– ஷோ ஸ்பேத் மதிப்பீடு (Sho Spaeth) –

(ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி என்ற மினெ மிஜூமூரா நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர்கள் மரி யோஷிஹரா மற்றும் ஜூலியட் வின்டர்ஸ் கார்பெண்டர் (Mari Yoshihara and Juliet Winters Carpenter). இந்த நூல் குறித்து ஃபுல் ஸ்டாப் என்ற தளத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் தமிழாக்கம் இது.)
பெருவாரி வாசகர்களின் இலக்கிய ரசனை குறித்து வீசப்படும் குற்றச்சாட்டுகள் போல் வெகுச் சிலவே என்றும் புதிதாய் இருக்கின்றன. குழந்தைக்கல்வி பிரச்சினை என்று பெரும்பாலும் அடையாளம் காணப்படுகிறது. இன்று புத்தகங்கள் அவற்றைவிட பிரகாசமான வண்ணங்கள் கொண்ட பொழுதுபோக்கு வடிவங்களோடு போட்டி போடும் காலத்தில் இருவகை குறைகள் சொல்லப்படுகின்றன- குழந்தைகள் அதிகம் வாசிப்பதில்லை, அப்படியே அவர்கள் வாசித்தாலும், அவர்கள் நல்ல விஷயங்களைப் படிப்பதில்லை.
இதைக் கேட்கவே அலுப்பாக இருக்கிறது. அ\தைவிட அலுப்பான விஷயம் இது திரும்பத் திரும்ப சொல்லப்படுவதுதான். எனவே சமீபகாலமாக சர்வதேச அளவில் ஆகிருதி கூடிவரும் ஜப்பானிய நாவலாசிரியர் மினெ மிஜூமூரா, இந்தக் குறையை ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி என்ற புத்தகத்தில் மிகப் பிரமாதமான வகையில் சுவாரசியமாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்டுரை, நினைவுக் குறிப்புகள், புலம்பல் என்று பலவற்றின் கலவையாக இருக்கும் இந்த நூல், இணைய யுகத்தில் ஆங்கில மொழியின் மிகப்பெரும் தாக்கம் குறித்து கவலைப்படுகிறது- இந்தப் போக்கு ஜப்பானுக்கு ஒரு மிகப்பெரிய தேசிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அவர் நம்பக்கூடிய வகையில் எழுதுகிறார். ஜப்பானிய மொழியின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சியை விவரித்து, அதைப் பாதுகாப்பதன் தேவையை வலியுறுத்தும்போதே அவர் ஜப்பானின் குறுகிய கரைகளைக் கடந்து, நாம் நம் செவ்வியல் படைப்புகளை மறக்கும்போது என்ன நடக்கிறது என்ற உலகளாவிய கவலையை எதிர்கொள்கிறார். .
மொழியின் வீழ்ச்சி, ஜப்பானில் எதிர்பாராத வெற்றி பெற்றது. இது அபுனைவுகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடிக்க ஒரு பெரிய காரணம் இருக்கிறது- ஜப்பானிய கல்வி அமைப்பைச் சீர்திருத்துவதற்கான மிஜூமூராவின் சில பரிந்துரைகள் ஆவேசமான விவாதங்களுக்கு வித்திட்டன. மிஜூமூராவின் பரிந்துரைகள் குறித்து நிகழ்த்தப்பட்ட எதிர்வினைகளில் சிலவற்றை மொழிபெயர்பபாளர்கள் மரி யோஷிஹரா மற்றும் ஜூலியட் வின்டர்ஸ் கார்பெண்டர் ஆகிய இருவரும் தங்கள் முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றனர்- அவர் வலதுசாரி சிந்தனையாளர், அரசகுல ஆதரவாளர், அவரது பரிந்துரைகள் பொருத்தமற்றவை, குறிப்பாக அவர் ஒரு பெண்ணாக இருக்கையில் ஜப்பானிய கலாசாரம் குறித்த ஆண்மையப் பார்வையைப் பிரதிபலித்திருக்க வேண்டாம்; அவர் நிச்சயம் ஒரு எலீட்டிஸ்ட்தான். அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் எலீட்டிஸ்ட்- தன் இளமைப்பருவத்தின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தவர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எழுத்தாளர்களுக்கே, அதிலும் குறிப்பாக மிகக் குறைந்த அளவு பெண்களுக்கே, சாத்தியப்படக்கூடிய வெற்றிக்குக் காரணமான கல்வி அமைப்பை அவர் குற்றம் கூறுகிறார் என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர்.
வேறு சிலர் அவரது ரசனையில் குற்றம் காண்கின்றனர்- எந்த அமெரிக்கர்களிடையே வளர்ந்தாரோ, அந்த அமெரிக்கர்களே அவர் மிகக் கேவலமாகக் கருதும் சமகால ஜப்பானிய எழுத்தாளர்களை நேசிக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த புத்தகத்தின் ஒரு நல்ல விஷயம், மிஜூமூரா தன் தரப்பை முன்வைக்கும்போதே இந்த ஒவ்வொரு எதிர்வினையையும் முன்கூட்டியே அவதானித்து அதற்கு பதிலும் அளிக்கிறார். ஆனால் நம் காலத்தில் மேலோங்கியிருக்கும் பார்வையால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயத்தை அவர் தன் கருத்தில் கொள்வதில்லை என்பது நம்மை யோசிக்க வைக்கிறது- நாவல்கள், அவற்றின் நாவலாசிரியர்கள், நம் கேளிக்கைக்காகவே இருக்கின்றனர் என்ற கருத்தை நிராகரிக்கும் அவரது வெகுளித்தன்மை.
புத்தகத்தின் துவக்க பகுதிகில் அவர் விரிவான வாசிப்புள்ள ஒரு ஜப்பானிய நண்பருடன நிகழ்த்திய உரையாடலை விவரிக்கிறார்- சமகால ஜப்பானிய இலக்கியச் சூழல், “குப்பையாய் எழுதும் மூளையில்லாத எழுத்தாளர்களால்” நிறைந்திருக்கிறது என்று தன் நண்பர் சொல்வதை சிரித்துக்கொண்டே வேடிக்கையாய் ஒப்புக் கொள்கிறார்.
“ஒருவேளை நானும் என் நண்பரும் ஜப்பானிய இலக்கியத்தின் நவீன செவ்வியல் ஆக்கங்களைத் தோய்ந்து வாசித்திருந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களாய் இருப்பதால் எங்களுக்கு புதிய எழுத்தை ரசிக்கத் தெரியவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அல்லது, புதிய எழுத்தில் பெரும்பாலானவை குறைந்த மதிப்பு கொண்டவை என்பதும் உண்மையாக இருக்கலாம்.
“வெகு காலம் முன்னர், நான் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஜப்பானுக்குத் திரும்பி அங்கு ஜப்பானிய மொழியில் நாவல்கள் எழுதத் துவங்கினால் எப்படியிருக்கும் என்று நினைத்த போதெல்லாம் அடர்ந்த ஒரு காடும் அதில் மகோன்னதமாய் உயர்ந்து நிற்கும் மரங்களுமே என் கண் முன் தோன்றின..நான் அவற்றின் நிழலில் அமைதியாகவும் தன்னடக்கத்துடனும் எழுதிக் கொண்டிருப்பேன், ஒரு பெண் எழுதத்தக்க சாதாரண விஷயங்களை, அங்கொன்றும் இங்கொன்றுமாக. ஆண் பெண் சமத்துவம் நேரடி அனுபவமாய் அறிமுகப்பட்ட ஒருவருக்கு இது சோகமான சித்திரம்தான் என்றாலூம் புகுஜாவா யூகிச்சி, ஃபுதபடாய் ஷிமை, நத்சுமே சோசெகி, ,மோரி ஒகாய், கோடா ரோகன், தனிஜாகி ஜூனிசிரோ போன்ற பேராளுமைகளால் என் தேசம் இன்றும் நிறைந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்- அவர்களது அறிவு, போதம், புத்திசாலித்தனம் நம்மை அச்சுறுத்தும் தன்மை கொண்டது.
“மகோன்னதமாய் உயர்ந்த மரங்கள் கொண்ட எந்த அடர்கானகமும் நான் நாடு திரும்பியதும் கண்டடைய முடியாமல் போகலாம் என்ற எண்ணம் ஒரு போதும் எனக்கு எழவேயில்லை. ஆனால் அப்படிதான் நடந்தது. இங்கொரு மரம் அங்கொரு மரம் என்று பார்க்க முடிந்ததே தவிர நான் கண்ட காட்சி தட்டையாகத்தான் இருந்தது. “பெருஞ்சோகப் பாழ்நிலம்” என்பது போன்ற கவித்துவ வர்ணனைகளுக்கும்கூட தகுதியற்ற அந்த வெளி, சிறியதாகவும் ஆரவாரமானதாகவும் இருந்த அனைத்துக்குமான விளையாட்டு மைதானம் போலிருந்தது- வெறும் முதிரா இளமையின் வெளிப்பாடு. நான் யாரை மிகப் பெரிதாய் மதித்தேனோ, அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைக்கூட என் சமகாலத்தவர்கள் மறந்து விட்டார்களா என்ற சந்தேகமே எஞ்சி நின்றது.
மிஜூமூராவின் நடை குறித்த அறிமுகமில்லாத வாசகர்களுக்கு இந்த எதிர்மறை மதிப்பீடு அவரது அனிச்சை அவதானிப்புகள், பழக்கங்கள், கருப்பொருட்கள் ஆகியவற்றில் சிலவற்றைச் சற்றே வெளிச்ச்சமிட்டுக் காட்டுகிறது- புறப்பார்வைக்கு தியானம் போன்ற எழுத்து, ஆனால் அதனூடே புத்திசாலித்தனமாய்த் தனது தன்னடக்கம் குறித்து உணர்த்திக் கொள்வது, ஒற்றைப்படையாய் முன்வைக்கப்படும் கறாரான தீர்ப்பு, பட்டாலான கையுறை போன்ற அவரது உரைநடையுள் பொதிந்திருக்கும் இரும்புக்கை குத்து; எல்லாவற்றுக்கும் மேல், நவீன ஜப்பானிய இலக்கியத்தின் தலைசிறந்தவற்றைக் குறிக்கும் பட்டியலிலுள்ள எழுத்தாளர்கள் மீதான கட்டற்ற பெருமதிப்பு.
1868ல், மெய்ஜி சகாப்தம் துவங்கியபோது அதுவரை வெளியுலகிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டிருந்த ஜப்பான் தன் வாசல்களைத் திறந்து கொண்டதும் அதன் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், மிஜுமூரா, “மேற்கின் அதிர்ச்சி” என்றழைக்கும் அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அதற்கடுத்த நூறாண்டுகளில் படைக்கப்பட்ட ஆக்கங்களே நவீன ஜப்பானிய இலக்கியத்தின் செவ்வியல் ஆக்கங்களாய் கருதப்படுகின்றன. பலவகைகளில் அந்தக் கானனுக்கும் அதன் கிளாசிக்குகளுக்கும் எழுதப்பட்ட காதல் கடிதமே இந்தப் புத்தகம். மொழிகளின் வளர்ச்சியும் தேசிய இலக்கியங்கள் பற்றியும் எய்யப்படும் அறிமுகம், நவீன ஜப்பானிய கானனின் அருமையையும், அதன் உருவாக்கத்துக்குக் காரணமான அதிர்ஷ்டவச சூழ்நிலையையும் உணர்ந்து கொள்வதற்கான பின்புலமாய் மட்டுமே அளிக்கப்படுகிறது. ஜப்பானிய இலக்கியம் குறித்து அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது ஒன்றேகூட விலைமதிப்பற்ற சேவையாக இருக்கிறது.
இந்தக் கானன் மிஜூமூராவுக்கு எதை உணர்த்துகிறது? ஜப்பானிய மக்களுக்கு அடிப்படை முக்கியத்துவம் கொண்டதாய் இருக்கிறது அது ஏன் இருக்கிறது என்று அவர் வாதிடுகிறார்? முராசாகி ஷிகுபுவின் கெஞ்சி கதை துவங்கி பதினொன்றாம் நூற்றாண்டு இலக்கியம் வரை நீண்டு செல்லும் இடையறாத மரபுத் தொடர்ச்சியுடன் இன்றைய ஜப்பானிய இலக்கியத்தை இணைக்கும் [பாலமாய் அது இருக்கிறது. இது குறித்து மிஜூமூரா இவ்வளவு ஆத்திரப்பட வேண்டிய தேவை என்ன? இளம் ஜப்பானிய வாசகர்கள் இந்தச் செவ்வியல் ஆக்கங்களைப் புறக்கணிக்கக் காரணம், அவர்களால் அந்தப் பாலத்தைக் கடக்கவே முடியாது என்பதுதான்- 1946ஆம் ஆண்டின் அரசு ஆணைகள் ஜப்பானிய மொழியின் ஒலிப்பமைப்பை மாற்றிவிட்டன. மேற்கத்திய அனுபவத்துக்கு ஜப்பானிய மொழியனுபவம் எந்த அளவுக்கு மாறுபட்டது என்பதை உணர இதை நினைத்துப் பார்க்கலாம்- வால்டன், அல்லது மொபி-டிக், அவ்வளவு ஏன் 1984 நாவல்கூட, இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்டது போலிருந்தால் எப்படி இருக்கும்? எங்கும் ஆங்கிலம் விரவியுள்ள இந்தக் காலத்தில் இந்த அடிப்படை இடர்தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிறார் மிஜுமூரா, “தன்னைக் காத்துக்கொள்ளாத மொழி அழிந்து போகும். அதன் சொற்கள் புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தாலும், அந்தப் புத்தகங்கள் வாசிக்கப்படாமல் அழியும்”.
ஒரு நாவலாசிரியராக மிஜூமூராவின் வாழ்க்கை லட்சியமும், அதனுடன் எழுத்து குறித்த அவரது நேசமும் ஆங்கில மொழியின் மேலாதிக்கம் குறித்து ஜப்பானுக்கு வெளியில் உள்ள பரந்த உலகுக்கு அவர் அளிக்கும் எச்சரிக்கைக்கு முக்கியமாக இருக்கின்றன. இந்த எச்சரிக்கை எந்த வடிவில் எழுப்பப்படுகிறது என்பதற்கும் இது முக்கியமாய் இருக்கறது- மிஜுமூராவின் திகைக்க வைக்கும் வாசிப்பும் விரிவான ஆர்வமும் வெளிப்பட்டாலும் மொழியின் வீழ்ச்சி ஆய்வு நூலல்ல, அதை ஒரு நாவலாசிரியரே எழுதியிருக்க முடியும் என்பது வெளிப்படை. அவரது வாதங்கள் நேர்க்கோட்டில் செல்வதில்லை, வட்டமிட்டு முன்னேறுகின்றன. வரலாற்று அல்லது மொழியியல் ஆய்வு என்று நினைக்க முடியாத வகையில் இதில் ஒரு அந்தரங்கத் தன்மை கொண்ட வெளிப்பாட்டை நாம் காண முடிகிறது. மிக கவனமாக இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் மிஜுமூரா- கறாரான சரித்திர அடிப்படையிலோ மொழியியல் அடிப்படையிலோ முன்வைக்கக்கூடிய விமரிசனங்களைக் கூர் மழுங்கச் செய்யும் தன்மை கொண்ட வகையில் அவர் தன் வாதங்களைக் கதைசொல்லலோடும் வாழ்வனுபவங்களோடும் பிணைத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம், இதை வாசிப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறது, வரண்ட, இறுதியில் துவளச்செய்யும் கதையாடலாய் அமைந்திருக்க வேண்டிய புத்தகத்தில் அவரது அறிவும் ஆளுமையும் பிரகாசிக்கின்றன. தன் தாய் மொழி எவ்வாறு உருவானது என்ற பின்புலம் குறித்த தன் அறியாமையை மெல்ல மெல்ல விளங்கிக் கொள்வது என்ற சட்டகத்தில் அவர் தன் வாதத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கிறார்- அவரது வாசகர்கள் தங்கள் குறைகளை ஏற்றுக் கொள்ளவும், தமக்குச் சமபந்தமில்லாமல் தோற்றுவிக்கப்பட்ட மொழியின் நிலை குறித்து தம்மிடம் உள்ள கவனமற்ற பெருமிதத்தையும் பெருமையையும் துவக்கத்தில் மிஜுமூராவிடம் காணப்படும் கவனமற்ற மொழிவெறியில் காணவும், எத்தனை மொழிகளில் எவ்வளவு எழுதப்பட்டிருக்கின்றன, இதில் பெரும்பாலானவை அழிந்தே போகும் பயங்கரத்தின் சாத்தியம் ஏறத்தாழ உறுதியானது என்றும் இது அத்தனை குறித்த வியப்புணர்வுக்குத் தம்மைத் திறந்து வைத்துக் கொள்ளவும் இவரது பார்வை ஒரு மாற்று முகத்தை அளிக்கிறது.
மிஜூமூராவின் எழுத்தில் தொடர்ந்து காணப்படும், ‘விதி வலியது’ என்ற உணர்வை இந்த உறுதிப்பாடு சுட்டுகிறது. எழுதப்படும் ஒவ்வொரு மொழிமீதும் ஆங்கிலம் ஏற்படுத்தும் தொடர்ந்த தாக்குதலை எதிர்கொள்ள எந்த பரிந்துரையும் அவர் செய்வதில்லை, யார் என்ன செய்தாலும், எந்த தேசம் என்ன செய்தாலும் இதன் வேகம் குறையப் போவதில்லை என்கிறார் இவர். ஆனால் இதை மாற்ற முடியாது என்பதற்காக எதுவும் செய்யாமல் இருப்பதற்குச் சமாதானம் சொல்வதில் மிஜுமூரா. மாறாய், தம்மைப் போன்ற நாவலாசிரியர்கள், தம் மொழியில் முட்டாள்தனமாய் இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள், அறிந்தும் அறியாமலும் மொழிபெயர்ப்பை எதிர்த்துப் போராட வழிகள் காண வேண்டும் என்கிறார் அவர்- தங்கள் கானன்களைப் பாதுகாக்க வேண்டும், தனித்தன்மை கொண்ட தங்கள் தேசிய நூலகங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த நாவலாசிரியர்கள் குறித்து, “எப்போதும் மொழி குறித்துச் சிந்திக்கச் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதுகிறார். இவர்களே, “ஆங்கில மொழியைக் கொண்டு அறியப்படாத பிற ‘உண்மைகளும்’ இந்த உலகில் உண்டு” என்பதைச் சிந்தித்தாக வேண்டும்.
அடிப்படையில் இது மரபார்ந்த ஒரு நிலைப்பாடு. ஆனால் இன்றைய காலம் முன்னோக்கிப் பார்க்கிறது என்பதைத்தான், ஜப்பானிலும் அதற்கு வெளியிலும், அவருக்கு பிற்போக்குவாதி என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பது காட்டுகிறது. இவர் எழுதுவதில் பெரிதுபடுத்தவும் ஒன்றுமில்லை; உலகெங்கிலும் குழந்தைகள் செவ்வியல் நூல்கள் வாசிப்பதில்லை என்ற அங்கலாய்ப்பு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது; கடந்த காலத்தை மதிக்காமல் முன்னேற்றம் கிடையாது என்பதும் அதே அளவுக்கு அடிக்கடிச் சொல்லப்பட்டே வந்திருக்கிறது. ஜப்பான் பற்றி மிஜூமூரா முன்வைக்கும் குற்றச்சாட்டு அது ஆங்கில யுகத்தை ஏற்றுக்கொள்வதில் காட்டும் உற்சாகம் குறித்துதான்- நீண்ட வரலாறு கொண்ட ஓர் இலக்கியத்தைச் சிதைத்து அழிக்க விரைகிறது என்பது மட்டுமல்ல, அதன் சாம்பல்களில் அது எழுப்பும் இலக்கியம், அவரது சொற்களில் சொல்வதானால் சாணி.
முடிவாய்ச் சொன்னால், மிஜுமூரா உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களுக்கு மாற்று வழி ஒன்றை முன்வைக்கிறார்- உலகளாவிய மக்கள் பரப்பை நோக்கிப் பேசுவதல்ல, உன்னதமே மாபெரும் இலக்கியத்தின் நோக்கம் என்று கண்டிக்கிறார். ஷேக்ஸ்பியர் இன்று உலகெங்கும் இன்னும் பரவலாய் அறியப்பட்டிருப்பதால் ரசின் எழுதியதன் சிறப்பு குன்றிவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் இது பற்றியெல்லாம் பிரெஞ்சு மக்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்கிறார், ரசின் மற்றும் அவரது எழுத்தை மறக்காதிருந்தால் போதும். “கலை ஜனநாயகத்தன்மை கொண்டதல்ல, அது உன்னதமானது” என்று மிஜுமூரா அலங்காரங்கள் இல்லாமல் சொல்கிறார், அவர் சொல்வதும் உண்மைதான். தம் மொழியில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து இதுதான்- ஹாரி பாட்டர் நாவல்கள் போன்ற ஒரு உலகளாவிய வாசகப்பரப்பை அவர்கள் அடைய வேண்டுமென்றால் தம் எழுத்தில் உள்ள தனித்தன்மையில் பெரும்பாலானவற்றை அவர்கள் களைந்தே நியூ யார்க்கிலும் லண்டனிலும் உள்ள பதிப்பாளர்களை வசீகரிக்க முடியும். ஒரு தேசத்தின் ஆன்மாவைச் சிறு சிறு துண்டங்களாக வெட்டிச் சிதைத்தே பெரும் செல்வமும் புகழும் பெற முடியும் என்ற ஃபாஸ்டிய பேரம் இது.
இந்த நிலைப்பாடு மிஜுமூராவுக்கு எளிது- அவர் அசாதாரண திறமை கொண்ட எழுத்தாளர், வெற்றி பெற்ற எழுத்தாளர். ஆங்கிலத்தில் எளிதாய் மொழிபெயர்க்கப்படக்கூடிய வகையில் புத்தகம் எழுதுவதில்லை என்ற சமரசமற்ற முடிவை அவர் மேற்கொண்டிருந்தாலும் அவரது நாவல்களில் முதல் நாவல், எ ட்ரூ நாவல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது- தன்னைவிட மேலானவர்கள் நிழலில் தன்னடக்கத்துடன் உழைத்துக் கொண்டிருக்கும் எளிய ஜப்பானிய பெண்ணல்ல அவர் என்பதையே இது உணர்த்துகிறது. உண்மையில், ஜப்பானில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள எழுத்தாளர்கள், தம் முன்னோடியாய் அண்ணாந்து நோக்கக்கூடிய மகோன்னத மரங்களில் ஒருவர் இவர். இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கான மிகச் சிறந்த காரணம், இந்த, அல்லது, எந்தத் தலைமுறை எழுத்தாளர்களிலும் சிறந்த ஒருவரின் எழுத்து குறித்த தரிசனத்தை அது அளிக்கிறது என்பதுதன.
ஆங்கிலத்தை தாய்மொழியாய் கொண்டவர்களுக்கு அவர் மிகச் சில பரிந்துரைகளே வைத்திருக்கிறார்- அந்நிய மொழி ஒன்றைக் கற்பது நல்லது என்றும் இன்றும் நாளையும் ஆங்கிலம் மேலாதிக்கம் செலுத்தப்போவது குறித்து தன்னடக்கத்தை வெளிப்படுத்திக் கொள்வது நல்லது என்றும் இறுதியில் மூக்குச் சிந்துவதை வேண்டுமானால் சொல்லலாம்.
ஆனால் செவ்வியல் படைப்புகளை அவர் புகழும்போது ஒரு எச்சரிக்கையும் நினைவூட்டலும் செய்கிறார்– சுயம்பிரகாசம் கொண்ட உள்ளங்களின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல ஒரு மொழியின் மேன்மை, தன்னுள்ளிருக்கும் திறமைசாலிகள் செயல்படுவதற்கான களனில் ஆயத்தப் பணிகள் செய்து கொடுக்கும் கலாசாரமே ஒரு மொழிக்கு மேன்மையளிக்கிறது, தனக்கு முன் இருந்த மிகச்சிறந்த எழுத்தின் மதிப்பை உணர்ந்து அதை உண்மையாகவே பெறுமதியாய்க் கொண்டாடும் கலாசாரமே மொழியின் மேன்மைக்கு வித்திடுகிறது.
ஆங்கில மொழி இலக்கிய கலாசாரம் பிற மொழியின் தாக்குதலுக்கு ஆளாகவில்லை எனினும், ஒரு பக்கம் அது தம்முள் பொருதிக் கொள்ளும் பிற பொழுதுபோக்கு ஊடக வடிவங்களாலும் மறு பக்கம் இணையம் அனைவருக்குமான சமத்துவ வெளி அளித்திருக்கிறது என்ற பான்கிலாசியப் பார்வையாலும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இணையத்தில் வாயிற்காவலர்களுக்கு வேலையில்லை என்று அடிக்கடி சொல்லப்படுகிறது, பொதுஜன ரசனை இனி மேலோங்கி நிற்கும் என்கின்றனர்- தெய்வழக்காகிப் போன வெண்ணை திரளும் படிமமாய் சிறந்தது எழுவது இனியும் உள்ளார்ந்த தனித்தன்மையால் அல்ல, மின்னூல் விற்பனையாலும் வணிக வாய்ப்புகளாலும் என்று சொல்கின்றனர்.
மக்கள் செவ்வியல் படைப்புகளை ரசிப்பதில்லை என்ற குறை நியாயமானதுதான், ஆனால் அவர்கள் வாசிக்காத காரணத்தால் எதுவும் மோசம் போய்விடாது- ஏனெனில், கலையில் வெகுஜனப் பார்வை சில பத்தாண்டுகளைத் தாண்டி நீடிக்கும் ஆற்றல் கொண்டதல்ல; எது முக்கியம் என்றால் ஒரு சிறுபான்மையினர்- தம்மைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட சிலர், கலை என்பது உன்னதத்தன்மை கொண்டது என்ற கருத்துக்கு உருவம் அளிப்பதே இலக்கியத் தரம் என்ற அக்கறை தமக்கு இருப்பதாய்ச் சொல்லிக் கொள்பவர்கள்- உண்மையாகவே செவ்வியல் படைப்புகளை அறிந்திருந்து அவற்றை உற்சாகமாய்க் கொண்டாட வேண்டும். இதுதான் முக்கியம்.
எந்த ஒரு தலைமுறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே அதற்கான திறமை கொண்டவர்களாகவும், படைக்கப்பட்ட அனைத்தைக் காட்டிலும் உயர்ந்து எழுந்து நிற்கக்கூடிய மகோன்னதமான மரங்களாய் இருக்கும் விருப்பம் உள்ளவர்களாவுகம் இருக்க முடியும் என்றாலும், ஏராளமான இடம் மண்ணில் இருக்கிறது. எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கவும் திருத்திக் கொண்டிருக்கவும் வேலை இருந்து கொண்டே இருக்கிறது.
நன்றி – Full Stop
ஒளிப்பட உதவி – Monkfish Jowls
