நரோபா

திருமிகு. பரிசுத்தம்

நரோபா

Thirumigu Parisuttam

ஒவ்வொரு முறையும் இது இப்படிதான் நிகழ்கிறது. எப்போது வரிசையில் நின்றாலும், எங்கிருந்தோ வரும் நபர் அவருக்கு முன் உரிமையுடன் வந்து நிற்பார்.

பதவி உயர்வு கிடைக்காததற்கும், கார் வாங்காததற்கும், மனைவியுடன் சேர்ந்து மாமனாரின் சொத்துக்கு மல்லுக்கு நிற்காததற்கும் என்ன காரணமிருக்க முடியும் என ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு ‘வெல்லும் விசை’ இல்லை எனக் கண்டறிந்து சொன்னார் உளவியல் நிபுணர். ஆகவே ‘வெல்லும் விசை பெருக்கி ஆலோசகர்’ திருமிகு. பரிசுத்தத்தை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்தார்கள்.

திருமிகு. பரிசுத்தம் எழுதிய “வெறுப்பெனும் ஏணியில் ஏறி வெற்றிக்கனியை ருசி” எனும் புத்தகம் மாண்டரின், பைசாசிகம், ப்ராக்ருதம், பாலி, மைதிலி, சமஸ்க்ருதம், போஜ்புரி, உருது உட்பட 82 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ட்யூஷனுக்கு விட வேண்டும் எனக் கோரிய பதின்ம வயது பெண்ணையும் அவள் தந்தையையும் கோரிக்கையின் நியாயத்தின் பொருட்டு வரிசையில் அவருக்கு முன் அமர இடமளித்தார். பின்னர் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு வந்த, சட்டைக்கு பொருந்தாத நிறத்தில் டை கட்டியிருந்தவரையும் அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதில் அவர் மனைவிக்கு வருத்தம். “இத நிறுத்தத்தானே வந்திருக்கோம்” என முணுமுணுத்தாள்.

ஆனால், நொடிக்கு மூணு முறை செருமிக்கொண்டிருந்த அந்த முதியவர் அவர்கள் இருந்த நாற்காலிக்கு அருகே வந்தபோது அவள் அத்தனை கடுமை காட்டியிருக்க வேண்டிய தேவையில்லை. “இவருக்கு சுகர்… மயக்கம் வந்துடும்,” என்றாள் அவரைக் காண்பித்து. முதியவர் சற்று நேரம் செருமிவிட்டு வரிசையின் கடைசிக்குச் சென்றார்.

திருமிகு. பரிசுத்தம் அவர்களின் அறைக்குள் நுழைந்ததும் ஒரு புராதன நெடி நாசியில் நுழைந்தது.  திருமிகு. பரிசுத்தம் கார்ல் மார்க்ஸ், மாஜினி, முசோலினி, ஹிட்லர், புஷ், ஒபாமா, செங்கிஸ்கான், ஒசாமா மற்றும் நான்கைந்து அடையாளம் தெரியாத கனவான்கள் உட்பட பலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சுவற்றை அலங்கரித்தன. பனிமலையில் வைகிங் உடையில் ஒரு மாமூத்தின் தலை மீது அவரும் அவருடைய சகாவும் கால் வைத்தபடி நின்றிருந்த புகைப்படம் அவருடைய நாற்காலிக்கு நேர் பின்னே மாட்டப்பட்டிருந்தது. அப்பழுக்கற்ற வெள்ளுடை அணிந்திருந்த திருமிகு. பரிசுத்தம், தனது கண்ணாடியை மூக்கின் மீது விரலால் தள்ளிவிட்டுவிட்டு, அவரது கோப்பை ஆராய்ந்து நோக்கினார். அவரது பெயரின் பொருட்டு வேறு பலரும் குழம்பியது போல், திருமிகு. பரிசுத்தமும் குழம்பியிருக்க வேண்டும்.

“இந்துவா? முசல்மானா?’

“பவுத்தன்”

“ரொம்ப வசதி… குறைய ஒப்ஷன்ஸ் உண்டு” என்றார் தனது டைரியில் குறித்தபடி.

“கிரிக்கெட் பாப்பீகளா?”

“பாப்பேன்”

“ஆராக்கும் பிடிச்ச பிளேயர்?”

“இன்சமாமும் டிசில்வாவும்”

சற்றுநேரம் யோசித்த பின்னர் தனது கட்டை மீசையை நீவியபடி “எந்த சினிமா நடிகர பிடிக்கும்? ரஜினியா கமலா? இல்ல எம்ஜிஆர், சிவாஜி, விஜய், அஜித்… இப்புடி யார வேணாலும் சொல்லலாம்” என்றார்.

“மார்கன் ஃப்ரீமேன்”

மெல்ல டைரியிலிருந்து தலை தூக்கி கண்ணாடிக்கு மேலிருந்து நோக்கினார். அவர் மனைவியிடம் திரும்பி,

“உங்களுக்குள்ள சண்ட ஏதும் உண்டா?”

“நான் போடுவேன், ஆனா அவர் எப்போதும் போட்டதில்ல… நகந்து போயிடவும் மாட்டார்… முழுசா திட்டுறத பொறுமையா கேட்டுட்டுதான் நகர்வார்” என்றாள்.

“வயசு பருவத்துல ஏதும் காதல் தோல்வி, விரக்தி, கோபம்? ஏதுமுண்டா?”

“அப்போ நான் அனுமார் உபாசகன்”

“அப்ப இந்த கல்யாணத்த பண்ணதுக்காக அப்பன் மேல கோபமுண்டோ?”

“இல்ல. அவரு நல்லதுக்குத்தான செய்வார்”

“ஆபீஸ்ல குற ஏதும் உண்டோ? மேலதிகாரியோட தொந்தரவு… சகாக்களோட பிணக்கம் ஏதும்?”

“நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருப்பேன் சார்”

“பேஸ்புக்ல உண்டோ?”

“இருக்கேன்”

முகம் பிரகாசமானது.

“என்ன செய்வீங்க?”

“தினமும் பூ படம், இல்லைன்னா அழகான குழந்தைங்க படம் போட்ட குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் போடுறதோட சரி”

திருமிகு. பரிசுத்தத்தின் முகத்தில் எரிச்சலின் ரேகை படர்ந்தது.

“சார் உங்க வண்டிய வேகமா இடிச்சிட்டு, இண்டிகேட்டர ஒடச்சிட்டு, இல்லன்னா கண்ணாடிய ஒடச்சிட்டு போறவங்க கிட்ட சண்ட போட்டதில்லையா?’ என்றார் சற்றே வேகமாக.

“இல்ல சார்… நான் நடந்துதான் போவேன்… நடந்துதான் வருவேன்”

“சில்லற தராம போகும்போது, பஸ்ல இடிக்கும்போதுகூட கடுப்பானதில்லையா?” அவருடைய குரல் மேலும் உயர்ந்தது. முகம் சிவந்து வியர்க்க எழுந்து நின்றார்.

“இல்லையே சார்… பாவம் அவுங்களுக்கு என்ன கஷ்டமோ”

வேகமாக எழுந்து அவரது சட்டையை உலுக்கியபடி, “எழவெடுத்தவனே, உனக்கு எது மேலையும் வெறுப்பே இல்லையா?”

அவரது மனைவியின் உடல் நடுங்க துவங்கியது.

“இல்லையே சார்” என்றார் பாவமாக.

அந்நொடியில் அறையிலிருந்த செவ்வொளி மறைந்து எங்கும் நீல நிறம் சூழ்ந்தது. திருமிகு. பரிசுத்தம் சட்டென ஒரு அழகிய பெண்ணாக உருமாறினார். “ஆதிமூலமே பரம சோதியே, உலகிற்கெல்லாம் காரணப்பொருளாய் இருப்பவனே… தீர்ந்தது எமது சாபம்,” என்று கூறிவிட்டு சாளரத்தின் வழியே வானத்தில் பறந்து கொண்டிருந்தவளை நோக்கியபடி திகைத்து அமர்ந்திருந்தார் அவர்.

934

நரோபா

 வரிசை நெடுக கூட்டமோ கூட்டம்.

வாயில் கதவு ஒரு தொலைதூர கருந்துளை என  எங்கோ தெரிந்தது.

ரொம்ப காலமாக நின்று அலுத்துவிட்டது.

வரிசையில் கடைசியாக வந்து சேர்ந்த எனக்குப்பின் முன்னிருப்பது போல் பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது.

விட்டுவரவும் மனமில்லை.

வியர்வை வழியும் கழுத்தில் பவுடர் பொதிந்த கைக்குட்டையைச் சுற்றியிருந்தார் முன்னாலிருப்பவர்.

பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து நெடுநேரமாகத் துழாவியபடி இருந்தார் பின்னாலிருப்பவர்.

யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

தொலைவில் துவங்கிய பரபரப்பு அலையாக என்னை வந்தடைந்தது.

தாழ் திறக்கப்பட்டுவிட்டது.

கதவு கொஞ்சம் கொஞ்சமாக எங்களை உள்ளிழுத்துக் கொண்டது.

“தகுதியுடையவர்கள் இவ்வழி,” என வலப்பக்கம் ஒரு பாதை திரும்பியது.

தயக்கமே இன்றி திரும்பினேன்.

“தனித்துவமானவர்கள் இவ்வழி,” என மற்றொரு பாதை பிரிந்தது.

ஐயமே இல்லை. அதுவே என் வழி.

“சிறப்புடையவர்கள் இவ்வழி,” என திறந்தது மற்றொரு பாதை.

அவ்வழியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எவரையும் காணவில்லை நான்.

முன்னவரின் பவுடர் நெடி மட்டும் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது.

நெடுந்தூரப் பாதை மற்றுமொரு பிரிவில் சென்று முட்டியது – “தன்னம்பிக்கை கொண்டவர்கள் இவ்வழி” என்றது.

நானறிவேன் என்னம்பிக்கையை என பீடு நடை போட்டேன்.

குறுகியும் இருண்டும் சுழன்றும் குளிர்ந்தும் சென்றது அப்பாதை.

தொலைவிழியாக தெரிந்த ஒளி மெல்ல கீற்றாக மாறியது.

பாதையின் முடிவில் வானுயரத் தெரிந்த வெள்ளை மதில் சுவர் ஓரமாக பலரும் அமர்ந்திருந்தார்கள்.

சுருட்டு பிடித்தப்படி திரும்பிய அவன், “இதோ வந்துட்டான்யா 934… சவுத்த மூதி எம்புட்டு தடவதான் திரும்பி வருவானோ,” என்றான்.

மலங்க மலங்க விழித்தபடி நானும் அந்த மதில் சுவரைப் பார்த்தப்படி குந்தி அமர்ந்தேன்.

 

ஒளிப்பட உதவி – Ripley Auctions

எதற்காக எழுதுகிறேன் – அறிமுகம்

நரோபா

yetharkkaha-228x228

 

அண்மையில், சந்தியா வெளியீடாக வந்துள்ள “எதற்காக எழுதுகிறேன்” என்ற சிறு நூலை வாசிக்க நேர்ந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சி,சு,செல்லப்பா, க,நா.சு, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லாசரா, ஆர்.ஷண்முகசுந்தரம் உட்பட அக்காலகட்டத்து எழுத்தாளர்கள் பலரும் இந்த கேள்வியை எதிர்கொண்டு எழுதி (பேசி) இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்கதை எழுத்தாளர் ஆர்.வியின் கட்டுரை கூட இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தொனி.

எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.,“ என்று எழுத்து அளிக்கும் கிளர்ச்சியை, அதனால் தனக்கு கிடைக்கும் இன்பத்தை, அந்த நிலையை மீண்டும் மீண்டும் அடைந்து நிலைத்திருக்கும் வேட்கையை எழுதுகிறார் தி. ஜானகிராமன்..

ஜெயகாந்தன் அவருக்கே உரிய முறையில் தனது தரப்பை வலுவாக வைக்கிறார். எழுத்தாளன் தனக்குள் சுருண்டுகொள்ளும் குகைவாசி அல்ல என்று அவனை இழுத்து கொண்டுவந்து நிறுத்துகிறார்-

எழுத்தாளன் சோம்பேறியோ, பொறுப்புக்களற்றவனோ அல்ல. அவன் உலகத்து இன்பங்களை, அல்லது குறைந்தபட்ச வசதிகளை அனுபவித்துக்கொண்டு தனக்குதானே, தன் மன அரிப்புக்காக வாழும் மனமைதுனக்காரன் அல்ல.

அரசியல்வாதியும், விஞ்ஞானியும், கலைஞனும் இந்த உலகத்தை நிர்ணயிக்கிறார்கள். இதன் தன்மையை மாற்றியமைத்து வளர்க்கிறார்கள்.

அவர்களது இந்த போராட்டத்தில் நான் எனது கடமையைச் செய்கிறேன். இதை மறுத்தால் நான் வாழும் காலத்திற்கும், எனது உடன் பிறந்தோர்க்கும் நான் துரோகம் செய்தவனானேன்.

ஆர்விக்கு வேறு கவலைகள் இருக்கின்றன. “எழுத்தைக்கொண்டு என்னவும் செய்யலாம். “இன்னும் நேரில் திட்ட முடியாத ஆட்களை, எஜமானர்களை, எதிரிகளை பெயரை மாற்றிபோட்டு இஷ்டப்படி தீர்த்து கட்டுகிறபோது ஏற்படுகிற இன்பத்துக்குப் பெயர் எதாவது இருந்தாள் அது என்ன? அதிலும் ஆத்மதிருப்தி இருக்கிறது என்று சொல்ல முடியாதோ?

அழகிரிசாமி, க.நா.சு, பிச்சமூர்த்தி ஆகிய மூவரின் கருத்துக்களும் ஆன்மீக தளத்தில் விரிகின்றன.

ஆகவே, எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன் ..எழுத்துப் பணியின் உச்ச நிலையில், நான் மற்றச் சகல உயிர் வர்க்கங்களுனுடனும் ஒன்று கலந்து ஐக்கியமாகிவிடுவதால் நான் எனக்கு செய்யும் மனித சேவை, மண்ணுயிர் சேவையாகவும் இருக்கிறது. நான் உயர்ந்தால், உலகமும் உயர முடிகிறது. இப்படிப்பட்ட காரியத்தை கலைகளினாலேயே சாதிக்க முடியும். நான் பயின்ற கலை எழுத்து, அதனால் எழுதுகிறேன்,” அழகிரிசாமி எழுத்தின் வழியாக தான் அடையும் இரண்டற்ற நிலையை பேசுகிறார்

ஈடுபாடில்லாமல் கண்டு, கண்டதைத் திரும்பச் சொல்லி, பிறரையும் அதேபோல காண செய்வதுதான் கலையின் லட்சியம். காண்பதிலும், கண்டதை திரும்ப சொல்வதிலும் ஆனந்தம் காண்பதே இலக்கிய ஆசிரியர்களின் லட்சியம். இந்த ஆனந்தத்துக்காகத்தான் நான் எழுதுகிறேன்,” என்று க.நா.சுவும் ஏறத்தாழ இதே போன்ற ஆன்மீக தளத்தில் நின்று தான் தன் எழுத்தை பற்றி மதிப்பிடுகிறார்.

இப்போது எதற்காக எழுதுகிறேன்? சுத்தமாக பணத்திற்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்வதில் நான் வெட்கம் கொள்ளவில்லை!..ஆம் வீடுகட்டும் என்ஜினீயர் மாதிரி பணம் கொடுத்தால் – நாவலோ, சரித்திரமோ – தயார் செய்து கொடுக்க வேண்டியதுதானே? …வீட்டிலுள்ள உயிர்கள் – நம்மை நம்பி இருக்கின்ற ஜீவன்கள் சோர்ந்து கிடக்கையில், ‘என் கொள்கை, என் லட்சியம்’ என்று அலட்டிகொள்வதில் என்ன பிரயோஜனம்?” என்று ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதும் போது மனம் கனக்கிறது.

ஆனால் பிச்சமூர்த்தி அதை உறுதியாக மறுக்கிறார். “உண்மையில் கலைஞனும் விதையைபோல. பணமும் புகழும் பிரச்சாரமும் கலைக்கு நேரடியாக காரணங்கள் அல்ல. புஷ்பத்தை சந்தையில் விற்கலாம், ஆனால் வியாபாரம் நடத்துவதற்காக மல்லிகை மலர்வதாக நினைத்துவிட முடியாது… சிருஷ்டி இயற்கையின் லீலை. ஆன்மீக விளையாட்டு.

இதில் எது சரி? எது தவறு? எனக்கு எல்லாமே சரி என்று தான் தோன்றியது. .

அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் இசை ‘ஏன் எழுதுகிறேன்’ என்றொரு கட்டுரையை அந்திமழை இதழில் எழுதி இருக்கிறார். ஆர்வெல், ஹெமிங்க்வே, புக்கோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்கள் எழுத்தை பற்றியும் ஏன் எழுதுகிறேன் என்பதை பற்றியும் விளம்பி இருக்கிறார்கள்.

இந்த கேள்வி எனக்கு முக்கியமானதாக பட்டது. காலந்தோறும் எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகவும் பட்டது. எழுதுபவரே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பதில்களை கண்டடையும் சாத்தியம் கொண்டதாகவும் இருக்கிறது. இன்றைய இணைய யுகத்தில் கவனம் சிதையாமல் எழுதுவது ஒரு சவாலாக இருக்கிறது. அன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிடும் போது, பணம் இன்று எழுத அத்தனை முக்கிய காரணி இல்லை என்றே தோன்றுகிறது. இணையத்தின் எழுச்சி வேறுவகையில் அதிகம் எழுதி குவிக்கவும் சாத்தியம் உள்ள காலகட்டமும் இதுவே.

எழுதும் அந்த நேரத்தில் வேறு எதை எதையோ செய்திருக்கலாம்.  உண்மையில் ஒருவன் ஏன் எழுத வேண்டும்? நம்முள் எழுத்தாக வெளிப்படத் துடித்து நம்மை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் அது என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடை இருக்கலாம். எல்லா சமயங்களிலும், எல்லோருக்கும்  எழுத்து ஒரு கொண்டாட்டமாக இருப்பதில்லை. பெரும் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், எழுத துவங்கியவர்கள் என எல்லோரையும் நோக்கி இக்கேள்வியை கேட்க வேண்டும் என தோன்றியது. அந்தரங்கமாக ஒரு சின்ன கடைதலை இக்கேள்வி நிகழ்த்தி தனக்கான விடையை அவர்கள் கண்டுகொண்டு நமக்களிக்கும்போது அது நமது விடையாகவும் இருக்க கூடும். திஜாவின், பிச்சமூர்த்தியின், அழகிரிசாமியின் விடை என்னுடையதும்தான். புனைவாளர்கள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என பல தரப்பட்டவர்களை நோக்கி இக்கேள்வியை கேட்க விரும்பினேன். தமிழில் வெகு அரிதாக வாசிக்கப்படும் அறிவியல் கட்டுரையை இத்தனை மெனக்கெட்டு ஏன் எழுத வேண்டும்?

பதாகை சார்பாக நாங்கள் அறிந்த பலரிடமும் இக்கேள்வியை வைத்தோம். பெரும்பாலும் எவரும் மறுக்கவில்லை. மேலும் பலரையும் கேட்பதாக இருக்கிறோம். இதை வாசிக்கும் வாசகர்கள் எழுத்தாளர்கள் அவசியம் எழுத வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம். இந்த இதழ் துவங்கி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து, எழுத்தாளரின் சிறிய அறிமுகத்துடன் இனைந்து,  பல்வேறு எழுத்தாளர்களின் பார்வை வெளிவரும் என நம்புகிறேன்.

Picture courtesy: சந்தியா பதிப்பகம்

2016 – நரோபா

ஜார்ஜ் ஆர்வெல் எனும் பிரபல எழுத்தாளரின் 1984 நாவலின் பிரதான கதாபாத்திரம் வின்ஸ்டன் ஸ்மித்தை பதாகைக்காக நேர்காணல் செய்திருக்கிறார் நரோபா. ஆங்கிலத்தில் நிகழ்ந்த நேர்காணல் தமிழ் இலக்கிய சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் தகவமைக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  

வின்ஸ்டன் ஸ்மித் ஒரு சிறிய அறிமுக குறிப்பு

ஸ்மித் ஓசியானியா ராஜ்ஜியத்தின் ஏர்ஸ்ட்ரிப் 1 (இன்று பரவலாக பிரித்தானிய ராஜ்ஜியத்தில் லண்டன் என அறியபடுகிறது) எனும் நகரில் வாழ்ந்தவர். இளமையிலேயே புரட்சியின் பொருட்டோ அல்லது எதிர்த்ததை பொருட்டோ அல்லது எதிர்க்க கூடிய சாத்தியமிருந்ததன் பொருட்டோ தந்தையையும், பின்னர் அசாதாரணமான சூழலில் தாயையும் தங்கையையும் இழந்தவர் (இழந்தவர் என்பதை கவனமாக வாசிக்க வேண்டும்.)

பின்னர் கட்சியில் சேர்ந்து ‘வாய்மைத்துறை அமைச்சகத்தில்’ வரலாற்றை திருத்தி எழுதும் கணக்கற்ற பணியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். மிகுந்த நுண்ணறிவும் கவனமும் கோரும் சவாலான பணி அது. முதல் மனைவியுடனான திருமண உறவு தோல்வியுற்று அவர் பிரிந்து சென்று பதினோரு ஆண்டுகளுக்கு பின்னர் அமைச்சகத்தின் சக ஊழியரான ஜூலியாவும் அவரும் அரசாங்க விதிகளுக்கு முரணாக காதல் கொண்டனர். “சிந்தை குற்றத்திற்காக” பிடிபட்டு, அரசுக்கு எதிராக சதி செயல் உட்பட அனேக குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு ஒ பிரையன் தலைமையிலான குழு அவரது கோணல் மனோபாவங்களை நேராக்கி பரிவுடன் சீராக்கி விடுதலை செய்தது. ஓர் நன்னாளின் நற்தருணத்தில் ஓசியானியா ராஜ்ஜியத்தின் மரபிர்கிணங்க பின்னாலிருந்து மூளை சிதற சுடப்பட்டு உலகிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் மறைந்தார்.- ஆசிரியர் குழு

வின்ஸ்டன் ஸ்மித் மிக சுவாரசியமான ஆளுமை. அவருடைய அலுவலக சூழலில் நமக்கு அவர் அறிமுகபடுத்தப்படும் முதல் நொடியில் அதை உணர முடிந்தது. அத்தனை இரைச்சலுக்கு இடையிலும், தனக்குள் ஆழ்ந்து தனிமையில் இருந்தார். இறுதிவரை தெளிந்த போதத்துடன் இருக்க முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேர்காணலுக்காக அவரை துண்டு சீட்டு வழியாக தொடர்புகொண்டபோது (இனி இப்படி ரகசியம் காக்க வேண்டியதில்லை என்று பதில் எழுதி இருந்தார்) செஸ்ட்நட் மரத்தடி கஃபெயில் சாவகாசமாக சந்திப்பதாக முடிவு செய்துகொண்டோம். அவருக்கு ஒரு சின்ன குழப்பம் இருந்தது. “நீங்கள் எந்த காலகட்டத்து ஸ்மித்தை சந்திக்க விரும்புகிறீர்கள்?” என கேட்டு எழுதி இருந்தார். “சுடப்படுவதற்கு சற்று முந்தைய ஸ்மித்” என்பதே எனது பதில். ஆம் அவரையே நான் சந்திக்க விழைந்தேன்.

கோடை காலத்து அஸ்தமன சூரியன் இதமான வெம்மையுடன் தொலைதூரத்து மலை முகடுகளுக்கு கீழ் இறங்கி கொண்டிருந்தான். மேகங்கள் தங்களுக்குள் அனல் சுடரை பொத்தி வைத்திருந்தது போல் அதன் விளிம்புகளில் செம்மை படர்ந்திருந்தது. ‘தொலைதிரையில் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தேசபக்தி பாடல் ஒன்று ஒலித்துகொண்டிருந்தது. பெரும்பாலான இருக்கைகள் காலியாகி கிடந்தன. மூலையில் இருந்த மேஜையில் மூவர் ஒருவரை ஒருவர் வெறித்தபடி அமர்ந்திருந்தனர். ஆரோன், ரூதர்ஃபோர்ட், ஜோன்சாக இருக்கக்கூடும். தனது கனத்த உடலை தூக்கியபடி தனக்குள் முனங்குவதாக எண்ணிக்கொண்டு சற்றே உரத்த குரலில் ‘இருக்காது..எதுவும் நடக்காது..அஞ்சவேண்டியதில்லை” என முனகியபடி நிலையிழந்து கஃபேக்கு வெளியே நடந்து கொண்டிருந்தவர் திருவாளர் பார்சனாக இருக்கவேண்டும்.

வெட்டவெளியை நோக்கி திறந்திருந்த சாளரத்துக்கு அருகிலிருந்த மேஜையில் முதுகை காட்டியபடி அமர்ந்திருந்தார் ஒருவர். அவர் தான் வின்ஸ்டன் ஸ்மித்தாக இருக்க வேண்டும் என தோன்றியது. அருகே சென்று நோக்குகையில் உறுதி செய்து கொண்டேன். அவரை நெருங்கிய போது அவருக்கு எதிருக்கையில் அமர்ந்திருந்த சிறிய மஞ்சள் முகமும், கோரை தலைமயிரும் உடையவன் எழுந்து  என்னை பார்த்து புன்னகைத்தபடி கடந்து சென்றான் அவருடைய மேஜையின் மேலிருந்த சதுரங்க பலகையில் வெள்ளையும் கருப்புமாக பாதி விளையாடிய நிலையில் காய்கள் பரவி கிடந்தன சற்று கிழடு தட்டி போயிருந்தார். காதுக்கும் தாடைக்கும் இடையிலான பகுதி தழும்பேறி கிடந்தது. சற்று கூர்ந்து கவனித்தால் உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் சென்றகாலத்து வடுக்களை கண்டுகொள்ள முடியும் என தோன்றியது. வடுக்களை துழாவிய என் கண்கள் அவர் பற்களில் வந்து ஒருநொடி திகைத்து நின்றன.

வி – புதிய செயற்கை பல் வரிசை பொருத்தபட்டிருக்கிறது..நினைவிருக்கும் என எண்ணுகிறேன்..

ந- ஆம், இப்போது நினைவுக்கு வருகிறது..

ஸ்மித் நாற்காலியில் அமரும்படி வலது கையால் சைகை காட்டினார். தலையில் அணிந்திருந்த எனது தொப்பியை மரியாதை நிமித்தம் மேஜையில் வைத்துவிட்டு நாற்காலியை இழுத்துபோட்டு அமர்ந்தேன்.

வி- முதலாளிகளின் தொப்பி..

என்றபடி மெல்ல எதையோ எண்ணி நகைத்தார் .

வி- இது உங்கள் ஊர் வழக்கமில்லையே ?

ந- இல்லை தான்..ஆனால் ஏனோ உங்களை சந்திக்க வரும்போது இதை அணிந்து கொண்டு வரவேண்டும் என தோன்றியது..

ஏனோ எனக்கு அந்த பதிலில் நிறைவில்லை.

இரு நொடி நீண்ட அசவுகரியமான மவுனத்திற்கு பிறகு

ந- சரியாக சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்காகவே கொண்டு வந்தேன்..உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என தோன்றியது..நீங்கள் சுடப்படும் போது இதை அணிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்..

என்றேன் தயங்கியபடி

வி- நன்றி. ..மெல்லிய துணியால் ஆன தொப்பி..குண்டை எவ்வகையிலும் நிறுத்தாது..(சிறிய புன்னகை முகத்தில் விரிந்தது)..எனக்கு தொப்பியின் மீது யாதொரு நாட்டமும் இல்லை. ஆனால் வேண்டியவர்கள் அணிந்து கொண்டு போகும் போது பிடுங்கி வீசி எரியமாட்டேன்..அவ்வளவுதான்..

அலுமினிய லோட்டாவில் இருந்த திரவத்தை இரண்டு லோட்டாக்களில் ஊற்றிவிட்டு ஒன்றை என்னிடம் நீட்டினார்.

வி- விக்டரி ஜின்?

ந- நன்றி..வேண்டியதில்லை..

பரவாயில்லை என்ற மாதிரி தலையசைத்து மொத்தத்தையும் மளமளவென குடித்த பின் தலை கவிழ்த்து அமர்ந்திருந்தார்.

வி- நாம் இப்போது பேசலாம்..

எனது பார்வை எதிரே இருந்த தொலைதிரையின் மீது விழுந்தது. செவி கூர்ந்து விழி நோக்கி பெரியண்ணன் எங்களுக்காக எங்கோ அமர்ந்திருக்க கூடும்.

வி- அஞ்ச வேண்டியதில்லை..என்னிடம் அவர்கள் பெறுவதற்கு இனி எதுவும் இல்லை..அவர்கள் கனிவுடன் என்னை சகித்துகொள்வார்கள்..பேரன்பின் கணத்தில் பெரியண்ணன் மீது மூத்திரம் பெய்தால் கூட அவர்களுக்கு இப்போது நான் ஒரு பொருட்டல்ல..

நானும் புன்னகைத்தேன்.

ந- உண்மையிலேயே பெரியண்ணன் இருக்கிறாரா? நீங்கள் பார்த்ததுண்டா?

வி- நான் ஒ பிரையனை அறிவேன்..கோல்ட்பெர்க்கை திரையில் கண்டாலே கோபத்தில் பிதற்றும் கோரை கூந்தல் சக பெண் அலுவலகரை அறிவேன்…நான் பார்க்க வேண்டும் என்பதில்லை..அவர் இருக்கிறார்..எஞ்சியிருக்கும் எனது ஒவ்வொரு உயிரணுவும் அவரது இருப்பை உணர்கிறது..

ந- அப்படியானால் கோல்ட்பெர்க்?

வி- அவரும் தான் இருக்கிறார்..பெரியண்ணன் இருக்கும் வரை கோல்ட்பெர்க்கும் இருப்பார்..கோல்ட்பெர்க் இல்லாமல் பெரியண்ணன் எப்படி இருக்க முடியும்? வலுவான எதிரி வேண்டும் தோழரே, மக்கள் அஞ்சும் வலுவான எதிரி, அஞ்சி அடைக்கலம் கோரும் அளவுக்கு ஆற்றல் மிகுந்த எதிரி, துரோகிகளை இனம் காண ஒரு எதிரி, நாயகர்களை போல் எதிரிகளும் அமரர்களே..பெரியண்ணன் எத்தனைக்கு எத்தனை உண்மையோ அத்தனைக்கு அத்தனை கோல்ட்பெர்க்கும் உண்மை..

ந- அல்லது எத்தனைக்கு எத்தனை பொய்யோ அத்தனைக்கத்தனை பொய்..

வி- இன்னும் உங்கள் நாட்டில் புரட்சி வரவில்லை என எண்ணுகிறேன்..வந்திருந்தால் இந்நேரம் நாம் நிச்சயம் பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டோம் தோழரே..

ந- (நகைத்தேன்) நீங்கள் அதிகம் நகைக்கும் தருணங்கள் வாய்க்கவில்லை என்றாலும், உங்களுக்கு கூரிய நகைச்சுவை உணர்வு இருக்கும் என ஊகித்தேன்..கலகக்காரர்கள் அரசுக்கு எதிராக நகைப்பவர்களாகவே இருக்க முடியும்..

வி- நான் கலகக்காரன் இல்லை தோழரே..ஒருவேளை நானே அப்படி ஏதேனும் சொல்லியிருந்தாலும் கூட நம்ப வேண்டியதில்லை…நான் விரும்பிய வாழ்வை வாழ ஆசைப்பட்டேன்..அது நன்மையா தீமையா என்று கூட  பகுத்தறிய முடியாத மிக சாதாரண சுயநலமி நான்..

ந- இல்லை திரு.ஸ்மித், தொலைதூர நடைபயணம் கூட எங்கே தனிமையில் சிந்தனையை தூண்டிவிடுமோ என ஐயப்படும் தேசத்தில் வசிப்பவர் நீங்கள், கலவி கூட அமைப்பிற்கு எதிரான கலகமாகத்தான் இருக்க முடியும் எனும் சூழலில் வாழ்பவர் நீங்கள்…முழுக்க முழுக்க அபத்தமும் கயமையும் நிறைந்த ஒருலகில் ஒரு துளி என்றாலும் வாய்மையை சிந்தையில் சுமந்தாலும் கூட அவர்கள் கலககாரர்கள் தான்..

வி- சிந்தையில் வாய்மையை சுமப்பது- ஆஹ்..இதை அவர்களும் அறிந்திருக்கிறார்கள்..(லேசாக சிரிக்கிறார்) கண்டுகொண்டு களையெடுக்கவும் பயின்றிருக்கிறார்கள் சிந்தை காவலர்கள், பாவம் பார்சன்ஸ்..அவரை மீறி அவர் அகத்திற்குள் நுழைந்த ஒன்றுக்காக வருந்திகொண்டுள்ளார்.. ஒருவேளை கைதாவதற்கு முன்பான ஸ்மித்தை, குறைந்தது அறை எண் 101 க்கு செல்வதற்கு முன்பான ஸ்மித்தை நீங்கள் சந்தித்திருந்தால் ஆம் என மகிழ்வோடு ஒப்புக்கொண்டிருப்பேன்..

ந- ஒரு வேளை அடிப்படைவாதிகள் அரசாளும் காலம் வரலாம்..அன்று நான் என்னவாக இருப்பேன் என தெரியவில்லை..நீங்களாகதான் இருப்பேன் என நினைக்கிறேன் அரசு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள கதைகளை தான் நம்பியிருக்கிறது, கதைகளை கதைகளால் தான் எதிர்கொள்ள முடியும் ஸ்மித். உங்கள் ஒப்புதல் எனக்கு முக்கியமில்லை. உங்கள் கரங்களை அகத்திற்குள் இறுக பற்றியபடி கடந்து செல்லவே முயல்வேன்.

ஸ்மித் பதிலேதும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். கீழே குனிந்து அவரது கெண்டை கால்களை நோக்கி கொண்டிருந்தார்.

எனது கோட்டு பாக்கெட்டில் இருந்து தாளில் பொதிந்திருந்த சிறிய பொருளை எடுத்து மேஜை மீது பிரித்து அவரிடம் காட்டினேன். தந்தத்தால் செய்யப்பட்ட சிறிய கப்பல் ஒன்று கண்ணாடி உருளைக்குள் மிதந்து கொண்டிருந்தது. அதை கையில் எடுத்து உற்று பார்த்து கொண்டிருந்தார் ஸ்மித்.

வி- குறைந்தது நீங்கள் வேறு ஏதாவது ஒன்றை எடுத்து வந்திருக்கலாம்..என்னே ஒரு கற்பனை வறட்சி..

.ந- இல்லை..இதில் ஒரு வசீகரம் உண்டு..உங்களை அறிந்துகொள்வதற்கு முன்னரே இதை வைத்திருந்தேன் என பொய் கூற மாட்டேன்..தேடி சென்று வாங்கினேன்..எப்போதும் எனக்கு நான் வாழ நினைக்கும் வாழ்வை இது நினைவுறுத்தும்..நானும் கூட எண்ணுவதுண்டு..இதோ எனக்கே எனக்கான பிரபஞ்சம்..நான் தனித்திருக்க, தப்பித்துகொள்ள, மறைந்துகொள்ள, மகிழ்ந்திருக்க..

வி- (பாதியில் இடைமறித்து) அப்படி ஒன்றில்லை..அது வெறும் கற்பனை…கற்பனை மட்டுமே..

என்றபடி சட்டென அதை மேஜையின் மறு எல்லைக்கு உருட்டிவிட்டார். கண்ணாடி உருளைக்குள் கப்பல் தலைகீழாக தொங்கி கொண்டிருந்தது.

இல்லை அப்படியில்லை என மறுத்து வாதிட வேண்டும் என ஏதோ ஒன்று உந்தி தள்ளியது..

ந- இல்லை ஸ்மித்..நிச்சயம்

மீண்டும் வேகமாக இடைமறித்து பேச துவங்கினார்..

வி- இல்லை நண்பரே..நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள், நீங்கள் எண்ணுவது போல் எங்கிருந்தும் மறைந்துகொள்ள முடியாது, ரகசியமும் அந்தரங்கமும் எவருக்கும் இங்கு இல்லை…உங்கள் ரகசியங்களை நானறிவேன்’ என எவரும் உங்களிடம் சொல்லாதவரை நீங்கள் நம்ப போவதில்லை..

என்னை நோக்காமல் எங்கோ அப்பால் நோக்கி பேசி கொண்டிருந்தார். சினம் தலைக்கேற உரத்த குரலில் பேச துவங்கினேன்..

ந- ஒருநிமிடம்..திருவாளர்.ஸ்மித்..ஆர்வெல் உங்களை படைத்த சூழலை பற்றி நீங்கள் அறிவீர்களா? அணுகுண்டு வெடித்து பலர் இறந்த இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், அச்சமும் அவநம்பிக்கையும் நிறைந்த பனிப்போர் காலகட்டமது..அவர் அஞ்சியது போல் உலகம் மூன்று துண்டங்களாக பிரிந்து போய்விடவில்லை..முன்பை விட போர்கள் வெகுவாக அருகிவிட்டது….பொருளாதாரமும் மனித வளமும் தான் இன்று ஆற்றலையும் அதிகாரத்தையும் நிர்ணயிக்கிறது….நீங்கள் காலாவதி ஆகிவிட்டீர்கள் ஸ்மித்..உங்கள் படைப்பிற்கு எந்த பொருளும் இல்லை..பிறரின் நம்பிக்கை கோட்டைகளை சரித்து அழிப்பதற்கு முன், வெறும் வீனச்சம் உருவாக்கிய வறட்டு பாத்திரம் நீங்கள் ஸ்மித்….உங்கள் எல்லையை நீங்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்..

மூச்சு வாங்கியது.

மெதுவாக மற்றொரு லோட்டாவில் ஜின்னை நிரப்பிகொண்டிருந்தார்.

வி- இருக்கலாம், நீங்கள் கூறுவது உண்மையாகவும் இருக்கலாம், காலாவதியான என்னை நீங்கள் சந்திக்க இத்தனை முயற்சித்திருக்க வேண்டியதில்லை…எனது சிறுபகுதி உங்களுள் எப்படியோ புகுந்துகொண்டது தோழரே..நான் உங்களின் ஒரு பகுதியாக, உங்கள் மொழியை பேசிக்கொண்டிருக்கிறேன்..எனக்கு எவ்வித நோக்கங்களும் இல்லை..எனது உலகிற்கு அப்பால் சென்று ஆர்வெலின் நோக்கங்களை ஆராயும் ஆற்றல் எனக்கில்லை..ஆனால் ஒன்றுண்டு..போர்கள் அருகி இருக்கலாம், போரச்சம் இல்லாமல் ஆகிவிட்டதா என்ன?

என் கைகள் நடுங்கி கொண்டிருந்தன. பதிலேதும் கூறாமல் சிலைந்து அமர்ந்திருந்தேன்.

வி- நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள் நண்பரே..எவரும் தப்ப முடியாது….நீங்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உள்ளாடையின் நிறம் வரை எல்லாமும் அவர்களுக்கு தெரியும்..அவ்வளவு ஏன்? உங்கள் பிறப்புறுப்பின் கரிய மச்சம் கூட அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்..ஒருவேளை உங்கள் வாழ்வில் எதுவும் நிகழாமல் போகலாம்..உங்களால் உங்கள் சிந்தனைகளால் ஆபத்தில்லை என்பது வரை நீங்கள் நிம்மதியாக வாழ்ந்து மறைய அனுமதிக்க படுவீர்கள், உங்கள் பிறழ்வுகளும் புரட்சிகளும் முன் தீர்மானிக்கப்பட்டவை தோழரே, பழகிய தடத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லைவரை சென்று வரலாம்..அதற்கப்பால் செல்ல முனைந்தால் சுவடின்றி அழிக்க படுவீர்கள்…

சன்னதம் போல் அவர் குரல் உயர்ந்து அடங்கி சட்டென மவுனத்திற்குள் புதைந்து கொண்டது..

என்னுடல் இன்னமும் நடுங்கிகொண்டிருந்தது. மூச்சை சீராக்க முயன்றேன்.

 வெளியே இருள் கவிய துவங்கியது. செந்நிற தீற்றல் தூரத்து நினைவாக எங்கோ ஒடுங்கி கொண்டிருந்தது.

ந- மன்னிக்க வேண்டும் ஸ்மித், நான் சற்று நிதானம் தவறிவிட்டேன்..

மாறா மெல்லிய புன்னகையுடன் மவுனமாக அமர்ந்திருந்தார்.

‘தொலைதிரையில்’ ‘வெற்றி’ ‘வெற்றி’ என ஒரு பெண் குரல் பிளிறியது. ஆங்காங்கு அமர்ந்திருந்த மக்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.

வி- இந்த அநாகரீக செயலுக்கு மன்னிக்கவும் …இந்த வெரிகோஸ் புண்..

என்றபடி குனிந்து கெண்டைக்கால் அருகே லேசாக சொறிந்து கொண்டார்.

ந- பரவாயில்லை..நீங்கள் நிலையழிந்து உள்ளீர்கள் என புரிந்து கொள்கிறேன்..அப்படி இருக்கும் ஒவ்வொருமுறையும் இந்த வெரிக்கோஸ் புண் அரிப்பு அதிகமாவதை கவனித்திருக்கிறேன்..

ஸ்மித் சாளரத்தின் வழியே எதையோ வெறித்து நோக்கினார். அவர் கண்களில் எவ்வித சலனமும் இல்லை. தொலைவில் யாரோ ஒரு பெண் குழந்தையை தூக்கியபடி பாடி கொண்டிருந்தாள். அந்த ஓசை மிக சன்னமாக கேட்டு கொண்டிருந்தது.

சட்டென திரும்பி நேராக என் கண்ணை நோக்கியபடி

வி – நீங்கள் ஜூலியாவை பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

கணநேர யோசனைக்கு பின்னர்

ந- உங்கள் அளவுக்கு அவருக்கு அறசிக்கல் இருந்திருக்காது..நீங்கள் அவசியத்திற்கு மேல் அறிந்து கொண்டீர்கள்..அவரை பொறுத்தவரை விதி முறை என்றால் அதை மீற வேண்டும்..அதனால் ஏற்படும் கிளர்ச்சியை அனுபவிக்க வேண்டும் ..அவ்வளவு தான்..

வி- இல்லை..நீங்கள் எண்ணுவது போல் அத்தனை எளிதல்ல..நான் எனது உணர்வுகளுக்கு தேவையான ஆதாரங்களை நியாயங்களை தேடி அலைந்தேன்..அவளுக்கு அவையெல்லாம் தேவைப்படவில்லை..இயல்பிலேயே அறிந்திருந்தாள்..கச்சிதமாக தன்னை மறைத்து கொண்டாள், ஒருவகையில் எனது முட்டாள்தனத்தால் அவளும் சிக்கிகொண்டாள்..ஆனால் அவர் அதை எதிர்பார்த்திருப்பாள்..அதிலும் தனது மீறலை வெளிபடுத்த முயன்றிருப்பாள்..

வாயிலில் ஆராவாரம் குறைந்தது. தொலைதிரை சட்டென மவுனித்தது..

வி- உங்களுக்கு அதிக நேரமில்லை..அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்….இறுதியாக ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம்

ந- ஏதேதோ கேட்க எண்ணியிருந்தேன்..உங்கள் அன்னையை பற்றி, தங்கையை பற்றி, முதல் மனைவியை பற்றி, பிறகு காதலை பற்றி, முழுமையடையாத அந்த பாடலை பற்றி….ஆனால் இப்போது முடியுமா என தெரியவில்லை..

வி- ஏன்?

ந- தெரியவில்லை..உங்களுக்கு ஒ பிரையன் மீதிருந்த விளக்கிக்கொள்ள முடியாத பிரேமையை போல் ஏதோ ஒன்று..உங்களிடம் என்னால் பேச முடியும் ..ஏதோ ஒருவகையில் எனக்கு அனுக்கமானவர் என தோன்றியது..நீங்கள் எனக்கு என்ன சொல்லவேண்டுமோ அதை ஏற்கனவே சொல்லிவிட்டதாக தோன்றுகிறது..

சீரான காலடியோசையை அருகிலென கேட்க முடிந்தது. இதற்காகவே காத்திருந்தது போல் எவ்வித மறுப்பும் இன்றி எழுந்தார். வாழ்வை உறிஞ்சி உயிர் மட்டும் எஞ்சியிருக்கும் வெட்டவெளி என அவர் உடல் இலகுவாக எழுந்தது.

வி- உங்களை சந்தித்தது மகிழ்ச்சி தோழரே, உங்கள் நாள் இனிதாகுக..

என போகிற போக்கில் மேஜையின் மூலையில் கிடந்த கண்ணாடி உருளையை என்னைநோக்கி தள்ளிவிட்டு சலனமின்றி வெளியேறினார்.

கருப்புடை அணிந்த காவலன் அவரை வாய்மை துறை அமைச்சகத்துக்கு அழைத்து செல்வான். அதன் தூய இருளற்ற வெண்பளிங்கு வளாகத்தில் அமைதியாக எவ்வித வன்மமும் இன்றி நடந்து கொண்டிருப்பார். இப்போது பின்னாலிருந்து தோட்டா தலையில் பாய்ந்திருக்கும். இரு துளி கண்ணீர்..வருத்தங்களும் குரோதங்களும் அற்ற தூய்மையான கண்ணீர் வடித்திருப்பார். முழுமனதோடு பெரியண்ணனை நேசித்தபடி மூளை சிதற மரித்திருப்பார்.

எங்கள் மேஜையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தான் ஒருவன். இரு லோட்டாக்களையும் கால்வாசி நிரம்பியிருந்த ஜின் புட்டியையும் எடுத்து சென்றான். இனி இங்கிருக்க வேண்டியதில்லை. காலடிகள் கணக்க மெல்ல நடந்தேன். திரும்பி நோக்கியபோது, மூலையில் சாளரத்துக்கருகே இருக்கும் மேஜையில் எவரோ ஒருவர் அமர்ந்திருந்தார். அருகே சிதறிய காய்கள் கொண்ட சதுரங்க பலகையும் பெரியண்ணனின் விசால முகம் நிறைந்த விக்டரி ஜின் புட்டியும் இரண்டு அலுமினிய லோட்டாக்களும் இருந்தன. எதிரே எவனோ ஒருவன் அமர்ந்திருந்தான். நல்ல உயரம். கறுப்பன். தலையில் கருப்பு துணியை வித்யாசமாக கட்டியிருந்தான். கழுத்தில் ஏகப்பட்ட சங்கிலிகள் தொங்கி கொண்டிருந்தன. கையில்லாத சட்டையிலிருந்து அவன் புஜங்கள் புடைத்து எழுந்தன. அலுமினிய லோட்டாவிலிருந்த ஜின்னை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கையை ஆட்டி ஆட்டி பேசிகொண்டிருந்தான். அங்கிருந்தபடியே என்னை நோக்கி அங்கிருந்து புன்னகைத்தான். நானும் புன்னகைத்தேன். கோட்டு பாக்கெட்டில் இருந்த கண்ணாடி உருளையை உருட்டியபடி கஃபெயை விட்டு வெளியேறினேன். காற்றில் ஈரம் கூடியிருந்தது. ஒருவேளை இன்று மழைவரகூடும்.

கடல் கொள்ளும் கோவில் – பாவண்ணனின் ‘வெளியேற்றப்பட்ட சிறுகதை’ தொகுப்பை முன்வைத்து

நரோபா

pavannan

பாவண்ணன் தமிழில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் முக்கிய இலக்கிய ஆளுமை. கவிதையில் துவங்கி, சிறுகதை, நாவல், குறுநாவல், மொழியாக்கம், விமர்சனம், அனுபவ கட்டுரை என எழுத்தின் எல்லா வகைப்பாடுகளிலும் கணிசமாக எழுதியவர். பாவண்ணன் சிறுகதைகள் வாழ்வின் பல்வேறு தளங்களில் எழுகின்றன. அவருடைய ஏழு லட்சம் வரிகள் தொகுப்பை ஒரு உதாரணமாக கொள்ளலாம். நாமறிந்த பாவண்ணன் அல்ல அவர் என தோன்ற செய்யும் அளவுக்கு தொன்மங்களையும் நாட்டார் கதைகளையும் கையாண்டிருப்பார். மனம் பற்றிய கூர்மையான அவதானங்களை சொல்லும் உளவியல் கதைகளையும் எழுதி இருக்கிறார். அவருடைய சிறுகதையுலகம் மிகவும் பரந்ததாகவே இருக்கிறது.

அகரம் வெளியிட்ட வெளியேற்றப்பட்ட குதிரை தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளை கொண்டு பாவண்ணனின் படைப்புலகை நெருங்குவதற்கான முயற்சியே இக்கட்டுரை.

அவருடையவெளியேற்றப்பட்ட குதிரைகதை திசைமாறிய கூடைபந்து வீரனின் வாழ்வை சொல்கிறது. ராஜசேகரன் அவன் விரைவின் காரணமாக குதிரை என அழைக்கபடுகிறான். அவனுடைய அசாத்திய திறமை அபார வெற்றிகளை சாதனைகளை ஈட்டி தருகிறது. அரசியல் காரணங்களால் தேசிய அணியில் ஒதுக்கபடுகிறான். விரக்தியில் மதுவை நாட ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக எத்தனை விரைவாக உச்சம் அடைந்தானோ அதைவிட விரைவாக பாதாளத்தில் வீழ்கிறான். அவன் மீது அக்கறைகொண்ட தியாகராஜனின் வழியாக தென்படும் ஒளிகீற்றை பற்றி மீண்டும் ஏற முயல்கிறான். ராஜசேகரனின் பள்ளிகால பயிற்சியாளர் தங்கராஜ்ஓடுடா ஓடு..குதிரை மாதிரி ஓடணும்என்கிறார். விளையாட்டை தவிர ஏதும் தெரியாததை எண்ணி வருந்துகிறான். பந்தய குதிரைகள் போட்டியில் ஓடுவதை தவிர வேறேதும் அறியாதவை. மனிதர்கள் பந்தய குதிரைகளாகவே தயார்படுத்த படுகின்றனர். கதையில் ;மரம்; மற்றுமொரு குறியீடாக வருகிறது. கோவிலுக்கருகே பயணற்ற மரங்கள் வெட்டப்பட்டு தியான மண்டபம் எழுப்பபடுவதை அறிகிறான். தியாகராஜனும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரத்தை வேட்டத்தானே வேண்டும் என வேறொரு உரையாடலில் யதார்த்தமாக சொல்கிறார். கதையின் இறுதியில் அவன் தன்னை முடித்து கொள்வதற்கு முன் கோவிலில் வெட்டப்பட்ட மரங்களை நினைத்து கொள்கிறான். ஓடிக்கொண்டே இருக்கும் குதிரைநின்று இடையூறு செய்யும் மரம் எனும் இரண்டு படிமங்களுக்கு ஊடாக பயணிக்கிறது கதை. குதிரையாக தன்னை உணர்ந்தவன் இறுதியில் தன்னை இடையூறு செய்யும் மரமாக காண்கிறான். ஆகவே தானும் அப்புறபடுத்தப்பட வேண்டும் எனும் முடிவுக்கு வந்துவிடுகிறான். குதிரை தன்னை தானே வெளியேற்றி கொண்டது. மதுவின் ஈர்ப்பை விவரித்தல், இயற்கையை நோக்கி கைகூப்பி வணங்கும் கோபுரம் போன்ற விவரணைகள் கதைக்கு வலு சேர்க்கிறது. ராஜசேகரனுக்கும் மனைவிக்குமான உறவு, அவன் கொள்ளும் குற்ற உணர்வு, மகளுக்கும் அவனுக்குமான சிநேகம், துவக்கத்தில் இறுக்கமாக இருக்கும் மனைவி இறுதியில் அவனை ஏற்றுகொள்ளும் மனநிலைக்கு வருவது ஆகியவை அழகாக பதிவாகிறது. சாக்கடையாக தன்னை அவன் கருதிக்கொள்ளும் மனபோராட்டங்கள் ஊசலாட்டங்கள் கதையை மேலும் நெருக்கமாக உணர செய்கிறது. மரணத்திற்கு முன்னர் மீண்டும் அவன் அந்த மரத்தை எண்ணிகொள்வது கதையை ஒரு மாற்று குறைத்து விடுகிறது என தோன்றியது. ‘இந்த படிமம் இதற்காகத்தான்என செருகி வைத்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த மரம் எனும் படிமம் இதே தொகுப்பில் உள்ள வேறு இரண்டு கதைகளிலும் பயன்படுத்தபடுகிறது. ‘ஒரு முடிவுக்கு பிறகுகதையில் மாலதியும் ராகவனும் ஒருவருட மணவாழ்க்கை கசந்து மனமுவந்து பிரிய எண்ணுகிறார்கள். அதை அறிவிக்க கூட்டப்பட்ட விருந்தில் மாலதிக்கு சிறுவயதில் கேள்விப்பட்ட கதை நினைவுக்கு வருகிறது. ஏழை பெண்ணொருத்தி ஒரு மந்திரம் மூலம் மரமாகும் வரம் பெறுகிறாள். மரமாகி பூத்து குலுங்கி பூக்களை சேகரித்த பின்னர் மீண்டும் பெண்ணாகி விடுகிறாள். இதையறிந்து அவள் மீது மையல் கொண்டு மனம் புரிகிறான் ஒருவன். இந்த உருமாற்றம் அவனை கிறங்கடிக்க செய்கிறது. ஒரு அக்கறையற்ற தருணத்தில் கணவனின் அலட்சியம் காரணமாக மரமாகவே உறைந்து விடுகிறாள். மன்மறைந்து காற்றில் கலந்து அவன் மரத்திடம் மன்றாடுகிறான். இந்த கதையில் வரும் மரமாக மாலதி தன்னை உணர்கிறாள். உணர்சிகளற்று உறைந்த மரம்.

மற்றொரு கதையானமரம்தந்தையின் உக்கிரமான நினைவுகளை அவரது வன்மத்தை சொல்கிறது. செல்லமாக வளர்ந்த மகள் காதல் திருமணம் புரிந்துகொண்டதை தாங்க முடியாமல் துரத்தி துரத்தி அவர்களை அழிக்க முயலும் வன்மத்தை சுமந்தலைந்து பித்தேறி அழிகிறார். மகனின் பார்வையில் சொல்லப்படும் கதை தந்தையிடம் தான் மட்டுமே அறிந்த ரகசியத்தை பற்றி கேட்க துணியாதது குறித்து குற்ற உணர்வு கொள்வதோடு முடிகிறது. “காற்றின் விசையில் நாலு திசைகளிலும் கிளைகள் இழுபட்டு ஆடிக்கொண்டிருந்தாலும் உறுதி குலையாமல் நின்றிருந்தது மரம். கண்ணுக்குத் தெரியாத ஒரு யுத்தத்தை அது காற்றோடு நிகழ்துவதைப்போல இருந்தது. காற்றின் தந்திரம் கிளைக்குப் புரியவில்லை. கிளைகளின் உறுதி காற்றுக்குப் புரியவில்லை. முன்னும் பின்னுமாக அலைகழிக்கபட்டாலும் ஆயாசமில்லாமல் ஊக்கத்துடன் அசைந்து கொண்டிருந்தன கிளைகள்

மரம்காற்று தேக்கத்தையும் நெகிழ்வையும் சொல்லி செல்கிறது. மற்றொரு எல்லையில் நிலைத்தலையும் அலைகழிப்பையும் சுட்டுகிறது. ஒரே படிமத்தின் நேர்மறை எதிர்மறை பயன்பாடுகளை ஒரு தொகுப்பிலேயே கண்டடைவது சுவாரசியமான அனுபவமாக இருக்கிறது.

சினிமா இயக்க வேண்டும் என பதிமூணு ஆண்டுகளாக கனவு கொண்டிருப்பவனும் ஒரு எல்..சி ஊழியனுக்கும் இடையிலான உரையாடல் தான் இந்தக்கதை. மகாபலிபுரத்தில் வானவில்லின் பின்புலத்தில் கதை துவங்குகிறது. இயக்குனராக முயற்சி செய்யும் குலசேகர் ஆரவமுடன் பேசுகிறான். பாலு கேள்விகளை கேட்கிறார். சினிமா மீது எப்படி ஆர்வம் வந்தது? அவன் பட்ட துயரங்கள் என உரையாடல் விரிகிறது. அவனுடைய திரைக்கதைகளை சுருக்கமாக சொல்கிறான். விருதுகள் பெற்ற பின்னர் அளிக்க வேண்டிய நேர்காணல் வரையும் யோசித்து வைத்திருக்கிறான். திரைக்கதைகள் சுவாரசியமானவை. இந்த கதையை அவன் கூறும் வாழ்க்கை நிகழ்வுகளையும் திரைக்கதைகளையும் சேர்த்து வாசிக்க வேண்டும் என தோன்றியது.

இருவரின் மாறுபட்ட பின்புலங்கள், ரசனைகள் வாழ்க்கை ஆகியவை ஏறத்தாழ எதிரெதிர் புள்ளிகளில் நிற்கின்றான. பாத்திரங்களை எதிரெதிர் துருவங்களாக அமைந்துள்ளன. பொதுவாகவே பாவண்ணனின் கதைகளில் துருவங்களுக்கு இடையிலான ஊடாட்டம் இருப்பதாக தோன்றியது. மற்றொரு கதையானதெளிவில்இது நுட்பமாக வெளிப்படுகிறது. பிரதான கதை மாந்தர் ராதாவிற்கும் ஜெயந்திக்கும் இடையிலான ஒற்றுமையும் விலகலும் புலப்படுகிறது. இந்த தொகுப்பின் மிக சிறந்த கதைகளில் ஒன்று. திருமணமாகி சில மாதங்களில் கர்பிணி மனைவியை விட்டுவிட்டு வேலை விஷயமாக வெளிநாடு சென்ற கணவன். தனிமையில் வாடும் மனைவி தனது தேர்வு சரிதானா என எண்ணி குழம்புவதும், தனது முந்தைய காதலனின் நினைவுகளால் அலைகழிவதும் என நவீன வாழ்வின் மிக முக்கியமான சிக்கலொன்றை பேச முயல்கிறது கதை. ராதா அகாலத்தில் எழுந்து கணவனோடு பேசுகிறாள். குறுகிய கால மண வாழ்வின் தருணங்களை அவன் தினமும் மீண்டும் மீண்டும் மீட்டுகிறான். அவனுடைய நினைவாற்றல் ராதாவிற்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. மிரட்சியை கூட அளிக்கலாம். ஒருவகையில் இவ்வுறவின் மீதான கவனமின்மை, முந்தைய உறவிலிருந்து பூரணமாக மீளாததும் கூட காரணமாக கொள்ளலாம். ராதாவின் தோழி ஜெயந்தியும் கர்பிணி தான். அவளது கணவரும் வெளிநாட்டில் தான் வாழ்கிறான். ஆனால் ஜெயந்தி தனிமையில் இல்லை. அவளுடன் அவளது மாமியாரும் மாமனாரும் வாழ்கிறார்கள். பூங்கா நடைபயிற்சியின் போது அற்புதமாக பாடல்கள் பாடும் சிறுமிகளுக்கு பள்ளி கட்டணத்திற்கு தயக்கமின்றி ராதாவால் ஐநூறு ரூபாய் அளிக்க முடிகிறது. ஜெயந்திக்கு அளிக்க மனமிருந்தாலும்அது ஒன்றும் அவளுடைய பணம் அல்லஎன்பது சொல்லபட்டிருக்கிறது. கல்வி கற்று வேலையில் இருப்பவள் ராதா. பிள்ளை சிகப்பாக பிறக்க வேண்டும் என புகுந்த வீட்டாரின் நிர்பந்தத்தை எண்ணி மருளும் ஜெயந்தி என இருவரின் குணாதிசயமும் கதையின் முடிச்சுக்கு வலு சேர்க்கிறது. ராதா சந்தானத்தை எண்ணி குழம்புகிறாள். இசையாக அவன் நினைவுகள் அவளுள் எழுந்து அவளை கொந்தளிக்க செய்கிறது. ஜெயந்தி தன்னை நேசித்த ராகவனையே திருமணம் செய்து கொண்டிருந்தால் ஒருவேளை நிம்மதியாக இருந்திருக்கலாமோ என வெளிப்படையாக வருந்துகிறாள். கருக்கிருட்டில் ராதாவை அலைகழித்த குயிலோசைகள் புலர்ந்த பின் காணாமல் போய்விடுகின்றன. “எதிலும் தெளிவு வேண்டும்குழப்பிக்கொள்ள வேண்டாம் என ஜெயந்திக்கு ஆலோசனை வழங்கிவிட்டு புன்னகைத்து மீண்டும்தெளிவு வேண்டும்என தனக்கே சொல்லிகொள்கிறாள். நாளையும் கருகிருட்டு வரும், அதன் பின்னர் விடியலும் வரும். அவிழ்க்க முடியாத முடிச்சுகளை போட்டபடியும் அதற்காக ஏங்கியபடியும் தான் வாழ்ந்தாக வேண்டும். மீண்டும் மீண்டும் அவநம்பிக்கையைகளையும், அவைகளை எதிர்கொள்ளும் சால்ஜாப்புகளையும் உருவாக்கிக்கொள்ளத்தான் வேண்டும்.    

இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளநித்யாநேரடியான எளிய கதை. ஆனால் அதன் சித்தரிப்பின் வலிமையாலும், அது அளிக்கும் துயரத்தாலும் மனதை மிகவும் தொந்திரவு செய்யும் கதையும் அதுவே. ஒரு அனாதை இல்லத்தில் வளரும் குழந்தை மீது அங்கு வரும் தம்பதியினர் கொள்ளும் பரிவை சொல்கிறது. மரணபடுக்கையில் இருக்கும் நித்யாவையும் அவளுடைய நண்பர்களையும் மகாபலிபுரம் அழைத்து செல்கிறான் ரவி. இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள இரண்டு கதைகளில் மகாபலிபுரம் ஒரு படிமமாக துலங்குகிறது. “எட்டு திரைக்கதைகளும் ஒரு நேர்காணலும்கதையில் குலசேகர் எழுதும் திரைக்கதைகளில் ஒன்றில் மகாபலிபுரத்தை பற்றிய குறிப்பிருக்கிறதுஇந்தக் கரையில பல கோயில்கள கட்டனான் பல்லவ மன்னன். கடலுக்கு ஏதோ பொருமல். அகங்காரம். தனக்கு நெருக்கமா நிக்கறதுக்கு இதுக்கு என்ன தகுதின்னு நெனைக்கற மாதிரி. காலங்காலமா இந்த கோயிலகள பாத்து பொருமிகிட்டே இருக்குது. உன்ன விடமாட்டேன்னு கோயிலகள பாத்து ஒவ்வொரு நிமிஷமும் பாஞ்சிகிட்டே இருக்குது. நூற்றாண்டு கணக்கா தொடருது இந்த பாய்ச்சல். ஒவ்வொரு கோயிலா விழுங்கி சிரிச்சுகிட்டே இருக்குது கடல். இன்னும் நீதான் பாக்கி சத்தமா ஒரு அகங்காரச் சிரிப்பு கேட்டுகிட்டே இருக்குது. அழியப் போறத பத்தி எந்த கவலையும் இல்ல, இருக்குறவரைக்கும் எப்படி இருக்குறேன்ங்கறதுதான் முக்கியம்னு உறுதியா நிக்குது கோயில்.” என்கிறார்.

நோயுற்றிருக்கும் நித்யா மீண்டும் மீண்டும் மகாபலிபுர கோயிலை கடல் கொண்டு சென்றுவிடும் என அஞ்சுகிறாள். இப்போது போய் பார்த்தாலும் கூட என்றேனும் ஒருநாள் அது கடலால் கொண்டு செல்லப்படும் என அஞ்சுகிறாள். ரவிமூழ்குவதும் மூழ்காததும் வேற பிரச்சனை..நாம் சென்று பாத்து வரலாம்என்கிறான். தன்னை அக்கோவில் இடத்தில் வைத்து பார்க்கும் நித்யா அவள் அஞ்சும் ஆற்றலால் கொண்டு செல்ல படுகிறாள். ஒரு குழந்தை மரணத்தை எப்படி எதிர்கொள்கிறது? அவளுக்கு எத்தனை குழப்பமாக இருக்கும். காரண காரியங்களை விளக்கி கொள்ளும் நிலையில் அவளில்லை

ரத்தம்தந்தைமகள் உறவை மிக நுட்பமாக பதிவு செய்கிறது. தாயுமானவனாக தன் மகனையும் மகளையும் வளர்க்கும் தந்தை அகால மரணமடைகிறார். அதை அவருடனேயே நெருக்கமாக வளர்ந்த மகளால் ஏற்றுகொள்ள முடியவில்லை. தன் குருதியில் அவர் இருக்கிறார் என கீறி காண்பித்தபடியே இருக்கிறாள். ரத்த உறவுள்ள மகன் தந்தையின் இடத்தை நிரப்ப முடியும் சாத்தியத்தை சொல்லி முடிகிறது கதை. ‘ரத்தம்கதையில்  ஒருவகையான தந்தைமகள் உறவை காட்டும் பாவண்ணன் நேரெதிராக அகங்காரமும் வன்மமும் பழிவாங்கும் வெறியும் நிறைந்த தந்தைமகள் உறவைமரம்கதையில் கையாள்கிறார். ரத்தம் நகரத்து நவீன தந்தையையும் மரம் நிலபிரபுத்துவ கிராமத்து தந்தையையும் சித்தரிக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

ரத்தம்ஒருவித உளசிக்கலை சித்தரிக்கிறது எனில்அழைப்புவேறுவித சிக்கலை நுட்பமாக சித்தரிக்கிறது. ஒன்றரை வயது குழந்தையின் மரணத்தை தாங்க முடியாமல் புத்தி பேதலிக்கிறாள் அந்த அன்னை. அனாதை இல்லத்தில் வளரும் அவள் படித்து அடைந்த வேலையை இழக்கிறாள். ஆனால் பணியில் இருப்பதாகவே கற்பனை செய்து கொள்கிறாள். வாயிலில் அவளை அழைத்து செல்ல வண்டி நிற்பதாக ஒவ்வொரு நாளும் எண்ணுகிறாள். அவளுக்கு மட்டுமே ஒலிக்கும் அழைப்புமணி அவளை உசுப்புகிறது. அவள் அதை நோக்கி சென்றபடி இருக்கிறாள். இறுதியில் மீள முடியாத தொலைவுக்கு சென்று விடுகிறாள். இந்த கதை மனபிறழ்சியை அச்சமூட்டும் அளவிற்கு நுட்பமாக சித்தரித்து வாழ்வின் மிகக் குரூரமான எல்லையில் சென்று முடிகிறது.

பார்வைகதையும் ஒருஇல்லத்தைகளமாக கொண்டது. பார்வையற்ற ஒரு பெண் பார்வையடைய கொள்ளும் தடுமாற்றத்தை பதிவு செய்கிறது. பார்வையடைந்த ஒரு தோழியும் அவளுடன் இருக்கிறாள். பார்வையற்ற பெண் எழுதும் கவிதைகளில் ஆச்சரியமாக வண்ணங்களும் உருவங்களும் நிறைந்திருக்கின்றன என்றொரு அவதானத்தை வைக்கிறார்.

மகாபலிபுரம்கடல், மரம்காற்று, ஆகிய இந்த இரு படிமங்களும் ஒரே கேள்வியின் இரு வடிவங்களாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. அலைகழிபவை நிலை பெறவும் நிலைபெற்றவை தேங்கி நிற்காமல் இருக்கவும் விழைகின்றன

அவருடைய கதை மாந்தர்கள் பரிவுள்ளவர்கள். ராஜசேகரனும் சரி, அவனுக்கு உதவும் தியாகராஜனும் சரி, பாலுவும், குலசேகரும், ரவியும், சித்ராவும், ராமமூர்த்தியும் கருணையை சுரக்கிறார்கள். நித்யா, பார்வை, அழைப்பு ஆகிய மூன்று கதைகளிலும்இல்லங்கள்வருகின்றன. அவை நல்லவர்களால் நடத்தபடுகின்றன. நல்லவர்களையே உருவாக்கவும் செய்கின்றன. இந்த தொகுப்பில் உள்ள பாவண்ணனின் கதைகளின் அடிநாதமாக நான் இதையே காண்கிறேன். அவரை மீண்டும் மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது. ஏன் நன்மை வீழ்கிறது? வீழ்ச்சி தவிர்க்கவியலாதது என்றே மீண்டும் மீண்டும் அவர்கள் வாழ்ந்து காட்டி சொல்கிறார்களா? ‘ஏன்எனும் ஒற்றை கேள்வி, ஒரு மன்றாடல் இக்கதைகளின் வழியாக நம்முள் எழுகிறது. மறுபக்கம் வீழ்ச்சி தவிர்க்கவியலாதது தான் ஆனால் அதற்காக அதை அஞ்ச வேண்டியதில்லை, அஞ்சி ஒடுங்க வேண்டியதில்லை. இருக்கும் வரை வாழ்க்கையை அழகாக்கிகொள்ளவும் அர்த்தமாக்கிகொள்ளவும் முடியாதா? என கேட்கிறது.    

இந்த கதைகள் பெரும்பாலும் அதன் களம் சார்பாக, பேசுபொருள் காரணமாகவோ அல்லது மொழியின் விளைவாகவோ, ஒருவித திரைக்கதை அம்சம் கொண்டுள்ளதாக தோன்றியது. ‘சினிமாடிக்ஆக இருப்பது எதிர்மறையான விஷயமா என்றால் இல்லை. ஆனால் அது கதையை ஒரு வரையறைக்குள் கட்டிவிடுகிறது. குறிப்பிட்ட ஒரு திசையில் பயணிக்க வாசக மனம் வலியுறுத்தபடுகிறது. நுட்பமான விவரணைகளும் களமும் கொண்ட கதைகளும் கூட இறுதியில் இத்திசையில் தேர்வது ஒரு பலவீனம் என்றே எண்ணுகிறேன்

ஒட்டுமொத்தமாக ஒன்பது கதைகள் கொண்ட இத்தொகுப்பில்வெளியேற்றப்பட்ட குதிரை’, ‘நித்யா’, ‘அழைப்பு’, ‘மரம்ஆகிய கதைகள் உக்கிரமான இழப்புகளை துயரங்களை பேசுகின்றன. ‘ஒரு முடிவுக்கு அப்பால்’, ‘பார்வை’, ‘எட்டு திரைக்கதைகளும் ஒரு நேர்காணலும்’, ‘ரத்தம்ஆகிய கதைகள் நம்பிக்கையுடன் முடிகிறது. இத்தொகுப்பினுடைய முன்னுரை முக்கியமானது. ஒரு மழை காலத்தில் சாளரத்தருகே அமர்ந்து தெருவில் பெருக்கெடுத்து ஓடும் நீரை பார்க்கிறார். அங்கிருந்து அவருடைய மகன் இளவயதில் கப்பல்விட்ட அனுபவம் நினைவுக்கு வருகிறது. காகித கப்பல்கள் சற்று தூரம் நீரில் பயணித்து மூழ்கிவிடுகிறது அல்லது கரையில் தரைதட்டி நின்றுவிடுகிறது. அங்கிருந்து அவருடைய மனம் நதியில் ஓடும் ஓடத்திற்கு தாவுகிறது. நதிவழி பயணம், எதிர்வழி பயணம் என இரு வாய்ப்புகள் உண்டு. எது பாதுகாப்பானது எனும் கேள்வியை எழுப்புகிறார்? ‘எந்தப் பயணத்திலும் பாதுகாப்புக்கும் பாதுகாப்பின்மைக்கும் சம அளவு வாய்ப்பிருப்பதாகவே தோன்றியது.’ என எழுதுகிறார்.

ஒரு தொகுப்பை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக பாவண்ணனை வகுத்துவிட முடியாது என்றாலும் அவருடைய படைப்புலகின் சில அக்கறைகளை கவனிக்க முடியும் என்றே எண்ணுகிறேன். பாவண்ணனை காலகிரம்மமாக காலந்தோறும் அவருடைய படைப்புலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வாசிக்கும் போது அவருடைய முக்கியத்துவம் புலப்படகூடும்.