காஸ்மிக் தூசி

சைதன்யா (மூன்றாவது) – அருண் கொலாட்கர்

தமிழாக்கம்:  காஸ்மிக் தூசி

europe1-0601

சைதன்யா
தொலைவில்
தெரிந்தபோது
புராணிகர் கூட்டம் ஒன்று
மலைச்சரிவில்
மேய்வதை நிறுத்திவிட்டு
நிமிர்ந்து பார்த்தது.

சைதன்யா
அவ்வழியே சென்றபோது
மலைகள்
அசையாதிருந்தன.
சைதன்யா
பார்வையில் இருந்து
மறைந்தபோது
கழுத்து மணி
குலுங்கி ஒலித்தது.
பிறகு புராணிகர் கூட்டம்
மேய்ச்சலுக்குத் திரும்பியது.

 

000

 

ஒளிப்பட உதவி – https://alexnberra.files.wordpress.com

நீலக்குதிரை (கவிதை) – காஸ்மிக் தூசி

  காஸ்மிக் தூசி

பல்லில்லாத பாடகி
பொக்கை வாய் திறந்து
பற்ற வைக்கிறாள் நெருப்பை.
குரல்வளையின்
நரம்பு முடிச்சுகளில் மின்சாரம்.
அவளின்
பாதி கருகிய நாவில்
பறந்து வருகின்றன
தீப்பொறிகள்

தானாகவே
இயைந்து கொள்கிறது முகம்.
சூரியன் சுட்டெரித்ததில்
மேலும் கருகிய கருந்தோல்
முகத்தில் நீலம் பாரிக்க
கஞ்சிராவை அறைந்து அடிக்கிறான்
வாசிப்பவன்.

சற்றும்
சுருதியற்ற தாபத்துடன்
பாடலில் இணைந்து கொள்கிறான்
அம்மைத்தழும்புகள் நிறைந்த
ஒன்று விட்ட சகோதரன்.
தந்தி கொண்ட கருவியின்மீது
மேலும் கீழுமாய் கரகரத்து
கவனமில்லாமல்
எதிரொலிக்கிறது பாட்டு.
இசை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்,
கடவுளின் சொந்தக் குழந்தைகள்.

இதைப்போன்ற ஒரு
புனிதகேளிக்கையை –
தன் வீட்டில் வைத்து
ஏற்பாடு செய்யுமளவுக்கு
நல்லவரான பூசாரியிடம்
பேச்சுக்கொடுத்து,
பாடியவர்கள்
நீலக்குதிரை என்றார்களே,
உங்கள் சுவரில்
இருக்கும் படத்தில்
குதிரை வெள்ளையாக இருப்பது
எங்ஙனம்? என்றால்,

வாயின்
இடமிருந்து வலதுக்கு
பாக்குத்துண்டை
மாற்றிக்கொண்டு.
எனக்கு நீலமாகத்தான் தெரிகிறது
என்கிறார் பூசாரி.
புகழ்பெற்ற ஓவியர்
வரைய விரும்பும்
நீல வண்ணத்தின் ஒருநிறத்தை,
புனிதவிலங்கின்
வெள்ளை நிற
அடிவயிற்றில்,
பாக்குவெட்டியால்
தொட்டுக்காட்டி..
கஞ்சிரா
தன் நெஞ்சில்
அடித்துக்கொள்ள ஆரம்பிக்கிறது.

oOo

(“The Blue Horse” என்ற அருண் கொலாட்கர் கவிதை தமிழாக்கம்)

ஒளிப்பட உதவி – விக்கிமீடியா

அலமாரி – அருண் கொலாட்கர் (மொழியாக்கம்- காஸ்மிக் தூசி)

  காஸ்மிக் தூசி

The cuboard-Image

மஞ்சளடைந்த
பழைய செய்தித்தாள்
கொண்டு சேர்க்கப்பட்ட
கண்ணாடிச் சில்லுகள்

கதவுச் சட்டத்தின் செவ்வகம்
ஒவ்வொன்றும்
ஓரு திரள்கலையின்
படைப்பு

அடைப்புச்சட்டத்துள்
இருத்தப்படாமல்
கீழ்நோக்கி துருத்திக்கொண்டிருக்கும்
நிச்சயமற்ற சரிவகங்கள்

நெருக்கியடித்துக்கொண்டு
அடுக்கடுக்காக அலமாரி முழுக்க
நிறைந்திருக்கிறார்கள்
தங்கநிறக் கடவுளர்கள்

வெட்டப்பட்ட தலையங்கங்கள்
நித்திய வாலிப வாக்குறுதிகளின்
பின்னால் இருந்தபடி
எட்டிப்பார்க்கிறார்கள்

பங்குச்சந்தை நிலவர
பத்திகளுக்கு அப்பாலும்
பார்க்கலாம் நீங்கள்
தங்கநிற கடவுளர்களை

கஞ்சிப்பசையால்
கெட்டிப்பட்ட
கருத்துக்களத்தின் பின்னால்
தெரிகிறது ஒரு தங்கக் கை

அந்தக்கதவின் மீது
எதிர்பார்த்ததைப் போலவே
இயல்பாக இருக்கிறது
ஒரு பெரிய பூட்டு
***
அருண் கொலாட்கர் எழுதிய The Cupboard என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம் இது

ஒருவகைச் சிலுவை- காஸ்மிக் தூசி (அருண் கொலாட்கர்)

  காஸ்மிக் தூசி

கால்களுக்கிடையில்
வாலை நுழைத்து
தகடு வேய்ந்த உடலின் கீழ்
காலை வைத்து
பீடத்தில் அமர்ந்திருக்கும்
காளைக்கன்று –
கோயிலின் முற்றத்தில்.

கொம்பை வருடிக்கொடுத்து
திமிலை தட்டிக்கொடுத்து
புனித காளைக்கன்றையே
மிரள வைத்த
சித்திரவதைக் கருவியின்
விசித்திரத்தை ஆராய்ந்தால்

கிறீச்சிடும் மூட்டுகள்
கட்டி இழுக்கும் குறுக்குப் பட்டைகளாக
கற்பீடத்திலிருந்து மேலெழும் அது –
ஒரு வகைச் சிலுவை.
மனதுக்குள்
அதில் ஒருமுறை
அமர்ந்து பார்த்தால்

முட்களும்
கொக்கிகளும் இருப்பதால்தான்
அதன் இடத்தில் இருக்கிறது
குறுக்குப்பட்டையின் சேணம்
இன்னொன்று
கால் முதல் கால்வரை
உங்களுடன் சுற்றி வருகிறது

மலைகளும் கோயில்களும்
ஆடுகின்றன
நந்திகளும் ஆமைகளும்
நீந்துகின்றன
பிரம்மாண்ட ராட்டினமாகி
தலைக்கு மேலே
கழுகுகளைப்போல் சுற்றுகின்றன
நட்சத்திரக் கூட்டங்கள்

சட்டவிரோதமானது
அதைப்போல
செய்வதற்கில்லை
தவிரவும்
நட்சத்திர கூட்டங்களுக்கு
தவறான நேரமும் கூட

எல்லாத் திசையிலிருந்தும்
எந்நேரமும்
உடனே உதவிக்கு வரும்
தீயணைப்பு வீரனைப்போல
அவசரகதியில் வந்தாலும்
இரத்தம் சிந்துவதற்கில்லை
விரிந்துவரும் இளிப்புடன்

உள்ளங்கையைக் குவித்து
காளையின் பின்னந் தொடையில்
அத்துமீறி நுழைந்து
தரையாணியால் ஒடுங்கிய
பித்தளையின் கீறலை
விரல் நகத்தால்
வேண்டுமானால்
சரி செய்யலாம்.

குறிப்பு – 40 வருடம் முன் கொலாட்கர் சென்றபோது வேறொரு நந்தி இருந்ததா தெரியவில்லை ஆனால் ஜெஜூரி கோயிலில் தற்போது இருக்கும் நந்தியின் படம் இதுதான்.

(அருண் கொலாட்கர் எழுதிய A Kind of Cross என்ற கவிதையின் தமிழாக்கம்).

கோவில் எலி- காஸ்மிக் தூசி (அருண் கொலாட்கர் )

  காஸ்மிக் தூசி

rat

திரிசூலத்தின் நீண்ட நடுப்பிளவில்
சுருண்ட வாலை நிமிர்த்திக்கொண்டு
பொங்கி வழியும் கருநிறக் குருதி போல
இறங்கி வருகிறது கோவில் எலி.

பைரவரின் தடத்தோளில் நின்றபின்
சற்றே புனிதச்சதை அசைவதுபோல்
வேகமாய் பார்க்கிறது சுற்றிலும்

மார்த்தாண்ட பைரவரின் கண்களின் ஆவேசம்
முகத்தில் சந்தனக்கவசத்தின் போர்க்கோலம்
கண்டு திரும்புவதற்குள் மறைந்து

கற்கூரையில் தொங்கும் சங்கிலியில்
வளைந்து இறங்குகிறது கோவில் எலி
தீபஒளி மினுக்கும் உலோக கண்ணிகளில்
பிரகாசிக்கும் கண்களைச் சிமிட்டியபடி

வளைவில் சறுக்கி இறங்கியபின்
காண்டாமணியின் விளிம்பில் நின்று
கம்பீரமாய் பார்க்கிறது

கருங்கல் லிங்கத்தின் தலையில்
வாழைப்பழம் நசுக்கும்
இளம் புதுமணப்பெண்ணின்
தண்டனிட்ட கைகளில்
கண்ணாடி வளைகளின்
பச்சைநிற பளபளப்பை

நரைத்த ஒருவார தாடிக்குள்
பூசாரியின் முகத்தில்
கீறும் புன்னகையைக் கண்ட
கோவில் எலி

கருவறையின் மூலையில்
முரசின் பின்னால்
சென்று மறைந்ததுதான் தாமதம்
உடனே முழங்கிற்று
கோவில்மணி.
****

*அருண் கொலாட்கர் எழுதிய The Temple Rat என்ற கவிதையின் தமிழாக்கம்