வேல்முருகன் தி

பத்திரம்பா

வேல்முருகன். தி

‘டூ நாட் என்டர்’ போட்ட போர்டு எங்களை வரவேற்றது நெருங்கி பார்த்த போது கன்னிவேடி மற்றும் எலும்பு கூடு படம் இரண்டிலும் மணல் படிந்து மங்கலாகத் தெரிந்தது.

சுற்றி கம்பி வேலி இட்டிருந்தது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதைச் சொல்லாமல் சொல்லியது. டெசர்டில் வண்டி தடமே இல்லாத தனித்த பகுதியாக தெரிந்தது. கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் இருக்கும்.

பாலைவனத்தில் வளரும் ஒட்டகம் மட்டுமே திங்கக் கூடிய முட்செடி காய்ந்தும் இளம் பழுப்பாகவும் குத்து குத்தாகவும் பரவி கீழிருந்த மணலை மூடி இருந்தது.

இருவரும் கம்பி வேலியை ஒட்டி பாதி தூரம் நடந்து வந்திருந்தோம். சாம்பல் பூத்த வானம். ஒரே வெய்யில். அலைஅலையாக இறங்கியது காற்று. அதன் மேல் மணலை அள்ளி வீசியது. அக்காற்றே சுழன்று சுழன்று மேலேற தூசும் சில பாலித்தீன் பேப்பர்களும் வட்டமிட்டன. பருந்தைப் போல இருந்தது கருத்த
பாலித்தீன் பை ஒன்று.

அதற்குள் உதடுகள் உலர்ந்து நா வறண்டு தாகமெடுத்தது. இரண்டு இடங்களில் சிவப்புக் கொடி கம்பியில் கட்டியிருந்து. சமீபத்தில் கட்டியிருக்க வேண்டும் புதிதாக இருந்தது.

’சூப்’ என்றார், அபுஅலி என்ற பாகத் அல் மியாஸ். எனது மேலதிகாரி. குவைத்தின் பூர்வகுடி. நல்ல ஆறே கால் அடி உயரத்தில் முடி எல்லாம் சுருளாக பிரம்மராட்சசன் போல் இருப்பார். குரலும் அதற்கேற்ற மாதிரியே இருக்கும். முதல் தடவை கேட்டால் பயத்திலே எல்லாம் நடப்பதற்கான சாத்தியம் உண்டு.

பார்த்த போது அந்த சிகப்பு கொடிகளுக்கு அருகில் மணல் பாருகளில் தங்கும் நரிகளின் குகை முகப்பு போல கருப்பாக ஒத்த அளவுள்ள பொந்து போன்ற தூவாரம் தெரிந்தது. அந்த இரண்டு துவாரமும் மிலிட்டரி டாங்கிகளை மண்ணில் மிக நேர்த்தியாக புதைத்து வைத்து இருக்கின்றனர். இரண்டு டாங்கையும் இணைக்கும் பங்கர் உள்ளது என்றார் அபுஅலி.

பிறகு அரபி கெட்ட வார்த்தையில் சதாமை திட்டினார்.

நான் உணர்ச்சியை மறைக்க பல்லை கடித்து திரும்பினேன்.

சதாம் தற்போது மாட்டிக் கொண்டான். குவைத்தை ஆக்ரமித்த போது அவனால் ஆன இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மக்கள் எல்லாம் நடோடிகளாய் அலைய வைத்தான். 800 ஆயில் கிணறுகள், 4 GCகள் எரிக்கப்பட்டன பொருளாதாரம் அதள பாதளத்திற்குச் சென்று விட்டது. எல்லாம் சரியாக்க 5 பில்லியன் தினார் ஆனது.

தொலைபேசி ஒலிக்க தொடங்கியதும் எடுத்து பேசி விட்டு, ’இப்ப பாரு கடவுள் தண்டித்து விட்டார். அதா அல்லா கரீம்.’ என்றார்.

இந்த வரைபடத்தில் உள்ள மாதிரி நீ எனக்கு இந்த இடத்திற்கு வருவதற்கு பாலைவனத்தில் ரோடும், சுற்றிலும் அகழ்ந்து டாங்கிகளை வெளியில் எடுப்பதற்கும் உதவ வேண்டும் என்ற போது அதிர்ச்சியில் அதில் உள்ள ஆபத்தை எண்ணி மனம் உறைந்து எனக்கு பேச்சே வரவில்லை.

மொத்த இடமும் சர்வே செய்து எத்தனை நாள் ஆகும் என்று ரிப்போர்ட் நாளைக்கு வேண்டும் என்று சொல்லி அவர் வண்டியில் ஏறிச் சென்று விட்டார்.

எனது GMCல் ஏறி அமர்ந்து தண்ணீரை எடுத்தேன். வண்டி ஆடிக் கொண்டு இருந்தது. மனம் ஆடி பயப்படுகிறாயா என்று கேட்பது போல் அனிச்சையாய் இல்லை இல்லை என்று தண்ணீரை குடித்தேன்.

திரும்ப கீழே இறங்கி நின்று பார்த்த போது பைப் லைன் எல்லாம் எறிந்து முங்கில் போல் வளைந்து உருக்குலைந்து கிடந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆயில் கிணறுகள் எரிந்து கிடந்தன. மண் எல்லாம் குருடாயில் படிந்து காய்ந்து ஒரே கறுப்பாக காய்ந்த சாக்கடை போல் தெரிந்தது.

தூரத்தில் தெரிந்த GC 14 முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தது. திரும்பிய எனக்கு டாங்கி இருந்த இடம் அமானுஷ்யமாக தெரிய அப்படியே இரண்டு
துவாரமும் நினைப்பு வந்து அச்சமூட்டயது. வந்து வண்டியை நகற்றினேன். இலக்கு இல்லாமல் வண்டி முன்னொக்கி ஒடியது.

ஆழ்மன சிந்தனை அந்த இடங்களில் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்று போய்க் கொண்டிருந்தது. கம்பேனிக்கு தெரியப்படுத்தனும் என்று யோசிக்க யோசிக்க சிந்தனையில் குமார் வந்தார்.

குமாரைப் பார்க்க மேனேஜர் மாத்யுடமிருந்து போன் வந்தது. அடான் ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லி சென்ற போது வாயிலில் வந்து நின்று அழைத்து சென்றார். நான் குமாரை பார்த்து பதறிய போது எல்லாம் முடிந்து இருந்தது. புதுத் துணி மாத்தியிருந்தனர் பார்த்தவுடன் ஐிப்பை இழுத்து மூடி உள்ளே கொண்டு சென்றனர்.

என் கையைப் பற்றி ’இனி கம்பெனி பார்த்துக் கொள்ளும் நீ சென்று கிளையன்டுக்கும் நம்ம ஆட்களுக்கு தெரியாமல் வேலையைப் பார்த்துக் கொள்’ என்றார். நான் திகைத்து ஒன்றும் புரியாமல் திரும்பினேன். கூடவே வந்து குமாரின் டைம்ஷிட்டை வாங்கி சென்றார்.

சிந்தனை முழுவது‌ம் குமாரைச் சுற்றியே வட்டமிட்டது. குமார் குவைத்தில் எங்க கம்பேனிக்கு வந்தது டிரைவராக. வந்த புதிதில் எங்களுக்கு வண்டி பழகவும் வேலை சம்பளம் இல்லாத அந்த மூன்று மாதமும் சமைப்பது நேரப்போக்குக்கு பழைய கதையை சொல்லுவது என்று இருப்பார்

அவர் இருக்கும் இடம் கலகலப்பா இருக்கும். வேலை ஆரம்பித்து ஒரு வருடம் இருக்கும், ஒரு நாள் காலை அவர் டைம் ஷிட்டை கேட்டுப் பெற்று பார்த்து அதில் கம்மியாக இருப்பதாக கை நோட்டை காட்டினார். டைரியில் அந்த குறிப்பிட்ட தேதியை காட்டி சரியாக பாருங்கள் என்றேன். நம்ம ஆட்கள் எப்போதும் மற்றவர்களுக்கு தான் செய்வார்கள் என்றார்.

எனக்கு திடீர் கோவம் தலைக்கேறி விட்டது. “உங்களுக்கு குறைத்து போட்டு விட்டாதாக நினைத்தால் நான் என்ன செய்ய முடியும். எல்லோரும் ஒன்று தான்” என்றேன் சிறிது கடுமையாக.

முகம் வாடிப் போனார். மனம் கேட்காமல் அன்று மாலையே ஒவர் டைம் இரவு 8 மணி வரை அளித்தேன். அன்று அதிகாலை 3 மணிக்கு எனது செல்பேசி நிற்க்காமல் ஒலித்தது. எடுத்தப்போது ’குமார் கட்டிலில் இருந்து விழுந்து விட்டார் பேச்சு மூச்சு வரவில்லை உடன் வர வேண்டும்’ என்றார் வார்டனும் சூப்பர்வைசர் ராஐூம்.

ஒடிப் போய் பார்த்த போது சுத்தமாக ஒன்றும்மில்லை. கையைத் தொட்டு பார்த்தேன். உடம்புச் சூடு இருந்தது. மூச்சு இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வார்டன் ஏற்பாடு செய்து உடன் அனுப்பி விட்டார்.

லேபர் கேம்ப் முழுவதும் பரபரப்பாகி எல்லாம் கூடி விட்டனர், வார்டனும் நானும் ரூம் சென்று பார்த்த போது அவர் படுக்கை கலைந்து இருந்தது. விசாரித்த போது’ கடுமையாக தும்மிக்கொண்டு குப்புற விழுந்து விட்டார். நாங்கள் பார்த்த போது கால் மட்டும் அசைந்தது பிறகு அதுவும் இல்லை’ என்றனர்.

கம்பெனி பார்த்து கொள்ளும் என்று சொல்லி விட்டு இப்ப இன்சூரன்ஸ் கிடைக்க வில்லை முயற்சிக்கிறோம் என்கிறார்கள். வீட்டினர் தொடர்ந்து போன் செய்து விட்டு கடிதம் எழுதுகிறார்கள்.

யாருக்காவது பாதிப்பு என்றால் கம்பேனி செய்யுமா?

சிந்தனை மாறி சுதாரித்த போது வண்டி முற்றிலும் எரிந்த GC 14 முன் பக்கம் வந்திருந்தது. நிறுத்தி பார்த்தேன்.

சூளையில் அதிக சூட்டில் வெந்த பானைகள் போல் குருடாயில் டேங்க் எல்லாம் வளைந்து கிடந்தன. பிளாட்பாரம் எக்யுப்மென்ட்கள் எல்லாம் சூட்டில் வெடித்துக் கிடந்தன, தீப் பற்றிக் கருகிய உடல்கள் போல. பார்க்க முடியவில்லை. மனம் சிந்தனையில் ஆழ்ந்து குழம்பி, எரியும் போது ஆட்கள் இருந்து இருப்போர்களோ என்று நினைத்து வண்டியை திருப்பி விரட்டினேன்.

எதிரில் வண்டி லைட்டைப் போட்டு நிறுத்தும்படி சைகையை பார்த்து வேகத்தை குறைத்து ஒரம் கட்டி பார்த்த போது, உதுமான் அலி எங்க சேப்டி ஆபிசர், ஊர்க்காரர் அனுபவம் முழுவதும் நெற்றியில் கோடாய் மிக கோவத்துடன் வரவேற்றார்.

’வணக்கம் சார்’

’சலாம் இருக்கட்டும் என்ன நினைச்சுகிட்டு இருக்க’ என்று எகிறினார்

’இல்ல சார் அபுஅலி கருப்பன் புதிய தலைவலிய குடுத்துட்டான் நான் உங்கள பார்க்க தான் வந்துட்டு இருந்தேன்’

’இல்ல வாப்பா. இம்மாம் வேகம்லாம் வேண்டாம் குடும்பம் இருக்கு’

’சரி சார்’

’என்ன தலைவலி வாப்பா அது’ என்றார் மூக்கு கண்ணாடியை சரியாக்கிக் கொண்டே.

’சார் வண்டிய விட்டு பூட்டி வாங்க பத்து நிமிஷம் பார்த்துடலாம்’

’ஏன் வாப்பா எப்ப ஊருக்கு’

’அத ஏன் சார் கேட்கறீங்க, மாத்யு நான் ஊருக்கு போனா பார்க்க வேற ஆளு வேணும்ன்னு வெயிட் பண்ண சொல்றாரு’

’உங்களுக்கு தான் தெரியும ஈராக்க நேட்டோ அடிக்க ஆயத்தமான போது இரா பகல் பாராமல் பாக்காம எல்லா GC க்கும் பயர் இன்ஜினுக்கு சுற்றி வரவேண்டி ரோடும் ஆபரேஷன் டீமுக்கு வேண்டி பங்கர் ரெடி பண்ணி தந்தோம்’

’நீங்க ஊருக்கு போயிருந்திங்க’

’வாப்பா ஒரு எமர்ஜென்சி அதான்’

’நாங்க இங்க சண்டை நடக்கும் போதும் எமர்ஜென்சி பாஸ்ல வேலை பார்த்தோம்’

’தெரியும் வாப்பா எப்படியா சாமளிச்சிங்க’

’சண்டை தொடங்கிய முதல் நாள் இதே அபுஅலி கருப்பன் அவன் வண்டில என்ன ஏத்திகிட்டு எல்லாம் GCயும் ஈஸ்ட் குவைத் முழுவதும் பார்க்கனும்னு சுத்துறான். புர்கன் ஏரியா வந்ததும் வீட்டிலேருந்து போனு. மனைவி சிதம்பரம் போயி அங்கிருந்து பண்றாங்க. டிவில பார்த்தேன். எல்லாம் ஊருக்கு வராங்க நீங்களும் ஊருக்கு வாங்க-கிறாங்க நான் பயப்படாத பயப்படாத நல்லா இருக்கேன் என்று சொல்றேன். இங்கே ஒரே சைரன் சத்தம் போன் கட்டாயிடுச்சி’

அப்ப GC 18, BS 140க்கு நேரா வந்திருந்தோம் அது இரண்டுலேருந்து பயங்கர சத்தத்துடன் ஊம்னு ஆரம்பிச்சு சைரன் சத்தம் தொடர்ந்து கேட்குது. கருப்பன் வண்டிய திருப்பி டெசர்ட்ல இறக்கி ஒட்டறான் இரண்டு சைடும் கிளாஸை இறக்கி, எல்லா சூப் சூப்னு மானத்தை காட்டரான்.

அதிர்ச்சியில மேல பார்த்துகிட்டு வரேன். மனதில் பல சிந்தனை ஒடுகிறது ஒடுது பையனை பார்க்க முடியுமா வந்து ஒன்றறை வருடம் ஆச்சு. வண்டி குழியில விழுந்து ஒரு பக்கம் சாய்வாக சென்று நிமிர்கிறது.

சதாமை திட்டரான் கருப்பன். ரெண்டு மூணு நிமிஷத்துல அப்படியே சைரன் சத்தம் சுத்தமாக நின்னு போய் ஒரே நிசப்தம். அதிர்ச்சில ஒன்றும் புரியல. குனிஞ்சு ரேடியாவ எடுத்து ரிசிவர்ல ’பகாத் அல் மியாஸ் ஒவர்’ ’பாகத் அல் மியாஸ் ஒவர்’ என்றதும் எதிர் முனையில் இருந்து ’அபுஅலி மூமூஸ்கில் ஒவர் , மூமூஸ்கில் ஒவர்’

அபுஅலி இந்த கலாம் டெலிபோன் என்றனர் வல்லா அதா அல்லா கரீம்’

’என் செல்போன் திரும்ப அடிக்குது.மனைவி என்னங்க கட்டாயிடுச்சி பிரச்சினை
அதிகம்னு சொல்ராங்க வர பாருங்க’

’வச்சிடட்டுமா’

’பையன்ட்ட குடு’

’த பையன்ட்ட பேசுங்க,பேசு அப்பா அப்பா’ என்றாள்

ஒன்றரை வயதில் விட்டு வந்தது ’அப்பா பத்திரம்! பத்திரம்பா!’

கண்ணில் நீர் கசிகிறது எனக்கு

அதா பச்சா என்கிறார் அபுஅலி ஆமாம் என்று தலையாட்டி கொண்டு பயப்படாதே வந்துடறேன் என்று சொல்லி வைத்தேன்.

என்ன சொல்றான்னு கேட்கிறான் கருப்பன்.

நான் கண் நிறைந்து பத்திரம்பானு எல்லாருக்குமான வார்த்தைய சொல்ரான் என்று சொன்ன உடன் ‘வல்லா அதா அல்லா கரீம்’ என்றார் அபுஅலி.

மறுநாள் அபுஅலி, நேத்து நாம வந்தப்ப வந்த மிஷேல் தான் பேட்ரியாட் அடிச்சப்ப மீனா அப்துல்லாவுல்லா எரிந்து விழுந்துச்சுன்னு சொல்றான். அதிர்ச்சியில் எனக்கு ஒன்றும் சொல்ல முடியல.

’வப்பா முதல் நாள் மாத்திரம் இரண்டு விழுந்துச்சுனு சொன்னாங்களே’

’பர்ஸ்ட் வந்தது மீன அப்துல்லாவிலும் இரண்டாவது மிஷேல் ஐகராவில உழுந்துச்சு சார் பேட்ரியாட்டோட கொஞ்சம் டைமிங் மிஸ்ஸாயிருக்கு. பிறகு எல்லாத்தையும் கிளம்பும் போதே அடிச்சுட்டானுங்க. ’அதான் TV பார்த்து இருப்பிங்களே’

’ஒரே ரூமர் அதிகம்பா’

’ஆமாம் சார் நடந்த 25 நாளும் ஒரே கதை தான்’

’ரோடு வெறிச்சொடிக் கிடக்கு. குவைத் அரசு நாட்ட விட்டு யாரும் போக அவங்க மக்களுக்கு தடை போட்டுடூச்சு. முத வாரம் மட்டும் பயங்கரமா குவைத்தாலதான் சன்டையே அதனால குவைத்த சதாம் நாசம் பண்ணுவான்ங்கற பயம் எல்லார்டியும் இருந்தது. அப்புறம் BBC பார்த்து போர் நிலவரம் தெரிஞ்சது அதுக்கு பிறகு தான் ஐனநடமாட்டம் சகஐ நிலைமைக்கு திரும்புச்சு.

’வாப்பா ஈராக் ஆள் எடுத்தாங்களே அதுல போயிருக்குலாம்’

’வாய்ப்பு வந்துச்சி அங்கு ரோடும் பாலமும்கட்டி கொடுத்தா மொத்தத்தையும் அள்ளி
போவதற்க்கா எனக்கு விருப்பமில்லை சார்’

’நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் உலகிலேயே விவசாயம் தோன்றியது ஈராக் தான் அந்த மக்கள் ரோடில் கையேந்த வச்சிட்டானுவ’

’யூஃப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றை ஈராக் தேசமே அன்றைய மெஸப்பட்டேமியா சார்’

’மிக முக்கிய உணவுப் பயிர்களான கோதுமை, பார்லி, ரை, யூஃப்ரிட்டீஸ் – டைக்ரீஸ் நதிச்சமவெளிகளில் தோன்றியதாகச் சொல்லி உலக வரலாற்று ஆய்வாளர்கள்
நடக்கும் அநியாயத்தை பார்த்து எழுதுறாங்க. மேலும் இந்த குவைத் வழியாக தான் கொண்டு போறான். ஒரு டிராக் ரோடு முழுவதும் அவனுங்க வண்டி போக ஒதுக்கி விட்டாங்க, நடந்த அநியாயத்தை பேப்பர்ல புக்ல பார்த்துட்டு எப்படிச் செய்ய முடியும்’

’சதாம் என்னிடம் ஒன்றுமில்லை சொன்ன பிறகு அடிச்சு பிடுங்கிட்டானுவலே நியாமா சார்’

’பெரிய அநியாயம்பா எல்லாரையும் ரோட்டில் நின்று கையேந்த வச்சிட்டானுவ.
வுடு அத. மனசு கஷ்டமா இருக்கு’

’ஏன் வாப்பா, இன்னும் எவ்வளவு தூரம் போவனும்’

’வந்துட்டுது சார். இறங்கி நடந்துதான் பாக்கனும்’

’கேஸ் நாத்தம் அடிக்குது வாப்பா’

’ஆமாம் சார் சுற்றி இருக்குற எல்லா எண்ணெய் கிணறுகளையும் அழிச்சு இருக்கானுவ, அதில இருந்து வரும் சார்’

’வாப்பா, கேஸ் மானிட்டர் வண்டியில இருந்தது எடுத்து வந்து இருக்கலாம்.
பர்மிட் இல்லாம ஒரு வேலையும் செய்ய கூடாது புரியுதா’

’சார் நீங்க முதல்ல பாருங்க’

அச்சமயம் பார்க்காத மறுபுறத்திலிருந்து வந்தோம்.

’சார் ரெண்டு கொடி தெரியுதா அதுக்கு பக்கத்தில் பாருங்க தூவாரம் தெரியுதா’

’ஆமாம் வாப்பா அதுலேருந்து நாய் வருது பாரு’

’சார் நாய் இல்லை நரி. ஆமாம் சார். முன்னாடி பார்த்தப்ப மனசார நினைச்சன் நரி குகை மாதிரி இருக்குன்னு.

’இந்த மாதிரி குகை முன்னாலே பார்த்திருக்கியா’

’ஆமாம் சார். வெள்ளாத்து கரையோரம் கீரிப்பள்ளம் வயலுக்கு போவோம் அப்ப நரி நத்தை நண்டுவல மேயும் நம்மள பாத்துட்டுதுனா இந்த மாதிரி கரை பாருல டப்புன்னு ஒடி புகுந்துடும். நாம பார்க்காத போது அப்படியே நானல் வழியாக வெளியே வரும். ஏன் வாப்பா எனக்கு ஒன்னும் தெரியலையசார் அந்த இரண்டு துவாரமும் மிலிட்டரி டாங்கிகள், இரண்டையும் இணைத்து பங்கர் இருக்காம்.

’வாப்பா நரிவ வருது நிச்சயம் ஆளுவ செத்து இருப்பாங்க’

’என்ன செய்யனுமாம் கருப்பனுக்கு’

’மெயின் ரோடில் இருந்து ரோடு போட்டு வந்து இதுல கனைக்ட் பண்ணி டாங்கிகளை சுற்றி நோன்டி தர சொல்ரான் சார்’

’இது நம்ம வேலையே இல்ல வாப்பா நாம செய்ய வேண்டாம். நான் ஐார்ஐிகிட்ட பேசறேன். வேணுமுன்னா ஒனர் அல் மூசாரிய விட்டு பேச சொல்லும்’

எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது எப்படியாவது விட்டு போனா போதும் என்றது
மனம் உள்ளுக்குள்.

வெளியில் இருந்து பார்பவர்க்குத் தெரியாத வகையிலும் அங்கு இருந்த பார்த்த போது
சுற்றி இருந்த அனைத்து GC களும் 1,2,9,11,18 & 22 தெரியும் வண்ணம் இடம் தேர்வு செய்து அமைக்க பட்டிருந்தது.

’வாப்பா சதாம் குவைத்தை அவன் வச்சிக்கனுமுனுதான் மத்த GCக்கள விட்டு வச்சான்’

’ஆமாம் சார்’

’பின்ன இதெல்லாம் யார் அழிச்சது சார்’

’என்னப்பா தெரியாத மாதிரி கேட்கற எல்லாம் நேட்டோ தான்’

’வண்டிக்கு வந்ததும் நீ மேத்யுகிட்டச் சொல்லிடு. நான் போயி பேசி தகவல் சொல்றேன்’

’சரி சார்’

அப்போது மார்ச் மாதம். மாதத் தொடக்கத்தில் வரும் இளவெயிலும் குளிருமான காலை நேரத்தில் அபுஅலியுடன் சென்று கொண்டு இருந்தேன். புது மிட்சுபிஷி பஐிரோ வண்டி மெல்ல அகமதி மெயின் ஆபிசில் இருந்து வெளியேறி புர்கன் செல்லும் மெயின் ரோடில் வேகம் பிடித்தது.

வெளியில் பார்த்த போது வேலைக்கு செல்ல சாரியாக வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. மிக்காலும் வண்டியில் ஒருவரே வீற்றிருந்தனர். வண்டி செக்யூரிட்டி கேட் நெருங்கிய போது, அபுஅலியின் நண்பர் நின்று இருந்தார். புர்கன் ஏரியாவின் செக்யூரிட்டி கெட் அவர்.

நிறுத்தி சலாம் சொன்னோம். இருவரும் அவர்கள் பழக்கப்படி மூக்கை உரசிக்கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். பேச்சு வேலையைப் பற்றி திரும்பியது. ’வல்லா முஸ்க்கிலா’ என்று அடிக்கொருதரம் சொல்லி கவலை கொண்டு
சதாம் குவைத்தை ஆக்ரமித்த போது விட்டு சென்ற ராணுவ டாங்கிகளை எடுத்து அந்த இடங்களில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க வேண்டும்
என்று ஆர்டர் வந்திருந்தை சொல்லி வருத்தப்பட்டு பேச்சு வளர்ந்து கொண்டு இருந்தது.

கேட்டில் வாகனங்கள் எல்லாம் நிறுத்தி தொழிலார்களை இறக்கி விட்டன. அவர்கள் வரிசையாக நடைபாதையில் வந்து செக்யூரிட்டி செக்கப் முடித்து அவரவர் பஸ்களில் ஏறுவதற்கு வந்து கொண்டு இருந்தனர்.

வெயிலில் சாயம் போன வெளுத்த கவரால்கள். அதன் மேல் குளிருக்கு ஸ்வெட்டர்.
தலையில் மங்கி குல்லாய் கவலையும் ஏக்கமும் தூக்க பித்தும் நிரந்தரமாக தங்கி விட்ட முகங்கள்.

சேப்டி ஷூ அணிந்து நடந்து நடந்து வேலை செய்து வலியாகவே ஆன கால்களை கொண்டு நடந்து வரும் கலவையான தொழிலார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை நாட்டினர் அதிகம்.

எனது கம்பேனி பஸ் வந்து நின்றது. இன்று யார் யாருக்கு ஊரிலிருந்து போன் வரும் என்று தெரியவில்லை. சாப்பாட்டு டைமில் செல்லவில்லை என்றால் இந்த லேபர்கள் தவித்து போவார்களே என்று எண்ணிய போது, ’எல்லா எல்லா’ என்று சத்தம் கேட்டு திரும்பினேன்.அபுஅலி வண்டியில் இருந்து கூப்பிட்டார். ஏறியதும் வண்டி புர்கன் மெயின் ஆபிஸ் சாலையில் ஒடியது.

வழியில் எனது வண்டியிடம் விட்டு பின் தொடர சொல்லி சென்றார்.

அரபிகளுக்கு பொதுவாகவே தான் சொல்லுவதுதான் சரி என்ற அகங்காரம் உண்டு. பிழைக்க வந்தவர்களிடம் மிக்க் கேவலமாக நடந்து கொள்வர். முடியாதவனை மாறி மாறி அடித்து துவைப்பது போல. அபுஅலிக்கு கம்யூட்டர் என்றால் பெரும் பயம்.
என்னிடம் சிறிது நட்பு காட்டுவான். அதுவும் வேலை ஆகும் வரைதான். விருப்பத்தை கேட்டாலின்றி வாயை திறப்பதில்லை. நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காகாமல் இருந்தால் சரி.

ரோட்டின் இருபக்கத்திலும் வேலிக் கருவை மரங்களும், சில பெயர் தெரியா மரங்களும் வைக்கப்பட்டிருந்தன. மிகப் பிரயத்தனப்பட்டே வளர்கின்றன.

வெளிநாடு வந்து எவ்வளவோ பிரயத்தனப்பட்டு பார்க்கிறோம். இந்த பெயர் தெரியா மரங்களைப் போலே. இந்த மரஞ் செடிகளுக்காகவது நிச்சயமாக தண்ணீர் டேங்கர் மூலாமாகவோ, பைப் மூலமாகவோ நீர் கொடுக்கின்றனர்.

ஆனால் நமது தேவை எப்போது நிறைவுறும்? எப்படியாவது இருக்கும் கடன்களில் இருந்து மீண்டாலே போதும் நமக்கு எப்போது இங்கிருந்து விடுதலை?

மனம் கனத்து சிந்தனையில் ஆழ்ந்து, குழந்தையும் மனைவியும் நிழலாடினர். பையனை பார்க்க மனம் ஏங்கி ஊருக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணிய போது வண்டி புர்கன் ஆபிஸ் வந்து விட்டது.

அபுஅலி வண்டியில் இருக்க சொல்லி விட்டு டீம் லிடரை பார்க்கச் சென்றார்.

இவர்களுக்கு எப்போதும் வேலை இருக்கதான் செய்யும். அபுஅலி நல்ல மனநிலையில் இருக்கும் போது லீவு சொல்லி விட வேண்டும் இல்லை என்றால் காரியம் கெட்டு விடும். என்ன மாதிரி வேலை இருக்குமோ என்று கவலை வாட்டியது.

அவர்கள் எல்லாம் சென்று விட்டார்களாம். ஸ்பாட்டுக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று அவர் வண்டியில் என்னை ஏறச் சொல்லி, எடுத்து விரட்ட ஆரம்பித்தார்.

ஃபுல் ஆட்டோமோட்டிவ் வண்டி 140கீமி வேகத்தை எட்டியது. கிறுக்கன்! முழுவதும் கொண்டு சேர்ப்பானா என்று நினைத்து டோர் கை பிடியைப் பிடித்ததும, ’பயந்து போய் விட்டாய்’ என்று சிரித்து கொண்டே மேலும் விரட்ட ஆரம்பித்து விட்டான்.

சோதனையாய் இருந்தது எனக்கு. இப்போது இவனிடம் எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது என்று மவுனமாகி விட்டேன்.

வண்டி சிறிது தூரம் சென்றதும் ரிக் ரோடில் இறங்கி ஒட ஆரம்பித்து விட்டது. முதலில் GC 14 வந்ததும்,

’சூப் ஆத சதாம் கவ்வாத்’

கொளுத்தி விட்டான் எவ்வளவு இழப்பு. அவன் கோபமாக இருப்பதை பார்த்து நான் ரோடை பார்க்க ஆரம்பித்தேன்.

வண்டி வளைவில் திரும்பி GC 10 செல்லும் ரிங் ரோடில் திரும்பி வேகம் பிடித்து லோகேஷன் வந்தது.

அங்கு Koc மேலதிகாரி அனைவரும் முகாமிட்டு இருந்தனர். எனது கம்பேனி ஐிஎம் ஐார்ஐ், மாத்யு, சேப்டி உதுமான் அலி மற்றும் ஒனர் அல் முசாரி வந்திருந்தனர்.

மீட்டிங் நடந்தது அந்த இடம்தான். குவைத்தில் மிக செறிவான எண்ணெய்ப் படலம் உள்ள பகுதி. எவ்வளவு விரைவில் அந்த இடங்களை கொடுக்க முடியும் என்று கேட்டவுடன், சேப்டி உதுமான்அலி, ’நாங்க ரோடு போட்டு மட்டும் தரோம் மற்ற வேலைகளை நீங்கள் ராணுவத்தினரை கொண்டு செய்து கொள்ளுங்கள்’ என்றதும், டீம் லீடர், ’எல்லா பரா’ என்று கோவப்பட்டு விட்டு, ஒனர், அல்முசாரியை அழைத்து மொத்த வேலையும் ஒரு மாசத்துக்குள் முடித்து தரணும் இல்லை என்றால் புதிய வேலை தர முடியாதுன்னு சொல்லி விட்டார்.

ஒரு மாதத்தில் முடித்து தருகிறோம் என்று மூவரும் ஒத்து கொண்டு என்னை அழைத்து தேவையானதை சொல் கம்பெனி செய்யும் என்றனர்.

நான் பரிதாபமாக உதுமானை பார்த்து கொண்டே வாயை திறக்காமல் தலையை
ஆட்டினேன். ஐார்ஐ் உதுமான் சாரிடம் ’இந்த வேலை முடியறவரை சேப்டியா செக் பண்ணி வேலை பார்க்கனும். கம்பேனி பிரஸ்டிஐ்யாயி போச்சு. வேற மீட்டிங்
இருக்கு நான் கிளம்பறேன். மாத்யு இவிட எல்லாம் அரேன்ஐ் செய்யனும் கேட்டோ?’ என்றார்.

ஒகே சார் என்று மாத்யு சொல்லி விட்டு என்னிடம், ’இரண்டு பைலை தந்து இந்த சர்விஸ் ஆர்டர் எல்லாம் முடிச்சுக் கொடு. வேலையைத் தொடங்கு ஏதாவது பிரச்சினை என்றால் என்னை தொடர்பு கொள்’ என்றார்.

நான் சர்விஸ் ஆர்டரைப் பிரித்தேன்.

உதுமான் சார் என்னை நோக்கி வந்தார்.

’என்ன வாப்பா எப்ப ஆரம்பிக்கப் போற’

’ஆரம்பிக்கலாம். இந்த அநியாயத்தை கொஞ்சம் பாருங்க’

’சர்விஸ் ஆர்டர்ல பாருங்க சார். ஓர்கிங் அவர்ஸ் 8, ஒவர் டைம் 4 அவர்ஸ், koc கொடுக்கிறது சார்.’

’எங்க டைம் ஷிட்டை பாருங்க ஒர்கிங் அவர்ஸ் 10 ஒவர் டைம் 2 அவர்ஸ் கேட்டால் எல்லாம் பத்து மணி நேர வேலைக்கு கையெழுத்து இட்டுள்ளிர்கள்’ என்கிறார்கள்.

Koc புராஐக்ட் வேலை இல்லாத மற்ற கம்பேனி நேரடி வேலைக்கு மாத்திரம் முறையே 8 அவர்ஸ் மற்றும் 4 அவர்ஸ் தருகிறார்கள்.

ஒரே கம்பேனியில ரெண்டு விதமாக சம்பளம் கொடுத்து மலையாளிங்க கொள்ளையிடுரானுங்க. பிழைக்க வழி இல்லாமல் இங்கே வந்தா நிலமை எப்படி இருக்கு பாருங்க. அட்லீஸ்ட் இந்த லேபர்களுக்காகவது கொடுக்க சொல்லுங்க சார்.’

’வாப்பா நான் செய்ய முடியாது இது எல்லாம். கம்பேனி பாலிசி. நா வரேன். வேலை
ஆரம்பித்துவிட்டால் போன் செய்.’

நான் வெறுப்பில் பைலை தூக்கி சீட்டில் எறிந்து விட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

நினைவில் வேலையின்றி நின்றது நிழலாடியது. ஒவ்வொரு முறையும் சென்னை சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்வதும் கிடைக்காமல் திரும்பியதும் கடைசியாக வேறு வழியில்லை என்ற நிலையில் இந்த வேலைக்கு ஒத்து கொண்டு வந்ததும் இங்கு வந்த பிறகு இவர்களது பித்தலாட்டம் தெரிந்த போது ஒன்றும் செய்ய இயலாத நிலை.

அதிகாரிகளை அனுப்பி விட்டு அபுஅலி என்னிடம் வந்தார்.

நான் முகம் வாடி இருந்ததை பார்த்து விட்டு, ‘என்ன?’ என்று விட்டு, ‘நாளை வேலை தொடங்கணும்’ என்றார்.

சரி என்று தலையாட்டினேன்.

தொடர்ந்து வந்த நாட்களில் உதுமான் சேப்டி மற்றும் அபுஅலி அவர்களது அதிகாரத்தில் வேலை செய்வது போல ஒரு தோற்றத்தை மேலிடத்தில் காட்ட பிரயத்தனப்பட்டனர்.

நான் தெளிவாக நமது உழைப்பு பார்க்கப்படாதுஎன்று அறிந்தே இருந்தேன். அதனால் அனைத்து வேலைகளையும் ஒருங்கிணைத்து விட்டு இருவரது நாடகத்தை பார்த்துக் கொண்டு இருந்தேன். வேலை அதுவாகவே நடந்தது.

குறிப்பிட்ட படி செல்வதற்காக ரோடு போட்டாயிற்று. டாங்கிகளை சுற்றிலும் மண் அகற்ற எந்த லோடர் ஆப்ரெட்டரும் தயாராக இல்லை.

நான் மாத்யுவிடம் விஷயத்தை சொன்ன போது ’என்னால் ஒன்றும் செய்ய இயலாது. இது கம்பேனி வேலை நீதான் செய்து சமாளிக்கனும்’ என்றார்.

மேலதிகாரிகள் ஆளாளுக்கு கடுமையாக நடந்து கொண்டு வந்தனர். அன்று காலை அபுஅலி, ’எப்போது முடிப்பாய்’ என்றார்.

அப்போது எனது செல்பேசி ஓலித்தது.

மினு அது மாத்யு ‘ஸ்பீக் ஸ்பீக்’ என்றார்.

’சார்!’ என்றதற்கு ’சர்வீஸ் ஆர்டர் எல்லாம் கையெழுத்து ஆயிடுச்சா’

’இல்ல சார் இரண்டு நாளில் வாங்கி தருகிறேன்’ என்றதும் வைத்து விட்டார்.

அபுஅலி ’என்ன!’ என்றான். உனது கையோப்பம் வேண்டும் என்ற போது திரும்ப செல்பேசி ஒலித்தது ‘மினு மாத்யு’.

ஐிவ்

இந்த கவ்வாத், ஐ பக் யூ

’வீ ஆர் ன் மீட்டிங் டோன்ட் கால்’

மாத்யுவிடம் அவர் அது வரை கேட்காத கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு என்னிடம் ஒரு வாரத்தில் எனக்கு வேலை முடியணும். நான் கையெழுத்து போட மாட்டேன் என்று சர்விஸ் ஆர்டரை கீழே வீசி விட்டு சென் று விட்டான்.

நான் ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்தேன் முகத்தில் துப்பிய எச்சிலை துடைப்பது போல் அவமானமாக இருந்தது. அப்படியே போட்டு விட்டு வீடு சென்றால் எப்படி இருக்கும்?

அவமானம் நமக்கு புதிது அல்ல முதலில் பிறந்து வளர்ந்த வீடு வெளியில் தள்ளியது பிறகு விதி கையில் எடுத்து ஆடியது.

ஆடி மாதத்தில் யாரோ கொடுத்த அவரை, சுரை விதைகளை என்னை ஊன்ற சொல்லி பிள்ளையை வைத்து கொண்டு அதை தண்ணீர் ஊற்றி வளர்த்தவளை காய்த்ததையும் பறித்துக் கொண்டு வரும் போது வண்டியில ஏற்றிவந்தியா என்று நிந்தித்தையும் பொறுத்து சமாளித்தாளே, இங்கு வருவதற்கு முதல் நாளன்று கூரையின் பொத்தல் வழியாக நிலவு எங்கள் மேல் விழுகிறது அதில் சிறு துளி பையன் மேல் பொட்டு பொட்டாக விழுந்தது.

நான் இங்கே இருந்தால் வறுமை மேலும் நம்மை தின்று விடும் பையன் மேல் விழும் இந்த நிலவொலி நாளை மழை நீராக இருந்தால் நாம் தாங்க மாட்டோம்.

நீ பெரிய மனது பண்ணி நான் போக அனுமதிக்க வேண்டும். காலம் நமக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. முடிந்தால் இவ்விடத்தில் வீடு கட்டிடலாம் என்றதற்கு ஓ! என்று அழ ஆரம்பித்து விட்டாள். பிறகு அமைதியாக சமாதானமாகி என்னை அனைத்து தேற்றி் சந்தோஷப்படுத்தி பிரிவை எண்ணிக் கலங்கி தூங்கிவிட்டாள். பாவமாக இருக்கிறது.

நான் தூங்க வில்லை. நாம் இருக்கும் போதே இவளை பேசி அவமான படுத்துகிறார்களே நாம் இல்லை என்றால் எவ்வளவு படுத்துவர். பையன் எப்படி ஏங்கி போவான் கண்ணீர் கொட்டி கொண்டு இருந்தது. இரண்டு சொட்டுசர்வீஸ் ஆர்டர் மேல் விழுந்துவிட்டது. துடைத்து மேலே வைத்தேன்.

அவள் அருகே இருந்தால் எப்படி இருக்கும்? பாலைவனம் எத்தனையோ அன்பு கொண்டவர்களின் கண்ணிரை குடித்து தான் தாகம் தீர்க்கிறது.

இந்த மாத்யு என்ன நினைப்பாரோ தெரியவில்லை. பழி நினைத்தால் ஊருக்கு போவது அவர் மனது வைத்தால்தான் நடக்கும்.

இன்று காலையிலே ஏன் இப்படி நடக்கிறது நல்லதுக்கா கெட்டதுக்கா கடவுளே!.

நான் நிலைகுலைந்து இருப்பதை பார்த்த லோடர் ஆப்ரேட்டர் நெருங்கி, ’கியாகோகையாஐி,அவன் பைத்தியக்காரன், காண்டு. நீ விடு என்ன செய்யனும் சொல்லு நான் செய்யறேன்’ என்றான்.

நான் அவனை உற்றுப் பார்த்தேன். ஒன்றும் சொல்ல வில்லை.

’நான் செய்யறேன் சொல்லு’ என்றதும்

’ஒரு வாரம் லொடிங் பாயிண்ட் போய் டோசர் ஒட்ட முடியுமா. நான் தாய்லாண்டு கம்பேனி ஆள வச்சு இந்தவேலைய முடிக்கிறேன் என்றதும்அவன் மகிழ்ந்து ஒத்துக் கொண்டான்.;

தாய்லான்டு ஆபரேட்டரை கொண்டு வந்து பிரச்சினையைச் சொன்னேன். நீ செய்தால் உனக்கு 4 அவர்ஸ் ஒவர்டைம் கிடைக்கும். இந்தி ஆப்ரேட்டர் செய்தால் 2 அவர்ஸ் தான் கிடைக்கும் இதை செய்து கொடுத்தால் உனக்கு மேற்க்கொண்டு ஒவர்டைம் தருகின்றேன் என்றேன்.

தாய்லாண்டு சுற்றி பார்த்து கொண்டு இருந்தபோது அபுஅலி லோகேஷனுக்கு டீம் லீடருடன் பார்வையிட வந்தார்.

டீம் லீடர், இப்ராகிம் ’தாள்’ என்று என்னை அழைத்தார். ’

’சார் ஆனா இந்தி’என்று சிரித்தேன்.

ஒரு வாரத்தில் முடித்துக் கொடு என்றார். எனக்கு இதனால் மிக பிரசர் இருக்கிறது
அதனால் தான் சர்ப்ரைஸ் விசிட் வந்தேன். ’இல்லை முடிச்சுடறேன்’ என்றதும் மகிழ்ந்து சென்றார்.

கருப்பன் என்னிடம் ’சாரி சாரி பேப்பரை எடுத்து வா’ கையெழுத்து இடுகிறேன் என்று செய்து கொடுத்தான்.

’வேறு ஏதாவது வேண்டுமா?’

’ஆமாம் சார் இந்த வேலை முடிந்ததும் ஊருக்குச் செல்ல வேண்டும். தற்போது மேத்யு தருவார் என நம்பிக்கையில்லை நீ கொஞ்சம் பேச
முடியுமா?;

’ஓ எஸ்; போனை அடித்து ’மிஸ்டர் மேத்யு’

’ஐயம் சாரி’

’யூ நோ, வீ கேவ் பிரஷர். ’ஐ லாஸ்ட் மை கன்ரோல். சீ ஐ சைன் ஆல் யுவர் பேப்பர் யு கேன் கலேக்ட்’

’ஒகே சார் தாங்யூ’ என்று மேத்யு மகிழ்ந்த போது

’சீ மேத்யு ஹி வான்ட் கோ ஹோம். ஆப்டர் கம்பிளிட் யு சென்ட் ஹிம்’ என்று என்னை பார்த்து ஒரு கண்ணை மூடித் திறந்தான்.

’ஒகே ஒகே எஸ் சார்’ என்றார் மேத்யு.

மிகுந்த பிரயாசைப் பட்டு ஊர் வந்து இரண்டு நாளாகிறது. கூரையை செப்பனிட்டு வைக்கோல் இட்டு இருந்தார் மனைவி. வைக்கோலின் மணம் நான் கொண்டு சென்றிருந்த பெர்புயுமை எல்லாம் பொய்யாக்கியது.

யார் யாரோ வருகிறார்கள் விசாரிக்கிறார்கள். மனம் மட்டும் பிள்ளை நம்மிடம் வரவில்லையே என்று ஏங்கித் தவிக்கிறது.

தாய்லாண்டு மேற்க்கொண்டு செய்ய தயங்கியதும் அவனிடம் மேலே அரை மீட்டர் மட்டும் மண் எடு. உன் பக்கத்தில் வண்டியில் நான் இருக்கிறேன். நீ முழுவது‌ம் தோண்டி முடிக்கும் வரை எங்கும் செல்ல மாட்டேன். உறுதி கூறி அவன் முடிக்கும் வரை இருந்து ஒவர்டைம் அதிகம் கொடுத்து வேலையை முடித்து, மாத்யு கொடுத்த ஆபிஸ் வேலகளும் முடித்து விடைப்பெற்று வந்து சேர்ந்தேன்.

எந்தக் கெஞ்சலும் கொஞ்சலும் பையனிடம் செல்ல வில்லை இரண்டு நாளாய் அலைகழிக்கிறான்.

தூக்கச் சென்றால் ’அம்மா’ என்று கத்தி கொண்டு ஒடுகிறான். வீட்டில் இருந்தால் உள்ளேயே வருவதில்லை. போட்டாவில் இருப்பதை போல் இல்லையாம்.

மூன்றாவது நாள் காலை நான் அவனுக்கு பாகில் லூலூ சென்டரில் வாங்கிய துணி மணிகளும் மங்காப் சுல்தான் சென்டரில் வாங்கிய பொம்மை சாக்லேட் ஒன்றையுமே அவன் தொடவில்லை மனம் நடுங்கிக் கொண்டு இருந்தது.

’அப்பா எங்கம்மா’ என்று அவன் குரல் கேட்டது.

கண்ணில் தானாகவே நீர் நிறைந்து என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறு கேவல் எழுந்ததை கட்டுப்படுத்துகிறேன்.

’அப்பாவ இப்ப தான் தேடறியா? உள்ள போயி பார்’ என்றாள் மனைவி.

மெல்ல எட்டிப் பார்க்கிறான். நான் தலையை ஆட்டி சைகை செய்த போது
என் கண்ணில் நீர் நிறைந்து அவன் நிற்பது தெரியாமல் மறைத்து இருந்தது.

மெல்ல வந்து கட்டில் மேல் ஏறி என் இரண்டு கண்களையும் இரு கைகளாலும் துடைத்துகொண்டு, ’ப்பாஆ!’ என்று தேம்பி உடம்பு குலுங்க அழ ஆரம்பித்தான்.

நானும் தான்.

ஊழ்

 

தி வேல்முருகன்

 

oozh_poem

அப்போது செட்டியார் வீட்டு வேலை நடந்து கொண்டு இருந்தது. இவனது மேற்பார்வையில். முகப்பில் போர்ச்சும், இரண்டு மாஸ்டர் பெட்ரூமும், ஹால், டைனிங் ஹால், கிச்சன், சிட் அவுட் பின்னால் அவுட்-ஹவுஸ் என நவீன வில்லாவுக்கு உருவம் கொடுத்து கொண்டு இருந்தார்கள். முருகன் மேஸ்திரிதான் தினக்கூலிக்கு ஆட்களை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

தீபாவளி வருகிறது, பிள்ளைக்கு ஏதாவது செய்ய வேண்டும். குழந்தை பிறந்த அன்று வெறும் கையாய் நின்றது, இப்போது ஏதாவது செய்ய வேண்டும் காசுக்கு, என்று உருட்டிக் கொண்டு இருந்தது.. இந்த வேலையில் ஒன்றும் பைசா பெறாது. ஏற்கனவே கழுத்துவரை வாங்கியாகி விட்டது இப்போது வட்டிக்குச் செய்வது போலதான் அவன் அந்த வேலை பார்த்து கொண்டு இருந்தான்.

புரட்டாசி மாதம் ஆரம்பித்து கடைசி வாரமாகியும் மழை இல்லை. ஆனால் அன்று பார்த்து மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்து திடீர் என்று காற்று மாறி மழை வந்து வேலையைக் கெடுத்தது. எனவே, திரும்பி வரும்போது அதே தெருவில் வசிக்கும் ஒய்வு பெற்ற வாத்தியார் இவனைக் கூப்பிட்டார். வாத்தியார் மகன் அவனது நண்பன்.சிஆர்பிஎப்பில் நார்த்தில் பணிபுரிகிறான்.

“என்ன பாக்கறப்பா, வா, அம்மா கூப்டுது பாரு”

வாசலில் இருந்த வெள்ளை நாய் உறுமியது.

தயங்கி வெளியில் நின்றவனை, “வாப்பா உள்ளே”, என்று கூடத்துக்கு அழைத்தனர்.

“என்னம்மா?”

‘மேலே பாரு தம்பி”

மேலே பார்த்தபோது ரூப் சிலந்தி வலை போல் விரிசல் விட்டு அது வழியாக காலையில் பெய்த சிறு மழைக்கே தண்ணீர் கசிந்தும் சொட்டிக் கொண்டும் இருந்தது..

“சார் காலம் போட்டு கட்டிய வீடுதானே?” என்றான்.

“ஆமாம் தம்பி ஐய்யாரு மேஸ்திரிதான் கட்டினாரு செஞ்சாரு.மணி கொத்தனாருதான் கிட்ட இருந்து எல்லாம் வேலையும் செஞ்சாரு”.

“இங்கே மட்டும் தான் தண்ணீர் சொட்டுதா?”

‘இல்லப்பா ரூம்ல,கிச்சன்ல அப்படியே ஊத்துதுப்பா”

பார்த்தபோது எல்லா இடமும் சிலந்தி வலை போல் விரிசல் இருந்தது. கிச்சனில் மிக அதிகமாக விரிசல் விட்டு ரீபார்லாம் துருப்பிடித்து உதிர்ந்து விடும் நிலையில் இருந்தது.

“ஏன் சார் தண்ணி கசியறத பாக்காம விட்டுடீங்களா?”

“நீ வேறப்பா போன வருசம்தான் மேல கொத்திட்டு புதுசா டைல்ஸ் எல்லாம் போட்டன், அதுக்குள்ள ஒழுகுது.”

“சார் வாங்க வீட்ட வெளிப்பக்கமும் மேல்தளத்தையும் பார்ப்போம்”.

அவன் பார்த்தபோது காலம் போட்டு இருந்த இடமெல்லாம் நேர்க்கோடாக விரிசல், பழைய வீட்டு அஸ்த்திவாரத்தின் மேலேயே சுவர் வைத்து எழுப்பிருக்கிறார்கள். கீழே பீம் கொண்டு இணைப்போ லிண்டல் பீமோ கொடுக்காமல் வெறும் சுவற்று மேலே ரூப் தளம் அமைத்ததால் கீழே அஸ்திவாரம் கனம் தாங்காமல் உட்கார்ந்து விரிசல் விடுகிறது. ‘மற்றபடி நகாசு வேலைகளால் தரையும், பூவூம், கைப்பிடியில் குழவும் கார்னரில் திரனையும் செய்து தங்களது அனுபவத்தால் மேஸ்திரி இழைத்து வைத்திருந்தார்.

“சார் வீட்டிற்கு மேல மேல செலவு செய்வது வேஸ்ட், கீழே அஸ்திவாரம் ஒக்காருது. இப்ப சரி செஞ்சாலும் திரும்ப பழையபடி ஒழுவும், இந்த வீடு தாங்காது அண்ணன்கிட்ட சொல்லுங்க லோன் போட்டு இடிச்சுட்டு புதுசா கட்டிடுவோம்,” என்றபோது கையில் காப்பி வைத்து கொண்டு எதிரில் நின்ற அம்மாவின் கண்ணில் நீர் பொலபொலவென வடிந்தது. காப்பியை மேஐையில் வைத்துவிட்டு ரூமுக்குச் சென்று விட்டார். தொடர்ந்து அழுவது தெரிந்தது. ஏன் சொன்னோம் என்றாகி விட்டது அவனுக்கு.

அதைப்பற்றி கவலைப்படாமல் வாத்தியார் காப்பியை எடுத்து உறிஞ்சும் சத்தம் நிசப்தத்தை உடைத்து நாராசமாக்கியது. ”

”என்ன தம்பி காப்பி ஆறிடும், எடுத்துக் குடி”

இவனுக்கு காப்பியை கையில் எடுத்தும் குடிக்க முடியவில்லை நெருப்பை விழுங்குவது போல் இருந்தது இரண்டு நிமிடமும்.

வாத்தியார் ரூமைப் பார்த்து, “இப்ப என்ன செய்யறது>” என்று ஆரம்பித்ததும் ;இவன், “சார் நான் உள்ளதச் சொன்னேன். இப்ப பேருக்கு செஞ்சிட்டு திரும்ப கன்டிப்பாக ஒழுவும் அப்ப கேட்க மாட்டிங்களா?” என்றான்..

ரூமில் இருந்தே அம்மா, “வேற வழியில்லையா?” என்று கேட்டார்.

‘இருக்கும்மா. செலவு ஆகும் செஞ்சா இரண்டு மூன்று வருசமாவது தாங்கும்”

“அப்படியே செஞ்சுடுப்பா,” என்றார் அம்மா.

வாத்தியார், “என்ன மாதிரி செய்யனும்?” என்று விசாரித்தார்.

“சார் பழைய டைல்ஸ் எல்லாம் கொத்தி எடுத்துட்டு ரூப் விரிசல் எல்லாம் ரிப்பேர் பார்த்து வாட்டர் புருப்பிங் பண்ணிட்டு வாட்டம் காட்டி வேற டைல்ஸ் போட்டா தாங்கும்.”

“அதெல்லாம் ஒன்றும் வாணாம், இப்படி மேலேயே ஏதாவது செய்ய முடியுமா பாரு”

‘சரி சார் அளவு எடுத்து இரண்டு தார்ப்பாய் வாங்கி போடுவோம் ஒழுவாத மாதிரி ”

“என்னப்பா நீ போவாத ஊருக்கு வழி சொல்ற?”

“இல்லை சார் வேற எப்படி செய்யறதுனு தெரியல நீங்க முடிவு பண்ணி சொல்லுங்க எனக்கு வேல இருக்கு” என்று அவன் கிளம்பினான்.

அம்மா வெளியே வந்து, “சாயந்திரம் வா தம்பி என்ன செய்யலாம்ன்னு நான் சொல்றேன்,” என்றார்.

வெளியே சிறு சாரல் மழை தூறி கொண்டு இருந்தது. நனைந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான் துணி மாற்றிவிட்டு “தீவாளிக்கு வழி பொறந்திருக்கு,” என்றான் மனைவியுடம் குழந்தையை வாங்கி கொண்டே. பையனிடம், “கடையில உள்ள விலக்கூடிய டிரஸ்தான் உனக்கு,” என்றான்,

குழந்தை கையை ஆட்டி வழக்கம் போல கே கே என்று புன்னகைத்தது.

“என்னது அப்பாவும் பிள்ளையும் சேர்ந்துட்டிங்க, அப்படியே நாளு கிழமையில என் நகைக்கு ஒரு வழி பொறந்தா நல்லா இருக்கும் ”

“மேலும் மனைவியின் ஆவலைத் தூண்டாமல் நடந்ததைச் சொன்னதும், “வேல செஞ்ச மாதிரிதான் நீங்க வாங்குன மாதிரிதான், ஊருல அவன் அவன் எப்படி ஏய்ச்சு பொழைக்கறானுவ ” என்றாள் மனைவி. “நீங்க இப்படி ஊம கனா காண வேண்டியதுதான் ”

அவளைச் சொல்லி குற்றமில்லை, அவள் வந்ததிலிருந்தே இவனது உழைப்பும் முயற்சியும் பலன் அளிக்கவில்லை வெறுங்கையுடன் வருவதே வாடிக்கையாகி விட்டது !”செய்த வேலையெல்லாம் நஷ்டப்பட்டு நகையெல்லாம் அடகுக்கடையில் பத்திரமாக இருக்கிறது, திருப்பும் வழி எட்டிய தூரம்வரை தெரியவில்லை. மத்தளம் போல் இருந்தது அவன் நிலமை, ஏன்டா சொன்னோம் என்று ”

“மாலையானதும், “சரி அந்த வேலையை வாத்தியாருக்கு இல்லைன்னாலும் அந்த அம்மாவின் கண்ணீருக்காகவது செய்வோம்,” என்றான் மனைவியிடம்.

‘போய் பார்த்துட்டு வாங்க, என்ன செய்யறது அவங்களுக்கு என்ன கஷ்டமோ”

“அவன் சென்று பார்த்தபோது வாசல் கேட்டில் நாய் நின்று கொண்டு இருந்தது. ஒரே சீரான உறுமல். அடுத்த அடி வைத்தவுடன் வேகமாக குரைத்துக்கொண்டு மேலே பாய்ந்து விடும் போல் வந்தது.

“டைகர் ” என்று சத்தமிட்டு அம்மா வெளியே வந்தார்கள். “நாய் அவர் மீது உரசி செல்லம் கொஞ்சியது

“வாப்பா உள்ளே வா ”

“சொல்லுங்கம்மா”

“எனக்கு மருமகள நினைச்சுதானப்பா பயம், பையன் ஒத்துக்கிட்டான் செய்யச் சொல்லி நீ நாளைக்கே ஆளுகள ரெடி பண்ணி பெரிய மழைக்கு முன்ன முடிச்சு குடு”

“சார் இடையில வேற மாதிரி செய்யனும்னு சொன்னா…”

“சார் அப்படிதான் ஆனா இனி ஒன்னும் சொல்ல மாட்டார், பையன் சொல்லிட்டான்ல”

“சரிம்மா”

“நாளைக்கு இரண்டு ஐோடி ஆட்களை விட்டு உடைக்க விடுவோம். சார்ட்ட சொல்லிடுங்க. நான் போய் ஆட்கள் ஏற்பாடு பண்றம்மா,” என்றவன், “அம்மா இந்த நாய்…” என்று தயங்கினான்.

“டைகரா? நான் பின்னாடி கட்டிப் போடறன், பயப்படாதே ”

“அவன் மேஸ்திரியிடம் வேலையைப் பற்றி சொல்லி மறுநாள் காலையில் ஆட்களை ரெடி செய்து வேலையை ஆரம்பித்து விட்டான். செட்டியாரைப் பார்த்து “வாத்தியார் வீட்ல ஒழுகுது, ரிப்பேர் வேலை”, என்றதற்கு செட்டியார் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், மனதில் என்ன நினைக்கிறார் என்ன சொல்லுவார் என்ற பயம் உள்ளுக்குள் அவனுக்கு இருந்தது ‘

‘மேஸ்திரி தினக்கூலிக்கு ஆள் அனுப்புவதால், மாலையானதும் சம்பளம் கையில் வந்திடும், அவரது கமிஷன் எடுத்துக் கொண்டுதான் ஆட்களுக்கு தருவார். இவனுக்குதான் பயம் திட்டமிட்டபடி வேலை முடியல என்றால் கூடுதல் செலவு ஏற்படும் அதற்கான காரணம் சொல்ல வேண்டும். அதும் செட்டியாரை சமாளிப்பது பெரும் பாடு.

மேஸ்திரி கலியமூர்த்தியுடன் சேர்ந்து இரண்டு ஐோடி ஆட்களை அனுப்பியிருந்தார், கணவன் மனைவியாகதான் வருவார்கள் ஒட்டர் இன பழங்குடியினர் அவர்கள், வேலையை கான்ராக்ட்டாக பேசிக்கொண்டுதான் வேலை செய்வார்கள். அதிலும் மேஸ்திரி கமிஷன் கொடுத்தாக வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு அடுத்த வேலை கிடைக்காது. இதெல்லாம் அவனுக்கும் தெரியும் ஆனால், ஒன்றும் செய்ய முடியாது.

வாத்தியாரை வைத்துக் கொண்டு மேஸ்திரி கலியமூர்த்தியிடம் வேலையைச் சொன்னதும், “சார் இது எல்லாம் கடுக்காய் கருப்பட்டி போட்டு ஐல்லி போட்டு இருக்கு இது கான்ராக்ட்டாக செய்ய முடியாது, சம்பளம் கொடுத்து மதிய சாப்பாடு போட்டுடுங்க, ” என்றார் அவர்.

“வாத்தியார் “இங்கே சாப்பாடுலாம் செய்ய முடியாது,” என்றார்.

“மேல என்ன செய்யறது சொல்லு தம்பி”

“சார் சாப்பாடு கடையில வாங்கி கொடுத்துடலாம்,” என்று சொல்லிவிட்டு கலியமூர்த்தியிடம், “ஒரே நாளில் முடிச்சுடனும்,” என்றதும் “சார் நாளைக்கு முடிஞ்சாலே பெரிய விஷயம்” என்றார் அவர்.

இவன் வாத்தியாரை பார்த்ததும் அவர், “சரிப்பா சாப்பாடு வாங்கி கொடுத்துடறன். வேலையை ஆரம்பி ஆனா எனக்கு நாளைய பொழுதுக்குள் முடிச்சுடனும் ” என்று கறாராகச் சொன்னார்.

‘கலியமூர்த்தி ஆட்கள் வேலையைத் தொடங்கினர், முன்பே சொல்லியிருந்ததால் தயாராக சம்மட்டி, உளி பான்டுவுடன் வந்திருந்தனர் இயல்பாக வேலை நடந்தது, ஆனால், வாத்தியாரிடம் சொல்லிவிட்டு வீடு வரை சென்று வருவதற்குள் வாத்தியார் ஆட்களுடன் சன்டை போட்டு விட்டார். அவன் திரும்பி வந்ததும் அவனிடம், “என்னப்பா நீ இவன் இங்கே அடிக்கற அடி கீழே எல்லாம் கொட்டுதுப்பா. என் கெட்ட நேரம் இருக்கிறது பத்தாமல் மேலேயும் நீங்க ஒழுவ வப்பீங்க போலிருக்க” என்று கொபமாககக் கத்தினார்.

கலியமூர்த்தியும் அவனது ஆட்களும் வருத்தத்துடன் வேலை செய்வது தெரிந்தது, முகத்தில் ஈயாடவில்லை. நாளைக்கு வேலைக்கு வருவார்களா என்று இவனுக்கு கவலையாகி விட்டது.

“வாத்தியார் கீழே போய், “பாரு எப்படி கிடக்குன்னு என் பேச்ச எங்க கேட்கறா,ரிட்டையர்மென்டுக்கு பிறகு கிடந்து அல்லாடுடறன்,” என்றார்.,

இரண்டு மூன்று இடங்களில் மேலே ஐல்லியை உடைத்ததும் ஏற்கனவே இருந்த விரிசலில் இருந்து சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்திருக்கிறது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல் இவர்களுக்கு பயம். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும்போது அம்மா, காப்பியோடு வந்து நிற்கிறார்கள் வாத்தியார் சண்டை போட்டு திட்டியதில் அழுதிருப்பார்கள் போல் இருந்தது.

அவன் அப்போதுதான் பழைய சாதம் தயிரோடு சேர்ந்து சாப்பிட்டிருந்தான் காப்பி வேண்டாம் என்றால் வருத்தப்படுவார் என்று வாங்கி கண்ணை மூடிக்கொண்டு குடித்து விட்டு வைத்தான்

“அம்மா கீழே விரிசல் எல்லாம் தட்டிவிட்டு புதிதாக கெமிக்கல் பூசி சரியாக்கனும் கொட்டினால் வேலைக்கு நல்லதுதான். நீங்க சாருகிட்ட கொஞ்சம் சொல்லுங்க, ஆட்களை சத்தம் போட்டா வேலைக்கு வரமாட்டாங்க., பிறகு வேலை முடிப்பதற்கு சிரமமாயிடும்!

“கேட்டுக் கொண்டு வந்த வாத்தியார், “நீ என்னப்பா, அவங்களுக்கு வக்காலத்து வாங்கற உனக்கு என் கஷ்டம் புரியாதப்பா,பையன் நாளைக்கு கேட்டால் பதில் சொல்ல வேண்டிய சங்கடம் எனக்கு. நீ கொஞ்சம் கிட்ட இருந்து இதை முடிச்சுக் கொடு, எனக்கு இந்த வேலை ஒன்றும் புரியல” என்றார்.

சரி சார் நான் பார்த்துக்கரன், ”

அப்படா என்று இருந்தது அவனுக்கு இனி கலியமூர்த்தியுடன் சமாளிச்சு வேலைய எப்படியாவது முடிக்கனும். கலியமூர்த்தி கள்ளமில்லாமல் வேலை செய்யற ஆள், வெடவெடவென்று நல்ல உயரம் கருப்பு. ஆனால் எங்கே போனாலும் கூலிக்காரன் என்று நினைத்துக் கொண்டு சற்று விரட்டினால் சன்டை போட்டு விடுவான். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று குழம்பி, “கலியமூர்த்தி உடைச்ச ஐல்லியை எங்க போடறிங்க.” என்று கேட்டான்.

சார் அத ஏன் கேட்குற, வாத்தியார் மனுசன் மாதிரியா பேசராரு?.

‘ஏம்பா என்னாச்சு ”

சார் வேலை செய்யறவன் வெத்தலை பாக்கு போடமாட்டான்? பீடி குடிச்சு போடமாட்டான்? அதுக்கெல்லாம் பேசராரு, சீரா அடிக்க சொல்ராரு, கொஞ்சம் கூட பேற மாட்டேங்குது ஓங்கி அடிச்சா மட்டு மரியாதை இல்லாமல் பேசராரு. நீ யாராவது வச்சி பாரு சார், நம்ம கொண்டு ஆவாது”.

ஏம்பா உனக்கு நாலஞ்சு நாள் வேல இருக்கு அவசரப்படாத. ஐல்லியை உடைத்து அள்ளுன பிறகு சுத்தமாக்கி விட்டு தார் பெயின்ட் அடிக்கனும், உன்னைத்தான் நம்பி இருக்கன், செஞ்சு குடு” என்றான் “நாளைக்கு வாத்தியாரோடு நீ டவுனுக்கு போய் பொருள் எல்லாம் வாங்கிட்டு வா, உனக்கு செலவுக்கு ஆகும்”

கலியமூர்த்தி மவுனமாகி வேலை செய்து கொண்டு இருந்தான், ஒன்றும் பதில் இல்லை.

கீழே வந்து அம்மாவிடம், “ஆட்களுக்கு டீ போட்டு கொடுங்கள்” என்று கூறி விட்டு வேலையைப் பார்த்தான் வாத்தியார் டீ கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார், ஆட்கள் சிறிது இயல்பாய் பேசி கொள்ள ஆரம்பித்ததும், “சார் நாளைக்கு பெயின்ட், தார் சீட் எல்லாம் வாங்கனும் மானம் மப்பு மந்தாரமா இருக்கு எதுக்கும் பக்கத்து சுருட்டு கம்பேனியில் தார்ப்பாய் கேளுங்க, சாயந்திரம் வேலை முடிந்து மூடி வச்சிடுவோம்” என்றான். வாத்தியார் வேகமாக பக்கத்தில் தார்ப்பாய் கேட்க சென்றார்.

“தெ உன் புத்திய காட்டாத வேலை செய்ய பாரு தீவாளிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்ல புள்ளைவோ துணி கேட்டு அழுவுதுவோ என்ன நா சொல்றது கேட்குதா என்றார் கலியமூர்த்தி மனைவி புவனா.

கலியமூர்த்தி முறைத்து விட்டு சம்மட்டியால் வேகமாக அடிக்க ஆரம்பித்ததும் கீழே இருந்து வாத்தியார் தார்ப்பாய் எடுக்க கூப்பிட்டார்

“போயி எடுத்துட்டு வா” என்றான் இவன்.

கலியமூர்த்தி போனதும், “தினம் வேலை செய்யறத குடிச்சுட்டு புள்ளைவோளுக்கு ஒன்னும் செய்ய மாட்டார் சாரு நான் பொம்பளை சம்பாரிச்சு அதுவள பார்க்கறன் ரா சோறு ஆக்கறதுதான் மீச்சம் மீதிய காலைல போட்டுட்டு வேலைக்கு ஒடி வரேன்,” என்றார் புவனா.

” மதியத்திற்கு?”

”பால்வாடி சோறுதான்”

‘அவனுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை..

வாத்தியார் கலியமூர்த்தியோடு மேலே தார்ப்பாய் கொண்டு வந்தார்.

“சார் மணி 12. ஆவுது சாப்பாடு வாங்கி வரனும்”

“இது நல்லாருக்குபா, வேளைக்கு சாப்பாடு, டீ நம்ம பாடு தான் சிரிப்பா சிரிக்குது யார் போய் வாங்கி வரது| கீழே வா காசு தரன்”

“‘கலியமூர்த்தி நீ போய் வாங்கி வாயேன் ”

‘சரி சாரு!

”ஏ பூனா 4, 4 பரோட்டா வாங்கியாரன்”

‘தெ காசு இருந்தா 4 வாங்கி புள்ளைவோளுக்கு குடுத்துட்டு வா”

கலியமூர்த்தி சென்றதும், “செட்டியார் வீட்டுல பூச்சு வேலை நடக்குது போயி பாத்துட்டு சாப்பிட்டுட்டு வந்துடறன் சார்” என்றான் இவன்.

” ம்ம்” என்றார் வாத்தியார், சுரத்தில்லாமல்.

‘பூச்சு வேலை சொல்லியிருந்தபடி சாரம் போட்டு ஆரம்பித்திருந்தனர், நேரம் ஓடியிருந்த அளவு வேலை நடந்திருக்கவில்லை.

“பழனி ஏன் வேலை ஆவல?”

‘வசந்து கையில சாரத்திலிருந்த தேள் போட்டுடூதுன கலவை குடுக்க ஆள் இல்லாமல் வேலை தேங்கி போச்சு”

”மேஸ்திரி வரலையா?”

” இல்லைண்ணா, காலையிலிருந்தே காணும்”

” எங்க வசந்து”

“செட்டியார் பையன் ஆஸ்பத்திரிக்கு இட்டுட்டு போயிருக்காரு, நான் அப்படியே மேஸ்திரியிடம் சொல்ல சொன்னேன்,” என்றான் கொத்தனார் பழனி.

“என்ன பழனி இவ்வளவு கலவையை போட்டு வச்சிருக்க, எப்ப முடிக்கறது?”

“சாப்பிடப் போவாம 4 மணி வேலை செய்யலாம்ன்னு பிளான் பண்ணுனோம், கடைசில இப்படி ஆயிப் போச்சு”

கொத்தனார் மணி எங்க?”

“வசந்துக்கு பதிலா யாராவது பசங்க கூப்ட்டு வரேன்னு சைக்கிள் எடுத்து போயிருக்கான்,இப்ப வந்துடுவாண்ண”

பேச்சுக்குரல் கேட்டு செட்டியார் வெளியில் வந்து விட்டார். ஐயோயோ என்றது அவன் மனம்

“என்னப்பா காலையிலிருந்து ஆள காணல?”|

“இல்லிங்க வாத்தியார் வீடு ஐல்லி உடைக்க ஆரம்பிச்ச உடனே கீழே பூச்சு எல்லாம் கொட்ட ஆரம்பிச்சதும் சார் வேலை செய்ய விடல, புரிய வைக்க போதும் போதுமுனு ஆயிடுச்சு அதான் நிக்க வேண்டியதா போயிடுச்சுங்க”

“இங்கே பாத்தியா இந்த வசந்து பயல தேளு கொட்டிடுச்சு, வேல எப்படி ஆவுமுனு தெரியல”

“அதெல்லாம் முடிச்சுடலாங்க, மணி ஆள் கூப்பிட்டு வந்துடுவாப்பல நான் போவாம இருந்து பாத்துக்கறன்”

செட்டியார் உள்ளே சென்று விட்டார்

“ஏய் பழனி ஒரு காரியம் செய்,கலவையை வாங்கி இளக்கி வாரி மேலே அடிச்சுடு , மணி வந்ததும் அப்படியே சுத்தம் பண்ணி கட்டைய புடிச்சு ஸ்பான்ச் போட்டு கீழே இறங்கலாம்”.

“சரிண்ண”

“அருளு நீ சாரத்தில் ஏறு. அமுதா கலவையை அள்ளிக் குடு, நான் ரோடு வரை போய் யாராவது கண்ணுல பட்டா கொண்டு வரேன்.”

அதற்குள் வண்டி சத்தம் கேட்டது, செட்டியார் பையன் சந்துரு வெறும் ஆளாய் வந்தான். சந்துரு அவன் பள்ளித் தோழன்

” மேஸ்திரி இல்லடா”

“ஏய் சந்துரு ஆளுவ சாப்பாடுக்கு கலையாமல் வேல செய்ய முடிவு பண்ணி இருக்கு, நீ காசு வச்சிருக்கியா டீ பிஸ்கட் ரெடி பண்ண போ… ”சாப்பாட்டு நேரம் தாண்டிப் போச்சு பாரு”

டீ வருவதற்குள் மணி இரண்டு பசங்களுடன் வந்து விட்டான். டீயைக் குடித்து விட்டு பழனி வாரி அடித்து இருந்ததை சுத்தம் பண்ணி முடிக்க 4 மணி ஆகி விட்டது./ பாதி வேலை பாக்கி நிற்கிறது வெளிப்பூச்சு வேலை அது, சாரம் பிரித்து விட்டு மிச்சம் உள்ளதைப் பூச வேண்டும். பார்த்தபோது மலைப்பாக இருந்தது இன்று எப்படியாவது முழுவதும் குறையில்லாமல் முடித்து விட வேண்டும். சிறுநீர் கழிக்காதது வலி எடுத்து விட்டது சென்று திரும்பும்போது பழனியும், மணியும் சாரத்தை பிரிக்க ஆரம்பித்து இருந்தனர்,

‘4 மணிக்கு டீ பிஸ்கட் வந்தது குடித்து விட்டு ஆரம்பித்தது வேலை, இடையில் தண்ணீர் கேட்டு குடிப்பதை தவிர யாரிடமும் பேச்சே இல்லை. “ஒருவழியாய் வேலை நெருங்கி முடிக்கும் போது மணி 7 ஆகிவிட்டது. மேஸ்திரி தேடிக்கொண்டு வந்து விட்டார், அவனிடம் “கலியமூர்த்திக்கு சம்பளம் வாங்கி குடுத்துட்டு வரம்பா, வாத்தியார் பேச்சு குடுத்துட்டாரு” என்றார். ‘”முடிஞ்சுதுன்ன நீங்க பார்த்துங்க ”

இதையெலாம் “பார்த்து கொண்டு இருந்த செட்டியார், “மேஸ்திரி நீங்க வரலான்ன எப்படி நடக்கும் வேலை?” என்று கேட்டார்.

”இல்லீங்க பையனுக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு, ஆஸ்பத்திரியில் லேட்டா போயிடுச்சு. அதலாம் நாளைக்கு கிட்ட இருந்து பார்த்துக்கரன் ”

‘ஆட்களைப் பார்க்க பாவமாக இருந்தது, பசியில் துவண்டு உள் வாங்கி இருந்த கண்களில். செட்டியார் அடுத்து என்ன சொல்லுவார் என்ற கவலை அவனால் பார்க்க முடிய வில்லை, செட்டியாரிடம் தலையாட்டி விட்டு கிளம்பினான். ஆனால், வீடு வந்தால்,’ “என்ன ஊர் வேலை முடிஞ்சாச்சா?” என்கிறாள் மனைவி! மதியம் சாப்பிட வராத எரிச்சலில் அவன் ஒன்றும் சொல்லவில்லை தாவிய பிள்ளையிடம், “இரு தங்கம் குளிச்சிட்டு வந்துடறன்” என்றான்.

”பச்சை தண்ணிரில் உடம்பு குளிர குளித்த போது ஆற்றாமையும் கரைந்து ஒடி சிறிது ஆறுதலாக இருந்தது சாப்பிட்டு படுக்கும்வரை பேச்சு இல்லை மனைவியுடன் குழந்தை ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்தது. ‘”கோபமா?” என்று நிலைகொள்ளாமல் அவள் அவன் தலைமுடியில் கையை கொண்டு அலைந்தாள், உடம்பு குறுத்து சிலிர்த்தது திரும்பிய அவன் அவளுக்களித்த பதிலில் உடல் களைத்துப் படுத்தவள், இழுத்தணைத்து திரும்ப முத்தமிட்டாள்.

மறுநாள் வேலை திட்டமிட்டபடி மேஸ்திரி வந்ததால் அதிக சிரமமில்லாமல் இரண்டு இடத்திலும் செய்ய முடிந்தது, வாத்தியார் மதியத்திற்கு பிறகு வராததை பற்றி அதிகம் கேட்கவில்லை, செட்டியார் வீட்டீல் நடந்ததை அறிந்த பிறகு நம் வேலை சீக்கிரம் முடிந்தால் சரி என்ற மன நிலையில் இருந்தார் மாலை, வேலை நடந்து கொண்டு இருக்கும்போதே தேவையானவற்றை வாங்க கலியமூர்த்தியை இட்டுக் கொண்டு சென்று வந்தார். இந்த கலியமூர்த்தியும் வாத்தியார் பின்னாலே நின்று கொண்டு இருக்கிறான், அவரும் அவனைத்தான் கூப்பிடுகிறார், குறையில்லாமல் வேலை நடந்தால் சரி என்றது அவன் மனம்.

அடுத்த நாள் செட்டியார் வீட்டு அவுட்டா் பூச்சு வேலை முடிந்தது. வாத்தியார் வீட்டில் கலியமூர்த்தி மற்றும் ஆட்களைக் கொண்டு சுத்தம் பண்ணி தார் பூசி மணி கொத்தனாரை கொண்டு பிட்டுமன் சீட்டை சூடுபடுத்தி ஒட்டி விட்டு அதன் மேல் மர உருளையை உருட்டி முடிக்க இரவாகிவிட்டது. வழக்கம் போல நேரமாகிவிட்டது, ஆட்களுக்குப் புரியாத வேலை என்பதால் சாப்பிடவும் போகவில்லை, இடிமுழக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான் அவன் ஆச்சரியமாக அவள் ஒன்றும் சொல்லவில்லை

“அப்பா வந்து உங்களுக்காக இத்தனை நேரம் இருந்து பார்த்து விட்டு போயிடுச்சு”

“சரி”

“இது என்ன சட்டை பேண்ட் எல்லாம் தாரு?”

அப்போதுதான் பார்க்கிறான், தார் பெயிண்ட் ஒட்டி இருக்கிறது

“போங்க கரித்துணிக்குக்கூட ஆவாது போலிருக்கு,” என்றாள்

“விடு, இப்ப என் நிலமையும் அப்படிதான் இருக்கு,” என்றான்

தீவாளி வரிசையைக் காட்டினாள் அதில் பையனுக்கும் அவளுக்கும் இரண்டு இரண்டாக துணி மணிகள் இருந்தன.

அன்று இரவு மழை பெய்தது, அது மிதமான மழைதான் அடுத்த நாள் காலை, எங்கு வாத்தியார் வீடு திரும்ப ஒழுவுதோ என்று பயத்தில் அவன் சென்று பார்த்தபோது இரண்டு இடங்களில் கசிவு இருந்தது

‘வாத்தியார், “என்னப்பா இது?” என்று சலித்துக் கொண்டார்.

“இல்ல சார் சரி பண்ணிடுவம், தண்ணி ஓடாமல் தேங்கி நிக்குது, அதான்”, என்றான் அவன். “கீழே சாரம் போட்டு விரிசல் எல்லாம் கெமிக்கல் பூசனும், மேல தளத்தில் ஐல்லி போட்டு வாட்டம் காட்டி டைல்ஸ் பதிக்கனும் சார் எல்லாம் செஞ்ச பிறகு பாருங்க ”

“என்னம்மோ செய்யுங்க” வாத்தியார்க்கு நம்பிக்கை இல்லை, அம்மா முகத்தில் கவலை தெரிந்தது

ஆட்களை எதிர்பார்த்து வெளியே வந்தான். மேஸ்திரி மொத்த ஆட்களோடு வந்து கொண்டு இருந்தார், இன்னும் இரண்டு நாட்கள் வேலை இருக்கிறது ”

“என்னப்பா செட்டியார் இப்படி பண்ணிட்டாரு>|

“ஏன்ணன் என்னாச்சு?”

“தீவாளி கழிச்சு செய்யலாம்னு சொல்ராரு. இந்த பயலுவல மண்ண ஏத்தி வைங்கடானு சொன்னன்,உட்டுட்டானுவ. அமுதா காலையிலே சலிக்கப் பார்த்து இருக்கு செட்டியார் பார்த்துட்டு வேலை ஆவாதுனு நெறித்துட்டாரு, என்ன செய்யறது?”

“மேலே வாங்க வாத்தியார்ட்ட பேசி பார்ப்போம்” என்றான் அவன்.

“சார் ஆளுவ நிறைய இருக்கு, நீங்கள் ஒத்துகிட்டா நாளைக்கே வேலையை முடித்துக் தரேன்,” என்று வாத்தியாரிடம் சொன்னார் மேஸ்திரி. வாத்தியார் அவனை பார்த்தார்.

|என்ன சொல்ரப்பா?”

அவன் சொல்வதற்க்குள் மேஸ்திரியே, “தீவாளி வருது சார், ஆளுவ இப்ப எங்க போவும்? நீங்க மூணு ஆள் சம்பளம் குறைச்சு கொடுங்க, நான் நிரவி கொடுத்து விடுறேன்.,” என்றார்.

வாத்தியார் ஒத்துக் கொண்டு உள்ளேயிருந்து கருப்பு கலர் பாலித்தீன் சீட் கொண்டு வந்து கொடுத்து அதை தளத்தில் விரித்து அதன் மேல் கான்கீரிட் இடவேண்டும் என்றார்

“அதுக்கு என்ன சார், ஐோரா செய்வோம்,” என்றார் மேஸ்திரி. அவன் மறுத்து, ஐல்லி கொட்டும்போதே பாலித்தீன் ஓட்டை விழுந்துடும் பிறகு இட்டு என்ன பிரயோசனம் என்றதற்கு வாத்தியார் ஒத்து கொள்ளவில்லை மேஸ்திரியும் வாத்தியாருடன் சேர்ந்து கொண்டார், அவன் என்ன செய்ய முடியும், வேடிக்கை பார்ப்பதை தவிர? ஐல்லி மணல் ஏற்றும்வரை அதையேதான் செய்தான். வாட்டம் காட்ட புல்லோடு வைத்த பழனி இரண்டு நாளில் தங்கச்சிக்கு வரிசை கொண்டு போவனும் என்றும், மணி தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போவனும் என்றும், கலவை கொண்டு வந்த அமுதா கூரை வீட்டை பெருமழைக்கு முன் பிரித்து கட்டனும் என்றும் கவலைப்பட்டனர். அதில் அவனது கவலை அடிபட்டுப் போனது

“ஆனாலும் செட்டியார் இப்படி செய்ய கூடாதுண்ண” என்றனர் அவனிடம்

“பொறுங்க, மேஸ்திரிட்ட சொல்லி செட்டியாரிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி தர சொல்றேன் கவலைப்படாம வேலை செய்ங்க,” என்றான் அவன்.

பழனியும் மணியும் சிறுவயது முதலே இவ்வேலைகள் செய்து வருவதால் தேர்ந்த குயவன் போல் கை வணங்கி வரும், அருமையாகச் செய்தனர்” நினைத்ததைவிடச் சிறப்பாக வேலை நடந்தது தினம் இரவு எட்டு மணி வரை வேலை செய்து முடிக்கும்போது வாத்தியாருக்கு முகமெல்லாம் பல்லாக தெரிந்தது. மேஸ்திரியிடம் சம்பளம் கணக்கு தீர்த்து அனுப்பிவிட்டு இவனிடம், “பையன் வந்துடட்டுமே”, என்று சொல்லி அனுப்பிவிட்டார்..

மனம் வெறுமையாக இருந்தது, விடிந்ததிலிருந்தே மழை சிறு தூறல் விட்டுவிட்டுப் பெய்தது. குழந்தைக்கு விளையாட்டு காட்டியபடி மழையைப் பார்த்து கொண்டு இருந்தான். மேஸ்திரி அவனைத் தேடி வந்தார், செட்டியார் நாளை வரச் சொல்லி இருப்பதாகவும் அவனையும் உடன் அழைத்து வரச் சொன்னதாகவும் காலையில் வருவதாகவும் சொல்லிச் சென்றார் பணம் சீக்கிரம் கிடைத்துவிடும் என்று சிறிது நப்பாசை தோன்றியபோது வானம் கிடும்புடும் என்று கமறியது

“ஏங்க வெளியே போவாதிங்க. கீழ் மாரி கொள்ளுது சரி மழை பிடிக்கப் போவுது,” என்றாள் மனைவி

இடிச்சத்தம் வரும்போது குழந்தையோடு அவன் உடம்பும் ஆடியது மாலையில் கல்லூரியில் படிக்கும் தம்பி அவன் நினைத்த கத்தரிப்பூ கலரில் குழந்தைக்கு துணியும் சென்னையில் வேலை பார்த்த தம்பி அவனுக்கு துணிமணியும் எடுத்து வந்து பார்த்து சென்றனர் மனம் நெகிழ்ந்திருந்தது அவனுக்கு

இரவு முழுவதும் மழை விட்டுவிட்டுப் பெய்தது. காலையிலே மேஸ்திரி வந்து விட்டார். செட்டியாரை சென்று பார்த்தபோது, எவ்வளவு என்று கேட்டு அவன் முன்னிலையில் மேஸ்திரிக்குக் கொடுக்க வேண்டியதை எண்ணிக் கொடுத்து நோட்டில் எழுதி கொண்டார். இருவருமே பணம் வேண்டுமா என்று அவனைக் கேட்கவில்லை, அவனும் கேட்டு விடலாமா என தயங்கிக் கொண்டிருந்தபோது, “வா தம்பி, வழியில் டீ சாப்பிட்டு போவலாம் என்று பேச்சை முடித்துவிட்டார் மேஸ்திரி. சரி என்று அவனும் போக வேண்டியதாகிவிட்டது. டீ சாப்பிடும்போது, மேஸ்திரியிடம் காசு கேட்கலாமா, இதுவரை அப்படி கேட்டதில்லையே” என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. மனது வேண்டாம் என்றது மேஸ்திரியிடம், “எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

வரும் வழியில் வாத்தியார் வீடு செல்லத் தோன்றியது, கேட்டில் நின்ற டைகர் இவனைக் கண்டதும் குரைக்காமல் ஊம்ம் என்று பிரியமாய் குரல் எழுப்பிய சத்தத்தில் அம்மா வெளியே வந்தார்கள்

“வா தம்பி உன்னைத்தான் பார்த்துட்டு இருந்தேன்”.

அவன் பயந்து மேலே பார்த்தான் அங்கெல்லாம் ஒழுவியிருக்கவில்லை

“தம்பி ராத்திரிதான் வந்துச்சி, உன்னைத்தான் கேட்டுக்கிட்டு இருந்துச்சி இரு கூப்பிடறேன்,” என்று உள்ளே சென்றார்கள்

டேபிளில் புதுத்துணிகளோடு பைகள் சுவிட் எல்லாம் இருந்தது அவனுக்கு ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும் பரபரப்பும் தோன்றியபோது உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.

“தம்பி அந்தப் புள்ள கஷ்டப்பட்டு எல்லாம் செஞ்சுச்சுப்பா,ஏதாவது செய்யணும்பா”

“என்னம்மா சொல்ற, அவன் என் பிரண்டும்மா கோவிச்சுபாம்மா,” என்று வெளியில் வந்தான் நண்பன்.

“நல்லா இருக்கியா?”

“இருக்கேன்ண”

“ஏய் உன் புண்ணியத்துல வீடு ஒழுவுல. அப்பா அம்மாவுக்கு தீவாளி பரிசு கொடுத்துருக்க” என்று சிரித்தான். “ஏதாவது வேணுமா, சாப்பிடுரியா?”

இல்ல சாப்பிட்டுட்டன், வரேங்க,” என்று கூறியபோது குரல் மேலன்னத்தில் ஒட்டி தாழ்ந்து ஒலித்தது அவனுக்கே கேட்டது. அவனுக்கு அவனையே பிடிக்கவில்லை, இறங்கி நடந்தான் மழை பெய்தது…….

(Art credit to http://www.surrealismnow.com/jeroenvanvalkenburg.html)

முத்துப்பிள்ளை

தி வேல்முருகன்

மணி 4.15க்கு கடைசியாக டிங் டிங் டிங் என்று ராகத்தொடு ஆரம்பித்து டாங் டாங் என்று முடிந்தபோது அவனுக்கு முன்னால் மனம் சென்று விட்டது வீட்டிற்கு.

வரிசையாகதான் செல்ல வேண்டும். 4வது வாத்தியார் வாசலில் நின்று கொண்டு ஓவ்வோரு வகுப்பாக வெளியே விட்டார். ஒவ்வொரு வகுப்பிலும் அ, ஆ என இரண்டு பிரிவுகள் உண்டு. இவனது பிரிவு வந்தபோது முதல் ஆளாக பிடித்த ஓட்டம் வீடு வரும்வரை தொடர்ந்தது.

தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விடுமுறை- சனி, ஞாயிறு என்று மனம் கணக்கிட்டது. மரமேறி மாங்காயும் கொய்யாக்காயும் பறித்து திங்கனும், கொடுக்காப்புளி அடித்து திங்கனும் என்று நினைத்துக்கொண்டே ஓடிய ஓட்டத்தில் சீக்கிரம் வீடு வந்து விட்டது.

குடத்தில் வாயை வைத்துச் சாய்த்துக் குடித்தபோதுதான் பார்த்தான், ஊரிலிருந்து ஆயா வந்திருந்தார். உடனே அனைத்தும் மறந்து விட்டது, இப்போது அவனுக்கு ஆயாவுடன் ஊருக்குச் செல்ல வேண்டும்.

“ஆயா, எப்ப வந்திங்க?”

“ஒரு மணி வண்டிக்கு வந்தேன்டி”

“ஆயா, ஊருக்கு நானும் வரேன். எனக்கு இரண்டு நாள் லீவு”

“மாராசனா வாடி”

அம்மா இடையில் புகுந்து, “வாண்டாம், அவன் சொன்ன பேச்சு கேட்க மாட்டான்,” என்றார்.

“நான் கேட்கிறேன் ஆயா, நீ சொல்லு ஆயா”

“இல்லம்மா… பொழுது போயிடும், நீ எப்படிம்மா இவனை இட்டுட்டு தனியா போவ?”

“புள்ள ஆசைப்படுறான், மோட்டையன பொட்டி வண்டி கொண்டு வரச் சொல்லி இருக்கேன், இவனை அனுப்பும்மா”

“ஏய், மாத்து துணி எடுத்துக்க, ஆயாவை தொந்தரவு பண்ணாம பார்த்து இருந்துட்டு வா”

“சரிம்மா”

பையை எடுத்த அவன் ரயில்வே ஸ்டேஷன் வரும்வரை கேட்ட கேள்விக்கு எல்லாம் ஆயா பொறுமையாக பதில் அளித்தார். டிக்கெட் எடுத்து ரயில் ஏறியதும் ஐன்னலை ஒட்டி நின்று கொண்டு, ஓட தொடங்கியதும் காட்சிகளைப் பார்த்து, “ஆயா, இது வெள்ளாறு, இது பழையாறு, இப்ப கிள்ளை வரும் பாரு,” என்றபோது வந்துவிட்டது கிள்ளை.

“யம்மா, அரும்பு, அரும்பு… குண்டுமல்லி, குண்டுமல்லி…”

அவனும் சேர்ந்து ராகம் வைத்ததில் அந்த அக்கா கோபத்துடன் திரும்பியதும் இவன் ஆயா பின்னாடி ஒளிந்து கொண்டான்.

ஆயாவைப் பார்த்தவுடன், அத்தே எங்க, மகவூட்டுக்கு போயிட்டு வரியா?” என்றாள் அந்த அக்கா.

“ஆமாண்டி பவூனு”

“நல்லா இருக்கா உம் புள்ள?”

“இருக்காடி. நீ எங்க இங்க நிக்கற? என்னாச்சுடி, கட்டிக் குடுத்த இடத்தில பிரச்சினையா?”

“இதாரு, உம் பேரனா?”

“ஆமாண்டி. நீ ஊருக்கு வரதுல்ல, வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்”

“குடிகாரன் அத்த, அத ஏன் கேட்கற? குடிச்சுட்டு அடிப்பான், குடிக்கலனா சந்தேகப்பட்டு அடிப்பான். தாலியத் தவிர நிலம் நட்டு ஒன்னுடாம குடிச்சு அழிச்சாட்டியம் பண்ணி இப்ப பத்தாயிரம் பணத்தோட வாடின்னு சொல்றான். அப்பா, அம்மாவுக்கு வயசாயிடுச்சு. ஒரு ஏக்கர் நிலத்தை வித்துதான் என்ன கரையேத்துச்சு, இப்ப இங்கே திரும்ப வந்து சீரழியணுமானுருக்கு”

கண்ணீர் துளிர்த்து இரண்டு கண்ணிலும் வழிகிறது.

“அழாதடி, நான்லாம் இல்லையா?புள்ளகுட்டில விட்டுவிட்டு அவரு போனதும் வானமே இடிஞ்சு தலை மேல விழுந்த மாதிரி இருந்துச்சு. நான் மீண்டு வரல? என்ன, எம்மவன்தான் சொன்ன பேச்சு கேட்க மாட்டான்”

“இல்லத்த… புள்ளைவோ இருந்தா முகத்த பார்த்துட்டு இருந்திடலாம். இங்கே அண்ணிவோ எல்லாம் தப்பா பேசறாளுவோ, உயிர உட்டுடலாம் போலிருக்கு. நான் ஏன் இருக்கணும், நீ சொல்லு?”

எதிர் திசையில் வந்த இரயில் வேகமாய் கடந்து சென்றது. ஆயா அக்காளின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “அவசரப்பட்டுடாதடி காலம் மாறும். வந்து புருஷன் இட்டுப் போவான், பவுனு அவசரப்பட்டுடாதடி” என்று சொன்னாள்.

அக்கா இவனை அழைத்து இரண்டு கன்னத்தையும் வழித்து நெட்டி முறித்து முத்தம் கொடுத்தார்.

இரயில் நின்றதும் அக்கா இறங்கிக் கொண்டார். அது மீண்டும் புறப்பட்டதும் சிறிது தூரம் வரை வந்து கையாட்டினாா், ஒரு கண்ணில் கோடாககண்ணீர் தெரிந்தது.

ஆயா கண்ணிலும் நீர். வேறெங்கோ சென்றிருந்தார். இவன் வெளியே பார்த்தான். வண்டி சிதம்பரம் தாண்டி பழங்கொள்ளிடம் வந்து விட்டது.

“ஆயா, வந்துடுச்சி”

வெளியில் பார்த்து, உடனே பையோடு எழுந்தார். “சும்மாவா சொன்னாங்க, சாண் புள்ளனாலும் ஆண் புள்ளதான். நல்ல வேளை, வண்டி போயிருக்கும், கடவுளே, யப்பா கைய புடிச்சுக்கடி”

இறங்கிப் பார்த்தபோது மொட்டைப்பிள்ளை வண்டி பூட்டிக் கொண்டிருந்தார்.

இருவரும் ஏறியபிறகு பொட்டி வண்டி நகர்ந்தது. ஆயா, மொட்டப்பிள்ளையிடம், “இந்த ஊட்டுகாரன பார்த்தியா? சாயந்திரம் செம்மறி ஆட்டப் புடுச்சுகிட்டு மேற்கே போனான்” என்று கேட்டாள்.

“ஆடா? எப்ப ஆயா வாங்கினிங்க?”

“இவன் ஒருத்தன்… அந்தக் கூத்த அங்க வந்து பாரு”. ஆயா வருத்தத்துடன் சொன்னதைக் கேட்டுக்கொண்டே வெளியே வேடிக்கை பார்த்தான்.

செம்மண் சாலை அது. வண்டி கேட்டை தாண்டியதும் மாடுகள் தீனியை நினைத்து மெல்லோட்டமாக சென்றன. இருபுறமும் வரிசையாக வேலி, இடையில் புளி, மா மரங்கள். ஆடு மாடுகள் மேய்ச்சல் சென்று வழியை அடைத்து கொண்டு வந்தன. வண்டி தேங்கி, பின் சென்றது. அடிவானில் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது, அதன் ஒளி அவன் மேல் விட்டுவிட்டுப் பட்டது.

அவன் முன் நகர்ந்து மொட்டைப்பிள்ளையிடம், “மாமா, செம்மறி ஆடு முட்டுமா?” என்று கேட்டான்.

“ஏலே முட்டிடும். படிக்கிற பையன் நீ கிட்ட கிட்ட போயிடாத”

அவனுக்கு வருத்தமாகிவிட்டது.

வண்டி கிழனையை விட்டு இறங்கியது. இருபுறமும் சொய்சா மரங்களில் கீச் கீச் என்று பறவைகள் சத்தமிட்டதைக் கேட்டு அதிசயத்தான்.

சிறிது நேரம்தான், அவன் தளர்ந்து தூங்க ஆரம்பித்ததும், “எப்பா போழுது போன நேரம் தூங்காதடி… ஆயா கதை சொல்றேன்,” என்று எழுப்பிவிட்டாள் ஆயா.

“ஏ மொட்டைப்பிள்ளை, வண்டிய எட்டி ஓட்டு. போயி விளக்கு வைக்கணும் பாரு”

“ஆயா, கத?”

“சொல்றண்டி.

“…ஒரு ஊர்ல ஒரு ஆம்படையான் பெண்டாட்டி இருந்தாங்க, அவங்களுக்கு இரண்டு பெண் ஒரு ஆண் குழந்தைகள் இருந்துச்சு. பெரிய பொண்ணு கட்டிக் குடுத்து ஒரு பேரன் பிறந்த பிறகு அவரு குடிச்சுக் குடிச்சு உடம்பு சரியில்லாமப் போய் செத்து போயிட்டாரு. அப்புறம் அந்தம்மா இன்னொரு பொண்ணயும் எப்படியோ கட்டிக்குடுத்துட்டு படிக்காத பையன வச்சிக்கிட்டு கஷ்டப்படுது”

“ஏன் ஆயா அழுவுற?”

“ஏலே, கம்முனு வா,” என்று அதட்டினார் மொட்டைப்பிள்ளை.

“பூவோட சேர்ந்தா மணக்கும், இது பன்னியோடல்ல சுத்துது,” என்றார் ஆயா.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

வீட்டின் வாசல் கேட்டில் ஒரு செம்மறியாடு கட்டியிருந்தது.

“மாமா…” என்று அவன் ஓடிப்போய் பார்த்தபோது அதற்கு புல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி புல்லை உதறித் திங்கும்போதும் அது தலை ஆட்டும்போதும் ஒலியெழுப்பியது.

“மாமா, முட்டுமா?”

:கிட்ட கிட்ட போயிடாத, சன்டை பழக்கி வச்சிருக்கேன்,” என்று மண்வெட்டியின் அடிபாகத்தை காண்பித்தார் மாமா. ஆடு பாய்ந்து வந்து முட்டியது. அவன் பயந்ததைப் பார்த்துச் சிரித்தார் அவர்.

“குடுத்தனக்காரன் செய்யற வேலையா இது?” என்று சத்தம் போட்ட ஆயா, மாமா முறைத்ததும் உள்ளே சென்று விட்டார்.

“மாமா, ஆட்டுக்கு பேர் வச்சிட்டியா?”

உள்ளிருந்து, “விளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம்தான் கொறச்ச,” என்றார் ஆயா.

மாமா, “யேய், பேரு முத்து. முத்து…”, என்றார் கிசுகிசுப்பாக.

ஆட்டைப் பார்த்தான். கருப்பில் மரை கலரில் பெரிய கொம்புடன் இருந்தது.

“முத்து,” என்று பில் அள்ளிக் கொடுத்தபோது அதைத் தின்று விட்டு முட்ட வந்தது அவனை. “மாமா…”

“ஏய், பழகற வரைக்கும் அப்படிதான் இருக்கும். கிட்டப் போகாத, எட்ட இருந்து குடு”

ஆயா இருவரையும் சாப்பிட கூப்பிட்டார்கள்.

சாப்பிட்டுவிட்டுப் படுக்கும்போது மாமா அவனிடம், :நாளைக்கு நம்ம முத்துவ இன்னோரு ஆட்டுக்கூட சண்டைக்கு உடப் போறேன். நீனும் வா,” என்றார்.

“ஏய், உன் போக்கிரித்தனம்லாம் அவனுக்கு சொல்லி குடுக்காத,” என்றார் ஆயா. அவர் வருத்தமா இருப்பது தெரிந்தது. மாமா திரும்பிப் படுத்து கொண்டார். இவனும் தூங்கிவிட்டான்.

மொட்டைப்பிள்ளை மாமா கழுத்தில் மாலையுடன் கையில் தீச்சட்டி ஏந்தி ஆடிக்கொண்டிருக்கிறார். அருகில் பூசாரி மிகப் பெரிய கொடுவாள் கத்தியுடன் நின்றாடுகிறார். கத்தியில் பட்டை பூசி பொட்டு வைத்து கூம்பில் பூச்சூட்டியிருந்தது. மாமா ஆட்டைப் பிடித்திருக்கிறார். ஆடு பரிதாபமாக இவனைப் பார்க்கிறது. ஆட்டை வெட்டப் போகிறார்கள் என்று உணர்ந்து அலறி எழுந்து விட்டான்.

மாமாவைத் தேடிப் போனால், ஆடு புல்லைத் தின்று கொண்டிருக்கிறது. மாமா அதைத் தடவி கொடுத்துக் கொண்டு நின்றார்.

இவனை பார்த்து, “போயி பல்ல விளக்கு, சாப்பிடு, நாம வெளியே போகணும்” என்கிறார்.

அவன் தட்டை எடுத்து வைத்ததும், இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் இட்டுக் கொடுக்கிறார். அது ஏலக்காய் போட்டு அமிர்தமாக இருந்தது.

“ஆயா எங்க மாமா?”

“ஏதோ செய்தி வந்து முட்லூர் போயிருக்கு. உன்னைத் தண்ணிக்கு போகாம வெள்ளாடச் சொல்லியிருக்கு. சாப்பிடு, கொல்லைக்கு போவோம்.”

“சரி மாமா”

மாமா முத்தை அவுத்துப் பிடித்துக்கொண்டு முன்னாள் நடந்தார். இவன் அவர் பின்னால் நடந்தான்.

முத்தின் விதைமணி தொடையில் உராய்ந்ததால் அது காலை அகட்டிக் கொண்டு பெண்கள் மாதிரி நடந்தது. இவன் சிரித்து விட்டான்.

“என்னடா சிரிக்கற?”

“இல்ல மாமா, ஆடு பொம்பளை மாதிரி நடக்குது”

“வக்கால…” என்று அடிக்க வந்தார் மாமா. இவன் அமைதியாகி விட்டான்.

இருபுறமும் சோளம் விளைந்து ஒடிக்கும் பதத்தில் இருந்தது. மாமாவிடம் கேட்க பயம், அவன் எதுவும் பேசாமல் நடந்தான். மாந்தோப்பு வந்ததும், “ஏய் சோளம் சுடுமா?”| என்று கேட்டார் மாமா.

“சரி, மாமா. ஆட்டுச் சன்டை எப்ப? நம்ம முத்து செய்ச்சுடுமா?”

“குட்டியா வாங்கி பழக்கி வச்சிருக்கேன். வெறும் புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, புல்லுனு கொடுத்து வளத்திருக்கேன். சொன்னதைச் செய்யும். சாயந்திரம்தான் போட்டி”

ஆட்டை அவிழ்த்து தெரித்து விட்டுவிட்டு இளம் சோளக் கதிராக ஒடித்து வந்து தீ முட்டி இட்டார். பதமாக வாட்டி அவனிடம் இரண்டு கொடுத்து விட்டு தீயில் மர்ளிக் கிழங்குகளைச் சொருகினார்.

அருகில் குருவிகள் விரட்டும் பரண் பந்தல் இருந்தது.

“யேய், இப்ப பாக்கிரியா…”

“உய், உய், உய்ய்ய்ய்ய்ய்…” என்று விசிலடித்ததும் முத்து தாவி பறந்து ஒடி வந்தது. அவன் பயந்து பரன் மேல் ஏறிவிட்டான். முத்து சுற்றி வந்து மாமா மேல் உரசிவிட்டு தீயை ஒரே தாவலாக தாவிச் சென்றது. மாமா கிழங்கும் சோளக் கதிருடனும் மேலேறி வந்தார்.

“என்னடா பயந்திட்டியா? நம்ம முத்து எப்படி பாத்தியா?”

“மாமா, அந்த ஆட்டுப் பேரு என்ன?”

“குட்டி மணிடா”

“பெருசா இருக்குமா?”

“நம்ம முத்து பெருசுதான், ஆனால் குட்டி மணி கொஞ்சம் சூட்டிகைடா”

“அப்ப முத்து தோத்துடும்”

மாமா, “யாய்,” என்று கையை ஓங்கியதும் அமைதியாகிவிட்டான். மீண்டும் விசிலடித்து முத்துவைக் கூப்பிட்டார். முத்து தாவி ஒடி வந்து பரணைச் சுற்றியது.

மாமா கீழிறங்கிப் போய் விட்டார். இவன் அருகில் இருந்த டின்னில் சிறிது மோளமடித்தான், குருவி எதுவும் இல்லை. உற்சாகம் இழந்து கீழிறங்கி மாமாவுடன் சேர்ந்து கொண்டான்.

“ஏய், அடிக்க மாட்டன் வா குளிக்க போவம்”

“எங்க போயி மாமா?”

“நம்ம இன்ஐின்லதான்”

மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வந்து இன்ஐினில் மாட்டிச் சுற்றினார். அது அசக், அசக், என்று தொடங்கியதும் சாவியை அவசரப்பட்டு எடுத்து விட்டார். சுற்று பத்தாமல் அச்சக் என்று நின்று விட்டது. மீண்டும் சாவியை மாட்டி இம்முறை கைகளில் மண்ணைத் தொட்டு கபடி வீரன் போல் சுற்றினார். இஞ்சின் அசக் அசக் அசக் என்று ஸ்டார்ட் ஆகிவிட்டது, சாவியை எடுக்க முடியவில்லை.

“ஏலேய், ஓடிடு. சாவி மாட்டிக்கிச்சு”

அவன் ஓடத்தொடங்கியதும் எதிர்ப்புற மரத்தில் இருந்த பாம்பு தாவியது. இவன் பயந்து மிரண்டு வந்த வழியே திரும்பவும் சாவி முன்னாள் விழுந்தது. பதறி நின்றவனை அடித்து விட்டார் மாமா. அழுது கொண்டே, “மாமா, அங்கே பாரு பாம்பு,” என்றான்.

“ஏலேய் நல்லதுடே”

அழுகையை நிறுத்தி, “அடிப்பமா?” என்று கேட்டான்.

“ஏய், அத அடிக்க முடியாது, போட்டுடும்”

“வா, குளிச்சு விட்டு ஆட்ட சண்டைக்கு விட இட்டுட்டு போவம்”

அவன் பார்க்கும்போதே நல்லது திரும்பி பூவரசு மரத்தில் ஏறி பொந்தில் இறங்கியதும், “மாமா பாம்பு அந்த ஓட்டையிலருக்கு, நான் பார்த்துட்டன்”, என்றான்.

“யேய், வாடா, வந்து குளிடா,” என்றார் மாமா.

அவன் மரத்தைப் பார்த்துக் கொண்டே குளித்தான். இன்ஜினை நிறுத்திவிட்டு அங்கிருந்து செல்லும்வரை தன் பார்வையை விலக்கவில்லை.

“பசிக்குது மாமா…”

தென்னையேறி இளநீர் போட்டு இன்ஐின் கொட்டாயில் இருந்து சூரிக்கத்தி எடுத்து சீவிக் கொடுத்தார். குடிக்கத் தெரியாமல் மேலெல்லாம் ஊற்றிக் கொண்டு புரையேரியது இவனுக்கு. அடிக்க கையை ஒங்கியவர் விட்டு விட்டார், இவனும் மௌனமாகி விட்டான். குளித்து தலை துவட்டியதால் முடி படிந்திருந்தது.

“ஏய், தேங்காய தின்னு”

“நீ தின்னு, எனக்கு வாணாம்”

முறைத்து விட்டு மாமா விசிலடித்ததும் மேய்ந்து கொண்டிருந்த முத்து மான் போல துள்ளி ஒடிவந்தது. உற்சாகமாகி, “மாமா, மாமா, நான் தரேன்,” என்றான். முத்து ஆவலோடு கையில் இருந்த தேங்காயைத்
தின்றது.

“சரி வா, போவும்”

முன்னும் பின்னுமாக முத்துவுடன் நடந்து மேடு இறங்கியதும் தூரத்தில் ஆற்றுக் கரம்பில் ஆடுகள் மேய்வது தெரிந்தது நெருங்கியதும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பாலேசன் வந்தார்.

“ஏய் பாலேசா, மணிய பிரிச்சு கொண்டு வா. சண்டை உடணும்”

” வாணாண்ணன், ஓ ஆடு தோத்துப்புடுச்சுனா நீ என்ன அடிப்ப, நான் வரல”

“ஏலே, இப்ப பிரிக்க போறியா, உத வாங்கப் போறியா?” சூரிக்கத்தியை எடுத்தார் மாமா. பாலேசன் அவரது ஆட்டைப் பிரிக்க சென்றதும் மாமா முத்தின் தலைக் கயிறு, மணிக்கயிறு எல்லாம் அவிழ்த்தார், முத்து முண்டம் போல் தெரிந்தது. தட்டித் தட்டிக் கொடுத்தார். முத்து, தன் தலையை ஆட்டிக் கொண்டு, மண்ணை முன் காலால் கிளறி ரோமாஞ்சனம் கொண்டு சிறிது மமதையுடன் நின்றது. அவன் மனதில் முத்து ஐெயிக்கனும் என்று வேண்டிக் கொண்டு திரும்பியபோது குட்டி மணிய்ஹை பெட்டைகளின் பின்னிருந்து பாலேசன் பிரித்துக் கொண்டு வந்தார்.

பத்தடி தூரத்தில் ஓன்றை ஓன்றை பார்க்கும்படி நிறுத்தி, பாலேசன் “உம்”, என்றதும் மிக அலட்சியமாக குட்டி மணி முத்தை எதிர்கொண்டது. முதலில் ஓரே சீராக இரண்டும் முட்டிக் கொண்டன. சிறிது சிறிதாக உச்சபச்ச வேகத்தை அடைந்தது சண்டை. தொடர்ச்சியாக பின்னகர்ந்து முன்னேறி இரு ஆடுகளும் முட்டிக் கொண்டன. முத்து சோர்ந்து போகாமல் சண்டை போட்டது, இறுதியில் குட்டிமணி சோர்ந்து ஓவ்வோரு அடியாக பின்னகர்ந்து மந்தையினுள் பாய்ந்தோடி மறைந்தது. மாமாவும் அவனும், “ஏய்…” என்று கத்திக் கூப்பாடு போட்டனர். பாலேசனைப் பார்க்க பாவமாக இருந்தது அவனுக்கு.

முத்து பெருமிதத்துடன் நடந்து அங்கிருந்த பெட்டையை மோப்பம் பிடித்து மூக்கைச் சுழித்து தலையை உயர்த்திய தருணத்தில் எங்கிருந்தோ குட்டி மணி பாய்ந்து வந்து முத்துவின் பின்புறம் சரியாக விதைமணியில் குத்தித் தூக்கியது.

“மே…” என்ற அதன் அலறலில் அதிர்ந்து அவனும் மாமாவும் ஓடிச் சென்று முத்தைத் தூக்கினர். முத்தால் நிற்க முடியவில்லை. கால் நடுங்கி சிறுநீர் கழித்தது. பின் கிழே ஒருக்களித்து, கத்திக்கொண்டு விழுந்தது. மாமா ஆவேசம் கொண்டு குட்டிமணியை வெட்டப் பாய்ந்தார்.

“மாமா, வாணாம்” என கத்தினான் அவன். பாலேசனும், “வாயில்லா ஐீவன், வாணாம்ணே” என்று கும்பிட்டதும் கத்தியை விட்டெறிந்துந்து விட்டு மாமா முத்தை தூக்கப் பார்த்தார், அவரால் முடியவில்லை. அவனும் சேர்ந்து தூக்கிப் பார்த்ததில் முத்து அசையவில்லை.

மாமா மவுனமாக அழுதுகொண்டு நின்றார். இவனுக்கு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை. மாமா அவனிடம், “நம்ம வண்டிய கொண்டு வரன். ஏய், பார்த்துக்க, ஆயாகிட்ட மூச்சு உடக்கூடாது”, என்று வாயில் விரலை வைத்து காண்பித்தார் .

முத்தைப் பார்த்தான். பாவமாக இருந்தது கண்ணில் நீர் துளித்துளியாக சொட்டியது. இவன் நெற்றியைத் தடவிவிட்டான். அவன் கையை அது நக்கிய போது உடல் சிலிர்த்தான்.

வண்டி நெருங்கி வந்தது. அவன் தன் ஆயாவைத் தேடினான். அவர் அங்கில்லை.

“என்னடா பண்ணீங்க?” என்றார் மொட்டைப்பிள்ளை.

இவன் ஒன்றும் சொல்லவில்லை. ஆடு கால் மாட்டி விழுந்துவிட்டதாக மாமாதான் சொன்னார். அவர் நம்பவில்லை, “ஏன்டா இது பாவத்த எடுத்துக் கொட்டினிங்க” என்று வருத்தப்பட்டார்.

முத்துவால் எழ முடியவில்லை. மொட்டைப்பிள்ளை கை கொடுத்து தூக்கி முத்துவைத் தூக்கினார். ஆனால் அவரால் முடியவில்லை, பிறகு மாமாவும் சேர்ந்து தூக்கி வண்டியில் ஏற்றினார்கள். வலியில் அது கத்தியது. மாமா வண்டியை நேராக கிழக்கே வைத்தியரிடம் விடச் சொல்லிவிட்டு முத்தைப் பார்த்தார். அவனால் இருவரையும் பார்க்க முடியவில்லை, பார்வையை வெளியில் திருப்பினான்.

வண்டி மனம் போல் வேகாமாய் ஓடி வைத்தியர் வீட்டில் நின்றது. வைத்தியர் தன் வேட்டியை மடித்துக் கட்டி அதை நிறுத்த பச்சை பெல்ட் கட்டி இருந்தார். நல்ல உயரம். கருப்பு. ஒடிசலான உடம்புக்கு இடுப்பில் இடது கையால் முட்டுக் கொடுத்திருந்தார். வலது கையில் சுருட்டு புகைந்த நெடி சுழன்று அடித்தது.

வைத்தியரிடம் மாமா நடந்ததைச் சொன்னார்.

“ஏலேய், அடுத்தவன் பெண்டாட்டிய தொட்டா சும்மா விடுவானா?” என்றார் வைத்தியர் சிரித்துக் கொண்டே. பின்னர், அவர் முத்துவை எழுப்பி தடவிப் பார்த்தார், வலியில் “மே…”, எனக் கத்தியது. மருந்து கொடுத்தார், அதன் நாக்கை இழுத்து, உள்ளுக்கு.

“ஏலேய், வர்ம அடி பட்டிருக்கு. வித்துடு,” என்றார் மாமாவிடம். மாமா அழுதார், அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

“சரி, போயி சோறு வடிச்ச தண்ணியில மஞ்சள் பொடி போட்டு சுடவச்சு தடவி விடுங்க. ரத்தக்கட்டு கரையும், காலையிலே வரன்,” என்றார் வைத்தியர்.

இரவாகிவிட்டது. முத்தை இறக்கும்போது ஆயா, “இது என்னடா கொடுமை! அய்யோ என்னடாச்சு,” என்று அலறினார்.

நடந்த விஷயத்தை மொட்டைப்பிள்ளை மாமா விரிவாகச் சொன்னார். ஆயா சத்தமில்லாமல் அழுதார், அவர் தலைக்கு குளித்திருந்தார். அவனைப் பார்த்து, “ஏலேய், நேற்று இரயிலடில பார்த்தம பவுனு… அவ மருந்தக் குடிச்சுட்டு செத்துப் போயிட்டாடா…” என்று அழுதுகொண்டே சொன்னார். அப்புறம், “இன்னும் நான் என்னவெல்லாம் பாக்கணுமோ,” என்று மாமாவைப் பார்த்துச் சொன்னார். மாமா தலையைத் திருப்பிக் கொண்டார். ஆயாவின் முகம் ரொம்ப சோகமாக இருந்தது, அவன் கேவிக் கேவி ஒலமிட்டு அழ ஆரம்பித்தான். ஆயா, மாமா, மொட்டைப்பிள்ளை யார் சொல்லியும் அவன் அழுகை அடங்கவில்லை.

ஆயா மோட்டப்பிள்ளையிடம், “காலை முதவண்டியில் இவனை கொண்டு விட்டு வா”, என்றார். அவனுக்கு அப்பொதே அம்மாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. பிறகு மாமாவையும் முத்துவையும் பார்த்துச் சமாதானமானான். ஆயா இருவரையும் சாப்பிட கூப்பிட்டார்கள். மாமா முதலில் மறுத்து, பிறகு இவன் வற்புறுத்தியதும் சாப்பிட வந்தார்.

முத்து தண்ணீர், தீனி எடுக்கவில்லை. அசையும் போடவில்லை. “யே மொட்டைப்பிள்ளை, கசாப்புக்காரனைக் கூப்பிட்டு வா,” என்று ஆயா சொன்னார்.

சிறிது நேரத்தில் கசாப்புக்காரன் ஒரு ஆளோடு வந்தார். மாமா குடுகுடு என்று ஓடி வீட்டிலிருந்து சுலுக்கியோடு வெளிவந்து, “ஏலேய், எவனாவது ஆட்டத் தொட்டிங்க, குடல சரிச்சுடுவன்,” என்று கத்தினார்.

முத்துவின் சன்னமான முனகலைத் தவிர வேறு சப்தமில்லை. சிறிது நேரம் பொருத்து கசாப்புக்காரர், “தம்பி பொழைக்காதுப்பா,” என்றார். மாமா கீழே குனிந்து தேடினார். திண்ணையில்யில் தராசுப் படிகல் இருந்தது. அதை எடுத்து எறிந்ததும், “நான் போறன்டா சாமீ, நீ இஷ்டப்படி செய்டா யப்பா…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

மாமா ஆட்டை பார்த்து கொண்டே படுத்தார். காலை எழுந்தபோது முத்து செத்து விறைத்திருந்தது.மாமா சன்னமாக அழுதார். இவனை பார்த்ததும் கேவி அழுதார். ஆயா, “இப்படி கொள்ளை போவத்தான் இப்படி மாங்கு மாங்குன்னு வளந்துச்சோ… அழுவாதடா, வேற வாங்கி தரன்,” என்றார்.

அதற்குள் கேள்விபட்டு ஊர் கூடி தலைக்கு தல பேச வந்துவிட்டார்கள். ஒரு தாத்தா, “நல்ல இளம்கிடா. வெட்டி ஆளுக்கோரு கூறு போட்டா ஊரே கல அடங்கும், என்றார். தாத்தா தலை முழுக்க நரைத்து வயிறு ஒட்டி கறிசோறு கண்ணால் கண்டு பலவருசம் ஆகி இருக்கும் போல நாக்கை சப்புகொட்டிக் கொண்டிருந்தார். கூட இருந்தவர்களும் அவருடன்
சேர்ந்து ஆளாளுக்குப் பேச ஆரம்பித்ததும் மாமா, “முத்தை தொட்டிங்க உங்கள வெட்டி கறி போட்டுடுவன்,” என்று கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீச ஆரம்பித்து விட்டார். “அப்படியே கிழக்கே போங்க பொணம் எரியும். ஆளுக்கு ஒரு கையா பிச்சு தின்னுங்க,” என்றார் மாமா.

“முரட்டுப் பய”, என்று திட்டிக்கொண்டே எல்லாரும் கலைந்து சென்றனர்.

மாமா எதுவும் பேசவில்லை. எல்லாருக்கும் அவரிடம் பேச பயம்.

மாமா எழுந்து மண்வெட்டி எடுத்து குப்பை மேடு ஒரமாக குழி வெட்ட ஆரம்பித்தார். புரிந்து கொண்டு மொட்டைப்பிள்ளை மண்வெட்டியை வாங்கி பள்ளம் வெட்ட ஆரம்பித்தார்.

ஆயா வந்து பார்த்து, “பள்ளம் இடுப்ப தாண்டி ஆழம் இருக்கட்டும், இல்லனா நாய் நோண்டிடும்,” என்று சொன்னார்

பள்ளம் வெட்டிவிட்டு மொட்டைப்பிள்ளையும் மாமாவும் இருவருமாக சேர்ந்து முத்துவைத் தூக்கி வந்தனர்.

மாமா அவனிடம், “ஏய் ஓடி சிவப்பு எடுத்து வா,” என்றார். அவன் சிவப்பு கொண்டு வந்தபோது அவர் பூவுடன் நின்றார். சிவப்பும் செம்பருத்தி பூவும் வைத்து குழியில் இறக்கினர். ஆயா அழுது கொண்டிருந்தார். மாமா மண் தள்ளினார். பாதி குழியில் இருக்கும்போது பாலேசன் ஒரு செம்மறிக் குட்டியுடன் வந்து, “அண்ண, முதலாளி கேள்விப்பட்டு இந்த குட்டிய
குடுத்துட்டு வரச் சொன்னாங்க,” என்றார்.

“ஏய் நீ எடுத்துட்டு போ, எனக்கு வாணாம்,” என்றார் மாமா. ஆயா, “இருக்கட்டுமப்பா, என்று சொன்னதற்கு, மாமா முறைத்ததும் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல வில்லை. பாலேசன் நின்று பார்த்து விட்டு குட்டியுடன் சென்று விட்டார்.

மாமா மொட்டைப்பிள்ளையிடம் மம்மட்டியை வாங்கி அடிபம்பு ஓரம் சென்றார். அங்கு புதைத்து இருந்ததில் முன்று தென்னை நெற்றுக்கள் முளை விட்டிருந்தது. அதில் துடியாய் இருந்ததை நோண்டி வந்து மொட்டைப்பிள்ளையிடம் கொடுத்து, குழியில் வைக்கச் சொன்னார். அதன்பின், சுற்றி மூங்கில் படல் வைத்து வேலி அடைத்து சென்று வர வழியெல்லாம் வைத்தார். பிறகு அடிபம்பிலிருந்து தண்ணீர் வர வாய்க்கால் அமைத்தார்.

அவன், “மாமா இனிமேல் முத்துவ பார்க்கவே முடியாது இல்ல,” என்று கேட்டான்.

ஆயா சத்தமாக, “அங்க தோரணம் கட்டுனது போதும், வந்து சாப்பிட்டுட்டு ஊருக்கு கிளம்பு. இந்த ஊட்டுக்காரனையும் இட்டுட்டு வா,” என்றார்.

“மாமா, ஆயா கூப்புடுறாங்க,” என்று மாமாவிடம் போய் சொன்னான்.

“யேய் இங்கே வா, இது பேர் என்ன தெரியுதா? என்று கேட்டார் மாமா.

“தென்னம்பிள்ள, மாமா”, என்றான் அவன்.

“இல்லடா, இது முத்துப்புள்ள, முத்துப்புள்ள,” என்றார் அவர் கிசுகிசுப்பாக.

பாப்பா சொல்லுச்சு

தி வேல்முருகன்

காலையிலேயே சின்னவன் ஆரம்பிச்சுட்டான். “பீஸ் கட்டாதவங்களை எல்லாம் மிஸ் எழுந்து நிக்கச் சொல்லிட்டாங்க. நான் போ மாட்டேன் இன்னைக்கு”

ஒரு மாசம் முடிஞ்சு தேதி 13 ஆயிடுச்சு, இந்த கஷ்டமெல்லாம் யாருக்கு தெரியப் போவுது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கணுமில்ல, எந்த பூசாரி டேபிளில் கிடக்கோ? மகராசன் மனசு வச்சா இன்னைக்கி கிடைக்கும்.

“ஸ்கூலுக்கு போ நான் மதியம் வந்து கட்டிடறன். தங்கமில்ல, போப்பா”

“கண்டிப்பா மதியம் வரணும்”

“கண்டிப்பா வந்திடறேன்”

யாருகிட்டயும் கேட்டு வாங்கி கட்டலாம்னா ஒரு நிலை இல்லை எப்ப கிடைக்கும்னு. கேக்காமலே உதவிய நண்பருக்கு வேற அவர் கேட்டப்போ தர முடியலை. அவர் என்னை எதுவும் பேசவே விடலை, “கதைலாம் சொல்லாத காசு உடனே வேணும்,” என்றதும் ரொம்ப சங்கடமா போயிடுச்சு. சரி, அவரையும் இப்ப கேக்க முடியாது, சம்பளம் போடலன்னா மதியம் ஸ்கூல் போயி சொல்லிட்டு வந்துடணும்னு நினைச்சுக்கிட்டு வேலைக்கு கிளம்பினேன்.

சம்பளம் வாங்கினா மட்டும் என்ன காற்றுல பறக்கற உமி கதைதான், வாங்கறதும் தெரியாது பறக்கறதும் தெரியாது. முதல்ல 1ந்தேதி சம்பளம் போடற கம்பேனியா பார்த்து வேலை தேடனும். சம்பளம் போடல வேலை பார்க்க முடியாதுனு சொல்ல முடியாது இல்லையா. இரண்டு மாடு கட்டற இடத்துல ஒரே மாட்ட கட்டி இழுக்கறானுவ. இத உட்டாலும் வழியில்ல, பார்ப்போம் ஏதாவது வழி பிறக்கும்.

மணி 11 ஆச்சு, சரி டீ குடிக்கலாம்னு வெளியே போனா, நண்பர் வேகமாக என்னைப் பாத்து வந்தார். எங்க காசு கேப்பாரோன்னு பயந்து பம்மினேன்.

“சார், சம்பளம் போட்டுட்டானுவ சார்”

காசும் கேக்கலை, பார்ட்டியும் கேக்கல. கதை இதோடு முடிஞ்சிருந்தா நல்லாதான் இருக்கும்.

1 மணி நேரம் பர்மிசனுக்கு மேனேஜரிடம் சொல்லிட்டு பேங்க் போய் பணம் எடுத்து வரும்போதுதான் விதி சிரித்தது.

நான் பணத்தை வேகமாக பையில் வைக்கிறேன், “மாப்பிள்ளை,”ன்னு வேகமாக வந்தார் மாமா. வண்டியைத் தள்ளும்போது, “நானும் வரேன்”.

“பசங்களுக்கு பீஸ் கட்டணும் முட்லூர் போறேன்”

“இல்ல மாப்பிள்ளை தீத்தாம்பாளையம் போயி ஒருத்தர பார்க்கனும். நீங்க எடுங்க வண்டிய, அப்படியே இறங்கி அவரைப் பாத்திடறேன்”

பணம் கேட்கவில்லை.

“ஏம்மாப்பிள்ளை, சின்னவன் என்ன படிக்கறான்?”

“ரெண்டாவது படிக்கறான்”

“புது பணக்காரனுவ எல்லாம் பெரிய ஸ்கூலா பார்த்து படிக்க வைக்கறானுவ. நீதான் என்ன பண்ணுவ பாவம், வெளிநாடுலாம் போன. கடைசியா பவர் பிளாண்ட்ல வந்து கஷ்டப்படணும்னு இருக்கு உன் விதி”

“அப்படில்லாம் இல்லை மாமா நல்லாதான் போவுது.”

“நீ ஒன்னு மாப்பிள்ளை காலைலேருந்துபச்சை தண்ணி பள்ளுல படாம வண்டி மாடுவ பட்டினி கிடக்குதுவன்னு பணத்துக்கு வந்து நிக்கறன், அந்த தீத்தாம்பாளையத்து வக்காலஓழி என்ன ஏமாத்திப்புட்டான் நீ வண்டிய விடு நான் அவன பாத்துக்கறேன்”

நான் எதுவும் பேசலை.

|மாடுவல பார்தா பாவமா இருக்கு. போரோட தின்ன மாட்டுக்கு புடிங்கிப்போட்டா கட்டுபடியாவுமா, வாணான்டி வானான்டின்னு சொன்னா கேக்கறாளா தேவடியாச் செருக்கீ, இப்ப நான்தான் கஷ்டப்படறன். மாடுவலுக்கு பில்லுவ போட்டா காபந்து பண்ண முடியும், போக்கத்த செருக்கீ”

நான் எதுவும் பேசலை.

“பையன் ரெண்டு நாள்ல சிங்கப்பூர் போறான், சின்னவன் அங்கதான இருக்கான், ஆனா நம்ம யோக்கிதை அப்படி- எவனும் ஊம்புனாக்கூட காசு தர மாட்டான்”

நான் இந்த இடத்தில் பலார மாவு போல் பாகாய் உருகி கேட்டால் கொடுக்கும் மனநிலைக்கு வந்து விட்டேன்.

“ஸ்கூல் வந்துட்டது மாமா, இருங்க பணம் கட்டிட்டு வந்துடறன்”.

வெளியே வந்ததும், “மாப்பிள்ளை, கைல எவ்வளவு இருக்கும்?”

“மாமா, இத வச்சுதான் இந்த மாசம் ஓட்டனும்”

“அதிகமில்லை மாப்பிள்ளை ஐய்யாயிரம்தான், பெரியவன் போன உடனே அனுப்பிடுவான். நான் புதன்கிழமை தரன், நீ குடு. அட குடு மாப்பிள்ளை, நான் தரன் நீ கேட்கவே வாண்டாம்”

“இல்லை மாமா நீ தீத்தாம்பாளையம் போறேன்னு சொன்ன?”

“அவன் திருட்டுப்பய மாப்பிள்ளை, அவன் கிடைக்க மாட்டான் நீ குடு”

“இல்லை மாமா, வீட்ல பிரச்சினையாயிடும்”

“யாரு பாப்பாவா? தங்கமான புள்ளப்பா அது. ஒரு வம்புதும்புக்கும் போவாது அது வேல உண்டு வித்து உண்டுன்னு இருக்கும். உன் சித்தப்பா வாங்கிச்சுன்னு சொல்லு, ஒன்னும் சொல்லாது”

வந்து சொன்னன் பாப்பாகிட்ட.

பாப்பா சொல்லுச்சு, “அதான் குடுத்துட்டல, ஏன் எழவு விழுந்த மாதிரி மூஞ்ச வச்சிகிட்டு உக்காந்து இருக்க, உன்ன எனக்கு தெரியாது? பசப்புனான்னு குடுத்துட்டு இருக்கியே, அவன்கிட்ட வாங்க முடியுமா? கட்டைல போறவன் குடுக்கும்போது குடுக்கட்டும், வா வந்து ஒரு வாய் சாப்பிடு”

எனக்குன்னு ஏன்தான் இப்படி வந்து வாச்சுதோ.