பீட்டர் பொங்கல்

மினெ மிஜுமூரா – ஆங்கிலத்தின் எழுச்சியும் பிற மொழிகளின் வீழ்ச்சியும் – ஷோ ஸ்பேத் மதிப்பீடு

 – ஷோ ஸ்பேத் மதிப்பீடு (Sho Spaeth) – 

(ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி என்ற மினெ மிஜூமூரா நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர்கள் மரி யோஷிஹரா மற்றும் ஜூலியட் வின்டர்ஸ் கார்பெண்டர் (Mari Yoshihara and Juliet Winters Carpenter). இந்த நூல் குறித்து ஃபுல் ஸ்டாப் என்ற தளத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் தமிழாக்கம் இது.)

பெருவாரி வாசகர்களின் இலக்கிய ரசனை குறித்து வீசப்படும் குற்றச்சாட்டுகள் போல் வெகுச் சிலவே என்றும் புதிதாய் இருக்கின்றன. குழந்தைக்கல்வி பிரச்சினை என்று பெரும்பாலும் அடையாளம் காணப்படுகிறது. இன்று புத்தகங்கள் அவற்றைவிட பிரகாசமான வண்ணங்கள் கொண்ட பொழுதுபோக்கு வடிவங்களோடு போட்டி போடும் காலத்தில் இருவகை குறைகள் சொல்லப்படுகின்றன- குழந்தைகள் அதிகம் வாசிப்பதில்லை, அப்படியே அவர்கள் வாசித்தாலும், அவர்கள் நல்ல விஷயங்களைப் படிப்பதில்லை.

இதைக் கேட்கவே அலுப்பாக இருக்கிறது. அ\தைவிட அலுப்பான விஷயம் இது திரும்பத் திரும்ப சொல்லப்படுவதுதான். எனவே சமீபகாலமாக சர்வதேச அளவில் ஆகிருதி கூடிவரும் ஜப்பானிய நாவலாசிரியர் மினெ மிஜூமூரா, இந்தக் குறையை ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி என்ற புத்தகத்தில் மிகப் பிரமாதமான வகையில் சுவாரசியமாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்டுரை, நினைவுக் குறிப்புகள், புலம்பல் என்று பலவற்றின் கலவையாக இருக்கும் இந்த நூல், இணைய யுகத்தில் ஆங்கில மொழியின் மிகப்பெரும் தாக்கம் குறித்து கவலைப்படுகிறது- இந்தப் போக்கு ஜப்பானுக்கு ஒரு மிகப்பெரிய தேசிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அவர் நம்பக்கூடிய வகையில் எழுதுகிறார். ஜப்பானிய மொழியின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சியை விவரித்து, அதைப் பாதுகாப்பதன் தேவையை வலியுறுத்தும்போதே அவர் ஜப்பானின் குறுகிய கரைகளைக் கடந்து, நாம் நம் செவ்வியல் படைப்புகளை மறக்கும்போது என்ன நடக்கிறது என்ற உலகளாவிய கவலையை எதிர்கொள்கிறார். .

மொழியின் வீழ்ச்சி, ஜப்பானில் எதிர்பாராத வெற்றி பெற்றது. இது அபுனைவுகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடிக்க ஒரு பெரிய காரணம் இருக்கிறது- ஜப்பானிய கல்வி அமைப்பைச் சீர்திருத்துவதற்கான மிஜூமூராவின் சில பரிந்துரைகள் ஆவேசமான விவாதங்களுக்கு வித்திட்டன. மிஜூமூராவின் பரிந்துரைகள் குறித்து நிகழ்த்தப்பட்ட எதிர்வினைகளில் சிலவற்றை மொழிபெயர்பபாளர்கள் மரி யோஷிஹரா மற்றும் ஜூலியட் வின்டர்ஸ் கார்பெண்டர் ஆகிய இருவரும் தங்கள் முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றனர்- அவர் வலதுசாரி சிந்தனையாளர், அரசகுல ஆதரவாளர், அவரது பரிந்துரைகள் பொருத்தமற்றவை, குறிப்பாக அவர் ஒரு பெண்ணாக இருக்கையில் ஜப்பானிய கலாசாரம் குறித்த ஆண்மையப் பார்வையைப் பிரதிபலித்திருக்க வேண்டாம்; அவர் நிச்சயம் ஒரு எலீட்டிஸ்ட்தான். அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் எலீட்டிஸ்ட்- தன் இளமைப்பருவத்தின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தவர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எழுத்தாளர்களுக்கே, அதிலும் குறிப்பாக மிகக் குறைந்த அளவு பெண்களுக்கே, சாத்தியப்படக்கூடிய வெற்றிக்குக் காரணமான கல்வி அமைப்பை அவர் குற்றம் கூறுகிறார் என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர்.

வேறு சிலர் அவரது ரசனையில் குற்றம் காண்கின்றனர்- எந்த அமெரிக்கர்களிடையே வளர்ந்தாரோ, அந்த அமெரிக்கர்களே அவர் மிகக் கேவலமாகக் கருதும் சமகால ஜப்பானிய எழுத்தாளர்களை நேசிக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த புத்தகத்தின் ஒரு நல்ல விஷயம், மிஜூமூரா தன் தரப்பை முன்வைக்கும்போதே இந்த ஒவ்வொரு எதிர்வினையையும் முன்கூட்டியே அவதானித்து அதற்கு பதிலும் அளிக்கிறார். ஆனால் நம் காலத்தில் மேலோங்கியிருக்கும் பார்வையால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயத்தை அவர் தன் கருத்தில் கொள்வதில்லை என்பது நம்மை யோசிக்க வைக்கிறது- நாவல்கள், அவற்றின் நாவலாசிரியர்கள், நம் கேளிக்கைக்காகவே இருக்கின்றனர் என்ற கருத்தை நிராகரிக்கும் அவரது வெகுளித்தன்மை.
புத்தகத்தின் துவக்க பகுதிகில் அவர் விரிவான வாசிப்புள்ள ஒரு ஜப்பானிய நண்பருடன நிகழ்த்திய உரையாடலை விவரிக்கிறார்- சமகால ஜப்பானிய இலக்கியச் சூழல், “குப்பையாய் எழுதும் மூளையில்லாத எழுத்தாளர்களால்” நிறைந்திருக்கிறது என்று தன் நண்பர் சொல்வதை சிரித்துக்கொண்டே வேடிக்கையாய் ஒப்புக் கொள்கிறார்.

“ஒருவேளை நானும் என் நண்பரும் ஜப்பானிய இலக்கியத்தின் நவீன செவ்வியல் ஆக்கங்களைத் தோய்ந்து வாசித்திருந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களாய் இருப்பதால் எங்களுக்கு புதிய எழுத்தை ரசிக்கத் தெரியவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அல்லது, புதிய எழுத்தில் பெரும்பாலானவை குறைந்த மதிப்பு கொண்டவை என்பதும் உண்மையாக இருக்கலாம்.

“வெகு காலம் முன்னர், நான் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஜப்பானுக்குத் திரும்பி அங்கு ஜப்பானிய மொழியில் நாவல்கள் எழுதத் துவங்கினால் எப்படியிருக்கும் என்று நினைத்த போதெல்லாம் அடர்ந்த ஒரு காடும் அதில் மகோன்னதமாய் உயர்ந்து நிற்கும் மரங்களுமே என் கண் முன் தோன்றின..நான் அவற்றின் நிழலில் அமைதியாகவும் தன்னடக்கத்துடனும் எழுதிக் கொண்டிருப்பேன், ஒரு பெண் எழுதத்தக்க சாதாரண விஷயங்களை, அங்கொன்றும் இங்கொன்றுமாக. ஆண் பெண் சமத்துவம் நேரடி அனுபவமாய் அறிமுகப்பட்ட ஒருவருக்கு இது சோகமான சித்திரம்தான் என்றாலூம் புகுஜாவா யூகிச்சி, ஃபுதபடாய் ஷிமை, நத்சுமே சோசெகி, ,மோரி ஒகாய், கோடா ரோகன், தனிஜாகி ஜூனிசிரோ போன்ற பேராளுமைகளால் என் தேசம் இன்றும் நிறைந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்- அவர்களது அறிவு, போதம், புத்திசாலித்தனம் நம்மை அச்சுறுத்தும் தன்மை கொண்டது.

“மகோன்னதமாய் உயர்ந்த மரங்கள் கொண்ட எந்த அடர்கானகமும் நான் நாடு திரும்பியதும் கண்டடைய முடியாமல் போகலாம் என்ற எண்ணம் ஒரு போதும் எனக்கு எழவேயில்லை. ஆனால் அப்படிதான் நடந்தது. இங்கொரு மரம் அங்கொரு மரம் என்று பார்க்க முடிந்ததே தவிர நான் கண்ட காட்சி தட்டையாகத்தான் இருந்தது. “பெருஞ்சோகப் பாழ்நிலம்” என்பது போன்ற கவித்துவ வர்ணனைகளுக்கும்கூட தகுதியற்ற அந்த வெளி, சிறியதாகவும் ஆரவாரமானதாகவும் இருந்த அனைத்துக்குமான விளையாட்டு மைதானம் போலிருந்தது- வெறும் முதிரா இளமையின் வெளிப்பாடு. நான் யாரை மிகப் பெரிதாய் மதித்தேனோ, அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைக்கூட என் சமகாலத்தவர்கள் மறந்து விட்டார்களா என்ற சந்தேகமே எஞ்சி நின்றது.

மிஜூமூராவின் நடை குறித்த அறிமுகமில்லாத வாசகர்களுக்கு இந்த எதிர்மறை மதிப்பீடு அவரது அனிச்சை அவதானிப்புகள், பழக்கங்கள், கருப்பொருட்கள் ஆகியவற்றில் சிலவற்றைச் சற்றே வெளிச்ச்சமிட்டுக் காட்டுகிறது- புறப்பார்வைக்கு தியானம் போன்ற எழுத்து, ஆனால் அதனூடே புத்திசாலித்தனமாய்த் தனது தன்னடக்கம் குறித்து உணர்த்திக் கொள்வது, ஒற்றைப்படையாய் முன்வைக்கப்படும் கறாரான தீர்ப்பு, பட்டாலான கையுறை போன்ற அவரது உரைநடையுள் பொதிந்திருக்கும் இரும்புக்கை குத்து; எல்லாவற்றுக்கும் மேல், நவீன ஜப்பானிய இலக்கியத்தின் தலைசிறந்தவற்றைக் குறிக்கும் பட்டியலிலுள்ள எழுத்தாளர்கள் மீதான கட்டற்ற பெருமதிப்பு.

1868ல், மெய்ஜி சகாப்தம் துவங்கியபோது அதுவரை வெளியுலகிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டிருந்த ஜப்பான் தன் வாசல்களைத் திறந்து கொண்டதும் அதன் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், மிஜுமூரா, “மேற்கின் அதிர்ச்சி” என்றழைக்கும் அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அதற்கடுத்த நூறாண்டுகளில் படைக்கப்பட்ட ஆக்கங்களே நவீன ஜப்பானிய இலக்கியத்தின் செவ்வியல் ஆக்கங்களாய் கருதப்படுகின்றன. பலவகைகளில் அந்தக் கானனுக்கும் அதன் கிளாசிக்குகளுக்கும் எழுதப்பட்ட காதல் கடிதமே இந்தப் புத்தகம். மொழிகளின் வளர்ச்சியும் தேசிய இலக்கியங்கள் பற்றியும் எய்யப்படும் அறிமுகம், நவீன ஜப்பானிய கானனின் அருமையையும், அதன் உருவாக்கத்துக்குக் காரணமான அதிர்ஷ்டவச சூழ்நிலையையும் உணர்ந்து கொள்வதற்கான பின்புலமாய் மட்டுமே அளிக்கப்படுகிறது. ஜப்பானிய இலக்கியம் குறித்து அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது ஒன்றேகூட விலைமதிப்பற்ற சேவையாக இருக்கிறது.

இந்தக் கானன் மிஜூமூராவுக்கு எதை உணர்த்துகிறது? ஜப்பானிய மக்களுக்கு அடிப்படை முக்கியத்துவம் கொண்டதாய் இருக்கிறது அது ஏன் இருக்கிறது என்று அவர் வாதிடுகிறார்? முராசாகி ஷிகுபுவின் கெஞ்சி கதை துவங்கி பதினொன்றாம் நூற்றாண்டு இலக்கியம் வரை நீண்டு செல்லும் இடையறாத மரபுத் தொடர்ச்சியுடன் இன்றைய ஜப்பானிய இலக்கியத்தை இணைக்கும் [பாலமாய் அது இருக்கிறது. இது குறித்து மிஜூமூரா இவ்வளவு ஆத்திரப்பட வேண்டிய தேவை என்ன? இளம் ஜப்பானிய வாசகர்கள் இந்தச் செவ்வியல் ஆக்கங்களைப் புறக்கணிக்கக் காரணம், அவர்களால் அந்தப் பாலத்தைக் கடக்கவே முடியாது என்பதுதான்- 1946ஆம் ஆண்டின் அரசு ஆணைகள் ஜப்பானிய மொழியின் ஒலிப்பமைப்பை மாற்றிவிட்டன. மேற்கத்திய அனுபவத்துக்கு ஜப்பானிய மொழியனுபவம் எந்த அளவுக்கு மாறுபட்டது என்பதை உணர இதை நினைத்துப் பார்க்கலாம்- வால்டன், அல்லது மொபி-டிக், அவ்வளவு ஏன் 1984 நாவல்கூட, இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்டது போலிருந்தால் எப்படி இருக்கும்? எங்கும் ஆங்கிலம் விரவியுள்ள இந்தக் காலத்தில் இந்த அடிப்படை இடர்தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிறார் மிஜுமூரா, “தன்னைக் காத்துக்கொள்ளாத மொழி அழிந்து போகும். அதன் சொற்கள் புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தாலும், அந்தப் புத்தகங்கள் வாசிக்கப்படாமல் அழியும்”.

ஒரு நாவலாசிரியராக மிஜூமூராவின் வாழ்க்கை லட்சியமும், அதனுடன் எழுத்து குறித்த அவரது நேசமும் ஆங்கில மொழியின் மேலாதிக்கம் குறித்து ஜப்பானுக்கு வெளியில் உள்ள பரந்த உலகுக்கு அவர் அளிக்கும் எச்சரிக்கைக்கு முக்கியமாக இருக்கின்றன. இந்த எச்சரிக்கை எந்த வடிவில் எழுப்பப்படுகிறது என்பதற்கும் இது முக்கியமாய் இருக்கறது- மிஜுமூராவின் திகைக்க வைக்கும் வாசிப்பும் விரிவான ஆர்வமும் வெளிப்பட்டாலும் மொழியின் வீழ்ச்சி ஆய்வு நூலல்ல, அதை ஒரு நாவலாசிரியரே எழுதியிருக்க முடியும் என்பது வெளிப்படை. அவரது வாதங்கள் நேர்க்கோட்டில் செல்வதில்லை, வட்டமிட்டு முன்னேறுகின்றன. வரலாற்று அல்லது மொழியியல் ஆய்வு என்று நினைக்க முடியாத வகையில் இதில் ஒரு அந்தரங்கத் தன்மை கொண்ட வெளிப்பாட்டை நாம் காண முடிகிறது. மிக கவனமாக இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் மிஜுமூரா- கறாரான சரித்திர அடிப்படையிலோ மொழியியல் அடிப்படையிலோ முன்வைக்கக்கூடிய விமரிசனங்களைக் கூர் மழுங்கச் செய்யும் தன்மை கொண்ட வகையில் அவர் தன் வாதங்களைக் கதைசொல்லலோடும் வாழ்வனுபவங்களோடும் பிணைத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம், இதை வாசிப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறது, வரண்ட, இறுதியில் துவளச்செய்யும் கதையாடலாய் அமைந்திருக்க வேண்டிய புத்தகத்தில் அவரது அறிவும் ஆளுமையும் பிரகாசிக்கின்றன. தன் தாய் மொழி எவ்வாறு உருவானது என்ற பின்புலம் குறித்த தன் அறியாமையை மெல்ல மெல்ல விளங்கிக் கொள்வது என்ற சட்டகத்தில் அவர் தன் வாதத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கிறார்- அவரது வாசகர்கள் தங்கள் குறைகளை ஏற்றுக் கொள்ளவும், தமக்குச் சமபந்தமில்லாமல் தோற்றுவிக்கப்பட்ட மொழியின் நிலை குறித்து தம்மிடம் உள்ள கவனமற்ற பெருமிதத்தையும் பெருமையையும் துவக்கத்தில் மிஜுமூராவிடம் காணப்படும் கவனமற்ற மொழிவெறியில் காணவும், எத்தனை மொழிகளில் எவ்வளவு எழுதப்பட்டிருக்கின்றன, இதில் பெரும்பாலானவை அழிந்தே போகும் பயங்கரத்தின் சாத்தியம் ஏறத்தாழ உறுதியானது என்றும் இது அத்தனை குறித்த வியப்புணர்வுக்குத் தம்மைத் திறந்து வைத்துக் கொள்ளவும் இவரது பார்வை ஒரு மாற்று முகத்தை அளிக்கிறது.

மிஜூமூராவின் எழுத்தில் தொடர்ந்து காணப்படும், ‘விதி வலியது’ என்ற உணர்வை இந்த உறுதிப்பாடு சுட்டுகிறது. எழுதப்படும் ஒவ்வொரு மொழிமீதும் ஆங்கிலம் ஏற்படுத்தும் தொடர்ந்த தாக்குதலை எதிர்கொள்ள எந்த பரிந்துரையும் அவர் செய்வதில்லை, யார் என்ன செய்தாலும், எந்த தேசம் என்ன செய்தாலும் இதன் வேகம் குறையப் போவதில்லை என்கிறார் இவர். ஆனால் இதை மாற்ற முடியாது என்பதற்காக எதுவும் செய்யாமல் இருப்பதற்குச் சமாதானம் சொல்வதில் மிஜுமூரா. மாறாய், தம்மைப் போன்ற நாவலாசிரியர்கள், தம் மொழியில் முட்டாள்தனமாய் இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள், அறிந்தும் அறியாமலும் மொழிபெயர்ப்பை எதிர்த்துப் போராட வழிகள் காண வேண்டும் என்கிறார் அவர்- தங்கள் கானன்களைப் பாதுகாக்க வேண்டும், தனித்தன்மை கொண்ட தங்கள் தேசிய நூலகங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த நாவலாசிரியர்கள் குறித்து, “எப்போதும் மொழி குறித்துச் சிந்திக்கச் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதுகிறார். இவர்களே, “ஆங்கில மொழியைக் கொண்டு அறியப்படாத பிற ‘உண்மைகளும்’ இந்த உலகில் உண்டு” என்பதைச் சிந்தித்தாக வேண்டும்.

அடிப்படையில் இது மரபார்ந்த ஒரு நிலைப்பாடு. ஆனால் இன்றைய காலம் முன்னோக்கிப் பார்க்கிறது என்பதைத்தான், ஜப்பானிலும் அதற்கு வெளியிலும், அவருக்கு பிற்போக்குவாதி என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பது காட்டுகிறது. இவர் எழுதுவதில் பெரிதுபடுத்தவும் ஒன்றுமில்லை; உலகெங்கிலும் குழந்தைகள் செவ்வியல் நூல்கள் வாசிப்பதில்லை என்ற அங்கலாய்ப்பு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது; கடந்த காலத்தை மதிக்காமல் முன்னேற்றம் கிடையாது என்பதும் அதே அளவுக்கு அடிக்கடிச் சொல்லப்பட்டே வந்திருக்கிறது. ஜப்பான் பற்றி மிஜூமூரா முன்வைக்கும் குற்றச்சாட்டு அது ஆங்கில யுகத்தை ஏற்றுக்கொள்வதில் காட்டும் உற்சாகம் குறித்துதான்- நீண்ட வரலாறு கொண்ட ஓர் இலக்கியத்தைச் சிதைத்து அழிக்க விரைகிறது என்பது மட்டுமல்ல, அதன் சாம்பல்களில் அது எழுப்பும் இலக்கியம், அவரது சொற்களில் சொல்வதானால் சாணி.

முடிவாய்ச் சொன்னால், மிஜுமூரா உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களுக்கு மாற்று வழி ஒன்றை முன்வைக்கிறார்- உலகளாவிய மக்கள் பரப்பை நோக்கிப் பேசுவதல்ல, உன்னதமே மாபெரும் இலக்கியத்தின் நோக்கம் என்று கண்டிக்கிறார். ஷேக்ஸ்பியர் இன்று உலகெங்கும் இன்னும் பரவலாய் அறியப்பட்டிருப்பதால் ரசின் எழுதியதன் சிறப்பு குன்றிவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் இது பற்றியெல்லாம் பிரெஞ்சு மக்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்கிறார், ரசின் மற்றும் அவரது எழுத்தை மறக்காதிருந்தால் போதும். “கலை ஜனநாயகத்தன்மை கொண்டதல்ல, அது உன்னதமானது” என்று மிஜுமூரா அலங்காரங்கள் இல்லாமல் சொல்கிறார், அவர் சொல்வதும் உண்மைதான். தம் மொழியில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து இதுதான்- ஹாரி பாட்டர் நாவல்கள் போன்ற ஒரு உலகளாவிய வாசகப்பரப்பை அவர்கள் அடைய வேண்டுமென்றால் தம் எழுத்தில் உள்ள தனித்தன்மையில் பெரும்பாலானவற்றை அவர்கள் களைந்தே நியூ யார்க்கிலும் லண்டனிலும் உள்ள பதிப்பாளர்களை வசீகரிக்க முடியும். ஒரு தேசத்தின் ஆன்மாவைச் சிறு சிறு துண்டங்களாக வெட்டிச் சிதைத்தே பெரும் செல்வமும் புகழும் பெற முடியும் என்ற ஃபாஸ்டிய பேரம் இது.

இந்த நிலைப்பாடு மிஜுமூராவுக்கு எளிது- அவர் அசாதாரண திறமை கொண்ட எழுத்தாளர், வெற்றி பெற்ற எழுத்தாளர். ஆங்கிலத்தில் எளிதாய் மொழிபெயர்க்கப்படக்கூடிய வகையில் புத்தகம் எழுதுவதில்லை என்ற சமரசமற்ற முடிவை அவர் மேற்கொண்டிருந்தாலும் அவரது நாவல்களில் முதல் நாவல், எ ட்ரூ நாவல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது- தன்னைவிட மேலானவர்கள் நிழலில் தன்னடக்கத்துடன் உழைத்துக் கொண்டிருக்கும் எளிய ஜப்பானிய பெண்ணல்ல அவர் என்பதையே இது உணர்த்துகிறது. உண்மையில், ஜப்பானில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள எழுத்தாளர்கள், தம் முன்னோடியாய் அண்ணாந்து நோக்கக்கூடிய மகோன்னத மரங்களில் ஒருவர் இவர். இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கான மிகச் சிறந்த காரணம், இந்த, அல்லது, எந்தத் தலைமுறை எழுத்தாளர்களிலும் சிறந்த ஒருவரின் எழுத்து குறித்த தரிசனத்தை அது அளிக்கிறது என்பதுதன.

ஆங்கிலத்தை தாய்மொழியாய் கொண்டவர்களுக்கு அவர் மிகச் சில பரிந்துரைகளே வைத்திருக்கிறார்- அந்நிய மொழி ஒன்றைக் கற்பது நல்லது என்றும் இன்றும் நாளையும் ஆங்கிலம் மேலாதிக்கம் செலுத்தப்போவது குறித்து தன்னடக்கத்தை வெளிப்படுத்திக் கொள்வது நல்லது என்றும் இறுதியில் மூக்குச் சிந்துவதை வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் செவ்வியல் படைப்புகளை அவர் புகழும்போது ஒரு எச்சரிக்கையும் நினைவூட்டலும் செய்கிறார்– சுயம்பிரகாசம் கொண்ட உள்ளங்களின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல ஒரு மொழியின் மேன்மை, தன்னுள்ளிருக்கும் திறமைசாலிகள் செயல்படுவதற்கான களனில் ஆயத்தப் பணிகள் செய்து கொடுக்கும் கலாசாரமே ஒரு மொழிக்கு மேன்மையளிக்கிறது, தனக்கு முன் இருந்த மிகச்சிறந்த எழுத்தின் மதிப்பை உணர்ந்து அதை உண்மையாகவே பெறுமதியாய்க் கொண்டாடும் கலாசாரமே மொழியின் மேன்மைக்கு வித்திடுகிறது.

ஆங்கில மொழி இலக்கிய கலாசாரம் பிற மொழியின் தாக்குதலுக்கு ஆளாகவில்லை எனினும், ஒரு பக்கம் அது தம்முள் பொருதிக் கொள்ளும் பிற பொழுதுபோக்கு ஊடக வடிவங்களாலும் மறு பக்கம் இணையம் அனைவருக்குமான சமத்துவ வெளி அளித்திருக்கிறது என்ற பான்கிலாசியப் பார்வையாலும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இணையத்தில் வாயிற்காவலர்களுக்கு வேலையில்லை என்று அடிக்கடி சொல்லப்படுகிறது, பொதுஜன ரசனை இனி மேலோங்கி நிற்கும் என்கின்றனர்- தெய்வழக்காகிப் போன வெண்ணை திரளும் படிமமாய் சிறந்தது எழுவது இனியும் உள்ளார்ந்த தனித்தன்மையால் அல்ல, மின்னூல் விற்பனையாலும் வணிக வாய்ப்புகளாலும் என்று சொல்கின்றனர்.

மக்கள் செவ்வியல் படைப்புகளை ரசிப்பதில்லை என்ற குறை நியாயமானதுதான், ஆனால் அவர்கள் வாசிக்காத காரணத்தால் எதுவும் மோசம் போய்விடாது- ஏனெனில், கலையில் வெகுஜனப் பார்வை சில பத்தாண்டுகளைத் தாண்டி நீடிக்கும் ஆற்றல் கொண்டதல்ல; எது முக்கியம் என்றால் ஒரு சிறுபான்மையினர்- தம்மைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட சிலர், கலை என்பது உன்னதத்தன்மை கொண்டது என்ற கருத்துக்கு உருவம் அளிப்பதே இலக்கியத் தரம் என்ற அக்கறை தமக்கு இருப்பதாய்ச் சொல்லிக் கொள்பவர்கள்- உண்மையாகவே செவ்வியல் படைப்புகளை அறிந்திருந்து அவற்றை உற்சாகமாய்க் கொண்டாட வேண்டும். இதுதான் முக்கியம்.

எந்த ஒரு தலைமுறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே அதற்கான திறமை கொண்டவர்களாகவும், படைக்கப்பட்ட அனைத்தைக் காட்டிலும் உயர்ந்து எழுந்து நிற்கக்கூடிய மகோன்னதமான மரங்களாய் இருக்கும் விருப்பம் உள்ளவர்களாவுகம் இருக்க முடியும் என்றாலும், ஏராளமான இடம் மண்ணில் இருக்கிறது. எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கவும் திருத்திக் கொண்டிருக்கவும் வேலை இருந்து கொண்டே இருக்கிறது.

நன்றி – Full Stop

ஒளிப்பட உதவி – Monkfish Jowls

சீனாவும் உலகும் – அசாதாரண தனித்துவத்துக்கு அப்பால் – கெர்ரி ப்ரௌன்

– கெர்ரி ப்ரௌன் (Kerry Brown) – 

ஓப்பன் டெமாக்ரசி என்ற தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்

சீன அரசியல்வாதிகள் சீனாவின் மரபார்ந்த கலாசார மகத்துவத்தைச் சுட்டிக்காட்டி உரையாற்றுவதைச் சமீப காலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது. நவீன சீனாவின் விளம்பரமாகவும் அதற்கு உலகளாவிய சக்தியாக விளங்கும் தகுதி இருக்கிறது என்று நிறுவவும் அதன் கலாசாரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் இவர்கள்.

அதிலும் குறிப்பாக, இன்aறைய தலைமுறையைச் சேர்ந்த இரு தலைமை கோட்பாட்டியலாளர்கள்- சீன பிரதமர் சி ஜின்பிங்கும் சீன அரசின் பிரச்சார தலைவர் லியு யுன்ஷானும் பண்டைக்கால கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பற்றிய குறிப்புகளை மிக அதிக அளவில் கையாண்டு உரையாற்றுகின்றனர். ஏதோ ஒரு வகையில் தாமும் இந்த “மாபெரும் மரபின்” சந்ததியினர் என்று தம்மை முன்னிறுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. வெளியுலகம் தம் மரபை இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்- கன்பூஷியஸ் இன்ஸ்டிட்யூட் போன்ற நிறுவனங்களைக் கொண்டு இந்த மரபை உலகெங்கும் எடுத்துச் செல்லவும் தம் ஆற்றல்களைச் சீன அரசியல்வாதிகள் செலவிடுகின்றனர்.

தன்னைப் புரட்சிகரமானதாகக் காட்டிக்கொள்ளும் கட்சியொன்று சீன கலாசாரத்தின் சாரம் என்று ஓரளவு மரபார்ந்ததாய் உள்ள பார்வையை விளம்பரப்படுத்திக் கொள்வது நவீன சீனாவின் பெரும் முரண்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சீனாவின் பெருந்தலைவர்கள் சீன கலாசாரம், அதன் முக்கியத்துவம், பொருள் என்று அத்தனை வலியுறுத்திய பின்னும் ஒரு கேள்வி நம்முன் நிற்கிறது- அவர்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? வழக்கப்படியான கன்பூசியஸ் சிலைகள், அவர் பற்றிய உரைகள் போன்றவற்றில் ஓரளவுதான் அர்த்தம் இருக்கிறது. உண்மையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை கொண்ட அதன் எழுத்துப்பிரதிகளின் பெருந்தொகையே சீன இலக்கியத்தின் தனித்துவ இயல்பை உணர்த்துவதாய் இருக்கிறது. இன்றும் சீனாவின் சிந்தனையை நெறிப்படுத்தும் கூட்டு வரலாற்று நினைவை விரிவான அளவில் புரிந்து கொள்ளும் வாய்ப்பை அதன் தொல் இலக்கிய மரபே நமக்கு அளிக்கிறது.

சீனா தன் “சிறப்பு” என்று சொல்லிக் கொள்ளும்போது, அதன் கலாசார மரபுக்கு வெளியே இருப்பவர்கள் அத்தகைய பெருமிதங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நம் கலாசாரத்துக்கு என்று சில மதிப்பீடுகளும் விமரிசன அளவைகளும் வைத்துக்கொண்டு, சீனாவை அணுகும்போது அவற்றையே வேறு விதமாகக் கையாள்வதுமான இரட்டைப் பார்வை கொள்ளக்கூடிய அபாயம்கூட இருக்கிறது.

ஆனால் இதுபோன்ற ஒரு முரண்பாடு சீனாவின் உள்ளும் வெளியேயும் பலரிடம் காணப்படுகிறது- சீனா மெய்யாலுமே “மாறுபட்டதுதான்” என்று சொல்வதில் அவர்களுக்கு அலுப்பதேயில்லை. எனவே அதைப் புரிந்து கொள்ள முழுக்க முழுக்க வேறு தனி கருவிகள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது சீனாவின் மரபார்ந்த கலாசாரத்தின் புகழ் பாடும் பீஜிங் அரசியல்வாதிகளுக்கு இது போன்ற அணுகுமுறை மிகவும் உசிதமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். சீனா “மற்றவர்கள் போலில்லை” என்று அவர்கள் இப்போது அதிக அளவில் சொல்லிக் கொள்கிறார்கள், சீனாவின் சட்ட அமைப்பு, விழுமியங்கள் குறித்து விமரிசனம் செய்யும்போதும், அதன் நிர்வாக அமைப்பு நிலைக்கக்கூடிய சாத்தியம் பற்றியும் கேள்வி எழுப்பும் அந்நியர்களைப் புறம்தள்ளவும், சீனாவின் “அசாதாரண தனித்துவம்” என்ற வாதம் உதவுகிறது. “எங்களை எங்கள் மதிப்பீடுகளின்படி புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மதிப்பீடுகளை எங்கள் மேல் திணிக்க வேண்டாம்” என்பது அவர்களது பதிலாய் இருக்கிறது.

தனி உலகம்

இப்படி தனி மகத்துவம் கொண்டாடுவது அதற்கேயுரிய ஆபத்துகள் கொண்டிருப்பது தெளிவு. இதற்கேற்றச் சிறந்த முறிமருந்து ஓர் ஆளுமையிடம் உண்டு- இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் அனைவரையும்விட இவர் “மரபார்ந்த ஐரோப்பிய” மற்றும் “மரபார்ந்த சீன” கலாசாரங்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார்- சியான் ஜோங்ஷு (Qian Zhongshu).

1998ல், தன் 88ஆம் வயதில் மறைந்த சியான் ஜோங்ஷு (1949க்கு சற்று முன்னர்), நவீன சீன இலக்கியத்தின் மிக முக்கியமான நாவலை எழுதினார்- Cities Besieged. ஆனால் அவர் எழுதியதில் மிக ஆழமான படைப்பு அவரது சிறு கட்டுரைகள் கொண்ட பெருந்தொகுப்பு: அதை அவரால் 1979ல் கலாசார புரட்சி முடிவுக்கு வந்தபின்தான் பதிப்பிக்க முடிந்தது. 1990களின் பிற்பகுதியில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு, Limited Views: Essays on Ideas and Letters என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்டது.

சியான் பல மொழிகளைத் தேர்ந்தவர் என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. அவர் தன் தாய் மொழி சீனத்துக்கு அப்பால் – ஆங்கிலம், ஸ்பானிஷ், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளை – விரிவாகவும் ஆழமாகவும் வாசித்திருந்தவர். அவரது கட்டுரைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன- ஹென்றி பீல்டிங் முதல் கிறிஸ்தோபர் மார்லோ, கத்தே, ஜூசெப்பெ உங்கரெட்டி என்று பலரையும் ஏராளமாக மேற்கோள் காட்டுகிறார். அதே சமயம் சீன எழுத்தாளர்களையும் அவர்களது காலகட்டம் கடந்து தொடுகிறார்- ஆவணப்படுத்தப்பட்ட கவிஞர்களில் முதலான்வரான சி யான் முதல் அமானுடத்தைக் கவிதையில் எழுதிய ஹான் வம்ச கவிஞர் ருவான் ஜி, தன் தலைமுறையைச் சேர்ந்த லின் யுசேங் என்று அனைவரையும் மேற்கோள் காட்டுகிறார். எனினும் இவர் தன் மேதைமையை வெளிப்படுத்திக் கொள்வதில் அலங்காரமோ ஆடம்பரமோ சிறிதும் இல்லை. இவரது கட்டுரைகளில் நம் கருத்தைக் கவரும் விஷயம் இதுதான்- தனித்துவமிக்க கலாசார மரபுகள் தம் வேறுபாடுகளை இழக்காதபோதும் ஆழமான ஒற்றுமை கொண்டிருத்தலுக்கான இணைபுள்ளிகளை சியான் அடுத்தடுத்த கட்டுரைகளில் தொடர்ந்து சொல்லிச் செல்கிறார்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், “உயரத்தின் துயரம்” என்ற கட்டுரையில் காண முடிகிறது. இதில் சியான் டாங் மற்றும் சாங் வம்ச அரசர்களின் காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் மலைச்சிகரம் ஒன்றை அடையும்போது உணர்ந்து வெளிப்படுத்தும் சோக உணர்வை எழுதுகிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அவர் இதே உணர்வை பீல்டிங்கின் பதினெட்டாம் நூற்றாண்டு நாவலான டாம் ஜோன்ஸிலும் காண்கிறார். சீன செவ்வியல் நூல்களுக்கும் மேற்கத்திய செவ்வியல் நூல்களுக்கும் பொதுவான உணர்வுகளின் இலக்கணத்தை அவரால் அடையாளம் கண்டு வடிவமைக்க முடிகிறது. இவ்வாறு சோகம், ஆனந்தம், உணர்வுச் சிதைவு முதலான சிக்கலான பல உணர்வு நிலைகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் எழுதி இதைச் செய்கிறார். இதன் ஒட்டுமொத்த விளைவு நம் மீது மிகுந்த தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

கலாசார புரட்சி நிகழ்ந்த காலகட்டத்தில் சியான் இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை எழுதினார். தாம் இருவரும் சிந்தனையாளர்களைச் சீர்த்திருத்தும் நோக்கத்தில் அப்போது அமைக்கப்பட்டிருந்த உழைப்பு முகாம்கள் ஒன்றின் காண்டீனில் பரிமாறுபவர்களாகப் பணியாற்றும் நிலைக்குத் தள்ளி அவமானப்பட்ட காலத்தில் இந்தக் கட்டுரைகளை அவர் எழுதினார் என்ற சாட்சியம் அவரது மனைவி யாங் ஜியாங்கால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்களில் அவர்களது மருமகன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் எங்கும் இந்த நிகழ்வுகள் குறித்து தனிப்பட்ட வகையில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மிகத் தேர்ந்த வாசிப்பு உள்ளவரும் பல்வேறு சிந்தனை மரபுகளில் அறிமுகம் உள்ளவருமாகிய ஒருவரின் சாட்சியமாகவே அனைத்தும் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு அதிசயம், இந்தக் கட்டுரைகளில் எந்த அரசியலும் இல்லை, அவர் யாரையும் கண்டிப்பதில்லை, யாரையும் குற்றம் சாட்டுவதில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே, காலத்தையும் எல்லைகளையும் கடந்த மானுடத்தன்மைக்கு இது ஒரு மகோன்னதமான நினைவுச் சின்னம் என்று சொல்லலாம், எந்த ஒரு தேசமும் பிறரைக் காட்டிலும் தன்னை ஏதோ ஒரு வகையில் தனியாகப் பிரித்துக் காட்டிக் கொள்வதை இந்நூல் முழுமையாய் நிராகரிக்கிறது.

சியானின் இந்த மிகச்சிறந்த நூலை வாசிப்பதால் ஆர்வமுள்ள வாசகர்கள் ஒவ்வொருவரும் பயனடைவார்கள். கூடுதலாக, சீன பண்பாட்டு மரபின் விரிவான கானனை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்ற கேள்விக்கும் இங்கு இடமிருக்கிறது. இந்த மரபைத் தங்கள் நோக்கங்களுக்காக மிகுந்த ஆற்றலுடனும் சாமர்த்தியமாகவும் பீஜிங்கின் அரசியல் தலைவர்களும் அவர்களது இரவலர்களும் பயன்படுத்திக் கொள்ளும் காலத்தில் இதன் அவசியம் இன்னும் முக்கியமாய் இருக்கிறது.

சியான் ஜோங்ஷூவின் எழுத்துகள் இறுதியில் நம் அனைவருக்கும் பொதுவான மானுட விழுமியங்களுக்கு அத்தாட்சியாகவே இருக்கின்றன. சீனத்துக்கு அல்லது ஆசியாவுக்கு அல்லது ஐரோப்பாவுக்கு உரியது என்ற விவரித்து இதைக் குறுக்க முடியாது. அவ்வளவு குரூரமான சூழலில் இந்தப் படைப்பு உருவம் பெற்றது என்பது திகைக்க வைக்கும் விஷயம். பாண்டித்தியத்துக்கும் மானுடம் மீதான நம்பிக்கைக்கும் சாட்சியம் சொல்லும் நாயகத்தன்மை கொண்ட எழுத்து இது. எந்த ஒரு கலாசாரமும் இதைக் கொண்டாடுவதில் பெருமை கொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டு சீனா இவ்வளவு அற்புதமான குரலைப் படைத்திருக்கிறது என்பதில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்- சியானின் அசாதார்ண படைப்பை நம்மாலும் படிக்க முடிகிறது, அதில் திளைக்க முடிகிறது, கற்றுக்கொள்ள முடிகிறது என்பது நம் அனைவருக்கும் பெருமையே. இதைச் செய்யும்போது நாம் சீனாவை மட்டும் புரிந்து கொள்வதில்லை, நம்மையும் அறிந்து கொள்கிறோம், நம் கலாசாரத்தையும் புரிந்து கொள்கிறோம், நம் அனைவருக்கும் பொதுவான உலகையும் அறிந்து கொள்கிறோம்.

நன்றி – Open Democracy

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை – கில்லியன் ப்ளின்

-கில்லியன் ப்ளின்  (Gillian Flynn)- 

நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை. வெயில்காலத்தில் எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு, எறும்புகளைத் தாக்கி அவற்றைச் சிலந்திகளுக்குத் தின்னக் கொடுப்பதுதான். “கெட்ட அத்தை ரோஸி” என்ற விளையாட்டுதான் வீட்டில் பொழுதுபோக்க உதவியது- அதில் நான் என் கசின்களைப் பார்த்துக் கொள்பவள், ஆனால் சூனியக்காரி, அவர்கள் என்னிடமிருந்து தப்பியோட வேண்டும்.

எண்பதுகளில் சிறு பெண்கள் பலரும் பிளாஸ்டிக்கில் ஒரு பிங்க் கலர் பொம்மை போன் வைத்திருப்பார்கள் (அழகான பெண்களுக்கு போன் பேசுவது என்றால் ரொம்ப பிடிக்கும்), அது எங்களுக்கு மிகவும் அடிப்படையான விளையாட்டுப் பொருளாய் இருந்தது- அவர்கள் உதவிக்கு ஆள் அழைக்கும்போது எப்போதும் அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கி விடுவேன்.

எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும்போது பொதுவில் தெளிவாகத் தெரியாத கேபிள் சானல்களில் ஒலிபரப்பப்படும் சாப்ட் கோர் போர்ன்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன் (முலைகள், பிருஷ்ட பாகங்கள், ஸ்டாட்டிக், ஸ்டாட்டிக், முலைகள்!). என் பொம்மைகளில் எதுவாவது பிடிவாதம் பிடிக்க ஆரமபித்தால், அவளது முடியை வெட்டிவிடுவேன்.

இங்கு நான் சொல்ல வருவது இதுதான்- நான் ஒன்றும் வித்தியாசமாய் இருந்த குழந்தையல்ல (ஆனால் இதை எல்லாம் காகிதத்தில் படித்துப் பார்க்கும்போது கவலையாய்தான் இருக்கிறது). நான் கெட்ட பெண்ணும் அல்ல (இங்குதான் என் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பெற்றோருக்காக இதைச் சொல்ல வேண்டும் – அந்த காலத்து கான்சாஸ் நகரில் நான் அதிசயமும் சந்தோஷமுமான ஆண்டுகள் பல வாழ்ந்திருக்கிறேன்). ஆனால் சிறுவயதினர் வளரும்போது சில சாகசங்கள் செய்ய வேண்டுமே- வசதியில்லாத இடத்தில் தங்கியிருப்பது, வயசுக்கு மீறிய பாலுணர்வு அனுபவங்கள், அதிகார விளையாட்டின் முதல் மலர்ச்சி, இதெல்லாம் பல பெண்களின் வாய்மொழிக் கதைகளிலும் இடம் பெறுவதில்லை.

குழந்தைமையின் ஆத்திரம், முதிரா வயதில் படுதோல்வியடையச் செய்த பால்விழைவு போன்றவற்றின் பீறிட்டுக் கிளம்பும் வினோத வெடிப்புகள் பற்றி ஆண்கள் ஆனந்தமாய் பேசுகிறார்கள். பாலுணர்வையும் வன்முறையையும் பேச அவர்களுக்கு சொற்கள் இருக்கின்றன, பெண்களுக்கு அப்படி எதுவும் இல்லை. வளர்ந்த பின்னும்கூட சுய இன்பம் பற்றியோ கலவியின் உச்சம் பற்றியோ எந்தப் பெண்ணும் நிஜமான சந்தோஷத்துடன் பேசியதாய் நினைவில்லை. செக்ஸ் அண்ட் தி சிட்டிதான் அதன் கொஞ்சலான புத்திசாலித்தன சொற்றொடர்களை முன்அனுமதி அளிக்கப்பட்ட வகையில் பொட்டலம் கட்டி அறிமுகப்படுத்தியது.

இப்போதும் நாம் நம் வன்முறையை விவாதிப்பதில்லை. தங்கள் குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற சூசன் ஸ்மித் அல்லது ஆண்டிரியா யேட்ஸ் பற்றிய செய்திகளை ஆசை தீரத் தெரிந்து கொள்கிறோம், ஆனால் இந்தக் கதைகள் நயமாகச் சொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பிரசவத்துக்குப் பின் ஏற்படும் மன அழுத்தம் பற்றி இறுக்கமான குரலில் தனியாய்ச் சொல்லப்பட வேண்டும் என்றும், அவளை அப்படிச் செய்ய வைத்தான் அவன் என்றும் கதை கேட்க விரும்புகிறோம்.

ஆனால் இதிலெல்லாம் அலட்சியப்படுத்தப்படும் ஒத்திசைவு ஒன்று உண்டு. கொலைகாரத் தாய்மார்களைப் பற்றியும் தொலைந்து போன சிறுமிகளைப் பற்றியும் பெண்கள் வாசிக்க விரும்புவதன் காரணம் பெண்ணின் வன்முறையை அந்தரங்க தளத்தில் பேசுவதற்கு மைய ஊடகத்தில் நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு இவையாகவே இருக்கின்றன என்பதுதான் என்று நினைக்கிறேன்.

பெண்ணின் வன்முறை என்பது குறிப்பிட்ட தனித்தன்மை கொண்ட சீற்றம். அது எல்லைகளை மதிப்பதில்லை. பெண்களுக்குள் நடக்கும் சண்டை என்பது எல்லாம் பற்கள், தலைமுடி, எச்சில், நகங்கள் என்று நடக்கிறது- இரு ஆண்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதைவிட இரு பெண்கள் இப்படி சண்டை போட்டுக் கொள்வதைப் பார்க்க பயங்கரமாக இருக்கிறது. அதிலும் மனதளவில் நிகழ்த்தப்படும் வன்முறை மிகக் கொடூரமானது. பெண்கள் பின்னிப் பிணைகின்றனர்.

நான் பார்த்த உறவுகளில் மனதை மிகவும் துன்புறுத்துவதும், நோய்மை கொண்டதாகவும் இருந்த உறவுகள் நீண்டகால தோழியர் சிலரிடையே இருந்த உறவே- இன்னும் குறிப்பாக தாய்- மகள் உறவைச் சொல்லலாம். வம்புப் பேச்சு, திரித்தல், ஊக்குவிப்பது போல் நாடகமாடுதல், உறவை முறித்துக் கொண்டு தண்டித்தல், பாலுணர்வு காரணமான பொறமை- பெண்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்ப்பது என்பது பல்லாண்டு காலம் நிகழும் படுபயங்கர ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றது.

வன்முறைச் சுழலில் சிக்கிக்கொண்ட இரக்கமற்ற ஆண்களை தலைமுறை தலைமுறையாய் பேசும் கதைகளால் நூலகங்கள் நிறைந்திருக்கின்றன. பெண்களின் வன்முறையை நான் எழுத விரும்பினேன்.

எனவே அப்படி எழுதவும் செய்தேன். இருண்மையான, மிக இருண்மையான ஒரு புத்தகம் எழுதினேன். அதன் நாயகி, கதைசொல்லி, அதிகம் குடிக்கிறாள், அதிகம் கலவியில் ஈடுபடுகிறாள், வெகு காலமாய் வார்த்தைகளைக் கத்தரித்துத் தன்னைக் குத்திக் கொள்கிறாள். விஷம் என்பதற்கு இலக்கணமாக இருக்கும் அம்மா, போதை மருந்துகள், பாலுறவு, அதிகாரம் முதலானவற்றின் பண்டமாற்று வர்த்தகத்தில் தேர்ந்த பயிற்சியுள்ள பதின்மூன்று வயதான ஒன்றுவிட்ட சகோதரி. அமைதியற்ற அந்தச் சிற்றூரில் இரு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள்.

அந்த நாவல் பெண்களை உயர்வாய்ச் சித்தரிக்கவில்லை, அதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. பெண்களின் அழகற்ற முகத்தை ஏற்றுக் கொள்ளும் நேரம் எப்போதுதான் வரப்போகிறது? துணிச்சலான நாயகிகள், கற்பழிக்கப்பட்டபின் போராடும் வீராங்கனைகள், ஆன்ம சோதனை செய்து கொள்ளும் உயர்குடிப் பெண்கள் எத்தனை எத்தனை புத்தகங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்- எனக்கு இதெல்லாம் மிகவும் அலுத்துப் போய்விட்டது.

அதிலும் குறிப்பாக, வில்லிகள் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது- நல்ல ஆற்றல் வாய்ந்த வில்லிகள். ஒழுக்கமான ஆண்களைக் கல்யாணம் செய்து கொண்டு வசதியாக வாழத் திட்டமிடும் கோபக்கார பெண்கள் அல்ல (போருக்குக் கிளம்ப இதைவிட சுவாரசியமான எதுவும் எங்களுக்கு இல்லை என்பது போலிருக்கிறது). உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாத, ஆனால் அதற்காக கெட்டவர்கள் என்று சொல்ல முடியாத பெண்கள், அழுது புலம்பும் சதிகாரிகள் (வம்பு வளர்த்தால் மட்டும் போதாது போல்)- இப்படிப்பட்ட வில்லிகளைச் சொல்லவில்லை. வன்முறைக்கு அஞ்சாத, தீய மனம் கொண்ட பெண்களைப் பற்றி பேசுகிறேன். அச்சுறுத்தும் பெண்கள். உங்களுக்கு அப்படி யாரையும் தெரியாது என்று சொல்லாதீர்கள்.

இத்தனை நாட்களாக நாம் நமக்கு பெண்ணாற்றல் சேர்த்துக் கொண்டிருந்ததில் – பகடி என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த ஊக்குவிப்பு போய்விட்டது- நமக்கு நம் இருண்ட பகுதியை ஒப்புக்கொள்ள இடமே இல்லை. இருண்ட பகுதிகள் முக்கியமானவை. விஷப் பூச்செடிகள் போல் அவற்றை நாம் வளர்க்க வேண்டும். எனவேதான் ஷார்ப் அப்ஜெக்ட்ஸ் நான் செய்த விஷப் பூங்கொத்து.

ஷார்ப் அப்ஜெக்ட்ஸ் நாவலில் நல்ல பெண்கள் கிடையாது. நாவலின் கதைசொல்லி, நான் வெறித்தனமாய் நேசிக்கும் காமில்லா- புத்திசாலித்தனமாகப் பேசுபவள், தன்னை அறிந்திருப்பவள், உற்சாகமானவள்- அவள்தான் நல்ல பெண்ணுக்கு மிக அருகில் வருபவள். ஆனால் ஒவ்வொரு நாளையும் ஓட்ட சரக்கு, போதை வஸ்துக்கள், செக்ஸ், கத்தரிக்கோல்கள் பயன்படுத்துகிறாள்.

காமில்லா பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது, திருப்திப்படுத்த முடியாத, நச்சுத்தன்மை கொண்ட வீட்டில் எல்லாரையும் திருப்திப்படுத்தச் சொல்லி வளர்க்கப்படும் பெண் எப்படி வளர்வாள் என்று நினைத்துப் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் குத்திக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு அம்மா, உடலளவிலும் இதைச் செய்கிறவள், கொஞ்சம்கூட தாய்மையுணர்வு இல்லாதவள், அவளால் வளர்க்கப்படும் பெண் தன் அம்மாவிடம் எப்படி நடந்து கொள்வாள்? அவள் தன் பெண்ணுக்கு எப்படிப்பட்ட வன்முறையைப் புகட்டுவாள்? அது ஒரு சுழல் மாதிரி இருக்கும் என்று உணர்ந்தேன்.

காமில்லா தன்னையே துண்டம் போட விரும்புகிறாள். வெட்டுபவளே பலி கொள்கிறாள், பலியாகிறாள்- மிரட்டுபவளும் மிரள்பவளும் அவளே. ஆனால் இதில் நோய் தீர்த்தலும் உண்டு- பின்னர் காயங்களைக் கழுவி மருந்திட்டு கட்டு போட வேண்டும். காயப்படுத்து, துயரம் கொள், குணப்படுத்து, காயப்படுத்து, துயரம் கொள், குணப்படுத்து. இது வன்முறையின் முப்புடி, ஒரே ஆளில் உருவம் பெறுகிறது. உலகின் மிகத் தனித்த செயல் இது. காமில்லா அடிப்படையில் தனித்து இருப்பவள்.

நான் சிறுமியாய் இருந்தபோது பிரதர்ஸ் கிரிம் கதைகள் படித்ததைக் கொண்டு காமில்லாவின் அம்மாவைப் படைத்தேன். சுருள் முடி கொண்ட மென்மையான நாயகிகள் நாசமாய்ப் போகட்டும். கெட்ட புத்தி படைத்த இந்த அரசிகளையும் தீய நெஞ்சம் கொண்ட மாற்றாந்தாய்களையும் நான் நேசித்தேன். எனவே காமில்லாவின் அம்மா அப்படி இருக்கிறாள்- அவள் அழகி, ராணி, ஊசிகள் நிறைந்தவள். அவள் பிறர் வலியைத் துய்ப்பவள். காமில்லாவின் வன்முறை தனக்குள் அடங்குவது என்றால், அவளது தாயின் வன்முறை தன்னை மையம் கொண்டது.

கொலை செய்யப்பட்ட சிறுமிகளை எடுத்துக் கொண்டால், இவர்கள் கன்னக்குழியும் ரிப்பன்களுமாய் இருப்பதை நான் விரும்பவில்லை. அது மிகச் சுலபமாய் இருந்திருக்கும் (“அழகிய பெண்ணின் மரணம் கவித்துவமானது,” என்றார் போ, அழகிய சிறுமியின் மரணம் இன்னும் அழகாக இருக்குமோ என்னவோ- தொலைந்து போன பெண்கள் குறித்து நம் ஊடகங்கள் பைத்தியம் பிடித்து அலைவதைப் பார்த்தால் அப்படிதான் இருக்கிறது). கொலையுண்ட பெண்கள் பொம்மை போன்ற பலிகள் அல்ல- அவர்களுக்குள்ளும் ஒரு கொடூரம் உண்டு, அவர்கள் போராளிகள். காமில்லாவின் ஒன்றுவிட்ட சகோதரி அமா, அவள் கோபக்காரி. ஆனால் காமில்லா போலல்லாமல், பேய் பிடித்த அவள் வீடு அவளது கோபத்தை மேல்நோக்கித் திருப்பவில்லை, மாறாய் கண்கவரும் திசையில் செலுத்துகிறது.

ஷார்ப் அப்ஜெக்ட்ஸில் வரும் பெண்களை நினைத்துப் பார்க்கும்போது 1948ஆம் ஆண்டு பிரடரிக் சம்மர் எடுத்த புகைப்படத்தை நினைத்துப் பார்க்கிறேன்- அதன் பெயர் லிவியா. லிவியா ரோமானிய கொலைகார பேரரசி. அது கருப்பு வெள்ளை புகைப்படம், அதில் இருப்பவள் ஓர் இளம் பெண், அப்பாவித்தனத்தின் அலங்காரங்கள் அனைத்தும் அவளிடம் இருக்கின்றன- பின்னி வாரப்பட்ட சுருள் கேசம், லேஸ் நுனியிட்ட ஆடைகள். ஆனால் அவள் கண்களின் புத்திசாலித்தனத்தைப் பார்த்தால் தூக்கிவாரிப் போடுகிறது, அவளது உதடுகள் பிடிவாதமாய் இறுகி இருக்கின்றன, அவள் முகம் முழுக்க குறும்பு- ஒருவேளை அவள் துட்டியாய் இருக்கலாம். உலகில் எனக்குப் பிடித்த புகைப்படங்களில் ஒன்று அது. சிறுமிகள்- பெண்களும்- கெட்டவர்களாக இருக்கக்கூடும் என்று அது நினைவூட்டுகிறது.

நன்றி – http://www.powells.com/essays/flynn.html

ஒளிப்பட உதவி – விக்கி ஆர்ட்

தாய் எழுத்து – பரூல் செகால்

பரூல் செகால்  (Parul Sehgal)-

(குடும்ப அமைப்பினுள் இருந்தவாறு, அதிலும் குறிப்பாக தாய்மை நிலையில், எழுத்துப் பணியில் ஈடுபடுவது குறித்து புக்ஃபாரம் என்ற தளத்தில்  பரூல் செகால் எழுதியுள்ள கட்டுரையின் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பகுதி)

… இந்தப் புத்தகங்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்கு அப்பாற்பட்ட ஒருவகை வெளிப்படைத்தன்மைக்கு தம்மை ஒப்புக் கொடுத்துள்ளன; இவற்றின் தீவிர ஒளிவுமறைவின்மையை முன்னிறுத்தும் கூறுகள் குழுவிழுமியங்களின் வழி வெளிப்படுகின்றன, நாம் வாசிக்கும் புத்தகம் எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதில் ஓர் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தவிர கூடுதலாய், கண்ணுக்குத் தெரியாத வகையில் எப்போதும் மறைந்திருக்கும் வெவ்வேறு வகை உழைப்பை அம்பலப்படுத்தும் நோக்கமும் தென்படுகிறது.

எ லைப்ஸ் வர்க் என்ற நூலில் ராச்சேல் கஸ்க் இவற்றுக்கான தொனியை நிறுவினார்: “குழந்தைகளும் அவர்களை யார் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதும், என்னைப் பொறுத்தவரை, ஆழமான அரசியல் கேள்விகளாகிவிட்டன- தாய்மையைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும்போது அதை எழுதுவதற்கான நேரம் எனக்கு எப்படி கிடைத்தது என்பதையும் ஓரளவுக்காவது விளக்காமல் இருப்பது ஒரு முரண்பாடாக இருக்கும்“. அவர் தான் செய்த ஏற்பாடுகளை விவரிக்கிறார், எப்படி முதல் ஆறு மாதங்கள் அவரது கணவர் வேலைக்குப் போய்க் கொண்டிருக்க, அவர் தன் மகளை கவனித்துக் கொண்டார் என்பதையும், அதன்பின் அவர்கள் இருவரும் லண்டனை விட்டு கிராமப்புறத்துக்கு இடம் பெயர்ந்து, அவரது கணவர் வேலையில்லாமலும் அவர் முழு நேரம் எழுதிக் கொண்டிருந்தும் நடைமுறைப்படுத்திய குடும்ப அளவிலான பரிசோதனை முயற்சியின் கலவையான விளைவுகளையும் விவரமாக எழுதுகிறார்.

மேக்கிங் பேபிஸ் என்ற புத்தகத்தில் ஆன் என்ரைட் இதைத் தொடர்கிறார்: “என் அலுவல் நேரத்தை மாற்றிக் கொள்ள முடியும், நான் பயணம் செய்ய வேண்டியதில்லை, எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது என் துணைவர் ஆறு வார விடுப்பு எடுத்துக் கொண்டார், இரண்டாம் குழந்தை பிறந்தபோது மூன்று மாத விடுப்பு எடுத்துக் கொண்டார் (ஊதியமில்லா விடுமுறை, இதை மும்முறை குறித்துக் கொள்ளுங்கள்). அவர் சமையலும் செய்கிறார். குழந்தைகளை குளிப்பாட்டவும் செய்கிறார்“.

பென் லெர்னர் மெத்த மகிழ்ச்சியுடன் தன் நிலையை அம்பலப்படுத்திக் கொள்கிறார். வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான அவரது 10:04 என்ற நாவல், குழந்தைப் பிறப்பையும் திருப்புமுனையாய்க் கொண்டிருக்கிறது- இந்த நாவல் சூல் கொண்டது, அதன் கருவை முன்வைத்த வியாபாரம், விற்பனை என்று துவங்கி தன் பிற எழுத்துகளை உண்டு செரித்து புத்தகம் எழுதி முடித்தது என்று அனைத்தையும் தன் கதையில் விவரிக்கிறார். இதில் புத்தகத்தின் மாசற்ற கருத்தரிப்பு குறித்து எந்த மிகைகற்பனையும் கிடையாது- உண்மையான, அழுக்கான நுண்விபரங்கள் மட்டுமே.

கஸ்க் எழுதுவது போல், குழந்தை வளர்ப்பில், “ஆழமான அரசியல்” இருக்கிறது என்றால், எழுதுவதன் உழைப்பிலும் அரசியல் இருக்கிறது, யார் எழுதுகிறார்கள், எதை எழுதுகிறார்கள் என்ற கேள்விகளிலும் அரசியல் இருக்கிறது- இவர்களால் எப்படி நிதிநிலையைச் சமாளிக்க முடிகிறது, என்ற கேள்வியிலும் அரசியல் இருக்கிறது.

டிபார்ட்மெண்ட் ஆப் ஸ்பெகுலேஷன் என்ற நூலில் ஒரு கதைசொல்லி, எழுத முடியாத நிலையிலிருக்கும் எழுத்தாளர், இப்போது புதிதாய் தாயாகியிருப்பவர், தன் ஆரம்பகால லட்சியங்களை நினைத்துப் பார்க்கிறார்: “நான் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தேன். அதற்கு மாறாக நான் கலை பூதமாக இருக்கப் போகிறேன் என்று நினைத்தேன். பெண்கள் கலைத்துறையில் பூதாகரமான ஆகிருதி அடைவதேயில்லை, ஏனெனில் கலை பூதங்கள் கலை குறித்து மட்டுமே கவலைப்படுகின்றன, அன்றாட விவகாரங்களைப் பற்றியல்ல. நபகோவ் தன் குடையைக்கூட மடித்ததில்லை. தபால் தலைகளை அவருக்கு வேரா எச்சில்படுத்திக் கொடுத்தாள்“. கலை பூதத்தின் பின்னுள்ள சாரங்களை இந்த நூல்கள் வெளிக்கொணர்கின்றன: நிதிக்கொடை விண்ணப்பங்களின் மேலிருக்கும் தபால்தலைகளை எச்சில்படுத்தி ஒட்டியது யார்? யார் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டது? யார் மளிகை சாமான்களுக்கு காசு கொடுத்தது, எப்படி கொடுத்தார்கள்?

நம் படைப்பூக்கம் வெளிப்படும் வடிவம் பெரும்பாலும் வர்க்கம் சார்ந்தது,” என்று எழுதினார் ஆடர் லோர்த். அவர் கவிதையைப் போற்றி அவ்வாறு எழுதினார், கலை வடிவங்களில் மிகச் “சிக்கனமானது”, “மிகவும் ரகசியமானது, மிகக் குறைவான உடல் உழைப்பைக் கோருவது, மிகக் குறைந்த பருண்மை கொண்டது, ஷிப்டுகளுக்கு இடையே, மருத்துவமனைக் கிடங்கில், சப்வேயில், கூடுதலாய் எஞ்சியிருக்கும் காகிதத் துண்டுகளில் எழுதப்படக் கூடியது“.

டோனி கேட் பம்பார இதே காரணத்துக்காக சிறுகதையை நேசித்தார்- அதன் “கைக்கடக்கமாய் கொண்டு செல்லும் தன்மை“. “உழவர் சந்தைக்கு கார் ஓட்டிக் கொண்டு போகும் வேளையில் அதன் அடிப்படை வடிவத்தைச் சொல்லி விட முடியும், விமான நிறுவனம் என் தொலைபேசி அழைப்பை எடுக்கக் காத்திருக்கும் வேளையில் வசனங்களைத் தீர்மானிக்க முடியும், என் மகள் செய்யும் காரட் கேக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கதையின் மையக் காட்சியின் வரைவு வடிவத்தைத் தீர்மானிக்க முடியும், நடுராத்திரியில் கதையின் முதல் வடிவை எழுதி முடித்துவிட முடியும், துணிகள் எந்திரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்போது மெய்ப்பு பார்த்து திருத்த முடியும், துண்டுப் பிரசுரங்களை நகலெடுக்கும்போது கூடவே என் கதையையும் நகலெடுத்து விட முடியும்” (கார்ல் ஓவ் நாஸ்கார்ட் பற்றி இங்கு நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை- பெரும் பனிச்சரிவாய் அவர் எழுதிக் குவிக்கும் உரைநடை- தன் குடும்ப வாழ்வு பற்றி மிகத் துல்லியமான நுண்விபரங்கள் கொண்ட அந்த ஆறு நூல்கள்- ஸ்காண்டிநேவிய சமூக சேவை அமைப்புகள் இல்லாமல், அவரும் அவரது கவிதாயினி மனைவியும் தங்கள் நான்கு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள ஒப்புவித்த குழந்தைக் காப்பகங்கள் இல்லாமல், எவ்வளவு சாத்தியப்பட்டிருக்கும்?)

ஓப்பில், ரூல், மன்கூசோ, என்ரைட்- இவர்கள் துண்டிலக்கியம் மற்றும் சிறுபொறிகளாய்த் தெறிக்கும் உரைநடை வடிவத்தைத் தேர்ந்தெடுக்க அழகியல் மற்றும் அறிதலியல் காரணங்கள் இருக்கின்றன என்பது நிச்சயம்தான், ஆனால், வேறு ஆழமான கட்டாயங்களும் இவர்களுக்கு இருக்கின்றன என்று தோன்றுகிறது- “என் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு என்னால் எழுத முடியாது,” என்று எழுதுகிறார் நெல்சன். தன் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவசர அவசரமாக தான் எழுதியதாக என்ரைட் சொல்கிறார், பின்னரே அவர் தன் குறிப்புகளை புத்தக வடிவில் தொகுத்திருக்கிறார். ஓப்பில் எழுதிய டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்பெகுலேஷன் நாவலின் கதைசொல்லி, காரில் சென்றுகொண்டிருக்கும் வேளையில் மளிகை சாமான் பட்டியலில் எழுதுகிறார், கிரெடிட் கார்ட் ரசீதுகளின் பின்புறம் கிறுக்குகிறார் (ஓப்பில்கூட தன் நாவலை இன்டெக்ஸ் கார்டுகளில்தான் எழுதியிருக்கிறார்).

ஜோன் டிடியன், எலிசபெத் ஹார்ட்விக், ரேனாடா ஆட்லர் முதலியவர்கள் எழுபதுகளில் புகழ்பெறச் செய்த துண்டங்கள்- அல்லது உணர்வுநிலை துண்டித்தல்களின் பலவகைகள்- அல்ல இவை. அவர்களது துடிப்பான, மெல்லிய வாக்கியங்கள் நளினமாய் அவிழ்ந்து விழும் பணக்காரப் பெண்களின் அலுப்பை நினைவூட்டின. இப்போது எழுதுபவர்கள் வேறு திசையில் செலுத்தப்படுகிறார்கள், இது வலிமிகுந்த நிலைபெயர்தலாக இருக்கிறது. இந்தத் துண்டங்கள் கரடுமுரடாக இருக்கின்றன- ஆனால் இவை அன்னியப்படுதலை நிகழ்த்திக் காட்டுகின்றன என்பதைவிட ஒருங்கிணைத்தலை நோக்கி உணர்ச்சிகரமான முயற்சி எடுத்துக் கொள்கின்றன.

பெண்கள், அதிலும் குறிப்பாக தம் பணியில் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு கொண்ட பெண்கள், மகப்பேற்றுக்குப்பின் தம்மிலிருந்தே அன்னியப்பட்டு உணர்வதைக் கைப்பற்ற விரும்பியதாய் பல நேர்முகங்களில் ஓப்பில் கூறியிருக்கிறார். நொறுங்கிய கண்ணாடியில் வரையப்பட்ட சுய ஓவியம்தான் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்பெகுலேஷன்.

மணவாழ்வு, புரட்சி மற்றும் வழமை, ஏன், கதையாடல்கள் குறித்தே உள்ள வழக்கமான கதையாடல்களின் மத்துறுதல்களை எதிர்த்து நிற்கும் அலகுகளாய் ஆர்கனாட்ஸ் என்ற நூலில் மாகி நெல்சனின் துண்டங்கள் ஒவ்வொன்றும் இருக்கின்றன என்ற உணர்வு எழுகிறது. “எப்போது, எப்படி, பழைய நியூக்லியர் குடும்ப அமைப்பை புதிய உறவு அமைப்புகள் பிரதிபலிக்கின்றன, எப்போது எப்படி அவை தம்மை முற்றிலும் புதிய சூழியலில் அமைத்துக் கொண்டு உறவுகள் குறித்து மறுபரிசீலனையாகும் வகையில் தம்மைத் தொகுத்துக் கொள்கின்றன“, என்று கோட்பாட்டியலாளர் ஜூடித் பட்லரின் மொழியை கடன் வாங்கி அவர் கேட்கிறார். “உன்னால் எப்படிச் சொல்ல முடியும்; அல்லது, அதைக் காட்டிலும், சொல்வது யார்?

மேலும் வாசிக்க- புக்பாரம்

ஒளிப்பட உதவி- விக்கிப்பீடியா

ஹங்கேரிய மொழி இலக்கியத்தை இந்திய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்- பாரிஸ் ரிவ்யூ தளத்தில் ஒரு நேர்முகம்

வாலரி ஸ்டைவர்ஸ் (Valerie Stivers)

(இவ்வாண்டு மேன் புக்கர் பரிசு பெற்ற ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்க்காய் நாவல்களை மொழிபெயர்த்தவர் ஓட்டிலி மூல்ஸட். இவரை பாரிஸ் ரிவ்யூ தளத்துக்காக பேட்டி கண்டவர் வாலரி ஸ்டைவர்ஸ் (Valerie Stivers))

க்ராஸ்னஹோர்க்காய் எழுத்தை மொழிபெயர்த்த அனுபவத்தைக் கூறுங்கள். நீங்கள் எப்படி அவரது மொழிபெயர்ப்பாளர் ஆனீர்கள்? அவருடன் எப்படி வேலை செய்கிறீர்கள்?

நான் அவரைச் சந்திப்பதற்கு முன், செயோபோ தேர் பிலோவிலிருந்து “சம்திங் இஸ் பர்னிங் அவுட்சைட்” என்ற சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்திருந்தேன். அது http://www.hlo.hu என்ற ஹங்கேரிய மொழி இணையதளத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டுக்கு இருபதாண்டுகள் பிற்பட்ட கிழக்கு ஐரோப்பிய சிறுகதைகள் என்ற ஒரு மொழிபெயர்ப்புத் தொடரில் பதிப்பிக்க ஜூன் 2009ல் கார்டியன் தளம் அதைத் தேர்ந்தெடுத்தது. அப்போது சிறிது நேரம் க்ராஸ்னஹோர்க்காயைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் கடிதங்கள் பரிமாறிக் கொண்டோம். செயோபோவை மொழிபெயர்க்க நான் முயற்சி செய்யத் தயாராக இருப்பதைச் சொன்னேன். முதலில் க்ராஸ்னஹோர்க்காய்க்கு அதில் சிறிது தயக்கம் இருந்தது, அந்தப் படைப்பு அசாதாரண அளவில் சிக்கலானது என்பதால் அவரது தயக்கம் புரிந்துகொள்ளப்படக் கூடியதுதான். ஆனால் நான் அனிமல் இன்சைடை மொழிபெயர்த்தேன், அது மிக நல்ல வரவேற்பு பெற்றது, ஓரளவு சீக்கிரமாகவே இரண்டாம் பதிப்பும் வெளிவந்தது. அடுத்த ஆண்டு இளவேனிற் பருவத்தில் நான் செயோபோவிலிருந்து ஓர் அத்தியாயத்தை நியூ டைரக்சன்ஸ் பதிப்பகத்துக்கு முன்மாதிரியாக அனுப்பி வைத்தேன்.

க்ராஸ்னஹோர்க்காயும் நானும் மின் அஞ்சல்வழி நிறைய பேசிக்கொள்கிறோம். எனக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், அவர் மிகவும் உற்சாகமாக பதிலளிக்கிறார். பெரும்பாலும் ஹங்கேரிய மொழியில்தான் பேசிக் கொள்கிறோம். சில சமயம் அவர் நேரடியாகச் சில குறிப்புகள் அளிப்பதுண்டு. உதாரணமாக, செயோபோவில் உள்ள அந்நிய மொழிச் சொற்களை சாய்வெழுத்துகளில் எழுதக்கூடாது என்று சொன்னார், அது ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பிரதியில் இயல்பாகவே ஒன்றியிருப்பது போல் சேரும்போதும் அவை மேலும் குழப்புவதாய் இருக்கின்றன. எனக்கு அது ஒரு தீவிரமான செய்கையாகத் தெரிந்தது.

ஒரு மொழியாக ஹங்கேரிய மொழியின் பலங்களும் தனித்தன்மைகளும் என்ன, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது அதன் சவால்கள் என்ன?

ஒரு மொழியாக ஹங்கேரியன் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. நான் அதன் ஒலியை நேசிக்கிறேன், அதன் இலக்கணம் எப்படி வேலை செய்கிறது என்பதை நேசிக்கிறேன். அதன் மொழிக் களஞ்சியத்தை நேசிக்கிறேன், பல்வேறு மொழிகளின் திகைக்க வைக்கும் கலவையாக அங்கு குவிந்திருக்கும் சொற்தொகையை நேசிக்கிறேன், அதைக் கொண்டு எழுத்தாளர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதை நேசிக்கிறேன். ஹங்கேரிய மொழி உயிரொலி இயைபு கொண்ட ஒட்டுநிலை மொழி- அதன் பின்னொட்டுகள் முடிவற்றவை, கூட்டுச் சொற்களுக்கான சாத்தியம் ஏராளமானவை, அதன் சொல்வரிசை மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டது- எதற்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறாயோ, அதற்குத் தகுந்த வகையில் வாக்கிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். நம்ப முடியாத அளவுக்கு ஹங்கேரிய மொழிக்கு ஒரு நெகிழ்வுத்தன்மை உண்டு என்பதை அவசியம் சொல்லியாக வேண்டும்- அது ஒரு ரப்பர் பாண்ட் போன்றது. அது விரிந்து கொண்டே செல்லக்கூடியது, ஆஹா, இப்போது எந்த நொடியும் அறுபட்டுவிடப் போகிறது என்று நீங்கள் நினைக்குமளவு அது விரியக்கூடியது. அல்லது, வெகு சில எளிய சொற்களில் அதைச் சுருக்கி விடலாம்- அதிலுள்ள மிக முக்கியமான பகுதிகள் அனைத்தையும் உங்கள் யூகத்துக்கே விட்டுவிடவும் முடியும்.

ஆங்கிலம் உலகளாவிய மொழியாக இருந்தாலும் அத்தனை நெகிழ்வுத்தன்மை கொண்டதல்ல. ஒருவேளை இந்திய துணைக்கண்டத்தில் பேசப்படும் ஆங்கிலம் அப்படியிருக்கலாம்- அங்கு அது இந்தியின் போக்குகளுக்கு ஏற்ப ஓரளவு கட்டுப்பட வேண்டியிருக்கிறது- ஹங்கேரிய மொழி இலக்கியத்தை மொழிபெயர்ப்பதற்குச் சரியான ஆங்கிலமாக அது இருக்கலாம். ஆனால் எனக்கு எந்த மொழி நன்றாகத் தெரியுமோ அதில்தான் நான் வேலை செய்தாக வேண்டும்.

தகவல்களால் நெருக்கமாகத் தொகுக்கப்பட்ட வாக்கியங்களைத் தவிர்க்கப் போராடியாக வேண்டும், என்றாலும் கூட கொஞ்சம் தீவிரமான இழப்புகளை எதிர்கொள்ள வேண்டும் எனும்போது நீங்கள் ஆங்கில மொழியின் எல்லைகளை மீறத்தான் வேண்டும். ஆங்கில மொழியின் எழுவாய்- பயனிலை- செயப்படுபொருள் என்ற வரிசை இறுக்கமானது, செயல்வினை காட்டிகள் எல்லாமும் அதனதன் இடத்தில் இருந்தாக வேண்டும்.

காகிதத்தின் சிந்திய மசித் துளிகள் போல் ஹங்கேரிய மொழி இருக்க முடியும். சில வாக்கியங்கள்- க்ராஸ்னஹோர்க்காய் விஷயத்தில் சில உட்கூறுகள்- இரண்டு அல்லது மூன்று சொற்கள் மட்டுமே கொண்டவையாக இருக்கும். இதில் சொல்லப்படாமல் விட்டுப்போவது பற்றியெல்லாம் யோசிப்பது எனக்கு சுவையாக இருக்கிறது, வழிக்கு வர முரண்டு பிடிக்கும் ஆங்கிலம் போன்ற ஒரு மொழியில் அதைச் சொல்ல வேண்டியிருப்பது மிகவும் சுவாரசியமான விஷயமாக இருக்கிறது- ஆங்கில மொழியில் சாத்தியமற்ற ஏதோ ஒன்றைச் செய்யவைக்க முயற்சிப்பதில் ஓர் ஆர்வம் இருக்கிறது.

ஆங்கில மொழி இன்று வணிகத்திலும் வர்த்தகத்திலும் உலகளாவிய மொழியாக இருக்கிறது, எனவே அது மேலாதிக்கம் செலுத்துகிறது என்று சொன்னாலும் சில வகைகளில் அது மிகவும் ஏழைப்பட்ட மொழியாகவே இருக்கிறது. பிற மொழிகளிலிருந்து இது போல் ரத்தம் செலுத்தப்படுவது ஆங்கில மொழிக்கு அவசியமாக இருக்கிறது.

க்ராஸ்னஹோர்க்காய் எழுத்தை ஆங்கில மொழியில் வாசிக்கும்போது எத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன, மொழியின் தொனி என்ற அளவில் சொல்லுங்கள்.

ஹங்கேரிய வாசகர்கள்- நான் சொல்வது தீவிர இலக்கியம் படிக்கும் ஹங்கேரிய வாசகர்கள்- மிகக் கடினமான வகையில் சிக்கலான அமைப்பு கொண்ட இந்த வாக்கியங்கள் சிலவற்றை பிறரைக் காட்டிலும் அதிக அளவில் ஏற்றுக் கொள்கின்றனர், இங்கு நான் வாக்கியத்தின் நீளத்தைப் பற்றியே பேசவில்லை. எந்த அளவுக்கு சிக்கலான வாக்கிய அமைப்பை ஆங்கிலத்துக்கு கொண்டு வர முடியுமோ, அந்த அளவுக்கு அதைக் காப்பாற்றியிருக்கிறேன்- மூல நூலிலேயே புத்தகத்தின் சில பகுதிகள், வாசகனுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பத்தைத் தோற்றுவிக்கின்றன, அதை எல்லாம் அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.

ஹங்கேரிய மொழியில் ஆங்காங்கே சிதறிய சில சிறு பத்திகள் இருக்கின்றன, அவை வாசிக்க கவிதை போலிருக்கின்றன, அவற்றில் சிலவற்றின் ஒலியைக் காப்பாற்ற முடியவில்லை. நினைவுக்கு வரும் சொற்றொடர் இது, “rízs és víz, rízs és víz”- “அரிசியும் நீரும் அரிசியும் நீரும்” – மிகுந்த வறுமையில் இருக்கும்போது வீட்டில் இருந்த ஒரே உணவு இதுதான் என்று மாஸ்டர் இனோயி கசுயூகி சொல்கிறார். இந்தச் சொற்றொடரில் வரும் ஐ என்ற நெடில் இறுதியில் வரும் குழிந்துரசொலிகளோடு (Sibilant) இணையும்போது, மறக்க முடியாத ஓர் ஒலித்தாக்கத்தை ஏற்படுத்துகிறது- அது ஆங்கிலத்தில் வராது என்று நினைக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் இதைச் சொல்வதில் க்ராஸ்னஹோர்க்காய்க்கே உரிய தனித்துவம் கொண்ட வரண்ட நகைச்சுவையை மீளுருவாக்கம் செய்ய முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன்.

குறுகிய வாக்கியங்களைக் காட்டிலும் நீண்ட வாக்கியங்கள் கடினமாக இருக்கின்றனவா?

அந்த நீண்ட வாக்கியம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்த விஷயம் இது. நீண்ட வாக்கியங்கள் சிலவற்றில் ஓர் ஒழுங்கு வரிசை இருக்கக்கூடும்- ஒவ்வொரு தகவலாக ஒன்றன்பின் ஒன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஒரே ஓட்டமாக இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும், அந்த ஆபத்து இருக்கிறது. மூல நூலில் முற்றுப்புள்ளி இல்லாத இடத்தில் நான் முற்றுப்புள்ளி வைக்கவே மாட்டேன்- ஏனெனில் என்னைப் பொறுத்தவரை இந்த வாக்கியங்கள் நதி போலிருக்கின்றன, மூல பிரதியில் இல்லாத இடத்தில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்போது அது ஆற்றில் அணை கட்டுவது போன்றது.

ஆனால் அப்படிப்பட்ட வாக்கியங்கள் ஒப்பீட்டளவில் சுலபமானவை. க்ராஸ்னஹோர்க்காய் ஹங்கேரிய மொழி இலக்கணத்தின் அசாதாரண நெகிழ்வுத்தன்மையை பயன்படுத்திக் கொண்டு வேண்டுமென்றே சில சமயம் சிக்கலான வாக்கியங்களை அமைக்கிறார்- துணைநிலைத் தொடர்களுக்கு இடையேயுள்ள உறவுகளை ஒரு வரைபடமாக வரைந்தால், அது அச்சுப்பிரதியில் சிலந்தி வலைபோல் இருக்கும். தொடர்ந்து இணை அமைப்புகள் கொண்ட சொற்களாலான நீண்ட வாக்கியங்கள்- ஆங்கிலம் ஓரளவு இயல்பாக அதை ஏற்றுக் கொள்கிறது.

சில மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளவாறே மொழிபெயர்ப்பதாகச் சொல்கின்றனர், வேறு சிலர் இயல்பான வாசிப்புக்கு உதவும் வகையில் கூடுதல் சுதந்திரம் எடுத்துக் கொள்வதாகச் சொல்கின்றனர். இதில் உங்கள் நிலை என்ன?

சில சமயம் இந்த முரண்நிலை சற்றே செயற்கையானது என்று நினைத்திருக்கிறேன். ஏனென்றால், நீ மொழிபெயர்ப்பதன் அந்நியத்தன்மையை வேறொரு மொழிக்குக் கடத்திச் செல்ல பல வழிகள் இருக்கின்றன. மூல மொழியின் தனித்தன்மை எதுவோ அதை கொண்டு செல்ல நான் என்னாலான அளவு முயற்சி செய்கிறேன்- அது ஏன் ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை, அது ஏன் ஆங்கிலத்தில் எழுதப்படுவது சாத்தியமேயில்லை என்பதை உணர்த்த விரும்புகிறேன். அசாத்தியமான ஒன்றை என் மொழிபெயர்ப்பு சாதிக்க வேண்டும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்ட, பொருத்தமற்ற இரு உலகங்களின் எல்லைகளில் புழங்கப்படுவதாகவும் இருக்க வேண்டும், அந்த இரு உலகங்களுக்கு இடையே என் மொழிபெயர்ப்பு ஒரு பாலமாகச் செயல்பட வேண்டும். நான் மூல மொழியில் எத்தகைய அதிர்ச்சியை உணர்ந்தேனோ, ஆங்கில வடிவில் வாசிக்கும் வாசகனும் அதை உணர வேண்டும் என்று விரும்புகிறேன்.

சுலபமாக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் செய்ய வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கமல்ல, பிரதியை மிகவும் உள்ளூருக்கு உரியதாகச் செய்துவிடக் கூடாது. ஹங்கேரிய மொழியில் அற்புதமான கவித்துவம் உள்ளது. சிலபோது அது அளவற்ற மென்மை கொண்டுள்ளது, சிலபோது அது முரட்டுக் கவிதையாய் இருக்கிறது.

ஒரு முறை, வெகுநாட்களுக்கு முன், நான் மிகவும் தீவிரமான ஹங்கேரிய மொழி செமினார் ஒன்றில் பங்கேற்றேன். ஹங்கேரிய இலக்கணத்தில் உள்ள வழக்கத்துக்கு மாறான கூறுகள், “இவர்களை யார் உள்ளே விட்டார்கள்?” என்பது போன்ற எதிர்வினைகளைச் சந்தித்தன. “இந்த மொழியின் தேவைதான் என்ன?” என்ற வழமையான கேள்விகளோடு பங்கேற்பாளர்கள் பிறர் தம்மை நிறுத்திக் கொண்டார்கள். அப்போது பயிற்றுனர் சற்றும் தாமதிக்காமல் சொன்ன பதில், “குருதி, வியர்வை, கண்ணீர்”.

க்ராஸ்னஹோர்க்காயின் ஆங்கில வாசகர்களின் குருதியும் வியர்வையும் கண்ணீரும் எனக்கு வேண்டாம், ஆனால் ஹங்கேரியன் போன்ற ஒரு முற்றிலும் மாறுபட்ட மொழியின் முழு அந்நியத்தன்மை நமக்கு அசௌகரியமாக இருக்கிறது, அந்த அசௌகரியத்தை மொழிபெயர்ப்பு காப்பாற்றித் தருமா?- அசௌகரியமானது, வித்தியசமானது, முடிவில் நமக்கு மேன்மையளிப்பதும் உயிரூட்டுவதுமாக மொழிபெயர்ப்பு இருக்க முடியுமா? க்ராஸ்னஹோர்க்காய் போன்ற ஓர் எழுத்தாளர் பற்றி பேசும்போது, தன வாசகர்களை அசௌகரியப்படுத்தி தடுமாறச் செய்வதை நேரடி நோக்கமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர் பற்றிதான் பேசுகிறோம். “பிரதியின் கிறுகிறுப்பு”- இதில் நிச்சயம் வெளிப்படையான, வாசக கிளுகிளுப்பின் உச்சம் இருக்கிறது.

எப்போதாவது மாலைப் பொழுதில் உங்கள் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு, “அப்பாடா, இன்று ஒரு வாக்கியம் முடித்தேன்,” என்று நினைத்தது உண்டா?

“ஆம், சில சமயம், “இன்று ஒரு வாக்கியத்தைத் துவங்கினேன்,” என்றோ, “இன்று ஒரு வாக்கியத்தை முடித்தேன்” என்றோ, அல்லது, “இன்று ஒரு வாக்கியத்தைப் படித்து முடித்தேன்” என்றும்கூட இருப்பதுண்டு”

அந்த முதல் ஆறுபக்க வாக்கியத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது எங்கோ ஓரிடத்தில், க்ராஸ்னஹோர்க்காயின் ஆங்கில மொழி வாசகர்கள் படிப்பதை நிறுத்தி, என்னைப்போல், இதை மொழிபெயர்த்தது யார் என்று நினைப்பதுண்டு என்று தோன்றுகிறது. அப்புறம் உங்கள் பெயர் இவ்வளவு அழகாக, மர்மம் நிறைந்ததாக இருக்கிறது, ஓட்டிலி மூல்ஸட்..

மூல்ஸட் என்ற பெயர் என் மத்திய ஐரோப்பிய வேர்களோடு தொடர்பு கொண்டது- என் பாட்டி ஹங்கேரிய தேசத்தைச் சேர்ந்தவள், அவள் பெயர் மூல்ஸட், லூயிஸா மூல்ஸட். ஓட்டிலி என்ற பெயர் எனக்குப் பிடித்திருந்ததால் அதை வைத்துக் கொண்டேன். காப்காவின் சகோதரிகளில் ஒருத்தியின் பெயர் அது- ஹங்கேரிய மொழியில் ஓட் என்றால் அங்கே என்று பொருள், நான் எப்போதும் அங்கிருப்பவள், இங்கல்ல, எனபதையும் அது குறிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறேன்…

நான் தத்து எடுத்து வளர்க்கப்பட்டதால் ஹங்கேரிய மொழி பயின்றேன். என் பின்னணியல் ஹங்கேரியர்கள் இருக்கிறார்கள் என்பதுகூட எனக்கு பெரியவளாகும்வரை தெரியாது. இந்த பூமியில் என் மூதாதையர்களாய் இருந்தவர்களைப் பற்றி ஏதோவொன்று அறிந்து கொள்ள இது ஒரு வழி என்று நினைத்தேன். அறிவார்ந்த ஆர்வத்தால் மட்டும்தான் அந்த மொழி கற்றுக்கொள்ளத் துவங்கினேன், ஆனால் அதன் பின் அது ஒரு போதையாகி விட்டது.

க்ராஸ்னஹோர்க்காய் நாவல்களில் நான்கு மட்டுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று அவரது ரசிகர்கள் வருந்துகிறார்கள். உங்கள் வாழ்க்கைப்பணியைக் கண்டுகொண்டு விட்டதாக நினைக்கிறீர்களா? மொழிபெயர்க்கப்படாத நாவல்கள் உங்களைத் துன்புறுத்துகின்றனவா?

இப்போது பேசிக்கொண்டிருக்கும்போதுகூட இரண்டு மொழிபெயர்ப்புகள் நினைவுக்கு வருகின்றன. டெஸ்ட்ரக்சன் அன்ட் சாரோ பினீத் த ஹெவன்ஸ் என்பது ஒன்று, அதை இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். சீனாவில் க்ராஸ்னஹோர்க்காய் மேற்கொண்ட விரிவான பயணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இலக்கியக் குறிப்புகள் அது. முதன்முதலில் 2002ல் பதிக்கப்பட்டபோது இருந்ததைவிட இப்போது அதற்கு கூடுதல் முக்கியத்துவம் இன்று இருக்கிறது. மற்றொன்று, த வர்ல்ட் கோஸ் ஆன், என்ற அற்புதமான சிறுகதை தொகுப்பு. 2013ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெற்ற ஜார்ஜ் ஜைர்டஸ், அவர் பரிசு பெற்றதும் க்ராஸ்னஹோர்க்காய் நூலுக்காகதான், ப்ரம் த நார்த் பை ஹில், ப்ரம் த சவுத் பை லேக், ப்ரம் த வெஸ்ட் பை ரோட், ப்ரம் த ஈஸ்ட் பை ரிவர் ஆகிய நான்கு புத்தகங்களை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்- வரும் சில ஆண்டுகளில் இந்த நான்கேனும் வாசிக்க கிடைக்கவிருக்கின்றன.

புதிய செய்திகள் அல்லது திட்டங்கள் எதுவும் சொல்வதற்கு உண்டா?

சைலார்ட் பார்பேலியின் த டிஸ்பொசஸ்ட் மொழியாக்கம் செய்யப் போகிறேன்- அறுபதுகளின் பிற்பகுதியில் வடகிழக்கு ஹங்கேரியில் ஏழ்மைப்பட்ட கிராமத்தில் தான் வளர்ந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் அவர். தன் சமகால தலைமுறையின் மிகவும் திறமை வாய்ந்த கவிஞர் அவர், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார். என் நெருங்கிய நண்பர் அவர், நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்த மனிதர். அவரது மரணம் நினைத்தே பார்க்க முடியாத இழப்பு, ஹங்கேரிய இலக்கியத்திலும் ஐரோப்பிய இலக்கியத்திலும் மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. அவரது எழுத்துக்கு புதிய ஆங்கில வாசகர்களை அறிமுகப்படுத்த முடியும் என்றால், எனக்கு அதுவே ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்- இப்படிப்பட்ட சூழ்நலையில் ஒருவர் எவ்வளவு சந்தோஷப்பட முடியுமோ அவ்வளவு சந்தோஷப்பட முடியும்.