பீட்டர் பொங்கல்

போலிமொழியாக்கம் – பிரிஜெட் ராத்

பிரிஜெட் ராத் (Brigitte Rath)

(போலி மொழியாக்க புதினங்கள் குறித்து Brigitte Rath எழுதிய கட்டுரை, Mona Baker தளத்திலிருந்து, தமிழாக்கம்.)

1721ஆம் ஆண்டில் மான்டெஸ்க்யூ தன் “பாரசீக கடிதங்களை” அனாமதேயமாகப் பதிப்பித்தார். அதன் முன்னுரையில், இரு பாரசீகர்கள் தன்னுடன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் பாரசீகத்துக்கு எழுதிய கடிதங்களையும் அங்கிருந்து பெற்ற கடிதங்களையும் தான் பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்திருப்பதாக்வும் கூறினார். கடிதங்களின் தேதிகள், மாதங்களுக்குரிய பாரசீகப் பெயர்கள் தாங்கியிருக்கின்றன, பாரசீக பழக்கவழக்கங்கள் குறித்து மொழிபெயர்ப்பாளர் அடிக்குறிப்பில் சில விளக்கங்கள் அளிக்கிறார். இதற்குமுன் பாரசீக மொழியில் நம்பிக்கைக்குந்த ஒரு பிரதி இருந்ததாகக் கற்பனை செய்யத் தூண்டுகிறது “பாரசீக கடிதங்கள்”, என்ற பிரதி. நம்மை இந்த கடிதங்களின் முதல் வாசகர்களையும் கற்பனை செய்து கொள்ளச் சொல்கிறது- அவர்களுக்கு அடிக்குறிப்பில் உள்ள கூடுதல் விளக்கங்கள் தேவைப்படாது, ஏனெனில் அவர்கள் பிரெஞ்சு வாசகர்களைப் பொறுத்தவரை தங்களுக்குச் சிறிதும் அறிமுகமில்லாத ஒரு கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள். அன்னியம் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதது என்று குறிப்பிடும்போதே மான்டெஸ்க்யூவின் பிரதி அதை வாசிக்கத்தக்கதாகவும் செய்கிறது; வேற்று மொழியில் எழுதப்பட்ட, வாசிக்கப்பட முடியாத அந்தரங்கத்தன்மை கொண்ட கடிதங்களை வாசிக்கும் வாசக விருப்பத்தோடும், வாசகர்களுக்குப் பழக்கப்பட்ட உலகம் குறித்த அன்னிய பார்வையோடும் அது விளையாடிப் பார்க்கிறது. (more…)

சீர்: கவிதையும் ஓசையும் – பீட்டர் க்ளைன்

பீட்டர் க்ளைன்

(கவிதையின் ஓசை நயம் குறித்து Ploughshares என்ற தளத்தில் Peter Kline எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்).

என்னைப்போல் இன்னொரு கவிஞன் இல்லை என்று நினைக்கிறேன். புதுக்கவிதையின் காலத்தில் இலக்கணச் சுத்தமாய் கவி புனைந்து கொண்டிருக்கிறேன் (உரைநடையின் காலத்தில் கவிதை எழுதுவதில் உள்ள பொருத்தமின்மை பற்றிச் சொல்லவே வேண்டாம்). ஆனால் தற்போது முன்னிலைப்படுத்தப்படும் இலக்கண இயக்கங்கள் பெரும்பாலானவற்றுடன் எனக்கு எந்த உறவும் இருப்பதாகத் தெரியவில்லை. பேசுபொருள், பொதுப்பார்வை போன்ற விஷயங்களுக்கு அப்பால் உள்ள ஒரு பிளவு என்னைத் தனிமைப்படுத்துகிறது. இவற்றுக்கும் பங்குண்டு என்றாலும் வடிவம் குறித்த அடிப்படைச் சிந்தனையில் ஒரு பேதம் இருக்கிறது. தமக்கென்று ஒரு இடம் உருவாக்கிக்கொண்ட, மரபார்ந்த இலக்கண வடிவைப் பயிலும் கவிஞர்களை இளம் எழுத்தாளர்கள், முக்கியமற்ற, இயந்திரத்தன்மை பொருந்திய செய்நேர்த்தி கொண்ட கவிதைகள் எழுதும் பிற்போக்குவாதிகள் என்பதுபோல் பார்க்கின்றனர். இப்படிப்பட்ட விமரிசனங்களில் நியாயமில்லை என்று நினைக்கிறேன்- நவீன இலக்கணக் கோட்பாடுகள் பலவும் சரி போலிருக்கின்றன (தொழில்நுட்பத்தையும் உன் மரபையும் கற்றுக்கொள், கவனமாக எழுது)- ஆனால் காலத்தைக் கடந்து நிற்கும் கவிதைகள் பல உருவாக இன்னும் இவை காரணமாகவில்லை. (more…)

மரணித்தல் – டெப் ஓஃபின் உன்ஃபர்த்

(Gigantic எந்த தளத்தில் Deb Olin Unferth எழுதிய சிறுகதையின் தமிழாக்கம்)

அவன் எழுதினான். தோழி இறந்து கொண்டிருக்கிறாள் என்று சொன்னான். இவை அவளது இறுதி நாட்கள் என்றான், இது எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவன் நினைத்ததாகச் சொன்னான். நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அவளைப் பார்த்து பல யுகங்கள் ஆகியிருந்தன. ஆனால் எப்போதும் அவளை நாங்கள் நேசித்தோம், அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அவளுக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டிருந்தோம் (சில மாதங்களுக்கு ஒரு முறை அவளது உடல்நலம் குறித்து அவன் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்)- அவள் உடல்நிலை மிகவும் மோசமாகி இருந்தது. நாங்கள் பயணம் செய்யத் திட்டமிட்டோம் அல்லது, அவளைப் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்களாவது எங்களுக்கு இருந்தன. அவள் உடல்நலமில்லாமல் இருக்கிறாள் என்பது சென்ற ஆண்டு எங்களுக்கு முதன்முதலாய் தெரிய வந்தபோது காரை நிரப்பிக்கொண்டு அவளைப் பார்ப்பதற்கான நான்கு மணி நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்தோம். பழைய நாட்களைப் போல் அவள் வீட்டின் முன் அறையில் தங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தோம், ஆனால் அதைச் செய்யவில்லை. ஓராண்டு காலம் அதையே சொல்லிக் கொண்டிருந்தோம், “சீக்கிரம் கிளம்புவோம்,”. அவள் உடல்நிலை இன்னும் மோசமானது. அவன் எழுதும்போது, தொலைபேசியில் அழைத்தாவது பேசலாமே என்றான், கொஞ்சம் நட்பாக நாலு வார்த்தைகளை அவளுக்குச் சொல்லலாம். ஆனால் எங்களுக்குப் பேசச் சங்கடமாக இருந்தது, என்ன பேச முடியும் என்று தெரியவில்லை. “புதுப்பித்துக் கொள்ளலாம்”, என்று நினைத்தோம். ஆனால் அவள் உடல்நிலை அவ்வளவு மோசமாக இருப்பதைப் பார்க்கும்போது எங்கள் அன்றாட விவகாரங்கள் மிகவும் அற்பமாகத் தெரிந்தன. ஒரு மின்மடலாவது அனுப்பலாம் என்று நினைத்தோம். புகைப்படம் ஒன்றை இணைக்கலாம், ஆனால் அதையும் செய்யவில்லை. அதன்பின் அவன் எழுதும்போது அவள் விமானத்தில் டெக்சாஸ் செல்லப் போகிறாள் என்றான், அவளது உடலெங்கும் கீமோ நிறைத்து அகற்றப் போகிறார்கள். சோதனை முயற்சியாய் ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போவது குறித்துச் சொன்னான். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம், ஓர் இழப்பை உணர்ந்தோம், எனினும் ஒன்றும் செய்யவில்லை. (more…)

உயிர்ப்பசி – காலத்தை வெல்லும் கவிதைகள் குறித்து ஒரு விவாதம்- ஜே. டி. மக்லாட்சி

(நாம் மாநகர ரயில் அல்லது பேருந்து ஒன்றில் ஏறுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இருக்கை காலியாய் இருக்கிறது, ஓடிப் போய் அமர்ந்து ஆசுவாசமடைந்ததும் மெல்ல அதிகரிக்கும் எரிச்சலுடன் கவனிக்கிறோம், நம்மருகில் அமர்ந்திருப்பவர் யாருடனோ தன் மொபைலில் உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறார். நமக்குச் சம்பந்தமில்லாத விஷயம் மாதிரிதான் இருக்கிறது- யாரோ இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேசும் விஷயத்தின் சுவாரசியம் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கிறது- அப்படிப்பட்ட ஒரு கட்டுரை இது, J.D. McClatchy எழுதிய “உயிர்ப்பசி” (Hungry for Spirit) என்ற கட்டுரை, Boston Review என்ற தளத்தில் வெளிவந்தது. அதன் எளிய மொழிபெயர்ப்பு இது)

இதில் எனக்கு ஏன் இந்த அக்கறை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். ஹரோல்ட் ப்ளூம் தொகுத்த நூலில் நான் எழுதிய ஒரு கவிதையும் இடம் பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்ல, அவர் எனக்கு ஒரு ஆசிரியரும்கூட, இப்போது யேல் பல்கலைக்கழகத்தில் என் சகாவாகவும் இருக்கிறார். இந்தத் தகவல்களை நான் பாஸ்டன் ரிவ்யூ பதிப்பாசிரியரின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். ப்ளூமின் வாதம் குறித்து எதிர்வினை அளிக்குமாறு விடுத்த வேண்டுகோளை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ள இவை போதுமான காரணங்களாக இருக்கவில்லை. ஆனால் என் சார்புநிலை என்னவென்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

உண்மையில் ப்ளூமின் சர்ச்சைக்குரிய கட்டுரைதான் என்னைப் பின்னோக்கிச் செலுத்தி அட்ரியன் ரிச்சின் தொகுப்பை முழுமையாய் வாசிக்கச் செய்தது- இதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தேன். நல்ல காத்திரமான தொகுப்பு, “காட்டமான மருந்து” என்று சொல்வது போன்ற காத்திரம் இதில் இருக்கிறது- ஆனால் சிறப்பான தொகுப்பு என்று சொல்ல முடியாது. அதாவது, தொடரின் நோக்கத்துக்கும் நியாயம் செய்வதில்லை, ரிச்சின் உயர்ந்த, ஆத்திர அவசர லட்சியங்களுக்கும் உதவுவதில்லை. (more…)

யார் இந்த இஸ்மாயில் கதாரே? – ஆடம் கிர்ஷ்

(உலகளாவிய எழுத்தாளர்கள் அனைவரும் புக்கர் பரிசு பெறத் தகுதி கொண்டவர்கள் என்ற புதிய விதிமுறைகளுக்குப்பின் அப்பரிசு இஸ்மாயில் கதாரேவுக்கு 2005ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அப்போது Adam Kirsch நியூ யார்க் சன் என்ற பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது)

மேன் புக்கர் பரிசுத்தொகை வழங்குபவர்கள் இனி இப்பரிசு சர்வதேச அளவில் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தபோது அச்செய்தி பரபரப்பும் அவநம்பிக்கையும் கலந்த வரவேற்பு பெற்றது. 2012ஆம் ஆண்டு வரை முப்பதாண்டு காலமாக புக்கர் என்று அழைக்கப்பட்டு வந்த அப்பரிசின் கொடையாளர்கள் மாறி அது மேன் புக்கர் என்ற புதிய பெயர் பெற்றிருக்கிறது. இந்த முப்பதாண்டு காலத்தில் இது பிரிட்டனின் மிகவும் பெருமைக்குரிய இலக்கிய விருதாக மாறிவிட்டிருக்கிறது- அமெரிக்காவில் புலிட்சர் பரிசோ நேஷனல் புக் அவார்டோ அங்குப் பெற்றுத் தரக்கூடியதைக் காட்டிலும் அதிக கவனம் அளிப்பதாய் இருக்கிறது. (more…)