கள் நீல மலைகளின் மீது புரண்டிருந்தன. சூரியன் தன் இருப்பை மறைக்கும் கணம் நெருங்கும் நேரம் அதிகமில்லை என்பதை அவன் உணர்ந்தான். கால்கள் தளர அவன் அமரலாம் என்று நினைத்த கணத்தில் காற்று பலமாக வீசியது. தூக்கி பள்ளத்தாக்கில் வீசிவிடும் போலிருந்தது காற்றின் வேகம். புற்கள் நிலகொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்தன. மழை நின்று இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றன. மொத்த மலையும் சரிந்து இன்னொன்றாக ஆகியிருந்தது. அவன் குடிகள் இருக்கும் இடத்தை அடைவதென்பது தொலைக்காத பொருளை தெடுவது போன்றது. எங்கும் கருப்பும் செம்பழுப்பும் கலந்த மணல் நிறைந்த  புதியதொரு உலகம் அவன் குடிகள் இருந்த இடத்தில் உருவாகியிருந்தது. மரங்கள் அதன் வேர்களை சூரியனுக்குக்காட்டி கைவிரித்து நின்றன.

கால்களை முன்னும் பின்னும் மடக்கி நீட்டி கைகளை தரையில் ஊன்றி தலையை சுழற்றி பற்களை கடித்தான். கண்கள் விரிந்து விழிக்கோளங்கள் சாடி விழுந்து விடும் போலிருந்தன. கருவிழிகள் இறுகி ஒற்றைகோடென ஆனது. இறுகிய கயிறை மீண்டும் முறுக்குவதைபோல நெளிந்தான். கண்களில் நீர் வழிய வானத்தைப்பார்த்து உடல் நடுங்க விம்மினான்.

அப்பெருங்காற்றுடன் அவன் ஓலம் கலந்தது.

ஒண்ணுமில்லாம போரேனே எங்கடுவா
காத்து நிக்கீரோ எங்கடுவா
பண்டு காலந்தொட்டு வந்தோமே எங்கடுவா
இண்ணு குடியெல்லா கரஞ்சி போச்சே எங்கடுவா
காட்டுக்கு நாங்கல்லோ எங்கடுவா
இண்ணு காடிருக்கு நாங்கெங்கோ எங்கடுவா
கம்பூணி தடுத்தல்லோ எங்கடுவா
அதொண்டு மதமெழகி சோறே குடிக்கான் கெளம்பியோ எங்கடுவா

இருட்டிய பின் அவன் சென்ற பாதையில் நான்கு காலடித்தடங்கள் கிடந்தன.

நான்கு :

“நேத்து நடந்தது எனக்கே ஆச்சரியமாதா இருந்துச்சி , நா பாத்தத என்னாலயே நம்ப முடியல” என்றார் டாக்டர். இருவரும் நேற்றமர்ந்த அதே சோபாவில் அமர்ந்திருந்தனர்.

“நீங்க இன்னும் நம்பல அத” என்றான் சிபு.

” ஸீ , இது வெறும் உளச்சிக்கல் அத நீங்க தெளிவா புரிஞ்சுக்கோங்க , அதுக்கும்மேல நீங்க சொல்லிதா அவர நாங்க சேத்திருக்கோம். நா முன்னாடியே சொன்ன மாதிரி ஒரு வாரம் போதும்”

“ஆமா நீங்க அவர குணப்படுத்தலாம். நீங்க பண்றது என்னனு தெரியுமா , ஒரு தெய்வத்த அழிக்குறது” அவன் குரல் அமைதியாக ஆனால் உடைந்துவிடும் போலிருந்தது.

“முட்டாள் மாதிரி பேசாதிங்க. இந்த காலகட்டத்துல இவர மாதிரி ஒரு மனுசன நீங்க வீட்ல வச்சு பாத்துக்க முடியாது”

“எங்களொட தெய்வமா எங்கப்பா கும்பிட்ட சாமிய நீங்க கொண்ணுட்டீங்க”

“கொஞ்சம் அறிவியல் பூர்வமா யோசிங்க , தெய்வம் நம்ம உருவாக்குனது மனுசனோட அப்செசன்தான் அதுக்கு காரணம். அவன் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிட்டான்.”

“இருக்கலாம் ஆனா நா அத கும்பிடனும் , பத்திரமா பாதுகாக்கணும்னு நினைச்சேன்”

“ஒரு புலிய நீங்க வீட்டுல வைக்க முடியாதுல்ல”

“வைக்கலாம் அது தெய்வமாகும் போது. அதுக்கு நா தயாரா இருந்தேன்.”

“நீங்க சொல்றது , வெயில கையில அடைச்சு வைப்பேன்னு சொல்ற மாதிரி இருக்கு”

“ஆனா வெளிச்சம் விளக்குல கூட இருக்கும்”

“இன்னிக்கு மதியம் செஸ்ஸன் முடிஞ்சதும் அவரோட உண்மையான பேர சொல்லிட்டாரு”

“இல்ல வேண்டாம் அவர டிஷ்சார்ஜ் பண்ணிருங்க , நாங்க வீட்டுல வச்சே பாத்துக்குறோம்”

“உங்க இஷ்டம்தா , ஆனா திரும்பவும் என்ன ட்ரீட்மெண்ட்க்கு கூப்பிடாதீங்க”

“கூப்புடல , நீங்க போகலாம்” என்றான் சிபு.

டாக்டர் சென்ற பிறகு கடுவா இருந்த அறையின்  மூலையிலிருந்த கம்பை  புவனா எடுத்து சிபுவின் கையில் கொடுத்து “புலி எங்கப்பா…காணல” என்றாள். அவன் பதில் கூறும் முன் “நாந்தா புலி…..கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்றாள்

தரையில் கைகளை ஊன்றி நாங்கு கால்களில் நடந்தாள். பறவை கிரீச்சிடும் குரலில் உறுமினாள். அவள் பொன்னிறத்தில் கருப்புப்பட்டைகளுடன் கூடிய கவுண் அணிந்திருந்தாள். சிபு ஐயாவை திரும்ப அழைக்க வேண்டுமா என்று யோசித்தான். அவன் கையில் கம்பிருந்தது.

ராம் – வைரவன் லெ.ரா சிறுகதை

வானிற்கும் மண்ணிற்கும் இடையே இவ்வெளி பலயுகங்களாக மிதந்துக்கொண்டிருக்கிறது. என்ன ஆச்சரியம்? மணிக்கணக்கில், நாட்களில், வாரங்களில் வயிறை தடவியபடி படுத்திருப்பேன், அப்பொழுதெல்லாம் விரல்கள் நண்டின் கொடுக்குகளை போல வயிற்றின் மேலே ஆயும், நிலவையோ, நட்சத்திரத்தையோ வெறித்து பார்த்தபடி பலமணிநேரம் உமிழ்நீரை விழுங்கியபடி இருந்திருக்கிறேன். நிலக்கரியை அள்ள அள்ள தின்று எரியும் பெரும் அடுப்பினை போல பசி தீயாக எரிந்துகொண்டிருக்கும். நா வறண்டு கண்கள் அயர்ந்திருப்பினும், நிலவின் அருகே கண்களை அலைபாயவிட்டிருப்பேன். எத்தனை குளிர்ச்சியானது. இவ்வெளியை கடந்து தானே விழியின் ஒளி சென்றிருக்கும். ஆனாலும் இதன் இருப்பையோ, ஊஞ்சலை போல முன்னும் பின்னும் நகருவதை நான் கவனிக்கவில்லையோ, உண்மையிலே ஆச்சரியம் தான். எங்கே தவறவிட்டேன்! எப்படி தவறவிட்டேன். விடை தேடி அலைவதில் பயனில்லை. சரி, எங்கே ராம்? அவனும் இதை கடந்திருக்க வேண்டும். அவனுக்கு முன்னே நான் வந்து விட்டேனா? இல்லை அவன் வருகைக்காக காத்திருக்கிறேனா? கட்டாயம் அவன் வந்திருப்பான், இல்லை வருவான். ஒருவேளை இனிதான் வரவேண்டும் எனில், அவனுக்காக காத்திருப்பதில் மகிழ்ச்சிதான். ஆம் அவனின் சிறிய பாதங்களை கண்டு எத்தனை நாள் ஆகிறது, கொஞ்சம் பேசவும் செய்கிறான் என பாலா கூறியது நினைவில் வந்தது. என்னை போலவே இருக்கிறானாம், இதனைக்கூறும் வேளையெல்லாம் அவ்வளவு வெட்கம் அவள் குரலிலே தெறிக்கும் , முகம் எப்படி ஒளிரும் இத்தருணத்தில். எவ்வளவு இழப்பு, நான் தானே இழக்கிறேன். யாருக்காக எல்லாமே என் பாலாவிற்க்காக, துர்கா, சரஸ்வதி, லெட்சுமிக்காக மூன்று சக்திகளுக்கு அப்பா நான். கடைசியில் ராம், அயோத்திக்கு அவனை கூட்டிச்செல்ல வேண்டும், ராமஜென்ம பூமியில் என் குட்டி ராமின் பாதங்கள் படவேண்டும்.

சொர்க்கம் எங்கோ! வானத்திலோ! இல்லை. வயிறார உணவும், வீட்டிற்கு அனுப்புவதற்கு சிறிது பணமும்

கிடைக்கும் இடங்கள் எல்லாமே சொர்க்கம் தானே. உறக்கமும் தானாக வருகிறது, வயிறு நிறைந்துவிட்டால் தூங்கிவிடலாமே, மனம் கனமின்றி இலகுவாக இருந்தது. ராமிற்கு ஒரு நடைவண்டி வாங்கி கொடுக்கவேண்டும். இங்கே, கடைத்தெரு சென்று வரும்வழியில் குழந்தை ஒன்று நடைவண்டியோடு நடை பயின்றுகொண்டிருந்தது. நேரம் அறியாது அங்கே நின்றபடி என் மொழியால் அவனை உற்சாகப்படுத்தினேன். அப்பா அடிக்கடி சொல்வதுண்டு ஒரு காரியத்தை செய்துமுடிக்க ஒரு நான்கு நல்லவார்த்தை வேண்டும் என்று, நானும் ஏதோ மிதப்பில் கைதட்டி அவனை குதூகலப்படுத்த நினைக்க, குழந்தை அழுதபடி ஓடிவிட்டது, தவழ்ந்தபடியே. வந்தவர்களில் சிலரின் கண்கள் சிவந்தபடியும், நாக்கு உதடுகளினுள் மடிந்தபடியும் இருந்தது. நகர்ந்து விட்டேன், உள்ளத்தின் அத்தனை அடுக்குகளிலும் ராமின் சிரித்த முகமே நிறைந்திருக்கும். நானும் குழந்தையாக இருந்தேன். ராமும் அப்பாவாக மாறுவான். தலைகீழாக மாறும் நிலை உண்டு. ஆனால் ராமை நான் அப்பாவாக கவனிக்கிறேன். அவனின் முதல் அடியை கொண்டாடுகிறேன். இதில் பிழை இல்லையே, ஆனால் நான் அவனோடு இருந்திருக்க வேண்டும்.

தமிழ் பேசும் இப்பிரதேசம் என்னை இழிவாக பார்ப்பது போல தோன்றும், எங்கோ இருந்து வந்தவன் இவன் என்பது போல, நாங்களும் உங்கள் தூரத்துச்சகோதரர்கள் என கூவத்தோன்றும். யாருக்கும் இதில் பலனில்லையே, சதுரங்கத்தில் காய்கள் போல நீங்களும், நாங்களும் எதிரெதிரே, நகர்த்தும் அரசியல் நமக்கு புரிவதில்லை. ஆனால் எனக்கு இப்பிரதேசம் முக்கியமானது, ஆம் இங்கே நான் மூன்று வேளை உண்கிறேன், என் குடும்பமும். மகள்களில் மூத்தவள் அவள் அம்மாவிற்கு உதவியாக இருக்கிறாள். மற்ற இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள், இலவசக்கல்வி. இங்கே பெண்களின் நிலை உயர்வாக உள்ளது. எங்கள் பிரதேசம் அப்படியில்லை, ராமிற்கு இதையெல்லாம் நான் சொல்ல ஆசைப்பட்டேன். அவனிற்கு எல்லாமே கிடைக்கிறது, அதற்காகத்தான் நான் இருக்கிறேனே. அவன் பிறந்து மூன்று மாதங்கள் கழித்தே அவனைக்காண நேர்ந்தது. சிவந்த மலரை போலவிருந்தான். என் கண்களில் இருந்து வடிந்த நீர் அவன் பாதங்களில் பட்டதும், அவன் சிரித்தான். என் சக்திகள் என்னை சுற்றிக்கொண்டு நின்றனர். ஒரு வாரம் தான் அங்கே தங்கமுடிந்தது. மகிழ்ச்சியான நாட்கள், எட்டு மாதங்கள் கடந்துவிட்டது. அதற்குப்பின் இங்கே திரும்பிவிட்டேன். சிலநேரம் நடப்பவை கனவுகள் போல மறுபடியும் கிடைப்பதில்லை. ராமுடன் அங்கிருந்த நாட்கள் அப்படியானவை.

எனக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அங்கே உருளை விதைப்போம். போதுமான எல்லாம் கிடைத்தது, இரவுகள் இனிமையாக கடந்தது, உறங்க நான் பிரயாசை பட்டதில்லை, அதன் பிறகு இப்போதுதான் நான் கண்களை மூடியவுடன் உறங்குகிறேன். ஒரு பெரிய தொழில்நிறுவனத்திற்காக என் நிலம் அற்பக்காசுக்கு வாங்கப்பட்டது. அதன் பின் நெடுநாட்கள் வெறும் ரொட்டியோடு நாட்கள் கழிந்தன. பின் எப்படியோ இங்கே வரநேர்ந்தது. அதன்பின், என் வீட்டில் மூன்று வேளையும் உணவு உண்கிறார்கள். பாலா பசுமாடு வாங்கியிருக்கிறாள் கடந்த மாதம் கூறினாள். கடனாக வாங்கிய பணம் மூலம்தான், நான் இம்மாதம் முதல் கூடுதலாக இரண்டு மணிநேரம் வேலை செய்கிறேன். அப்படியானால் குறைந்த நாட்களில் கடனை திருப்பிக்கட்டி விடலாம்.

முதலில் ஒரு சிறிய நகரத்தில் கட்டிடப்பணி, அங்கே பெரும்பாலும் பெரிய மீசைகொண்ட மனிதர்கள் தான். விறைப்பான முகம் கொண்ட மேஸ்திரி எனக்கு, ஆனால் கனிவானவர். சனிக்கிழமை எங்களுடன் அமர்ந்தே மது அருந்துவார், எங்களுக்கு வாங்கிக்கொடுப்பதை சம்பளத்தில் பிடித்துக்கொள்வார். உணவு மூன்று வேளையும் இலவசம், இரவு ரொட்டியும் சப்ஜியும் நாங்கள் சமைத்துக்கொள்வோம். என்னோடு எங்கள் பிரதேசத்தை சார்ந்த இருபது பேர் இங்கே வந்திருந்தோம். நாங்கள் கட்டியது ஒரு ஆறு மாடி வணிக வளாகம். இரண்டு வருடம் அங்கே இருந்தேன். அப்போதுதான் லெட்சுமி பிறந்தாள். பின் இங்கே தலைநகரத்திற்கு வந்துவிட்டோம். பதினெட்டு மாடி அடுக்கு குடியிருப்புகள். தொடர்ச்சியாக கட்டிக்கொண்டிருந்த பெரும் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை. இன்னும் பத்து வருடம் கவலையில்லை என்னுடன் சித்தாள் வேலை பார்க்கும் கௌரி கூறினாள். பாலா நெடுநாளாக நச்சரித்தாள் பசுமாடு வாங்க, எல்லாம் கணக்கில் கொண்டு வாங்க சொல்லிவிட்டேன் கடந்த மாதம் வாங்கிவிட்டாளாம்.

ஒரு சனிக்கிழமை மது அருந்தும்போது லாலு கூறினான், காலரா மலேரியா போல ஒரு நோய் பரவுகிறதாம். வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வருபவர்கள் மூலமாக பரவுகிறது என. அதன்பிறகு ஒரு வாரம் இருக்கும், எங்களை தங்கிய அறைக்கே திருப்பி அனுப்பி விட்டார்கள். ஒரு இரண்டு வாரம் எங்குமே, யாருமே வெளிவரக்கூடாது என்று. பாலாவிடம் விசாரித்தேன், அங்கே பிரச்னை எதுவுமில்லை கவனமாக இருக்கச்சொன்னாள். ராமிற்கு காய்ச்சல் என்றாள். நான் என்னிடம் இருந்த கடைசி பணத்தையும் அவளுக்கு அனுப்பிவிட்டேன். உணவிற்கு ஒரு வாரம் கவலையில்லை, மூன்று வேளையும் கிடைத்து. பின் இரண்டு வேளை என குறைந்துவிட்டது. தூக்கத்தை, பசியை என்னால் தடைபோட இயலவில்லை. அப்போதெல்லாம் விட்டத்தில் படுத்தபடி நட்சத்திரங்களை எண்ணுவேன். அதே நட்சத்திரங்கள், அதே எண்ணிக்கை போல எனக்கும் அதே பசி. கூடவே ராமை, பாலாவை, சக்தியை பற்றிய நினைவுகள். தூக்கம் இல்லாமல் போக நினைவுகளும் காரணம்.

தினமும் பாலாவிடம் இருந்து அழைப்பு வரும், ராமை பற்றியே பேச்சுக்கள் இருக்கும். காய்ச்சல் இன்னும் குறைந்தபாடில்லை. கையில் காசுமில்லை, போக்குவரத்து எங்குமே இல்லை. நான் ராமபிரானிடம் வேண்டிக்கொள்வேன். அவன் வாடியிருப்பான், ராமபிரானின் ஆட்சி நடக்கிறது என அரசாங்கமே சொல்லிவிட்டது. அயோத்தியில் பசியில் மக்கள் வாழ்ந்தார்களா? தெரியவில்லை ஆனால் நாங்கள் பசியால் வாடுகிறோம். பொய்யாகி விடாதா? நடந்ததெல்லாம். அங்கே, எல்லாருமே பெண்கள் என்ன செய்வார்கள். நான் அங்கிருந்தால் பேருதவியாக இருக்கும். ஆனால் இங்கிருந்து செல்ல வழியே இல்லை. நடந்துதான் போகவேண்டும். ஏற்கனவே சிலர் நடந்து செல்கிறார்கள் என்று கௌரி செய்தியில் பார்த்தாளாம் கூறினாள்.

ராமிற்கு காய்ச்சல் குறைந்தபாடில்லை. அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். எனக்கு மூச்சு அதிகமாக வாங்கியது. உணவும் நேரத்திற்கு கிடைத்தபாடில்லை. நோய் பெரிதாக பரவுகிறதாம், செய்தியை கௌரி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள். கௌரி அழகான பெங்காலி பெண். அவளுக்கு குழந்தைகள் இல்லை, கணவன் எங்கோ வேறிடத்தில் வேலை பார்க்கிறான். அவனை நான் பார்த்திருக்கிறேன். மாதம் இருமுறை இங்கே வருவான். அவனின் முகம் வெண்மையான பாலின் நிறத்தில் இருக்கும். அன்றைய இரவு கௌரியும், அவனும் தூரமாய் சென்று விடுவார்கள். இங்கே நாங்கள் குலாவவா இயலும். அன்றைய நாள் பாலாவின் நினைவில் சுயமைதுனம் செய்வேன். அவ்வளவே என்னால் முடியும்.

பாலா அன்று மிகவும் அழுதாள். மிகவும் பலவீனமாக அவளின் குரல் இருந்தது, மூத்தவள் துர்கா தைரியமாக பேசினாலும், முடிந்தால் இங்கே வாருங்கள் அப்பா எங்களுக்கு தைரியமாக இருக்கும் என்றபடியே முடித்தாள். நடந்தாலும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும், லாலு ஒரு மிதிவண்டி ஏற்பாடு செய்தான். கூடவிருந்த மற்ற நண்பர்கள் உணவு கொஞ்சம், பணம் கொஞ்சம் கொடுத்தார்கள். ராமிற்காக என் கால்கள் சைக்கிளை மிதித்தது. தார்சாலைகள் கம்பீரமாக இருந்தது. வெயில் கொதித்தது. எங்குமே நிழலை காணமுடியவில்லை. மரங்கள் முடிந்தவரை அரசாங்கத்தால் வெட்டப்பட்டு இருந்தது. தண்ணீர் ஆங்காங்கே கிடைத்தது. சிலநேரம் பிஸ்கட், பன் கொடுப்பவருடன் நான் புகைப்படம் எடுக்க வேண்டும், அது மட்டுமே நிர்பந்தம்.

பல பிரதேசங்கள், விதவிதமான மொழி உச்சரிப்பு. கடுமையான அனல் காற்றோடு கூடிய வெயில் வாட்டியது. கிடைத்த இடத்தில் உணவு, இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. சைக்கிள் சிலநேரம் ஓடியபடியே இருக்கும் என் பிரக்ஞையின்றி, நினைவெல்லாம் ராம் சிரித்தபடி விளையாடி கொண்டிருப்பான். அவனுக்கு கண்ணிற்கு கீழே சிறிய மச்சம் இருக்கும், என் அப்பாவை போலவே. எப்படி இருப்பானோ, காய்ச்சல். அவன் சிறிய உடல் தாங்குமா? பாலா எப்படி சமாளிக்கிறாளோ! தினமும் மூன்றுவேளை அழைப்பாள். காய்ச்சல் குறையும், அவனை தூக்கி கொஞ்ச வேண்டும். இரவுகளில் கிடைத்தவிடத்தில் தூக்கம், கண்கள் மூடியபடி படுத்திருப்பேன். உறங்க முடியாது. உடல் அயற்சியால் ஓய்வெடுக்கவே படுத்திருப்பேன். கனவுகளில் சாலை அரக்கனை போல என்னை வாரி விழுங்கும். நான் விழும்போதெல்லாம், குழந்தையின் கைகள் என்னை தாங்கும், பாலாவின் உடல் வாசனை நாசியை துளைக்கும். ராம் தவழ்ந்து , ஒரு கட்டிலின் அடியில் நுழைவான். சாலை என்னை பிரட்டிபோடும் நான் எழுந்து, கட்டிலுக்கு அடியே தலையை நுழைப்பேன். கட்டில் என் தலையை அழுத்தும், நான் விழிப்பேன்.

அன்றைய நாள் மிகவும் உற்சாகமாக விடிந்தது. நான் இரண்டு நாட்களில் வெகுதூரம் வந்துவிட்டேன். கோதாவரியை நெருங்கி விட்டேன். நதியெல்லாம் அன்னையை போல, இப்போது அதன் மேல் எழுப்பிய பாலத்தில் நின்றுகொண்டிருந்தேன். நின்றபடி அதனை வணங்கினேன். மனிதர்கள் குறைவாகவே கண்ணில்பட்டார்கள். வெயில் தாழ்ந்துகொண்டிருந்தது. கதிரவனின் ஒளி தங்கம் போல நீரில் மின்னியது. பசி இப்போதெல்லாம் பெரிதாக வாட்டுவதில்லை. பாலாவின் அழைப்பு வந்தது. ராமபிரானை வேண்டிக்கொண்டே பேச ஆரம்பித்தேன். பேசியது துர்கா, தடுமாற்றமாக பேசினாள், வார்த்தைகள் சரியாக இல்லை. பதட்டத்தில் இருப்பது போலவிருந்தது. பாலா மயக்கமாக இருக்கிறாளாம். ராம் மூச்சின்றி இருக்கிறான். மருத்துவர்கள் எதுவுமே கூறவில்லை, எடுத்துவிட்டு செல்ல கூறிவிட்டாராம்.

கால்கள் நடுங்கி, கைகள் உதறியது. வார்த்தைகள் எழவில்லை. தேற்றக்கூட யாருமில்லை. நான் அமர்ந்துவிட்டேன். அழைப்பை துண்டிக்கவில்லை. ராமின் சிரிப்பு காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருட்டிக்கொண்டு வந்தது. நான் அழுதுகொண்டே இருந்தேன். யாரென்று தெரியவில்லை, ஒரு வயதான பிராமணர் தோள்களை அழுத்தி புரியாத மொழியில் பேசினார். நான் அவர் கைகளை பற்றிக்கொண்டேன். சிலநேரம் என்னோடு அமர்ந்தார். பின் தோள்களை தட்டிக்கொடுத்து அங்கிருந்து சென்றார். அவரின் பாதங்களின் தடத்தை கண்டேன், அது மின்னியது.

நான் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. கையில் பணமும் இல்லை. நான் நேற்றில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை. பாலாவிடம் இருந்து அழைப்பும் இல்லை. இரண்டு தடவை அவளின் அண்ணன் அழைத்தார். எல்லாமே அவர்மூலம் முடிந்துவிட்டது. வேகமாக சைக்கிளில் சென்றேன். ஓய்வே இல்லை, மனம் என்னிடம் கட்டுப்படவில்லை. ராமின் கடைசி முகமும் காணக்கிடைக்கா பாவியாக உணர்ந்தேன். அது ஒரு நெடுஞ்சாலை, கால்கள் அதன்போக்கில் மிதிக்க சுயநினைவின்றி இருந்தேன். எல்லாமுமே நினைவுகளால் நிரம்பியது. தத்ரூபமாக காட்சிகள் விரிந்தது. நான் பாலாவை திருமணம் செய்தது, என் சக்திகள் பிறந்தது, ராம் பிறந்தது. ராம் என் மடியிலே சிறுநீர் போனான், சுற்றி எல்லாருமே சிரித்தார்கள் ராமும்தான். அயோத்தி செல்லவேண்டும். அவனின் பாதங்களை ராமஜென்ம பூமியில் படவேண்டும், என் பிரார்த்தனைகள். ஒளி கண்களை கூசச்செய்தது. ஏதோ மோத, பறந்தேன். தலையில் பலமான அடிபட்டது.கண்கள் சுருங்கியது. பாலா, துர்கா, சரஸ்வதி, லெட்சுமி, ராம் அங்கே நின்றார்கள். நான் எழுந்தேன். இலகுவாக உணர்ந்தேன். பறக்க ஆரம்பித்தேன்.இந்த வெளி அப்போதுதான் கண்களில் பட்டது.ஏதோ உள்ளுணர்வு ராமும் இங்கே வருவான் என சொல்ல அவனுக்காக காத்திருக்கிறேன். அவனின் பாதங்களில் முத்தமிட வேண்டும்.