எஸ். சுரேஷ்

ருத்ரதாரி

எஸ். சுரேஷ் 

Image credit: craiyon.com

அவன் கையை மேலேயும் கீழேயும் ஆட்டி காரை நிறுத்துமாறு சைகை செய்தான். கார் நின்றது. பிறகு வர்ஷா உட்கார்ந்திருந்த பக்கம் வந்து, “என் பெயர் தரம். டூரிஸ்ட் கைடு. உங்களை ருத்ரதாரி அருவிக்கு அழைத்துச் செல்கிறேன்,” என்றான்.

வர்ஷா டிரைவரை பார்த்து, “கைட் வேண்டுமா?” என்று கேட்டாள். “அருவி காட்டுக்குள் இருக்கிறது மேடம். கைடு இருந்தால் நல்லது,” என்றான்.

“எவ்வளவு?” என்று வர்ஷா கேட்டாள்

“ஐநூறு ரூபாய் மேடம்”

“நானூறு கொடுக்கறேன்”

தரம் தலையை சொறிந்தான். “நானூறுக்கு  ஒப்புக்கொள்,” என்றான் டிரைவர்.

“சரி”.

அவர்கள் வந்து சேர்ந்த இடத்தில் ஒரு குடிசை, அதில் ஒரு டீக்கடை இருந்தது. நாலாபுரமும் ஹிமாலய மலைத்தொடர் அவர்களை சூழ்ந்திருந்தது. வானத்தை கருமேகங்கள் மூடியிருந்தன. சூரிய ஒளியில் பச்சை பசேல் என்று இருந்த மலைகள் இப்பொழுது கரும்பச்சை நிறமாக தோற்றமளித்தன. சற்று தொலைவில் ஓடிக்கொண்டிருந்த கோமதி நதியின் சலசலப்பு கேட்டது. இருள் சூழ்ந்திருந்த அந்த பிரதேசம் ஒரு கனவு உலகு போல் தோற்றமளித்தது. உடலை ஊடுருவி பனிக்காற்று வீசியது.

வர்ஷா தன் ஜாக்கெட்டின் ஜிப்பை கழுத்துவரை இழுத்தாள். உள்ளே ஸ்வெட்டர் போட்டுக் கொண்டிருந்தாள். இருந்தாலும் குளிருக்கு அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது. சில்லென்று இருந்த கைகளால் தன் முகத்தை தடவிக் கொடுத்தாள். குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது. கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக் கொண்டு மேகங்களை பார்த்தாள். ஒரு முறை எல்லா மலைகளையும் நோட்டமிட்டாள். இது போன்ற அழகு ஹிமாலயா பகுதியில்தான் கிடைக்கும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, கருமேகங்களை பார்த்தபடி, “மழை வரும் போல் இருக்கிறதே,” என்றாள்.

“இல்லை மேடம். மழை வராது. இரவு பனி பெய்யலாம் ஆனால் இப்பொழுது மழை வராது,” என்றான்.

“அவ்வளவு உறுதியாக உன்னால் எப்படி சொல்ல முடியும்?”

அவன் சிரித்துக் கொண்டே, “நான் பல ஆண்டுகளாக இங்கு கைடாக இருக்கிறேன். மேகங்களைப் பார்த்தால் மழை வருமா வராதா என்பது தெரிந்து விடும்”

இருவரும் நடக்க ஆரம்பித்தனர். முதலில் பாதை மேலே ஏறியது. “ரொம்ப அப்ஹில்லா இருக்குமா?” என்று வர்ஷா கேட்க, “கடைசியில் கொஞ்சம் தூரம் மேலே ஏற வேண்டும். இப்போது கிட்டதட்ட சமதரைதான்” என்றான் தரம்.

மேலே ஏறியவர்கள், கீழ் நோக்கி  ஒரு சிறிய பள்ளத்தாக்கில் இறங்கினார்கள். அங்கு கோமதி நதி ஒரு பெரிய ஓடை போல் இருந்தது. கணுக்கால் அளவு தண்ணீர் ஓடியது. நதிக்கரையில் பெரிய கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. இங்கு குளிர் இன்னும் அதிகமாக இருப்பது போல் வர்ஷாவுக்கு தோன்றியது. கைகளை தன் நெஞ்சுக்கு குறுக்கே இறுக்கிப் போர்த்துக் கொண்டாள்.

தரம் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “இன்று குளிர் அதிகம் இல்லை. சலேங்கே தோ டண்ட் நகின் லகேகா. நடந்தால் குளிர் தெரியாது”

வர்ஷா கரையில் நின்றுகொண்டு நதியில் கை வைத்தாள். கையில் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தாள். சட்டென்று தண்ணீரிலிருந்து கையை எடுத்துவிட்டு தரமைப் பார்த்து சிரித்தாள். பதிலுக்கு அவன், “தண்ணீரில்  நடந்து நதியைக் கடப்போமா?” என்றான். “ஒ நோ. இந்த குளிர் எனக்கு தாங்காது,” என்றாள் வர்ஷா. நதியின் நடுவில் இருந்த கற்களின் மேலே நடந்து நதியை கடந்தார்கள்.

உயர்ந்த மரங்கள். காட்டுக்குள் நுழைந்தார்கள். காட்டில் இருட்டு அதிகமாக இருந்தது. “நிச்சயமாக மழை வராதா?” என்று வர்ஷா கேட்க, “நிச்சயம் வராது. என்னை நம்புங்கள்” என்றான் தரம்.

சற்று தொலைவு நடந்த பிறகு ஒரு சிறு ஓடை வந்தது. அதை ஒரு மரக்கிளை ஏறிக் கடக்க வேண்டும். முதலில் சென்ற தரம், தான் கிளையை விட்டு விழுந்து விடுவதுபோல் நடித்தான். இரண்டு கைகளையும் நீட்டி, ஒரு காலில் ஏதோ நர்த்தனம் செய்வது போல் செய்தான். தன் முன் சேட்டை செய்து கொண்டிருந்த இருபத்தைந்து வயது இளைஞனின் வெகுளித்தனத்தை கண்டு வர்ஷாவுக்கு சிரிப்பு வந்தது. அவன் இந்த இயற்கை போல் கல்மிஷம் இல்லாதவனாக தென்பட்டான். நடந்து நடந்து அவனுடைய உடல் சிக்கென்று இருந்தது. அவன் வெகு சுலபமாக நடந்து கொண்டிருந்தான்.

“நீங்க கௌசானிக்கு வருவது இதுதான் முதல் முறையா?”

“ஆமாம். உத்தராகண்டுக்கே இது தான் முதல் முறை. நீ எவ்வளவு நாட்களாக கைடு வேலை செய்கிறாய்?”

“ஐந்து. நீங்க ஏன் தனியாக  வந்திருக்கிறீர்கள்? உங்கள் கணவர் வரவில்லையா?”

“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை”

“உங்க போல அழகான பெண்ணுக்கு இன்னுமா கல்யாணம் ஆகவில்லை. நம்ப முடியலை”

எல்லோரும் அடிக்கடி கல்யாணப் பேச்சு எடுப்பதால், அவளுக்கு இதைப் பற்றி பேசினாலே எரிச்சலாக இருந்தது. ஆனால் இப்பொழுது தரம் இவ்வளவு வெகுளியாக கேள்வி கேட்டதால், அவள் பதில் கூறினாள். “எனக்கு உலகைச் சுற்றிப் பார்க்க ஆசை. கல்யாணம் செய்து கொண்டால் அது நடக்காது. நான் கல்யாணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.”

தரம் ஒன்றும் பேசவில்லை. இப்பொழுது அவர்கள் காட்டைக் கடந்துவிட்டு, புல்வெளி நிறைத்த இடத்துக்கு வந்திருந்தார்கள். காட்டை விட்டு வெளியே வந்ததும் குளிர் அதிகமானது போல் இருந்தது. பச்சைப் பசேல் என்றிருந்த வெளியை பார்த்து, “ஆஹா இந்த இடம் அற்புதமாக இருக்கிறது” என்றாள் வர்ஷா.

“காலையில் நன்றாக இருக்கும். இருட்டிவிட்டால் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருக்கும். எப்பொழுதாவது கரடியும் வரும்” என்றான் தரம்.

வர்ஷா இதைக் கேட்டவுடன் மகிழ்ச்சி அடைந்தாள். “இப்பொழுது கண்ணில் படுமா?”

தரம் சிரித்துவிட்டு, தன் இரு கைகளையும் உயர்த்தி, புலி போல் கர்ஜித்தான். “இந்த மிருகத்தைதான் நீங்கள் இங்கே பார்க்க முடியும்” என்றான். கள்ளம் கபடம் இல்லாத அந்த இளைஞனைப் பார்த்து வர்ஷா மறுபடியும் சிரித்தாள்.

அவர்கள் அந்த நடையின் கடைசி கட்டத்தை அடைந்து விட்டார்கள். இப்பொழுது கிட்டத்தட்ட செங்குத்தாக இருந்த ஒரு மலையை ஏற வேண்டும். தரம் சுலபமாக ஏறிக் கொண்டிருந்தான். வர்ஷாவுக்கு மூச்சிறைத்தது. நடந்து வந்ததால் உடல் சூடேறியிருந்தது. ஜாக்கெட்டின் ஜிப்பை கீழிறக்கினாள். குளிர் காற்று அவள் நெஞ்சில் அடித்தது.

இருவரும் அருவிக்கு வந்து சேர்ந்தார்கள். ருத்ரதாரி அருவி உயரத்திலிருந்து சன்னமாக வடிந்து கொண்டிருந்தது. அருவி விழும் இடத்தில் ஒரு குளம் உண்டாகியிருந்தது. தண்ணீரின் மேல் ஒரு பாலம். பாலத்திற்கு அப்புறத்தில் ஒரு கோவில்.

தரம் குளத்தை காட்டி, “இதில் குளிக்கிறீர்களா?” என்று கேட்டான்.

வர்ஷாவுக்கு உடம்பு சிலிர்த்தது. அதைக் கண்டு தரம் சிரித்தான். “பல பேர் குளித்திருக்கிறார்கள்”.

“அவர்கள் குளித்து விட்டுப் போகட்டும். நான் தண்ணீரில்  இறங்குவதாக இல்லை ”

பாலத்தைக் கடந்து கோவில் அருகில் வந்தார்கள். ஷூவை கழட்டி காலை கீழே வைத்த வர்ஷாவுக்கு மறுபடியும் ஷாக் அடித்தது போல் இருந்தது. “தரை எவ்வளவு சில்லென்று இருக்கிறது!” என்றாள்

ஒரே ஒரு அறை கொண்ட சிறிய கோவில். அறையில் ஒரு விக்ரஹமும், சுவற்றில் சில சாமி படங்களும் இருந்தன. ஒரு மூலையில் பாயும் கம்பளியும் பார்த்த வர்ஷா, “இங்கு யாராவது இருப்பார்களா?” என்று கேட்டாள்

“ஒரு ஸ்வாமிஜி இருப்பார். இப்பொழுது ரிஷிகேஷ் சென்றிருக்கிறார்”

“தனியாகவா இருப்பார்?”

“ஆமாம்”

“அவருக்கு குளிராதா? இரவில் காட்டுக்குள் இருப்பது அவருக்கு அச்சம்  தராதா?”

தரம் சிரித்தான். “அவர் இங்கே இருபது வருடங்களாக இருக்கிறார்”

கோவிலுக்கு வெளியே வந்து வர்ஷா ஒரு பாறை மேல் அமர்ந்தாள். நதி கீழே தெள்ளத் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்களிலிருந்து பறவைகளின் சத்தம் அருவியின் இரைச்சலை மீறி கேட்டது. மெல்லிய குளிர்க் காற்று வீசியது. வர்ஷாவையும் தரமையும் தவிர அங்கு எவரும் இல்லை. அந்த ஏகாந்தமான வேளையில் என்றும் காணாத அமைதியை வர்ஷா அடைந்தாள். இடைவிடாது பேசிக்கொண்டே இருக்கும் தரம் இப்பொழுது வர்ஷாவின் மனதை அறிந்தவன் போல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான்.

பதினைந்து நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்த வர்ஷா, வேண்டா வெறுப்பாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள். தரம் அவள் பின்னால் வந்தான். கீழே இறங்கி புல்வெளியை அடைந்தார்கள்.

“நீங்க எந்த ஊரு?” என்று தரம் கேட்டான்

“சென்னை”

“சென்னை?”

“மெட்ராஸ்”

“ஆ. மத்ராஸ்”

“ஆனால் நான் இப்போ தில்லியில் வேலை செய்கிறேன்”

அவர்கள் நதியை அடைந்தபோது, நதிக்கு நடுவில் இருந்த ஒரு பெரிய பாறையின் மேல் ஓர் இளைஞன் உட்கார்ந்திருப்பதை வர்ஷா பார்த்தாள். அவன் தரமை பார்த்து சிரித்தான். நதியைக் கடக்கும்பொழுது அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான்.

“இது என் நண்பன், ரோஹித். அவனும் ஒரு கைடு.”

“இன்று நீ யாரையும் கைடு செய்யவில்லையா” என்று வர்ஷா அவனைப்  பார்த்து கேட்டாள்.

“இல்லை மேடம். இது டூரிஸ்ட் சீஸன் இல்லை. ஒருவரோ இருவரோதான் வருவார்கள்”

நதியை கடந்து நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் செல்லும் பாதைக்கு பக்கத்தில் வழவழப்பான ஒரு பெரிய பாறை இருந்தது. தரம் அதைக் காட்டி கேட்டான், “உங்களால் இந்த பாறை மேலஏற முடியுமா?”

“இது மேல் எப்படி ஏற முடியும். இவ்வளவு வழவழப்பாக இருக்கிறது”

“நாங்கள் ஏறுவோம் பாருங்கள்,” என்று கூறிவிட்டு தரமும் ரோஹித்தும் வீதியில் நடப்பது அந்த பாறை மேல் ஏறினார்கள். தரம் வர்ஷாவைப் பார்த்து சிரித்தான். “இன்னும் பெரிய பெரிய பாறைகள் எல்லாம் ஏறுவோம்” என்றான்.

“உங்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நீங்கள்  எல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறீர்கள்”

அவர்கள் கிளம்பிய இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். “மேடம் ஒரு டீ குடிப்போம்,” என்றான் தரம். அந்த குளிருக்கு டீ இதமாக இருந்தது. தரமும் வர்ஷாவும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருக்க, ரோஹித் நின்றுகொண்டே டீ குடித்தான்.

அப்பொழுது வானம் சற்று வெளுத்திருந்தது. கிளம்பியபொழுது அப்பிக் கொண்டிருந்த இருள் இப்பொழுது இல்லை. தூரத்து மலைகள் இப்பொழுது தெளிவாக தெரிந்தன. விவரிக்க முடியாத வெளிச்சம் அந்த இடம் முழுவதும் பரவியிருந்தது.

வர்ஷா தரமை பார்த்து, “இப்போ மேகங்கள் அதிகம் இல்லை பார்,” என்றாள்

“மனிதர்களை போல் இயற்கையும் மாறிக்கொண்டேதான் இருக்கும்,” என்றான் தரம்.

“ஆனால் இயற்கை தன் சமநிலையை குலைத்துக் கொள்வதில்லை,” என்று ரோஹித் முடித்தான்.

பேசியது நானூறு ரூபாய் தான் என்றாலும் வர்ஷா தரமுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாள். “நீ நன்றாக வழி காட்டினாய். ஐநூறு ரூபாயை வைத்துக் கொள்”

“மேடம். எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஆசை. நாங்கள்  தில்லிக்கு வந்து வேலை பார்க்க வேண்டும். எங்களுக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று தரம் கேட்டான்.

“இந்த அழகான இடத்தை விட்டுவிட்டு எதற்கு  தில்லி வர நினைக்கிறீர்கள்? நல்ல காற்று, சுத்தமான தண்ணீரை விட்டுவிட்டு எப்போதும் புகை மண்டலம் சூழ்ந்திருக்கின்ற தில்லிக்கு எதற்கு  போகவேண்டும்?”

“வாழ்க்கைக்கு காற்றும் தண்ணீரும் மட்டும் போதாது இல்லையா மேடம். எங்களுக்கு வருவாய் மிகவும் குறைவு. டூரிஸ்ட் சீஸன்போது ஏதோ கொஞ்சம் பணம் வரும். இல்லை என்றால் பெரிதாக ஒன்றும் வராது. எங்கள் தோட்டத்தில் சில காய்கறிகள் விளையும். மற்றபடி இந்த சம்பாத்தியத்தில்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். தில்லிக்கு வந்தால் மாதா மாதம் சம்பளம் கிடைக்கும். இங்க கிடைப்பதை விட அதிகமாக கிடைக்கும். வாழ்க்கையை ஒரு அளவுக்கு நல்லபடியாக ஓட்டலாம்”

“இவ்வளவு நாள் ஏன் முயற்சி செய்யவில்லை?”

“ஆறு மாதம் முன்னாடிதான் கலியாணம் ஆனது மேடம். மனைவி வந்த பிறகு பொறுப்பு அதிகரித்து விட்டது. உங்களால் உதவி செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும்.”

“சரி. உங்க நம்பர் கொடுங்கள். ஏதாவது வேலை இருந்தால் சொல்கிறேன்.”

வர்ஷா தில்லிக்கு திரும்பிய இரண்டு மாதங்களுக்கு பிறகு, தரமுக்கு அவளிடமிருந்து அழைப்பு வந்தது. “தரம், இங்க புதுசா ஆரம்பிக்கற ஒரு கம்பெனிக்கு அட்மின் அசிஸ்டண்ட்கள் வேண்டுமாம். நீயும் ரோஹித்தும் கிளம்பி வாருங்கள்.”

 

ர்ஷாவின் சிபாரிசு பேரில் இருவரும் டில்லியில் வேலைக்கு சேர்ந்தார்கள். முதல் மாத சம்பளம் வந்தவுடன் இருவரும் இனிப்பு வகைகளை வாங்கிக்கொண்டு வந்து வர்ஷாவுக்கு கொடுத்தார்கள். ஆறு மாதம் கழித்து வர்ஷா வேலை மாறி பெங்களூருக்கு வந்தாள். அதற்கு பிறகு இரண்டு வருடங்களுக்கு அவள் தரமிடம் தொடர்பில் இல்லை.

டிசம்பர் மாதத்தில் மறுபடியும் கௌசானிக்குச் செல்ல வர்ஷா முடிவெடுத்தாள். அவள் அங்கு சென்று கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. டில்லிக்கு சென்று, அங்கிருந்த சதாப்தி பிடித்து காத்கோடாம் வந்தடைந்து, காரில் நைனிதால் சென்று, அங்கு ஒரு நாள் தங்கிவிட்டு, அடுத்த நாள் ஜோகேஷ்வரில் கோவில்களை பார்த்த பின்பு, அல்மோரா வழியாக கௌசானி வந்து சேர்ந்தாள். அன்று மாலை பனிமலைத் தொடர்களை மறையும் சூரியனின் சிவப்பு வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. நந்தா தேவி, திரிஷுல், நந்தா கோட் மலைகள் தெளிவாக தெரிந்தன. தூரத்தில் பஞ்சசூலி மாலையும் தெரிந்தது. பத்து நிமிடங்களுக்கு வர்ஷா அவற்றை வாய் திறந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த அழகையும் குளிரையும் காமிராவில் கொண்டுவர முடியாது என்று அவளுக்கு நன்றாகவே  தெரிந்திருந்தும் தன் காமிராவில் படங்களை எடுத்துத் தள்ளினாள்.

காலை சிற்றுண்டி ரிசார்டில் திறந்த வெளியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். மேகமூட்டமாக இருந்ததால் தூரத்து மலைகள் தெரியவில்லை. டிசம்பர் மாத குளிர் உடம்புக்குள் ஊடுருவி சென்றது. இருந்தாலும் திறந்த வெளியிலேயே சாப்பிடுகிறேன் என்று வர்ஷா சொன்னதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயற்கையின் அழைகை ரசித்துக்கொண்டே, ஆலூ பரோட்டாவை ருசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு இளம் பெண் வர்ஷாவைத் தேடி வந்தாள்.

அவள் நீல நிற சுடிதார் மேல் சிவப்பு ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். வர்ஷாவைப் போல் அவள் தலையில் குரங்கு குல்லா அணிந்திருக்கவில்லை. அந்த ஊர் மக்கள் போல் அவளும் சிவப்பாக இருந்தாள். அழகான தோற்றமுடைய அவள், “நீங்கள்தான் வர்ஷா மேடமா?” என்று கேட்டாள்.

“ஆம்”

“உங்களுக்கு ரோஹித் ஞாபகம் இருக்கா?”

வர்ஷா யோசித்தாள்.

“தரமின் நண்பன். அவர்கள் இருவருக்கும் நீங்கள்தான் டில்லியில் வேலை வாங்கி கொடுத்தீர்கள்”

“ஓஹோ. ரோஹித். ஞாபகம் இருக்கிறது. நீங்கள்?”

“நான் ரோஹித்தின் மனைவி.”

“ரோஹித் எப்படி இருக்கிறான்?”

“இப்போது அவர் டில்லியில் இல்லை. திரும்பி கௌசானிக்கே வந்துவிட்டார்”

“ஏன்?”

“அதைப் பற்றிதான் பேசவேண்டும்”

சாப்பிட்டு முடித்த வர்ஷா, கையை துடைத்துக்கொண்டு, கிளொஸை மாட்டிக் கொண்டாள்.

“உங்க பேர் சொல்லவில்லையே?”

“என் பேர் ரேணு”

சூரியன் மேகங்களுக்கு நடுவிலிருந்து எட்டிப் பார்த்தான். மெல்லிய ஒளி புல்தரையின் மேல் பரவியது.

“ரோஹித் ஏன் தில்லியை விட்டு வந்தான்?”

“போகும்போது மகிழ்ச்சியாகதான் போனான். ஒரு ஆறு மாதத்தில் என்னை டில்லிக்கு அழைத்துக் கொள்கிறேன்  என்று சொல்விலிட்டுப் போனான். ஆனால் ஆறு மாதத்தில் அவனே திரும்பி வந்துவிட்டான். நான் எதற்கு  இப்படி செய்கிறாய் என்று  கேட்டேன். நகரம் மனிதனை மிகவம் மாற்றி விடுகிறது. எனக்கு இந்த கைடு வேலையே போதும் என்று சொன்னான். நான் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன். ஆனால் மறுபடியும் டில்லிக்கு போகமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறான். நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டேன். ஆனா அவன் இனி போவான் என்று எனக்கு தோன்றவில்லை.”

“மனிதர்கள் எப்படி மாறுகிறார்களாம்?”

“ரோஹித்தும் தரமும் ஒரே கம்பெனியில்தான் இருந்தார்கள். தரம் ஏதோ லஞ்சம் வாங்குகிறான் என்று சொன்னார்கள். ரோஹித் லஞ்சம் வாங்காமல் வேலை பார்த்தான். ஆனா அவன் மேலதிகாரிக்கு அது பிடிக்கவில்லை. அந்த அதிகாரியும் லஞ்சம் வாங்குபவர். அவனும் உத்தராகண்ட் ஆள்தான். அவன் ரோஹித்தை அவமானப்படுத்த ஆரம்பித்தான். ரோஹித் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டான்.”

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். வர்ஷா முகம் சில்லென்றாவதை உணர்ந்தாள்.

ரேணு தொடர்ந்தாள், “இப்போ தரமை பாருங்கள். அவன் தன் வீட்டுக்கு மேல் மாடி கட்டிவிட்டான். புதிய நிலம் வாங்கியிருக்கிறான். மனைவியையும் மகனையும் டில்லிக்கு அழைத்துக் கொண்டு  போய் விட்டான். அவன் குழந்தை நல்ல பள்ளிக்கூடத்தில் படிப்பான். அவன் நல்ல படிப்பு படித்து நல்ல வேலைக்கு போவான். என்  பையன் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் படித்து  ஏதோ டிரைவராகவோ கைடாகவோ போவான். எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று நான் பார்க்கிறேன். ரோஹித் என் பேச்சையே கேட்க மாட்டேன் என்கிறான். நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்து அவனோடு பேசுங்கள். இது பற்றியெல்லாம் புரிய வையுங்கள். நீங்கள்  சொன்னால் அவன் கேட்பான்.”

வர்ஷாவுக்கு வேறொருவர் குடும்ப விஷயத்தில் தலையிடுவதில் ஆர்வம் இல்லை. ஆனால் ரேணு சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தாள். “இன்றைக்கு அவன் எங்கே இருப்பான்?”

“நீங்கள் காலையில் ருத்ரதாரி அருவிக்கு போகிற இடத்தில்தான் இருப்பான்”

“சரி. நான் பேசுகிறேன்”

“ரொம்ப நன்றி மேடம்.”

“டீ குடித்துவிட்டுப் போ”

இருவரும் டீ அருந்திய பின், ரேணு விடைபெற்றுக் கொண்டாள்.

வர்ஷா இப்பொழுது மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். அட்மின், பர்சேஸ் போன்ற பிரிவுகளில் லஞ்சம் வாங்குவது சகஜம் என்று அவளுக்கு தெரியும். ரோஹித்துக்கு இது போன்ற ஒரு பிரிவில்தான் வேலை கிடைக்கும் வாய்ப்பிருந்தது. ரோஹித்தை நிர்பந்தப்படுத்துவது சரியில்லை என்று வர்ஷா நினைத்தாள். அதே சமயம் ரேணுவின் கோரிக்கை தவறில்லை என்றும் அவளுக்கு பட்டது. சரி, ரோஹித்துடன் பேசி பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு ருத்ரதாரி அருவியை நோக்கி சென்றாள்.

ரோஹித் டீக்கடையில் கடைக்காரனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். “ஹாய் ரோஹித்” என்ற சொன்ன வர்ஷாவை திரும்பிப் பார்த்த அவன், ஒரு வினாடி இது யார் என்று தெரியாமல் முழித்தான். பிறகு, “அரே மேடம். நமஸ்தே” என்றான். “எங்கே? ருத்ரதாரிக்கா?”

“இல்லை. உன்னுடன் பேச வந்தேன்”

ரோஹித், “ஒரு டீ சொல்லுங்கள், பேசலாம்”

வர்ஷா டீ கோப்பையை வாங்கிக் கொண்டாள். அவளுக்கு அறிவுரை சொல்லி பழக்கமில்லை. எப்படி இந்த பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்தாள்.

சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருந்தான். மலைகள் எல்லாம் பச்சை பசேலென்று இருந்தன. வெகு தொலைவில் உள்ள மலைகளும் தெளிவாக தெரிந்தன. வானத்தின் ஒரு பகுதியில் கருமேகங்கள் இருந்தாலும் இன்னொரு பகுதி மேகங்கள் இல்லாமல் இருந்தது. ஒரு மலையில் சன்னமான அருவி உருவாகிக் கொண்டிருப்பதை வர்ஷா பார்த்தாள். தூரத்தில் காரொன்று வளைத்து நெளியும் மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு மனையிலிருந்து வெள்ளைப் புகை வந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும் தன் கண்கள் வழியாக வர்ஷா மனதினுள் வாங்கிக் கொண்டிருந்தாள்.

மெதுவாக காட்சி மாறியது. கருமேகங்கள் சூரியனை சூழ்ந்துகொண்டன. வெளிச்சம் மறைய தொடங்கியது. மலைகளில் நிறம் மெதுவாக கரும்பச்சையாக மாறியது. தூரத்திலிருந்த மலைகள் மறைந்தன. மெல்லிய சாரல் அடிக்க ஆரம்பித்தது. காட்சி முழுவதும் மாறிவிட்டிருந்ததை பார்த்த வர்ஷா ரோஹித்திடம், “இயற்கை எப்படி மாறுகிறது பார். மாறுவதுதான் இயற்கையின் நியதி போல்” என்றாள். ரோஹித் பதில் ஏதும் சொல்லாமல் டீ அருந்திக்கொண்டிருந்தான்.

வர்ஷா பேசி முடித்த சில வினாடிகளிலேயே காட்சி மறுபடியும் மாறியது. கரு மேகங்களை காற்று செலுத்திச் செல்ல, மறுபடியும் சூரிய வெளிச்சம் எங்கும் பரவியது. மழைச்சாரல் நின்றது. எல்லா மலைகளும் மறுபடியும் தெள்ளத் தெளிவாக தெரிய ஆரம்பித்தன. எல்லாம் பழைய  நிலைக்கே திரும்பியிருந்தன.

ரோஹித் வர்ஷாவைப் பார்த்தான், ஆனால் எதுவும் பேசவில்லை. இருவரும் மௌனமாக டீ அருந்த ஆரம்பித்தார்கள்.

 

 

 

 

 

 

 

 

பயணம்

எஸ் சுரேஷ் 

ஞாயிறு மாலை நேரம். சென்ட்ரல் ஸ்டேஷன் ரொம்பி வழிந்தது. சரண் அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு நடந்தான். “பல வருடங்களுக்கு முன், இந்த கூட்டத்தில் தொலைந்து போய் விடுவேனோ என்று அப்பா என் கையை பிடித்துக்கொண்டு நடந்தார். இப்பொழுது அவர் தொலைந்து போய்விடுவாரோ என்ற பயத்தில் நான் அவர் கையை பிடித்துக்கொண்டு நடக்கிறேன். காலம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. ”

சரணின் அப்பாவிற்கு டிமென்ஷியா. இப்பொழுது வியாதி முற்றிக் கொண்டிருந்தது. சில சமயங்களில் அவருக்கு சுயநினைவு இருக்கும். சில சமயங்களில் அவருக்கு எந்த நினைவும் இருக்காது. ஒரு முறை வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. வீட்டில் எல்லோரும் பதட்டப்பட்டார்கள். அவர் செல்லும் எல்லா இடங்களும் தேடினார்கள். இரண்டு மணி நேரம் கழித்து, அமீர்பெட் காவல் நிலயத்திலிருந்து அழைத்தார்கள். அவர் சிக்கட்பல்லியிலிருந்து அமீர்பெட்டுக்கு எப்படி சென்றார் என்று யாருக்கும் புரியவில்லை. அன்றிலிருந்து அவர் சட்டைப்  பையில் எப்பொழுதும் வீட்டு விலாசத்துடன் ஒரு காகிதம் இருக்கும்படி சரண் பார்த்துக் கொண்டான்.

அப்பா வேகமாக நடந்தார். அவர் உடல் உறுதியாக இருந்தது. “இது நம்ம கம்பார்ட்மெண்ட்.” என்று சொல்லி இரண்டாம் வகுப்பு பெட்டியில் அப்பாவுடன் சரண் ஏறினான். உட்கார்ந்த ஐந்து நிமிடங்களுக்கு பிறகு சித்தப்பா வந்தார். “எப்படி இருக்கார்?” என்று கேட்டார். “பரவாயில்லை சித்தப்பா” என்றான். அவர் அப்பாவுடன் பேசினார், ஆனால் அப்பாவிற்கு அவர் யாரென்று புரியவில்லை. “பத்திரமா கூட்டிண்டு போ,” என்றார்.

வண்டி கிளம்பியதும் சித்தப்பா கையை ஆட்டினார். கூட்டத்தில் அவர் மறையும் வரை சரண் கையை ஆடினான். அவனுக்கும் சித்தி வீட்டில் சில நாட்கள் இருத்தவிட்டு வரவேண்டும் என்று ஆசை. ஆனால் அலுவலகத்தில் வேலைபளு அதிகம் இருந்ததால் உடனே வரவேண்டிய கட்டாயம் இருந்தது.

அப்பாவை ஜன்னல் ஓரமாக உட்காரவைத்துவிட்டு அவர் பக்கத்தில் சரண் அமர்ந்தான். ஒரு காலத்தில் ரயில் ஏறியவுடன் அவன் ஜன்னலோர இருக்கையில் உட்கார முடியாவிட்டால் அழுதது நினவில் வந்தது. எவ்வளவு முறை இதே சார்மினர் எக்ஸ்பிரஸ்ஸில் சென்றிருப்பான். அப்பா அவனுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன் பெயராக சொல்லுவார். “மெட்ராஸ் எப்போ வரும் பா?” “நாளைக்கு வரும்.” அப்பா தண்ணி பிடிக்க இறங்கும்பொழுது அவன் மனது துடிக்கும். ரயில் கிளம்பும் முன் அப்பா ஏறிவிடவேண்டும் என்ற துடிப்பு இருக்கும். அவர் ஏற முடியவில்லை என்றால்? எப்பொழுதும் அப்பா ரயில் கிளம்புவதற்கு முன் ஏறிவிடுவார். இருந்தாலும் சரண் மனதில் பயம் இருக்கத்தான் செய்தது. இப்பொழுதும் அவனுக்கு அதே பயம் இருந்தது. தான் இல்லாதபொழுது அப்பா ரயிலை விட்டு இறங்கிவிடுவாரோ என்ற பயம். இந்த முறை இறங்கினால் அவர் மறுபடியும் ரயில் ஏறமாட்டார் என்று அவனுக்கு தெரியும்.

சரணுக்கு எதிர்ப்புறம் ஒரு குடும்பம் உட்கார்ந்து இருந்தது. அவனுக்கு பக்கத்தில் நடுவயது ஆண் உட்கார்ந்திருந்தார். ரயில் கிளம்பி இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. சரணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு அப்பாவின் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தான். அப்பாவை விட்டு நகர அவனுக்கு பயமாக இருந்தது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற இம்சை அதிகமாகி கொண்டே இருந்தது. திடீரென்று அப்பா இருக்கையை விட்டு எழுந்தார். “எங்க போகணும்?’ “எனக்கு ஒண்ணுக்கு வருது’. அப்பாவை அழைத்துக்கொண்டு கழிப்பறைக்கு சென்றான். அப்பாவை தாழ்ப்பாள் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கதவுக்கு வெளியில் நின்றிருந்தான். கழிப்பறையை பார்த்த அவனுக்கு சிறுநீர் உபாதை அதிகமாகியது. இருந்தாலும் அதை அடக்கிக்கொண்டு அப்பாவுடன் தங்கள் இருக்கைக்கு சென்றான்.

அப்பாவுக்கு எதிரில் உட்கார்ந்திருந்தவர் அப்பாவுடன் பேச்சு கொடுத்தார். அப்பா பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஆனால் கேள்வி கேட்பவருக்கு ஏதோ சரி இல்லை என்று தோன்றியதை சரண் கவனித்தான். “அவருக்கு டிமென்ஷெயா. எல்லாத்தையும் மறந்து போறார்” “ஓ’ என்ற எதிர் இருக்கை ஆள், ஏதோ கொடிய மிருகத்தை பார்தது போல் பயந்து மௌனமாகிவிட்டார்.

ரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் ஒரு நிமிடம் நின்றுவிட்டு கிளம்பியது. டீ விற்றுக் கொண்டிருந்தவனிடம் இரண்டு கோப்பை டீ வாங்கி, ஒன்றை அப்பாவுக்கு கொடுத்தான். சிறுநீர் கழித்தால் தவிர தன்னால் டீ குடிக்க முடியாது என்று தீர்மானித்த சரண், பக்கத்து இருக்கையில் உள்ளவரிடம், “அப்பாவ ரெண்டு நிமிஷம் பாத்துக்கோங்க. நான் டாய்லெட் போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டு கழிப்பறைக்கு சென்றான்.

சரண் சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்று தான் நினைத்தான். ஆனால் இவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டிருந்ததால் அவன் சற்று நேரம் இருக்கவேண்டி வந்தது. ஒவ்வொரு நிமிடமும் அவனுடைய பயம் கூடிக் கொண்டிருந்தது. வேலையை முடித்த பிறகு இருக்கைக்கு விரைந்தான். அப்பா ஜன்னல் ஓரமாக அமைதியாக உட்கார்ந்திருந்தார்.. பக்கத்து இருக்கை ஆள் சரணை பார்த்து, “ஹி இஸ் ஓகே’ என்றார்.

கல்யாணச் சத்திரத்தில் கட்டி கொடுத்த உணவை அவனும் அப்பாவும் தின்ற பின்பு, அப்பாவை கை அலம்ப அழைத்துச் சென்றான். அவர் சிறுநீர் கழித்த பிறகு இருக்கைக்கு வந்து, நடு இருக்கையை மேலே தூக்கிவிட்டு, ஏர் பில்லோவை ஊதி, அப்பாவின் தலையடியில் வைத்து, அவருக்கு போர்வை போர்த்திவிட்டான். பிறகு அவன் நடு இருக்கையின் மேல் ஏறி  அமர்ந்தான். தான் தூங்கிவிட கூடாது என்பதற்காக உட்கார்ந்தே இருந்தான்.

சற்று நேரத்திற்கு பிறகு அவனுக்கு கழுத்தும் முதுகும் வலிக்க ஆரம்பித்தன. இனி உட்கார்ந்திருக்க முடியாது என்று நினைத்து இருக்கையில் படுத்துக் கொண்டு, அப்பா தூங்கிக் கொண்டிருக்கிறாரா என்று எட்டிப் பார்த்தான். அவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். சரண் ராதிகாவை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக்கு முன் அவளை பெண் பார்க்க சென்றிருந்தான். அவளை பார்த்தவுடன் அவன் பிடித்ததால் உடனே சம்மதம் சொல்லிவிட்டான். வெளியில் சந்தித்தால் சர்ச்சை ஆகிவிடும் என்பதால் அவர்கள் தொலைபேசி வாயிலாக தினமும் பேசிக்கொண்டார்கள். காலை பத்து மணிக்கு ராதிகா அவளுடைய அலுவலகத்திலிருந்து இவனை அழைப்பாள். மாலை ஐந்து மணி அளவில் இவன் அவளை அழைப்பான். அலுவலகத்திலிருந்து பேசுவதால் அதிகம் பேச முடியாது. இருந்தாலும் தினமும் பேசிய சில நிமிடங்களை மனதில் அசை போட்டுக்கொண்டு சரண் மகிழ்ச்சியடைவான். அவள் நினைப்பு அவன் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. ரயில் ஏதோ ஸ்டேஷனில் நின்றது. ராதிகா நினைவில் மூழ்கியிருந்த சரண், ரயில் நின்றிருப்பதை உணர்த்து திடுக்கிட்டான். உடனே கீழே எட்டிப் பார்த்தான். அப்பா அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தார்.

ரயில் மறுபடியும் கிளம்பியது. சரண் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. சரணுக்கு சிறுநீர் கழிக்கவேண்டும் போல் இருந்தது. அப்பாவை பார்த்துக்கொள்ளும்படி யாருக்கும் சொல்ல முடியாது. அதே சமயம் அடுத்த ஸ்டேஷன் சீக்கிரம் வராது என்று நினைத்துக்கொண்டு சரண் கழிப்பறைக்கு விரைந்தான். சீக்கிரம் தன் வேலையை முடித்துக்கொண்டு இருக்கையை நோக்கி வரும்பொழுது இருக்கைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த அப்பாவின் கால்களை காணவில்லை. இதயம் படபடக்க இருக்கையை நோக்கி ஓடினான். அப்பா கால்களை மடித்து தூங்கிக்கொண்டிருந்தார்.

நடு இருக்கையின் மேல் ஏறிய பிறகும் அவன் இதயம் வேகவாக அடித்துக் கொண்டிருத்தது. இரண்டு மூன்று தரம் மூச்சை நன்றாக இழுத்து வெளியே விட்டான். வெளியிலிருந்து சில்லென்ற காற்று வீசியது. அப்பா நன்றாக போர்த்திக் கொண்டிருக்கிறாரா என்று பார்த்தான். எல்லாம் சரியாக இருந்தது. மறுபடியும் மெதுவாக படுத்தான். ராதிகாவை பற்றியும், அலுவலக வேலையை பற்றியும் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். .

நடு இரவு தாண்டிய பிறகு ‘கட கட கட கட’ என்ற ஓசையுடன் கிருஷ்ணா நதி பாலத்தை வண்டி கடந்தது. சற்று நேரம் கழித்து விஜயவாடா ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. ரயில் இங்கு பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கும். சரண் இருக்கையிலிருந்து காலை கீழே நீட்டி உட்கார்ந்த கொண்டான். அடிக்கடி அப்பாவை எட்டிப்பார்த்தான். ரயில் நின்று பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ரயில் கிளம்பப் போகிறது என்ற தகவலை ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அதை கேட்ட சரண், மறுபடியும் படுத்துக்கொண்டான். முதல் நாள் கல்யாண வேலைகள் இருந்ததால் வெகு நேரம் அவன் தூங்கவில்லை. அதிகாலை முகூர்த்தம் என்பதால் சீக்கிரமே எழுந்துவிட்டான். செப்டெம்பர் மாதமாக இருந்தாலும் மெட்ராசில் வெயில் கொளுத்தியது. எல்லாம் சேர்ந்து அவனுக்கு அளவுகடந்த சோர்வை அளித்தன. இவ்வளவு நேரம் முழித்துக் கொண்டிருந்த அவன் இப்பொழுது தூங்கிவிட்டான்.

கனவில் ராதிகா அவனிடன் ஏதோ சொல்ல அவன் சிரித்தான். சிரித்துக் கொண்டே கண்முழித்தான். கரைந்து போகும் அழகிய கனவை மறுபடியும் கையில் பிடிக்க கண் மூடினான். அவன் எவ்வளவு முயற்சி செய்தும் கனவை மறுபடியும் கைப்பற்ற முடியவில்லை. வேண்டா வெறுப்பாக கண்களை திறந்தான். எதிர் பக்கம் உட்கார்ந்திருந்தவர் தன் நடு இருக்கையை கீழே இறக்கி கொண்டிருந்தார். சட்டென்று சரணுக்கு தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவு வந்து, கீழே எட்டிப்பார்த்தான். அப்பாவை காணவில்லை.

எழுந்த வேகத்தில் அவன் தலை அப்பர் பெர்த்தில் முட்டியது. தலையை தடவிக்கொண்டே கீழே இறங்கினான். எதிர் இருக்கையில் இருப்பவரை பார்த்து, “அப்பாவை பாத்தீங்களா?” என்று கேட்டான். “நான் இப்போ தான் எழுந்திரிச்சேன். அவரை பாக்கல. டாய்லெட் போயிருப்பரோ என்னவோ” என்றார்.

சரண் கழிப்பறையிடம் சென்றான். இரண்டு கழிப்பறைகளும் மூடி இருந்தன. நிலைக்கொள்ள முடியாமல் சரண் அங்கு நின்றிருந்தான். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ஒரு கதவு திறந்தது. இன்னும் சற்று நேரம் கழித்து இன்னொரு கதவு திறந்தது. இரண்டிலும் அப்பா இல்லை. மறுபக்கம் உள்ள கழிப்பறைக்கு விரைந்தான். அங்கும் அப்பா இல்லை.

ரயில் போங்கீர் தாண்டிவிட்டிருந்தது. கட்கேஷர் தாண்டிவிட்டால் சிகந்திரபாத் ஸ்டேஷன் வந்து விடும். சரண் ஒவ்வொரு பெட்டியாக தேடிக்கொண்டே சென்றான். எதிலும் அப்பா இல்லை. மறுபடியும் இருக்கைக்கு வந்தவனை எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். “அவருக்கு எவ்வளவு நாளாக மறதி இருக்கிறது?”, “அவருக்கு தன் பெயர் தெரியுமா?” “தன்னுடைய ஊர் எது என்று அவருக்கு தெரியுமா?” “நீ தனியாக அவரை ஏன் கூட்டிக்கொண்டு வந்தாய்? கூட யாராவது வந்திருக்கலாமே?” சரணுக்கு இருப்பு கொள்ளவில்லை ஆனால் அவனால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது என்று அவனுக்கு தெரியும். “சிகந்திரபாத் ஸ்டேஷன்ல இறங்கி ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடு” என்றார் பக்கத்து இருக்கைக்காரர்.

ரயில் நிற்பதற்கு முன்பே இரண்டு பைகளை தோளில் சுமந்துக்கொண்டு சரண் வெளியே குதித்து ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் நோக்கி ஓடினான். அவன் சொன்னதை பொறுமையாக கேட்ட போலீஸ் அதிகாரி, “இன்னும் கொஞ்சம் பொறுப்பா இருந்திருக்கக் கூடாதா? உன்ன நம்பிதானே அனுப்பினாங்க? இப்படி அப்பாவா தொலைச்சிட்டு வந்து இருக்கியே.” சரணுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. “எப்படியாவது அவர கண்டுபிடிச்சி குடுங்க சார்” என்று கெஞ்சினான். “சரி சரி. நான் என்னால முடிஞ்சத செய்யறேன். இதோ பார். நீ அவர விஜயவாடா ஸ்டேஷன் வரைக்கும் கண்காணிச்சிருக்க. அதுக்கு பிறகு கம்மம், காஜிபேட், வாராங்கல் ஸ்டேஷன்லாம் இருக்கு. இப்போ எல்லா இடமும் தேடனும். நீ உங்க வீட்டு ஃபோன் நம்பர் குடுத்துட்டு போ. ஏதாவது தகவல் இருந்தா நான் ஃபோன் பண்றேன்”

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான். வீட்டில் தாத்தா பாட்டிக்கும், கல்யாணமாகாத மாமாவுக்கும் என்ன சொல்வது? அம்மாவுக்கு என்ன சொல்வது? எல்லாவற்றிக்கும் மேல், ராதிகாவுக்கு என்ன சொல்வது? தான் அப்பாவை தொலைத்துவிட்டதை பற்றி அவள் என்ன நினைப்பாள்? அம்மா இந்த செய்தியை கேட்டு அழுவாளா? அலுவலகத்தில் இதைப் பற்றி சொல்லலாமா? இங்கிருந்து வீட்டுக்கு பஸ் பிடித்துக்கொண்டு போகலாமா, இல்லை ஆட்டோவில் போகலாமா? அவன் மனது இங்கும் அங்குமாக தாவிக் கொண்டிருந்தது. தான் நிதானத்திற்கு வரவேண்டும் என்று உணர்த்து, பஸ்ஸில் செல்ல முடிவு செய்தான். ஒண்ணாம் நம்பர் பஸ் போய்குடா, முஷீராபாத், சார்மினார் சௌரஸ்தா தாண்டி சிக்கட்பல்லியில் நின்றதும் சரண் இறங்கிக்கொண்டு மாமாவுக்கு எப்படி சொல்வது என்ற சிந்தனையில் வீட்டை நோக்கி நடந்தான்.

அழைப்பு மணி கேட்டு மாமா கதவைத் திறந்தார். “வாடா” என்று சரணை வரவேற்றவர் வெளியே எட்டிப் பார்த்தார். “அப்பா அம்மா எங்க?” என்றார். “அம்மா சித்தியோட தங்கிட்டா. ஒரு வாரம் கழிச்சி வருவா” “அப்படியா. அப்பா எங்க?” “மாமா, தாத்தா பாட்டிக்கிட்ட சொல்லாத. அப்பாவ காணோம். எங்கேயோ டிரைன்னை விட்டு இறங்கிட்டாரு” என்று கிசுகிசுத்தான். “என்னடா சொல்ற. அய்யய்யோ. இப்படி அப்பாவ தொலைச்சிட்டு வந்து நிக்குற. உங்க அம்மாவுக்கு என்னடா சொல்றது?”

படுக்கையில் படுத்திருந்த பாட்டி “யார்டா அது, சரணா? அப்பா அம்மா எங்கடா?” “ஒரு வாரம் கழிச்சி வராங்களாம். நம்ம காமாட்சி ஒரு வாரம் அங்க தங்க சொல்லியிருக்கா” என்று மாமா பதில் கூறினார். பிறகு சரணை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தார். சரண் போலீஸ் ஸ்டேஷன் சென்றதை பற்றி சொன்னான். “இந்த மனுஷன் எங்க இறங்கினாரோ? இது எப்படிடா டீல் பண்றது?” இருவரும் மௌனமாக இருந்தார்கள். “நீ ஒண்ணு பண்ணு. எதுவும் நடக்காதது போல இரு. ஆஃபிஸ் கிளம்ப் போ. நான் இவங்கள பார்த்துகிறேன். ஆஃபிஸ்ல யாராவ்து ஹெல்ப் பண்ணுவாங்களா பாரு.”

அவன் ஆபீஸ் வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் இருந்தது. ஆபீஸில் நுழைந்தவுடன், சுனிதா சிரித்துக்கொண்டே, “யாரோ ராதிகாவாமே. உனக்குன்னு ஃபோன் பண்ணா. நீ இல்லைனு சொன்னதும் அவள் குரலே மாறிப்போச்சு. அவ அழுத்துவிடுவாளோன்னு பயந்தேன்” என்றாள். அவள் குறும்பாக பேசியதை எப்பொழுதும் ரசிக்கும் சரண் இன்று ரசிக்கவில்லை. அவன் முகம் ஏதோ போல் இருந்தது. “என்ன சரண். என்ன ப்ராப்ளம்?” சற்று நேரம் மௌனமாக இருந்தவன், “நேத்து எங்க அப்பாகூட ரயில்ல வந்தேன். அவர் ஏதோ ஒரு ஸ்டேஷன்ல இறங்கி இருக்கார். காலைல எழுந்து பார்த்த அவர காணோம்” இதை கேட்டுக்கொண்டிருந்த ராகவ், “என்னடா இப்படி செஞ்சிட்ட. உங்க அப்பாவ கவனிக்காம விட்டிட்டையே” என்றான். இதை பலரிடமிருந்து கேட்ட சரணுக்கு கோபம் வந்தது, “ஏன்டா எங்கப்பாவ நானே வேணும்னு தொலைப்பேனா? நானும் எவ்வளவோ நேரம் தூங்காமதான் இருந்தேன். நானுன் மனுஷன் தானே. என் பாட் லக் நான் தூங்கும்போது அவர் எங்கேயோ இறங்கி இருக்கார். இதெல்லாம் வேணும்னா செய்வேன்?” அவன் குரலில் இருந்த கோபத்தை தணிக்க, “சாரி. சாரி, தெரியாம கேட்டுட்டேன். உங்க அப்பாவ நாம் ரெண்டு பெரும் சேர்ந்து கண்டுபிடிப்போம்” என்றான்.

ஆபீஸில் பணிபுரியும் பத்து நபர்களுக்கும் இந்த செய்தி தெரிந்துவிட்டது. ஒருவர் தன் நண்பரை ஃபோன் செய்து கம்மம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க சொன்னார். இன்னொருவர் தன் நண்பருக்கு ஃபோன் செய்து வாராங்கல் ரயில் நிலையத்தில் விசாரிக்க சொன்னார். இதற்கிடையில் ராதிகாவின் அழைப்பு வந்தது. அவளுக்கு என்ன சொல்லவேண்டும் என்று சரணால் முடிவு செய்ய முடியவில்லை. உண்மையை சொன்னால் அவள் தனக்கு ஆறுதல் சொல்லுவளோ இல்லை தனக்கு பொறுப்பாக நடந்துகொள்ள தெரியவில்லை என்று நினைத்துக் கொள்வாளோ என்று குழம்பிய சரண், தனக்கு வேலை இருப்பதாகவும், “ஐ லவ் யு. அஞ்சு மணிக்கு ரெடியா இரு. என் கால் வரும்” என்று சொன்னான்.

மணி மதியம் இரண்டை தாண்டியது. அப்பாவை பற்றிய எந்த தகவலும் இல்லை. சரண் சோர்ந்திருந்தான். சரி இனி என்ன ஆகிறதோ ஆகட்டும். அம்மாவுக்கும் ராதிகாவுக்கும் சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான். “ராகவ், எதுக்கும் ஒரு முறை சிகந்தரபாத் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் போயி பாத்துட்டு வந்திடலாம். அவங்க கிட்ட ஏதாவது நியூஸ் இருக்கா பார்ப்போம்,” அவர்களிடமும் எந்த செய்தியும் இல்லை. சரண் நம்பிக்கையை முழுவதும் இழந்தவனாக ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான்.

ஆபீஸில் நுழைந்தவுடன் சுனிதா, “உங்க மாமா ஃபோன் பன்னாரு. ஏதோ அர்ஜண்ட்டாம். உன்னை உடனே வர சொன்னார்,” சரணுக்கு இதயம் வேகமாக அடித்துக்கொள்வது நன்றாக கேட்டது. அவன் தன்னுள் இவ்வளவு நேரம் ஒளித்து வைத்திருந்த பயம் இப்பொழுது வெளிவந்தது. அப்பா ஏதோ விபத்தில் சிக்கிக்கொண்டிருப்பார். ரயில் டிராக்கில் சென்றாரோ இல்லை சாலை கடக்கும்பொழுது பஸ் இடித்துவிட்டதோ? வேர்த்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

அப்பா சோஃபாவில் உட்கார்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தார். “இவர யாரோ மாறேட்பல்லில பார்த்திருக்காங்க. இவருக்கு நினைவு தெரியலேன்னு அவங்களுக்கு புரிஞ்சிருக்கு. இவர் பாக்கெட்ல இருந்த சீட்ல ஃபோன் நம்பர் அழிஞ்சிருக்கு. அதனால ஒருத்தர் ஆட்டோல கொண்டுவிட்டு போனார். எப்படியோ அவர் வீடு திரும்பியாச்சு. தாத்தா பாட்டிய நான் பாத்துக்கறேன். நீ வாய விடாத”

அமைதியாக உட்கார்ந்திருந்த அப்பாவை சரண் பார்த்தான். இன்னும் அவருடன் தான் செய்ய வேண்டிய பயணத்தை பற்றி நினைத்தான். அழுகை வந்தது. விம்மி விம்மி ஆழ ஆரம்பித்தான்.

 

 

 

 

 

இதுவொரு அதிசய உலகம்

எஸ். சுரேஷ்

மளிகை கடையை கடக்கும்பொழுது மீண்டும் அதே கேள்வி, “நர்சிங் வந்தானா?” இந்த கேள்வி சிதம்பரத்திற்கு எரிச்சல் தந்தது. “அப்பா, நாம பெங்களூருல இருக்கோம். நமக்கு நர்சிங்ன்னு யாரையும் தெரியாது. நாம இருக்கற இடம் மல்லேஷ்வரம். நான் உன் பிள்ளை, சிதம்பரம். நீ பி.எஹ்.ஈ.எல்ல வேலை செஞ்சு ரிடயர் ஆயிட்டே. நமக்கு நர்சிங்ன்னு யாரையும் தெரியாது.”

சிதம்பரத்தின் தந்தை சண்முகம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் கன்சல்டன்ட்டாக பணி புரிந்தார். அந்த வேலையை விட்ட பிறகு அவருக்கு டிமென்ஷியா வந்தது. அல்ஜேமர்ஸ் நோயும் வரும் அறிகுறி இருக்கிறது என்று டாக்டர்கள் சொன்னார்கள். இப்பொழுது அவருக்கு மறதி முற்றி விட்டிருந்தது. சிதம்பரத்தின் அப்பாவும், அம்மாவும் ஒரு குடியிருப்பில் தனியாக இருந்தார்கள். தினமும் மாலை வேளையில் சிதம்பரம் அங்கு சென்று அப்பாவை வாக்கிங் கூட்டிக்கொண்டு போவது வழக்கம். அந்த மளிகை கடையை கடக்கும் பொழுது, அப்பா தவறாமல் கேட்கும் கேள்வி, “நர்சிங் வந்தானா?”

“யாரும்மா இந்த நர்சிங்?” என்றுதன் அம்மாவிடம் சிதம்பரம் கேட்டான். “தெரியலடா. பேர கேட்டா ஏதோ தெலுங்கு ஆளு பேரு போல இருக்கு. கல்யாணத்துக்கு முன்ன அப்பா ஹைத்ராபாத்ல வேலைல இருந்தாரு. அங்க அவருக்கு தெரிஞ்ச ஆளா இருக்கலாம்.” “உன் கிட்ட  இந்த பேர எப்பவும் சொன்னதில்லையா?” “இல்ல. எந்த காலத்து நினைவோ தெரியல.” “அது எப்படி எந்த காலத்து நினைவோ மனசுல தங்கி இருக்கு? நாம யாருன்னு அவருக்கு தெரியல. ஏதோ ஒரு நர்சிங் பற்றி தினமும் கேக்குறாரு. ஒரே விசித்திரமா இருக்கு.”

சிதம்பரத்துக்கும், அவன் அம்மாவுக்கும் இந்த நோயை எப்படி எதிர்கொள்வது என்று புரியவில்லை. முதலில் அவர்கள் ஏதோ சிலவற்றை சண்முகம் மறந்துவிடுவார் என்றும் பலது அவர் நினைவில் இருக்கும் என்றும் நம்பினார்கள். டாக்டர்கள் இதை இர்ரிவர்சிபில் வியாதி என்று சொன்ன போதும் அப்பாவை குணப்படுத்திவிட முடியும் என்றே நினைத்தார்கள். ஒருவர் வாழ்கையில் நடந்ததை முழுவதுமாக மறந்துவிட முடியும் என்பதை அவர்கள் நம்பவில்லை. தனக்கு வெகு நெருக்கமானவர்களையும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடும் என்பதையும் அவர்கள் மனம் ஏற்க மறுத்தது.

ஆனால் டாக்டர்கள் சொன்னது போல், சண்முகம் எல்லாவற்றையும் மறக்க ஆரம்பித்தார். இப்பொழுது அவருக்கு தன் மனைவி லக்ஷ்மி யார், தன் மகன் யார், அமெரிக்காவில் இருக்கும் தன் பெண் யார் என்பது எதுவும் நினைவில் இல்லை. யாரோ தனக்கு சாப்பிடத் தருகிறார்கள், தான் சாப்பிட வேண்டும். இதுதான் அவர் மனதில் ஓடிக்கொண்டிருப்பது போல் இருந்தது.

நோய் முற்ற, அவர் அடிக்கடி கோபம் கொள்ள ஆரம்பித்தார். அவருக்கு உணவு கொடுப்பது பெரும்பாடாக ஆனது. சில சமயங்களில் தட்டை தட்டி விடுவார். வீட்டை விட்டு வெளியே போகப் பார்ப்பார். யாராவது தடுத்தால் அவர்களை வேகமாக தள்ளிவிட பார்ப்பார். அம்மாவுக்கு துணையாக ஒரு பெண்மணியை சிதம்பரம் அமர்த்தியிருந்தான். சில சமயங்களில் இருவர் பிடித்துக் கொண்டாலும் திமிறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற பார்ப்பார். “நாளுக்கு நாள் உங்க அப்பா கோவம் அதிகம் ஆவுது தம்பி” என்று வேலைக்கு வைத்திருந்த பெண்மணி கூறினாள்.

இப்படி இருந்தபொழுதும், சிதம்பரமும் அவன் அம்மாவும், அப்பாவிற்கு பழையதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்கள். “இதுனால ஏதாவது உபயோகமுண்டா?’ என்ற சிதம்பரத்தின் கேள்விக்கு, அம்மா, “ஏதோ ஒண்ணு நடந்தது அவர் மனசில் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதை நாம அவருக்கு சொன்னா, அவர் நினைவு திரும்பி வரலாம். ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அவர் யாருனு புரிஞ்சி, நாம யாருன்னு அவருக்கு  நினைப்பு வந்தா போதும். மறுபடியும் ஒரு முறை என்ன லக்ஷ்மின்னு கூப்பிடணும். அதுதான் என் பிரார்த்தனை. நாம செய்யறதைச் செய்வோம்” என்றாள். சிதம்பரமும் முடிந்தபொழுதெல்லாம் அப்பாவுக்கு தான் யார் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருந்தான். இருப்பினும் அவர் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார், “நர்சிங் வந்தானா?”

“வள்ளி டிக்கெட் புக் பண்ணிட்டாளாம். அடுத்த வாரம் வருவா” என்று அம்மா சொன்னாள். வள்ளி சிதம்பரத்தின் அக்கா. அவள் அப்பாவை போல் ‘மெக்கானிக்கல் இஞ்சினியர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு படித்து, இப்பொழுது சிதம்பரம் போல் அவளும் ஐ.டி. நிறுவனத்தில் கணவனுடன் அமெரிக்காவில் இருக்கிறாள். அப்பாவை பார்க்க வரவேண்டும் என்று அவள் நினைத்தபொழுது உலகமே கொரொனா வியாதியின் காரணமாக மூடப்பட்டது. நான்கு வருடத்துக்குப் பின் இப்பொழுதுதான் அவளால் வரமுடிகிறது. “ஏண்டா, அவளையாவது நேர்ல பாக்குறப்போ உங்க அப்பாவுக்கு அடையாளம் தெரியுமா?” என்ற அம்மாவின் கேள்விக்கு, “தெரிஞ்சா நல்லா இருக்கும்” என்று சிதம்பரம் பதில் கூறினான்.

“இத பார் சிது. உங்க அக்கா வந்து உன் அப்பா அம்மாவை நம்ம கூடவே வச்சிக்க சொன்னா நீ முடியாதுன்னு  ஸ்டராங்கா சொல்லு. இங்க என்னால வேலைக்கு போயி, ரெண்டு குழந்தைகளை பாத்துண்டு உங்க அம்மா அப்பாவையும் பாத்துக்க முடியாது. நீ தினமும் அங்க போ. எவ்வளவு நேரமானாலும் அவங்களோட இரு. ஆனா அவங்கள இங்க கொண்டு வரத பத்தி யோசிக்காத. அத நான் நடக்க விடமாட்டேன். சொல்லிட்டேன்” என்று சிதம்பரத்தின் மனைவி  ஷ்வேதா சொல்லி விட்டாள். வள்ளி என்ன சொல்லப் போகிறாளோ என்ற அச்சம் சிதம்பரத்திற்கும் ஷ்வேதாவிற்கும் இருந்தது. “இதுக்கு மேல நம்மால ஒன்னும் செய்ய முடியாது. உங்க அக்கா இது சரியில்ல அது சரியில்லன்னு ஏதாவது சொன்னா அவளை இந்தியாவுக்கு திரும்பி வர சொல்லு. அவ சொல்றத எல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா நிக்காத” என்று ஷ்வேதா அறிவுரை கூறினாள

வள்ளி அப்பாவை வந்து பார்க்கும் நாளை லக்ஷ்மி வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். தன் கணவனுக்கு ஆசை மகளை பார்க்கும்பொழுது சற்று நினைவு திரும்பாதா என்ற ஒரு நப்பாசை அவளுக்குள் இருந்தது. ஆனால் அவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தான் மிகவும் நேசித்த மகளை அப்பா அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு வருடங்கள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அன்று வெளிவந்தது. தன் மகளை இறுக்கமாக கட்டிக்கொண்டு லக்ஷ்மி கேவி கேவி அழுதாள்.

அடுத்த நாள் மாலை சிதம்பரம் அப்பாவுடன் வாக்கிங் கிளம்பும்பொழுது வள்ளியும் சேர்ந்து கொண்டாள். மளிகை கதையை கடக்கும்பொழுது அப்பா, “நர்சிங் வந்தனா?” என்று கேட்டார். சிதம்பரம் பதில் கூறுவதற்குள், வள்ளி, “காலைல வந்தானே” என்று கூறினாள்.

“ஓ. ஸைன் வாங்கிண்டு போனானா?”

“ஆமாம்.”

“அப்படின்னா சரி. நான் ஸைன் போட்டாதான் லாரிய கேட் வெளியிலே விடுவான்”

“அவன் சொன்னான்.”

சற்று தூரம் அப்பா மௌனமாக வந்தார். அவர் முகத்தில் பல நாட்களுக்கு பிறகு சிதம்பரத்தால் சிரிப்பை பார்க்க முடிந்தது. சிறிது நேரம் கழித்து, “அந்த ஸ்ரீநிவாஸ் ரெட்டி இன்னிக்கி வரமாட்டான்.”

“அப்படியா? ஏன்?” வள்ளி கேட்டாள்

“அவன் பெண் பார்க்க போறான்.”

“நீங்க எப்போ கல்யாணம் கட்டிக்க போறீங்க?”

அப்பா உரக்க சிரித்தார். “அப்பா அம்மா பெண் தேடராங்க. பார்போம்.”

வாக்கிங் முடியும் வரை சிதம்பரம் அறியாத பலரை பற்றி அப்பா கேட்க, வள்ளி அவர்களை அறிந்தவள் போல் பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.

அப்பா சிரித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளித்தாலும், வள்ளி செய்வது சரியில்லை என்று சிதம்பரத்துக்குப் பட்டது. அம்மாவும் இவனும் அவரை இந்த உலகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது வள்ளி அவரை வேறொரு உலகத்துக்கு கொண்டு செல்கிறாள். வள்ளி ஒரு மதியம் வீட்டுக்கு வந்தாள். அவளிடம் சிதம்பரம், “வள்ளி. நீ அப்பாகிட்ட அவர் சொல்றதெல்லாம் நிஜம்ன்னு நினைக்கற போல நடந்துக்கற. இது அவர் மறதியை இன்னும் அதிகமாக்கும். நாங்க அவர இந்த நிஜ உலகத்துக்கு கொண்டு வரணும்னு பாக்கறோம். அவருக்கு எங்களை தெரியாமலே போயிடும்னு பயமா இருக்கு” என்றான்.

வள்ளியின் சிரித்தாள். “சிது, ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதுதான் அவருடைய உலகம். நமக்கு இந்த உலகம் எவ்வளவு நிஜமோ அதே போல் ஸ்ரீநிவாஸ் ரெட்டியும் நர்சிங்கும் வாழும் உலகம் அவருக்கு நிஜம். நாம எவ்வளவு படுத்தினாலும் அவர நம்ப உலகத்துக்கு கொண்டுவர முடியாது, அவருக்கு இங்க யாரோடயும் ஒட்டாது நாமும் கஷ்டப்பட்டுக்கிட்டு அவரையும் கஷ்டப்படுத்தறதுக்கு பதிலா நாம அவர் உலகத்துல அவரோட சேர்ந்து இருக்கலாம் இல்லையா?” என்றாள்.

அன்று மாலை சிதம்பரத்தை பார்த்தவுடன் அப்பா கேட்டார், “ராகவ் ராவ் ரா மெட்டீரியல் ரிலீஸ் பண்ணிட்டானா?”

ஒரு நொடி வள்ளியை உற்று நோக்கிவிட்டு, சிதம்பரம் சொன்னான், “நாள காலைலதான் ரிலீஸ் பண்ணுவேன்னு சொல்றாரு.”

துக்கத்தின் இறுதி கட்டம்

எஸ். சுரேஷ்

 

ஆறு மாதங்கள் இருக்கும், லஞ்ச் சாப்பிட தட்டை எடுத்து மேஜையின் மேல் வைத்தபோது அவன் மொபைல் ஒலித்தது. “சரவணா. ஹாஸ்பிடலுக்கு சீக்கிரம் வாடா. அப்பாவுக்கு ஏதோ ஆகிடுச்சு. எல்லா டாக்டரும் இப்போ ரூம்ல இருக்காங்க. எனக்கு பயமா இருக்கு சரவணா. உடனே கிளம்பி வா”.

அம்மாவின் குரலில் தெரிந்த பயம் சரவணனையும் தொற்றிக்கொண்டது. அவன் ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்தபோது அம்மாவின் அழுகைக் குரல் உள்ளேயிருந்து கேட்டது. அப்பா மாரடைப்பு வந்து, திரிப்ள் பைபாஸ் முடிந்து. தேறி வரும்போது எதிர்பாராதவிதமாக அவர் மரணம் நிகழ்ந்திருந்ததது. டாக்டர்கள் எல்லோரும் அவர் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என்று சொல்லியிருந்தார்கள். சற்று சோர்வடைந்திருந்தாலும், சரவணனிடமும் அவன் அம்மாவிடமும் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் இப்படி திடீரென்று காலமானது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“உங்க அம்மா ஒரு மகராசி. எப்போவும் சிரிச்ச முகத்தோட இருக்கும் அவள இந்த நிலைமைக்கு கடவுள் ஆளாக்கிட்டானே. சுமங்கலியா போயிருக்க வேண்டியவளுக்கு இந்த கதியா?”, என்று சரவணனிடம் சொல்லி தெரு முக்கில் பூ விற்கும் கிழவி அழுதாள். சரவணன் எங்கு சென்றாலும் அவனுக்கு ஆறுதல் கூறினார்கள். அம்மாவை புகழும் அளவுக்கு அப்பாவையும் புகழ்ந்தார்கள். “எல்லாரிடமும் எவ்ளோ நல்லா பழகுவார் தம்பி. அவர் பேச ஆரம்பிச்சா நாங்க எங்க வேலையா விட்டுட்டு அவர் பேச்ச ரசிப்போம். அதனால்தான் அவரு பெரிய சேல்ஸ ஆபிசரா இருந்தாரு”, என்று மளிகைக் கடை அண்ணாச்சி கூறினார். கறிகாய் விற்கும் கிழவி,“ இது போல ஒரு புருஷன் பொஞ்சாதி ஜோடிய நான் பாத்ததே இல்லை தம்பி. நாசமா போற எவன் கண்ணோ பட்டிடிச்சி”, என்றாள்.

வீடு மதுரையில் இருந்தாலும், அப்பாவுக்கு தென் தமிழகமெங்கும் சுற்றும் வேலை. அவர் என்று போனாலும் வெள்ளிக்கிழமை இரவு மதுரைக்கு வந்துவிடுவார். மறுபடியும் திங்கட்கிழமை கிளம்புவார். வார இறுதியில் பௌர்ணமி என்றால் சரவணனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். அன்று அவர்கள் மூவரும் கொல்லைப்புறத்தில் உட்கார்த்து நிலா வெளிச்சத்தில் சாப்பிடுவார்கள். அம்மா பழைய தமிழ் பாடல்களை இனிய குரலில் பாடுவாள். ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் அப்பா தன்னுடைய விருப்பமான பாடல் ஒன்றை கேட்பார். அம்மா அதைப் பாடுவாள். சில நாட்கள் நள்ளிரவு வரை இந்த கச்சேரி நடக்கும். இது போன்ற நாட்களில் அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

இப்படி மகிழ்ச்சியுடன் இருந்த அம்மா இப்போது இப்படி ஆகிவிட்டாளே என்று சரவணன் அழுதான். அம்மாவையோ, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, அவள் அழுகை பத்து நாட்களுக்கு நிற்கவேயில்லை. திருச்சியிலிருந்து சரவணனின் பாட்டி வந்திருந்தாள். “என் பொண்ண தனியா விட்டுட்டு போயிட்டானே அந்த மனுஷன்”, என்று அவளும் அழுதாள். சரவணனுக்கு என்னை செய்ய வேண்டும் என்று புரியவில்லை. இவ்வளவு நாட்கள் அவன் அம்மா அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்திருந்தான். அவனுக்கு எந்த ஒரு சின்ன பிரச்சினை என்றாலும் அவர்கள்தான் தீர்த்து வைப்பார்கள். அவன் சென்னையில் வேலை செய்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் பஸ் பிடித்து மதுரைக்கு வந்துவிடுவான். மூன்று வருடங்களாக அவன் இதை செய்து வருகிறான். அவனுக்கு எப்பொழுதும் அம்மா அப்பாவுடன் இருக்கவேண்டும். இப்பொழுது அவன் தான் அநாதை ஆகிவிட்டது போல் உணர்ந்தான்.

சோகத்திலிருந்து மீண்டபோது அம்மா கோபமாக இருந்தாள். அவள் சிரித்த முகம் சினம் கொண்ட முகமாக மாறியிருந்தது. அவளுக்கு எப்பொழுது கோபம் வரும், யார் மேல் கோபம் வரும் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை. அம்மாவின் இந்த முகத்தை கண்டு பயந்த சரவணன், தன் அலுவலகத்துக்கு வரும் மனோதத்துவ நிபுணரிடம் இதை பற்றி கேட்டான். “சரவணன், பெரும் துயரம் ஏற்படும்போது, அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பல படிநிலைகளை ஒருவர் கடந்து வரவேண்டும். முதலில் நடந்ததை ஏற்க மறுப்பார்கள், அடுத்ததாக அவர்களுக்கு தங்கள் மீதும் இந்த உலகத்தின் மீதும் கோபம் வரும். மெதுவாக கோபம் தணிந்து சுயபச்சாதாபம் ஏற்படும். அதை கடந்தவர்களுக்கு வாழ்வின் மேல் ஒரு வெறுப்பு உண்டாகும். அதை கடந்து வருபவர்கள் துயரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை மறுபடியும் தொடங்குவார்கள். உன் அம்மா இப்பொழுது இரண்டாம் படிநிலையில் நிற்கிறாள். நாட்கள் ஆக ஆக மெதுவாக இந்த துயரத்தை ஏற்றுக்கொள்வாள். அதுவரையில் நீ அவளுக்கு வேண்டிய தெம்பை குடு”, என்றார்.

அவர் சொன்னது போல் அம்மா கோபமாக இருக்கும் கட்டத்தை கடந்து, சுய பச்சாதாப கட்டத்தை கடந்து, இப்போது வாழ்க்கை மேல் வெறுப்புடன் இருந்தாள். சரவணனுக்கு அவள் மெதுவாக தேறி வருவது போல் தோன்றியது. சென்னையில் இருக்கும்பொழுதெலாம் அவளுடைய நினைவாகவே இருந்தது. தினமும் இரு முறை தொலைபேசியில் அம்மாவுடன் பேசினான். பாட்டி அம்மாவுடன் இருந்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. வார இறுதியில் அவன் மதுரைக்கு வந்துவிடுவான். அம்மாவை சென்னைக்கு வருமாறு அழைத்தான். அம்மா சம்மதிப்பாள் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை. அவளோ, சரி வருகிறேன், என்று சொல்லியிருந்தாள். சரவணனுக்கு அது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஒருவாறாக வாழ்க்கை மறுபடியும் சீராகச் செல்கிறது என்று அவன் நினைத்தபொழுது அந்த இடி விழுந்தது.

சனிக்கிழமை காலை மதுரைக்கு வந்த சரவணனை அவன் மாமா தொலைபேசியில் அழைத்து, “பத்து மணிக்கு வீட்டுக்கு வா”, என்றார். அவர் சரவணனை ஒரு வக்கீலிடம் அழைத்து சென்றார். இருவருக்கும் தாம் எதற்காக அங்கு செல்கிறோம் என்று தெரியவில்லை. “வக்கீல் வரச்சொன்னாரு. ஏதோ முக்கியமான விஷயம்ன்னு சொன்னாரு”

வக்கீல் அவர்களை வரவேற்றார். அவருடன் இன்னொரு வக்கீல் இருந்தார். “இவர் என் நண்பர் ஆறுமுகம். திருநெல்வேலியில் வக்கீலா இருக்காரு. அவர் உங்களுடன் மிக முக்கியமான ஏதோ ஒன்ன பேசணும்னாரு.”

வக்கீல் ஆறுமுகம் சரவணனைப் பார்த்து, “தம்பி, உங்ககிட்ட நான் இதை எப்படி சொல்லணும்னு எனக்கே புரியல”. சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு,. “உங்க அப்பா அடிக்கடி டூர் போவார் இல்லயா?”, என்று கேட்டார்.

“ஆமாம்”, என்றான் சரவணன்.

“திருநெல்வேலிக்கு போவாருன்னு உனக்கு தெரியுமா?”

“தெரியும். அங்க அடிக்கடி போவாரு. எங்களுக்கு இருட்டுக் கடை ஹல்வா வாங்கிட்டு வருவாரு”

மறுபடியும் வக்கீல் மௌனமாக இருந்தார்.

“சொல்லுங்க”, என்றான் சரவணன்.

“சொல்றத நிதானமா கேளுங்க. நான் சொல்றது எல்லாம் உண்மை. அது உண்மைனு நிரூபிக்க என்கிட்ட ஆதாரம் இருக்கு”, என்றார்.

சரவணனுக்கு குழப்பமாக இருந்தது. “என்ன உண்மை? என்ன நிரூபிக்க போறீங்க?”, என்று கேட்டான்.

சரவணன் தோளின் மேல் ஆறுமுகம் வக்கீல் கை போட்டு சொன்னார், “இது உனக்கு அதிர்ச்சியா இருக்கும் தம்பி ஆனா இது உண்மை. உன் அப்பா திருநெல்வேலியிலே வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கிட்டிருந்தாரு”

சரவணன் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான். அவன் மாமா வக்கீலை பார்த்து கத்த ஆரம்பித்தார். “டேய். யாரப் பத்தி என்ன சொல்ற. அவர் எந்த மாதிரி ஆள் தெரியுமா, அவர் பேர கெடுக்கறதுக்குனு திருநெல்வேலியிலேர்ந்து வந்தயாடா நீ”. கோபம் பொங்கி எழ வக்கீலை அடிக்க வந்தார்.

சரவணனின் வக்கீல் அவரைத் தடுத்தார். பிறகு ஆறுமுகத்தை பார்த்து, “ஆறுமுகம். என்னய்யா இப்படி குண்ட தூக்கி போடற? இவங்க அப்பாவுக்கு இங்க எவ்வளவு பெரிய பேரு தெரியுமா, நீ சொல்றத எங்களாள எப்படியா ஏத்துக்க முடியும்?”

ஆறுமுக வக்கீல் ஒரு மொபைல் ஃபோனை சரவணன் முன் நீட்டினார். “இதில் இருக்கும் மெசேஜ் எல்லாம் பார். நான் சொன்னது உண்மைன்னு உனக்கு புரியும்”

சரவணன் குறுஞ்செய்திகளை படிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு செய்தியும் அவன் அப்பாவின் உடல்நிலை பற்றி அவரே அனுப்பியது போல் இருந்தது. அவர் எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவரை பார்க்கும் டாக்டர் பேர் என்ன, என்ன மாத்திரைகள் கொடுத்திருக்கிறார்கள், யாரெல்லாம் அவரை பார்க்க வந்தார்கள் என்ற விவரங்கள் அதில் இருந்தன.

“வாட்ஸ்ஆப்பும் பாரு”, என்றார் ஆறுமுகம்

வாட்ஸாப்பில் அப்பாவின் ECG, அவர் மருந்து சீட்டு ஆகியவற்றின் படங்களும், அப்பாவின் செல்ஃபியும் இருந்தன. அதில் வேறொரு பெண்மணியின் செல்ஃபியும் இருந்தது. ஒரு படத்தில் அந்த பெண்மணியுடன் ஒரு சிறு பெண் இருந்தாள்.

ஆறுமுக வக்கீல் சொன்னார், “இது அந்த அம்மாவின்  ஃபோன்”. அவருடைய பையிலிருந்து ஒரு மொபைலை எடுத்து, “இது உங்க அப்பாவோட இன்னொரு ஃபோன். இதிலிருக்கும் படங்கள பார்” என்றார்.

அந்த மொபைலில் சரவணனின் அப்பா அந்த பெண்மணியுடன் இருப்பது, அந்தச் சிறு பெண்ணை தூக்கி விளையாடுவது, லுங்கியுடன் சோபாவில் உட்கார்ந்திருப்பது, சாப்பிடுவது என்று பல படங்கள் இருந்தன.

சரவணன் அவன் மாமாவை பார்த்தான். அவருக்கு வேர்த்திருந்தது. இவ்வளவு நேரம் கோபமாக இருந்தவர் இப்பொழுது வாயடைத்து நின்றிருந்தார். சரவணனும் சிலை போல் நின்றிருந்தான்.

சரவணனின் வக்கீல், “ஆறுமுகம். நீ திருநவேலிலேருந்து இதை மட்டும் சொல்ல வரலைன்னு எனக்கு தெரியும். நீ வந்த விஷயம் என்ன?”, என்று கேட்டார்.

“உட்கார்ந்து பேசுவோமா”, என்றார் ஆறுமுக வக்கீல்

எல்லோரும் உட்கார்ந்தார்கள். “மூணு மாசத்துக்கு முன்னாடி, நான் அமெரிக்கா கிளம்பற நாள் அன்றைக்கு உங்க அப்பா கிட்ட அவர் எழுத சொன்ன உயிலை எழுதி கொடுத்துட்டு போனேன். நான் அமெரிக்கா போற அவசரத்துல அவர் கையெழுத்து வாங்க முடியல. “நான் படிச்சி பாத்து கையெழுத்து போட்டு வைக்கறேன்”, என்று உங்க அப்பா சொன்னாரு. நான் கிளம்பினதும் கொஞ்சம் நாளிலேயே அவர் காலமாயிட்டாரு. அந்த உயில் இப்போ எங்கே இருக்குனு எனக்கு தெரியல. ஆனா உங்க அப்பா என்னை அந்த உயில் எழுத சொன்னது உண்மை. வேணும்னா இந்த மெயில் பாருங்க,” என்று ஒரு மின்னஞ்சலை காண்பித்தார். பிறகு அவர் பையிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். “இது தான் அந்த உயிலோட நகல்”, என்று சரவணனிடம் கொடுத்தார்.

“என்ன எழுதியிருக்குன்னு நீயே சொல்”, என்றார் சரவணனின் வக்கீல்.

ஆறுமுக வக்கீல், “நீங்க வாடகைக்கு விட்டிருக்கும் ஒரு பெட்ரூம் பிளாட்டும் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கமும் என் கட்சிக்காரருக்கு கொடுக்கணும்னு உன் அப்பாவுடைய ஆசை”, என்றார்

சரவணன் பேசுவதற்கு முன் அவனுடைய வக்கீல், “வில் இன்னும் ரிஜிஸ்டர் செய்யலியே. இவன் அப்பா கையெழுத்து போட்டார் என்பதற்கு எந்த சாட்சியும் இல்லை. அவர் கையெழுத்து போட்ட உயிலும் உங்ககிட்ட இல்ல. இந்த கேஸ் செல்லுபடி ஆகாது”, என்றார்

“நான் உயிலை சரவணனின் அப்பாவிடம் கொடுத்ததற்கான சாட்சி இருக்கு. அங்க வேல பாக்குற நர்ஸ் நான் கொடுத்ததபாத்திட்டிருந்தா. இவன் அப்பா அதில் கையெழுத்து போடுவதையும் அவ பாத்திருக்கா. அவர் இறந்த பிறகு அந்த உயில் காணல. கோர்ட்ல வாதாட எனக்கு வேண்டிய ஆதாரம் இருக்கு”, என்றார்.

“அப்போ கோர்ட்ல பாத்துப்போம்”

ஆறுமுகம் நிராசையுடன் கிளம்பினார். சரவணனும் மாமாவும் வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தனர். மாமா சோர்வாக இருந்தார். “உங்க அம்மா கிட்ட இத எப்படி சொல்றது? அவ உடைஞ்சி போயிடுவா”, என்றார். சரவணனால் இந்த செய்தியை இன்னும் நம்ப முடியவில்லை. “அப்பா எப்படி மாமா அப்படி பண்ணாரு?”. இருவரிடமும் இந்த கேள்விக்கு பதில் இல்லை.

அவர்கள் நினைத்தது போல் அம்மா செய்தியை கேட்டு அதிர்ந்து போயிருக்க வேண்டும், ஒன்றுமே பேசாமல் மௌனமாக இருந்தாள். அவள் மௌனம் சரவணனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பாட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். அப்பாவை வைய ஆரம்பித்தாள். ஓ என்று கதறி அழுதாள். அன்று மாலை பெரியப்பா, சித்தப்பா மற்றும் அத்தை வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் ஒரு பூகம்பம் வெடித்தது. பாட்டி அவர்கள் எல்லோரையும் திட்ட, அவர்கள் பதிலுக்கு திட்ட அவர்கள் குடும்பங்களுக்கு நடுவே உறவு முறிந்து போனது.

சரவணன் உடைந்து போயிருந்தாலும் அவன் அம்மா உடையவில்லை. “நாம எதுக்குடா வெட்கப்படணும்? நாம வேண்டியத எல்லாம் கொடுத்தோம். அந்த மனுஷன் புத்தி அப்படி போச்சுன்னா நாமா பொறுப்பு. ஊர் வாய்க்கு பயந்து வீட்லையே கிடக்காத. தல நிமிர்ந்து வெளியே போயிட்டு வா.” இதை சரவணனிடம் சொன்னதோடு அல்லாமல், அப்பா இறந்த பிறகு வெளியே செல்லாத அம்மா இப்பொழுது வெளியே செல்ல ஆரம்பித்தாள்.

ஒரு மாதம் கழித்து ஊரில் எல்லோரும் இதை மறந்துவிட்டிருந்தார்கள். மறுபடியும் வாழ்க்கை சகஜ நிலைக்கு வந்துவிட்டது என்று சரவணன் எண்ணும்போது அடுத்த குண்டு விழுந்தது.

ஒரு நாள் அதிகாலை பெரியப்பா, சித்தப்பா, அத்தை எல்லோரும் சரவணன் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் அத்தை, “ஐயோ. ஐயோ. பணத்துக்கு ஆசப்பட்டு என் அண்ணனை கொன்னுட்டியேடா”, என்று சரவணனின் சட்டையை பற்றிக்கொண்டு உலுக்க ஆரம்பித்தாள். என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. அத்தையின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள்.

கூச்சல் எல்லாம் சற்று ஓய்ந்த பிறகு நடந்தது என்ன என்று தெரிய வந்தது. சரவணனுக்கு அவன் அப்பாவின் துரோகம் முன்பே தெரிந்து விட்டதாகவும், அவன் தான் அப்பாவை கொன்றுவிட்டான் என்றும் யாரோ புரளி கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இந்த சண்டையை பற்றி கேள்விப்பட்ட சரவணனின் வக்கீல் அவன் வீட்டுக்கு வந்தார். அவர் பெரியப்பாவை பார்த்து, “உங்களுக்கு இவ்வளவு வயசாகியும் எந்த விஷயமும் நிதானமா யோசிக்கணும்னு தொணலையா? யாரோ சொன்னாங்கன்னு அநியாயமா இந்த பையன் மேல இப்படி ஒரு பழிய போடறீங்க. இத பாருங்க. நடந்தது இதுதான். மதியம் ஒரு மணி வரை சரவணன் அவன் அப்பாவுடன் இருந்தான். அவன் கிளம்புற வரையிலும் காத்திருந்த திருநெல்வேலி வக்கீல், அவன் கிளம்பியதும் அறைக்குள் வந்து சரவணனின் அப்பாவிடம் ஒரு பத்திரத்த கொடுத்திருக்காரு. இத ஒரு நர்ஸ் பாதிருக்கா. அப்புறம் சரவணன் அம்மா வந்து அப்பா நிலைமை மோசமாயிட்டதைப் பாத்து அழுது டாக்டரைக் கூப்பிட வீட்டுல இருந்த சரவணனை போன் பண்ணி சொல்லியிருக்காங்க. அப்பா இறந்த சமயம் சரவணன் அங்க இல்ல. நீங்க இப்படி பேசி ஒரு சின்ன பையன் வாழ்க்கைய நாசமாக்குறீங்க. உங்களுக்கெல்லாம் வெக்கமா இருக்கணும்”, என்று கூறிவிட்டு எல்லோரையும் அங்கிருந்து வெளியே அனுப்பினார்.

அந்த சம்பவத்துக்கு பிறகு சரவணன் வெகுவாக மாறிவிட்டான். எல்லோருடன் கலகலப்பாக பேசுபவன் இப்பொழுது மௌனமாக இருந்தான். அம்மாவும் மாமாவும் எவ்வளவு சொல்லியும் வேலையை விட்டுவிட்டான். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குளித்தான். சில வேளைகள்  சாப்பிட மறுத்தான். அவன் டீப் டிப்ரெஷனில் இருப்பதாக டாக்டர் சொன்னார்.

ஒரு நாள் மதியம் மாமா சரவணனிடம், “சரவணா, நமக்கு நல்ல காலம் பொறக்கப் போகிறது. இன்னிக்கி ராத்திரி நாம நாகர்கோவிலுக்கு புறப்படுறோம். அக்கா நீயும் எங்களோட வர”, என்றார்.

“நாகர்கோவில்ல என்னடா?”

“அங்க ஒரு மாந்த்ரீகன பாத்திருக்கேன். அவர் ஆவிகள வரவழைப்பாராம். மாமா ஆவிய வரவழைச்சு அவர் கிட்டயே அவர் ஏன் இப்படி செஞ்சார், எப்படி செத்தார், உயில் விஷயம் என்னன்னு கேட்டுடலாம். அவர் சொன்னா எல்லார் வாயும் மூடவேண்டியதுதான். அதுக்கப்புறம் யாரும் அத பத்தி பேசக்கூடாது”

பீதி கலந்த குரலில் அம்மா கேட்டாள், “ஏன்டா. ஆவி பேய் பிசாசுன்னு இதெல்லாம் எங்கடா போய் முடியும். இதெல்லாம் நல்லதுக்காடா?”

மாமா பதில் சொல்வதற்கு முன் சரவணன், “நாம போலாம் மாமா. நா என் அப்பாவோட பேசணும்”, என்றான். அவனுக்கு இப்பொழுது புதிதாக தெம்பு வந்திருந்தது.

அன்று மாலை சரவணன், அவன் அம்மா, மாமா, பெரியப்பா, சித்தப்பா, அத்தை என்று எல்லோரும் நாகர்கோவில் கிளம்பினார்கள். நாகர்கோவிலில் மாந்த்ரீகனை பார்த்ததும் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. பரட்டை முடியுடன், வெள்ளை தாடியுடன் வயதான ஒருவரை எதிர்பார்த்த அவர்களுக்கு முன் காவி வெட்டி உடுத்திய ஒரு இலைஞன் நின்றுக்கொண்டிருந்தான்.

“எங்க அப்பா ஆவிய உங்களால வர வைக்க முடியுமா. நான் அவரோட பேசணும்” என்று சரவணன் அவனிடன் கேட்டான்.

மாந்த்ரீகன் சற்று நேரம் ஆகாயத்தை உற்றுப் பார்த்தான். பிறகு, “ஆவிகளை எப்படி அழைப்பது என்று எனக்கு தெரியும். ஆவிகள் என் அழைப்பை கேட்டு வரும் என்ற உத்தரவாதத்தை என்னால் குடுக்க முடியாது. அவர் வந்தா அது உங்க குடுப்பினை”, என்றான்.

அன்று இரவு எல்லோரும் ஒரு பெரிய அறையில் கூடினார்கள். அறை நடுவில் ஒரு ஹோமகுண்டம் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் வரட்டியும் விறகுகளும் இருந்தன. ஒரு பெரிய பாத்திரம் முழுக்க நெய் வைக்கப்பட்டிருந்தது. சந்தனமும் குங்குமமும் தடவிய இரண்டு பெரிய குத்துவிளக்குகள் இரண்டு பலகைகளுக்கு முன் வைக்கப்பட்டிருந்தன. ஹோமகுண்டத்தின் அருகில் ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டிருந்தது.

அந்த பெரிய பலகையில் மாந்த்ரீகன் உட்கார்ந்தான். குத்துவிளக்குகளுக்கு அருகில் உள்ள பலகைகளில் சரவணனையும் அவன் அம்மாவையும் உட்கார சொன்னான். மற்ற உறவினர்களை சற்று தூரத்தில் உட்கார சொல்லிவிட்டு, “இத பாருங்க. ஆவி வந்தா சரவணனும் அவன் அம்மாவும் மட்டும்தான் பேசணும். வேற யாரும் பேசக்கூடாது. வேற யாராவது பேசினா என்ன ஆகும்னு என்னால சொல்ல முடியாது”. பிறகு சரவணனையும் அவன் அம்மாவையும் பார்த்து, “எந்த காரணத்துக்காகவும் நீங்க ஆவியோட பேச வேண்டாம்னு நினைச்சா குத்துவிளக்க தள்ளிவிடுங்க. அதை தள்ளினா ஆவி மறஞ்சிடும். பிறகு அழைச்சாலும் வராது” என்றான்.

மின் விளக்குகள் அணைக்கப்பட்டதும் அறை முழுவதும் இருள் கவிந்தது\. எல்லோருக்கும் பயமாக இருந்தது. மாந்த்ரீகன் ஹோமகுண்டத்தில் நெருப்பை மூட்டினான். நெருப்பின் வெளிச்சத்தில் சரவணனின் கண்களில் இருந்த எதிர்பார்ப்பும், அவன் அம்மாவின் கண்களில் இருந்த பீதியும் நன்றாக தெரிந்தது.

மந்திரங்கள் சொல்லிக்கொண்டே மாந்த்ரீகன் தீயை வளர்த்தான். அக்னி ஜ்வாலை மேலெழுந்தது. நெய் ஊற்ற ஊற்ற தீ உயர்ந்தது. மாந்த்ரீகனின் குரல் உயர ஆரம்பித்தது. எல்லோரும் தீக்கு கட்டுப்பட்டவர்கள் போல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மெதுவாக தீயில் ஏதோ உருவம் தெரிவது போல் இருந்தது. இதை கண்ட சரவணனின் கண்கள் பிரகாசமடைந்தன. எல்லோரும் நிமிர்த்து உட்கார்ந்தார்கள். பயம் கலந்த எதிர்பார்ப்பு எல்லோர் கண்களிலும் தெரிந்தது. மாந்த்ரீகன் நெய் ஊற்றி மந்திரங்களை உரக்கச் சொல்ல,  “அப்பா” என்று சரவணன் உரக்க கத்தினான். எல்லோரும் நெருப்பில் தோன்றிய முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

“அப்பா” என்று சரவணன் மறுபடியும் அழைத்தான்.

அந்த முகம் சரவணனை உற்று நோக்கியது. “நீங்கதானா அப்பா?”. சரவணன் நம்ப முடியாமல் கேட்டான்.

உருவம் தலையசைத்தது

சரவணனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. அவன் அம்மாவை பார்த்தான். அவள் கோபமாக நெருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சரவணனுக்கு அவள் முகத்தை பார்க்க பயமாக இருந்தது.

அவன் மறுபடியும் அந்த உருவத்தை பார்த்து கேட்டான், “அப்பா. உங்கள யாரோ கொன்னுட்டாங்கன்னு சொல்றாங்க. அது உண்மையா?”

அந்த உருவம் குலுங்கிக் குலுங்கி ஆழ ஆரம்பித்தது. இவர்களுக்கு சத்தம் கேட்கவில்லை என்றாலும், அந்த உருவம் அழுவது நன்றாக தெரிந்தது. உறவினர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மாந்த்ரீகன் அவர்களை நோக்கி முறைத்த பிறகு அங்கு அமைதி நிலவியது.

சரவணன் ஆச்சரியமும் பயமும் கலந்த கண்களுடன் அந்த உருவத்தைப்  பார்த்தான். மெதுவாக உருவம் அழுவதை நிறுத்தியது. சரவணன் அதை நோக்கி, “அப்பா, உங்கள கொன்னது யார்?”, என்று கேட்டான்.

குனிந்த தலையை அந்த உருவம் நிமிர்த்தும்பொழுது அம்மாவின் முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு கீழே விழுந்து உருண்டது. நெருப்பில் தெரிந்த உருவம் மெல்ல மறைந்தது.

 

 

 

உன்னைக் கட்டிக் கொண்டு வாழ்வதற்கான காரணங்கள் சொல்லக் கூடியவையல்ல

எஸ். சுரேஷ்

 

ஐந்தடி பத்து அங்குல உயரம், ஸ்வரவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் பதித்த நீல நிற பட்டுச் சேலை. நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையுமாய் தங்களை நோக்கி வந்த வர்ஷாவை விருந்தினர்கள் மேல் பன்னீர் தெளிக்க அமர்த்தப்பட்ட மூன்று பெண்களும், வாயில் காவலனும், மாளிகையை அலங்கரித்துக் கொண்டிருந்தவர்களும் வாய் திறந்து இமை மூடாமல் பார்த்தார்கள். இவர்கள் யாரையும் கவனிக்காமல் அரவிந்துடன் ஹாலுக்குள் நுழைந்தாள் வர்ஷா. ஹாலின் மறுபுறத்தில் உள்ள கதவை காட்டி,“அந்த கதவ திறந்தா வேற லோகம். அங்கதான் அம்மாவும் இருக்கா”, என்று சொல்லிவிட்டு அரவிந்த் வேறு யாரையோ வரவேற்க சென்றுவிட்டான்.

ஐநூறு பேர் தாராளமாகக் கொள்ளும் ஹால் அலங்கரிக்கப்டுவதை பார்த்தபடியே மறுபக்கம் சென்றுக் கொண்டிருந்த வர்ஷா தன் பெயரை யாரோ கூப்பிடுவதை கேட்டு திரும்பி பார்த்தாள். அன்னபூர்ணா ஆண்ட்டி வேகமாக அருகில் வந்தது வர்ஷாவை அணைத்துக்கொண்டு, “எவ்வளவு நாள் ஆயிற்று உன்னை பார்த்து. எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டாள். “நீ இவ்வளவு இறுக்கமாக கட்டிக்கொண்டால் அவள் புடவை கசங்கிவிட போகிறது. கொஞ்சியது போதும். அவளை விடு”, என்று கூறிக்கொண்டு ராவ் அங்கிள் அருகில் வந்தார்.

“உன் புடவை அருமையா இருக்கு. இனிக்கி நீ ரொம்ப அழகா இருக்க. தலைல ஒரு முழம் மல்லிப்பூ வச்சிருந்தா அப்படியே மஹாலக்ஷ்மி மாதிரி இருப்ப”, என்றாள் அன்னபூர்ணா ஆண்ட்டி.

“அதெல்லாம் ஓல்ட் ஃபேஷன்”, என்றார் ராவ்

“அழகா இருப்பது எப்பவுமே ஃபேஷன்தான்”, என்றாள் அன்னபூர்ணா ஆண்ட்டி

“யெஸ்” என்ற வர்ஷா அன்னபூர்ணா ஆண்ட்டிக்கு ஹை ஃபைவ் கொடுத்தாள்.

வர்ஷாவுக்கு இந்த தம்பதியை பார்த்தபோதெல்லாம் அவள் பால்ய நினைவுகள் மேலோங்கி வந்தது. அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்ததும், வர்ஷாவை தங்கள் குழந்தை போலவே பார்த்துக்கொண்டதும் மனக்கண் முன் தோன்றின. அவர்கள் இன்னும் தன் மேல் அதே அளவு பாசம் வைத்திருப்பதை கண்டு வர்ஷா நெகிழ்ந்தாள். எப்பொழுதும் போல், “இவர்களுக்கு நிஷா எப்படி மகளாக பிறந்தாள்?” என்றால் கேள்வி மனதுக்குள் எழுந்தது.

வர்ஷா கார்டனுக்கு செல்லும் கதவை திறந்தவுடன் ராட்சச ஸ்பீக்கரிலிருந்து அவள் காதுகளை செவிடாக்கும் அளவுக்கு ஒலி கேட்க முகம் சுளித்தாள்.

வர்ஷாவின் கண்ணுக்கு முன் பரந்திருந்த புல்வெளியில் நான்கு வடநாட்டு ஆண்கள் அங்கு கூடியிருந்த பெண்களுக்கு மருதாணி இட்டுக்கொண்டிருப்பதை கண்டாள். வர்ஷாவின் மகள் ஓடி வந்து தன் கைகளை காட்டி, “இந்த பேட்டர்ன் நல்லா இருக்கு இல்ல?” என்று கேட்டாள். “ரொம்ப நல்லா இருக்கு”, என்று சொன்னவுடன் அங்கிருந்து ஓடி அவள் நண்பர்கள் கூட்டத்தில் மறைந்தாள். நாலாபுறமும் பிரகாஷை தேடிய வர்ஷாவின் கண்களுக்கு தூரத்தில் ஒரு செயற்கை அருவியும், மரங்களிலிருந்து வழியும் சீரியல் பல்புகளும், சிறு குளமும் அதில் இரு வாத்துகளும்தான் தென்பட்டன. “வர்ஷா” என்று மறுபடியும் ஒரு குரல் கேட்டது. பிரதீபாவின் குரல். பிரதீபா மணமகளின் தாய். வர்ஷாவுடைய இளவயது தோழி. வர்ஷாவின் இரண்டு ரகமான தோழிகளில் பிரதீபா முதல் ரகத்தை சேர்ந்தவள். வர்ஷாவின் வெற்றிகளை தன் வெற்றியாய் நினைத்து அவளுக்கு தோழியாக இருப்பதை பெருமையாக நினைப்பவள். இன்னொரு ரகம் வர்ஷா எட்டிய உயரங்களை கண்டு பொறாமைப்பட்டவர்கள். அந்த சங்கத்துக்கு நிஷா நியமிக்கப்படாத தலைவியாக இயங்கினாள்.

வர்ஷாவைப் பார்த்தவுடன் பிரதீபா கூறிய முதல் வாக்கியம், “பிரகாஷ் ஒரு மணி நேரமா குடிக்கிறான். எப்பவும் போல நிஷா என்கரேஜ் செய்யறா”. அதற்கு பிறகு தான், “வாவ். புடவை சூப்பர். உன் செலெக்ஷன் எப்பவுமே சூப்பர்தான்” என்று சொன்னாள். பிரகாஷ் எங்கிருக்கிறான் என்று வர்ஷா கேட்பதற்குமுன், பிரதீபாவின் தந்தை வர்ஷாவை கைகாட்டி அழைத்தார்.

வர்ஷா அவர் அருகில் உட்கார்ந்தவுடன், “என்னம்மா வர்ஷா. நீயும் டான்ஸ் ஆடப் போறியா?” என்று கேட்டார்.

பாட்டுச் சத்தம் காதைப்  பிளந்து கொண்டிருந்ததால் அவர் உரக்க பேச வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் வர்ஷாவுக்கு அவர் பேசியது காதில் சரியாக விழவில்லை. அவர் மறுபடியும் அதே கேள்வியை இன்னும் உரக்க கேட்டார்.

“வை நாட்?” என்றார் பிரதீபாவின் தாயார். “காலூரியில் டான்ஸ் போட்டியென்றால் அதில் வர்ஷாதான் ஜெயிப்பாள் என்று பிரதீபா கூறியிருக்கிறாள்.”

“அப்படியென்றால் சரி. இப்பொழுதெல்லாம் டான்ஸ் தெரியவில்லை என்றால் கல்யாண சத்திரத்துக்குள் விடுவதில்லை தெரியுமா?”.

“அப்பா டோன்ட் எக்ஸாஜிரேட்”, என்ற பிரதீபா, “இவர் இப்படித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். அதுதான் அவர் வேலை. நாம போகலாம் வா”, என்று கூறிவிட்டு வர்ஷாவை அழைத்துக்கொண்டு நூறு மீட்டர் தூரத்தில் இருந்த கண்ணாடி மாளிகையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வளைந்து நெளிந்து சென்ற பாதையின் வலதுபுறத்தில் வண்ண ரோஜாக்கள் பூத்து குலுங்கின.. இடது பக்கம் டிஸ்க் ஜாக்கி ஒருவன் சி‌டிகளை மாற்ற, இளம் பெண் ஒருத்தி மைகில் “பீப்பிள் லெட் மீ சீ சம் எனர்ஜி” என்று கத்த, கூடியிருந்த இளைஞர் கூட்டம் புயலில் சிக்கிய தென்னை மரம்போல் தலையை வேகமாக ஆட்ட, மருதாணி காயாத கைகளை வான் நோக்கி வைத்துக்கொண்டு நடனமாடும் பெண்களை கடந்து வர்ஷாவும் பிரதீபாவும் நடந்தனர்.

“நிஷாவுக்கு உன் மேல இன்னும் அந்த கோவமும் பொறாமையும் போகவே இல்ல. பிரசாத் உன்ன கல்யாணம் செஞ்சதுலேர்ந்து அவ இப்படி ஆயிட்டா. அப்ப கோவப்பட்டா போறாமப்பட்டா சரி. இப்போதான் அவளுக்கு எல்லாம் இருக்கே. இன்னும் ஏன் இந்த கோவமும் பொறாமையும்?” என்று பிரதீபா கேட்டாள்.

“சில பேர மாத்த முடியாது. அவளுக்கு பிரசாத் மேல கோவம் இல்ல. அவளுக்கு கல்யாணம் ஆன பிறகு பிரகாஷை காதலிப்பது விட்டுட்டா. ஆனா ஏனோ தெரியல. அவளுக்கு ஏன் மேல கோவமே தீரல”

“நீ நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை அவக்கிட்ட பேசணும். நீ இன்னும் ஸ்கூல் பிரண்ட் மாதிரியே அவள நடத்திட்டிருக்க.” இருவரும் மௌனமாக நான்கு அடிகள் எடுத்து வைத்த பின்னர் பிரதீபா வர்ஷாவை கேட்டாள், “ஏன்டீ, அந்த ஆள இன்னும் ஏன் டிவோர்ஸ் பண்ணாம இருக்க. எவ்வளவு நாளு தான் அவன் தொல்லைய தாங்கிண்டிருப்ப? அவன் வேலைக்குப் போயி இப்போ என்ன பத்து வருஷம் ஆச்சா? அதுக்கு மேல குடிக்காம ஒரு நாளும் அவனால இருக்க முடியாது. பின்ன எதுக்கு அவன கட்டிண்டு அழற” பிரதீபா இதை  ஐம்பதாவது முறை கேட்கிறாள். எப்பொழுதும் போல் வர்ஷா, “பாக்கலாம், பாக்கலாம்” என்றாள்.

ஏதோ பேச ஆரம்பித்த பிரதீபா எதிரில் வந்தவரை நிறுத்தி“இது அமெரிக்காவில் இருக்கும் என் மாமா”, என்று வர்ஷாவுக்கு அறிமுகப்படுத்தினாள். “இவள் என்னுடைய நெருங்கிய தோழி, வர்ஷா. இவள் ஐ‌பி‌எம் இந்தியாவின் தலைமை அதிகாரி. இந்தியாவின் டாப் டென் பவர்ஃபுல் பெண்களில் எட்டாவது இடத்தை பிடித்தவள்.” “ஓ ஐ ஸீ”, என்றாள் வர்ஷா

வர்ஷா ஐ‌பி‌எம் இல் தலமை அதிகாரி என்று கேட்டவுடம் அவர் முகம் மாறியது. இவள் அவர் பதவியை பற்றி கேட்டால் என்ன சொல்வது என்ற அவர் தவிப்பு வர்ஷாவுக்கு புரிந்தது. வர்ஷா எதுவும் கேட்பதற்கு முன்னால், “கிவ் மீ எ மினிட்”, என்று சொல்லிவிடு அங்கிருந்து நகர்ந்தார்.

பிரதீபா கேட்ட கேள்வியை வர்ஷா அசை போட்டுக் கொண்டிருந்தாள். தான் ஏன் விவாகரத்து வாங்கவில்லை என்று வர்ஷாவுக்கே விளங்கவில்லை. தனக்கு போட்டியாக வந்த பல ஆண்களை இடது கையால் புறம் தள்ளிவிட்டு முன்னேறிய என்னால் பிரகாஷை ஏன் என் வாழ்க்கையிலிருந்து தூக்கி எறிய முடியவில்லை? எல்லா பக்கமும் வைக்கப்பட்டிருந்த ராட்சச லைட் பல்புகளின் ஒளியில் நாலு பக்கமும் தங்கள் நிழல் கூட வ \ர, மௌனமாக கண்ணாடி மாளிகைக்குள் வர்ஷாவும் பிரதீபாவும் நுழைந்தார்கள். நுழைந்தவுடன்  நிஷாவை பார்த்தார்கள். நிஷா அவர்களை பார்த்துவிட்டு கையாட்டினாள். கையில் வைத்திருந்த கோப்பையை உயர்த்தி, “டெகீலா” என்றாள் நிஷா. “உனக்கும் ஒரு கோப்பை சொல்லவா?”

“நீங்க நடத்துங்க. எனக்கு வேலை இருக்கு”, என்று சொல்லிவிட்டு பிரதீபா அவர்களிடம் விடை பெற்றாள்.

“உனக்கு என்ன லைம் ஜூஸ் தானா?” என்று வர்ஷாவை கேட்டாள் நிஷா

“ஆம்”, என்று சொன்னவுடம் அங்குள்ள ஒரு சர்வரிடம் “ஒரு லைம் ஜூஸ் கொண்டு வா”, என்று நிஷா ஆணையிட்டாள்.

வர்ஷாவின் கண்கள் பிரகாஷை தேடின. “பிரகாஷ் அங்க இருக்கான் பார்”, என்று வலது மூலையை காட்டினாள் நிஷா.

அந்த மூலையில் பார் இருந்தது. மேஜைகளின் மேல் வைன், விஸ்கி, ஸ்காட்ச், ரம், வொட்கா, டெகிலா, ஜின் என்று பலத்தரப்பட்ட உயர்ரக மதுபானங்களும், அதை பருகுவதற்கு பல வடிவங்களில் கண்ணாடி கோப்பைகளும், அதன் அருகில் ஐஸ் க்யூப், சோடா மற்றும் ஸ்ப்ரைட் புட்டிகளும் இருந்தன. கொறிப்பதற்காக வறுத்த வேர்க்கடலையும், முந்திரியும் வைக்கப்பட்டிருந்தன. மேஜைக்கு அருகில் கையில் ஒரு கோப்பையுடம் பிரகாஷ் நின்று கொண்டிருந்தான்.

“நான் பிரகாஷுக்காக இங்கு வரவில்லை”, என்றாள் வர்ஷா.

அதை கேட்காதவள் போல் நிஷா சொன்னாள், “அவன் குடிக்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது”. அவள் உதடுகளில் ஒரு வெற்றிப் புன்னகை இருந்தது.

வர்ஷா பல்லைக் கடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். பிரகாஷை இந்த கல்யாணத்துக்கு வரவேண்டாம் என்று வர்ஷா சொல்லியிருந்தாள். முதலில் சரி என்று சொன்னவன், நிஷாவின் பேச்சை கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டு வர்ஷா வருவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே இங்கு வந்துவிட்டான்.

“ஒன்று சொல்ல வேண்டும் வர்ஷா. இது போன்ற இடங்களில்தான் பிரகாஷ் மகிழ்ச்சியாக இருக்கிறான். நான் அவனை எப்பொழுது வீட்டில் பார்த்தாலும் டல்லாக இருப்பான். இங்கயாவது அவனை கொஞ்சம் சந்தோஷமாக இருக்க விடு”, என்று கூறிவிட்டு வர்ஷாவின் பதிலுக்கு  காத்திருக்காமல், “நான் இன்னொரு ரவுண்ட் டெகிலா கொண்டு வரேன்”, என்று சொல்லிவீடு அங்கிருந்து நகர்ந்தாள்.

எப்பொழுதும் போல் நிஷாவின் பேச்சு வர்ஷாவை ஆத்திரப்பட வைத்தது. ஆனால் அவளால் நிஷாவை நோக்கி கடும் சொற்கள் வீச முடியவில்லை. கோபத்தில் இருந்த அவள் தோளை யாரோ தட்ட வர்ஷா திரும்பி பார்த்தாள். பிரதீபாவின் கணவன் ராஜேஷ் வர்ஷாவை பார்த்து புன்னகைத்தான். “வெல்கம் வர்ஷா. ஏற்பாடுகள் எப்படி இருக்கு” என்று உரக்க கேட்டான். வெளியில் யாரோ வால்யூம் அதிகமாக்கியிருந்தார்கள். உள்ளே இருப்பவர்கள் பேசுவது கண்ணாடி சுவர்களில் முட்டி எதிரொலித்து வெளியிலிருந்த வந்த ஒலியுடன் கலந்தது. அந்த கண்ணாடி அறை சப்தங்களால் நிறைந்திருந்தது.

“எல்லாமே நல்லா இருக்கு ராஜேஷ். நான் இந்த ரிசார்ட்டுக்கு இதுவரை வந்ததில்ல. நல்ல எடமா இருக்கு”, என்றாள் வர்ஷா

“ஒன் ஆஃப் தி பெஸ்ட். பெங்களூர்ல இதவிட நல்ல ரிசார்ட் உனக்கு கிடைக்காது. சரி, நான் சென்று எல்லாவற்றையும் கவனிக்கிறேன்”, என்று சொல்லி அங்கிருந்து நகர்ச் சென்றவன் வர்ஷவிடன், “பிரகாஷ் மேல ஒரு கண்ணை வைத்திரு. அவனை அதிகம் குடிக்க நிஷா தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறாள்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

கோப்பையுடன் வந்த நிஷா, “வா. அங்கே போகலாம்” என்று பிரகாஷ் இருந்த இடத்தை காட்டினாள். வேண்டாவெறுப்பாக வர்ஷா நிஷாவுடன் நடக்க ஆரம்பித்தாள்.

வர்ஷா வருவதை பார்த்ததும் பிரகாஷுடன் உரையாடிக்கொண்டிருந்த அனைவரும் மௌனமானார்கள். வர்ஷாவை பார்த்தவுடன் தன் கணவன் ரகு பேச்சை நிறுத்தியதை பார்த்து நிஷாவுக்கு கோபம் வந்தது. அங்கு கூடியிருந்த எல்லோரும் ஐ‌டி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள். இவர்கள் எல்லோரைவிடவும் வர்ஷா உயர்த்த பதவியில் இருந்ததால் அவளை கண்டவுடன் பேசுவதை நிறுத்திவிடுகிறார்கள்.

வர்ஷாவின் பார்வை தன் கையிலிருந்த கோப்பை மேல் சென்றவுடன், பிரகாஷ் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே, “இப்போதான் ஆரம்பித்தேன்” என்றான். பிரகாஷ் ஆறடி அழகன். எல்லோரும் சிரிக்கும்படி பேசுவான். அதனால் குடிப்பவர்கள் மத்தியில் அவனுக்கு என்றுமே வரவேற்பு இருந்தது. ஆனால் குடி அதிகமாகிவிட்டால் வாட்ஸாப்பில் வந்த கட்டுக்கதைகளை தானே சொல்வது போல் உளறுவான். இன்னும் அதிகம் போதை ஏறிவிட்டால் சண்டை போட தயாராகிவிடுவான். இவன் எப்படி அடி வாங்காமல் வீடு திரும்பியிருக்கிறான் என்று சில சமயங்களில் வர்ஷா ஆச்சரியப்பட்டதுண்டு.

வர்ஷா கஷ்டப்பட்டு தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டாள். அவன் இப்பொழுது இரண்டாம் கட்ட போதையில் இருந்தான். யாரும் நம்ப முடியாத கதைகளை சொல்வதை பலர் ஏளனமாக பார்த்தனர். வேறு சிலர் வர்ஷாவை பரிதாபமாக பார்த்தனர். அந்த பார்வையை வர்ஷாவால் தாங்கமுடியவில்லை.. வர்ஷாவின் சங்கடத்தை உணர்ந்த நிஷாவின் உதடுகளில் புன்னகை பூத்திருந்தது.. இன்னும் ஒரு பெக் அடித்தால் பிரகாஷ் சண்டை போட ஆரம்பித்துவிடுவான் என்று உணர்ந்த வர்ஷா. “பிரதீபாவின் பெற்றோர்கள் உன்னை பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள். நாம் அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் வா”, என்றாள்

“சிறுத்து நேரம் கழித்து செல்லலாம். இப்பொழுதுதான் நான் இங்கு வந்தேன்”, என்றான் பிரகாஷ்

“போய் விட்டு வாங்களேன். வந்து இதை தொடருங்கள்”, என்று பிரகாஷின் பக்கத்தில் நின்றிருந்தவர் கூறினார்.

போதை ஏறியிருந்த பிரகாஷ். “மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்” என்று அவரை பார்த்து கத்தினான். அவன் அதற்கு மேல் எதுவும் பேசுவதற்கு முன் பிரதீபவின் கணவன் மைக்கில் பேச ஆரம்பித்தான். “ஜென்டில்மென் அண்ட் லேடீஸ். இப்பொழுது சங்கீத் ஆரம்பிக்கிறது. எல்லோரும் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். சங்கீத் முடியும் வரை பார் மூடப்படும். அதற்கு பிறகு மறுபடியும் பார் திறக்கப்படும். எல்லோரும் மெயின் ஹாலுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்”

வர்ஷாவுக்கு நின்ற மூச்சு மறுபடியும் வந்தது போல் இருந்தது. “ஷிட்” என்று சொல்லிவிடு பிரகாஷ் கோப்பையில் மிச்சம் இருந்த விஸ்கியை குடித்துவிட்டு கிளம்பினான். எல்லோரும் சங்கீத் நடக்கும் அறைக்குள் நுழைந்தன. வர்ஷா ஹாலை பார்த்து வியப்படைந்தாள். ஒரு மணி நேரம் முன் தான் வர்ஷா இந்த ஹாலை கடந்து சென்றிருக்கிறாள். இப்பொழுது அடையாளம் தெரியாத அளவுக்கு ஹால் பூ மாலைகளால்  அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடையில் இரண்டு பெரிய ஃபோகஸ் விளக்குகள், மேலே நான்கு ஃபோகஸ்விளக்குகள், படம் பிடிப்பதற்காக ஒரு பெரிய கிரேன், அதை இயக்க ஒரு ஆபரேட்டர், எல்லோரும் பார்ப்பதற்காக அறை யெங்கும் பல பெரிய டி‌வி ஸ்கிரீன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை ஆச்சரியத்துடன் பார்த்தாள் வர்ஷா.

ஒரு இளம் ஆணும் பெண்ணும் எல்லோரையும் வரவேற்றார்கள். பிறகு சங்கீத் ஆரம்பித்தது. முதலில் மணமகளை பற்றியும் மணமகனை பற்றியும் ஒரு படம் திரையிட்டார்கள். பிறகு நடனங்கள் தொடங்கின. மணமகள் தன் தோழிகளுடனும், மணமகன் தன் தோழர்களுடம் ஒரு மாதமாக டான்ஸ் மாஸ்டர் வைத்து பயின்ற நடனத்தை ஆடினார்கள். பிரதீபாவின் தந்தை சொன்னது போல் எல்லோரும் ஹிந்தி மற்றும் பஞ்சாபி நடனம் தான். ஒவ்வொரு நடனத்தையும் அறையில் கூடியிருந்த இளைஞர்கள் விசில் அடித்தும், உரக்க கூச்சல் போட்டும் கொண்டாடினார்கள். அவர்களின் உற்சாகம் எல்லோருக்கும் தொற்றிக்கொண்டது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஒரு இளைஞன்,  “நாங்கள் நடனமாடி முடித்துவிட்டோம். இப்பொழுது பெரியவர்கள் நடனமாட வேண்டிய தருணம். முதலில் பிரதீபா ஆண்டி மற்றும் ராஜேஷ் அங்கிள் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்”.  பிரதீபா, “நோ நோ நோ,” என்றாள். எல்லோரும் பலத்த கரகோஷம் செய்து “எஸ் எஸ் எஸ்” என்று கத்தினார்கள். ராஜேஷ் அவள் கையை பிடித்து மேடைக்கு அழைத்து சென்றான். இவர்களுக்கு என்று ‘அந்த அரபி கடலோரம்’ தமிழ் பாடலை போட்டார்கள். பிரதீபாவும் ராஜேஷும் ஓரளவுக்கு நன்றாகவே ஆடி முடித்தவுடன் விசில் சத்தமும் கரகோஷமும் காதை துளைத்தது.

“அடுத்ததாக நிஷா ஆண்ட்டி மாற்று ரகு அங்கிள்”. ரகு உற்சாகமாக காணப்பட்டான். “கமான். கமான்”, என்று கூறிக்கொண்டே நிஷாவின் கையை பிடித்து அழைத்து சென்றான். “இவனுக்கு டான்ஸ் வருமா?”, என்று பிரதீபா வர்ஷாவை கேட்டாள்.  “அவன் போற வேகத்தை பாத்தா பிரபு தேவா லெவலுக்கு ஆடுவான் போல இருக்கு”. என்று வர்ஷா கூற பிரதீபா உரக்க சிரித்துவிட்டாள்

அவர்களுக்கு ஒரு ஹிந்தி பாட்டை போட்டார்கள். ரகு கை கால்களை தன் இஷ்டத்துக்கு ஆட்டுவதை பார்க்க தமாஷாக இருந்தது. பாட்டின் தாளத்துக்கும் அவன் அசைவுகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல். ‘சிப்பிக்குள் முத்து” படத்தில் கமலஹாசன் ஆடுவது போல் ரகு ஆடினான். நிஷா இரண்டு ஸ்டெப் போட்டவுடன் அவளை தன் பக்கம் இழுத்து அவள் ஆடும் நடனத்தையும் கெடுத்தபோது கூடி இருந்த இளைஞர்களுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.  அவன் ஆடி முடித்தவுடன் “ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர்”, என்று எல்லா இளைஞர்களும் கோஷம் போட, உண்மையாகவே தன் நடனத்தை இவர்கள் எல்லாம் ரசிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, “ஓகே” என்று ரகு மறுபடியும் ஆடத் துடங்கினான். கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க, வர்ஷாவும் பிரதீபாவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட, நிஷாவின். முகத்திலிருந்து கோபக் கனல் பறந்தது. நடனம் முடிந்து அவள் கீழே இறங்கும்போது ரகுவை கொளுத்திவிடுவது போல் ஒரு பார்வை பார்த்தாள்.. “நாளைக்கு ரகுவோட நிலைமையை என்னவோ?” என்று முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு பிரதீபா கேட்டாள். வர்ஷா சிரித்துவிட்டு, “நிஷாவின் கோபம் ரகுவுக்கு புதுசு ஒன்றும் இல்லையே” என்றாள். பிரதீபா மறுபடியும் சிரித்தாள்..

“அடுத்தது நான்”, என்று பிரகாஷின் குரல் உரக்க ஒலித்தது. “ஓ . லெட்  அஸ்  கிவ்  இட் டு பிரகாஷ் அங்கிள்”, எல்லோரும் கை தட்டினார்கள். “அங்கே என் மனைவி நிற்கிறாள். அவளையும் மேடைக்கு வரச் சொல்லுங்கள்”, என்று வர்ஷாவை நோக்கி கை காண்பித்தான் . “வி  வாண்ட் வர்ஷா ஆண்ட்டி” என்று எல்லோரும் கத்த விருப்பமில்லாமல் வர்ஷா மேடையை நோக்கி சென்றாள்.

கல்லூரி நாட்களில் வர்ஷாவும் பிரகாஷும் சேர்ந்து பல மேடைகளில் நடனம் ஆடியிருக்கிறார்கள். நடனம் ஆடி பல வருடங்கள் ஆகிவிட்டதால் வர்ஷாவுக்கு பயமாக இருந்தது. அவள் பிரகாஷை பார்த்தாள். அவனுக்கு போதை இறங்கியிருந்தது. பிரகாஷ் மைக்கை பிடித்துக்கொண்டு, “முதலில் நாங்கள் ஒரு மெலடி பாடலுக்கு ஆடப் போகிறோம். அதற்கு பிறகு ஹை எனர்ஜி பாடலுக்கு ஆடுவோம்” என்று அறிவித்தான். ‘சம்மர் வைன்” எனும் பாட்டு ஸ்பீக்கர்களில் ஒலித்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு மெதுவாக நடனம் ஆடினார்கள். இந்த பாட்டிற்கு பல முறை சேர்ந்து ஆடியிருந்த்தால் எந்த பிசிறும் தட்டாமல் நடனம் அருமையாக வந்தது. ஆடி முடித்தவுடன் பலத்த கை தட்டலை பெற்றார்கள்.

அடுத்து ஒரு ஸ்பானிஷ் பாடல் ஒலித்தது. இதற்கும் அவர்கள் பல முறை சேர்ந்து ஆடியிருக்கிறார்கள். இந்த ஸ்பானிஷ் நடனத்தில் பல போஸ்களில் நிற்கவேண்டும். அவர்கள் ஒவ்வொரு போஸ் கொடுக்கும்பொழுதும் எல்லோரும் கை தட்டினார்கள். பாடல் முடியும் தருணத்தில் மேடையின் ஒரு கோடியில் வர்ஷாவும் இன்னொரு கோடியில் பிரகாஷும் நின்று கொண்டிருந்தார்கள். இசை தீவிரமடைய, வர்ஷா ஐந்து முறை தட்டாமலை சுற்றிவிட்டு சரியாக பிரகாஷ் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள். பிரகாஷ் தன் வலது கரத்தை நீட்டி கொண்டிருந்தான். வர்ஷா தன் இடது கரத்தை அவனிடம் கொடுக்க, அவன் வர்ஷாவை தன் பக்கம் இழுத்துக்கொள்ள, இன்னொரு முறை சுற்றிவிட்டு  அவன் மார்பில் வர்ஷா தன் பின்மண்டையை சாய்த்து கூட்டத்தை பார்த்தாள். தட்டாமாலை சுற்றி வந்ததால் அவளுக்கு தலை சுற்றியது. முகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்துக்கொள்ள ஹால் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் வர்ஷாவை எரித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டிருந்த நிஷாவின் கண்கள் மட்டும் அசையாமல் ஒரே இடத்தில் நின்றிருந்தன.