சிகந்தர்வாசி

கவிதைகளின் இடுகாடு

– சிகந்தர்வாசி 

கருவில் சில இறக்கின்றன,
சொல்லோடு பொருள் கூடாமல்
தரிப்புக்கேற்ற உருவம் கிடைக்காமல்,
கவிஞன் கவிதையைக் கொல்கிறான்.

சில காகிதம் சேர்கின்றன,
கவிஞனின் கரங்களைக் கடந்து.
ஆனால் அவற்றில் தெம்பில்லை,
இங்கொரு சொல் ஊட்டி
அங்கொரு வரி கூட்டி
கவிஞன் ஆகக்கூடியதைச் செய்கிறான்-
அவை உரம் பெற்று
உயிர்த்திருக்க-,
இருந்தும் வளராமல்
மெல்ல உயிர் இழக்கின்றன.

சில உருவம் பெற்றுச் செல்கின்றன
மெய்யுலகில் போராட:
மொழியைக் கொண்டு மருந்திடுகிறான்.
விழுப்புண்களுடன் திரும்பும் கவிதைகளுக்கு
சொல்லை மாற்றி, சொல்லின் பொருள் மாற்றி,
சொல்லின் இடம் மாற்றி, அழுகிய சொற்களை வெட்டி,
அழகிய சொற்களை கூட்டி;
குணம் பெற்று போர்க்களம் திரும்பும் அவற்றில்
சில உயிர் பிழைக்கின்றன. பலவும்,
எடிட்டரின் கத்தரியால் துண்டாக்கப்பட்டு
மரிக்கின்றன.

உயிர் பிழைப்பவை, சில ஆண்டுகள்
மெய்ம்மையில் நடமாடுகின்றன.
சிலரால் மட்டுமே அறியப்பட்டு
மெல்ல காலத்தால் மறக்கப்பட்டு,
பலவும் இயற்கை மரணம் எய்துகின்றன.

அதிர்ஷடமிருந்தால் நம் கவிதையும்
ஒரு மாபெரும் கவிஞன் ஆக்கத்தின் அருகில்
புதைந்து கிடக்கலாம்-
அவை உரையாடிக் கொள்ளலாம்,
தங்கள் காயங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்,
உரமற்ற கரங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம்-
நினைவின் பிடிநழுவிய கவிதைகளை
நினைத்துப் பார்க்கலாம்.

நல்ல கவிதைகள் சிரஞ்சீவிகளாய்
வாழ்ந்துக கொண்டிருக்கின்றன,
விவாதிக்கப்பட்டு, வாசிக்கப்பட்டு,
ஊக்கமூட்டிக்கொண்டு.
புதியன பிறகும் வாசல்கள் ஆகின்றன.

பிற கவிதைகள்,
மரணத்தில் சமத்துவம் அடைகின்றன,
மனிதர்களைப் போல்.

மானுடம் குடியமர்ந்த கோள் : திரிகளைத் தொடர்தல்-2

-சிகந்தர்வாசி-

mail-exchanges

முதல்நிலை தகவலறிக்கைகள்
முதல்நிலை தகவலறிக்கைகள் – 2
மானுடம் குடியமர்ந்த கோள் – விபரீத துவக்கங்கள்
திரிகளைத் தொடர்தல்

திரிகளைத் தொடர்தல்-2

இந்த உரையாடலுடன் சில கடிதங்களின் மங்கிய பிரிண்ட் அவுட்களும் எனக்குக் கிடைத்தன. இவை வரலாற்றின் கதவுகளைச் சற்றே திறப்பதாக இருந்தன. மெல்ல மெல்ல என் மக்களின் சரித்திரம் என்னை தன்னுள் இழுத்துக் கொள்கிறது.

To: All Employees of SpaceXploration Corp
From: Mark Podolski, CEO

டீம்,

நாம் சரித்திரம் படைப்போம் என்று உறுதியளித்தேன். நாம் செய்யப்போவது மனித வரலாற்றில் ஈடு இணையற்ற சாதனையாகக் கொண்டாடப்படும். அதகான முதல் அடியை எடுத்து வைக்கப் போகிறோம்.

செவ்வாய் கோள் நோக்கி நாம் சென்ற இரு முறை திட்டமிட்ட பயணங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அவற்றுக்கான காரணங்கள், அவற்றின் நோக்கங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த பயணங்களின் பலன்களை வெளிப்படுத்தும் வேளை வந்துவிட்டது. (more…)

மானுடம் குடியமர்ந்த கோள் : திரிகளைத் தொடர்தல்

– சிகந்தர்வாசி – 

பல பெரும்பணக்காரர்கள் பூமியிலிருந்து புறப்பட்டு வானூர்தியில் வரும் வழியில் பயங்கரமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பது என் ஆர்வத்தைப் பெருக்குவதாக இருந்தது. இவர்களில் எத்தனை பேர் பிழைத்துக் கொண்டனர்? பிராணவாயுப் பிரச்சினை எதனால் ஏற்பட்டது? விடையற்ற கேள்விகள்.

ஆங்காங்கே சிதறிக் கிடந்த வானூர்திகளில் என் தேடலைத் தொடர்ந்தேன். அதில் ஓர் கலத்தில் விண்வெளியாய்வு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடன் ஒரு பொறியியலாளர் நிகழ்த்திய உரையாடல் ஒன்றின் அச்சுப் பிரதி கிடைத்தது. (more…)

அலைகள் ஓய்கின்றன

– சிகந்தர்வாசி – 

கரைதட்டிச் சிதறுகின்றன, அலைகள்
திரும்பி வந்துத் தாக்குகின்றன, எனினும்
தண்ணீர் பழைய தண்ணீர்தான், பெருங்கடல்
என்றெதுவும் பின்பரப்பில் இல்லை- அலைகள்
அலைகள், அலைகள் மட்டும்தான்.

அக்கரை சேர்ந்துவிட்டான், அங்கே
புதிர்களின் விடியலைக் காண்கிறான்
காட்சிகள் வெறும் காட்சிகள்
மொழி ஒரு தூய ஒலி
பொருட்கள் வெறும் உருவங்கள், வண்ணங்கள்.
மனிதர்கள், மனிதர்கள் மட்டும்தான்k.

அவனைச் சுற்றியுள்ள உலகம்
உட்பொருளை மெல்ல இழக்கிறது, அவன்
ஒரு குழந்தையாகிறான், ஆனால்
அவன் கண்களில் வியப்பில்லை

எதற்காகக் காத்திருக்கிறான்?
தன் மரணத்தைச் சந்திக்கவா?
வாழ்வும் சாவும் அவனுக்கு
வெறும் வார்த்தைகள்
மரணம் அவனை நெருங்கும்போது
அதன் காலடியோசைகள் கேட்காது

எதுவும் விளங்காத இந்தத் தீவில்
அவன் தொடர்ந்து நடந்து செல்கிறான்
இதன் காற்று வெப்பத்தை இழப்பதில்லை
இதன் பருவங்கள் மாற்றம் அடைவதில்லை

அவ்வப்போது அலையொன்று
அவன் பாதங்களை அறைகிறது
ஒளிர்கின்றன அவன் கண்கள்,
கணப்போதில் ஒளியிழக்கின்றன

உதிர்ந்த நட்சத்திரம் போல்

அலைகள் மெல்ல ஓய்ந்து கொண்டிருக்கின்றன.

மானுடம் குடியமர்ந்த கோள் – விபரீத துவக்கங்கள்

– சிகந்தர்வாசி – 

ஜைமினியின் சொற்கள் எனக்கு மிகவும் தேவையாயிருந்த நம்பிக்கை அளித்தாலும், நாங்கள் ஏன் அங்கு வந்திறங்கினோம் என்பதைக் கண்டறிய விரும்பினேன். இந்த உண்மையை அறிவதற்கான தடயம் ஏதேனும் கிட்டுமா? வானூர்திகளில் தேடத் துவங்கினேன், ஒரு வாரகால தீவிர தேடலில் வெற்றியும் பெற்றேன். ஜான் க்ரிப்பித் என்ற ஒரு அமெரிக்கனின் குறிப்பேட்டைக் கண்டெடுத்தேன். அதில் அவன் நாங்கள் எவ்வாறு இங்கு வந்திறங்கினோம் என்பதன் முழு விபரங்களையும் பதிவு செய்து வைத்திருந்தான்.

oOo (more…)