பானுமதி ந

தொடுவானம்

ந. பானுமதி

அந்த அழகிய வெளிநாட்டு கார் அமுதாவின் வீட்டு வாசலில் வந்து நின்றது. சீருடை அணிந்த ஓட்டுனர் அம்மாவிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டுச் செல்வது தெரிந்தது. கார் மீண்டும் கிளம்பவில்லையென்பதால், காத்திருப்பதாகச் சொல்லியிருப்பார் போலும்.

அம்மா, மணியை அழைத்து நல்ல டீயாக வாங்கிவரச் சொல்வது கேட்டது.

தனக்கு கேட்கவேண்டும் என்றே அம்மா கத்திப் பேசுவது புரிந்தது. ”நெனப்பு தான் பொழப்ப கெடுக்குதாம்”

அமுதா தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். இடமும் வலமும் மாறித் தெரிவது தானா, தன் நிழலா? இதுவும் காட்சிப் பிழையோ? பிரதிபலித்து எல்லாவற்றையும் நிஜம்போல் காட்டும் இதிலெது உண்மை? கண்ணாடியை உடைக்கும் ஆவேசம் அவளுள் எழுந்தது. ஒருகால், இந்தக் கண்ணாடியைப் பார்ப்பது இதுவே கடைசி முறையோ?

உடைந்து சிதறும் கண்ணாடி காட்டும் சிதறிய அமுதாக்கள் ஒன்றிலிருந்து பலவாய் உருக்கொண்டு அவளையே காட்டிச் சிரிக்கும் என்பதைத் தவிர வேறென்ன பலன்? அழக்கூட தெரியாமல் போய் விட்டதே!

கேமராவின் முன்னே அழுதழுது இன்று நிஜக் கண்ணீர் வரமாட்டேன் என்கிறது. அப்படியும் தான் என்ன கதாநாயகி நடிகையா? ஒரிரு காட்சியில் ஓரிரு வசனம் பேசும் துணை நடிகை! அமுதா சிரித்துக் கொண்டாள் .என் மீது அவர் பார்வை எப்படி விழுந்தது? எதனால் இந்த சிக்கல்? அம்மா இதைக் கேட்ட தினத்திலிருந்து தரையில் கால் பாவாமல் நடக்கிறாள். பொருளே ஆதாரமாக வாழும் நிலை அம்மாவிற்கு.பதினைந்திலிருந்து பத்து வயதுக்குட்பட்ட தம்பியும், தங்கைகளும் அம்மாவின் கடுகடுப்பினால் வாய் விட்டு சிரிப்பது கூடக் கிடையாது. ஆனால் வீட்டில் இப்பொழுது அடிக்கடி சந்தோஷக் கூச்சல் கேட்கிறது. தங்களுக்குள் செல்லமாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

நேற்று இரவு அம்மா தன்னை நேரே பாராது சொன்னது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. “இனியாவது ஓர் இடம் நிரந்தரம் என இருக்கக் கசக்கிறதா? எம்மாம் ஷூட்டிங்க்கு, அப்பாலே எம்மாம் பேரு! எல்லாத்தையும் விட்டுப்புட்டு போவியா அவன் உன்னைய வரச் சொல்லரச்சே. இன்னாமோ மனப் பீடமாம், மாட்டாளாம்.நாயி நக்கித் தான் குடிக்கும்”

அம்மா சண்டையிடுகிறாள், எச்சரிக்கிறாள், தான் கன்னியில்லை என்று குத்திக் காட்டுகிறாள். அம்மா சொல்லாத ஒன்றும் இதில் இருக்கிறது. அது எதிர்காலம் பற்றிய இவளின் பயம். இவர் விருப்பத்தின் படி தான் நடந்து கொள்ளாவிடில் இவள் நடிப்புத் தொழில் இல்லாமலே போய்விடும். அது இல்லையென்றால் பின்னர் எதுவும் இல்லை. ஐந்து உயிர்களுக்கு தண்ணீர் ஊற்றும் மரம் நட்டவர் அவர்தானோ என்னவோ? ஆமாம், அவரை நான் எத்தனை உயரத்தில் வைத்திருக்கிறேன், அவரால் தவறே செய்ய இயலாது, கண்ணியக் குறைவாக நடக்க முடியாது என்று?.இப்பொழுது எனக்கு உறுத்துவது எது நிஜமா, நிழலா?

நிஜம் எனில் எது? இன்று வந்து காத்து நிற்கும் காரா? நிழல் திரையில் பார்த்த அவரது ஒளி பிம்பமா? நிழல் காட்டிய நிஜம் என்கே? நிழலாடும் நிஜம் அல்லது நிஜமாடும் நிழல்! எதிலிருந்து எது? உடைத்துக் காட்டும் கண்ணாடி சிதறல்கள்.

அமுதா நிமிர்ந்து சுவரைப் பார்த்தாள் –அவளது ஒரே தோழியின் பரிசோவியம்.

தொலை தூரத்தில் தொடுவானம் கடலின் மேல் கவிந்து, தொட்டுவிடுவது போல் என்ன ஒரு சாகசம்.! நெருங்கி விடாத விளையாட்டு. காட்சிப் பிழை.!

அம்மா அவளை அழைப்பது கேட்டது.

அமுதா நிமிர்ந்து சுவரைப் பார்த்தாள் –அவளது ஒரே தோழியின் பரிசோவியம்.
தொலை தூரத்தில் தொடு வானம் கடலின் மேல் கவிந்து, தொட்டுவிடுவது போல் என்ன ஒரு சாகசம்.! நெருங்கி விடாத விளையாட்டு. காட்சிப் பிழை.!
அம்மா அவளை அழைப்பது கேட்டது.

நெருப்புப் பூச்சி

பானுமதி. ந

மினுக்கட்டாம் பூச்சிகள் இப்பொழுது பறந்தால் நன்றாக இருக்கும். இந்தத் தெருவில் இப்படியொரு காலியிடமும், மரங்களும், கொடிகளும், முட்புதர்களும் யாரும் எதிர்பார்க்க முடியாததுதான். ஆனால் இவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அது அப்படித்தான் இருக்கிறது. மருதாணி மரமும், கொன்றையும், கொடுக்காபுளியும், போகன் வில்லா மரங்களும்  பசலைக் கொடியும், சங்குக் கொடியும் இன்னமும் புதர்களிடையே இருக்கின்றன.

இவனும், செந்திலும், தேவியும் விளையாடிய இடங்கள். அப்பொழுது சிறிதாக முள்மரங்கள் இருந்தன. இன்று  பெரிதாக நிற்பதைப் போல் தோன்றுகிறது. தான் கொடுத்த கசப்பு , தன்னைத்தானே வெறுக்கச் செய்கிறது.

மாலை மயங்கும் சமயம் வரை அவனும், தேவியும், செந்திலும் அங்கே சுற்றிச் சுற்றி விளையாடுவார்கள். வீட்டை ஏமாற்றிவிட்டு இந்தப் புதர்களில் மினுக்கும் மின்மினிகளைத் துரத்துவார்கள். முள் கிழித்தாலும் கவலையில்லை. மயக்கும் மின்மினிகள். அந்திக் கருக்கலில் அந்த வெளிச்சம், மின்னி மின்னி மறையும். அவைகள் ஒரு திசை நோக்கி பறக்கையில் என்ன ஒரு அழகு.! ஆனால் கையில் சிக்காமல் ஓடி விடும் பூச்சிகள். இப்பொழுது செந்திலும், தேவியும் எதிரே வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? மூவரும் கைகள் பற்றிக்கொண்டு தட்டாமாலை சுற்றினால், கசப்பு  உதிராதா? “காலம் கனிந்தது என்று ஆடுவோமே, கசப்பு போனதென்று ஆடுவோமே” அவனையும் அறியாமல் கண்களில் ஈரம் படர்ந்தது.

“சூடு வைக்கிறேன் பாரு,ஆம்பளைப் பிள்ளையோடு உனக்கென்னடி விளையாட்டு” என்பதையெல்லாம் அவள் கண்டு கொள்ள மாட்டாள். அடி வாங்கிக் கொண்டே ஓடி வருவாள். அம்மாவை ஏமாற்றிவிட்டு வருவது இவனுக்குப் பெரிய விஷயமில்லை. ஆனால் செந்தில்தான் பாவம். தம்பிகள், தங்கை அப்பா அனைவரும் கவனியாமல் வரவேண்டும். எப்பொழுதுமே லேட்டாக வருவதை இவனும், தேவியும் “செங்கோட்டை பாசஞ்செர்” என்று கிண்டல் செய்வார்கள். அவன் சிறிது ரோஷப்படுவான்.அப்புறம் விளையாட்டில் எல்லாம் மறந்து விடும்.

இத்தனைக்கும் நடுவில் தேவி இருவருக்கும் ஸ்பெஷல். அவள் என்ன நினைத்தாள் என்று இவனுக்கு இன்று வரை புதிர்தான். அவள் சமமாக நினைத்திருக்க வேண்டும். சில நாட்களில் அவள் வராவிட்டால் கூட நன்றாக இருக்கும் எனத் தோன்றியதுண்டு. இந்த விசித்திர மன நிலை இன்றும் புரியவில்லை. எதிர்பார்க்கும் நிலை,  அடைவதை விட உயர்ந்ததோ, என்னவோ? ஆனால் ஏக்கமும் தலை தூக்கும். பட்டாம்பூச்சியைப் போல், பாவாடை சுழல அவள் ஓடி வருவதைப் பார்க்கையில் இவளையா வர வேண்டாம் என நினைத்தோம் என்று குற்ற உணர்வு தோன்றும்.

அன்று நல்ல கோடை நாள். திடீரென்று மேகம் திரண்டு ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. அம்மா எண்ணை சட்டி வைத்து பஜ்ஜி போடத் தொடங்கினாள். அவள் அறியாது கை நிறைய பஜ்ஜியை அள்ளிக் கொண்டு இவன் ஓடினான்.  கையோ சுடுகிறது, அவசரத்தில் ஒரு காகிதம் கூட எடுக்கவில்லை. இருக்கட்டும், இருக்கட்டும், இன்னும் சற்று தொலைவுதானே, அவளை இன்று அசத்தவேண்டும், எப்படியும் செந்தில் தாமதமாகத்தான் வருவான்.  இந்த நினைப்பில் சென்றவனுக்கு ,அவர்கள் இருவருமாக ஆலங்கட்டி பொறுக்கிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

“இந்தாரு, என்ன கொணந்திருக்கேன் பாரு”

தேவியை முந்திக் கொண்டு செந்தில் கூவினான் “பஜ்ஜியாடா, கொட்றா, கொட்றா”.

“அஸ்கு,புஸ்கு, இது எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான்.போடா, உன் அம்மாவை சுடச் சொல்லி தின்னு”

செந்தில் அடிபட்டவன் போல் பார்த்தான்.திரும்பிப் பார்க்காது ஓடினான்.

“ச் சீ.. உன் பஜ்ஜி ஆருக்கு வேணும்? நீயே தின்னு. அவனை விரட்டிப்புட்டேல. இனி என்னோட பேசாதே, ஆமா ஆணை” சொல்லிக் கொண்டே அவள் ஓடிப்போனாள்.

இவன் விக்கித்துப் போனான். கையிலிருந்து பஜ்ஜிகள் மண்ணில் விழுந்தன.முதுகில் சொடெர் சொடெரென்று மழை அடித்தது. மின்னுக்கட்டாம் பூச்சிகள் இல்லை. தந்திக் கம்பத்தைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினான்.

 

இருந்தாலும்

ந பானுமதி

என்னுடன் இருப்பவர் சிலரே
எப்பொழுதாவது வரும் விருந்து
எந்தன் சமையலறை ஜன்னல்
வழியே வண்ணக் கழுத்துடன் வந்து
போகும் மாடப்புறா இரண்டு