நரோபா

புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா

(புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி)

எழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு

கே: உங்களைப் பற்றி

யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரதி. அத்தோடு பெரும் குடிகாரர். பெரிதாக உழைப்பதில்லை. அப்படியே உழைத்தாலும் கிடைக்கும் பணத்தையெல்லாம் கள்ளுத் தவறணையில் ஊற்றி விட்டு வருவார். அம்மா, தினம்தோறும் தனக்கு விதிக்கப்பட்ட விதியை நினைத்து நொந்து கொள்ளும் ஒரு அபலைப் பெண். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது வறுமையின் காரணமாக என் அப்பா என்னை வளர்க்கும் பொருட்டு அவரின் மனைவியின் தமக்கையிடம் அதாவது, என் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுத்து விடுகிறார்.  

என் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம்.  

பதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக பைத்திய நிலையிலிருந்து வெளியேறி விட்டிருந்தாலும் கடந்த கால நினைவுகள் அவ்வப்பொழுது என்னைத் துன்பப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து மீள்வது பெரும் துயரமாகவும், ஆகாத காரியமாகவுமிருக்கிறது. புத்தகங்கள் என்னை மாற்றின. குறிப்பாக, தாஸ்தாயேவ்ஸ்கியும், ஆன்டன் செகாவும், சாருவும், சோபாசக்தியும் என்னை மாற்றினார்கள்.   

நான் படிப்பாளியாக இருக்கலாம். ஆனால், படித்தவன் கிடையாது. நான் என் சிறு வயதில் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுக்கப்படாமல் என்னுடைய சொந்த தாய் தந்தையினாலேயே வளர்க்கப்பட்டிருப்பேனானால் நிச்சயம் நான் மாடு தான் மேய்த்திருப்பேன். ஒருவேளை, இது இரண்டுமே நடைபெறாமல் வேறொருவரிடம் நான் ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ குறைந்தபட்சம் வங்கி அதிகாரியாகவோ ஆகியிருப்பேன். என் சபிக்கப்பட்ட விதியானது இது இரண்டையுமே மாற்றி விட்டது. ஆகவே, நான் எழுத்தாளன் ஆகி விட்டேன்

கே: இலக்கிய பரிச்சயம் எப்போது, எப்படி நேர்ந்தது? 

 உண்மையில் அது ஒரு அசம்பாவிதம். ஏனெனில், என் குடும்பத்தில் மாத்திரமல்ல; பரம்பரையில் கூட புத்தக வாசிப்புப் பழக்கமுடையவர்கள் யாரும் கிடையாது. என்னவோ எப்படியோ அது எனக்குள் மாத்திரம் புகுந்து கொண்டு விட்டது. வாசிப்புப் பழக்கத்தில் உள்ள அதீதமான காதலால் வீட்டிலேயே பணம் திருடி இருக்கிறேன். அய்ம்பது ரூபாவைத் திருடி பத்து ரூபாய்க்கு புத்தகத்தை வாங்கினால் மீதி நாற்பது ரூபாய்யை என்ன செய்வதென்று தெரியாது. வீட்டில் மறைத்து வைக்க முடியாது.  பணம் திருடியிருக்கிறேன் என்பது கண்டு பிடிக்கப்பட்டால், முதுகுத் தோல் கிழிந்து விடும். ஆகவே, கடைக்காரரிடமே நாற்பது ரூபாய்யையும் திருப்பிக் கொடுத்து அடுத்த முறை புத்தகம் வாங்கும்போது இதில் கழித்துக் கொள்ளுங்கள் என்பேன். கடைக்காரரும் சிரித்துக் கொண்டே அதற்குச் சம்மதித்தது இப்போது இதை எழுதும் போது நினைவு வருகிறது.   

ஆரம்பத்தில், அம்புலிமாமாவில் தொடக்கி ராணி காமிக்ஸ் – மாயாவி, கரும்புலி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், லக்கி லுக் நினைவிருக்கிறார்களா – முத்துக் காமிக்ஸ் என்று போய் பின்னர் ரமணிச்சந்திரன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சோபா சக்தி, சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் என்று விரிந்திற்று. இது தவிர தாஸ்தாயேவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி, லியோ டாஸ்டாய் என்பவர்களும் என் தீவிர இலக்கியப் பட்டியலில் உண்டு.  

என் பால்ய காலத்தில் அதிகம் வாசித்த நான், இப்போது வாசிப்பது குறைவு. காரணம், சமூக வலைத்தளங்களின் வருகை. நினைத்துப் பார்த்தால் பெரும் சோர்வைத் தருகிறது. இதிலிருந்து எப்படியாவது மீண்டு மறுபடியும் புத்தகங்களை வெறி கொண்டு வாசிக்க வேண்டும். பார்க்கலாம்.

கே: உங்களை நீங்கள் எழுத்தாளராக கண்டுகொண்டது எப்போது? முதல் கதை எப்போது வெளி வந்தது? 

உன்னிடம் சொல்வதற்ககுக் கதைகள் இல்லையென்றால் நீ எப்படி வாழ்ந்தாய் என்று கேட்கிறார் தாஸ்தாயேவ்ஸ்கி. முதலில் எழுத ஆரம்பித்தபோதே வேடிக்கையாக அல்லாமல் சீரியஸாகத் தான் தொடங்கினேன். சொல்வதற்கு ஏராளமான கதைகளுமிருந்தன. ஆகவே, நான் கதை சொல்லத் தொடங்கினேன். என்னுடைய முதலாவது சிறுகதை தாய். மனித மனங்கள் ஆசைகளுக்காக சொற்ப கணத்தில் எப்படியெல்லாம் மாறிப் போகும் என்பதான ஒரு கதை. என்னுடைய இருபத்தி அய்ந்தாவது வயதில் அக் கதையை எழுதியிருந்தேன். கதையை எழுதி விட்டு எழுத்தாளர் சயந்தனுக்கே அதை முதல் முதலில் அனுப்பி வைத்திருந்தேன். கதை குறித்து பாராட்டிய அவர், உங்களுக்குள் ஒரு எழுத்தாளன் உறங்குகிறான்; ஆகவே கதை எழுதுங்கள் என்று என்னைக் கண்டு பிடித்து எனக்குள்ளிருந்த அடையாளத்தை வெளியில் கொணர்ந்தது அவர் தான்.  

எழுத்தாளன் என்பது உண்மையில் மிகப்பெரிய வார்த்தை. அதை வெறுமனே சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினால் ஆயிற்று என்று சுருக்கி விடமுடியாது. உண்மையில், எழுத்தாளன் என்பவன் சாதாரணவானவன் கிடையாது. அவன் இந்தக் கீழ்மையோடு இருக்கும் சமூகத்தை சீர் தூக்கி விட முனைபவன். ஒரு சமூகத்தின் பெரும் சொத்து அவன்.  

இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது எழுத்தாளன் என்கிற வார்த்தைக்கு நான் கொஞ்சம் கூட லாயக்கற்றவன். ஏனெனில், ஒன்று அல்ல; இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். அப்போது நான் ரஷ்யாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன்.  ஒருதடவை, என்னோடு கூட இருந்தவருக்கும் எனக்கும் தகராறு. கெட்ட வார்த்தைகள் சரளமாகப் புரள்கிறது. அப்போது நான் அவரை அவரின் ஜாதிப் பெயரால் பழிக்கிறேன். எவ்வளவு கீழ்த்தரமான செயலிது. வன்மத்தின் உச்சம்.   

இரண்டாவது, இதே போன்றுதான் அதுவும். ஆனால், அது சமூக வலைத்தளமொன்றில் நிகழ்ந்தது. வெளிப்படையாகவே ஒருவரை ஜாதிப் பெயரால் திட்டினேன். இதில் ஆகப் பெரும் வேடிக்கை என்னவென்றால் அப்போது முகப்புத்தகத்தில் என்னுடைய பெயர் எழுத்தாளர் சாதனா.

கே: இலக்கியத்தில் உங்கள் ஆதர்சங்கள் யார்? (ஈழ/தமிழ்/ உலக) 

நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதோவொரு விதத்தில் என்னைக் கவர்ந்தவர்கள். இதில் எழுதும் ஆசையைத் தூண்டியது சாரு. நான் கண்டைந்து கொண்ட மொழியில் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு. அவரின் எளிமையான, எல்லோருக்கும் புரியும்படியான கதை சொல்லல் முறை நான் பார்த்து வியந்த ஒன்று. அப்புறம் ஷோபாசக்தி என்னுடைய மிகப்பெரிய ஆதர்சனம். சிறுகதை எழுதும் நுட்பத்தை நான் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். இது தவிர பொதுவான ஒருவரும் உண்டு. அவர் எஸ். சம்பத். அவருடைய இடைவெளி நாவல் எப்போதும் என் பையில் இருக்கும்.

 

எஞ்சியிருப்பதின் துயரம்

எழுத்தாளர் சாதனா ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆறு சிறுகதைகள் கொண்ட அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ கடந்த ஆண்டு ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சாரு ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்களான சயந்தன், அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் போன்றோரின் படைப்புலகில் சில ஒற்றுமைகளும் சில தனித்துவங்களும் உண்டு. சாதனாவின் படைப்புலகம் அவருடைய தலைமுறை ஈழ எழுத்தாளர்களின் புனைவுலகை விட்டு முற்றிலும் விலகியது. ஆகவே தனித்துவமானதும் கூட. ஈழ நிலம் அறவே பதிவாகாத கதைகள் என சொல்லலாம்.

சாதனாவின் கதை மாந்தர்கள் அகவயமானவர்கள். இருத்தலியல் கேள்விகளை சுமப்பவர்கள். அக்கேள்விகளே அவருடைய படைப்புலகை நிறைக்கிறது, கதைகளை எழுத தூண்டுதலாக இருக்கிறது. ஆகவே அவருடைய கதை மாந்தர்கள் இயல்பாக கேள்விகளை விவாதிக்கும் பிரதிநிதிகளாக உருக்கொள்கிறார்கள். போருக்கும் இருத்தலியலுக்கும் நேரடி தொடர்புண்டு. இருத்தலியல் கேள்விகளுக்கு போர் ஒரு முன் நிபந்தனை அல்ல என்றாலும் போரின் இயல்பான விளைவு என உறுதியாக சொல்லிவிட முடியும். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘சிறுமி கத்தலோனா’ ‘தொலைந்து போன சிறிய கறுப்பு நிற பைபிள்’ மற்றும் ‘ஒ தாவீது ராஜாவே’ ‘ஜூதாசின் முத்தம்’ ஆகிய கதைகளில் சாதனா தனக்கான சில அடிப்படை கேள்விகளை பின் தொடர்ந்து செல்கிறார். அவை எடுத்துக்கொண்ட பேசு பொருள் காரணமாக முக்கியமான கதைகள் ஆகின்றன.

 ‘அக்கா’ கதையிலும் ஒரு பகுதி ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையை காட்டுகிறது என்றாலும் கூட  ‘சிறுமி கத்தலோனா’ இந்த தொகுதியில் உள்ள ஒரே ஈழக்கதை என சொல்லலாம். ஈழக்கதைக்கான வரையறைகள் எவை?  ஈழத்தை களமாக கொண்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் போர் ஒரு பேசுபொருளாகவோ/ பின்னணியாகவோ/ அல்லது நினைவாகவோ கதையில் இடம்பெறும். ஈழத் தமிழர் மையக் கதாபாத்திரம் அல்லது கதைசொல்லியாக இருப்பார். கதை ஈழத் தமிழில் இருக்கும். எழுத்தாளர் ஈழத்தை சேர்ந்தவராக இருப்பார். சாதனாவின் மொழியில் ஈழத் தமிழின் சாயல் சன்னமாகவே தென்படுகிறது. சில அரிதான சொற்களை பயன்படுத்துகிறார். (உதாரணம்- ஜூதாஸின் முத்தம் கதையில் ஸ்தேயம் எனும் சொல்லை திருட்டுக்கு பயன்படுத்துகிறார்).  

ஒன்பது பகுதிகள் கொண்ட கதையில் ஐந்து பகுதிகள் சிலோன் நாதனின் வாழ்க்கையை படர்கையில் விவரிக்கிறது. இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் தன்னிலையிலும் இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் கதையை எழுதும் எழுத்தாளரின் தன்னிலையிலும் வருகிறது. சிலோன் நாதன் ஜெர்மனியில் வசிக்கிறார். அவருடைய கடந்த கால ஈழ வாழ்வில் ராணுவத்திடம் பிடிபடுதல், சிறையிலடைக்கப்படுதல், கொடுமைக்கு உள்ளாகுதல் என எல்லாமும் பொதுவாக ஈழக்கதைகளில் நிகழும் அதே வகையில் நிகழ்கின்றன. போரில் மருத்துவராக இருக்கும் சிலோன் நாதன் கால் சிதைந்த சிறுமி கத்தலோனாவை காப்பாற்ற முயல்கிறார். பெண் ராணுவத்திடம் பிடிப்பட்டு அவர்களால்  கடுமையாக அவமதிக்கப்படுகிறார். சிங்கள மொழியில் ‘உத்தோ’ என கேவலமாக வசைப்பாடப்படுகிறார். இந்த சிறை அனுபவம் ஆறாத காயமாக உள்ளூர உழன்றபடி இருக்கிறது. அவருடைய முதலாளி பாஸ்பெர்கின் மரணத்திற்கு பிறகு நேராக வேசியிடம் செல்லும் போது அந்த பெண்ணின் நடத்தை ராணுவ பெண்னை நினைவுறுத்துகிறது. சட்டென தடுமாறி விலகுகிறார். வேசியிடம் கூடியபிறகு அந்த நினைவுகளில் இருந்து மீள முடியாமல் கடும் குற்ற உணர்வில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். அனோஜனின் ‘உறுப்பு’ கதையில் சிங்கள ரானுவ வீரனின் பாலியல் இம்சைகளை அனுபவித்து அந்த வாதையிலிருந்து வெளியேற சிரமப்படும் சித்திரம் ஒன்றுண்டு. ஏறத்தாழ அம்மாதிரியான அகக் காயம் சிலோன் நாதனுள்ளும் உள்ளது. சிலோன் நாதனின் இருத்தலியல் கேள்விகளும், வாழ்வின் பொருளின்மை‌ சார்ந்த பார்வைகளும், தற்கொலை முயற்சிகளும் கதையின் இறுதியில் வெளிப்படும் உண்மையினால் துலக்கம் பெறுகிறது. அந்த இறுதி உண்மையே இக்கதையை வழக்கமான ஈழக்கதை அமைப்பிலிருந்து தனித்து காட்டுகிறது.

ஈழத்தமிழர் சிங்களவர் எனும் இருமையை கடந்து மானிடர் எனும் நிலைநோக்கி நகர்கிறது. இரண்டாவது வாசிப்பில் சிலோன் நாதன் வீட்டில் இருக்கும் புத்தர் சிலை அவருடைய அடையாளத்தை குறிப்புணர்த்துகிறது. கண்முன் காலற்ற சிறுமி கத்தலோனா கைவிடாதீர்கள் என கூறி அழும்போது சிங்களர் எனும் ஒரே காரணத்திற்காக உயிருடன் விடுதலை செய்யப்படும் சிலோன் நாதன் குற்ற உணர்வினால் உந்தப்பட்டு தான் ஏன் இனியும் வாழ வேண்டும்? எனும் கேள்வியை எழுப்பிக்கொள்கிறார். சாதனாவின் கதை மாந்தர்களின் பொதுவான மனப்போக்கு என்பது இந்த குற்ற உணர்விலிருந்தே எழுகிறது. இந்த கதையில் வரும் பாஸ்பெர்க் வழியாக பாத்திரங்களுக்கு இடையிலான முரண் பேசப்படுகிறது. அவர்  இருத்தலியல் சிக்கல் ஏதுமற்றவர். வாழ்க்கையையே மரணத்தை நோக்கிய பயணமாக காணும் சிலோன் நாதனுக்கு கிட்டாது ஒன்று பாஸ்பெர்கிற்கு எளிதாக கிடைக்கிறது. மகிழ்ந்து ஆடிக்கொண்டே இருக்கும் போது நிகழும் மரணம்.

இக்கதையில் அவர் வளர்க்கும் நத்தைக்கு சிலோன் நாதன் என பெயரிடுகிறார். “நத்தைகள் குறித்து இன்னும் சொல்லவேண்டுமென்றால் அவை தன் வீட்டைத் தானே சுமக்கும். மழை காலங்களிலோ, அல்லது தனக்கு ஒவ்வாத காலநிலையைக் கொண்ட காலங்களிலோ தன் முதுகிலுள்ள ஓடு போன்ற கூட்டினுள் தன்னை மறைத்துக் கொள்ளும். தன்னுடைய இந்தத் தன்மையை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவை பயன்படுத்துகின்றன.” எனும் சிலோன் நாதனின் குறிப்பில் அவருடைய அடையாள மறைப்பு வாழ்வு கோடிட்டுக்காட்டப்பட்டு நத்தை அவருடைய குறியீடாகவே இருக்கிறது. சிலோன் நாதன் ஏன் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும்? தன் அரசின் குரூர முகத்தை கண்டவனின் மனசாட்சியின் தொந்திரவு. அச்சம். ஒவ்வாமை. இதற்கு நான் பொறுப்பல்ல எனும் விலக்கம் என பலவாறாக விளங்கிக்கொள்ள முடியலாம் என்றாலும் கதையில் அதற்கான காரணம் எதுவும் வலுவாக கூடி வரவில்லை. அதுவும் ஒரு தமிழர் பகுதியில் மருத்துவராக இருக்கும் சிங்களர் தன் அடையாளத்தை ஏன் மறைத்துக் கொள்ள வேண்டும்? கதையில் “எதிர்காலம் குறித்த பயம் அந்த ‘ஏதோ ஒன்றை’ என் வாயிலிருந்து வெளிவராமல் தடுத்தது.” என எழுதுகிறார். இது மர்மமாகவே விடப்படுகிறது. வாசகரிடம் இது ஒரு நம்பிக்கையை கோருகிறது. தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருக்கும் என சமாதானம் அடைந்துகொள்ளச் சொல்கிறது. கதை இறுதியில் சிறுமி கத்தலோனாவின் காலற்ற ஊருதல் நத்தையுடன் இணைவைக்கப்படுவதன் வழியாக ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. 

சயந்தனின் ‘ஆறாவடுவில்’ ஒரு பகுதி, குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலத்தின்’ இறுதி பகுதி, அனோஜனின் ‘பபுலி’ போல் பெரிதும் மனவிரிவளித்த கதை. அடிப்படையில் ஒரு சிங்களவர் தமிழ் பெண்ணிற்காக பெரும் துயரத்தை சுமந்து தன்னையே அழித்து கொள்வதென்பது கற்பனாவாதத்தன்மையுடைய கதைக்கரு. ஈழக் கதைகளில் கற்பனாவாதம் ஒரு மிக முக்கிய கூறாகவே திகழ்கிறது. கற்பனாவாதத்தை முழுக்க எதிர்மறையாக அணுகவேண்டியதுமில்லை. தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ‘புயலிலே ஒரு தோணி’ கூட தமிழக வீரனொருவன் அந்நிய நாட்டை விடுவிக்கும் சாகச கற்பனாவாத கதையின் தன்மையுடையதே. சிலோன் நாதனின் துயரம் எஞ்சியிருப்பதின் துயரம். அறத்திலிருந்து எழும் துயரம். சிலோன் நாதனின் குற்ற உணர்வு இன்னும் நுண்மையானது. மரணம் மற்றும் அழிவுக்கு மனிதன் சாட்சியாக இருக்கும்போது வாழ்விச்சை பெருகுகிறது. பாஸ்பெர்கின் மரண சடங்கிற்கு பின் அவர் நேராக வேசியை தேடுகிறார்.  விடிந்ததும் குற்ற உணர்வில் தற்கொலைக்கு முயல்கிறார்‌. அதிலிருந்து உயிரிச்சையால் மீள்பவர் ராணுவப் பெண் நினைவை போக்க வேசியை நினைத்து சுய மைதுனம் செய்ய முயல்கிறார் ஆனால் குறி விறைக்கவில்லை. தெருவில் விளையாடும் பதின் வயது சிறுமியொருத்தி தொடை தெரிய விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் விறைக்கிறது. சிலோன் நாதனின் சிக்கல் என்பது அவர் உயிருடனிருக்க எந்த நியாயத்தையும் உணராத போதும் அவருடைய உயிரிச்சை அவரை சாக விடவில்லை என்பதே. இயேசு இறந்தபிறகு ஜூதாஸ் அடையும் அதே துயரம். இங்கிருந்துதான் அவருடைய கதை உலகின் பிரதான கேள்வியான வாழ்வு விதிக்கப்பட்டதா? மனிதர்களின் சுய தேர்வின் ( freewill) பங்கு என்ன? எனும் கேள்வியை கேட்கிறார். மனிதருக்கு வாழ்வில் வேறு சில தேர்வுக்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அவன் ஏன் அழிவையே தேர்வு செய்கிறான்? இக்கேள்விகள் எவையும் புதியவை அல்ல. ஆனால் விவாதித்து தீராதவை. கடவுளற்ற உலகில் மனிதர்களின் அறம் என்னவாக இருக்கும் என்பதே தாஸ்தாவெஸ்கியின் அக்கறையாக இருக்கிறது‌. தாஸ்தாவெஸ்கியின், தால்ஸ்தாயின் கிறிஸ்து இப்படி உருவானவர் தான். தால்ஸ்தாய்க்கு இயேசுவின் தேவையில் எவ்வித ஐயமும் இல்லை. தால்ஸ்தாய் இருமுனைகளுக்கு இடையேயான ஊசலில் இருந்தார் என்பது என் எண்ணம். ‘தொலைந்துபோன சிறிய கறுப்புநிற பைபிளின்’ முடிவில் அறம் தொலையும் போது கடவுளும் தொலைவது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஊசலின் மறுமுனையை ‘ஒ தாவீது ராஜாவே’ சென்றடைகிறது.

‘தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ தொகுதியின் தலைப்பு கதை. இரண்டாம் உலகப் போரின் பின்புலத்தில் ரஷ்யாவை களமாக கொண்ட கதை.  ‘குளிரில் பூமியானது வெள்ளைநிற போர்வையோன்றைத் தன் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு துயில் கொள்வதைப் போல் இருந்தது.’ போன்ற விவரணைகள் நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது. வார்சா நோக்கி ராணுவத்தில் சேருவதற்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறான் கதை நாயகன். தாஸ்தாவேஸ்கி நாவல்கள் மற்றும் குடும்ப புகைப்படம் உள்ள நோட்டு மற்றும் சிறிய கறுப்புநிற பைபிள் அவன் கொண்டு செல்லும் பையில் உள்ளது. 

அங்கே விளாமிடினை சந்திக்கிறான். புவியியல் பட்டதாரியான அவன் நேசித்தவள் வேறொருவனுடன் இருப்பதை கண்டு கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரம் கொண்டு பின்னர் பைத்தியமாகி மீண்டு ராணுவத்திற்கு வந்தவன். அவன் தற்கொலை செய்து தலைசிதறி இறக்கிறான். அவனுடைய சிநேக சமிஞைகளை கதைசொல்லி அங்கீகரித்து அவனுக்கு திருப்பியளிக்கவில்லை. ராணுவ ஒழுங்கிற்கு பொருத்தமில்லாத மனிதனாக இருக்கிறான் என்பது விளாமிடின் ஓடிவரும்போது கீழே விழுவதையும் அவனை வேறெவரும் கவனிக்காததையும் சுட்டுவதன் வழியாக நிறுவுகிறார்.

துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அவனை அழைத்து செல்கிறார்கள். ‘ஆனால் நான் எதற்காக இந்தக் கரடியைக் கொல்ல வேண்டும்?’ என்றொரு கேள்வியை எழுப்புகிறான். சம பலமற்ற எதிரி. ஆனால் அந்தக் கரடியின் சாவும் கதைசொல்லியின் வாழ்வும் பிணைந்திருக்கிறது. ஏறத்தாழ கீதையின் காட்சி இங்கு மறு ஆக்கம் செய்யப்படுகிறது. ஆனால் போதிப்பவரான ட்ரான்ஸ்கியின் உறுதி குலைகிறது. ‘உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா?’ என எழுப்பப்படும் கேள்வி ‘சிறுமி கத்தலோனா’ வில் எழுப்பப்படும் அதே கேள்வியின் நீட்சி. பெரும்பாலான கதைகளை துளைத்து செல்லும் மைய சரடு இக்கேள்வியே.

கரடியை சுடுவதற்கு முன்பு நிகழும் விவாதம் மனிதனின் சுய தேர்வுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலைப் பற்றிய உரையாடல். எல்லா சமயங்களிலும் வேறொரு வாய்ப்பு இருக்கு என நம்ப விரும்பும் கதைசொல்லி. அவற்றை மறுக்கும் ராணுவ அதிகாரி. ஏனெனில் ராணுவத்திற்கு அதுவே உகந்தது. ஒருவகையில் இதே கேள்வியைத்தான் சிலோன் நாதன் சிறையில் எதிர்கொள்கிறார். தவறான தேர்வு என தான் நம்புவதே அவரை வதைக்கிறது. ஜூதாசும் தனது தேர்வை எண்ணி மருகுகிறான். சுட்டுக்கொல்லப்பட்ட கரடி கனவில்  தலைகோதி தூங்க வைத்து அவனை மன்னிக்கிறது. சிலோன் நாதனை மன்னிக்க கனவில் எவரும் வரவில்லை. இறுதியில் தற்கொலை செய்துகொண்டு மரிக்கிறார்.

உயரதிகாரி லூக்கா அவனை அழைத்து பேசுகிறார். அவரிடம் தானொரு நல்ல ஓவியன் என பொய் சொல்கிறான். இயேசுமீது நம்பிக்கை இருக்கிறதா என லூக்கா கேட்கிறார். தேவாலயத்தில் அமர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் முகத்தைப் பார்ப்பதுபோல் வேறெதுவும் எனக்கு அமைதியைத் தந்து விடப்போவதில்லை என்கிறான். தொடர்ந்து விவாதிக்கிறார்கள்.  நேரியதான நல்லவனை படைப்பதே உலகத்தில் மிகவும் சிக்கலான காரியம்  டான் குயிக்சோட் பூரண நல்லவன். அவன் அசடனாக இருப்பதாலேயே நல்லவனாகிறான். தன் மதிப்பையறியாத நல்லவன் முட்டாளாக்கப்படுகையில் கருணையுணர்வு பிறக்கிறது. இந்த உரையாடல் கதையின் பின்புலத்தில் மிக முக்கியமான ஒன்று. படிப்படியாக மனித தன்னிலை மறைவதையே கதை சொல்கிறது.

மனைவி ஆன்யாவிற்கு கடிதம் எழுதுகிறான். போர் கொலைகள் பற்றிய விவரணைகள்- உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா? எனும் அந்த கேள்வியை விரிவாக்குகிறது. இயேசுவை ஆதர்சமாக  கொண்ட லூக்கா தான் கொல்வதில் இன்பமடைகிறார். போரில் அடிபட்டு கிடப்பவனுக்கு நீர் கொடுத்துவிட்டு மறைத்து வைத்த கத்தியால் அவனை குத்தி கொல்லும் போது அவன் மற்றொரு லூக்காவாக மாறுகிறான். அதற்குப்பின் அஞ்சி ஒளிந்து கொண்டிருக்கும் பெண்னை வெறும் ஆர்வத்தில் நெருங்கி அகங்காரம் சீண்டப்பட்டு அவளை துன்புறுத்தி புணர்கிறான். கிறிஸ்து ஒரு ஒளியாக அவனுடைய சாயலில் தோன்றி குரலாக ஒலிக்கிறார். அகங்கார வெறியில் இருப்பதை சொல்கிறார். புணர்ந்து கொண்டிருப்பவனின் பின்னால் நின்றுக்கொண்டு அவ்வுருவம் மீண்டும் எச்சரிக்கிறது. அவனுடைய மனைவிக்கும் பிள்ளைக்கும் இது நேரலாம் என சொல்கிறது அக்குரல். ஆனால் அவன் கேட்கவில்லை. வெறியில் அந்த பெண்ணை சிலையொன்றால் அடித்து கொல்கிறான். நம்பிக்கையாளன் கிறிஸ்துவை தொலைக்கும் கதை என சொல்ல முடியும். கிறிஸ்து ஒருவகையில் அவன் மனசாட்சியாக இருக்கிறார். கதையிறுதியில் பைபிள் தொலைந்ததும் பெரும் ஆசுவாசத்தை உணர்கிறான். இதுவே இதை ஒரு தாஸ்தாவெஸ்கிய கதையாக ஆக்குகிறது. ஜூதாஸ் மற்றும் சிலோன் நாதன் தங்களுடைய குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் மரிக்கிறார்கள். ‘தொலைந்துபோன பைபிள்’ நாயகன் இயேசுவை கைவிடுவதன் வழியாக தற்கொலையிலிருந்து தப்பிக்கிறான். நிம்மதியாக வாழ்கிறான். ‘ஒ தாவீது ராஜாவே’ அகங்காரத்தை விட்டுவிட்டு இயேசுவை பற்றுவதன் வழியாக தற்கொலையில் இருந்து தப்பிக்கிறான்.

கதையை தற்காலத்திலிருந்து விலக்கி வேறொரு காலத்தில் வேறொரு நிலத்தில் நிகழ்த்தும் போது அரசியல் தரப்புகளை கடந்து ஆதாரமான கேள்விகளை எழுப்பிக்கொள்ள முடியும். சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘காலத்தின் அலமாரி’ ‘எலும்புக்கூடுகள்’ போன்றவை இப்படியாக சமகால நிகழ்வுகளிலிருந்து விலக்கிக்கொண்டு ஈழ சிக்கலை அணுகுபவை. சாதனா போர் ஒரு மனிதனின் நுண்ணுணர்வுகளை அழித்து படிப்படியாக மிருகமாக்குவதை சித்தரிக்கிறார். அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகள்’ வன்புணர்வு செய்த சிங்கள சிப்பாயின் வீட்டுக்கு அவனால் உருவான பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று காண்பதை சொல்லும் கதை. தன் நல்ல கணவன் , மகளின் நல்ல தந்தை, வேறொருத்தியை வன்புணர்வு செய்தவன் என அறியவரும்போது அவள் என்ன ஆவாள்?

இரண்டாம் உலகப்போர் என்பது ஸ்டாலினின் காலம். ஸ்வெட்லான அலேக்சிவிச் ‘second hand time’ நூலில் ரஷ்யாவை குறித்து கொடுக்கும் சித்திரத்தில் ரஷ்யாவின் தேவாலயங்கள் இடிக்கப்பட்டதையும் கடுமையாக ஒடுக்கப்பட்டதையும் சொல்கிறார். இரண்டாம் உலகப்போரை ஒட்டியே ஸ்டாலின் ஒரு உத்தியாக மீண்டும் கிறிஸ்தவத்திற்கு இடமளிக்கிறார். கிறிஸ்தவத்தின் ரட்சகராக தோற்றம் அளிக்கிறார். ஆனால் பிற்காலத்தில் நிலைமை மோசமாகிறது. சோவியத் உடைந்தபிறகு பெருந்திரளாக மக்கள் தேவாலயங்களுக்கு சென்றார்கள். கிறிஸ்தவ நம்பிக்கை சோவியத்தில் கிட்டத்தட்ட ராஜ துரோகமாக கருதப்பட்டது. இந்த சூழலில் ராணுவ உயரதிகாரி புதிய வீரனிடம் இப்படி உரையாடுவது முற்றிலும் சாத்தியமற்றது என சொல்லிவிட முடியாது என்றாலும், சற்றே நம்பகமற்ற பின்புலத்தை அளிக்கிறது. இங்கும் வாசகரின் நம்பிக்கையும் தனிப்பட்ட உரையாடல் எனும் சமாதானமும் தேவைப்படுகிறது.

இதே வரிசையில் ‘எஞ்சியிருப்பதன் துயரை’ பேசும் அடுத்த கதை  ‘யூதாசின் முத்தம்.’ இது ஒரு தொன்ம மறு ஆக்க ஊகப் புனைவு. நாமறிந்த யூதாசின் கதையில் உள்ள இடைவெளிகளை படைப்பூக்கமிக்க வகையில் நிரப்புகிறார். துரோகத்தின் முத்தமாக பார்க்கப்பட்ட யூதாசின் முத்தம் உண்மையில் அன்பின் முத்தமாக ஆகிறது. துரோகத்தின் சின்னமாக காலம் காலமாக கருதப்படும் யூதாஸ் முன் இருந்த தேர்வுகள் எவை? அவன் எதை தேர்ந்தான்? எனும் கேள்விகள் வழியாக அவனுடைய பிம்பத்தை தலைக்கீழாக்குகிறார். யூதாசுக்கு ஒரு காதல் வாழ்க்கை, நெருக்கடிகள், அரசியல் பின்புலம் என அனைத்தையும் உருவாக்குகிறார். பிலாத்துவின் வீரர்கள் நகர்வலம் வரும் இயேசுவை கைது செய்ய வரும்போது யூதாஸ் முதல் ஆளாக அவர்களுக்கு முன் நின்று அவர்களை விரட்டியடிக்கிறான். யூதாசின் காதலி சாரா, அவளுடைய அண்ணன் இப்ராகிம் நகர தலைமைக்கு எதிராக ஒரு புரட்சிப்படையை தொடங்கியதாக சொல்கிறாள். அதற்காக முப்பது வெள்ளிக்காசுகளை அளிக்க கோருகிறாள். அதற்காக அலையும்போது யூதாசின் குடும்பத்தை பிலாத்துவின் ஆட்கள் பிடித்து கொண்டு போய்விடுகிறார்கள் (இப்பகுதி மட்டும் சற்றே வழக்கமான பரப்பியல் பாணி எனத் தோன்றியது). சாராவின் வீட்டிலிருக்கையில் யூதாஸும் பிடிபடுகிறான். இறுதி விருந்தின்போது இயேசு கூறும் கதையில் குடிகாரன் இறந்த தந்தையை தங்க மோதிரத்துடன் சேர்த்தே புதைக்கிறான். இயேசு நன்றியைப் பற்றி பிரசங்கம் செய்வதும் வருகிறது. யூதாஸ் இயேசுவை கைது செய்யும்போது அவருக்கு முத்தமிடுகிறான். விசாரணையின்போது பராபஸ் விடுவிக்கப்படவேண்டும் என எல்லோரும் கூக்குரலிடுவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இயேசுவை நிர்பந்தத்தினால் காட்டிக்கொடுத்தாலும் பிறகு மீட்டுவிடலாம் என்பதே அவனுடைய கணக்கு. எப்படியும் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வார் என நம்பினான். ‘இயேசுவையே விடுதலை செய்யுங்கள் என கண்ணீர்விட்டு அழுவதை’ எவரும் கேட்கவில்லை. பிலாத்து கொடுத்த வெள்ளிக்காசை வீசிவிட்டு வனத்திற்கு செல்கிறான். இயேசுவின் மரணத்திற்கு தான் காரணம் என்பது அவனை வருத்துகிறது. பாம்பொன்று அவனிடம் ஓநாயாக உருமாறி பேசுகிறது. இவையும் இயேசுவின் திட்டம் என சொல்கிறது. நீ ஒரு துரோகியல்ல, சாக வேண்டாம் என சொல்கிறது ஆனால் காட்டுக்குள் சென்று தூக்கிட்டு சாகிறான் யூதாஸ். சாத்தான் சொல்லும் சமாதானம் எல்லாவற்றையும் இறைத் திட்டத்தின் பகுதி என ஏற்க சொல்வதே. அதை ஏற்றுக்கொண்டால் யூதாஸ் சமாதனமடைந்து நிம்மதியாக வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் சுய தேர்வின் வாய்ப்பையும் அதற்கான பொறுப்பையும் முற்றிலுமாக மறுத்ததாக ஆகும். ஆகவே அவன் தற்கொலை செய்துகொள்கிறான். தற்கொலைகள் ஒருவகையில் விதியின் வலைப்பின்னலுக்கு எதிரான கலகம். பழி தீர்ப்பு. சுமத்தப்படும் விதியின் வழித்தடங்களுக்கு எதிரான மறுப்பு. சுய தேர்வுக்கான சாட்சியங்களை வலுக்கட்டாயமாக நிறுவும் யத்தனங்கள்.

‘ஓ… தாவீது ராஜாவே!’ இதே கேள்விகளை கொண்டு வேறொரு பதிலை அடைந்த கதை என சொல்லலாம். நார்வே கடலில் மீன் பிடிக்கும் கிழவரின் கதை. கிழவனும் கடலை நினைவுபடுத்தும் காட்சியனுபவம்‌. கிழவர் தாவீது தந்தை மோசேயுவுடன் மீன் பிடிக்க சென்ற நினைவுகளில் ஆழ்கிறார். தேவன் நம்மை கைவிடமாட்டான் என தத்தளிக்கும் படகில் இருந்தபடி மோசேயு ஆறுதல் சொல்லும்போது ஒரு ராட்சச அலை அடங்கி செல்கிறது. ‘இத்தனை ஆண்டுகளாக கடல் என்றால் மிகவும் அமைதியான ஒன்று, ஒரு தாயைப் போன்றோ அல்லது தந்தையைப் போன்றோ எங்களை அரவணைக்கக் கூடியது என்று நினைத்திருந்தவனுக்குக் கடலின் இத்தனை மூர்க்கத்தனங்களையும் பார்த்தபோது வேதனையும் அதேசமயம் கோபமும் உண்டாயிற்று.’ எனும் இவ்வரியில் கடல் வாழ்க்கையின் குறியீடாகி அதன் கருணையின்மையை முதன்முறையாக எதிர்கொள்ளும் இளம் மனதின் தவிப்பு புலப்படுகிறது.  ‘முட்டாள்களையும் குழந்தைகளையும் தேவன் காப்பாற்றுவார். நீ குழந்தை, நான் முட்டாள், ஆகவே எதற்கும் பயப்படாதே என்றார்.’ இந்த உரையாடல் ‘தொலைந்து போன பைபிள்’ கதையில் லூக்காவுடன் டான் குவிக்சாதே பற்றி நிகழும் உரையாடலுடன் தொடர்புடையது. கிழவர் பெரும் முயற்சிக்கு பிறகு பிடித்த சிவலை மீன் அவரிடம் பேசத் தொடங்குகிறது. கிழவரும் தனிமையை போக்கிக்கொள்ள மீனிடம் பேசுகிறார். ‘நான் தோற்றுப்போனவன்’ என அரற்றுகிறார். மரணத்தை தவிர தனக்கு வேறென்ன எஞ்சி இருக்கிறது என மீனிடம் கேட்கும் கிழவரை தேற்ற மீன் மரணத் தருவாயில் பிழைத்து வந்த தாஸ்தாவெஸ்கியின் கதையை சொல்லி அவருக்கு ஆறுதல் அளிக்கிறது. மீனிடம் “இறப்பின் இறுதி நொடியில் என்னிடமிருந்து தப்பிவிடும் சாத்தியம் உள்ளதா?” என கேட்கும் கிழவரின் கேள்வி “தொலைந்து போன பைபிள்” கதையில் கதைசொல்லி அவனுக்கு துப்பாக்கி பயிற்றுவித்த ட்ரான்ஸ்கியிடம் கரடியை சுட சொன்னப்போது கேட்ட அதே கேள்வியின் நீட்சி. கொடும் பசியில் இருக்கும் தாவீது உயிர்வாழ வேண்டும் என மன்றாடாதபோதும் மீனை முத்தமிட்டு மீண்டும் நீரில் விடுகிறார். இந்த தருணத்தையும் “தொலைந்து போன பைபிள்” கதையில் கரடி சுடப்பட்டு இறப்பதுடன் ஒப்பிட முடியும். கரடி சுடப்படுவதிலும் மீன் உண்ணப்படுவதிலும் தான் பிழைத்திருக்க முடியும் எனும் நிலையில் இருவேறு முடிவுகளை இருவரும் எடுக்கிறார்கள். வீடு திரும்பும் தாவீது தனது பாடுகளில் பங்குபெறாத இயேசுவின் மீது கோபப்படுகிறார். தாவீது தனது வயிற்றை அறுத்து உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கும் மலைப்பாம்பை வெளியே இழுத்து போட்டுவிட்டு வயிறை தைத்துக்கொள்கிறார். வீடு முழுவதும் பாம்புகள் சூழ்கின்றன. கடற்கரையில் சிற்றில் கட்டிக்கொண்டிருக்கும்போது இயேசு அவர் முன் தோன்றுகிறார். வீட்டுக்குள் திரும்பும்போது பாம்புகள் மறைந்து போகின்றன. இதே கதையில் மீன் முன்னர் பேசும்போது சாத்தானை விட கர்த்தர் வலிமையானவர் என சொல்கிறது. கொடும் பசியே உள்ளுக்குள் உழலும் பாம்பாக, சாத்தானாக உருவகப்படுத்தப்படுகிறது. இக்கதை எனக்கு இரண்டு கதைகளை நினைவுபடுத்தியது. ஒன்று தால்ஸ்தாயின் ‘where love is god is’ – இதில் மார்டின் எனும் மகனை இழந்த, செருப்புதைப்பவர் கனவில் வரும் இயேசு நாளை உன் வீட்டிற்கு வருவதாக சொல்கிறார். காலையிலிருந்து இயேசுவிற்காக காத்திருக்கும் மார்டின் வெவ்வேறு பாவப்பட்ட ஜீவன்களை சந்திக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான். இயேசு வராததை எண்ணி மருகும் அன்றிரவு கனவில் மீண்டும் இயேசு வரும்போது ஏன் வரவில்லை என கேட்கிறான். அதற்கு நான் தான் வந்தேனே என சொல்வார். பதின்ம வயதில் பள்ளியில் படித்த கதை. இயேசுவின் வருகையையும் இருப்பையும் உணர்த்தும் கதை. ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில் கடலில் மீன்பிடிக்க செல்லும் கிழவனிடம் கிட்டும் பேசும் மீன் கதை ஒன்றுண்டு. இக்கதையும் அமைப்பில் அத்தகைய தேவதை கதை/ நீதிக்கதை அமைப்பைக் கொண்டிருக்கிறது. தாஸ்தாவேஸ்கியின் கதையுலகிலிருந்து நன்னம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கும் தால்ஸ்தாய் கதையுலகிற்கு சென்ற கதை என இதை சொல்லலாம். சிலோன் நாதனும் யூதாசும் தற்கொலை செய்து இறந்து விட, மீதி இரண்டு கதைகளின் நாயகர்களும் உயிர் பிழைத்து இருக்கிறார்கள். தொலைந்து போன பைபிளின் நாயகன் நம்பிக்கையை தொலைப்பதன் வழியாகவும் தாவீது நம்பிக்கையை பற்றியபடியும். ஒருவகையில் ஒரே சிக்கலின் மூன்று சாத்தியமான விடைகளை சாதனாவின் கதைகள் பரிசீலிக்கின்றன என சொல்ல முடியும்.

தொகுப்பின் மீதி இரண்டு கதைகளும் எனது வாசிப்பில் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. ‘அக்கா’ இரண்டு சரடுகள் கொண்ட கதை. கதைசொல்லியின் கதை ஒரு பகுதியும். பிற பகுதிகள் அவன் எழுதும் கதையும் கொண்ட அமைப்பு. கதை சொல்லியின் கதை சற்றே சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது. அவன் எழுதும் கதை எவ்விதத்திலும் புதுமையாகவோ அரிதாகவோ இல்லை. சாதி பிரச்சனை, இன சிக்கல், ஆணவக் கொலை போன்ற பேசு பொருளையே விந்தையான ஒரு நிலப்பரப்பிற்கு கொண்டு சென்று விவாதிக்கிறது. இரண்டாம் பகுதியில் கதைசொல்லியின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து பாரிசில் ஒரு இத்தாலிய உணவகத்தில் வேலை செய்கிறான். அதன் பிறகு அவனுடன் வேலை பார்க்கும் மருது பற்றிய கதை வருகிறது. மருதுவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே தன்னை பற்றி பேசத் தொடங்குகிறான் (மருதுவை பற்றிய கதையாகவே வாசிக்கப்படும்). முன்னர் வேலைப்பார்த்த அலுவலகத்திலிருந்து வெளியேறிய கதை, பெண்களுக்கு எதிரான ஆவேசம், பென்னியவாதிக்கு டில்டோ அனுப்பிய ஆணாதிக்கவாதி. முள்ளி வாய்க்கால் மரணத்தின் போது தற்கொலை செய்து கொள்ள எண்ணியவன். குடும்பத்திற்கு அறையை கொடுத்தவன். தன்னை தாஸ்தாவெஸ்கியுடன் ஒப்பிட்டு கொள்கிறான்.பெயரை மாற்றும் அளவிற்கு. கதை மாந்தர்களை அங்கிருந்தே எடுப்பதாக சொல்கிறான். தான் வாழும் உலகம் நாஜிக்களின் வதை முகாம் என எழுதுகிறான்.

தாத்தாவைக் காட்டிலும் முற்போக்காக இருந்த, ஜாதிகளே ஒழிய வேண்டும் என விரும்பிய தந்தை தன் மகள் வேறொரு இன ஆணை திருமணம் செய்தது பிடிக்கவில்லை என்பதால் அக்கா வீட்டை விட்டு வந்ததை அறிகிறான் என்பதே கதைசொல்லி எழுதும் கதை. லட்சியவாதத்தின் மீதான சலிப்பு அல்லது அவநம்பிக்கையை சொல்லும் கதை. ஒரு அரசியல் அல்லது தத்துவ கேள்விகளை கதைக்களனை பெயர்க்கும் (decontextualise) போது எழும் உயரம். உறவு சிக்கல்களின்/ சமூக அமைப்பின் கதைகளை பெயர்க்கும்போது நிகழ்வதில்லை. ஒட்டகப்பால், புகையிலை செடி, பெயர்கள் என புதிய யதார்த்தத்தை அளிக்க முற்படுகிறார். இதே சிக்கலே மற்றொரு கதையான ‘தாய்’ கதையிலும் உள்ளது. உறவுகளின் சுயநலம், சுரண்டல், துரோகம் போன்றவற்றை சொல்வதற்கு ரஷ்யாவின் பனி படர்ந்த பின்புலம் எவ்வகையில் உதவுகிறது?

‘தாய்’ ரஷ்யாவில் நிகழ்கிறது. கதையில் மாசி மாச பனி என்பதால் நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் இருக்கும் என்கிறார். ரஷ்ய பின்புல கதையில் தமிழ் மாதத்தை கொண்டுவருவது பொருந்தவில்லை. பனிவெளியில் குதிரைகள் இழுக்கும் வண்டியை பற்றிய சித்திரம் (படர்கையில்?) வருகிறது. தன்னிலையில் கதைசொல்லி தனது தந்தைக்கும் தாயுக்கும் இடையிலான உறவை பற்றி சொல்கிறான். சிறுவனாக தந்தையின் பக்கமே அவன் சாய்கிறான். ரத்தம் வரும்படி தாயை தாக்கிவிட்டு தந்தை வெளியேறி செல்கிறார். அதற்காக அவனுக்கு தாயின் மீது உள்ளுக்குள் ஆத்திரம் கனன்று கொண்டபடி இருக்கிறது. அப்பாவிற்காக காத்திருக்கும் அம்மாவின் மாற்றங்களை நுட்பமாக சொல்கிறார். அப்பா இருந்தபோது வைத்த சூப்பை விட ருசியான சூப்பை வைக்கிறாள், காசு கொடுத்து அவளும் அவனுக்கு ஷூ வாங்கித் தருகிறாள். அவனுடைய தேவையை தீர்ப்பவரிடம் அவனுக்கு அன்பு கூடுகிறது. தனது சேகரிப்பை எல்லாம் முதிர்ந்த தாய் அவனிடம் அளிக்கும்போது அவனுக்கு அவள் மேல் பாசம் கூடுகிறது. அம்மாவிற்கு எதாவது செய்ய வேண்டும் என எண்ணும்போது நல்ல நிலையிலிருக்கும் தந்தையிடமிருந்து அவனையும் வரச்சொல்லி எழுதிய கடிதம் கிடைத்ததும் தந்தையின் மீது பெரும் கோபம் கொள்கிறான் யோகோவிச். அம்மா என்றாள் என்னவென்று உனக்கு காட்டுகிறேன் எனும் ஆவேசத்துடன் தனிமையில், தந்தையின் நினைவிலேயே வாழும் முதிர்ந்த அம்மாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறான். நடுவழியில் பனிப்பொழிவில் முதிர்ந்த அம்மாவை இறக்கிவிட்டு வண்டியில் கடந்து செல்கிறான் யோகொவிச். முதிர்ந்த தாயை காசுக்காக கைவிடும் மகனின் கதை இங்கே கதைகளிலும் நிகழ்வுகளிலும் நாம் நன்கறிந்த கருதான். முதியோர் இல்லத்திற்கு சென்றால் அத்தனைபேரும் இப்படியான கதையை சொல்வார்கள். மனிதர்களை பயன் கருதி கைவிடுவது என்பது இலக்கியத்தின் சாசுவதமான பெசுபோருல்களில் ஒன்று. ஆனால் ‘அக்காவின்’ சிக்கல் இதிலும் உண்டு. இந்த கதை கருவிற்கு கதை நிகழும் வெளி எந்த அளவிற்கு பங்களிப்பாற்றுகிறது? யோகொவிச்சின் அந்த முடிவைத்தான் நவீன இலக்கியவாதி எழுதுவார். நவீன இலக்கியத்தின் கருபொருட்களில் கூட தேய்வழக்கு உண்டு. தேய் வழக்கு என்பது என்ன சொல்லப்படுகிறதோ அதுவல்ல, அது எப்படி சொல்லப்படுகிறது என்பதே. சாரு முன்னுரையில் ‘இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.’ என எழுதுகிறார். சாரு இதை பெரும்பலமாக கருதுகிறார். ஆனால் ஒரு கதைக்கும் அது நிகழும் நிலப்பரப்பிற்கும் ஆதாரமான பிணைப்பு உள்ளது. தத்துவ நோக்கோ, வரலாற்று நோக்கோ இல்லாத கதைகளுக்கு இந்த கதைகள மாற்றம் பாதகமான விளைவையே ஏற்படுத்தும். பிற நான்கு கதைகளுக்கு அவற்றின் பேசு பொருள் காரணமாக இத்தகைய கதைக்களம் சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. சாருவின் கூற்றை பொத்தாம்பொதுவான வரையறையாக கொள்ளமுடியாது. ஜெயமோகனின் ‘தேவதை’ ஒருவகையில் காந்தியின் வாழ்க்கையை ஆப்ரிக்க பின்புலத்தில் புனைந்த கதை. அந்நிய கதைக்களம் எங்கு தேவைப்படும்? சற்றே விலகி நின்று நோக்கும்போது நாம் நன்கறிந்த ஏதோ ஒன்றில் பண்பாட்டு/ வரலாற்று/ சமூக பூச்சுகளுக்கு உள்ளே அறியாத வேறொன்றின் இயங்குமுறை தென்படும். அப்படி ஒரு புதிய கோணம் கிட்டாதபோது கதைகளன் மாற்றப்படுவது ஒரு உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும். ஒரு கணவன் மனைவி சண்டை அமெரிக்காவில் நிகழ்வதாக கதை எழுதும்போது, அங்கே அமெரிக்க பண்பாடு எவ்வகையிலாவது ஊடுபாவை நிகழ்த்தியுள்ளதா என பார்க்கப்படும். அப்படி எதையும் நிகழ்த்தவில்லை என்றால் இந்த கதையை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல என்ன காரணம் என வாசகன் ஒரு கேள்வியை எழுப்பக் கூடும். அப்படிச் செய்யக் கூடாதா? என்றால் அப்படியான விதிகள் ஏதுமில்லை. ஆனால் அது வாசிப்பில் ஒரு இடராகவே கருத்தில் கொள்ளப்படும். சிறுகதையின் மற்றொரு விதியான ‘சொல்லாதே காட்டு’ நினைவில் கொள்ளப்படவேண்டியது. தத்துவ பகுதிகள் நேரடியாக விவாதிக்கப்படுகின்றன. ‘புகழ்ச்சியானது ஒரு மனிதனின் திறமையை மழுங்கடிக்கச் செய்துவிடும் என்பதே அதற்குக் காரணம்’ போன்ற பொதுவான வரிகள் ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன. ‘தனது வலது கையின் கட்டை-விரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார்’ என எழுதுகிறார். வலது ஆள்காட்டி விரல் என எழுத வேண்டிய இடத்தை இப்படி சுற்றி எழுதுவதான மொழி பயன்பாடுகள் ஒரு சில இடத்தில் இடறுகின்றன.  

சாதனாவின் கதைகள் அவை எடுத்துக்கொண்ட கேள்விகளை நேர்த்தியாக பின் தொடர்ந்தவை எனும் முறையில் முக்கியமான கதைகளாகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கான கதைகள் என்றும் சொல்வேன். தமிழ் சிறுகதைகள் உலக நிலப்பரப்புகளில் விரிந்து பரவுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்தாளர் சாதனாவிற்கு வாழ்த்துக்கள்.

வலசையை துறந்த பறவையின் வாழ்க்கை சரித்திரம் – அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ குறித்து நரோபா

புலம்பெயர் இலக்கியத்தில் முதல் தலைமுறையினரின் எழுத்துக்கள் பலவகையிலும் முக்கியமானவை. அடையாள சிக்கலின் ஆவணங்களும் கூட. பிறந்து வளர்ந்த மண் அவர்களை வடிவமைத்திருக்கும். வாழ்வையும் வளத்தையும் கனவில் சுமந்தபடி புதியநிலத்தில் வேர்விட அத்தனை ஆண்டுகாலம் அவர்களை வடிவமைத்த வார்ப்புகளை உடைத்துக்கொண்டு புதிய வார்ப்புகளுக்குள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். இந்த மாற்றம் புறத்தில் எளிதில் நிகழ்ந்துவிடக்கூடும். ஆனால் அகத்தில் இவை நிகழ்வது அத்தனை எளிதல்ல. பொருந்தா காலனியின் கட்டைவிரல் வலியைப்போல், அல்லது அளவுகுறைந்த சட்டையின் பிதுக்கங்கள் போல் சில தொந்திரவுகள் வெளிப்படவே செய்யும். ஒன்றை கைவிட்டு மற்றொன்றை கைக்கொள்ளும்போது ஏற்படும் உராய்வுகள் வலுவான கதைகளை உருவாக்க உதவும். இந்த பின்புலத்தில்  எட்டு கதைகள் கொண்ட அழகுநிலாவின் சங் கன்ச்சில் ஒரு நல்ல வரவாக கருத முடியும்.

 

புலம்பெயர் எழுத்தை பற்றி பேசும்போது இயல்பாக பெண்களின் வாழ்வியல் எழுத்தும் (இது பெண்கள் எழுதுவதல்ல) சேர்த்தே வாசிக்க முடியும். இந்திய சூழலில் திருமணம் வழியாக பெண் புலம் பெயர்கிறாள். தன் அடையாளங்களை மறுவரையறை செய்துகொள்கிறாள். கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ போன்ற ஒரு நாவலை அஞ்சலையின் புலம்பெயர்வு மற்றும் அடையாள சிக்கலாக வாசிப்பதற்கு இடமுண்டு என்றே எண்ணுகிறேன். ஆகவே வெளிநாட்டிற்கு வரும் பெண் குடும்பத்திலிருந்து திருமணத்தின் வழியாக புலம்பெயர்ந்து பின்னர் தேசத்தை விட்டும் புலம் பெயர்கிறாள். புலம்பெயர்வை ஆண்களை விட பெண்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் முடிகிறது என தோன்றுகிறது. பதின்மம், முதல்தலைமுறை புலம்பெயர்வு என இரண்டு அடுக்குகள் கொண்டதாக அழகுநிலாவின் கதைகளை வாசிக்கலாம்.

 

அழகுநிலாவின் இரண்டாம் தொகுப்பான சங் கன்ச்சில் வாசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு தான் அவருடைய முதல் தொகுப்பான ஆறஞ்சு வாசித்தேன். ஆறஞ்சு வாசித்து முடிக்கும்போது சங் கன்ச்சில் தொகுப்பு அவருடைய முதல் தொகுப்பிலிருந்து ஒரு பெரும் தாவல் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. சிங்கப்பூர் வாழ்வை அனைத்து தளங்களிலும், அனைத்து கோணங்களிலும் அள்ளிவிட் வேண்டும் எனும் முனைப்பு இருந்த அளவிற்கு மொழியும் சித்தரிப்பும் முதல் தொகுதியில் வசப்படவில்லை.  ‘ஒற்றைக்கண்’ ஒரு நல்ல படிமமாக நிலைபெற்று வளர சாத்தியமுள்ள கரு எனினும் மொழியின் தேய்வழக்குகள், உணர்வுகளின் தேய்வழக்குகள் கதைக்கு தடையாகி விடுகின்றன. இவற்றை மீறி முதல் தொகுப்பில் எழுத்தாளரின் ஆதார கேள்விகள் நிச்சயம் வெளிப்படும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஆறஞ்சு தொகுதியில் சில நுட்பமான அவதானிப்புகளை காண முடிகிறது. உதாரணமாக ஒரு கதையில் ஊரில் வியர்வை உழைப்பின் அடையாளமாக கருதப்படும் போது சிங்கப்பூரில் அது நாகரீக குறைவாக பார்க்கப்படுவது பற்றிய ஒரு குறிப்பை எழுதி இருப்பார். தலைப்பிற்குறிய கதையான ‘ஆறஞ்சு’ அழகுநிலாவின் வலுவான கதைபுலத்தின் துவக்க புள்ளியை அடையாளம் காட்டுகிறது என சொல்லலாம். சிங்கப்பூர் கல்வி முறை அளிக்கும் அழுத்தத்தின் மீதான சன்னமான விமர்சனத்தையும் பதின்மவயதினரின் சிக்கல்களையும் பேசுகிறது. இந்த தொகுப்பில் சங் கன்ச்சில், முள்முடி, விலக்கு ஆகிய மூன்று கதைகளும் பதின்மவயதினரை சுற்றி நிகழ்கிறது. பொங்கல், வெள்ளெலிகள் கதையிலும் சிறுவர்கள் வருகிறார்கள். பதின்மத்தின் தயக்கங்கள், கொந்தளிப்புகள் வெறும் வயது சார்ந்த அக தத்தளிப்புகள் என்ற அளவில் சுருக்கிவிடாமல் அவை பண்பாட்டு தளத்தில் விரிகிறபோது பதின் பருவத்தை முதல்தலைமுறை புலம்பெயர்வுக்கு இணையாக, அதன் குறியீடாக வாசிக்க இயலும் என தோன்றுகிறது. புலம்பெயர்தலின் தத்தளிப்பை பதின்மத்தின் தத்தளிப்புடன் இணைப்பதில் அழகுநிலா வெற்றிபெறுகிறார்.

சங் கன்ச்சில், தொகுப்பின் தலைப்பிற்குறிய கதை. சிங்கப்பூரில் வளரும் பதின்ம வயதினனின் கதை. விகாசம், பொன் முகத்தில் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ ஆகிய கதைகளுடன் சேர்த்து வாசிக்க முடியும். தொழில்நுட்பம் மனிதர்களை அவர்களின் இடத்திலிருந்து வெளியேற்ற பயன்படுத்த முடியும். வாழ்வர்த்தத்தை அழிக்கவும் அவற்றை ஏவ இயலும். ஸ்ரீதர்  நாராயணனின் ஒரு கதையும் பதின்ம வயது பெண் குழந்தை பாலியல் படம் பார்த்ததாக குற்றம் சாட்டப்படுவதை களமாக கொண்டது. புலம்பெயர் எழுத்தாளர்களின் முக்கிய சிக்கல்களில் ஒன்றாக இது உருவாகி வருவதை காட்டுகிறது. முதலை மீது தாவி கரையை கடக்கும் கன்ச்சிலின் கதையும் பாம்பின் தலைமீது நடனமாடும் கிருஷ்ணனின் கதைக்கும் இடையே சுவாரசியமான ஒரு முரணை உருவாக்க முயன்றுள்ளார். இரண்டு பாட்டிகள், வெவ்வேறு சமூக படிநிலைகளை சார்ந்தவர்களாக வருகிறார்கள். ஆனால் அது அத்தனை துல்லியமாக உருபெறாமல் சற்றே அலைவுரும் கதையாக உருவாகியுள்ளது. குறிப்பாக ரத்னாவின் பாத்திர விவரிப்பு அனாவசிய சுமை என தோன்றியது. சிவாவின் நடத்தை இரண்டு வகையில் எனக்கு முக்கியமாக தோன்றியது. அவனுடைய தந்தை அடித்திருந்தாலும், தாய் திட்டியிருந்தாலும் மனக்காயத்தை மீறி அவர்களுடன் இயல்பாக ஒன்ற முடிகிறது. அவனுடைய நடத்தையை தொலைபேசியில் வெளியே எவருடனோ பகிர்ந்து கொண்ட, இறந்து போன பாட்டியின் இடத்தில் இருக்கும் லட்சுமியிடம் தான் அவன் கணக்கை நேர் செய்து பழி தீர்க்கிறான். ஒருவகையில் மனிதர்கள் ஆக பலவீனமான புள்ளியில் தங்கள் வெற்றிகளை நிலைநாட்டுவார்கள் என சொல்வதாக உணர்ந்து கொண்டேன். மூன்று தலைமுறையினரிடையே உள்ளே உறவு சிக்கல்களை பக்க சார்பற்று சித்தரிக்க முடிந்தது இக்கதையின் வெற்றி.

விலக்கு இந்த தொகுதியில் உள்ள நல்ல கதைகளில் ஒன்று.‌ சென்றாண்டு சிங்கப்பூர் சென்றிருந்த போது சிறுகதை முகாமிற்காக வந்த கதைகளில் இக்கதையை வாசித்தது நினைவில் இருந்தது. பதின்ம வயது பெண் பூப்படைவதில் உள்ள பண்பாட்டு சிக்கலை சொல்லும் கதை. லாவண்யாவின் அம்மா தமிழ் அடையாளங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டிருப்பவள். லாவண்யா அடையாள கலப்பின் மீது ஈர்ப்புடைய பதின்ம வயது பெண். சீன இந்திய ஜோடியை காணும்போது சூசன் பூக்கள் நினைவுக்கு வருகிறது. ஒரு ஏக்கமாக வெளிப்படுகிறது. காதலிக்க சீனனை விழையும் பெண் வகுப்பில் இந்திய நட்புகளையே எதிர்பார்க்கிறாள் என்பது சுவாரசியமான முரண். பள்ளியில் தான் ஏற்கனவே வயதடைந்ததாக காட்டிக்கொள்பவள். அவளுடைய ரகசியத்தை வெளிக்காட்ட விரும்புவதில்லை‌. ஆனால் அம்மாவின் ஆசைகள் வேறாக உள்ளன.‌ பருப்பு சோறை நண்பர்கள் கேலி செய்ததை மனதில் கொண்டு அவளும் சுணங்கி சிக்கன் கேட்கிறாள். இந்த கதையில் முக்கியமான இடம் என்பது தமிழ் வாத்தியார் கூற்றாக வரும் ஒரு வரி- தமிழை நாம் விலக்க கூடாது‌. தமிழ் அடையாளத்தை பேண நினைக்கும் ஒரு தலைமுறைக்கும் அதை விட்டு விலகி வெளியேற நினைக்கும் ஒரு தலைமுறைக்கும் இடையிலான முரணை சொல்லும் கதை. முள் முடி இந்த தொகுதியின் மற்றுமொரு பதின்ம வயதினரின் கதை. தொகுப்பின் பலவீனமான கதையும் கூட‌. கதைக்குள் முரண் போதிய அளவு வலுவாக உருவாகவில்லை என தோன்றியது.

கீலா, இத்தொகுப்பின் முதல் கதை. அல்ஷிமர் நோய் வந்து கணவரை, லிக்வான்யூவை, கவனித்து வந்த மகளை என எல்லோரையும் மறக்கிறாள். ஆனால் மரண தருவாயில் ‘கீலா’ அதாவது மலாயில் பைத்தியம் என பொருள் வரும் ஒரு சொல்லை மட்டும் மகளிடம் விட்டுச்செல்கிறாள். அந்த சொல் ஒரு செய்தியாக மகளை துரத்துகிறது. அம்மாவின் வாழ்விலிருந்து அதற்கான விடையை கண்டடைகிறாள். அம்மாவின் நாட்குறிப்பில் குறிப்பிடப்படும் கடந்தகால சம்பவம் வலுவான ஒரு முடிச்சை கொண்டிருக்கிறது. யார் கீலா? என்பதே கேள்வி. கீலா என்று முத்திரையிடப்பட்டு அடைக்கப்பட்ட பெண் அல்ல தானே என அம்மா புரிந்து கொள்கிறாள்.‌ இறுதி வரி இதை மகளும் உணர்ந்து கொண்டதை குறிப்புணர்த்துகிறது. அம்மாவின் முன் கதைக்கு இருக்கும் கணம் மகளின் பகுதிக்கு இல்லை என்பதே இக்கதையின் ஒரு எல்லை என கூறலாம். ஆகவே அந்த இணைப்பு உத்தியாக மட்டும் நின்றுவிடுகிறது. அம்மாவின் கதை மகளுக்கு, அவளுடைய வாழ்க்கைக்கு என்ன அளிக்கிறது? என்ன இடையீட்டை நிகழ்த்துகிறது? அம்மாவை அறிந்துகொள்கிறாள் என்பதோடு நின்றுவிடுகிறது.

அக்ரோன், உயரம் அல்லது உச்சி என பொருள். இந்த தொகுப்பில் எனக்குபிடித்த கதைகளில் ஒன்று. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ஜொலிக்கும் உயர்ந்த கோபுரத்தின் அடியில் ஓடும் கறுப்பு ரத்தம் எனும் கரு புதிதல்ல. ஆனால் சொல்லப்பட்ட முறை இதை முக்கியமாக்குகிறது. கதைகளின் இயங்கு தளம் மிக குறுகியதாக, சரியாக சொல்லவேண்டும் என்றால் வளரிளம்பருவத்து நினைவுகள் மற்றும் அக தத்தளிப்புகள் சார்ந்ததாக மட்டும் கதைப்புலம் இயங்கும்போது எழுத்துக்கள் விமர்சிக்கப்படுகின்றன. அழகுநிலா பெண் தன்னிலை கதை சொல்லலை முதல் தொகுப்பிலேயே தாண்டுகிறார். ஆண்களின் அகவுலகிற்குள்ளும் பயணித்து, புற உலகத்துடனும் உறவுகொண்டு தனது எல்லைகளை கடக்க முயல்கிறார். நண்பனை இழந்தவனின் ஒருநாளை நுணுக்கமாக சித்தரிக்கிறார். அவனுடைய வெறுமை, மிரட்சி, வாழ்க்கை சிக்கல், நண்பனின் நினைவுகள் என எல்லாமும் இயல்பாக கடத்தப்படுகிறது. போலியான கரிசனம் அல்லது உரத்து வலிந்து  மிகையாக்காமல் வாழ்க்கை பாடை சொல்ல முடிந்திருக்கிறது. மேலும் சிங்கப்பூர் சூழலில் சிங்கப்பூர் வாழ்வு குறித்து  விமர்சன குரல்கள் எழுவது மிக முக்கியம் என எண்ணுகிறேன். வேறு யாரும் சொல்லாத, சொல்ல தயங்கும் விமர்சனங்களை எழுப்ப வேண்டியது எழுத்தாளரின் கடமை. வர்ணங்களில் ஜொலிக்கும் சிங்கப்பூரை சிங்கப்பூர் ப்ளையரில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும்போது கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டும் அவன் காலடியில் எல்லா வண்ணங்களும் கலந்து கறுப்பாக தெரிவதாக முடித்திருப்பார். ஆறஞ்சு தொகுப்பில் இல்லாத ஒரு கூறு என இப்படி வலுவான படிமத்தை கதையில் கையாளும் திறன் இக்கதைகளில் வெளிப்படுவதை கூறலாம். யோசித்துப் பார்த்தால் நாம் கதைகளை மறக்கக்கூடும் ஆனால் கதையின் ஆன்மாவை கடத்தும் ஒற்றை படிமம் கதையை நினைவில் தூக்கி நிறுத்தும். காலந்தோறும் வாசிப்பில் விரியும். அர்த்த அடர்வுகளும் கூடும். இந்த தன்மை அபாரமாக வெளிப்பட்ட கதை என வெள்ளெலிகள் கதையை சொல்லலாம். இத்தொகுதியின் சிறந்த கதை என இதையே சொல்வேன். மகனின் வளர்ப்பு பிராணி ஆசை மற்றும் சிக்கல்களை பற்றி பேசும் கதையாக தொடங்கி அதன் இறுதியில் ஒரு பெண்ணின் அளவுகடந்த ஆத்திரத்தை பறைசாற்றி முடிகிறது. பிரேமா நான்கறை கொண்ட தன் வீட்டை கணவரின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஊழியருக்கு தற்காலிகமாக உள்வாடகைக்கு விடுகிறாள். ஊரிலிருந்து ஒவ்வொருவருடமும் மூன்றுமாதம் மனைவி மாலதியை அழைத்து பிள்ளை பேறுக்கு இருவருமாக முயற்சிகிறார்கள். பிரேமாவின் மகன் ஆகாஷ் செல்லப்பிராணியாக வெள்ளை எலிகளை கூண்டில் அடைத்து வளர்க்கிறான். அவை குட்டிகள் ஈனுகின்றன. அவற்றை விற்று, இதை தொழிலாகவே கருத தொடங்குகிறான். மாலதிக்கு வெள்ளெலிகளின் இனப்பெருக்கத்தின் மீது பெரும் ஆர்வம் ஏற்படுகிறது. இரவெல்லாம் முழித்துக்கொண்டு அதையே பார்க்கிறாள். மாலதி மூன்றுமாத வாசம் முடித்து ஊர் திரும்புகிறாள். ஆண் எலியை காணவில்லை என தேடுகிறார்கள். கதை இப்படி ஒரு காட்சியுடன் முடிகிறது- ‘துணிகளை தொங்கவிடும் நீண்ட கம்பியில் ஒரு வெள்ளெலி தூக்கிடப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது.’ ஒவ்வொரு வருடமும் பிள்ளை பேறுக்காக மூன்றுமாதம் வந்து வெறுமனே செல்லும் மாலதியின் ஆற்றாமை, ஆத்திரம் என எல்லாவற்றையும் இந்த ஒரு வரி முழு தீவிரத்துடன் வெளிப்படுத்துகிறது. ஒரு படிமமாக துணிக்கம்பியில் தொங்கும் வெள்ளெலி ஆழ்ந்த மன தொந்தரவை அளிக்கிறது. அக்ரோன் மற்றும் வெள்ளெலிகள் என இவ்விரு கதைகளுமே உள்ளுறையும் வன்மத்தை மிகைப்படுத்தாமல் கச்சிதமாக கடத்துகிறது. சங் கன்ச்சில் கூட வன்மத்தையே உள்ளுறையாக கொண்டிருக்கிறது.

பொங்கல், சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் மீதான எள்ளல் கலந்த விமர்சனம் என இந்தக்கதையை வாசிக்க முடியும். பொங்கல் பானையில் happy deepavali என எழுதுவது, மாடு குட்டி என கன்றை சொல்வது, பொங்கல் போட்டியில் எப்போதும் வெல்லும் சீன பெண், மாட்டை பார்த்து குழந்தைகள் ஈயஈயவோ பாடுவது, விவசாயத்தை விட்டுவிட்டு சிங்கப்பூர் வந்திருக்கும் கிழவர் அருகே அமர்ந்திருக்க விவசாயி சேத்துல கால வெச்சாத்தான் நாம சோத்துல கால வைக்க முடியும் என வீர வசனம் மேடையில் பேசுவது என எல்லாமும் அபத்தமாகவும் மிகையாகவும் சித்தரிக்கப்படுகிறது. ‘பொங்கல்’ என பொருத்தமாகவே தலைப்பிட்டிருக்கிறார். உள்ளீடற்ற வெற்று உணர்ச்சி பொங்கல். பண்பாடும் கூட சந்தை பொருளாக மாற்றப்பட்டு விற்கப்படும் அபத்தத்தை இக்கதை சொல்கிறது. முதல் தொகுப்பில் இருந்த தமிழ் பெருமிதம் எல்லாம் மறைந்து மறுபக்கத்தை அணுகும் பார்வையை இக்கதைகளில் அடைந்திருக்கிறார் அழகுநிலா. ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோனி நாவலில் அங்கதம் தெறிக்கும் மதுக்கூட உரையாடலை நாம் மறக்க முடியாது. எதன் மீது நமக்கு மெய்யான அக்கறையும், உள்ளார்ந்த மதிப்பும் உள்ளதோ இயல்பாக அதை பகடிசெய்யும், விமர்சிக்கும் உரிமையையும் நாம் அடைகிறோம். ஒன்றை இயல்பாக தயக்கமின்றி நம்மால் பகடி செய்ய முடிகிறதோ அப்போது அதை நாம் நம்முடையதாக ஏற்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

வெண்ணிற இரைச்சல் ஒரு மகாபாரத கதை. ஆறஞ்சு தொகுப்பிலும் தர்மனை மையமாக கொண்ட ஒரு கதை உண்டு.‌ ஆனால்  இக்கதை மொழிரீதியாகவும் குறியீட்டு ரீதியாகவும் மேலான ஆக்கமாக ஆகிறது. போருக்கு பின்பான பாஞ்சாலியின் கதையை சொல்கிறது. ஒரு பக்கம் உபபாண்டவர்களை இழந்த சோகமும் மறுபக்கம் போரின் அழிவுக்கு தான்தான் காரணம் எனும் குற்ற உணர்வும்  அவளை வதைக்கிறது. சமையல் பாத்திரத்தில் குருதி தெரிவது கடோத்கஜன் தெரிவது என மாயத்தன்மையும் கதைக்கு வலு சேர்க்கிறது‌‌. போரின் இரைச்சல் அவளுக்கு தாலாட்டாகிறது. தன்னிலை மறந்து உறங்குகிறாள். கிருஷ்ணனும் கிருஷ்ணையும் அழிவின் கடவுள்கள். அழிவின் கடவுளே எப்போதும் அறத்தின் கடவுளும் கூட. மகாபாரதம் போன்ற கதைகளை மறுஆக்கம் செய்யும்போது அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். புதிய கோணத்தை, புதிய திறப்பை அளிக்க முடிகிறதா? அத்திறப்பு மனித அகத்தினுடையதாக இருக்க வேண்டும். இக்கதையில் அப்படியொன்று நிகழவில்லை என்பது இதன் எல்லை.

‘மண்வாசனை தேடும் வலசை பறவை’ என அழகுநிலா அவருடைய முதல் தொகுப்பின் முன்னுரைக்கு தலைப்பிட்டிருந்தார். தானொரு வலசை பறவை எனும் தன்னுணர்வும் இங்கே தனது வசிப்பிடத்தை கண்டடைய வேண்டும் எனும் பதட்டமும் ஒருங்கே வெளிப்படும் தலைப்பு. இந்த இரண்டாம் தொகுதியில் தன்னை பொருத்திக்கொள்ள வேண்டும் எனும் பதட்டம் தணிந்து அமைதலின் நிதானம் கைகூடி வந்திருக்கிறது. சிங்கப்பூர் பற்றி அவருடைய முதல் தொகுதியில் வெளிப்பட்ட கற்பனாவாத எதிர்பார்ப்புகள், யோசனைகள் இந்த தொகுப்பில் சுத்தமாக இல்லை. சட்டென வெகுளித்தனம் மறைந்து அறிதலின் கசப்பு விமர்சனமாக வெளிப்படுவதை கண்டுகொள்ள முடிகிறது. புலம்பெயர்ந்த இடத்தில் சிலவற்றை ஏற்றும் சிலவற்றை நிராகரித்தும் பயணிக்கிறார். இந்த ஏற்பும் நிராகரிப்பும் முழுக்க தர்க்கப்பூர்வமான முடிவாக இருப்பதில்லை. பதின்ம வயது மகனின் முள் முடியை ஏற்கும் அன்னையால் மகளுக்கு பூப்பெய்தல் சடங்கு நடத்த வேண்டும் எனும் அவாவை கைவிட இயலவில்லை. இதை கொண்டாட்டமாக அணுகக்கூடாது என கருதி லாவண்யாவிற்கு விலக முடிந்தது போல் எளிதாக சிவாவிற்கு தான் கேட்டு வளர்ந்த கிருஷ்ணனின் கதைகளை விட்டு வரமுடியவில்லை. இந்த ஏற்பிற்கும் நிராகரிப்பிற்கும் இடையிலான ஊசலாட்டமும் திட்டமின்மையுமே அழகுநிலாவின் கதை மாந்தர்களை உண்மைக்கு நெருக்கமாக்குகிறது. சிறுகதைகளில் துல்லியம் மிக முக்கியமான அம்சம். அழகுநிலாவின் சில கதைகளில் ஒருவித அலைவு துல்லியமின்மையாக வெளிப்படுகிறது. எனினும் அதை நான் எதிர்மறையாக காணமாட்டேன். தனது தனித்த குரலை கண்டடைய முற்படும் எழுத்தாளரின் தேடல் என்றே கருதுவேன்.

வாழ்த்துக்கள்..

எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, பணி, குடும்பம் பற்றி சுருக்கமான அறிமுகம்.

1981-ல் மதுரையில் பிறந்தேன். மூன்று குழந்தைகள் இறந்த பின் வந்தவன் என்பதால் மண்ணில் தங்க வேண்டுமென பெற்றவர்கள் மதுரை பாண்டிமுனி கோயில் மண்ணில் போட்டு எடுத்தார்கள். அதுவே பெயருக்கும் காரணம். பள்ளிப்படிப்பு மதுரையில். வளர்ந்தது அம்மாச்சி வீட்டில். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதால் நிறையவே சிரமம். கல்விதான் காப்பாற்றியது. கோவையில் பொறியியல் பயின்ற காலத்திலும் ஆசிரியர் பணியே என் கனவாக இருந்தது. பணி செய்து கொண்டே தொடர்ந்த மேற்படிப்பு முனைவர் பட்டம் வரை அழைத்து வந்திருக்கிறது. ஓரிடத்தில் அதிகபட்சம் மூன்று வருடங்கள் என்ற கொள்கை காரணமாக திண்டுக்கல், பெருந்துறை, நெல்லை என பல ஊர்கள் சுற்றி தற்போது கோவையில். துணைவியார் பூமாவும் ஆசிரியைதான். கணிதம் பயின்றவர். ஒரு குழந்தை. நகுலன் அவன் பெயர

வாசிப்பு படிநிலை என்ன? பால்யகால வாசிப்பு எத்தகையது, எப்படியாக வளர்ந்தது?

நான் வாசிப்பதற்கு என் அம்மாதான் காரணம். வெகுஜன இதழ்களின் தீவிர வாசகி அவர். இன்று தீவிர இலக்கியமும் வாசிக்கிறார். பிள்ளை வெளியே சென்று விளையாடுகிறேன் என்கிற பெயரில் ஊர் சுற்றாமல் இருப்பதற்காக புத்தகங்களைக் கொடுத்துப் பழக்கியதாகச் சொல்வார். ஆனால் அவரைத் தாண்டியும் குடும்பம் மொத்தமும் வாசிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தை ரசித்தார்கள் என்று சொல்ல முடியும். 1985-86 காலகட்டம். சிறுவர் மலர் எனக்கு அறிமுகமாகி இருந்தது. வீட்டில் அனைவரும் திருப்பதி செல்லத் திட்டமிடுகிறார்கள். வியாழன் கிளம்பிப்போய் ஞாயிறு திரும்புவதாக ஏற்பாடு. வெள்ளிக்கிழமை சிறுவர் மலர் வாசிக்க முடியாமல் போய்விடும் என்பதால் நான் வர மறுக்கிறேன். யார் என்ன சொல்லியும் கேட்கவில்லை. இறுதியில் தாத்தா எனக்காக வீட்டில் தங்கி விட்டார். மற்றவர்கள் எல்லாம் ஊருக்குப் போனார்கள். அந்த சம்பவத்தை என்னால் இப்போதும் நினைவுகூர முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். அங்கிருந்து தொடங்கிய வாசிப்பு பிறகு காமிக்ஸின் வழியாக வளர்ந்தது. அவற்றின் பாதிப்பு எப்போதும் என் கதைகளில் காணக்கிடைக்கும்.

பள்ளிக்காலத்தில் சுபாவும் பட்டுக்கோட்டை பிரபாகரும் அறிமுகமானார்கள். மனித வேட்டை, இறந்தாலும் இந்திய மண்ணில் என கல்லூரிக்காலத்தில் சுபாவின் நாவல்களைத்தான் தூக்கிக் கொண்டு திரிந்தேன். மிகுதியான தொழில்நுட்ப தகவல்களைக் கொண்டிருந்தாலும் ஏனோ எனக்கு ராஜேஷ்குமாரை ரசிக்க முடியவில்லை. ஆனால் அமானுஷ்யத்தையும் ஆன்மீகத்தையும் கலந்து தந்த இந்திரா சௌந்திரராஜனின் கதைகள் வேறொரு உலகத்தில் உலாவிட எனக்கு உதவின. அவருடைய ஐந்து வழி, மூன்று வாசல் எப்போதும் மறக்கவியலாத நாவல். கல்லூரியின் இறுதிக்கட்டத்தில் விகடனின் வழியாக அறிமுகமான எஸ்.ராமகிருஷ்ணனின் துணைஎழுத்து என்னை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. அவருடைய கதாவிலாசம்தான் இலக்கியத்தில் எனக்கான திறவுகோல். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்க புத்தகங்கள் உதவின. அதன் பிறகு கிடைத்த நண்பர் நேசமித்ரனின் அறிமுகம் புதிய காற்றைக் கொண்டு வந்தது. அதன் வழியாகவே எனக்கான உலகம் புலப்பட்டது

எழுதும் உந்துதல் எப்படி வந்தது? எழுத்தாளர் என்றுணர்ந்த கணம் என்ன?

2008 வாக்கில் நரனை ஒருமுறை மதுரையில் சந்தித்தபோது என்னுடைய வலைப்பதிவுகளை வாசித்திருந்த காரணத்தால் நீ எழுதலாமே என்று சொன்னார். அப்போதும் அதைச் சிரித்தபடி மறுத்தேன். வாசகனாக இருப்பதே போதும் என்பதுதான் என்னுடைய ஆரம்பகட்ட மனநிலை. ஒரு முறை உயிர்எழுத்தில் ஷங்கர ராம சுப்பிரமணியன் “நான் ஒரு தமிழ் பரோட்டா” என்றொரு கவிதை எழுதி இருந்தார். அதன் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் வாசித்த எனக்கு கடும் கோபமானது. ஏனெனில் ஷங்கர் எனக்கு அத்தனை பிடித்தமான கவிஞர். ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆத்திரத்தில் அவரைக் கிண்டல் செய்து ஒரு பத்தியை எழுதினேன். அதை மட்டும் தனியாகப் பார்த்தபோது நன்றாகயில்லை எனத் தோன்றியதால் முன்பின்னாக சில சங்கதிகளை சேர்த்து எழுதினேன். முடித்த பிறகு பார்த்தால் அந்த பகடியைத் தவிர மற்றவையெல்லாம் நன்றாயிருப்பதாக ஒரு உள்ளுணர்வு. அதை வெட்டி விட்டு மீதப் பகுதியை எல்லாம் திருத்தி எழுதினேன். அதுதான் என் முதல் கதையான நிழலாட்டம். கதை எழுதி விட்டோம் என்பதை விட நமக்கு எழுத வருகிறது என்பதே கொண்டாட்டமாக இருந்தது. நேசமித்ரனோடு இருந்த சமயத்தில் நிறைய உரையாடி இருக்கிறோம், அதன் வழியே எழுத்து பற்றி எனக்குள் ஒரு சித்திரம் உருவாகி இருந்தது – சில மதிப்பீடுகளும் இருந்தன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்றெல்லாம். ஆக, குறைவாக எழுதினாலும் என் மனதுக்கு நிறைவாக உணர்வதை மட்டுமே எழுத வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன்.

என்னுடைய மர நிறப் பட்டாம்பூச்சிகள் கதையை வாசித்து விட்டு போகன் சங்கர் சிலாகித்துப் பேசிய தருணமே எனக்குள் முழுமுற்றாக நானும் எழுதக்கூடியவந்தான் என்கிற நம்பிக்கையைத் தந்தது.

பிரசுரமான முதல் எழுத்து?

வலைத்தளங்களில் விளையாட்டாக எழுதிக் கொண்டிருந்தவனை உன்னால் எழுத முடியும் எனத் தொடர்ந்து உற்சாகமூட்டியவர் பொன்.வாசுதேவன். முடியாத கதை என்றொரு கவிதையை அகநாழிகையில் பிரசுரித்தார். கதை என்று பார்த்தால் நிழலாட்டம். யெஸ்.பாலபாரதி ஆசிரியராக இருந்த பண்புடன் என்னும் இணைய இதழில் வெளியானது. அதே கதை பிறகு மதிகண்ணனின் கதவு சிற்றிதழிலும் வந்தது.

உலக/ இந்திய/ தமிழ் இலக்கிய ஆதர்ச எழுத்தாளர்கள் யார்?

ஏனோ எனக்கும் என் அகவுலகத்துக்கும் ஐரோப்பிய எழுத்தாளர்களே நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். மனிதனின் அகவுலகை மிக விரிவாகப் பேசிய தஸ்தாவ்ஸ்கியை நான் ஒரு வரி கூட வாசித்ததில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? அவரை வாசிக்காமல் இருப்பது ஒருவகை அச்சம் என்று கூட சொல்லலாம். நம்முடைய குரூரங்களையும் ரகசியங்களையும் இழந்து விடுவோம் என்கிற பயம். போலவே லத்தீன் அமெரிக்க கதைகளையும் நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன். ரூல்போ ஒருவர் மட்டுமே எனக்கு சற்று உவப்பாயிருக்கிறார். ஆக வாழ்வை தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்ப்பவன் என்கிற வகையில் எனக்கான உந்துதல் ஆல்பர் காம்யூவிடம் இருந்தே கிடைக்கிறது. அந்நியன் எனக்குள் உருவாக்கிய தாக்கம் அளப்பரியது, இருப்பு சார்ந்த சிக்கலான பல கேள்விகளை மனதினில் விதைத்தது. அவருடைய எழுத்துகள் எனக்குள் கிளர்த்திய உணர்வையே நான் நம்முடைய நிலத்தில் நிகழ்த்திப் பார்க்கிறேன், அதன் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்துகிறேன்.

நானும் ஒரு மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் சூழலில் இதைச் சற்று சங்கடத்தோடுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்திய அளவில் என்று சொல்லும்போது மலையாளமும் வங்காளியும் தவிர்த்து மற்ற மொழிகளில் இருந்து நிறைய மொழிபெயர்க்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அப்படியிருக்க ஆதர்ஷம் என்றெல்லாம் உண்மையில் யாருமில்லை. பஷீரையும் சிதம்பர நினைவுகளுக்காக பாலச்சந்திரனையும் பிடிக்கும். பால் ஸக்காரியாவின் சிறுகதைகளின் மீது மகிழ்ச்சி கலந்த பொறாமை உண்டு.

தமிழைப் பொறுத்தவரை நான் எப்போதும் சொல்வது எஸ்.ராமகிருஷ்ணன். அவர் இல்லையென்றால் எனக்கு இலக்கியம் தெரிந்திருக்காது. எழுத்து மற்றும் சொல்முறை சார்ந்து என்னை மிகவும் பாதித்தவர்களெனில் கோபிகிருஷ்ணனையும் ப்ரேம்-ரமேஷையும் சொல்வேன்.

‘வலசை’ ஒரு முக்கியமான முயற்சியாக பட்டது. அதை நேசமித்திரனோடு இணைந்து முன்னெடுத்தீர்கள். அதில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது? வலசையின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி

2010-ன் பிற்பகுதி. கோவில்பட்டியில் கோணங்கியைச் சந்தித்து விட்டு நானும் நேசமித்ரனும் மதுரை திரும்பிக் கொண்டிருந்தோம். பேச்சு அப்போதிருந்த சிற்றிதழ் சூழல் குறைத்தும் இடைநிலை இதழ்களின் ஆதிக்கம் பற்றியும் திரும்பியது. குழு மனப்பான்மையால் புறக்கணிக்கப்படும் எழுத்துகள், மேலோட்டமான எழுத்துகளை தாங்கிப் பிடித்து இவைதான் இலக்கியம் என நம்பவைக்கப் பாடுபடும் இடைநிலை இதழ்களின் அரசியல் என எங்களுக்கு நிறைய கோபங்கள் இருந்தன. ஏன் இவற்றையெல்லாம் சரி செய்ய நாமே ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கக்கூடாது என்று கேட்ட கேள்விக்கான விடைதான் வலசை. உலகம் முழுக்க இருக்கும் இலக்கியப் போக்கை தமிழில் பேசுவதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என விரும்பினோம். எனவே மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரலாம் என்று முடிவு செய்தோம். பிறகு இதழ்களை வெறுமனே வழக்கமான சிற்றிதழாக இல்லாமல் வேறொரு வடிவத்தில் தருவதற்கான முயற்சியாக ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு கருப்பொருள் என்று முடிவு செய்தோம். வலசை மொத்தம் நான்கு இதழ்கள் வெளியானது. உடல் மீதான அரசியல், மூன்றாம் பாலினம், குழந்தைகளின் அகவுலகம், நாடு கடத்தப்பட்டவர்களின் படைப்புகள் என்கிற நான்கு வெவ்வேறு கருப்பொருளைப் பேசிய இதழ்கள். கடைசி இதழ் 2014 ஜனவரியில் வெளியானது. அடுத்ததாக ஓவியங்களைப் பேசுகிற ஒரு இதழைக் கொண்டு வரலாம் என்றெண்ணி பணிகளை ஆரம்பித்தோம். ஆனால் அது கனவாகவே நின்றுவிட்டது. இருவரும் அவரவர் எழுத்துகளில் கவனம் செலுத்திய காலகட்டம். இதழுக்கான நேரத்தைச் சரிவர ஒதுக்க முடியாமல் போக வலசை (தற்காலிகமாக?!!) நிறுத்தப்பட்டது.

வலசையைப் பொறுத்தமட்டில் நேசமித்ரனே அதன் ஆன்மா. நான் வலசையின் உடலாக இயங்கினேன் என்று சொல்லலாம். முதலில் கருப்பொருளைத் தீர்மானித்தபின் அதுசார்ந்த படைப்புகளை நேசன் தேர்ந்தெடுத்து அனுப்புவார். அவற்றை வாசித்து அதிலிருந்து தேவையான பகுதிகளைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் படைப்பாளிகள் யார் யாரென்பதையும் மொழிபெயர்ப்புகளை யாரிடம் கொடுத்து வாங்கலாம் என்பதையும் முடிவு செய்வோம். ஒவ்வொரு இதழுக்கும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். இலக்கிய வாசகராக நிறைய எழுத்தாளர்களிடம் அறிமுகம் இருந்ததால் இதழுக்கு படைப்புகள் வாங்க அது பெரிதும் உதவியது. வடிவமைப்பில் எங்களுடைய தோழி தாரணிபிரியா மிகவும் உதவியாயிருந்தார். நான்காம் இதழை நண்பர் வெய்யில் வடிவமைத்தார். இதழை 300 பிரதிகள் அச்சிட ஆகும் பொருளாதாரச் செலவுகளை நேசனே ஏற்றார். அவற்றில் நூறு பிரதிகள் வரை இதழில் பங்கேற்றவர்களுக்கும் முன்னோடி எழுத்தாளர்களுக்கும் அனுப்பி வைப்போம். நூறு பிரதிகள் விற்பனைக்காகக் கடையில் கொடுப்போம். மீதி இருக்கும் புத்தகங்களையும் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களிடம் கொடுத்து விடுவோம். இதழைத் தரமாகக் கொண்டு வந்தாலும் அவற்றை எல்லோரிடமும் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க எங்களுக்குத் தெரியவில்லை. என்னிடம் இப்போது நான்கு இதழ்களிலும் ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. நேசனிடம் அதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. வலசை எங்களைப் பொறுத்தமட்டில் ஒரு அற்புதமான கனவு. அதில் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ்ந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வலசை வெளியான காலகட்டத்தில் அது நிறைய பேருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இணையத்தில் இருந்து வந்தவர்களால் சிற்றிதழ் சூழலில் என்ன பெரிதாக செய்து விட முடியும் என்று நேரடியாக எங்களிடமே சொன்னார்கள். இதழைத் தரமாகக் கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்று நம்பினோம். ஆசிரியர்கள் என்று குறிப்பிடாமல் வலசையின் முதல் வாசகர்கள் என்று எங்களுடைய பெயரைப் போட்டதுகூட விமர்சனத்துக்கு உள்ளானது. எல்லாவற்றையும் மீறி வலசை அதற்கான நோக்கத்தில் தெளிவாக இருந்தது என்றே நம்புகிறேன். தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத படைப்பாளிகளைத் தேடி எடுத்து மொழிபெயர்த்தோம். இஸ்மாயில் கதாரேயின் கவிதைகளை வலசையின் முதல் இதழில் (ஆகஸ்டு 2011) சபரிநாதன் மொழிபெயர்த்தார். ஒவ்வொரு இதழுமே தனித்துவமான சில படைப்புகளைக் கொண்டிருந்தன என்று தைரியமாகச் சொல்வேன். இன்றும் எங்கிருந்தாவது யாராவது அழைத்து குழந்தைகளின் அகவுலகம் பற்றிய இதழையோ மூன்றாம் பாலினம் பற்றிய இதழையோ குறித்து உரையாடும்போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. காலத்தைப் போல சிறந்த நீதிபதி யாருமில்லை என்பதும் தெளிவாகப் புரிகிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளராக நீங்கள் தமிழுக்கு கொண்டு வரும் கதைகளை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்? ஏனெனில் ஒரு புதிய எழுத்தாளனை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் போது அவனுடைய பலவீனமான கதையை வாசிக்க நேர்ந்தால் அவனைத் தேடிச் சென்று வாசிப்பது தடைபடும் ஆபத்து இருக்கிறதே.

மொழிபெயர்ப்பில் எனக்கு நான் வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல்கள் இரண்டு மட்டுமே. 1) தமிழில் அதிகம் அறியப்படாத அல்லது வெறும் பெயராக மட்டுமே அறிமுகம் ஆகியிருக்கக்கூடிய படைப்பாளிகளையே நான் தேர்வு செய்கிறேன். போர்ஹேஸ், மார்க்குவெஸ், கால்வினோ போன்ற மாஸ்டர்கள் அதிகம் மற்றவர்களால் மொழிபெயர்க்கப்படுவதால் எனக்குள் அப்படியொரு கடப்பாடு. உதாரணத்துக்கு, டோனி மாரிசனை எடுத்துக் கொள்வோம். அவரொரு நாவலாசிரியராகத் தமிழில் நன்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால் தன் வாழ்நாளில் அவர் ஒரேயொரு சிறுகதை மட்டுமே எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்தக்கதையைத் தேடியெடுத்து வசனகவிதை என்ற தலைப்பில் நான் மொழிபெயர்த்தேன். 2) கதையின் சொல்முறையிலோ வடிவத்திலோ அல்லது உள்ளடக்கத்திலோ ஏதோவொரு விதத்தில் புதிதாக இருக்கும் கதைகளை மொழிபெயர்க்கிறேன்.

ஒரே ஒரு கதையை வாசித்து விட்டு யாரையேனும் மொழிபெயர்த்தால் நீங்கள் சொல்லக்கூடிய சிக்கல் நேரலாம். ஆனால் நிறைய எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளரை தமிழில் அறிமுகம் செய்யும்போது இயன்றமட்டும் அவருடைய மொத்தத் தொகுப்பையும் வாசித்து அதில் நெருக்கமாக உணரும் கதையைத்தான் தெரிவு செய்கிறேன். தவிரவும், இன்றைக்கு இருக்கக்கூடிய இணைய வசதிகளின் மூலம் ஒவ்வொரு கதையைப் பற்றிய அறிமுகமும் விமர்சனங்களும் எளிதில் கிடைப்பதால் மொழிபெயர்ப்பாளரின் பணி சற்று இலகுவாகிறது. நல்ல கதைகள் என்று குறிப்பிட்டுள்ள கதைகளை எல்லாம் தேர்ந்தெடுத்து வாசித்து அவற்றில் நமக்கான கதையைத் தேர்வு செய்வதும் எளிதாகிறது. என்னளவில், நான் மொழிபெயர்த்த கதைகளில் எனக்கு அத்தனை நிறைவு தராத பணி என்று சொன்னால், எருது தொகுப்பில் இடம்பெற்ற எட்கெர் கீரத்தின் டாட் என்னும் கதையைச் சொல்வேன். அதை மொழிபெயர்த்த பிறகே அதைக் காட்டிலும் நல்ல கதைகள் எனச் சொல்லும்படியான கீரத்தின் கதைகள் கிடைத்தன. அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு இப்போது இன்னும் கவனமாயிருக்கிறேன்.

இன்றைய தமிழ் சூழலில் மொழியாக்கத்தின் தேவை என்ன? நேரடியாக ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் பெருகியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி தமிழ் வாசிப்பே அருகிவிடவும் கூடும். தன்னளவில் நீங்கள் ஓர் புனைவெழுத்தாளன் எனும்போது அதற்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் உழைப்பும் நியாயம் எனப் படுகிறதா?

மீட்சி வெளியிட்ட லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், காம்யூவின் அந்நியன் அல்லது ப்ரெவரின் சொற்களைப் போல ஒரு காலகட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் மொழிபெயர்ப்புகள் இன்றைய சூழலில் சாத்தியமா எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது சிதைவுகளின் காலம். நம்பிக்கைகள் தொலைந்து வேறொன்றாக உருமாறியுள்ளன. ஆனால் நிச்சயம் மொழிபெயர்ப்புகளுக்கான தேவைகளும் இருக்கவே செய்கின்றன. தற்காலப் புனைவுளின் போக்கை ஒப்பு நோக்கவும் நமக்கான பாதையைக் கண்டடையவும் மொழிபெயர்ப்புகள் கண்டிப்பாக உதவும் என்றே நம்புகிறேன். தமிழில் வாசிப்பது அரிதாகி நேரடியாக ஆங்கிலத்தில் வாசிப்பது அதிகரித்திருப்பதாகச் சொல்வதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. மொழிபெயர்ப்புகளை அதிகம் வெளியிடும் எதிர் வெளியீடு பதிப்பகத்தோடு இணைந்து நான் செயலாற்றி வருகிறேன். மொழிபெயர்ப்புகளுக்கு மக்களிடையே இருக்கக்கூடிய வரவேற்பு அதிகரித்திருப்பதாகவே உணருகிறேன், மிகக்குறிப்பாக அபுனைவுகளில்.

தமிழின் மிக முக்கியமான கவிஞர் யவனிகா ஸ்ரீராம் மற்ற எல்லாரையும் விட தான் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிகம் கடமைப்பட்டிருப்பதாகச் சொல்வார். இல்லையெனில் ப்ரெவரும் ஃப்ரெட்டும் தனக்கு ஒருபோதும் தெரியாதவர்களாகவே இருந்திருப்பார்கள் என்று அவர் சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். எங்கோ ஒருவர் வாசித்து அவருக்கு மட்டுமே பயன்பட்டால் கூட மொழிபெயர்ப்பின் நோக்கம் நிறைவேறியதாகத்தானே அர்த்தம்? ஆக மொழிபெயர்ப்புக்கு நான் செலவிடும் நேரம் எனக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும்தான் தருகிறது. ஒரு புனைவெழுத்தாளனாக, வருடத்துக்கு அதிகம் போனால் இரண்டு கதைகள் மட்டும் எழுதக்கூடிய ஒருவனுக்கு, மொழியுடனான தொடர்பு அறுந்து போகாமலிருக்க இந்த மொழிபெயர்ப்புகள் உதவவே செய்கின்றன.

உங்கள் புனைவுகளின் மீது மொழியாக்கத்தின் தாக்கம் என்னவாக இருக்கிறது?

முடிந்தமட்டும் இதுபோன்ற சமயங்களில் இருவேறு மனிதர்களாகவே இருக்க முயற்சிக்கிறேன். என்னுடைய கதைகளை எழுதும்போது எனது வேர்கள் இந்த மண்ணில் ஆழப் புதைந்திருக்கின்றன, சூழல் என்னைச் சுற்றியதாக மட்டுமே இருக்கிறது. ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளனாக நான் கூடுவிட்டுக்கூடு தாவ வேண்டியிருக்கிறது. அறிந்திராத நிலத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பேசும்போது இன்னும் கவனமாயிருக்க வேண்டியவனாகிறேன். சொல்லப்போனால், இந்தக் கேள்வியைச் சற்று மாற்றி கேட்டிருந்தால் சரியாயிருக்கும். ஒரு புனைவெழுத்தாளனாக மொழிபெயர்ப்புகளில் என்னுடைய குரல் தலைதூக்கி விடாமல் இருக்கவே நான் அதிகம் சிரமப்படுகிறேன். ஆடியின் பிம்பம் பிசகி விடாமல் தருவது மிக முக்கியமான கடமையாகிப் போகிறது. மற்றபடி, கதைகளை எழுதும்போது, சொல்முறையிலும் வடிவத்திலும் சில பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்க்க வாசிப்பும் மொழிபெயர்ப்பும் உதவத்தான் செய்கின்றன. Abstract தன்மையிலான கதைகளை எழுதும் என் பெருவிருப்பத்தை பிரெஞ்சு எழுத்தாளரான அலென் ராப் கிரியேவிடமிருந்தே பெற்றேன் எனச் சொல்லலாம்.

‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ பற்றிய உங்கள் முன்னுரை முக்கியமானதாக உணர்கிறேன். மொழிபெயர்க்க நீங்கள் வெவ்வேறு மொழியாக்கங்களை வாசித்து, ஒப்புநோக்குவது உங்கள் தீவிரத்தை காட்டுகிறது. ஒரு கவிதை நூலை மொழியாக்கம் செய்ததன் சவால் என்ன? ஏன் இந்நூலை தேர்ந்தீர்கள்? ஆத்மாநாம் விருது கிடைத்திருக்கும் இந்நூலை மொழியாக்கம் செய்த அனுபவத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

ரைம்போவை நான் மொழிபெயர்க்கக் காரணம் பிரம்மராஜனே. கோவையில் ஒரு நிகழ்வுக்காக வந்திருந்தவருடன் அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். என்னுடைய சிறுகதைகளை அவர் வாசித்திருந்தார். அதைப் பற்றிய உரையாடலில் கதைகளில் புலப்பட்ட மனித வெறுப்பைப் பற்றிப் பேசும்போது அவர் ரைம்போவைக் குறிப்பிட்டார். நரகத்தில் ஒரு பருவகாலத்தின் கவித்துவத்தை எடுத்துச் சொல்லி நிச்சயம் அதை வாசித்துப் பாருங்கள் என்றும் சொன்னார். வெறும் பெயராக மட்டுமே நான் அறிந்திருந்த ஒரு மகத்தான கவிஞனின் படைப்பை எனக்கு அறிமுகப்படுத்தி அதை மொழிபெயர்க்கவும் சொன்ன பிரம்மராஜனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலத்தில் நான் வாசித்த ரைம்போவைப் பற்றிய கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டே நரகத்தின் நுழைவாயில் என்கிற அந்த முன்னுரைக் கட்டுரையை எழுதினேன். அவருடைய எழுத்துகளின் வழியே நான் ரைம்போவைப் பற்றி எனக்குள் உருவாக்கிக் கொண்ட சித்திரமும் அதற்கு உதவியது. நரகத்தில் ஒரு பருவகாலம் பற்றிப் பேசும் இந்த சமயத்தில் முக்கியமான இரண்டு சங்கதிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) Arthur Rimbaud என்பதன் சரியான உச்சரிப்பு ஆர்தர் ரேம்போ என்பதே. ஆனால் வேறொரு திரைப்பட நாயகனை நினைவூட்டியதால் அந்தப் பெயரை நான் பயன்படுத்த விரும்பவில்லை. தமிழ் சிற்றிதழ் சூழலில் பலகாலமாக ரைம்போ என்றே குறிப்பிட்டு வந்த காரணத்தால் அதை அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டேன். 2) நரகத்தில் ஒரு பருவம் என்கிற தலைப்பில் நாகார்ஜூனன் ரைம்போவின் சில பகுதிகளை மொழிபெயர்த்து அவருடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதிலிருந்து மாறுபட வேண்டுமென்பதற்காகவே தலைப்பில் பருவகாலம் என்று குறிப்பிட்டேன். ஆனால் பாண்டிச்சேரியில் இருந்த அழைத்த பேராசிரியர் கண்ணன் பருவகாலம் என்பது நம் நிலத்துக்கு மட்டுமே உரியது என்பதைச் சுட்டினார். தலைப்பை மாற்றலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தோடு நண்பன் திருச்செந்தாழையிடம் பேசினேன். தலைப்பின் கவித்துவத்தை பருவகாலம் என்கிற வார்த்தையே தாங்கிப் பிடிக்கிறது என்றான் செந்தாழை. ஆக அறிந்தேதான் இந்தத் தவறுகளை நான் அனுமதித்தேன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

ரைம்போவின் மொழி மிக இறுக்கமானதாய் இருப்பதோடு பல்வேறு புரிதல்களுக்கான சாத்தியங்களையும் கொண்டது என்பதை வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை வாசித்ததன் மூலம் உணர்ந்தேன். ஒரே வரி மூன்று வடிவங்களில் மூன்று அர்த்தப்பாடுகளைத் தந்ததும் குழப்பியது. ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற சிதறுண்ட ஒரு பிரதியை பின்தொடர்ந்து அதன் நிழலையும் சரியாக மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம். ஆக நான் என் உள்ளுணர்வை நம்பியே இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன். மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஒப்புநோக்கி ரைம்போவின் வரிகளுக்கு நெருக்கமென நான் உணர்ந்த வரிகளை மொழிபெயர்த்தேன். உரைநடைக் கவிதைகள் என வரும்போது அவற்றின் கவித்துவத்தை இழந்து வெற்று உரைநடை வரிகளாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தேன். வார்த்தைகளைப் புதிதாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. நிறைய லத்தீன் மொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார் ரைம்போ. அவற்றின் அர்த்தம் தேடியெடுத்து வரிகளில் சரியாகப் பொருத்துவதும் அவசியமாக இருந்தது. வலசையில் சில கவிதை மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்ததும் ரைம்போவை மொழிபெயர்க்க உதவியது என்று சொல்லலாம். இதற்கு முன்னால் ரைம்போவை மொழிபெயர்த்த நாகார்ஜூனன் சங்ககாலக் கவிதைகளின் தொடர்ச்சியாக அவரைப் பார்த்தார். மொழிபெயர்ப்பிலும் அந்தத் தொனி இருந்தது. அந்த மொழியிலிருந்து வேறுபட்டு ரைம்போவை எந்த மாற்றமுமின்றி நான் வாசித்துணர்ந்த மொழியில் கொண்டு வருவதே ஆகப்பெரிய சவாலாகவும் இருந்ததென்பேன்.

சரியான ஒரு படைப்புக்கான அங்கீகாரம் என்கிற வகையில் ஆத்மாநாம் விருது ரைம்போவை மொழிபெயர்த்ததற்காக கிடைத்ததில் மகிழ்ச்சியே. அதற்கு நான் என் பதிப்பாளர் எதிர் வெளியீடு அனுஷுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பிடித்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவை எந்த வடிவத்திலிருந்தாலும் மொழிபெயர்க்க எனக்கிருக்கும் சுதந்திரம் அவரால் கிட்டியதே.

நீங்கள் கவிதை எழுதுவதுண்டா?

நான் கவிஞனில்லை என்பதை நன்கறிவேன். ஆனால் கவிதைகளை வாசிப்பது பிடிக்கும். அவை எனக்குள் வேறொரு மனநிலையை சிருஷ்டிக்கின்றன. ஒரு நல்ல தொகுப்பை வாசித்து முடித்த பிறகு அவற்றால் உண்டான இடைவெளிகளை எழுதி நிறைக்கும் முயற்சியாய் சில கவிதைகளை எழுதிப் பார்ப்பேன். அல்லது சட்டென்று தோன்றக்கூடிய படிமம் ஒன்றை வைத்து எழுதிப் பார்ப்பதும் உண்டு. கொம்பு முதல் இதழுக்கு ஒரு கவிதையை அனுப்பி இருந்தேன். வெய்யில் அதில் சில மாற்றங்களைச் செய்து ஒலிக்கிளர்ச்சி என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். கவிஞர் ஸ்ரீசங்கரை முதன்முதலில் சந்தித்தபோது அந்தக் கவிதையை குறிப்பிட்டு நீதான் எழுதியதா என்றார். ஆமாம் என்றேன். இனிமேல் கவிதை எழுதாதே என்று சொல்லி விட்டுப் போனார். அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பதால் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

நாவல் எழுதும் யோசனை உண்டா?

நாவல் எழுத வேண்டும் என்கிற ஆவல் நிச்சயம் உண்டு. ஆனால் அதற்கான பக்குவம் இன்னும் எனக்குள் கூடி வரவில்லை என்றே நினைக்கிறேன். நானும் எழுதினேன் என்றில்லாமல் வடிவரீதியாக சற்றுப் புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்கிற ஆசை. தமிழில் இதுவரை பொறியியல் கல்லூரி வாழ்க்கையை முழுதாகப் பேசிய ஒரு நாவலென்று ஏதும் வந்ததாகத் தெரியவில்லை, அதையும் எழுதுவேன் என்றே எண்ணுகிறேன்.

உலக சினிமா பரிச்சயம் மற்றும் ஆதர்சம் பற்றி? அவை உங்கள் எழுத்தின் மீது எந்த அளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கிறது?

சாரு நிவேதிதாவின் சினிமா – அலைந்து திரிபவனின் அழகியல் என்கிற நூலின் வழியாக அறிமுகமான அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கியே என் உலக சினிமா ஆதர்ஷம். காமிக்ஸிலும் அவர் வித்தகர் என்பது என்னுடைய ஈர்ப்புக்கு மற்றொரு காரணம். அவருடைய எல் டோபோவும் ஹோலி மௌண்டைனும் நான் மீண்டும் மீண்டும் பார்க்கும் படங்கள். எனவேதான் மீயதார்த்தப் புனைவாக நான் எழுதிப் பார்த்த சிலுவையின் ஏழு வார்த்தைகள் கதையை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். தவிர, ஜி.முருகனின் ஏழு காவியங்களை வாசித்து விட்டு தர்க்கோவெஸ்கியின் படங்களைத் தேடிப் பார்த்திருக்கிறேன். கிம்-கி-டுக்கிடம் வெளிப்படும் வன்முறையின் அழகியல் எனக்கு நெருக்கமான ஒன்று. சமீபமாக அரனோவெஸ்கியின் (பை, ஃபௌண்டைன்) படைப்புகளை அப்படி மனதுக்கு நெருக்கமாக உணருகிறேன். அதிர்ச்சி மதீப்பீடுகளைத் தாண்டி இவர்களின் திரைப்படங்கள் உண்டாக்கும் மன அவசமும் சுயவிசாரணையும் என்னை நிறையவே தொந்தரவு செய்யக்கூடியவை. அப்படியான படைப்புகளையே நான் விரும்பிப் பார்க்கிறேன். ஒரு சில இடங்களில், வெகு குறைவாக என்றாலும், இந்தத் திரைப்படங்களின் தாக்கம் என் எழுத்தில் இருப்பதாகவே உணருகிறேன்.

பயணம், இசை, ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உண்டா?

எழுத்தைத் தவிர்த்து என்னை உயிர்ப்போடு வைத்திருப்பது இசையே. ஹிந்தியில் நிறைய விரும்பிக் கேட்பேன். ரய் (Rai) இசையும் பிடிக்கும். எழுதவோ வாசிக்கவோ செய்யாத சமயங்களில் இசையோடுதான் இருக்கிறேன். பயணம் செய்வது பிடிக்குமென்றாலும் வலிந்து போவதில் உடன்பாடில்லை. மாறாக தனிமையிலிருப்பது ரொம்பப் பிடிக்கும். தேசாந்திரியை வாசித்து விட்டு ஒருமுறை இலக்கில்லாமல் பாண்டிச்சேரி, வடலூர், தஞ்சை என்றெல்லாம் சுற்றினேன். அது மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான பயண அனுபவம். ஆனால் என் பெரும்பாலான கதைகளில் பயணமும் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. இயல்பில் என்னால் நினைத்தவுடம் போக முடியாத பயணங்களைத்தான் எழுதிப் பார்க்கிறேனோ என்னமோ? ஓவியங்களில் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. எனக்கு மிகப்பிடித்த மற்றொரு சங்கதி – கால்பந்து. ஆர்செனல் அணியின் தீவிர ரசிகன் நான்.

உங்கள் சிறுகதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்க முனைகின்றன என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி

அதிர்ச்சி மதிப்பீடு எனும் வார்த்தைக்கு இன்னும் அர்த்தமிப்பதாக நம்புகிறீர்களா? புனைவுகளை விட வினோதமான சங்கதிகளை நாளிதழ்களில் தினந்தோறும் வாசித்துக் கடக்கும் வாழ்க்கையில் வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டும் வைத்து ஒருவர் கதை சொல்லி விட முடியாது என்றே எண்ணுகிறேன். ரயிலில் பாயும் குழந்தையும் பெருத்த மார்புகளைக் கொண்ட ஆணும் மகளின் வயதொத்தவளைப் புணர்கிறவனும் வாசிப்பவர்களுக்கு வெற்றுக்காட்சிகளாக மட்டுமே கடந்து போவார்களெனில் நான் அதை எழுத வேண்டிய அவசியமில்லை. உடலைத் தாண்டிய வெறுமையையே நான் மீண்டும் மீண்டும்  எழுதுகிறேன். இந்தக் கதைகளில் உடல் வெறும் உடலாக மட்டும் இருப்பதில்லை. இவையெல்லாம் கண்முன்னே தினம் தினம் நிகழும் வாழ்வின் அபத்தத்தையும் செய்வதறியாமல் மூச்சு முட்டி நிற்கும் மனதின் பதற்றத்தையுமே பேச விழைகிறேன். ஒரு இளம் எழுத்தாளர் சில காலத்துக்கு முன் என் கதைகளை வாசித்து விட்டு அவை நன்றாயிருப்பதாகச் சொன்னார். ஆனால் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சமீபத்தில் ஒரு குறுந்தகவலை அனுப்பி இருந்தார். மறுவாசிப்பில் வன்முறையைத் தவிர இந்தக் கதைகளில் வேறொன்றுமில்லை என்று உணர்ந்ததாகச் சொன்னார். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. என் கதைகளை நான் நியாயப்படுத்த விரும்புவதில்லை. எழுதி முடித்தவுடன் அவற்றைக் கைவிடவே ஆசைப்படுகிறேன். என்றாலும், குறைந்தபட்சம் அவை விசாரணைக்குட்படுத்தும் சங்கதிகளைப் பொருட்படுத்தாமல், அவற்றைக் கடந்து போவதற்கான எளிய பாதையைத் தேர்வார்களெனில் நான் ஏதும் செய்ய முடியாது.  நவரசங்களில் அருவருப்பும் ஒன்றுதானே? ஜி.நாகராஜன் சொன்னதைத்தான் நானும் நினைத்துக் கொள்கிறேன்.

நவீன தனி மனிதனுக்கு தொன்மங்கள், நாட்டாரியல்போன்றவை தேவையில்லை என்று எண்ணுகிறீர்களா? அல்லது அதிலிருந்து துண்டித்து கொண்டவன் தான் நவீன மனிதன் என்பது உங்கள் பார்வையா? அரிதாகவே உங்கள் கதைகளில் தொன்மங்கள் கையாளப்படுகின்றன. அப்படி கையாளப்படும்போதும் அவை தலைகீழாக்கம் பெறுகின்றன.

நீ ஒரு அவாண்ட்-கார்டே ஆள் என்று போகன் சங்கர் அடிக்கடி என்னைக் கேலி செய்வதுண்டு. செவ்வியல் படைப்புகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வமிருப்பதில்லை. அவற்றை சரியாக உள்வாங்கிக் கொள்ளவியலாத என்னுடைய போதாமையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். முழுக்கவே நவீன் தொழில்நுட்ப ஊடகங்கள் சூழந்திருக்கும் நவீன மனிதனின் வாழ்வில் தொன்மங்களும் நாட்டாரியலும் என்னவாக இருக்கின்றன என்கிற குழப்பம் எனக்கிருப்பது உண்மையே. துண்டித்துக் கொண்டவன் எனச் சொல்லுவதை விட துண்டிக்கப்படுகிறான் என்பதே சரியாக இருக்கக்கூடும். எனவேதான் அறத்தைப் பேசுகிற தொன்மங்களை எடுத்துக் கொண்டு அதற்கு நேரெதிர் நிலையில் தலைகீழாக மாற்றுகிறேன். காட்டிக் கொடுத்தவனை இயேசு கொலை செய்திட, கர்ணன் தன் வாக்கை மீறி அர்ஜூனனைக் கொல்வதோடு தன்னயும் மாய்த்து குந்தியைப் பழிவாங்குகிறான். இவையே இன்றைய சூழலுக்குப் பொருந்தும் என்கிற அறம் பேசும் எதையும் நம்பாத எளிய மனம் என்னுடையது. முழுக்க முழுக்க தொன்மங்களை மட்டும் பேசுகிற ஒரு கதையை எழுத வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. அதற்கான மொழியும் மனநிலையும் வசப்படும் காலத்தில் நிச்சயம் எழுதுவேன்.

நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என்னவென எண்ணுகிறீர்கள்?

காற்றுக்குமிழியைப் போல மனிதனைச் சுற்றிச்சுழலும் அவநம்பிக்கைதான் நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என எண்ணுகிறேன். உறவுகள் மற்றும் நம்பிக்கைகளின் இடத்தை ஊதிப் பெருக்கப்பட்ட ஊடக பிம்பங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. என்றாவது ஒரு நாள் எதிர்பாராத தருணத்தில் அந்தக்குமிழி வெடித்துச் சிதறும்போது அவன் மொத்தமாகத் தன்னைத் தொலைக்கிறான். அதிலிருந்து ஒருபோதும் மீள முடியாதவனாக இருக்கிறான்.

உங்கள் எழுத்து அரசியலுடன் தொடர்பற்று உள்ளது என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி..

காலம் காலமாகச் சொல்லப்படும் விமர்சனம்தான். தனி மனிதனின் உலகை எழுதும்போதே அவனை அந்த இடத்துக்கு நகர்த்திச் செல்லும் சமூகத்தைப் பற்றிய விமர்சனம் மறைமுகமாக வைக்கப்படுகிறதுதானே? அவனுடைய சிக்கல் என்பது அவனுடைய பிரச்சினைகள் மட்டும்தானா? பிரச்சாரம் செய்யும் கதைகளை என்னால் எழுத முடியாது. எனது நம்பிக்கைகளின் பாற்பட்டே நான் இயங்குகிறேன். அரசியலற்றிருப்பதின் அரசியல் என்பதை கோணங்கியிடம் இருந்தே கற்றேன். அதை இன்றளவும் நம்புகிறேன்.

மர நிறப் பட்டாம்பூச்சிக்கு என்னவிதமான விமர்சனங்கள், கவனம் கிட்டின

தொகுப்பை வாசித்தவர்கள் அனைவருமே அந்தக் கதைகளை எளிதில் கடந்து போக முடியவில்லை என்பதையும் ஏதோ ஒரு இடத்தில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்ததாகவும் சொன்னார்கள். ஒருவகையில் என் கதைகளின் நோக்கம் அதுதான் என்னும்போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். லக்ஷ்மி சரவணகுமாரும் போகனும் தொகுப்பைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளை எழுதித் தந்தார்கள். தொகுப்பை வெளியிட்டுப் பேசிய அர்ஷியா கதைகளில் காணக்கிடைத்த புதிய குரலை சிலாகித்தார். முதல் விமர்சனத்தை எழுதிய வாமு கோமுவுக்கு கதைகளில் இடம்பெற்றிருந்த கனவுகள் ரொம்பப் பிடித்திருந்தன. வெளியான இரண்டு மாதத்தில் வாசகசாலையின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது கிடைத்தது. அந்த சமயத்தில் ராஜ சுந்தரராஜன் ஒரு விமர்சனம் எழுதினார். உலகத்தரத்திலான கதைகள் என்கிற அவருடைய வார்த்தை மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. மதுரையில் புனைவு செந்தி ஏற்பாடு செய்த கூட்டத்தில் கணேசகுமாரன் ஒரு கட்டுரை வாசித்தார். சிறிது காலம் கழித்து நெல்லையில் தமுஎகச சார்பில் நடந்த கூட்டத்தில் தோழர்கள் மணிமாறனும் உதயசங்கரும் தொகுப்பு குறித்துப் பேசினார்கள். இவை இரண்டைத் தவிர வேறு எந்த கூட்டமும் நடைபெறவில்லை. புத்தகம் வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட முப்பது பேருக்கு தொகுப்பை அனுப்பி வைத்தேன். முகநூலில் ஒரு சில நண்பர்கள் குறிப்புகளாக எழுதினார்கள் என்பதைத் தாண்டி பெரிய சலசலப்பு ஏதும் ஏற்படவில்லை. தொகுப்பு இன்னும் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கலாமோ என வருத்தமாக இருக்கும்போதெல்லாம் ராஜ சுந்தரராஜன் எழுதிய விமர்சனத்தை எடுத்து வாசிப்பேன். சரியாகச் செய்திருக்கிறோமா என்பதை விடத் தவறாக ஏதும் செய்து விடவில்லை என்பதை எனக்குள் உறுதி செய்து கொள்ளும் வழிமுறையாக அதைப் பின்பற்றினேன். ஆத்மாநாம் விருது இப்போது வேறொரு வகையில் நண்பர்களிடம் என்னுடைய சிறுகதைகளையும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. சொல்வனத்தில் கிரிதரன் எழுதிய கட்டுரையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாவற்றையும் விட மகிழ்ச்சியைத் தந்த வேறொரு சங்கதியும் உண்டு. திருச்சியைச் சேர்ந்த வாசக நண்பரொருவர் தொகுப்பை வாசித்து விட்டு கைப்பட எழுதியனுப்பிய இருபது பக்க கடிதம் என்னளவில் ஒரு பொக்கிஷம்.

சிறுகதைகளை எழுத எடுத்துகொள்ளும் நேரம் எவ்வளவு? திருத்தி எழுதும் வழக்கம் உண்டா?

சிறுகதைகளை நான் மனதுக்குள்தான் முதலில் எழுதிப் பார்க்கிறேன். கதைக்கான கரு என்னுள் தோன்றும் சமயத்தில் அதை அப்படியே விட்டு விடுவேன். பிறகு அந்தக்கதைக்கான இன்னபிற சங்கதிகள் மனதுக்குள் சேகரமாகிக் கொண்டே இருக்கும். இதுதான் வடிவம் என்பது எனக்குள் ஒரு மாதிரி உருவாகி நிற்கும் தருணத்தில் வாய் வார்த்தையாக கதையை ந.ஜயபாஸ்கரனிடம் சொல்லிப் பார்ப்பேன். ஒரு முறை கூட அந்தத் தங்கமான மனிதர் நான் சொல்லும் எதையும் நன்றாகயில்லை என்று சொன்னதே கிடையாது. அந்த வடிவத்தில் எனக்கு திருப்தி என்றான மறுகணம் எழுத உட்காருவேன். என்னுடைய கதைகள் எல்லாமே அநேகமாக ஒரு நாள் இரவுக்குள் எழுதப்பட்டவைதான். கணிணியில் நேரடியாக எழுதும் பழக்கம் கொண்டவன் நான். முழுமூச்சாக எழுதி முடித்தவுடன் இரண்டு பேருக்கு அனுப்புவேன். அவர்களில் ஒருவர் போகன், மற்றவர் ஏற்கனவே சொன்னதுபோல ந.ஜயபாஸ்கரன். அவர்கள் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்தபிறகே கதைகளை பிரசுரிக்கத் தருவேன்.

எழுத்து சார்ந்து ஏதேனும் செண்டிமெண்ட்ஸ் உண்டா, இடம், கணினி, காலமென

அது மாதிரி ஏதும் கிடையாது. ஆனால் எழுதும் காலம் இரவாயிருந்தால் சற்று ஆசுவாசமாக இருக்கும்.

உலக இலக்கியங்களை வாசிப்பவர் எனும் வகையில், சமகால தமிழ் இலக்கிய சூழலின் நிலை எத்தகையதாக உள்ளது, அதன் செல்திசை என்னவாக இருக்க வேண்டும், அதன் சிக்கல்கள் என்ன?

நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், என்றாலும் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்தான். சமீபத்தில் சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தின் போது ஜி.முருகனோடு வெகுநேரம் புனைவுகள் குறித்து உரையாட முடிந்தது. எத்தனை பேசினாலும் இறுதியில் நம் புனைவுகள் யதார்த்தத்தளத்தை விட்டு ஏன் வெளியேற மறுக்கின்றன என்கிற முக்கியமான கேள்வியை எழுப்பினார். மிகுபுனைவுகளிலும் வடிவங்களிலும் நாம் வெகு குறைவாகவே எழுதிப் பார்த்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதற்கான அடிப்படைக் காரணமாக உணர்வுகளுக்குப் பழக்கப்பட்டுப்போன தமிழ் மனதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகுந்த கவித்துவமான சுழல் வரிகளின் வழியாகக் கோணங்கியும் தன் பால்யத்தையும் தொலைந்து போன காலத்தையும்தான் (நாஸ்டால்ஜியா) பேசுகிறார் எனும்போது நம்மால் அதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றிலும் இழந்த வாழ்க்கையையும் அதன் மென்னுணர்வையும் தேடும் மனம். அதிலிருந்து விலகி புதிய நிலங்களில் பாதைகளில் பயணிக்கும்போது தமிழ்ச் சிறுகதைகள் இன்னுமதிக உயரத்தை எட்டக்கூடும். பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், சிவசங்கர் எஸ்ஜே போன்றவர்கள் இன்று அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது சற்று ஆறுதலான சங்கதி.

நவீன தமிழ் எழுத்தாளனின் சவால்கள் என எதைச் சொல்வீர்கள்?

நவீன தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கக்கூடியவை இரண்டு சவால்கள். முதலில், அவன் எதை எழுதுவது என்பது. எண்பதாண்டு காலம் பல ராட்சதர்கள் நடந்துபோன பாதையில் அவர்களனைவரின் எழுதிச்சென்ற பாரத்தையும் தாங்கிக்கொண்டு நடக்க வேண்டியவனாகிறான். அவர்களை எல்லாம் தாண்டி புதிதாக எதைச் சொல்கிறான் என்பதும் அதனை எத்தனை துல்லியமாகச் சொல்ல முடிகிறது என்பதும்தான் அவன் முன்னாலிருக்கும் ஆகப்பெரிய சவால். இரண்டாவதாக, இன்று உருவாகி இருக்கக்கூடிய வாசிப்புச்சூழல். மிகுந்த வருத்தத்தோடுதான் இதைச் சொல்கிறேன், வாசிப்பு ஒருவகை மோஸ்தராகிப்போன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். முன்னெப்போதையும் விட கூட்டங்கள் அதிகமாக நடத்தப்படுகின்றன. நிறைய வாசிக்கிறார்கள். ஆனால் அவற்றுள் தரமானவற்றைத் தேடிக் கண்டடையும் வாசகர்கள் உண்மையில் எத்தனை பேர்? தேடல் என்பது அரிதாகி விட்ட சூழலில் அமர்ந்திருக்கும் இடத்தில் கிடைப்பதை வாசித்து விட்டு பெரிதாகப் பேசும் மக்களுக்கிடையேதான் ஒருவன் இன்னும் தீவிரமாக எழுத வேண்டியிருக்கிறது.

இறுதியாக எதற்காக எழுதுகிறேன் என்றொரு வினா எழுப்பினால் என்ன சொல்வீர்கள்

எழுத்து எனக்கான போதை. ஒரே போதை.

இருளில் புதையும் நிழல்கள்-  கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா

நரோபா

 

1981ஆம் ஆண்டு பிறந்த கார்த்திகைப் பாண்டியன் மதுரையில் வசித்து தற்போது கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர். தற்கால உலக இலக்கியம் சார்ந்து தேர்ந்த வாசிப்புடையவர். 2015ஆம் ஆண்டு ‘எதிர்’ வெளியீடாக வெளிவந்த அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ பத்து கதைகளையும் லக்ஷ்மி சரவணகுமார் மற்றும் போகன் ஆகியோரின் இரு கட்டுரைகளையும் உள்ளடக்கியது. ‘வலசை’ இதழில் நேசமித்திரனோடு சேர்ந்து முக்கிய பங்காற்றியவர். எஸ்.ராவை தன் ஆதர்சமாக அறிவித்துக் கொண்டவர். தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் தொடர்ந்து இயங்கி வருபவர். அண்மைய காலங்களில் அவருடைய மொழியாக்கங்கள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. ‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ எனும் ஆர்தர் ரைம்போவின் கவிதைத் தொகுப்பை தமிழாக்கம் செய்திருக்கிறார். வெவ்வேறு மொழியாக்கங்களுடன் ஒப்பிட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதே நூலில் அவர் எழுதியிருக்கும் ரைம்போவின் வாழ்க்கைக் குறிப்பும் முக்கியமானது. இத்தொகுதிக்காக 2018ஆம் ஆண்டு ஆத்மாநாம் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கதைகளை வாசித்து முடித்ததும் கார்ர்திகைப் பாண்டியனை என் அகத்திற்கு மிக நெருக்கமான படைப்பாளியாய் உணர்ந்தேன். கார்த்திகைப் பாண்டியனின் கதைமாந்தர்கள் மரணம் எனும் பிலத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுபவர்கள், அதன் இருளைக் கண்டு திகைத்து நிற்பவர்கள், புலப்படும் இருட்பிலத்தின் வாயிலின் நின்றபடி வாழ்வின் பெறுமதியை எண்ணி மருள்பவர்கள், விசையறு பந்தினைப் போல் மரணம் நம் அண்மையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது, அது எந்நேரத்திலும் எவரையும் தீண்டக்கூடும் எனும் பிரக்ஞை உடையவர்கள்.

‘நிழலாட்டம்’ கதையில் கதைசொல்லியின் நான்கு நிழல்கள் பிரிந்து வெவ்வேறு அனுபவத்தை பேசுகின்றன. முதல் நிழல் மிகத் தீவிரமாக காமமும் மரணமும் தன்னை எப்படி அலைக்கழிக்கிறது என்று சொல்கிறது- ‘ஆக என்னுடைய மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நான்தான்’ என்று முடித்த பின் எதிரில் அமர்ந்தவன் நிமிர்ந்து அமர்ந்து ‘ப்ளைன் நானா பட்டர் நானா என்ன சாப்புடுற?’ எனக் கேட்கிறான். இங்கே உன் துக்கங்களுக்கும், துயரங்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் யாதொரு மதிப்பும் இல்லை எனும் உண்மை குளிர்ந்து இறுக்குவதாக இருக்கிறது. கார்த்திகைப் பாண்டியன் புதிய காலத்தின் கதைசொல்லியாக தன்னை நிறுவிக்கொள்வது இத்தகைய தருணங்களின் வழியாகத்தான். போகன் கார்த்திகைப் பாண்டியனின் உள்ளம் ஐரோப்பியனுடையது எனச் சொல்கிறார். நவீன மனிதனின் பொருட்டின்மையை அப்பட்டமாக சூடிக்கொள்கிறார்கள் கார்த்திகைப் பாண்டியனின் மனிதர்கள்.

‘நிழலாட்டம்’ கதையில் சாலையோர காட்சிக்கு சாட்சியாய் நிற்கிறது இரண்டாம் நிழல். கார்த்திகை பாண்டியனின் கதைகளில் கையறு நிலையில் அல்லது செயலின்மையில் உறைந்து அல்லது தனது உறைநிலையை விட்டு மீண்டுவர விரும்பாத வெறும் சாட்சியாக இருப்பவனின் பார்வை பல்வேறு இடங்களில் மீள மீள வருகிறது. ‘நிழலாட்டம்’ மனிதனின் முரண்பட்ட சுயங்களின் பிரதிகளாகின்றன. நிழல்கள் இருளில் தம் இருப்பை கரைத்துக்கொள்பவை. அவ்விருள் அவற்றை காக்கவும் செய்யும். கண் முன் இரயிலில் தாவும் குழந்தையைக் காண்கிறான். ரயில் நிலையத்தில் கொப்புளங்களோடு கால் சூம்பிய பிச்சைக்காரனுக்கு காசு போட எண்ணுகிறான், ஆனால் சில்லறை இல்லை. அவனுடைய இரஞ்சுதலை பொருட்படுத்தாமல் காது கேளாதவனாக கடந்து செல்கிறான் (‘மரநிறப் பட்டாம்பூச்சி’). ரயிலில் இது என்ன இடம் எனக் கேட்கும் குருட்டு பிச்சைக்காரனுக்கு பதில் சொல்லலாமா என்று வாய் திறந்து பின் மவுனித்துவிடுகிறான் கதைசொல்லி. எவரும் பதில் சொல்லாதபோது பிச்சைக்காரன் வசைபாடுகிறான் அப்போதும் அதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். சு.வேணுகோபாலின் ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’ கதையில் பேருந்து பயணத்தின்போது எழுந்து இடம் கொடுக்க கதைசொல்லிக்கு இருக்கும் தயக்கங்களை, பின்னர் கொடுக்காததன் குற்ற உணர்வை எழுதி இருப்பார்.

கார்ர்திகைப் பாண்டியனின் கதை மாந்தர்கள் சந்தர்ப்பவாதிகள். சத்தமில்லாமல் இன்னொரு வண்டியிலிருந்து வண்டி துடைக்கும் துணியை திணித்துக்கொண்டு வருகிறான் (‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’). மாலில் நின்று இப்படியான பெண்களை தன்னால் ஒருபோதும் புணர முடியாது எனும் உணர்வால் வதைக்கப்படுகிறான். ஆனால் இதே கதைசொல்லி முன்னிருக்கையில் பையை மேலே வைக்கத் தடுமாறும் பெண்ணுக்கு உதவச் செல்கிறான். அங்கே அவன் சன்னமான வாய்ப்பைக் காண்கிறான். குற்ற உணர்வையும் மீறி கீழ்மையில் உழல்கிறான். நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் நண்பனின் தங்கையின் பெருத்த மார்பை அவன் கண்கள் தீண்டுகின்றன. பேருந்து பயணத்தில் சிறு பெண் பிள்ளையின் மார்புகள் சிற்றலையென ஏறித்’ தாழ்வதை காண்பதினால் குற்ற உணர்வு கொள்கிற அதேசமயம் காணாமலும் இருக்க முடியவில்லை. தன் செல்போனில் முழுமையாக சார்ஜ் இல்லாதபோதும்கூட பிறர் செவி சாய்க்காத அழகிய பெண்ணின் கோரிக்கைக்கு செவி சாய்த்து கண்ணியமான கனவான் போல விட்டுக்கொடுத்தபின் தத்தளிக்கிறான்.

‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’ கதையில் லிப்ட் கேட்கும் பெரியவரை வண்டியில் ஏற்றிக்கொண்டதும் கதைசொல்லி தனக்குள்ளாக சிந்திக்கிறான். “வண்டியை ஓட்டும்போதும் அவனுக்குள் அலையலையாக கேள்விகள் எழும்பிய வண்ணம் இருந்தன. நான் ஏன் இவருக்கு உதவுகிறேன், எத்தனை பேரிடம் இவர் கேட்டிருப்பார்.. அவர்கள் எல்லாம் மாட்டேன் எனச் சொல்லிவிட்டுப் போகையில் என்னால் ஏன் அது முடியவில்லை? ஏன் என்னைத் துரத்துகிறது? சரி, நான் இவருக்கு உதவுகிறேன், ஆனால் இவரைப் போலிருக்கும் அத்தனை பேருக்கும் உதவும் மனம் கொண்ட மனிதர்கள் இங்கே இருப்பார்களா?”

செயலுக்கு துணியாத அவன் உணர்வு நிலையில் பிணைந்து அவதி கொள்கிறான். ஒருவகையில் மத்திய வர்க்கத்து இருநிலையை பிரதிபலிக்கிறார், எனும் போகனின் பார்வை ஏற்புடையதாக இருக்கிறது. மனிதர்களுக்கு அனுசரணையாக இருக்க விழைவதும், சக மனிதர்களின் மீது முற்றிலும் நம்பிக்கையற்றுப் போனதும் இந்நூற்றாண்டின் மத்திய வர்க்கச் சிக்கல் மட்டுமல்ல. இவை நவீன தனிமனிதனின் மிக முக்கியமான இயல்புகளில் ஒன்று. அதுவும் வர்க்கங்களும், சாதிகளும் தெளிவாகப் புலப்படும் இந்தியா போன்ற தேசத்தில் தன் விழைவுகளை முழுவதுமாக பின்பற்றிச் செல்பவன் குற்றவுணர்வுக்கு உள்ளாகிறான். ஆனால், கார்த்திகைப் பாண்டியனின் கதைமாந்தர்கள் முழுக்க நவீன தனி மனிதர்களா என்றால் இல்லை. இன்னமும் ஒருகாலை மரபில் ஊன்றியவர்களாக இருக்கிறார்கள். ‘கன்னியாகுமரி’ கதையின் ராமநாதன் ஒரு உதாரணம். தயக்கத்தையும் குற்றவுணர்வையும் அவர்களால் முழுமையாக கைவிட இயலவில்லை.

பைத்தியக்காரி திரும்பத் திரும்ப துன்புறுத்தியும்கூட அவள் காலடிக்கே திரும்பத்திரும்ப வருகிறது நாய்க்குட்டி. நாய்க்குட்டியின் முடிவு பைத்தியக்காரிக்கும் பார்வையாளனுக்கும் ஒரேவித கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. நம் விருப்புக்கள் இட்டுச் செல்லும் அழிவை, முரட்டு பிரேமத்தின் பொருளின்மையை ஒரு குறியீடாக விரித்துகொள்ளத்தக்க பகுதி இது. கார்த்திகைப் பாண்டியனை அலைக்கழிக்கும் கேள்வியின் பிரதிநிதியாகவும் இதைக் கொள்ளலாம். இதெல்லாம் ஏன்? தன்னழிவை தேடி விரைவது ஏன்? இக்கேள்விகளுக்கு விடையில்லை. ஒருபோதும் அவை வசப்படப்போவதும் இல்லை. ஆனால் நம் வாழ்வைப் பற்றிய உறுதிப்பாடுகளை சற்றே அசைத்து காலுக்கு கீழே நிலம் நழுவுவதை உணர முடிகிறது. இலக்கியப் பிரதிகள் நமக்கு ஆசுவாசமளிக்கும் எந்த விடையையும் சொல்வதில்லை, அவை நெஞ்சுக் கரிப்பாக, இரவுகளில் உறங்கவிடாத நமைச்சலாக நம்மை தொந்தரவு செய்கின்றன.

‘அந்தர மீன்’ உளவியல் தளத்திலான காதல் கதை. சிறுகதையின் கனவுப் பகுதி ஃபிரான்சிஸ் கிருபாவின் கன்னியை நினைவுபடுத்தியது. எழுத்தாளர் வலுவாக வெளிப்படும் தருணங்கள் என கனவுப் பகுதிகளைச் சொல்வேன். கதையின் பேசுபொருள் வழமையானது, ஆனால் கார்த்திகைப் பாண்டியனின் மொழி மற்றும் கூறுமுறை இக்கதையை மனதிற்கு மிக நெருக்கமானதாக ஆக்குகிறது. தனக்கே தனக்கான நேசத்தைக் கண்டடைந்து அதில் திளைத்திட கனவு கண்டவள் நீரற்ற அந்தர வெளியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். அனோஜன், விஷால், சுரேஷ் பிரதீப் என கார்த்திகைப் பாண்டியனின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளில் விரவிக் கிடக்கும் ‘அன்பிற்கான ஏக்கம்’ என்பது நவீன வாழ்வின் வேகத்தின் மீதான மிரட்சியாக புத்தாயிரம் படைப்பாளிகள் பலரிடம் காணக் கிடைக்கிறது. இத்தொகுதியில் மிகுந்த பரிவுடன் எழுதப்பட்ட கதை என இதைச் சொல்வேன். கவுதம் தன்னுள் ஆழ்ந்தவனாக தன் மீது சொரியப்படும் அன்பை உணராதவனாக இருக்கிறான்.

‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ நான்கு பகுதிகள் கொண்டது. ‘எந்த முடுக்கிலும் வாழ்வின் அபத்தத்தை மனிதன் எதிர்கொள்ளக்கூடும்’ என பொருள்படும் காம்யுவின் இரு வரி ஆங்கில மேற்கோள் மட்டுமேயுள்ளது ஒரு பகுதி. அதற்கு அடுத்து வரும் மூன்று வெவ்வேறு துண்டு நிகழ்வுகளைக் கோர்த்து சிறுகதையாக்குவதும் இந்த மேற்கோளே. இரண்டாம் பகுதியில் அதுவரை நுழைந்திடாத உயர்தர மதுபான அரங்கிற்குள் நுழைபவன் தன்னை அந்நியனாக உணர்கிறான். சரியாகச் சொல்வதாக இருந்தால், வன ஓவியங்களில் இருந்து தப்பித்து இருக்கையின் நிறத்தில் தன்னைப் புதைத்து கொள்ளும் ‘மர நிறப் பட்டாம்பூச்சி’யாக தன்னை உணர்கிறான். போகன் தொகுப்பின் இறுதியில் எழுதியிருக்கும் கட்டுரையில் இந்த படிமத்தைக் கொண்டு அபத்தம் எப்படி ஒரு தரிசனமாக கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் துலங்கி வருகிறது என்று சொல்கிறார். “பட்டாம்பூச்சிகள் பொதுவாக வண்ணம் மிகுந்தவை. கவனத்தை ஈர்க்கவே தங்கள் பொலியும் நிறங்களை அணிந்தவை. அவற்றின் வண்ணம் ஒரு விளம்பரம். ஆனால் மர நிறப் பட்டாம்பூச்சிகளின் பயன்மதிப்பு இங்கே என்ன? அவை வழக்கத்துக்கு மாறாக தங்கள் இருப்பை மறைக்கப் பார்க்கின்றன. இந்தக் கதைகளில் வரும் எல்லோருக்கும் அவர்களது இருப்பு ஒரு பிரச்சினையாக இருக்கிறது.” கலவிக்கு முன்பாகவே சோர்ந்து விடுகிறவனை தற்பால் உறவுக்கு அழைக்கும்போது தவிர்த்து விடுகிறான். பின்னர் அவன் சிக்கி அடிபடும்போது இவனை பழிதீர்க்கும் நோக்கில் சிரிக்கிறான். மரநிறப் பட்டாம்பூச்சியாக எதை மறைக்கிறான் என்றொரு கேள்வியை எழுப்பினால் கதை வேறு சில தளங்களை திறக்கக்கூடும்.

‘கன்னியாகுமரி’ இரு வேறு காலங்களில் நான்கு வெவ்வேறு நாட்களில் நிகழ்கிறது. நரேந்திரன் தன் தேடலைக் கண்டடைகிறான். கன்னி அன்னையென எழுகிறாள். அன்பைத் தவிர அவளிடம் கேட்பதற்கு வேறொன்றுமில்லை அவனுக்கு. அதே கன்னியாகுமரியில் நிகழ்காலத்தில் உயிருக்கு உயிராய் நேசித்த பதின்ம வயது மகளைத் தொலைத்த தந்தை விரக்தியில் தனியாக சுற்றி அலைகிறார். அனைவரும் இணையோடு வந்திருக்க தான் மட்டும் தனியனாக வந்திருந்தது அவரை அழுத்துகிறது. ஏறத்தாழ தொலைந்த மகளுடைய வயதையொத்த அல்லது அவளினும் இளமையான தனித்த கன்னிப் பெண்ணின் துணையை நாடுகிறார். கன்னிமையை போக்கும் கலவிக்கு பின் அவளுடைய பெயரை பகவதி என்று அறிகிறார். கடலுக்குள் குதித்த நரேந்திரன் கரையை அடைகிறான். கன்னியின் சுடர் தொலைவில் தெரிய அவன் தேவியின் மார்பென இருக்கும் பாறையில் கால்பதித்து முத்தமிட்டு மடியில் அமர்ந்து தன்னையிழக்கிறான், நடுத்தர வயதில் இருக்கும் ராமனாதனுக்கோ பகவதி அன்னையாகவில்லை. கடலில் குதித்தவன் ஏறிக் கால் பதிக்க அன்னையின் மார்பும் அவனுக்கில்லை. காமத்தின் இருநிலையை கதை சொல்வதாக புரிந்துகொள்கிறேன். காமம் உன்னதமாகும்போது கன்னி அன்னையாகிறாள். காமம் அப்பட்டமாகும்போது மகளும்கூட வெறும் கன்னியென நுகரப்படுகிறாள்.

‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ அதன் கட்டற்ற கற்பனை மற்றும் ஒழுங்கின்மை காரணமாக இத்தொகுதியில் எனக்கு பிடித்த கதையாகிறது. லத்தீன் அமெரிக்க சாயல் கொண்ட ஊகப் புனைவு. உன்னதமான சிலுவையின் சொற்கள் எல்லாம் தலைகீழாக்கப்படுகின்றன. மரித்தவர்கள் எல்லாம் எவனோ ஒரு மயிருக்காக நான் எதற்கு சாக வேண்டும் எனத் திருப்பிக்கேட்டு விழுமியங்களை கவிழ்க்கிறார்கள். தேவகுமாரன் தன்னைக் காட்டிக் கொடுத்தவனை பழி தீர்க்கிறான் அல்லது அதன் மூலம் மன்னிக்கிறான். கர்ணன் போரில் அர்ஜுனனைக் கொல்கிறான், தானும் மரித்து அவன் அன்னையை வதைக்கிறான். இக்கதை மையமற்ற காட்சிக் கோவை. அதன் இருட் சித்தரிப்புகள் காரணமாக வெகுவாக அலைகழிப்பவையும்கூட. இக்கதை அலெஹாந்த்ரோ ஹொடொரோவெஸ்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் மற்றொரு கதையான ‘Viva Le Muerte அல்லது இணைய மும்மூர்த்திகளும் இலக்கிய பஜனை மடங்களும்’ கதையில் அதன் இயக்குனர் அர்ரிபால் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது. இவர்கள் இருவரையும் இணைப்பது ‘பீதி இயக்கம்’ (Panic movement). இவ்வியக்கத்தைப் பற்றி அறிவது கார்த்திகைப் பாண்டியனின் கதைகளை மதிப்பிட மிக முக்கியமான சாதனமாகும். அதிர்ச்சியளிக்கும் பீதியை சித்தரிப்பதின் ஊடாக அமைதியை, அழகை, அடைய முனைவதை இவ்வியக்கம் லட்சியமாக கொண்டது. சர்ரியலிசத்தன்மை கொண்டது. அழகின், அமைதியின் பொது இலக்கணத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒருவிதமான அகோரித்தன்மை என்று புரிந்துகொண்டேன். கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் வரும் சித்தரிப்புகள் அவசியத்தை மீறி அதிர்ச்சியளிப்பவை என்பதை ஓர் எதிர்மறை விமர்சனமாக முன்வைக்கும்போது இந்த பின்புலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கு எழுத்தாளர் உத்தேசிப்பதே அதைத்தான். நவரசங்களில் ‘பீபத்சம்’, ‘பயம்’, ஆகியவையும் உள்ளதுதான்.

‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’ நொடிக்கு நொடி உருமாறும் மானுட நிலையை குறிக்கிறது, அல்லது எதன்மீதும் பெரும் பற்றற்ற ஆழமற்ற மிதவையாக மனிதன் இழுத்துச் செல்வதை உணர்த்துகிறது. ஏமாற்றப்பட்டதாக உணரும் மறுகணம் அவன் ஏமாற்றவும் செய்கிறான், ஒரு அழகிய பெண்ணைத் தொடர்கிறான், பின்னர் அப்படித் தன்னை ஈர்த்த பெண்ணின் நினைவுகளுக்குள் புதைகிறான். இயேசுவின் மீது ஈர்ப்பு என்ற காரணத்தினால் அவளை விட்டு விலகுகிறான். பசி மயக்கத்தில் இருக்கும் நபர் உதவி கேட்கும்போது முதலில் நம்ப மறுக்கிறான், பின்னர் ஏற்கிறான், அவரை வண்டியில் அழைத்துச் செல்லும்போதுகூட அவனுக்குள் எண்ணங்கள் நொடிக்குநொடி உருமாறிக்கொண்டே இருக்கின்றன. அவர் அவனை நீங்கிச் சென்றபின்னரும்கூட தனது பர்சைத் தொட்டுப் பார்க்கிறான். நவீன வாழ்வின் வழியாக மனிதன் வந்தடைந்திருக்கும் நம்பிக்கையின்மையை இக்கதை பேசுகிறது.

மனிதர்கள் சூழ ஒரு பெருநகரத்தில் இருந்தபோதும் செல்போன் அணைந்துவிட்டதும் யாருமில்லாத உணர்வை அடைவதை பேசத் துவங்குகிறது ‘தனி’. நவீன வாழ்வில் நாமுணரும் பதட்டத்தை இதுவரை நாம் ஏன் கதையாக்கவில்லை எனும் எண்ணம்தான் முதலில் தோன்றியது. ”அவனோடு வந்து கொண்டிருந்த நிழல்கள் இப்போது வெளிச்சத்தில் ஒவ்வொன்றாய் மறையத் தொடங்கியிருந்தன. இறுதி நிழலாய் அவளும் காணாமல் போனபோது பாதை முடிந்திருக்க மஞ்சள் ஒளி பொங்கிப் பிரவகித்த அத்துவான வெளியொன்றில் அவன் தனியாக நின்றிருந்தான்“ எனும் முடிவு ஏதோ ஒருவகையில் நிழலாட்டத்தின் நீட்சியாக அல்லது இதன் தொடர்ச்சி நிழலாட்டம் என்பதாக வாசிக்க இடமளிப்பதாக உள்ளது. யதார்த்த கதையாக துவங்கி மாயத்தன்மை கொண்ட முடிவை இக்கதை அடைகிறது.

‘பரமபதம்’ ஒருவகையில் பரமனின் பதம் எனும் மரணத்தை அடைவது, அல்லது வாய்ப்புக்களால் நிர்ணயிக்கப்படக்கூடிய, எப்போது வேண்டுமானாலும் எந்த உச்சியிலிருந்தும் பாதாளத்திற்கு இழுத்துவரும் ஆற்றல் மிக்க ஒரு விளையாட்டு. தற்செயல்களே தீர்ப்பெழுதுகின்றன. இத்தொகுதியில் தன்னிலையில் சொல்லப்படும் ஒரே கதை இதுதான். மரணத்தின் அணுக்கத்தை அனுபவமாக்க முயல்கிறது. இடையில் வரும் கனவுப் பகுதி ஜோம்பிக்கள் உள்ள வீடியோ கேம் போல சித்தரிக்கப்படுகிறது. மூத்த இலக்கியவாதி ஒருவர் தன் அன்னையின் மரணத்தை அண்மையில் தான் எதிர்கொண்ட விதத்தைக் கூறி காம்யுவை, மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நிராகரிக்கிறார். அப்போது கதைசொல்லி ஆவேசமாக எழுந்து “உங்களுடைய அம்மாவுக்குப் பதிலாக, ஒரு பேச்சுக்கு உங்களுடைய இரண்டு வயது பேரக்குழந்தை இறந்திருந்தாலும் நீங்கள் கொண்டாட்டமாகத்தான் இருப்பீர்களா?” எனக் கேட்கிறான். இந்தக் கேள்வியைத்தான் வெவ்வேறு வகைகளில் பல சிறுகதைகளில் கார்த்திகைப் பாண்டியனின் கதை மாந்தர்கள் எழுப்புகிறார்கள்.

‘இலக்கிய மும்மூர்த்திகள்’ கதை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் மொழியில் உள்ள தேய்வழக்கை பகடி செய்கிறது என்கிற அளவில் ஒரு சோதனை முயற்சி என்பதற்கு அப்பால் பெரிதாக ஈர்க்கவில்லை. ஏனெனில் இலக்கிய வெளிக்குள் இத்தகைய மும்மூர்த்திகள் எனும் பீடங்கள் செல்லுபடியாவதும் இல்லை, அவை மெய்யும் இல்லை. சமூக ஊடகப் பார்வை என்றே நம்புகிறேன். ஆனால் இக்கதையில் ஒருவித ‘ஆட்டோஃபிக்ஷன்’ தன்மை உள்ளது. தன்னெழுச்சியாக தோன்றும் சொற்களை பின்தொடர்ந்து செல்லும் தன்மை இக்கதைக்கொரு கவனத்தை அளிக்கிறது.

எழுத்தாளர் எஸ்.ரா. ஒரு மேடையுரையில் இளம் எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் செய்யும் பிழைகளைப் பற்றி சொன்னார். பெரும்பாலும் அனைவரும் பரத்தையர்களைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் கதைகள் எழுதுவார்கள். அண்மைய காலங்களில் நான் வாசித்த பெரும்பாலான முதல் தொகுப்பு நூல்களில் ஒரு கதையேனும் ‘பரத்தையரை’ பாத்திரமாக கொண்டதாக இருக்கிறது. இக்கதைகளின் பொதுத்தன்மை என்பது, அவமானங்களை இறக்கி வைக்குமிடமாக பரத்தையருடனான உறவு வருகிறது. இத்தனை கதைகளுக்கு அப்பாலும் பரத்தையர் அகம் பன்முகம் கொண்டதாக, அறிய முடியா ஆழம் கொண்டதாக இருப்பதாலேயே மீண்டும் மீண்டும் கதைகளின் ஊடாக வரையறை செய்ய முயன்று கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது. கார்த்திகைப் பாண்டியனின் இந்தத் தொகுப்பிலும் ஒரு பரத்தையர் கதையுண்டு “பெருத்த மார்புகளுடைய ஆணின் கதை”. எறும்பு தானியத்தைச் சேமிப்பது போல் சிறுவயதிலிருந்து வரப்போகின்ற காதலிக்காக அன்பை சேமித்து வைத்திருந்தான். ஆனால் அவனுடைய பருத்த உடல் காரணமாக சேமித்து வைத்த அன்பு நஞ்சாகிறது. பெருத்த மார்புடையவனுக்கும் பால் சுரக்கும் மார்புடைய பரத்தைக்கும் மார்தான் சிக்கல். லதா ரஞ்சனி தொழிலுக்கு வருவதற்கு முன் குளிக்கும்போது மார்பில் கட்டியிருந்த பாலை வலியோடு வெளியேற்றிவிட்டு வருகிறாள். பெரும் வன்மத்தோடு அவளுடைய வருகைக்காக காத்திருக்கிறான். பிள்ளையை இழந்த அவள் அவனையே தன் குழந்தையாக கண்டுகொள்கிறாள். மார்போடு அணைத்து உயிரனைத்தையும் அளிக்கச் சித்தமாய் இருக்கிறாள். அவளுடைய பரவசம் அவனை மூர்க்கம் கொள்ளச் செய்கிறது. அவன் தன்னை மீறி தன் வெறுப்பை அவள் மீது கடத்துகிறான். தேவிபாரதியின் ‘பலி’ கதையோடு சேர்த்து வாசிக்கத்தக்கது. ஆனால் ‘பலி’ அளிக்கும் உணர்வு நிலை மற்றும் நம்பகத்தன்மை இக்கதையில் இல்லை. ‘பலி’ கதையில் சாதி அடக்குமுறையை பழிதீர்க்க முயல்கிறான். புறக்கணிப்பின் காரணமாக எழுந்த பெண்களின் மீதான வன்மத்தை பழிதீர்க்க இக்கதை நாயகன் திருக்குமரன் முயல்கிறான். ‘பலி’ கதையில் தனிப்பட்ட வஞ்சமும் தொடர்பும் ஒரு சரடை அளிக்கிறது. இக்கதையில் வாடிக்கையாளருக்கு முன் அன்னையென எழுவது போதிய வலுவுடன் உருவாகவில்லை எனும் எண்ணமே ஏற்பட்டது.

கார்த்திகைப் பாண்டியனின் மொழி வெகுவாக வசீகரிக்கிறது. சாதாரண பேசுபொருள் கொண்ட கதைகளும்கூட அதன் மொழியால் மிக நல்ல வாசிப்பின்பத்தை அளிக்கிறது. “இவர்களைக் காட்டிலும் பெரிதாய் வளர்ந்திட்ட நிழல்கள் இவர்களுக்கும் முன்பாக நடந்து போயின” (‘அந்தர மீன்’). “சீரற்ற வகையில் பொருட்களை இட்டு நிரப்பிய சாக்குப்பையினைப் போல அங்கங்கே பிதுங்கி நிற்கும் பருத்த உடல்.” (‘பெருத்த மார்பு…’) “சிதறிய பாதரசத் துளிகளென வண்டியிலிருந்து உதிர்ந்த மனிதர்களோடு தானும் இறங்கியவன்” (‘மரநிறப்..’) “சிவனின் சடையிலிருந்து சீறிப் புறப்படும் பாம்புகளென அவ்வறையின் கூரை முழுதும் வியாபித்திருந்த சாண்டிலியர் விளக்கின் விழுதுகள் இவனை மிரளச் செய்தன.” (‘மரநிறப்..’). மொழியில் சில சிக்கல்கள் இல்லாமலும் இல்லை. தேவதை, குட்டி தேவதை போன்ற தேய்வழக்கான பயன்பாடுகளைத் தவிர்க்கலாம். ஓரிடத்தில் தவளையின் உட்பாதமென பச்சை நிறத்தில் என்று எழுதும்போது நெருடலாக இருக்கிறது. கார்ட்டூன் தவளைகள் என்று வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

கார்த்திகைப் பாண்டியனின் கதைகள் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் அதிகமும் நிகழ்கின்றன. இதையும்கூட ‘இருளில் மறையும் நிழல்கள்’, ‘மர நிறப் பட்டாம்பூச்சி’ ஆகிய அவருடைய படிமங்களோடு சேர்த்து புரிந்து கொள்ளலாம். அவருடைய கதைமனிதர்கள் கும்பலுக்குள் ஒளியும் தனி மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

கார்த்திகைப் பாண்டியன் தன் கதைகளில் வலிந்து குரூரங்களை, மரணங்களை சித்தரிக்கிறாரா? பைத்தியக்காரி நாயை எத்தி விடுகிறாள், பைத்தியக்காரன் நண்பனின் தந்தையின் மீது கல்லைப் போட்டு கொல்கிறான். வாழ்வின் நிச்சயமின்மையை இவைச் சித்தரிக்கின்றன. ‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ கதையில் குழந்தை பிராயிலர் கோழியாக வெந்நீரில் கொதிக்கிறது. பெருத்த மார்புடையவனின் கதையில் தன் குழந்தை ஒரு பருந்தாக மாறுவதைக் கனவு காண்கிறாள். ”உடல் முழுதாய் மண்ணில் புதைந்திருக்க எண்ணற்ற கேள்விகளைத் தன்னுள் தேக்கியவாறு இறந்து போயிருந்த குழந்தையின் பிதுங்கிய பழுப்பு நிறக் கண்கள் வானத்தை வெறித்தன.” (‘சிலுவையின்…’). ‘பரமபதம்’ கதையில் ரயிலில் அறுபட்டு இறுதி மூச்சில் இருப்பவளின் துண்டிக்கப்பட்ட கையைத் தூக்கிக்கொண்டு வருகிறது ஒரு நாய்.

போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ தொகுப்பு வாசித்தபோது ஒரு கேள்வி எழுந்தது. குழந்தைகளின் மரணத்தை மீள மீள பல்வேறு கதைகளில் அவரும் எழுதியிருந்தார். பெரும் தொந்தரவாக மனதை அலைக்கழித்தது. மனித மனத்தின் மிக பலவீனமான பகுதிகளில் ஒன்றின் மீதான தொடர் மோதல் வழியாக தன் புனைவை நிறுவிக்கொள்ளும் உத்தியோ எனும் ஐயம் ஏற்பட்டது. ஒரு மனப் பதட்டம் கலையாக முடியுமா? எதையும் தீவிரமாக, நேர்மையாக, முனைப்போடு உருவாக்கும்போது அதை கலையாக்க முடியும். ஏதோ ஒருவகையில் நவீனத்துவ படைப்புகள் மனச் சமநிலைக் குலைவின் வெளிப்பாடாகவும் இருக்கின்றன. போகன் பதட்டத்தை இழுத்து ஆன்மீக நிலைக்கு கொண்டு செல்ல முயல்கிறார். கார்த்திகைப் பாண்டியன் கதைகளுக்கும் போகனின் கதைகளுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடு என்பது கார்த்திகைப் பாண்டியன் வாழ்வின் அபத்தத்தை ஆன்மீகத் தளத்திற்குள் கொணராமல், அதை அப்பட்டமாக எதிர்கொள்ள முயல்கிறார். நெஞ்சில் வேல் குத்திக் கிழித்ததன் அரற்றுதலை கேட்க முடிகிறது.

அபத்தம் ஒரு தரிசனமாக உருவானதன் பின்னணியில் இரண்டாம் உலகப் போர் உள்ளது. இத்தனை அறிவியலும், தொழில்நுட்பமும் மானுட மீட்சிக்கு என நம்பிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த பேரழிவு வாழ்வின் பொருள் குறித்த கற்பிதங்களை பொசுக்கியது. வாழ்வின் பொருளின்மையை இலக்கியம் போர் வழியாகவும் குழந்தைகளின் மரணங்கள் வழியாகவும் தான் மீண்டும் மீண்டும் சித்தரித்திருக்கிறது. கரம்சேவ் சகோதரர்களின் இல்யுஷா சட்டென நினைவுக்கு வருகிறான். இந்தப் பின்புலங்களில் கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் நிகழும் மரணங்களை,வாழ்வின் பொருளின்மையின் மீதான கேள்விகளாக காண முடியும். ‘நிழலாட்டம்’  கதையில் சொல்வது போல் ‘காமமும் மரணமும்’ தான் கதைகளின் தலையாய பேசு பொருள்கள். புனத்தில் இக்காவின் ‘கன்யா வனங்கள்’ நாவலுக்கான முன்னுரையில் ‘காமமும் காலமும்தான் மனிதர்களை அலைக்கழிக்கும் இரு பெரு விசைகள்’ என்பதாக ஒரு வரி வரும். இத்துடன் சேர்த்து ‘பீதி இயக்கம்’ மீதான அவருடைய ஆர்வம் மற்றும் காட்சி ஊடகத்தின் தாக்கம் ஆகியவற்றைச் சேர்த்து மதிப்பிட வேண்டும்.

நல்ல இலக்கியத்திற்கு எனது பிரத்தியேக இலக்கணம் என்பது ஏதோ ஒருவகையில் படைப்பு நிலையைத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும் என்பதே. என் வாசிப்பின் எல்லையில், அண்மைய கால எழுத்துக்களில், பாலசுப்பிரமணியம் பொன்ராஜுக்குப் பிறகு கார்த்திகைப் பாண்டியனிடம் அத்தகையத் தன்மையை கண்டுகொள்கிறேன். ‘மரநிறப் பட்டாம்பூச்சி’ வழியாக தமிழுக்கு ஒரு முக்கியமான படைப்பாளி அறிமுகம் ஆகியுள்ளார்.

 

 

எழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

பிறப்பு / குடும்பம் / படிப்பு / பணி பற்றி? 

கோவை சிங்காநல்லூரில் 1984ல் பிறந்தேன். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு இரண்டு மாதங்கள் பின்; இந்திரா காந்தி படுகொலைக்கு இரண்டு மாதங்கள் முன். நடுத்தர வர்க்கக் குடும்பம். தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு வழக்கில் பெல்லாரி சிறை சென்றவர். சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றிய‌ என் தந்தைக்குப் பணிமாற்றல் வர, பள்ளிப்படிப்பு முழுக்க ஈரோட்டில். பின் சென்னை அண்ணா பல்கலை.யில் (கிண்டி பொறியியல் கல்லூரி) கணிப்பொறி இயல் படிப்பு. கடந்த பத்தாண்டுகளாக பெங்களூரில் மென்பொருள் தர உத்தரவாதப் பொறியாளர் பணி. காதல் திருமணம். இரண்டு ஆண் பிள்ளைகள்.

முதன் முதலாக எழுதிய கதை / கவிதை?

பள்ளி நாட்களில் பதின்மத்தின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்தேன். வாரமலர் பாணி கவிதைகள். 1998 வாக்கில் ‘ப்ரியமுடன் கொலைகாரன்’ என்ற தலைப்பில் ராஜேஷ் குமார் பாதிப்பில் ஒரு நாவல் எழுதினேன். பின் 2001ல் குமுதம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என்ற முதல் சிறுகதையை எழுதினேன். இவை இரண்டையுமே இன்னும் பிரசுரிக்கவில்லை. கல்லூரிக் காலங்களில் நிறையக் கவிதைகள் – பெரும்பாலும் வைரமுத்து பாணி புதுக்கவிதைகள். ‘பரத்தை கூற்று’, ‘தேவதை புராணம்’, ‘காதல் அணுக்கள்’ என இதுவரை நான் எழுதியுள்ள கவிதைத் தொகுப்புகளின் ஆதி வடிவம் அந்நாட்களில் எழுதப்பெற்றவை தாம். 2007ல் குங்குமம் வாசகர் கவிதைத் திருவிழாவில் என் ‘ஒருத்தி நினைக்கையிலே…’ வைரமுத்துவால் முத்திரைக்கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அச்சுக்கண்ட என் முதல் எழுத்து அது.

சிறு வயதில் வாசித்தவை? வாசிப்பு படிக்கட்டு?

உத்தேசமாய் இரண்டாம் வகுப்பு படித்த நேரம். என் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். அதில் வந்த ‘ப்ளாண்டி’ மற்றும் ‘ஃப்ளாஷ் கார்டன்’ காமிக்ஸ் பக்கங்களில் தான் என் வாசிப்பு தொடங்கியது. ஈரோட்டில் நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ‘தின மலர்’ வாங்குவார். வெள்ளியன்று இணைப்பாக வரும் சிறுவர் மலரை வாசிப்பதில் எனக்கும், எனக்குப் பல்லாண்டு மூத்த உரிமையாளர் மகனுக்கும் தகராறு வர, அதன் பொருட்டே என் வீட்டில் ‘தின மலர்’ வாங்கத் தொடங்கினர். அதுவும் வெள்ளியன்று மட்டும். தொடர்ந்து பிற நாளிதழ்களின் சிறுவர் இணைப்புகள் (‘தங்க மலர்’, லேசாய் ‘சிறுவர் மணி’) மற்றும் சிறுவர் இதழ்கள் (‘பூந்தளிர்’, ‘அம்புலி மாமா’) அறிமுகமாகின‌. அப்புறம் காமிக்ஸ் இதழ்கள் (‘ராணி காமிக்ஸ்’ அப்புறம் சில‌ ‘லயன் காமிக்ஸ்’, ‘முத்து காமிக்ஸ்’) வாசித்தேன். பள்ளிக்கு காமிக்ஸ் எடுத்துப் போய் பிரச்சனையாகி உள்ளது.

இதற்கு அடுத்த கட்டமாய் நாளிதழ்களின் பிற‌ இணைப்புகள் (‘வார மலர்’, ‘கதை மலர்’, ‘குடும்ப மலர்’, கொஞ்சம் ‘தினமணிக் கதிர்’), மாத நாவல்கள் (‘மாலைமதி’, ‘கண்மணி’, ‘ராணி முத்து’), ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்கள் (உடன் சுபா, பிகேபி) வாசித்தேன். பிறகு பக்கத்து வீட்டுக்காரர் பைண்ட் பண்ணி வைத்திருந்த‌ ‘பொன்னியின் செல்வன்’. கோடை விடுமுறையில் என் அத்தை கிருஷ்ணவேணி அலுவலக நூலகத்திலிருந்து லக்ஷ்மி, ரமணிச் சந்திரன், சாண்டில்யன் நாவல்களை எடுத்து வந்தார். ஒன்பதாம் வகுப்பில் என் தமிழாசிரியை தனலெட்சுமி பாலகுமாரனை அறிமுகம் செய்தார். அதே காலகட்டத்தில் சுஜாதாவும் அறிமுகமானார். இன்றளவும் சுஜாதா என் பேராதர்சம்.

பிறகு குமுதம் வெளியிட்ட தீபாவளிச் சிறப்பிதழ்களின் வழி தான் முதன் முதலாக‌ நவீன இலக்கியப் பரிச்சயம். பதினொன்றாம் வகுப்பில் பள்ளி (ஈரோடு இந்து கல்வி நிலையம்) நூலகத்தில் வைரமுத்து உள்ளிட்ட நிறைய நூல்கள். அது முக்கியமான திறப்பு. பிறகு கல்லூரிக்காக‌ சென்னை வந்ததும் கன்னிமரா நூலகமும், தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகமும் என்னைத் தத்தெடுத்துக் கொண்டன. கணிசமான நவீனப் படைப்பாளிகளை அங்கேதான் வாசித்தேன். ‘ஹிக்கின்பாதம்ஸ்’, ‘லேண்ட்மார்க்’, ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’, ‘எனி இந்தியன் புக்ஸ்’, சென்னை புத்தகக் காட்சிக‌ள் என் புத்தக வேட்டைக்களங்களாயின. சுந்தர ராமசாமியும், ஜெயமோகனும் மிகப் பிடித்த எழுத்தாளர்கள் ஆகினர். வேலைக்குச் சேந்த கடந்த பத்தாண்டுகளில் என் வாசிப்பு கணிசமாய்க் குறைந்து விட்டது. எழுதவே நேரமிருப்பதில்லை என்பது முக்கியக் காரணம். இதைச் சொல்கையில் வருத்தமும் அவமானமும் ஒருசேர எழுகிறது.

எப்போது எழுத்தாளாராக உணர்ந்தீர்கள்?

பதின்மங்களின் தொடக்கத்தில் என நினைக்கிறேன். எனக்கு எழுத வேண்டும் என்ற ஆசையே ராஜேஷ் குமாரின் ‘எவரெஸ்ட் தொட்டு விடும் உயரம்தான்’ நாவலை வாசித்துத் தான் உண்டானது. அது அவரது சுயசரிதை நூல். தான் எழுதிய முதல் கதைகள், பிரசுரத்திற்குச் செய்த முயற்சிகள், பத்திரிக்கை ஆசிரியர்களுடனான அனுபவங்கள், குடும்பத்தாரின் எதிர்வினை என்பதை எல்லாம் ஒரு சுயமுன்னேற்றப் பாணியில் அதில் சொல்லி இருப்பார். பதினொன்றாம் வகுப்பில் ‘My Role Model’ எனக் கட்டுரை எழுதச் சொன்ன போது சுஜாதாவைத் தான் முன்மாதிரியாகக் குறிப்பிட்டு எழுதினேன். அவரைப் போல் சிறந்த பொறியாளனாகவும், தேர்ந்த‌ எழுத்தாளனாகவும் வர வேண்டும் எனச் சொல்லி இருந்தேன். அப்போது யாஹூவில் என் முதல் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய போது writercsk என்றே கொடுத்தேன். அதுவும் சுஜாதாவின் பாதிப்பில் தான். பின் Geocities-ல் ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிய போதும், எனக்கான‌ வலைதளத்தை உருவாக்கிய போதும், ட்விட்டர் கணக்குத் துவங்கிய போதும் அப்பெயரையே தொடர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் எழுத்தாளன் என்பதற்கான எந்த நிரூபணத்தையும் செய்யாத சமயத்தில் ‘ரைட்டர்’ என்ற அந்த முன்னொட்டு கடும் கேலிகளை உருவாக்கியது. இன்று ஓரளவுக்கு அதற்கான படைப்புகளை எழுதி விட்ட போதிலும் கூட அது தொடரவே செய்கிறது.

கவிதை, சிறுகதை, நாவல் என மூன்று வடிவங்களிலும் இயங்கி இருக்கிறீர்கள். எது தங்களுக்கான வடிவம் என எண்ணுகிறீர்கள்? எது சவாலான வடிவம்?

 இவை போக அபுனைவு என்பதையும் நான்காவதாய் இதில் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கான வடிவம் எது என அறுதியிட்டுச் சொல்லும் காலம் இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். தொடர்ந்து எழுதினால் அடுத்த பத்தாண்டுகளில் தெரிய வரலாம். இதுவரையிலான எழுத்து அனுபவத்தில் சிறுகதையே எனக்குப் பிடித்த வடிவமாக இருக்கிறது. கவிதை, நாவல், அபுனைவை விடவும். ஒரே ஒரு நாவல் எழுதியுள்ள குறுகிய அனுபவத்தில் நாவல் வடிவம் என்பது சிறுகதை போல் சவாலாக எனக்குத் தோன்றவில்லை. நாவலுக்கு உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம். அவ்வளவு தான்.

காந்தியை மையமாக கொண்டு ஒரு புனைவை எழுத வேண்டும் என்றொரு எண்ணம் உதித்தது எப்போது? 

காந்தி பற்றிய முதல் சித்திரம் என் தாத்தாவின் வழியாகவே என்னை வந்தடைந்தது. எந்தவொரு இந்தியப் பள்ளி மாணவனையும் போல் பால்யத்தில் காந்தி என்பவர் மஹாத்மா என்பதில் தொடங்கி, பின் காந்தி போலியானவர், நேதாஜியே அசலான சுதந்திரப் போராளி என்று எண்ணும் பதின்மங்களைக் கடந்து தான் நானும் வந்தேன்.

பின் கமல் ஹாசனின் ‘ஹே ராம்’ திரைப்படம் ஒரு முக்கியமான திறப்பு. அதைத் தொடர்ந்து தான் காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலை வாசித்தேன். 2009ல் என் முதல் நூல் ‘சந்திரயான்’ வெளியான பின் நான் எழுத விரும்பிய நூல் காந்தி கொலை வழக்கு பற்றியது. அதற்காக நிறைய நூல்களை வாசித்திருந்தேன். ஆனால் அம்முயற்சி கைகூடவில்லை. (பிற்பாடு என். சொக்கன் அதை எழுதினார்.)

அப்புறம் ‘காலச்சுவடு’, ‘தீராநதி’, ‘உயிர்மை’ முதலான இலக்கியச் சிற்றிதழ்களில் வந்த காந்தி குறித்த சில கட்டுரைகளும் விசாலமான பார்வையைப் பெற உதவின. இவை எல்லாவற்றுக்கும் மேல் ஜெயமோகன் காந்தி குறித்து தன் தளத்தில் செய்த தொடர் விவாதங்கள் (பிற்பாடு இவை ‘இன்றைய காந்தி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டன). காந்தியை நான் முழுக்க மறுஅறிமுகம் செய்து கொண்டது அவற்றின் வழியாகவே.

காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏற்கனவே நான் அரசல் புரசலாகக் கேள்வியுற்றிருந்தாலும் மேற்சொன்ன விவாதத்தில் இடம்பெற்ற ‘காந்தியும் காமமும்’ என்ற தலைப்பிலான நான்கு கட்டுரைகள் தாம் அது பற்றிய விரிந்த தகவல்களையும் கருத்துக்களையும் அளித்தன. அங்கே இந்நாவலுக்கான விதை முதலில் விழுந்தது. ஆனால் முளைத்துக் கிளைத்து விருட்சமாக சுமார் எட்டாண்டுகள் பிடித்திருக்கிறது.

 ஒரு ஆராய்ச்சி அபுனைவு நூலாக இல்லாமல் புனைவாக எழுதியதற்கு ஏதேனும் தனித்த காரணங்கள் உண்டா ?

காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஓர் அபுனைவு நூல் எழுத முடியும். சிலர் ஆங்கிலத்தில் எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இவ்விஷயம் தொடர்பான‌ விடுபடல்கள் ஒரு புனைவுக்குரிய சாத்தியத்தை அளிப்பதாக‌ப்பட்டது. அதாவது இதில் ஒரு Drama இருந்தது. குறிப்பாக நாவலுக்குரிய கேன்வாஸ் இது எனத் தோன்றியது. புனைவு வடிவில் இதை எழுதக் கூடுதல் சுதந்திரமும் உண்டு என்பதை உணர்ந்தேன். கேத்ரின் க்ளமெண்ட் எழுதிய Edwina and Nehru ஓர் உதாரணம்.

என் முதல் நாவலை எழுத ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேலாக யோசித்து வந்தேன். இதை என் முதல் நாவலாகக் கொண்டால் நல்லது என்றும் எண்ணம் வந்தது. ஒரு கட்டத்தில் புத்தகக் காட்சிக்குள் நாவலை எழுத அவகாசம் இல்லை எனும் போது அபுனைவு நூலாக எழுதி விடலாமா என்று கூடத் தோன்றியிருக்கிறது. எழுத்தாளர் என். சொக்கன் தனிப்பேச்சில் இதை அபுனைவாக எழுதியிருக்க வேண்டும் என்று அங்கலாய்த்தார். நாவலாக வரவில்லை என்றால் அபுனைவாய் எழுதியிருப்பேன்.

இன்னும் சொல்லப் போனால் இஃது நாவல் என்றாலும் உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கும் போது அபுனைவுக்கும் புனைவுக்கும் இடைப்பட்ட படைப்புதான் என்பேன்.

காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து தற்காலத்தில் எழுதுவதற்கான தேவை என்ன? காந்தியை மையமாக கொண்ட களம் என்றாலும், குறிப்பாக பிரம்மச்சரிய பரிசோதனைகளை நாவலின் பின்புலமாக கொண்டு எழுதியதற்கு என்ன தூண்டுதல்?

லட்சக்கணக்கான பக்கங்கள் காந்தியைப் பற்றி எழுதப்பட்டு விட்டாலும் அவர்களில் பெரும்பாலானோர் காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை மழுப்பலாகவே கடந்து விடுகிறார்கள். எனில் அவர் மஹாத்மா என நம்புவோர் கூட இவ்விஷயத்தில் மட்டும் பிழை செய்திருக்கிறார் என நினைக்கிறார்கள் என்று தானே அர்த்தம்! இதன் இன்னொரு முனையில் அவர் பெண்களைப் பரிசோதனைப்பண்டமாகப் பயன்படுத்திய ஆணாதிக்கவாதி என்ற ரீதியில் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தவர்களும் உண்டு. அதனால் தான் பழுப்பாய் நின்ற அந்த பகுதியை நெருங்கிப் பார்க்க ஆசைப்பட்டேன்.

இன்னொரு விஷயம்: ஆரம்பம் முதல் என் எழுத்துக்களில் காமம் என்ற அம்சம் தொடர்ந்து மையச் சரடாக அல்லது பிரதான இழைகளில் ஒன்றாக இருக்கிற‌து. தணிக்கைச் சிக்கல்கள் குறைந்த என் சமூக வலைதள எழுத்துக்களில் இது வெளிப்படையாகத் துலங்கும். ரமேஷ் வைத்யா கூட இது பற்றி, விடலைத்தனம் இன்னும் விடவில்லை, எனக் குறிப்பிட்டார். அதுவும் காரணம் என நினைக்கிறேன். மஹாத்மாவைப் பற்றி எழுத‌ எடுத்தால் கூட காமம்தான் முன்னே வந்து நிற்கிறது!

இந்த நாவலை எழுதுவதற்கு உங்களுக்கு ஒன்றரை மாதம் தான் ஆனது என்பது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனினும் பின்புல தயாரிப்புக்கு எத்தனை காலம் ஆனது? என்னவிதமான நூல்களை வாசித்தீர்கள்? நாவலின் இறுதியில் நூற்பட்டியல் இருக்கிறது. அந்நூல்கள் உங்கள் புரிதலை எப்படி செம்மையாக்கியது?

பின்புலத் தயாரிப்புக்குக் கூடுதலாய் ஒரு மாதம் ஆகி இருக்கும். தொடர்ச்சியாக அல்லாமல் ஆறேழு மாதங்களாக‌ அவ்வப்போது வாசித்துக் கொண்டிருந்தேன் – திட்டமிட்டு என்றில்லாமல் தொடர்புடைய நூல்கள் அறிமுகம் ஆகும் போதெல்லாம் அல்லது கிடைக்கும் போதெல்லாம். காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய கிர்ஜா குமாரின் இரண்டு நூல்கள், ஜாட் ஆடம்ஸின் ‘Gandhi: Naked Ambition’, மநுவின் டைரிகள் குறித்த ‘இந்தியா டுடே’ சிறப்பிதழ், காந்தியின் உதவியாளர் நிர்மல் போஸ் எழுதிய‌ ‘My Days with Gandhi’ என்ற‌ நூல் ஆகியன முக்கியமாய்ப் பயன்பட்டன. இன்னொரு விஷயம் இந்நூல்களில் என்னுடைய‌ நாவலுக்கு அவசியப்படும் எனத் தோன்றிய பகுதிகளை மட்டுமே வாசித்தேன். அதனால் படிக்கும் நேரம் குறைந்தது.

சம்பவங்களின் கால வரிசை, இடம் மற்றும் பிற விவரங்களை இந்நூல்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. நாவல் அசல் வரலாற்றுக்கு அருகிலானது என்பதால் இது தேவைப்பட்டது. தவிர, பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய வெவ்வேறு கோணங்களை இவை எனக்கு அளித்தன. அவற்றின் அடிப்படையிலும், பொதுவான மானுட உளவியல் சார்ந்தும் காந்தி, மநு, மற்றும் பிறர் தரப்பு என்னவாயிருக்கும் என்பது பற்றிய புரிதலை வந்தடைந்தேன். அதுவே நூல்களின் முக்கியப் பங்களிப்பு.

நாவலுக்கு என்னவிதமான கவனம் கிட்டியது? விமர்சனங்கள் எத்தகையவை? 

நாவலுக்குப் போதிய கவனம் கிட்டவில்லை என்ற மனக்குறை இருக்கிறது. ரமேஷ் வைத்யா புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரை ஒரு பரபரப்பான அறிமுகம். பா.ராகவன், சித்துராஜ் பொன்ராஜ் மற்றும் நீங்கள் ஃபேஸ்புக்கில் நாவல் பற்றிய சிறு குறிப்புகள் எழுதினீர்கள். சென்னை காந்தி கல்வி நிலைய சேர்மன் மோகன் நாவலைப் பாராட்டி மின்னஞ்சல் செய்திருந்தார். அபிலாஷ் ஒரு நல்ல‌ விமர்சனக் கட்டுரை எழுதினார். இந்த‌ 9 மாதங்களில் வந்த‌ முதலும் கடைசியுமான கட்டுரை அதுவே. தமிழ்ச் சூழலில் இதுவே அதிகபட்சம் என்று திருப்திப்பட முகாந்திரமுண்டு என்றாலும் இந்நாவல் இன்னும் கொஞ்சம் கூடுதல் வாசக உரையாடலுக்குத் தகுதி பெற்றது என நம்புகிறேன். அதனால் அதைச் சந்தைப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் விமர்சனக் கட்டுரைப் போட்டி ஒன்றை நானே அறிவித்திருக்கிறேன். பார்க்கலாம்.

காந்தியை புரிந்து கொள்ள இந்நாவல் உதவுகிறது. ஆனால் அதைத் தாண்டி நாவலுக்கு என்றிருக்கும் எக்காலத்திற்கும் உரிய அறக் கேள்வியை நாவல் அடையவில்லை எனும் விமர்சனத்தைப் பற்றி? மேலும் காந்தியை இன்று ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா? குறிப்பாக பிரம்மச்சரிய தலம் சார்ந்து?

‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை நீண்ட சிறுகதையாகப் பார்ப்போரும் உண்டு. அதாவது நாவல் என்பதற்கான பல கோண தரிசனம் போதுமான அளவு திரளவில்லை என்ற பொருளில். இருக்கலாம். அதன் அபுனைவுத்தன்மை பற்றிக் கவலை வெளியிட்டோர் உண்டு. படைப்பின் தரம் பற்றிய விமர்சனங்களுக்கு – அது பாராட்டு என்றாலும் கூட – எழுத்தாளன் பதிலளிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். அது ஒரு சங்கடம். ஆனால் நான் விமர்சனங்கள் எவற்றையும் உதாசீனம் செய்வதில்லை. அவற்றைப் பொருட்படுத்திப் பரிசீலித்து எனக்குச் சரி எனத் தோன்றுவனவற்றை என் எதிர்காலப் படைப்புகளுக்கான உள்ளீடாகக் கொள்கிறேன். இதற்கும் அதைச் செய்ய வேண்டும்.

காந்தியம் இன்னும் காலாவதியாகவில்லை என நான் நம்புகிறேன். அதன் அவசியம் நிச்சயம் இருக்கிறது. குறிப்பாக அவரது அஹிம்சை என்ற போதனை. இன்றைய சகிப்பின்மை நிறைந்த சூழலில் காந்தி நம் நாட்டிற்கு தேவைப்படும் சிந்தாந்தவாதி. அதனால் அவரை மறுவாசிப்பு செய்ய வேண்டியது அவசியமானது. பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏன் பேச வேண்டி இருக்கிறது எனில் காந்தியின் பிழையான கருத்தாக்கங்களையும் நாம் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தான் (அவரே போதித்த‌ சத்தியம்). அதை மட்டும் கள்ளத்தனமாய்ப் பேசாது கடக்கும் ஒவ்வொரு முறையும் காந்தியை அவமதிக்கிறோம். முக்கால் நூற்றாண்டு முன் அவரே முற்போக்காக அது பற்றிப் பொதுவெளியில் பேச விரும்பினார். இன்று இத்தனை முன்னேறிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு நாம் ஏன் தயங்க வேண்டும்?

 ‘மின் தமிழ்’ மின்னிதழ் பற்றி, அதன் நோக்கம் செயல்பாடுகள், செயல்திட்டங்கள்.

தமிழ் மின்னிதழ் தொடங்கிய போது இருந்த உத்வேகம் இப்போது இல்லை என்றே சொல்வேன். நான் மிக விரும்பும் எழுத்தாளர்களை விரிவான நேர்காணல்கள் செய்ய வேண்டும் என்பதுதான் இதழின் பிரதான நோக்கமாக இருந்தது. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் என அது திருப்திகரமாகச் சாத்தியமானது. அடுத்து இணையத்தில் புதிய எழுத்துக்களுக்கான ஒரு களமாக அது இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் இன்றைய‌ சமூக வலைதள யுகத்தில் அதற்கான தேவை இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த இதழில் கிடைத்த அனுபவம் கொண்டு அப்படியான தளமேதும் இன்று தேவையில்லை என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.

தவிர, சொந்த வாழ்வியல் அழுத்தங்கள், என் எழுத்து வேலைகள் தாண்டி இதழுக்கு நேரம் ஒதுக்குவது சிரமமானதாக இருக்கிறது. அது முழுமையாய் என் இதழாகவே இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருப்பதால் ஆசிரியர் குழு ஒன்று வைத்துக் கொள்வதில் விருப்பமில்லை. அதனால் தான் காலாண்டிதழாகத் தொடங்கப்பட்ட தமிழ் இப்போது தேவைப்படும் நேரத்தில் மட்டும் வருகிறது. உதாரணமாய் அடுத்து வரப்போவது கலைஞர் சிறப்பிதழ். இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகக்கூடும்.

ஆதர்ச எழுத்தாளர்தமிழ்/ பிற மொழி யார்?

ஏற்கனவே இந்நேர்காணலில் பிடித்த எழுத்தாளர்கள் என்பதாக‌ ஆங்காங்கே சிலரைக் குறிப்பிட்டிருந்தேன். ஒரே ஒருவர் மட்டுமே சொல்ல வேண்டுமெனில் ஜெயமோகன். புனைவு மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும், தனி வாழ்விலும் கூட‌ அவர் எனக்கு வழிகாட்டி. ஆங்கிலத்தில் நான் பெரும்பாலும் அபுனைவு தான் வாசித்திருக்கிறேன். அதுவும் குறைவான அளவில். அதனால் பிடித்த எழுத்தாளர் எனக் குறிப்பிட்டுச் சொல்லுதல் சரி வராது. ஆனாலும் அப்படி ஒருவரைச் சொல்ல விரும்புகிறேன். அவர் எழுத்தாளர் அல்ல; திரைப்பட இயக்குநர். கிறிஸ்டோஃபர் நோலன். அவரது திரைக்கதைகள் போலத்தான் என் புனைகதைகள் உள்ள‌ன என எண்ணுவதுண்டு.

சமூக ஊடக பயன்பாடு படைப்பூக்கத்தை பாதிக்கிறதா? உங்கள் படைப்பிற்கு ஏதேனும் ஒரு வகையில் சமூக ஊடக செயல்பாடு பங்காற்றுகிறதா?

சமூக ஊடகங்களில் நான் இருக்க இரண்டு காரணங்கள்: சமகால விஷயங்களில் என் கருத்துக்களைப் பதிவு செய்தல், என் மற்ற எழுத்துக்களுக்களைச் சந்தைப்படுத்துதல். இதில் இரண்டாவது எவ்வளவு தூரம் சாத்தியப்படுகிறது என்பதில் குழப்பங்களுண்டு. இது போக தொடர்ச்சியாய் எழுதிப் பயிற்சியெடுக்கும் வாய்ப்பை சமூக வலைதளங்கள் வழங்குகின்றன. அதனால் மொழிக்கிடங்கு வனப்புறும் என நினைக்கிறேன். ஆனால் சரவணன் சந்திரன் சமீபத்தில் பேசிய போது சமூக வலைதளச் செயல்பாடுகளினால் என் பிரதானப் படைப்புகளில் மொழி சில இடங்களில் தொய்வுறுகிறது என்றார். நான் இன்னும் அதைத் தீவிரமாக‌ ஆராயப் புகவில்லை. கவனிக்க வேண்டும். பொதுவாகவே சமூக வலைதளங்களில் நேர விரயம் அதிகம். அதன் பொருட்டு அதைக் குறைத்துக் கொள்வதே படைப்பாளிகளுக்கு நல்லது. அவற்றை விட்டுப் பூரணமாக‌ வெளியேற வேண்டும் என்றில்லை; ஆனால் எதற்குப் பயன்படுத்துகிறோம், எவ்வளவு நேரம் இருக்கிறோம், பக்கவிளைவு என்ன என்பதில் ப்ரக்ஞைப்பூர்வமாக இருக்க வேண்டும்.

அடுத்து என்ன எழுத இருக்கிறீர்கள்?

எண்ணத்தில் உருவாகி இன்னும் எழுதப்படாமல் குறைந்தது பத்து சிறுகதைகள் உண்டு. பிற்காலச்சோழர் வரலாற்றை ஒட்டிய ஒரு த்ரில்லர் நாவலும், இன்றைய தேதியில் ஆக முக்கியமானதென நான் கருதும் ஒரு சமூகப் பிரச்சனை குறித்த ஒரு நாவலும் மனதில் இருக்கின்றன. நாத்திகத்தின் வரலாற்றை விரித்தெழுதும் திட்ட‌மிருக்கிறது. இளையராஜாவின் வாழ்க்கையை வசன கவிதை நடையில் எழுத விரும்புகிறேன். கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’யைச் சுருக்கி எழுதி வருகிறேன் – மூன்றாண்டுகளில் முடிக்கத் திட்டம். ஆசைகள் ஆயிரம் இருந்தும் செயலாக்க நேரம் போதவில்லை.

இப்போது ஒரு நாவல் வேலையைத் தொடங்கி இருக்கிறேன். தலைப்பு ‘ஜெய் பீம்’. எல்லாம் சரியாக நடந்தால் வரும் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வெளியாகும்.

எதற்காக எழுதுகிறேன்? என்றொரு வினா எழுப்பினால் உங்கள் பதில்?

கலவி எதற்கு எனக் கேட்போமா? குழந்தைப்பேறு தான் காரணமா என்ன? அதைப் போல் எழுதுவது மகிழ்ச்சி தருகிறது என்பது தான் பிரதான காரணம். ஒவ்வொரு படைப்பை நிறைவு செய்கையிலும் ஒரு கணம் கடவுளைப் போல் உணர்கிறேன். சொற்களில் விவரிக்க இயலா ஒரு மனோஉச்சம் அது. அது போக எழுத்தானது வாழ்வதற்கான உந்து சக்தியாக இருக்கிறது. எப்படி எனச் சொல்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே மானுட குல முன்னேற்றத்துக்கு ஏதோ விதத்தில் உதவி செய்கிறான். ஒன்று மனித இனத்தின் நேரடி முன்னேற்றத்துக்கான பங்களிப்பு. மற்றது சமகாலச் சமூகத்துக்கு உதவி செய்வதன் மூலம் பங்களிப்பது. விவசாயம் செய்தல், அரசுப் பணி, மருத்துவர்கள், பொறியாளர்கள் எனப் பெரும்பாலான வேலைகள் இரண்டாம் வகையில் வரும். விஞ்ஞானிகள், சில கலைஞர்கள், தத்துவ ஞானிகள், குறிப்பிட்ட‌ அரசியல் தலைவர்கள் போன்றவர்கள் முதல் வகை. எழுத்தாளர்களும் அதே வகை தான். அதனால் அது ஒரு மதிப்புமிக்க வேலை என நம்புகிறேன். வாழ்க்கை குறித்த சலிப்பு ஏற்படும் போதெல்லாம் இன்னும் மானுட குலத்துக்கு நான் செய்ய வேண்டிய பங்களிப்பு பாக்கி இருக்கிறது என்ற எண்ணம் எழுந்து வர எழுத்து காரணமாகிறது. எழுத்தால் வரும் பாராட்டு, புகழ், விருது, மரியாதை என்பதெல்லாம் பிற்பாடு தான்.

 

***