பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி
சுசீலாவிற்காக எழுதிய கடிதத்தின் பாதி
சித்தார்த்தனின் சொப்பனத்தில்
எப்போதும் போல இன்றும்
மாறாமல் வந்துவிட்டது
அந்தக்காட்சி,
என்றும் ஈரம் தாங்கிய
பூக்களின் நறுமணமாய்
பதியமாகிப் போன
சுசீலாவைப் பற்றிய
புன்னகைக்குறிப்புகளில் ஒன்று.
மழைக்கு பிந்தைய
அதிகாலைப் பொழுதொன்றில்
வீட்டின் அருகிருந்த
புல்வெளிக்காட்டில்
சிறு சிறு
வெண்குடைக்காளான்களை
ஓடி ஓடித்தேடி
மண்ணைத் தோண்டி
அடித்தண்டு வேர்முறியாமல்
பறித்ததில் சிதறிய
அவளுடைய கொலுசின்
சிணுங்கல்கள் மீட்டும்
வெள்ளி மணிகளின்
சமிக்ஞையை போல.
இறுதிச்சுற்று நிலவரப்படி
அர்த்தமற்றவை

யாரென
தெரியாத
முகங்கள்
கடத்திச்
செல்லும்
புன்னகையில்
இதுவரை
தொலைந்து
போய்
இருக்கிறீர்களா?
ஏதுமற்றும்
பேச
விழையும்
விழிகளை
கவனித்து
பேச
மறுக்கும்
மனதினை
சுமந்து
இருக்கிறீர்களா?
தொடர்பற்ற
சங்கதிகள்
எல்லாவற்றுக்கும்
ஏதோவொரு
தொடர்பிருப்பதாய்
எண்ணி
யாருமற்ற
வெளியில்
சிரித்துக்
கொள்கிறீர்களா?
பிடிக்குமா?
பிடிக்காதா?
என்ற
கேள்விகளுக்கு
உட்படாமல்
முடிய
மட்டும்
கூடாதென
வேண்டி
இருக்கிறீர்களா?
நாள்தோறும்
செல்லும்
வழியில்
கடந்து
போகும்
யாரேனும்
உங்களுக்கான
நினைவுகளை
தூவிச்
செல்வதை
உணர்ந்திருக்கிறீர்களா?
எல்லோருமாய்
அமர்ந்து
பேசிக்
கொண்டிருக்கையில்
சட்டென
என்ன
பேசினோம்
இதுவரை
என
மறந்துபோன
ஞாபகங்கள்
இன்னும்
இருக்கிறதா?
இப்படியான
ஆதியற்ற
தருணங்களின்
தகவமைப்புகள்
எப்போதும்
கட்டமைக்கபடுவதில்லை
இப்பொழுது
நான்
எழுதுவதைப்
போல…
