Author: பதாகை

வெயில் சாலை – முத்துக்குமார் சிறுகதை

ஓங்கியெழுந்து அடங்கும் அலைகளை பாதியில் உறையவைத்தது போலிருந்தது, இருபக்கங்களிலும் உயர்ந்த மலைக்குன்றுகளை கரையாகக் கொண்டிருந்த அந்தச் சாலை. வாகன அரவமற்ற அந்த நண்பகல் நேரத்து நெடுஞ்சாலையில் ஆங்காங்கே ஊர்ந்து கொண்டிருந்த வாகனங்களை தொலைவிலிருந்து பார்ப்பதற்கு, இருபுற மலைக்குன்றுகளும் அவற்றை தொட்டிலில் இட்டு ஆட்டுவது போலிருந்தது. இந்தியத் தத்துவமரபின் மேல் திடீர் காதல்கொண்டு ஆதிசங்கரர் அத்வைதம் தியானம் என திழைத்திருந்த வைரவன் பெரும்பாலும் பயணங்களில் பயணிக்கும் வாகனத்தின் வெளியே தன்னை ஒன்ற வைத்துக்கொள்வார். ஆனால் அவற்றோடு ஒன்றமுடியாமல் இன்று சற்று நிலைதடுமாறியிருந்தார்.

என்ன சார், திடீர்னு பேசுறத நிறுத்திட்டீங்க? நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?”

எதற்காக பிரகாசம் என்னிடம் அந்த கேள்வியை கேட்கவேண்டுமென்ற நினைப்பு, வாகனத்தில் நன்றாக இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியையும் தாண்டி எரிச்சலை உண்டாக்கியது வைரவனுக்கு.

ஒன்னுமில்ல பிரகாசம் . இன்னும் எவ்வளவு நேரமாகும்..?”

ஒரு 3 மணி நேரத்துல போயிடலாம் சார்..” என்ற பிரகாசம் சாலையிலிருந்து கண்களை எடுக்கவில்லை.

என் பொண்ணுக்கு மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சுடுக்கு சார் என்று சொல்லிவிட்டு, உங்க பையன நீங்க ஏன் சார் மெடிக்கலுக்கு முயற்சி பண்ணச் சொல்லல என்று ஒட்டுநர் பிரகாசம் வெகுளித்தனமாகக் கேட்ட அந்த கேள்வி மீண்டும் நினைவில் வந்து வைரவனை எரிச்சலூட்டியது.

சரி. நான் கொஞ்சம் தூங்குறேன்” என்று அமர்ந்திருந்த முன்னிருக்கையை சற்று பின் தள்ளிச் சாய்த்து சாய்ந்தார். நண்பகல் வெய்யிலில் துளி மேகமுமின்றியிருந்த வெளிர்நீல வானத்தின் பிரகாசம் கார்க்கதவின் கண்ணாடியையும், வைரவனின் முகம் நிறைத்த குளிர் கண்ணாடியையும் தாண்டி அவர் கண்ணைக் கூசச் செய்தது. இந்த வானத்தைப்போல நிர்மால்யமாய்த்தான் தன் மனதும் இருந்ததாக தான் எண்ணியது தவறோ என்ற நினைப்போடு அருகிலிருந்த பிரகாசத்தை உற்றுநோக்கினார்.

இப்ப என் பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கான். ஒண்ணும் வித்தியாசமா தோணலை. ஆனால் தன் மகள் நிவேதாவோடு வீட்டுக்கு வந்து அவளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததை பெருமையாகச் சொல்லி என் பக்கத்தில் அமர முயன்றபோது மட்டும் எனக்குள் எழுந்த விலக்கமும் எரிச்சலும் வித்தியாசமாகத் தோன்றியது. “அப்பா..தள்ளிக்குங்க..” என்று பிரகாசம் அமருவதை நாசூக்காக தடுத்து என் காலைத்தொட்டு வணங்கி ஆசிபெற்றுக்கொண்ட நிவேதாவின் புரிதல் ஆச்சரியத்தையளி்த்தது. அவளுக்கு நம்முடைய உள்ளுணர்வு புரிந்திருக்குமோ என்ற அச்சவுணர்வு இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டிக்கு அதிக வேலை கொடுத்தது. சூரிய ஒளியில் கூசியிருந்த கண்களோடு சேர்த்து உடம்பும் கூசியது. கைகளும் குளிரில் சற்று மரத்துப்போனது போலிருந்தது.

இந்த குளிரூட்டிகளின் மேல் வைரவனுக்கு இருக்கும் காதல் அலாதியானது. பள்ளிகால கோடை விடுமுறை நாட்களில், குடும்பத்தின் வறுமை காரணமாக வேலைக்கு சென்ற மௌலானா பாயின் ஐஸ் ஃபேக்டரியில் ஆரம்பித்தது இந்த காதல். தண்ணீரை வெவ்வேறு வடிவங்களில் பனிக்கட்டிகளாகச் சிறைப்படுத்தி விற்பனை செய்யும் தொழிற்சாலைகள், குளிர்சாதன தொழிட்நுட்பங்கள் வளர்ச்சியுறாத 80ளில் மிகவும் பிரபலம். பெரும்பாலும் மீன் வியாபாரிகளும், கோடைகால நன்னாரி சர்பத் கடைகளும், மருத்துவமனை பிணவரைகளும் இத்தொழிற்சாலைகளின் வாடிக்கையாளர்கள். 24 மணிநேரமும் இயங்கும் மௌலானா பாயின் இந்த குட்டித்தொழிற்சாலையில் கிடைத்த 300 ரூபாய் வருமானம் வைரவனின் அடுத்த வருட ஒட்டுமொத்த கல்விச் செலவுக்கும் போதுமானதாக இருந்தது.

ஏன் சாதிக்மணி பத்தாச்சு இன்னும் வைரவன் கடைக்கு வரலை…”

இல்ல மௌலானா பாய்..நேத்திக்கு நைட் அவந்தான் டியூட்டி பார்த்தான். காலைல 8 மணிக்கு வந்து நான்தான் மாத்திவிட்டேன்..”

ஏண்டா..இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்.. காலைலயும் பார்த்துட்டு நைட்டும் எப்படிடா எளவு வேல பாக்கமுடியும்…”

பாய்அவனுக்கு இந்த வேல புடிச்சுப்போச்சு பாய். நைட்ல அசராம அத்தன பாக்ஸுலயும் தண்ணி ஊத்தி ஐஸாக்குற தொட்டில இறக்கி ஐஸானவொடனயே வெளிய எடுத்து..திரும்பவும் நிரப்பி… கையெல்லாம் மரத்துப்போய்என்னதான் இதுல அவனுக்கு ஆர்வம்னு தெரியல பாய்…”

மௌலானா சிரித்து அமைதியானார்.

மடக்கியிருக்கும் மடிக்கணினி வடிவிலிருக்கும் அந்த உறுதியான அலுமினியப்பெட்டிகளின் வாய்ப்பகுதியை விரல்களால் பற்றி அங்குள்ள தண்ணீர் தொட்டியில் ஒருசேர அமிழ்த்தியெடுத்து நிறைப்பதில் மடித்துக் கட்டியிருக்கும் ராசியான பச்சைநிற கட்டம் போட்ட கைலியும் தண்ணீரால் நிறைந்து நனைந்து சற்று உப்பியிருக்கும். கனத்திருக்கும் அப்பெட்டிகளை தூக்கிச் சென்று கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் குளிர்ந்த நீரால் நிரப்பட்ட மிகப்பெரிய மரக்கலனின் ஒரு நிரலில் அடுக்கிவிட்டு, அடுத்த நிரலுக்கான அலுமினியப் பெட்டிகளைத் தொடும்போது கைகளிரண்டும் முற்றிலும் மரத்தி்ருக்கும். அறையின் வெப்பநிலையிலி்ருக்கும் தண்ணீ்ரை மீண்டும் அப்பெட்டிகளில் நிரப்பும்போது மரத்திருந்த கைகள் அத்தண்ணீரின் வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டு தளர்வது ஒரு அலாதியான சுகம். ஆனால் இச்சுகம் அந்த மரக்கலனின் அடுத்த நிரலை இப்பெட்டிகளால் நிரப்பும்வரைதான். மீண்டும் அடுத்த நிரலுக்கான நடையெனத் தொடர்ந்து கடைசியாக 12வது நிரலை எட்டும்போது, இருகைகளிருக்கும் உணர்வே அற்றுப்போயிருக்கும்.

ஒருநாள் ஆர்வம் மிகுதியால் இந்த குளிரூட்டிகளுக்கு பின்னாலிருக்கும் அறிவியலை தெரிந்து கொள்ள முற்பட, அதற்கு மௌலானா பாய், என் உள்ளங்கையில் சிறு பனிக்கட்டித் துண்டை வைத்து கை குளிர்ந்ததும் “எதுடா குளிர்ச்சியா இருக்கு? கையா இல்ல ஐஸ்கட்டியா? “ என்று கண் சிமிட்டினார்.

ஐஸ்தான் பாய் குளிர்ச்சி…”

அப்ப கை ஏலேய் குளிருது…”

அப்போது எனக்கு ஆதிசங்கரர்லாம் தெரிந்திருந்தால் ‘என் கை குளிர்ச்சியானதால ஐஸ் குளிர்ச்சின்னு சொல்றேன் பாய்எனது புலன்கள் வேலை செய்வதால் ஐஸ் கட்டி குளிர்ச்சியா இருக்கு. இல்லன்னா உறைந்த இந்த கட்டியும் உருகும் இரும்புத்துண்டும் ஒண்ணுதா”ன்னு அத்வைதத்தை குழப்பியடிச்சிருப்பேன்.

ஆனால் தத்துவமோ அறிவியலோ அறிந்திராத அப்பருவத்தில் குழம்பி விழித்த என்னிடம், “இயற்கையோட விதிப்படி எல்லாமே தன்னோட சமநிலைக்கு வந்தாகனும். இதத்தான்லகார்ல் மார்க்ஸும் சொல்லுராரு…”

புரியாமல் முழித்த என்னிடம், கையின் அதிக வெப்பநிலை தன்னுடைய வெப்பத்தை, தன்னைவிட குறைந்த வெப்பநிலையிருக்கும் பனிக்கட்டிக்கு விட்டுக் கொடுத்து விடும் வெப்பக் கடத்தல் விதியைப் பற்றி விளக்கிச் சொன்னார்.

பாய்ட்ட எதக் கேட்டாலும் மார்க்ஸ்லெனின்னு புரியாத பாஷையிலயே பேசுவாரு. அவரோட பையன் ரஷ்யாவுல டாக்டருக்கு படிச்சதனால கூட இருக்கலாம். ஆனால் என்னையெல்லாம் ஒரு புழு மாதிரிதான் பார்ப்பாரு மௌலானா பாயின் டாக்டர் பையன். அவ்வளவாக படிப்பறிவில்லாத மௌலானா பாயிடமிருக்கும் சமத்துவ உணர்வு, அவரோட பையனிடமில்லையென்று அப்போதே விவரமறிந்த சாதிக் சொல்லுவான்.

எங்ககூட பாய் உட்கார்ந்து சாப்பிடறத பார்த்த நாள்ல இ்ருந்து, இந்த ஆளு பாயோட வீட்டுல சேர்ந்து சாப்புடுறதயே வுட்டுட்டுறார்னா பாத்துக்கயேன்…” என்ற சாதிக், இங்குள்ள சாதி சார்ந்த இடஒதுக்கீட்டு குழறுபடிகளால் அவர் +2வில் அதிக மதிப்பெண் எடுத்தும் இங்கு எந்தக் கல்லூரியிலும் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் விரக்தியுடன் இப்படிப்புக்காக ரஷ்யா வரை பய​​ணிக்க நேர்ந்ததையும் கூறினான்

சில வருடங்களுக்குப் பிறகு எனக்குச் சிறந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த மகிழ்ச்சியை மௌலானா பாயிடம் பகிர்ந்துகொண்டபோது அங்கிருந்த அவருடைய டாக்டர் பையனின் முகத்திலிருந்த வெறுப்பு சாதிக் சொன்னதை எனக்குப் புரியவைத்தது. இது தனக்கு கீழே இருப்பவர்கள் எப்போதும் அங்கேயே இருக்க வேண்டுமென்றெண்ணும் நிலப்பிரபுத்துவ மனநிலையின் எச்சம் என்பதையும் இப்போது வைரவனால் புரிந்துகொள்ள முடிகிறது.

காரின் இருக்கையில் சாய்ந்தவாரே குளிரூட்டியின் வேகத்தை குறைக்க மரத்துப்போன கையை நீட்ட முயன்று முடியாமல் “பிரகாசம், ஏசிய ஒரு பாயிண்ட் குறைப்பா…” என்றார்.

தன் கைகள் குளிரால் மரத்துப் போகுந்தோறும் மௌலானா பாயும், அவரின் ஐஸ் ஃபேக்டரியும்தான் இப்படி வைரவனின் நினைவடுக்களிலிருந்து மேலெழும்பும்.

அங்கு ஆரம்பித்த அந்த புரிதலும் உழைப்பும் தான் இந்த 50 வயதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெப்பமாற்றிகளை (Heat Exchangers) தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்க வைத்திருக்கிறது வைரவனை.

பிரகாசம் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே வைரவனுக்குப் பரிட்சயம். இன்னமும் கார் ஓட்டத் தெரியாத வைரவனுக்கு அப்போதிலிருந்தே பிரகாசம்தான் ஆஸ்தான ஓட்டுநர். ‘’என்ன சார் இன்னும் ஏன் ஆட்டோலயே வர்ரீங்க ஒரு கார வாங்குங்க..” என்று வைரவனுடைய முதல் காரை வாங்கத்தூண்டியதும் பிரகாசம்தான். கார் ஓட்டக் கற்றுக்கொள்ளவும் முடியாமல்; ஓட்டுநர்களும் சரிவர அமையாமல் மீண்டும் பிரகாசத்தின் ஆட்டோவையே நாடியபோது, தன் சொந்த ஆட்டோவை வாடகைக்கு விட்டு விட்டு வைரவனின் காரை நிரந்தரமாக ஓட்ட ஆரம்பித்து பத்து பண்ணிரெண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

அகோர பசிகொண்டு எதிர்வரும் சாலையை உள்ளிழுத்துப் போட்டுக்கொண்டு விரைந்து கொண்டிருந்தது வண்டி. ‘நினைவோ ஒரு பறவை…’ என ராஜாவின் இசை சிறகடித்துக் கொண்டிருந்தது வண்டியினுள். வைரவனின் மரத்திருந்த கை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. மறுபடியும் சமீப நாட்களாக பிரகாசத்தின் வழியாக தன்னுள்ளிருக்கும் அந்த ஆதிக்க மனப்பான்மை வெளிப்படுவதையுணர்ந்து சற்றுக் குறுக ஆரம்பித்தார். நான் மௌலானா பாயிடமிருந்து மட்டுமல்ல அவருடைய டாக்டர் பையனிடமிருந்தும் என்னையறியாமல் சிலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்த வைரவனுக்கு ‘நமக்குள்ளிருக்கும் ‘நாமறியாவற்றைப் பொறுக்கி எடுப்பதுதான் தியானம் என்கிறார்கள்’ என்று எங்கோ படித்த சொற்றொடர் நினைவுக்கு வந்தது.

பின்னால் கூடி வருதல் – செல்வசங்கரன் கவிதை

பின்னால் திரும்பி நடந்து வந்தவனை நிறுத்தி
ஆச்சர்யத்துடன் ஒருவன் கேட்ட பொழுது
வெகு காலத்திற்குத் தலையின் முன்பக்கத்தையே காட்டிப் பழகிவிட்டதால்
தனது பின் பக்கத் தலையை எல்லாருக்கும் பழக்குவதற்காக
இவ்வாறு செய்வதாகக் கூறினான்
உடனடியாக ஆச்சர்யத்தை அங்கிருந்து லேசாக நகர்த்தியபடியே
இனி மரங்களையெல்லாம் தலைகீழாகத் திருப்ப வேண்டியதிருக்கும்
சட்டையை திருப்பிப் போட்டு அலைய வேண்டியதிருக்கும்
பைக்கைத் திடீரென நிறுத்தி எல்லாவற்றையும்
கழட்டி எறிய வேண்டியதிருக்கும்
எந்நேரமும் எதையாவது பிடித்து இழுக்க வேண்டியதிருக்கும்
வாய்க்குள்ளேயும் கையை விட்டு நோண்டி
ஒன்று ஒன்றாகப் பிய்க்க வேண்டியிருக்கும் பரவாயில்லையாயென
வெறும் சொன்னதற்காகப் போய்
பார்த்தவன் இவ்வளவு பறக்கிறான்
நான் இன்னும் நடந்துகொண்டிருக்கிறேனென
பின்னால் திரும்பியவன் பாவம் மிகவும் வருத்தப்பட்டு
பின்னால் கூடி வந்துகொண்டிருந்தான்

வீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை – மீஸான் கற்கள் குறித்து வே.நி சூர்யா

இன்றைக்கு ஒரு மொழிபெயர்ப்பு நூலை கையிலேந்துகையில் சில விநோதமான வாக்கியங்களுக்கு அவை அழைப்பு விடுக்கின்றன. சில பத்திகளை காக்கைகள் தூக்கிச் சென்றிருக்குமோ.. கூகுள் மொழிபெயர்ப்பின் கைங்கர்யமோ. இப்படியான இத்தனை கேள்விகளையும் சில்லறை அவநம்பிக்கைகளையும் தாண்டித்தான் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது. இப்பின்னணியில் இரண்டு விஷயங்கள் முக்கியமான கருவிகள் ஆகின்றன. ஒன்று, உள்ளுணர்வு. பிறிதொன்று பிற மொழி அறிவு. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மிக மோசமான தமிழ்மொழிபெயர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அப்படியே வளைவுப்பாதையில் சென்று ஆங்கில புத்தகத்தையே தேர்வுசெய்து என்னை காப்பாற்றிக் கொள்வதுண்டு. நமக்கு தெரியாத மொழியிலிருந்து மொழியாக்கம் எனும்பட்சத்தில் உள்ளுணர்வுதான் வழிநடத்துநர். அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் அம்மொழியாக்கம் குறித்த என் மதிப்பீடு. எனக்கு மலையாளம் தெரியாது என்ற எல்லைக்குள் நின்றுகொண்டே குளச்சல் மு. யூசுப் அவர்கள் மொழிபெயர்த்த மீஸான் கற்கள் நாவலை ஒரு நல்ல உள்ளுணர்வுடன் வாசித்தேன். ஏற்கனவே அவருடைய மொழிபெயர்ப்பில் பஷீரினுடைய படைப்புகளை வாசித்திருந்தேன். இலக்கியச் சுத்தமானமொழி, பிரதேச மொழி என அந்தந்த படைப்புகளுக்கு ஏற்றவாறு அவரால் ஒரு சட்டையை கழற்றி புதுசட்டை அணிந்துகொள்வது போல ஒரு நடையை சுவீகரித்துக் கொள்ளயியல்கிறது. மேலும் கதாபாத்திரங்களின் தொனியை அவரால் அப்படியே கடத்த இயல்கிறது. இந்த தொனியை மொழிபெயர்ப்பது என்பதுதான் தமிழில் எழுதப்பட்டது என்றெண்ண வைக்கும் ஒரு சரளமான அசல்த்தன்மையை நாவலுக்கு போர்த்துகிறது என்றே நினைக்கிறேன். மேலும் கசிந்துருகச்செய்யும் வரிகளை உக்கிரம் கொப்பளிக்கும் வரிகளாக மொழிபெயர்த்துவிடுகிற அபாயம் பெருகிவிட்ட தற்கால மொழிபெயர்ப்புச் சூழலில் மேற்குறிப்பிட்ட இரண்டும் முக்கியமான பண்புகள்.

ஒற்றைவரியில் சொல்ல முயன்றால் மீஸான் கற்கள், ஒரு அந்த கால இஸ்லாமிய நிலப்பிரபுத்துவ குடும்பத்தின் வாழ்க்கையையும் அதன் வீழ்ச்சியையும் சித்தரிக்கும் நாவல். புனத்தில் குஞ்ஞப்துல்லா அப்படியே நம் முன் ஒரு கதையை தூக்கிவீசுகிறார். அவர் அந்த கதையில் யாருடைய தரப்பையும் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, முன்பு இது இப்படி இருந்தது ஆனால் இன்று பாருங்கள் இது இப்படி மாறிவிட்டது என்று சொல்கிறார். காலத்தால் சிறுசிறுக துருவேறி பொடிப் பொடியாக மாறிவிட்ட உடைக்கயியலாத இரும்புத்துண்டத்தை போன்ற வாழ்க்கையே அவருடைய விசாரணையின் மையம். விசாரணை அறிக்கையில் இறுதி முடிவு எனும் இடத்தை பெரும்பாலும் வெற்றிடமாக விட்டுவிடுகிறார். மீஸான் கற்கள் நிறைந்த பள்ளிவாசல், அப்பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் எரமுள்ளான், அந்த பள்ளிவாசலையொட்டிய அறக்கல் இல்லம், கருணை மற்றும் குரூரத்தின் விநோதமான கலவையுடன் குறுநில மன்னர் போல அந்த அறக்கல் இல்லத்தில் வசித்துவரும் கான்பகதூர் பூக்கோயா தங்ஙள், அவருடைய மனைவி ஆற்றபீவி, அவருடைய மகள் பூக்குஞ்ஞி, பூக்கோயா தங்களின் பணியாளர்கள், பூக்கோயா தங்ஙளால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படும் நீலியின் மகன் குஞ்ஞாலி, பாடகனான பட்டாளம் இபுறாகி இவர்கள் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். கூடவே மரணமும் கட்டுக்கடங்காத இச்சையும் ஒரு கதாபாத்திரம் போல இந்நாவலில் அலைகிறது.

பூக்கோயா தங்ஙள் நிலப்பிரபுத்துவத்தின் மானுட உருவம். கருணை, இச்சை, அதிகாரம் என்ற முக்கோணத்திற்குள் அலையும் முன்தீர்மானிக்க முடியாத குணாம்சங்களின் தொகுப்பாகவே நாவலில் அவருடைய கதாபாத்திரம் வெளிப்படுகிறது. தனது குதிரையில் ஏறி மீனவக் குடிசையில் அத்துமீறுவது அவருடைய ஒரு முகம் என்றால் ஊரில் காலாரா வந்து மக்கள் அவதிப்படும்போது அதற்கு முன்னால் வந்து நிற்பது அவருடைய இன்னொரு முகம். கான்பகதூர் பூக்கோயா தங்ஙள் தன் இச்சையை பொருட்டு குத்தி வீழ்த்தபடும்போது நாவல் தன்னுடைய இன்னொரு வீச்சை அடையத் தொடங்குகிறது. அதிகாரம் இருக்ககையில் அதை பயிற்சி செய்ய ஆள் இல்லாதபோது உண்டாகும் வெற்றிடம் அந்த அதிகாரத்தையே விழுங்க முயல்வதும் இன்னொரு ஆளை தேடுவதுமான காட்சி ஒன்று நாவலிலிருந்து எழுந்துவருகிறது. அறக்கல் இல்லம் மண்ணில் புதைக்கப்பட்ட சவத்தை போல உருகுலையத் தொடங்குகிறது. தற்கொலை, மரை கழறல், விட்டு வெளியேறுதல் என அறக்கல் இல்லத்து மாந்தர்கள் சரிந்துவீழ்கிறார்கள்.

ஏதோ முடிந்தால்தான் ஏதோ தொடங்கும் என்பதுபோல, ஒருகட்டத்தில் நாவலின் பாத்திரங்கள் இறந்துபோகிறார்கள் அல்லது அதற்கு நிகரான நிலையை அடைகிறார்கள். காமம் மரணத்தின் முகமூடியை அணிந்துகொள்கிறது. மரணம் காமத்தின் முகமூடியை பதிலுக்கு அணிந்துகொள்கிறது. சிலசமயம் காமமும் மரணமும் ஒன்றேபோல் ஆகிவிடுகின்றன நாவலில். வடக்கு மலபார் முஸ்லீம்களின் வாழ்வியல் நாவலெங்கும் விவரிக்கப்படுகிறது. அவர்களது பழக்கவழக்கங்கள், தொன்மங்கள், கல்வி முறை என அனைத்தும் நாவலின் வாயிலாக ஒரு இயங்கும் சித்திரமாக எழுந்துவருகிறது. இந்நாவலில் வருகிற ஜின்களை குறித்த பகுதி கனவுத்தன்மையை உண்டாக்கிச்செல்கிறது. நாவலின் சாரத்தை தொகுத்துக்கொள்ள முயலும்போது இப்படி ஒரு உருவகம் மனதில் தோன்றுகிறது. எல்லா சன்னல்களும் திறந்திருக்கும் நிறைய ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனம். அதை இயக்குமிடத்தில் இச்சையையும் அதிகாரத்தையும் உடல் பாகமாக கொண்ட மனிதர். வாகனம் புறப்படுகிறது. இறுதியில் மரணம் எனும் நிறுத்தத்தில் வாகனம் பழுதடைந்து நிற்கிறது. அதை வருங்காலம் வெறித்துப் பார்த்துபடி கடந்துசெல்கிறது. இன்னொருவிதமாக கூற முயன்றால், வீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை என்று கூட சொல்லலாம். இது வெறும் வீழ்தல் அல்ல, ஒளியின் வருகையையும் தீர்க்கதரினசமாக தன்னுள் பொதிந்து வைத்திருக்கம் ஒரு வீழ்ச்சி.

ஏராளமான கதாபாத்திரங்கள். எக்கச்சக்கமான தருணங்கள். கிராமத்து வாழ்க்கையின் அப்பாவித்தனங்கள். அதன் உன்மத்தங்கள். சகலத்தையும் பாரபட்சமின்றி கேலியுடன் அணுகும் ஒரு நவீனத்துவ குரல். ஒரு எடைமிகுந்த காலத்தின் கடைசி மூச்சிரைப்பு சப்தம் என இந்நாவல் ஒரு பரந்த பரிணாமத்துடன் பூரணித்து நிற்கிறது. இந்நாவலை மிகச் சிறந்த முறையில் தொய்வில்லாமல் மொழியாக்கம் செய்து தந்திருக்கும் குளச்சல் மூ யூசுப் அவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும்

மீஸான் கற்கள் புனத்தில் குஞ்ஞப்துல்லா

காலச்சுவடு வெளியீடு

குன்றத்தின் முழுநிலா – கமலதேவி சிறுகதை

மூவேந்தரின் எரி நின்ற பறம்பு மலையை சூழ்ந்து சாம்பல் புகை பறந்து கொண்டிருந்த அந்தி மறைந்து இருள் எழுந்திருந்தது.அவர்கள் நிலவுதித்து ஔி சூழ்ந்திருந்த வெளியில் சென்று நின்றார்கள். சிறுகாட்டிலிருந்து நிமிர்ந்து நோக்குகையில் தொலைவில் என்றாலும், பறம்பு இங்கு இதோ நான்கடிகளில் என்றே அவர்களுக்குத் தோன்றியது.

பரந்து கைவிரித்திருந்த கரும்பாறையில் அமர்ந்த கபிலர், “இன்றிரவு இங்கு துயின்று கருக்கலில் செல்லலாம்,”என்று கால்களை நீட்டிக் கொண்டார்.

அங்கவையும் சங்கவையும் ஒன்றும் நவிலாமல் பாறையில் அமர்ந்து கொண்டனர்.இலைகள் குறைந்த கிளைகளுக்கு இடையில் நிலவொளி மேலும் தெளிவு கொண்டது.

ஒருத்தி,“பறம்பின் தொலைதூர தோற்றம்,” என்றாள்.

மற்றவள் பாறையைத் தடவி, “ஆம்,” என்றாள்.

கபிலரின் துவண்ட முகத்தில் மென்நகை மலர்ந்து சுருங்கியது. எங்கு சென்று இந்த மகள்களை சேர்ப்பிப்பேன். உன் மகள்கள் என்று ஒப்படைத்துவிட்டான். என் செய்வேன்? என்று தன்னுள் தன்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

வேங்கைமரத்தின் பாலை தென்னம் ஓட்டில் ஊற்றி ஆதவன் சூட்டில் காய்த்தெடுத்த நெற்றிப்பொட்டின் மேல்பரப்பென, நிலவொளியில் அவர்கள் முகம் ஔிர்ந்தது. சோகத்தால் அழுந்திய சோபை. மூன்று மின்மினிகள் சேர்ந்தமர்ந்த இரு நாசிகள் நிலவொளியில் மேலும் ஔிகொண்டன.

சங்கவை கைமூட்டையிலிருந்து அவலை எடுத்தாள். சுரைக்குடுக்கை நீரால் அவலை நனைத்து சிறுமூட்டையாகக் கட்டிவைத்தாள். சுரைக்குடுக்கையுடன் கபிலர் நீருக்காக எழுந்து சென்றார்.

அங்கவையும் சங்கவையும் ஒருவரை ஒருவர் முகம்பார்த்து அமர்ந்திருந்தார்கள். சிறுபொழுதிற்குப் பின் அறியாத உணர்வால் வேறுபுறம் நோக்கி உரையாடத்தொடங்கினார்கள். சிலசருகுகள் காற்றுக்கு தங்களைக் கொடுக்காமல் பாறைகளின் சந்துகளில், அடிமர வளைவுகளிலும் அடைந்தும் காற்றின் விசையால் அதே இடத்தில் துடித்துக்கொண்டிருந்தன.

நம்மிடம் அவலைத் தவிர ஒன்றுமில்லை”

அறிந்தது தானே”

உணர்ந்து நினைத்தால் உள்ளே ஆழத்தில் வேல்முனை தைத்து அசைகிறது”

பேடிக்கிறாயா?”

உனகில்லையா?”

அனைத்துமிழந்தப்பின் என்ன?”

அதற்காக உன்னை மாய்த்துக்கொண்டாயா?”

ஏன் மாய்த்துக்கொள்ள வேண்டும்?”

தானிருக்கையில், தன் பசியிருக்கையில், தன் உணர்விருக்கையில், மனமிருக்கையில், பெண் என்னும் உணர்விருக்கையில், அனைத்திற்கும் மேலென சூழ்ச்சி வீழ்த்திய காயமிருக்கையில் அனைத்துமிழந்தவளாவாயா?”

புறத்தில் நான் என்பதன் அடையாளம் அழிந்து சிலபொழுதாகிறது. அகத்தில் நான் என்பதன் குழப்பம்”

உடல்களை நனைத்திருந்த வியர்வை ஈரத்தை காற்று எடுத்துக்கொண்டது. மெல்ல அதை உணர்ந்த அவர்கள் எழுந்து நின்றார்கள்.

நாளை நாமிருவரும் ஒன்றாக இருப்போமா?”

“…..”

கையில் கடிவாளமில்லாத பொழுதில்போக்கை எண்ணி ஆவது என்ன?”

நாமிருவரும் தனித்துவிடப்படலாம் என்று எண்ணி தானோடி தாதை இத்தனையும் கற்பித்தார்”

கற்பது என்பது இந்தப் பாரினில் மரணத்தில், இழப்பில் உதவக்கூடுமா?”

தெளிவில்லை. என்றாலும் இங்கமர்ந்து சிதறாமல் எண்ணியிருக்க அதுவே கைப்பிடித்திருக்கிறது”

படைத்தலைவன் நன்னன் குறித்து…”

மாண்டிருக்கக்கூடும்”

அவனை ஏன் நீ ஏற்கவில்லை?”

திறல்வீரன்…அவன் படைத்தலைவன் மட்டுமே”

ஆம்.அது மட்டுமே அவன். பயிற்றுவிக்கப்பட்டவன். வேந்தனின் வேல்”

இன்று எதற்கும் உடன்பட வேண்டியநிலை”

புலவருக்கு மேலும் சுமையென்றாகாமல்…”

ஆம்” என்றபின் சொல்லிழந்து எண்ணுதலின்றி வெறும் நோக்குக்கொண்டிருந்தனர்.

சுரைக்குடுக்கையில் நீரோடு வந்த கபிலர் பாறையில் அமர்ந்தார்.

உண்ணலாம் மகள்களே,” என்றார்.

மூங்கில் குழாயில் இருந்த தேனை அவலில் சேர்த்து சங்கவை அளித்தாள். அவர் அளித்த விரிந்த அரசிலையில் வைத்து உண்டார்கள். நீர் அருந்தும் பொழுது அங்கவை தன்நாட்டில் அரிதெனக் தேங்கும் பனிச்சுனை நீரை நினைத்துக்கொண்டாள். கால்நடையாய் வந்த ஒரு புலவர் கால்சோர்ந்து அமர்ந்து, நீர்தேடிக் கண்டடைந்த பனிச்சுனை, அவர் பாட்டில் ஏறி தன் இல்லம் சேர்ந்த காலைவேளை நெஞ்சத்தில் எழுந்தது. பின்னர் தேங்கிய நீர் காண..அருந்த என்று இவர்கள் சென்ற நாட்கள் எங்கிருந்தோ என்று எழுந்து வந்தன.

காற்று மரஇலைகளுக்குள், புதர்களுக்குள் புகுந்து செல்லும் ஓசை கேட்டுக்கொண்டேயிருந்தது. ஈரப்பதமில்லாத காற்று. நெருக்கமில்லாத மரங்கள். இலையுதிர்த்துக் கொண்டிருந்த மரங்கள். காற்றால் அனைத்து திசைகளில் இருந்தும் சருகுகள் மெல்ல எழுந்து பறந்து நகர்ந்தன.

இந்த பொழுதில் இளவெயினி இருந்தால்? என்ற நினைவு இருவருக்கும் தோன்ற வாய்ச்சொல்லால் பகிராமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இருவருக்கும் அங்கமென இருந்தவள். இந்த உடன்பிறந்தாரின் சிணுக்கங்களுக்கிடையில் ஓடிக் களைத்தவள்.

புலவருடன் இவர்கள் புறப்படுகையில் பின்னால் வந்த அவளை, இருவரும் ஆளுக்கொரு கைப்பிடித்து அவள் தாதையிடம் தள்ளிவிட்டு, திரும்பிப்பார்க்காமல் வந்த பொழுதை நினைத்து தொண்டையைச் செருமினார்கள். அவலில் இருந்த சிறுஉமி தொண்டையில் நின்று வாய்க்கும் வராமல், வயிற்றுக்கும் செல்லாமல் உறுத்தித் தொலைத்தது. சங்கவை நீரை எடுத்து மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தாள்.

கபிலர்,“சற்று தலைசாயுங்கள் மகள்களே.கருக்கலில் நடக்க வேண்டும்,” என்றபடி பாறையில் வான்பார்த்துக் கிடந்தார்.

காற்றில் எழுந்த அறியா மணத்தை உணர்ந்த சங்கவை தன்நாட்டில் எங்கோ என மகளீர் எரிக்கும் சந்தனக்கட்டைகளின் மணத்தோடு இணைந்து எழும் அந்திமலர்களின் மணத்தை ,மனத்தால் உணர்ந்து நாசியைத் தேய்த்துக்கொண்டாள்.

கபிலர் வான் பார்த்துக்கிடந்தார்.ஆற்ற வேண்டிய காரியம் குறித்த சொற்களால் நிறைந்திருந்தார்.எத்தனை வேந்தரிடம் கேட்பது? மூவேந்தருக்கும் அச்சம்கொண்டு, அனைவரும் இவர்களை புறம் தள்ளுகிறார்கள். என் வேந்தனுக்கு கொடுத்த உறுதி என்னாவது? அதை பிழைத்து எங்ஙனம் உயிர்விடுவது? நாளை எப்படியும் இவர்களுக்குரியரிடம் சேர்ப்பித்துவிட வேண்டும்.

கபிலர் மனதை எங்கு திருப்பினும் அது வேந்தனையே சொற்களாக்கிக் கொண்டிருந்தது. முழுநிலவைக் கண்டால் மனம்பொங்கும் வேந்தன். மகள்களுடன் நாளும் கவிதை பேசியவன்.. இருப்பதைப் பகிர்ந்து நாட்டின் நிலங்காத்த அளியான். புல்காய்ந்த கோடையில் கிழங்கு அகழ்ந்தும் ,பெருமாரிக்கு திணை தேன் காத்து குலம்காத்த அவன் குடியை, எங்கு கொண்டு சேர்த்துக்காப்பேன்.

அனைத்தையும் கண்டு கடந்துக் கொண்டிருந்தது நிலவு. எத்தனை காலம்,எத்தனை வேந்தர்கள்,எத்தனை போர்கள்,எத்தனை குருதிக்களங்கள்,எத்தனை எரிகள் பார்த்த நிலவு.எத்தனை கனவுகள், எத்தனை வசந்தங்கள்,எத்தனை விழாக்கள் பார்த்த நிலவு. இன்று என்னை கண்டு கடக்கும் நிலவு.எவ்வளவு பேதை நான்… நிலையில்லை என்று அறிந்தும் பாரியுடன் இவ்வண்ணம் இருந்து கவிதை பேசலாம் என்று நினைத்த நான் எத்தனை எளியவன்.

தலையைத் திருப்பி இருவரையும் நோக்கினார்.ஒருபுறமாக படுத்திருந்த சங்கவையின் முகம் தெரிந்தது. எண்ணெய்யில்லாமல் காய்ந்து கலைந்த பின்னல் நீண்டு பின்னிய கொடியென முன்னால் கிடக்க அதைப் பற்றியபடி படுத்திருந்தாள். தனக்குத் துணையென தன்னையே கொள்ளும் கன்னியின் துணைப்படையில் இதுவும் ஒன்றென்று. அவர் கவி உள்ளம் தனியே சென்றது. அது ஒருகணமும் ஓயாதது என்று நினைத்து அதைத் தவிர்க்க திரும்பிப்படுத்து கைகால்களை நீட்டி மடக்கினார்.

மலைமகள்கள் என்றாலும் மன்னனின் மகள்கள் அல்லவா? புனம் காத்து வளர்ந்தவர்கள் என்றாலும் கவிதை பேசும் கலைமகள்களை எங்கு சேர்ப்பேன். மகன்கள் என்றால் தலைகொய்திருப்பார்கள். குலம் அழிக்க வேண்டும் என்றே, எந்த வேந்தனும் மாலையிடலாகாது என்று ஓலையனுப்பிவிட்டனர். ஒரு வேவுக்காரன் கூட கண்ணிற்கு தென்படவில்லை. எனில் ஒவ்வொரு வேந்தனிடமும் அவனறியாமல் எவனோ இருப்பான். பாணர்களாய் உள்நுழைந்து பாரியின் களமழித்தவர்கள் தானே… இனி நினைத்தென்ன?

சிலம்புகள் அசையும் மெல்லிய ஒலிகள் எழுந்து நின்றன.அவர்களின் துயிலாத கண்கள் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தன.

காண்பவர்கள் கண்நிறைக்கும் நிலைத்த முறுவலுடன் வந்தவர்களுக்கு தன்னிடமுள்ளதை அளித்து உவந்து நிறையும் உள்ளம் அவனுடையது .தன் குன்றத்தில் தனித்தது என்று எதுவுமில்லை என்றாண்ட வேந்தன். தவிக்கும் எதற்கும் தன்னிடமுள்ளதை தந்தவனின் கொழுந்துகள் என் கையில்.

அன்றொரு நாள், தனித்த நேரத்தில் கபிலர் பாரியிடம்“பிறந்தது முதல் கொடிகளைக் காணும் மலைநாடன் உனக்கு சிறு முல்லைக் கொடி புதியதென அன்று தோன்றியது எங்ஙனம்!” என்றார்.

ஐயனே…என் மக்கள் இரண்டும் கைநீட்டி தளிர்நடையிடும் பருவம் அது. காற்றில் தவித்து கைநீட்டும் இளம் தளிர் காண பேதலித்துப்போனேன்,” என்ற பாரி மேலும் சொற்கள் அற்றவனானான்.

அன்று ஈரம்படர்ந்த விழிகள் நினைவில் தோய்ந்திருக்க ,புன்னகைக்கும் இதழ்களுடன் மீசையைத்தடவியபடி பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்த அவன், மண் ‘தான்’ என எழுந்து நிற்கும் குன்றத்தின் பெருந்தாதை .கபிலர் எண்ணங்கள் துரத்த நெடுந்தொலைவு பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்.

அங்கவையும் சங்கவையும் வான்பார்த்த கண்களை இமைக்காமலிருந்தார்கள். அமுது என பொழியும் நிலா.இத்தனை வாஞ்சையா? ஔி இத்தனை ஆழமாய் உள்நிறைக்குமா?! ஔி…ஔி…என்று மனம் நிறைந்து வழிகையிலேயே அனைத்தும் கைநழுவும் ஏக்கம்.நெஞ்சம் நிறைக்கும் ஒன்று நெஞ்சம் குலைக்குமா ? கைகால்கள், விரல்கள் ,உடல் ,கன்னம் ,செவி, நாசி என்று நெற்றித்தொட்டு கண்நிறைக்கும் ஔி….

அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவில்

எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்..” என்று ஒருகுரல் மெல்லத்தேய்ந்தது.

தன் மென்கன்னத்தில் படியும் வன்மார்பின் ஒலிக்கேட்டு, நாசிக் காற்றின் வெப்பம் உச்சி உணர, தன் தாதையின் கதைகள், கவிதைகள் கேட்டு குன்றத்தின் கீழ் பரவும் அமுதை வழிவிரியப் பார்த்திருந்த இதே நிலா நாட்கள்…

இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்

வென்று எரிமுரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் ! யாம் எந்தையும் இலமே” என்று மற்றொரு குரல் அதை நிறைவுசெய்தது.

நிலவை மேகப்பொதிகள் சூழ்வதும் விலகுவதுமாக கலைந்தழுந்தன. எரிந்தகாட்டின் புகைசாம்பல் பறக்கும் வெளி போல அவ்விடத்தை மெல்ல மெல்லிருள் சூழ்ந்தது. நிமிர்ந்து படுத்திருந்த கபிலர் இடக்கையை எடுத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டார்.

வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்: ஆதி, புதிர்

ஆதி

ஒரு நிர்மல வெளியின் விளிம்பிலமர்ந்து

அதிகாலை வானம் உற்றுக்கொண்டிருந்தேன்.

மெதுமெதுவாய் கீழிறங்கி

கையெட்டும் உயரத்தில் நின்றுவிட்ட வானத்தை

மயிலிறகாய் வருடுகையில்

விசுக்கென கடலைப் பொழிந்துவிட்டது.

விசைதாளாது நிர்தாட்சண்யமாய்க் கிடத்தப்பட்டேன்

பெருவெளியொன்றில்.

கழன்றவிழும் மரத்தின்

கடைசி வெண்சிறு மலர்போல்

தற்போது எனைநோக்கிக் கீழிறங்கும்

இக்கடைசி துளியில்

என் ஆதியைக் காண்கிறேன்

நானற்ற ஒரு நானாய்

இந்நிலத்தின் பெரும்பேராய்.

புதிர் உலகம்

பூ வரையச் சொல்லி கேட்டாள்

இரண்டரை வயது மகள்.

எனக்குத் தெரிந்த மாதிரி

வரைந்து தந்தேன்.

முட்டைபோல் ஏதோவொன்றை வரைந்து

பூவெனக் காட்டினாள்.

சிரத்தையோடு சில நேர்க்கோடு வரைந்து

அதன்மேல் அச்சு தீட்டச் சொன்னேன்.

அசட்டையாக

எண்ணற்ற வளைகோடுகளை

சளைக்காது வரைந்து தள்ளினாள்.

பின்பு

பல்பம் தேய்ந்துவிட்டதென

மீண்டுமொன்றைப் பெற்றுக்கொண்டு

கண்கள் மூடுமாறு கட்டளையிட்டாள்.

அரைநிமிடம் கழித்தே காண வாய்த்தது

அவள் தீட்டிய ஒரு அற்புத உலகம்.

அவள் மட்டுமே விடையறிந்த

அப் புதிர் உலகினுள் நுழைய இயலாமல்

வெறுமனே ஒருமுறை

எட்டிப்பார்த்துவிட்டு மட்டும்

நகர்ந்துவிட்டேன்.