பானுமதி ந
மலைத் தொடராய்
சாம்பலிலும்
கரி கறுப்பிலும்
அலைந்த கூட்டம்
அதனூடாக எட்டிப்
பார்த்து தோற்ற கதிர்கள்
பின்னரும் ஆழியும் சங்குமாய்
வானத்தின் நெசவு.
பானுமதி ந
மலைத் தொடராய்
சாம்பலிலும்
கரி கறுப்பிலும்
அலைந்த கூட்டம்
அதனூடாக எட்டிப்
பார்த்து தோற்ற கதிர்கள்
பின்னரும் ஆழியும் சங்குமாய்
வானத்தின் நெசவு.
பானுமதி ந
திருமதி. ச. அனுக்ரஹாவின் வீடும் வெளியும் தொகுப்பினை அமெசான்- கிண்டில் பதிப்பில் படித்தேன். கவிதைகளும், கதைகளுமான இதில் அவரது ஓவியத் திறமையும் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழ் எழுத்தாளர் திரு அ. முத்துலிங்கம் தன் முன்னுரையில், இப்படைப்பின் சிருஷ்டி கர்த்தாவின் கடித வாக்கியங்களே கவிதை போல இருப்பதாகச் சொல்கிறார். நுண்ணிய கவனிப்புகள், புரிதல்கள் கொண்ட எழுத்தில் உண்மை ஒளி வீசுகிறது என்பது அவரது அவதானிப்பு.
மாதத்தில் ஒரு நாள் தான் முழு நிலவு என்று தன் செல்ல வருத்தத்தைப் பதிவு செய்யும் சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் திரு. மைத்ரேயன், இந்தத் தொகுப்பின் பரிமாணங்களை தன் அணிந்துரையில் காட்டுகிறார். கண்ணதாசனின் ஒரு பாடல் ‘அனுபவம்’ என்பதைப் பற்றி பேசுகிறது. கடவுள்- மனிதன் இடையே நடைபெறும் உரையாடலில், அனுபவமே தான்தான் என்று கடவுள் சொல்கிறார். தன் கூர்மையான பார்வை வழியே அனுக்ரஹா, இந்த உலகை, அறிவிலும் உணர்விலும் பதித்து, அந்த அனுபவத்தை கவிதைகளாகவும் கதைகளாகவும் தந்துள்ளார். நிதானித்து, கவனம் செலுத்தி, ஆழ்ந்து படைத்து, அதை நுட்பமாகச் செதுக்கியுள்ளார். இவரது பார்வைக் கோணங்கள், சொல் உணர்த்தும் பொருளாக, இரண்டும் இடைவெளியேயற்றுத் தரும் உணர்வாக பரிமளிக்கிறது.
இதில் நான்கு பகுதிகள் இருக்கின்றன. முதல் பகுதியில் (வீடும் வெளியும்) 11 கவிதைகள், 2 சிறுகதைகள், இரண்டாம் பகுதியில் (நகரமும் நானும்) 9 கவிதைகள், ஒரு சிறுகதை, மூன்றாம் பகுதியில் (அவர்களும் நானும்) 9 கவிதைகள், இரு சிறுகதைகள், நான்காம் பகுதியில் (மழையும் மற்றவையும்) 12 கவிதைகள், ஒரு சிறுகதை என இடம் பெற்றிருக்கின்றன. இந்த அமைப்பில் காலம், வளர்ச்சி, யதார்த்தம், போன்றவைகள் சீராக நடைபயில்கின்றன. தன்னிலை, பிறருடன் தானும் என்னும் நிலை, தரையில் பதியும் பாதங்களெனும் உணர்வு நிலை, காலம், மழை, மலை, இயற்கை இவை தரும் ஆழ் நிலை எனக் கவிதைகளும், கதைகளும் ஒத்திசைந்த ஸ்வரக் கோர்வையாக இசைக்கின்றன.
வெளியில் வீட்டைச் சுமந்து அலைகிறோம்; வீட்டிலோ, தனிமையில் நம் மனம் வெளியில் சென்று விடுகிறது. ஆனால், நமக்கெனக் காத்திருக்கும் வீடு. தேவதேவன் மரத்தின் வீடு என்ற கவிதையில் கேட்பார்: ‘யார் சொன்னது மரம் தனக்கோர் வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று? தனது இலைகளாலும், கிளைகளாலும், கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும், தனக்குள்ளே மரம் தனக்கோர் வீடு கட்டிக் கொண்டுள்ளது.’ எழுத நினைக்கும் போதெல்லாம், அனைத்தையும் நகர்த்தி நகர்த்தி ஒழுங்குபடுத்துகையில் தானுமே நகர்ந்து கொண்டிருப்பதை வியக்கிறார் கவிஞர். இன்று மெல்ல மெல்ல நேற்றாவது அனுபவச் சேகரிப்பு; அது பரணில், தூசி படிந்து உள்ள நேற்றோடு இன்றும் போய் சேரும் கால விளையாட்டு.
நிற்கத் தரைகளற்ற வானம், மற்றொரு கவிதையில் விளக்கணைத்து காத்திருக்கிறது. மேலும், அந்தத் தரைகளற்ற அனைத்து வானங்களிலும் இவரது மொட்டை மாடி காணக்கிடைக்கிறது. வளர்வதின் மிகப் பெரிய அறிதல் என்பதே மாற்று உலகம் இல்லையென்பது தானோ? நகரத்தின் ரேகைகளின் ஒரு சந்திப்பில் மூன்றாம் மாடி அறையைப் பூட்டி மீள் வந்து திறக்கையில் கதவில் சிக்கிய மிதியடியாய் வாசல் வரை வரும் உலகம்.
இவரது கவிதையில் காலையில் ஓடும் காலத்தை கிலுகிலுப்பையில் சலங்கையாக கவி மனம் இருந்தால் கேட்கலாம். தேவதச்சன் சொல்வார் ‘காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை’ என்று. அவளிருந்த போது அவளுடன் செல்லும் சரிந்து நீளும் அந்தச் சாலையில் திடீரென உணரும் இட மாற்றம் வலியைக் கடத்துகிறது. சிலந்திக்கு மட்டுமே தெரியும் யாரும் தங்கள் வீட்டை மொத்தமாய்க் காலி செய்ய முடியாதென்று என்று பேசும் இந்திரனின் கவிதை நினைவிற்கு வந்தது. சொல் உதிர்ந்து பொருள் கனியும் கணங்களில் பேசும் கவிதைகள் கவிஞன் யாருடன் பேசுவான் எனக் கேட்டு பதில் சொல்கிறது. கடந்து விட்ட இடங்கள் மீண்டும் வந்து இணைகின்றன. காட்சி மறைவும் நடக்கிறது. பூமியின் எல்லையில் தூங்கும் மலை முகடுகள் மூன்று ஜன்னல்களாகப் பிரிந்து, ப்ளாஸ்டிக் தொட்டியிலுள்ள ஆலமரத்தில் நிலைப் படுகிறது.
சுவர்களெல்லாம் வேர் விரித்து வளர்ந்து கொண்டிருக்கும் போதி மழையை இவர் காட்டும்போது சிலிர்க்கிறது. முடியாக்காரியங்களுக்கென ஒதுக்கப்பட்ட கனவுகளில் துவைக்க நினைத்து நனைத்து பின்னர் கனவுள்ளே உலரப் போடுகையில் பெய்கின்றது மழை. ஆமாம், மழை சுத்தப்படுத்துகிறதா, சுற்றி இறுக்குகிறதா?
இதைப் போன்றதொரு சிந்தனையைக் கொண்டு வருகிறது இவர் சொல்லும் ஒரு வாக்கியம் : ‘இன்பத்தை அறியும் உலகத்தின் தொலைவு ஒவ்வொருவரின் வாழ் நாள் தூரம்.’ மரணம் தரும் தற்காலிக விடுதலை என நான் எண்ணுகிறேன். மரணம் முற்றுப்புள்ளி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், தூக்கிச் சுமந்த வாழ்வை அந்தச் சுமைதாங்கியில் இறக்கி வைக்கலாமல்லவா? தின மணியான அந்த ஆதவனின் நிலையிருப்பு இவரை இப்படிப் பாட வைத்திருக்கிறது-‘மண்ணிலிருந்து வராத கிழட்டுத் தக்காளி எத்தனை காலைகளாக, செஞ்சிவப்பாக..’
மொத்தம் ஆறு சிறுகதைகள் அடங்கியுள்ள இந்தத் தொகுப்பில் கவித்துவம் நிரம்பிய வரிகள் மின்னல் கீற்றுகளென பளீரிடுகின்றன. தன்னைத்தானே அணைத்துக் கொண்டு மின் விளக்குக் கம்பத்தின் கீழ் படுத்திருக்கும் நாய் ஒரு காட்சியாக விடுதியில் தங்கியிருக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் வருகிறது. தொழில் நுட்பப் பூங்காவின் வாயிலில் ஒரு சிமென்ட் மரம்- அந்தத் தொழில் நுட்பப் பூங்காவோ இரவையே வெட்டிச் செகுத்துவது போலத் தென்படுகிறது. சாயும் காலத்தின் பூடக வரிகள் இவை: ‘சட்டென ஏதோ ஒன்று நினைவிற்கு வந்து மறைந்தது போல.’ அத்தனை கதைகளிலும் சிறப்பான ஒன்றாக நான் நினைப்பது ‘ராஜேஷ் கன்னா’ தான். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுமி, தான் வகுப்புத் தலைவி எனப் பெருமிதம் கொள்வது, தன்னை சட்டை செய்யாத சந்திராவுடன் சண்டைக்குப் போவது, அதற்கான சாக்குகள் தேடுவது, அது மெல்ல மெல்ல ராஜேஷ் கன்னா என்ற பையனிடம் கற்பனைக் குரோதமாக வளர்வது, யாருடனும் பேசாத மக்குப் பையனான அவன், யார் பழித்தாலும், அடித்தாலும் புன்சிரிப்புடன் இருக்கும் அவன், இந்தச் சிறுமியுடன் இணக்கமாக விழைவது, இவள் அவனை அடிக்கையில் முதல் முறையாக அவன் வலியை வெளிப்படுத்துவது, அதன் காரணமாக தன் மனக் கோணலை இவள் உணர்வது, அவன் படித்து தன்னை அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்துவிடுவானென்றும், அந்தக் காரணம்பற்றியே தன் மேலாளரின் பெயர் ராஜேஷ் கன்னாவாக இருக்க வேண்டுமென நினைப்பது அனைத்துமே மனித குணங்களின் சிறந்த எடுத்துக்காட்டு.
நிலம் மீது நிலம் மீது நிலம்
கடல் மீது கடல் மீது கடல்
சமீபத்தில் இவர் எழுதிய ஹைக்கூ கவிதைகளைப் படித்தேன். விரைவில் அவையும் தொகுப்பாக வர வேண்டுமென விழைகிறேன்.
சில வார்த்தைகள், எப்போதோ கேட்டவை, ஏன் நம்முடன் பயணிக்கின்றன என பிரமீளா அதிசயித்தாள். ஊதுவத்தியின் புகை காற்றில் வளைந்து எழுந்து தோடியெனக் கமழ்வது போல, ஒரு யாழின் மீட்டலென, உள் நரம்புக்குள் உட்புகுந்து, அதுவாகவே ஆவதான ஒரு வார்த்தை. இராகமாக, சோகமாக, ஆச்சர்யமாக, ஆனந்தமாக தனக்கே உரித்தான பொருள் மயக்கம் தரும் அதை ஏன் அவள் நினைத்துக் கொண்டே இருக்கிறாள்? குழந்தைகளின் பருவங்கள் பற்றி அவளது ஆசிரியை எத்தனைப் பாடல்கள் வகுப்பிலும், தனியாகவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால், செங்கீரை ஏன் அப்படிப் பதிந்தது?
சரவணன் எட்டு மாதங்களில் மெதுவாகப் புரண்டான்; ஆனால், எழ முடியவில்லை. தவழடா, என் கண்ணே, ஒரு கால் ஊன்றி, மற்றொன்றை மடக்கி, நீ செங்கீரை ஆடமாட்டாயா என்று எப்படி ஏங்கினாள் அவள்.
“கொஞ்சிடு கிண்கிணி பொன்னரை ஞாணுடன் கூடிய திர்ந்து மசைந்தாடக் கோதறு தண்டை சிலம்பு கிடந்திசை கொண்டு புரண்டு புரண்டாடச் சிஞ்சித இன்னொலி யுங்குதலைச் சொலுஞ் சிந்திட ஆடுக செங்கீரை செந்தமிழ் சேர் பொருனைத்துறை தங்கிய சேவல ஆடுக செங்கீரை”
வரிவரியாய் மனதினுள் முகிழ்த்தப் பாடல். கருவில் இருந்த போதே அவள் அவனுக்குச் சொல்லித் தந்த பாடல்.
ஐந்து வயதில் அவன் இரண்டு வயதுக் குழந்தையாய், மாதம் இருமுறை குருதி ஏற்றும் மருத்துவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனைக் காப்பதற்காகவேப் பிறந்த கார்த்திகேயன் வளர்வதற்கு அவள் காத்திருக்கிறாள்.
சரவணனின் விநோத சத்தம் கேட்டு அவள் சமையலறையிலிருந்து ஓடி வந்தாள். கார்த்தி அவளை ஏமாற்றவில்லை. புரண்டு, நிமிர்ந்து, வலக்காலை மடக்கி, இடக்காலை ஊன்றி அவன் செங்கீரை ஆடினான். ‘ஏலும் மறைப் பொருளே, ஆடுக செங்கீரை’ என்று பித்தியைப் போலப் பாடினாள். இரு குழந்தைகளையும் வாரி அணைத்துக் கொண்டாள்.
கார்த்திகேயனைக் கருவுற்றது அவள் நினைவிலாடியது. சரவணன் செந்நிற இரத்த அணுக்கள் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தை. குடும்பத்தில் உள்ளவர்களின் எலும்பு மஜ்ஜை குழந்தைக்கு ஒத்துவரவில்லை. இரத்தம் ஏற்றி ஏற்றியே வாழும் ஒரு மழலை. இந்த ஐந்து வயதிற்குள் நூறு முறையேனும் சரவணனுக்கு இரத்தம் கொடுக்கப்பட்டுவிட்டது. சரவணன் நாளுக்கு நாள் சோர்ந்து வந்தான்.
“மிஸ்டர். சுப்ரமண்யன், இப்டியே செஞ்சுண்டிருக்க முடியாது யு நோ, பேபி ஃபுல்லா இம்ப்ரூவாவான்னு, ஐ மீன், இந்த மெதட்ல தோணல. ஒன்னு செய்லாம். உங்களுக்கு இன்னொரு குழந்தை பொறக்கணும். ஆனா, ஐ வி எஃப் லதான் செய்யணும். அவனுக்கு ஹீமோக்ளோபின் ரொம்பக் கொறைவாயிருக்கு. அவன் கண்டிஷன ‘தலசீமியா மேஜர்’ன்னு சொல்வோம். அவனோட திசுவோட ஒத்துப் போற ‘போன் மேரோ’ வேணும். அப்பத்தான் அவன் உடம்பு தானே சரி செஞ்சுக்கும்.”
‘டாக்டர், நீங்க சொல்றது சுத்தமாப் புரியல. எதுக்கு ஐ வி எஃப் ? இன்னொரு கொழந்தைன்னு நெனைக்கவே பயமாயிருக்கு.’
“சேவியர் சிப்ளிங்’ அப்படின்னு பேரு இதுக்கு. அதே அம்மா, அப்பா, அதே கரு வளர்ற முறதான். ஆனா, லுகோசைட் இஸ்யூ இருக்கில்லியா? சரி சரி பயமுறுத்தல. அவன் டிஷ்யுவுக்கு சேர்ற மாரி இருக்கான்னு பாத்து அந்தக் கருவை வளக்கணும். முதல்ல ஐ வி எஃப் ல, கருவ சோதிச்சுட்டு, எது சரவணனுக்கு ஒத்து வருதோ அத மட்டும் உங்க மனைவியோட கருப்பைல வைப்போம். அது வளந்து, பொறந்து, பத்து கிலோவாவது வெய்ட்டுக்கு வரணும். அப்போ அதோட எலும்பு மஜ்ஜைலேந்து ஒரு பகுதி எடுத்து இவன் உடம்புல சேத்துடுவோம்.”
‘அப்ப, இவனுக்காகப் பொறக்கப் போற கொழந்தயோட நெல?’
“அது சேஃப்பா இருக்கும், அதைக் கொன்னு இத வாழ வைக்க மாட்டோம். மெடிகல் சைன்ஸ் அப்படியெல்லாமில்ல.”
‘டாக்டர், அந்தக் கொழந்த ஒருக்கால் பொண்ணா பொறந்துட்டா?’
“அது எதுவா வேணா இருக்கலாம். அது ப்ராபளமே இல்ல.”
இருவது முறை இன்வெர்டோ செய்தார்கள். இருவத்தியோரில் கார்த்தி மிகச் சரியாகப் பொருந்தி அவள் கருப்பையில் நுழைந்தான். இன்று செங்கீரையும் ஆடிவிட்டான். தளதளவென்று வளர்கிறான்; கொழுவிய பால் சதையில் கொள்ளை கொள்கிறான்; அவன் இன்னும் சில மாதங்களில் பத்து கிலோ எடையைத் தாண்டி விடுவான். சரவணனும், கார்த்திகேயனும் ஒருவரல்லவா? ஆனந்த யாழின் இசையை ஒலிக்கும் கூட்டின் இந்த இரு பறவைகளும்.
MY SISTER CHAOS-LARA FERGUS (தமிழில் அனிருத்தன் வாசுதேவன், காலச்சுவடு உலக கிளாசிக் நாவல்)
போர், வன்முறை, அழிவு, நாசம், வன்புணர்ச்சி, அகதிகள், புலம் பெயர்தல், காலம் முழுதும் அடையாளம் வெளிப்பட்டுவிடாமல் வாழ்தல் என்பதை இரு கதாபாத்திரங்கள் மூலமாக, உணர்ச்சிகளின் தீவிரத்தைக் குறிப்பால் உணர்த்தி, இசையும், கணிதமுமாக எழுதப்பட்டுள்ள நாவல் இது.
எல்லைகளைத் தகர்க்கும் போரில், எல்லைகள் மீளெழுதப்படும் நிலையில் வரைபடங்கள் என்ன சொல்கின்றன? உயர்ந்து வரும் கடல் மட்டங்கள், புவியியல் ரீதியாக நெருக்கவும், பிரிக்கவுமான கண்டங்கள், இயற்கைச் சீற்றமான நில நடுக்கம், இவற்றின் பின்புலத்தில் நாடுகள், எல்லைக்கோடுகள் இவற்றின் பொருளும் தானென்ன? இந்தக் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவல் தன் வரைபடத்தைக் காட்டுகிறது. போரில் பொது மக்களை, குறிப்பாகப் பெண்களை அச்சுறுவது யார்- சொந்த நாட்டில் பாதுகாப்புத் தர ஆர்வமுள்ள சர்வ தேசப் படையினரா அல்லது சொந்த நாட்டின் பாதுகாப்பில் ஆர்வமுள்ள தேசியப் படையினரா? துரோகம் என்பதைப் பொறுத்தவரை எப்போது என்பதே கேள்வி. எனவே, அரசியல் சதுரங்கத்தில் நிலைத்த இடம் துரோகத்திற்கு உள்ளது. ஆப்கான் நினைவிற்கு வருகிறதா? இதைப் போன்ற பல்வேறு நாடுகளைச் சுட்ட முடியும்.
இந்த நாவலில் மூன்று பாகங்கள் உள்ளன -1-நிலப்பரப்பு, 2- இசையின் படி நிலைகள், 3- பெருங்குழப்பம்.
இதில் இரு பெண்கதாபாத்திரங்கள், அவர்கள் இரட்டையர், அவர்களின் பெயரோ, அவர்கள் வாழ்ந்த நாட்டின் பெயரோ, இப்போது வாழும் நாட்டின் பெயரோ சொல்லப்படவில்லை. கதை முடிவிலி என்ற அம்சத்தைக் கணக்கில் கொண்டு ‘சீனோ முரண்பாடு’ என்ற கோட்பாட்டுச் சிந்தனைகளை தூவிச் செல்கிறது. ‘சீனோ’ என்ன சொல்கிறது? கடக்கும் தொலைவில் சரி பாதி எப்போழுதும் மிஞ்சும். அப்படியென்றால் முடிவிலி தடையாகக் கூடுமா, இல்லையா? கணிதவியலாளர் (இவரும் ஒரு கதாபாத்திரம். கிட்டத்தட்ட நாவலின் இறுதியில் வருகிறார்) சொல்கிறார்: நடுவில் இருக்கும் புள்ளிகளில் சிக்கிக் கொள்ளாமல் நேரடியாக இறுதிப் புள்ளியை அடைய உதவுவதே நடைமுறை.
கதை சொல்லும் இந்தச் சகோதரி, வரைப்படவியலில் தேர்ச்சி பெற்றவர். தான் தற்சமயம் வாழும் நாட்டிற்கேற்பத் தன்னை தகவமைத்துக் கொண்டவர். அவர் எவரையுமே ஆழமாக அறிந்து கொள்ள விழையாதவர். அதிலிருந்தே அவர் தனிமையைத் துணையாகப் பற்றியிருப்பது வெளிப்படுகிறது. அவருக்கு, வரைபடத்தில் அடங்க வேண்டுவது விவரங்களா, பரப்பளவா என்ற கேள்வியுடன் எல்லா வரைபடங்களும் பொய்யே இதுவரை என்ற எண்ணமும் இருக்கிறது. வரைபடவியல் ‘காலம்’ என்பதைக் கருத்தில் கொள்வதில்லை. அளவெடுக்கும்போது இருக்கும் விஷயங்கள் மட்டுமே அதற்குப் பொருந்தும். அனைத்து வரைபடங்களும் உடனுக்குடனே காலாவதி ஆகி விடும். அலுவலகத்தில், வரைபடப் பணியில் கணினிக்கான சரியான வழிமுறையை எழுதும் துறையில் அவர் இருக்கிறார். தன் வசிப்பிடத்தை ஒரு வரைபடமாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் முக்கிய ஒன்றாக நாவலில் பின்னிப் பிணைந்து வருகிறது. அந்த இருப்பிட வரைபடத்தைத் துல்லியமாக அமைக்கும் ஏக்கமும், அதில் தான் தோல்வியடைந்து கொண்டிருப்பதுவுமான ஒரு உள்ளுணர்வும் இருக்கிறது. அளவுகளை வெறும் அனுமானங்களாகத் தன் சகோதரியின் திடீர் வரவு மாற்றியிருப்பதாக அவர் உணர்கிறார். நாட்டை, வீட்டைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணின் ஆழ் மன ஏக்கமான உடமை கொள்ளுதலின் பிரதிபலிப்பு தான் இந்த விழைவு. ஆனாலும் அவர் நினைக்கிறார்: “நாம் சொந்தமாக்கிக் கொள்ளும் விஷயங்களில் மிகவும் மோசமானது நிலம்தான். அது நம்மை ஓரிடத்தில் கட்டிப் போட்டு, நாம் இருக்கும் இடத்தை மற்றவர் அறியும்படி செய்து விடுகிறது.” அவர் செய் நேர்த்தியுடன், ஒழுங்கையும் விரும்புபவர். அவர் பார்வையில், தன்னுடன் பிறந்தவளை இவ்வசிப்பிடத்தில் அனுமதிப்பது வீட்டின் அமைதியை, ஒழுங்கை, நறுவிசை குலைப்பது. வந்திருக்கும் சகோதரி அவர் கூடத் தங்க விழைவது அவரைப் பாதிக்கிறது; கால ரீதியாகவோ, இட ரீதியாகவோ அவளது இருப்பை ஒரு வரையறைக்குள் அடக்க இயலாது என்பது தான் சிக்கல். வந்திருப்பவரைப் பற்றி அவர் நினைக்கிறார்: “இவளுக்கு வீடு என்ற ஒன்றுதான் வேண்டியிருக்கிறது; அது அவள் பிறந்து வளர்ந்த குறிப்பிட்ட ஒரு இடத்திற்கான ஏக்கமல்ல; இனி இல்லாது போன இடத்திற்கான ஏக்கம்.”
தங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக அவர்கள் தஞ்சம் அடையும் போது அந்த அதிகாரிகள் இவர்கள் சொல்வதெல்லாம் பொய்யென்றே நினைக்கிறார்கள்; இவ்விடத்தில் கதை சொல்லி சொல்வதாக ஒரு குளிரும் உண்மை வெளிப்படுகிறது: ‘உண்மை எங்களுக்கு வலுவிழந்ததாகத் தோன்ற ஆரம்பித்தது.’ இறந்தவர்களின் பட்டியலில் இருக்கும் ஒரு முடிவான தகவல், அது தரும் விரக்தி கலந்த ஆஸ்வாஸம், காணாமல் போனவர்களின் பட்டியலில் இருப்பதில்லை அல்லவா? நாம் தப்பித்து ஓடக்கூடிய ஒரே இடம் நமக்கு உள்ளேதான் இருக்கிறது. வந்திருக்கும் சகோதரி, தன் காதலியையும், அவளது மகனையும் தேடிக்கொண்டேயிருக்கிறார். ஓவியங்களாக வரைந்து தள்ளுகிறார். பெற்றுக் கொண்டதற்கேற்ப திரும்பித் தர வேண்டும் என்ற இயற்கை விதியை கேன்வாஸ் அறிந்திருக்கவில்லை. பதிவேட்டைக் களவாடிக் கொண்டு வந்து அந்தப் பெயர்களை ஆராய்கிறார். அவர்களது பெரியம்மா மற்றும் அவரது மகள் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். மற்ற மகள்களின் நிலை தெரியவில்லை. அந்தக் காதலியும், அவரது மகனும் என்னவானார்கள் என்றும். அந்தப் பட்டியலில் எண்கள், உருவக் கோடுகள், எழுத்துக்கள் என ஒவ்வொரு பெயருக்கும் எதிரில் சங்கேதக் குறிப்புகள் இருக்கின்றன. ‘உலகளாவிய வரைபடம்’ ஒன்றைச் செய்யும் பணியில் தன் நாட்டில், முன்பு முக்கிய பங்கு ஆற்றிய கதை சொல்லியான வரைபட இயலாளரான பெண், அந்த வரைபடம் அவர்களின் நாட்டிற்கு எதிராகவே, குறிப்பாகக், கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் அனைவரையும் அடைத்துத் துன்புறுத்தி, கொலைகளும் செய்துவிடும் அமைப்பிற்கு, உதவிகரமாக இருந்திருப்பது தெரிய வருவது எத்தகையதொரு திருப்பம்! பத்து பேருக்கு மட்டுமே தெரிந்த அந்த விவரங்கள், அவருடைய விலா எலும்புகளைத் தொட்டுக் கொண்டு ஒரு யூ எஸ் பி எனத் தொங்குகிறது.
வரைபடக் கலையும், இசையுமாக இரண்டாம் பகுதி தொடங்குகிறது. இதிலும், மூன்றாம் பாகத்திலும் அத்தியாய எண்கள் முழு எண்களாகவும் பின்னங்களாகவும் வருகின்றன. உதாரணம் 12.5, 13-15 முழு எண்கள் பின்னர் 15.5, 21.75 போன்றவைகளின் தொடர்ச்சி. அந்த ‘சீனோ’ வின் தத்துவத்தைத் தழுவிக்கொண்டு செல்கிறது இத்தகைய எண்ணிடல். கட்டிடக் கலை இசையாய் எழும்பிப் பறப்பதற்கு முன் முணுமுணுக்கப்படும் ஆரம்ப ஸ்வரங்கள் சுண்ணாம்புப் பூச்சு போன்றவை; புத்தக அலமாரிகளே கீழிறங்கும் சுரத் தொகுதிகள். இசை வேகம் பெறும் இடங்களே சுவர்கள். ஒரு கட்டத்தில் அவர் நினைக்கிறார் “எனக்கிருக்கும் வரைபடப் பிரச்சினை செய்முறை சார்ந்தது அல்ல; உண்மையில் கருவியைச் சார்ந்தது. என் வசம் இருக்கும் மிக மழுங்கிய கருவி நானேதான்.” “செய்முறையில் காட்டும் அதீதத் தீவிரமே பணியைத் தோற்கடிக்கும் என்று முன்னமே அறிந்திருந்தேனா?”
முற்றுப் பெறாத, கச்சிதமற்ற முயற்சிதான் அந்த வரைபடம்; ஆனால் அதில் அழகு இருக்கிறது. ஒரு வேளை சமரசம் என்பது தோல்வியில்லையோ… அது சமாதானமோ?
வந்திருக்கும் சகோதரி வீட்டின் நிலவறையைக் கண்டு பிடிக்கிறார். விதானமும், தரையும், நீள, அகல, உயரங்களும், சாய் கதிர் கோணங்களும், மூலை மடிப்புகளும், தாழ்வாரம் என்று தன் வீட்டின் அத்தனையும் தெரிந்து வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் வரைபடவியலாளருக்கு இது பேரிடியாக இருக்கிறது. வீட்டின் வரைபடம் எள்ளி நகையாடுவதைப் போல் இருக்கிறது. தான் காட்ட விரும்பும் பரப்பு பற்றிய முழு பிரக்ஞையற்ற அறியாமையில் வந்துள்ள வரைபடம். அந்த வரைபடத்தையும், தங்க வந்துள்ள அந்த மற்றச் சகோதரி கடத்தி நிலவறைக்குக் கொண்டு சென்று விடுகிறாள். காற்று சற்றும் அசையாமல் நிற்கிறது. இசையின் இரு அளவுகளுக்கு நடுவே வீடு நிற்கிறது. கடந்த காலத்தை எந்த வகை எதார்த்தமாக ஏற்றுக் கொள்வது? அவைகளுக்குக் கொடுக்க என்ன இருக்கிறது நம்மிடம்? அப்படியே நாம் ஏற்றுக் கொண்டாலும், அதற்கு கடந்த காலம் இணங்க வேண்டுமே? இரண்டே சாத்தியங்கள் தானே- சரணடை அல்லது தப்பி ஓடு.
சில சிந்தனைகள் நம்மை புரட்டிப் போட்டு விடுகின்றன இந்த நாவலில். ‘அறிவியல் நிபுணர்களாக இருப்பவர்கள் பகுத்தறிவுக்கு முரணாக, பாரபட்சமாக செயல்படுவார்கள் என்று நான் ஒரு நாளும் சந்தேகித்ததில்லை. அவர்கள் வெறுப்பின் தரப்பில் இருப்பார்கள் என்றும் நான் நினைத்ததில்லை.’
கதை சொல்லும் சகோதரிக்கு தன் வரைபடம் வேண்டும்; அவளது சகோதரி அதை மறைத்து வைத்துவிட்டாள் அல்லவா? ஆனால், முன்னவரை வரைபடம் தன்னை நோக்கி உறிஞ்சி இழுக்கும் அந்த அதீதப் பற்று கலந்த துயரம் நம்மையும் பீடிக்கிறது. அவர் ஒரு சமாதானத்திற்கு ஒத்துக்கொள்கிறார்.
கணிதவியலாளரின் கணினியைப் பயன் படுத்தி அந்த யூஎஸ்பியிலுள்ள விவரங்களை அவர் வெளிக் கொணர்கிறார். யாருமில்லாத அந்த அறையின் தனிமையில் துணிகரமாக அவற்றைப் பிரதியும் எடுக்கிறார். பிடிபடுகிறார். நிறுவனத்தின் இயக்குனர், உலகளாவிய வரைபடத் திட்டத்தின் செயலாளர், அந்த விசாரணையைப் பார்க்க அழைக்கப்பட்டிருந்த மனித உறவுகள் துறையைச் சார்ந்தவர்களை அவர் நான்கு வியூகங்களில் எதிர் கொள்கிறார். 1. மையத்திற்குக் கொண்டு வா. 2. கட்டமைப்பு {——} வரைதல் 3. வலுவிழக்கவில்லை; வலுவடைந்திருக்கிறது 4. தேவைக்கேற்ப கட்டவிழ். சட்டப்படி வழக்கு தொடர முடியும் என்றும் அதை அவர்கள் தற்போது நினைக்கவில்லை என்றும் விசாரணைக் குழு சொல்லும் போது ‘இதென்ன வெறும் வரைபடம் தானே, அவ்வளவு பெரிய விஷயமா என்ன’ என்று அவர் நினைக்கும் இடத்தில் அவரது மொத்த குணாதிசயங்களும் வெளிப்படுவதாகத் தோன்றுகிறது.
அவர் தன் வீட்டை உடைக்கிறார். அதன் உட்தன்மை காணப்படாததால் அதைக் கண்டுபிடிக்கும் வேகம் கொள்கிறார். உத்திரங்களை அறுக்கிறார். காரைகளை உதிர்க்கிறார். உள் செங்கற்களைத் தடவி மகிழ்ச்சி அடைகிறார்.
அந்தக் கணிதவியலாளர் இவர்கள் வீட்டு வாசலில் நின்று பலமுறை அழைக்கிறார். முடிவில் ஒரு புதிய யூஎஸ்பி கருவியைத் தருகிறார். அதில் தற்போது இருக்கும் வரைபடம், அதற்கான தரவுகள் இருக்கின்றன. சில உணர்வுகள் என்றுமே மங்குவதில்லை.
‘மல்டிபிள் பர்சனாலிடி டிஸார்டர்’ உள்ள கதா பாத்திரமுமாகவும், ஒருவரே இரட்டையராகப் பிரிந்து கருத்து ரீதியில் வேறுபடுவதாகவும், இருத்தலியல் சிக்கல்கள் அவரவர் வழிகளில் மாறுபட்டுள்ளன என்பதாகவும் கூட இந்த நாவலை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த நாவலில் பாத்திரங்களாக, வெய்யில், மழை, ஓசை, இசை, வரைபடக் கருவிகள், ஆக்கும் அழிக்கும் கருவிகள், ஓவியங்கள் என எல்லாமே பயன்படுத்தப்பட்டு கதையின் கனத்தை, செவ்வியல் நோக்கத்தை முன்னேற்றுகின்றன.
‘உன் நினைவுகள்’ என்ற ஆத்மாநாமின் கவிதை நினைவில் வருகிறது.
‘எனினும் நான் உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக்கற்களை சிதறும் ஒளிக்
கற்றைகளை வீசும் விளக்கை
அப்பொழுதேனும் துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள
முடியாது இவ்விதம்
தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின் பரிமாணங்களைச்
செதுக்கிய ஓவியத்திற்குச் செல்வேன்.
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்
உதிர முடியாத காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும் மெல்லிய ஒலியுடன்…..’
ஜார்ஜ் லூயிஸ் போர்ஜஸின் புகழ் பெற்ற ஒரு பத்திக் கதை “டெல் ரிகோர் என் லெ சியென்சியா” (“அறிவியலில் துல்லியமானது”) உறுதிப்படுத்தப்படாத காலத்தின் ஒரு பகுதியாக கட்டமைக்கப்பட்ட இது 1: 1 என்ற விகிதத்தில் அதன் பிரதேசத்துடன் ஒத்த ஒரு வரைபடத்தை கற்பனை செய்கிறது. வேறு விதத்தில் சொல்வதென்றால், ஒரு பரந்த காட்சியின் பிரதி, அது பிரதிநிதித்துவப்படுத்தும் நிலத்தின் துல்லியமாக மேலெழுகிறது. இந்தக் காட்டுத்தனமான வரைபடத்தின் வாரிசுகள், “தங்கள் முன்னோடிகளைப் போலவே நிலப்படக்கலை ஆய்வை மிகவும் விரும்பாதவர்கள்”, அதை அவர்கள் நிராகரித்தனர், பயனற்றதாகத் தீர்ப்பளித்தனர், அது அவர்களின் அலட்சியத்தால் பாழடைந்து போனாலும் முழுதுமாகக் காணாமல் போகவில்லை. அந்தப் பைத்தியக்கார சாம்ராஜ்யத்தின் புதர்ச்செடிகளில், “விலங்குகள் மற்றும் பிச்சைக்காரர்கள் வசித்து வந்த” இடங்களில் தன் சிதறுண்ட சிதைவுகளை விட்டுச் சென்றது. புவியியல் என ஒரு காலத்தில் அறியப்பட்ட அறிவின் கிளையின் நினைவூட்டல்களாக இந்தச் சிதைவுத் துகள்கள் நிற்கின்றன: ஒரு நிலத்தைப் போலவே பெரிதானது அந்த வரைபடத்தின் பிற்கால வாழ்க்கை.
ழான் பாட்ரிலார்த் இந்தக் கதையை “உருவகப்படுத்துதலின் மிக அழகான உருவகம்” என்று அழைக்கிறார். அவர் சொல்கிறார், “முன்னேறியுள்ள முதலாளித்துவத்தில் வரைபடம் பிரதேசத்திற்கு முந்தியுள்ளது; உருவகப்படுத்துதல்கள், உண்மையானவற்றை உருவாக்குகின்றன; அல்லது, மாற்றாக, இரண்டிற்கும் இடையிலான ஊக வேறுபாடு மறைந்துவிடுகிறது.” (அவரது கண்ணோட்டத்தில், போர்ஜஸின் வரைபடம் இன்று முதலில் வரும், அதன் பின்னர் உருவாக்கப்பட்ட பொருள் உலகம், அல்லது வரைபடமும் உலகமும் ஒரே இடமாகக் காணப் பெறும் )
அர்ஜென்டினா நாவலாசிரியர் போலா ஒலிக்சராக்கைப் பற்றி N + 1 இதழ் தன் தலையங்கத்தில் சொல்கிறது “சாவேஜ் கோட்பாடுகள் மற்றும் டார்க் கான்ஸ்டலேஷன்ஸ் இரண்டும், இன்றைய வரைபடங்கள் தாங்கள் சித்தரிக்கும் பிரதேசங்களில் தங்களைத் தாங்களே திணிக்க எவ்வளவு வேலை செய்கின்றன என்பதை இவர் காட்டுகிறார்.” வரைபடங்கள் பல எழுத்தாளர்களை ஈர்த்திருப்பது தெரிகிறது.
நாவலாசிரியர் லாரா ஃபெர்கஸ் ஆஸ்திரேலியர். பெண்கள் வாழ்வைப் பற்றிய மேற்படிப்பும், சர்வதேச சட்டங்கள் துறையில் பட்டப்படிப்பும் பெற்றுள்ள இவர் அறிவியல் படிப்பை பாதியில் நிறுத்தி நடனக்கலையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கணுக்கால் பிரச்சினையினால் வேறு துறைகளில் நாட்டம் செலுத்தினார். புலம் பெயரும் பெண்கள், அகதிகளாகும் பெண்கள் ஆகியோருக்கெனச் செயல்படும் அமைப்புகளில் இணைந்து பணியாற்றினார். இது இவருடைய முதல் நாவல். அனிருத்தன் வாசுதேவன் மொழிபெயர்த்துள்ளார்.
“தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே விரைத்தெழுந்து அடங்குகின்றன தன்மைபோல்
நின் உள்ளே பிறந்து இறந்து நிற்கவும் திரிபவும்
நின் உள்ளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே”.
இது திருமழிசை ஆழ்வார் கடவுளைப் பார்த்து பாடிய பாடல்; இது மிகவும் பொருத்தமாக காவிரிக்கும் அமைகிறது.
நீரின்றி அமையாது இவ்வுலகு;. நதி இன்றி அமையாது நம் வாழ்க்கை அந்த நதியை போற்றி நால்வர் அடங்கிய ஒரு நண்பர் குழு பயணித்ததை நடந்தாய் வாழி காவேரி என்று அருமையான பயண நூலாக சிட்டி – ஜானகிராமன் வழங்கியிருக்கிறார்கள்.
.
நதியின் பயணம் என்பது ஒரு நாட்டின் நாகரீகத்தின் பயணம். அதன் புராதனங்களின்தொகுப்பு, அந்த மக்களின் பண்பாடு, அவர்களின் கலை இலக்கியத் தேர்ச்சி. நிலவளம் நீர் வளத்தைச் சார்ந்தது. வானிலிருந்து பெய்யும் மழையும், மலைகளில் பிறந்து சமவெளியில் தவழ்ந்து, குறுக்கிடும் பாறைகளைக் குடைந்து ,மண்ணைச் செழிப்பாக்கி, மானுடம் உயரும் கலைகளைப் பிறக்க வைத்து உன்னதம் தரும் நதிகளும் பொக்கிஷங்கள் தான்.
.
இந்தப் பயண நூல் ஒரு அழகான ராகமாலிகையாக அமைந்திருக்கிறது. அனேகமாக இதில் சொல்லப்படாத செய்திகள் இல்லை என்றே தோன்றுகிறது. அவள் உற்பத்தியாகும் இடம் ,அவள் சலசலக்கும் இடம், அவள் அமைதி காக்கும் இடம், அவள் துளிகளாக, நீர்த் திவிலைகளாக, ஆர்ப்பாட்ட மிக அருவியாக, அகண்ட காவிரியாக, அஞ்சி நடக்கும் அழகாக, கடலைச் சேரும் அன்பாக காட்டப்படுகிறாள். அதில் இணைந்து வருவது சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களில் காட்டப்படும் காவிரியின் வர்ணனை, அவளின் இரு கரைகளிலும் வாழ்ந்த முனிவர்கள், சாதுக்கள், ஞானிகள் வாக்கேயக்காரர்கள், பாடலாசிரியர்கள், இசை வல்லுநர்கள், ஓவியம், சிற்பம், நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபட்டவர்கள், அமைக்கப்பட்ட பெருங்கோயில்கள், சிறு கோயில்கள், ஆண்ட மன்னர்கள், வாழ்ந்த பொதுமக்கள், பசுமைபூர்த்தியாய் அலையாடும் கழனிகள், ஓடங்கள், பரிசல்கள் ,முகத்துவாரங்கள், கால்வாய்கள் ,வெண்மணல் படுகை ,பறவைகள் என்று வந்து கொண்டே இருக்கின்றது .இதில் எதை எடுத்துக் கொள்ள முடியும் எதை விட முடியும்? ஒரு இனிப்பு எந்தப் பகுதியில் இனிப்பாக இருக்கிறது என்று யார் சொல்வது? அனைத்துமே சுவைமிகுந்த சாறு நிறைந்த வரலாறு புதைந்த செய்திகள் .இதில் நண்பர்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் ,ஆவலாதிகள், கோபதாபங்கள் சந்தோஷங்கள் அனைத்தும் நாம் அவர்களுடனேயே பயணிப்பது போல திறமையான எழுத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள். அத்தனை இசை மயமாக, சொல் வளம் மிக்க எழுத்தாக இந்த இரட்டையர் இதைப் படைத்து இருக்கின்றனர். மிக அழகான ஓவியங்கள், புகைப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. இவர்கள் செல்லும் வழியில் எல்லாம் எதிர்பாராதவிதமாக நண்பர்களும் ஊர் வாசி களும் சந்தித்து உதவுவதை என்னவென்று சொல்வது? இப்படி ஒரு பயணத்தில் நம்மால் மனதால் தான் இணைய முடியும்
.
முதல் அத்தியாயம்- ஆவேசம்- நான் கம்பீரநாட்டை என்பேன். கம்பீரநாட்டையில் மல்லாரி வாசித்து, ஊர்வலம் வரும் தெய்வங்களின் அழகு மிளிர்கிறது. பூவர் சோலை மயிலாட புரிந்து குயில்கள் இசைபாட காமர் மாலை அருகு அசைய நடந்த காவிரியை, நடையிலேயே பார்க்கும் ஆசை இந்தக் குழுவினருக்கு. கோவலன் கண்ணகி நடந்த பாதையில் புகாரில் இருந்து மதுரை வரை நடக்க வேண்டும் என்பது இலக்கியத் தரமிக்க ஒரு தாகம். முதலில் கர்நாடகா பகுதிகளுக்குத்தான் செல்கிறர்கள்.
கொள்ளேகால்- அதிலிருந்து புறப்பட்டு சிவசமுத்திரம் வந்ததை இவர்கள் சொல்வதைக் கேளுங்கள். காமனைக் கண்ணால் எரித்த சிவபெருமானின் சினத்தின் உருவாக விளங்கி கோபக்கனல் தெறிக்கும் வகையில் நீர்த்திவலைகள் தெறிக்கும் அற்புதக் காட்சி சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி .காவிரி இரு கிளைகளாகப் பிரிந்து வளைந்து பார் சுக்கி, ககன சுக்கி என்று இரு பெரும் நீர்வீழ்ச்சிகளாகப் பிரிந்து பாய்ந்து மீண்டும் ஒன்று கூடுகிறாள். பிரம்மாண்ட பாறைகளுக்கிடையே குதித்து விளையாடி நுரைத்துப் பாய்ந்து குலுங்கச் சிரித்து விளையாடும் இவள் நாட்டை அன்றி வேறு யார்? துறவு மேற்கொள்வதற்கு, தனிமையில் ஆனந்தம் அடைவதற்கு ,பரோபகார சிந்தனை ஒரு தடையல்ல என்று ஒரு கதையில் சொன்ன தி.ஜா அத்தகைய ஒருவரை நேரிலும்சந்திக்கிறார்.
அத்தியாயம் 2 அமைதி- பூபாளம் என்று சொல்லலாமா? இங்கே நதி முகம், திருமுக்கூடல், கபினி, தலைக்காடு, ஸ்ரீரங்கப்பட்டினம், சோமநாதபுரம் அகஸ்தீஸ்வரர் ஆலயம், அழகிய மஞ்சள் மாலை என்று எதைச் சொல்ல எதை விட? சோமநாத புரத்தில் சென்னகேசவர் ஆலயம் இவர்களுடைய வர்ணனையில் நவரங்க மண்டபத்தோடு கண்முன்னே எழுகிறது. இதில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காலரா ஊசிக்கு இவர்கள் பயந்து காரில் பறந்தது நல்ல நகைச்சுவை.
அத்தியாயம் 3 அடக்கம் சாரமதி அடங்குவாள், அடக்குவாள் விஸ்வரூபமும் எடுப்பாள் .கிருஷ்ணராஜ சாகர் அப்படித்தான். காவேரி அணைக்குள் கட்டுப்படுகிறாள். மீண்டும் எழுகிறாள் பாய்ந்து பறக்கிறாள் .மின் சக்திக்கும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் ஆன ஆதாரம்.மெர்க்காரா சென்ற அனுபவம் நமக்கு கிலி தரக்கூடியது. சித்தாப்பூரில் கடந்த அந்தச் சாலை! மலைச்சாலை …காப்பித் தோட்டங்களும், பலா மரங்களும், தேக்கு மரங்களும், மலைச்சரிவு வயல்களும், மலையிலும், மரத்திலும், வீட்டிலும் தேனீக்கள் மனிதனுக்காகத் தேன் சேர்க்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அழகும்.. இதை முற்றிலும் உணர அந்த சாலையில் பிறகு அவர்கள் சந்தித்த இடர்களையும் நூலில் படிக்க வேண்டும்.
அத்தியாயம்-4 -அழகு- ஹம்சத்வனி அழகல்லவா மலையில் சுழல்கின்ற பாதை.? யானைக்கூட்டம் கூட வரலாம். அவர்கள் பார்க்கும் இயற்கை காட்சி எவ்வளவு அற்புதமாக வந்திருக்கிறது!. ‘ஜன்னல் கண்ணாடி வழியாக நிலவு தெரிந்தது .இடையிடையே சிறுசிறு புட்களின் ஒலி கேட்டது. மண்ணெண்ணெய் விளக்கின் வெள்ளை சுடர் சுவற்றில் ஆடியது; நிழல்கள் ,காடு, மலை, தனிமை ,காட்டு விலங்கு பற்றிய உணர்வு இவர்களுக்கு ருட்யார்ட் கிப்ளிங்கின் கதைகள் நினைவுக்கு வந்ததாம். காவிரி ஒரு சுனையில் சிறியவளாகப் பிறக்கிறாள், அம்சத்தின் ஒலியைப் போல. டிவி குண்டப்பா அவர்கள் குடகை வர்ணித்து பாடிய பாடலையும் சேக்கிழாரையும் இங்கே காட்டுகிறார்கள் .அசல் குடகு மக்களைப் பார்ப்பதற்காகச் சென்றவர்கள் அழகான திருமணத்தையும் பார்க்கிறார்கள். நல்ல விருந்து சாப்பிட முடியாமல் இவர்களது சைவ உணவு முறை தடுத்து விடுகிறது. ஸ்ரீரங்கலா என்ற இடத்தில் காவிரியின் சுயரூபத்தைப் பார்க்கிறார்கள். அதுவரை வடக்கு நோக்கி வந்த நதியின் திருப்பம் கிழக்கை நோக்கி ஏற்படுகிறது .
அது தமிழகத்தில் பாயும் காவிரியை நினைவு படுத்துகிறது.
அத்தியாயம் 5 அணிநடை- இது காம்போதி தான். குளிர்ந்த காற்று, உயரமான பாலத்தின் கீழ் காவிரி சலசலத்து ராமநாதன் ஆலயத்தின் முதுகை தழுவிக் கொண்டு ஓடி வருகிறாள் .வெள்ளி நீர் கூட்டம், நதி, கோயில், இயற்கை வனப்பு, ஓசைகள் அற்ற பெருவெளி எல்லாம் சேர்ந்து முந்தைய காலம் ஒன்றிற்கு திரும்பிப் போன மயக்கத்தை கொடுக்கிறது. இந்த ராமநாதபுரம் கர்நாடகத்தில் உள்ளது இந்தியாவின் மொத்த கிராம அமைதியையும் இங்கே காணலாம் என்று இந்த இரட்டையர்கள் கூறுகிறார்கள் இப்பயணத்தில் இவர்கள் சந்திக்கும் ஒரு சிறுவன் ,அவன் குணாதிசயம் மிகவும் சுவாரஸ்யமானது.
அத்தியாயம் ஆறு ஆடு தாண்டும் பகாரி என்ற ஹிந்துஸ்தானி ராகம் நினைவில் வருகிறது ஆதிகாலத்து மலைவாழ் மக்களின் ராகம் இன்று வரை நிலவி வருகிறது அப்படித்தான் செட்டியாரைச் சந்திக்கிறார்கள். கந்தா மரம் என்ற மரத்திலிருந்து அருமையான நறுமணம் வருகிறது அது முல்லையா மல்லியா? இயற்கையின் நறுமணம், வேறென்ன சொல்ல? ஹன்னடு சக்கரா அது பத்து முறை சுற்றியதோ, 12 முறையோ ஆனால் பாறைகளில் தாவிக்குதித்து ஏறி இறங்கி தனிமையில் அனுபவித்திருக்கிறார்கள் .மேகதாட்டு இன்றும் நம்மை வாட்டி எடுக்கும் மேகதாட்டு. பாறைகள் சில இடங்களில் லேசான நீலம், லேசான சிகப்பு, சில இடங்களில் யானையின் உள்ளங்காலை மேல் நோக்கி நிறுத்தி வைத்தது போல வர்ணம், என்ன ஒரு வர்ணனை.!காவிரி இரு சுவர்களுக்கு இடையே ஆழத்தில் ஓடுகிறாள் அங்கே. ஆர்க்காவதி சங்கமம் அழகுக்கென்று என்று காவிரி தேர்ந்தெடுத்த இடமாம் மனிதர்களை விட ஒரு சீமைக்கு தனி அடையாளம் மாடுகள் தான் தருகின்றனவாம்..
அத்தியாயம் ஏழு-புகை தரும் புனல்-தோடி ஆரம்பத்தில் கனகா ,சுஜோதி என்ற நதிகளையும் பின்னர் ஹேமாவதி ,லட்சுமண தீர்த்தம்,கபினி ,சிம்சா ,லோக பாவனி ,சுவர்ணவதி போன்ற நதிகளையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு மைசூர் ராஜ்யத்தை செழிக்கச் செய்து விட்டு காவிரி தமிழ்நாட்டை நோக்கி விரைகிறாள் .அவளை ஒகேனக்கலில் பார்க்கும் ஆவலை சுமந்துகொண்டு இவர்கள் வருகிறார்கள். ஒரு சந்தைக்காட்சியை பென்னாகரத்தில் கண்டு மனம் மயங்குகிறார்கள் .வளம் குறிக்கும் பொருள் வகைகள், ஏக்கமும் வேட்கையும் துடிக்காத மகிழ்ச்சி நிறைந்த பேச்சுக்குரல் அவர்களுக்கு மனித சமுதாயத்தின் இன்னும் விட்டுவிடாத அந்த சந்தைக் கலாச்சாரத்தை மனக்கண்முன் கொண்டு வருகிறது. குற்றாலத்தின் அழகு இல்லை ஆனால் வனப்பு மிகுந்த அமைதியான ஒகேனக்கல் இவர்களைக் கவர்கிறது.நதி ஒடும் இடங்களிலெல்லாம் பல புராணக் கதைகள். பல இடங்களில் அகத்தியருக்கு ஆலயங்கள் .ஒவ்வொரு நதிக்கரையின் அருகிலும் ராமாயணம் சம்பந்தப்பட்ட புராணக் கதைகள். யாகம் செய்த முனிவர்கள் மற்ற மக்களும் இயற்கையை அனுபவிக்க வேண்டும் என்று ஒகேனக்கலில் ஆடி பதினெட்டிலும் ஐப்பசி முழு நிலவன்றும் குளித்தால் புண்ணியம் என்று மக்களை ஈர்த்து இருக்கிறார்கள். இங்கே பரிசலில் பயணித்ததும்,மன்னார்குடி மாமி பரிமாறிய நல் உணவும் கள்ளிச் சொட்டு காப்பியும் நம் நாவிலும் நீர் ஊறச் செய்கின்றன.
அத்தியாயம் எட்டு பொன்னி வளம். கல்யாணி இந்த ராக ஆலாபனையில் இன்னும் இன்னும் என்று கேட்கத் தோன்றிக்கொண்டே இருக்கும் அதைப்போல அதுவரை சென்ற இடங்களில் பார்க்கத் தவறிய இடங்களைப் பற்றி இவர்களுக்குள் சிறு வாக்குவாதங்கள் ,பேச்சுக்கள். ஸ்ரீரங்கத் திட்டு பார்க்காததில், பறவைகளைத் தவற விட்டதில், ஒருவருக்கு மனக்குறை. சேர்வராயன் மலைகளில் மஞ்சவாடி கணவாயில் உற்பத்தியாகும் சிற்றாறு திருமணிமுத்தாறு. இது சேலத்தில் பாய்கிறது. இந்தத் திருமணி முத்தாறில் கோதுமை வடிவத்தில் அதை விட ஆறு மடங்கு அளவிலான பெரிய முத்து கிடைத்திருக்கிறது .அதை சிவன் கோயில் அம்மனுக்கு அணியாகத் தந்திருப்பதாக புராணக் கதை நிலவுகிறது. இவர்கள் சென்னைக்குத் திரும்பி நண்பர் சீனிவாசன் நலமாக இருப்பதை பார்த்ததும் நிம்மதி அடைகிறார்கள் கல்யாணி மங்கல ராகம் அல்லவா?
அத்தியாயம் 9 புதுப் புகார் -அசாவேரி ‘ஸாரி வெதலின இ காவேரி ஜொ டரே’ இந்த அருமையான அசாவேரி நிச்சயமாக தி ஜா தான் பாடி இருக்கக்கூடும். காவிரியின் வனப்பை அழகை, வர்ணனை செய்து, அவள் பஞ்சநதீஸ்வரரைப் பார்க்க வரும் அழகை, தியாகராஜ சுவாமிகள் பாடவேண்டும், அதை இவர்களின் எழுத்தில் தேனாய் பருகவேண்டும். காவிரிப்பூம்பட்டினத்தில் சாயா வனத்தில், பச்சையும் வனப்புமாக, கண்ணுக்கு உகந்த காட்டின் அடர்த்தியாக இவர்கள் நம்மை புகார் துறைமுகத்திற்கு கைபிடித்து அழைத்துச் செல்கிறார்கள். கடற்கரை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள கண்ணகி சிலையைப் பார்த்து அதை ஒழுங்காக நல்ல ஸ்தபதியை வைத்து செய்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறார்கள். சம்பந்தர் பாடிய பாடல் மிகப் பொருத்தமாக இங்கே கையாளப்படுகிறது . கடற்கரையும் மீனவர்களின் உடற்கட்டும் அந்த அழகிய தமிழ் பேச்சும் கலாசாகரத்தை மிகவும் கவர்ந்து விட அவர் வரைந்து தள்ளுகிறார்.. இவர்கள் நினைவில் தமிழக வரலாறு. அரசர்கள், கவிஞர்கள் ,பாடலாசிரியர்கள் ,ஞானிகள், நாயன்மார்கள் ,ஆழ்வார்கள் ,ஆதீனங்கள் ,நூல் நிலையங்கள் எல்லாம் ஒருங்கே எழுந்து நம்மையும் சுற்றி வளைக்கின்றன. புத்த விகாரத்தையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.. மாயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை மீது தீக்ஷிதர் பாடிய நவாவரண கீர்த்தனை, வள்ளலார் கோயில் ,கோபால கிருஷ்ண பாரதியின் பாடல், மீனவப் பெண்ணை பார்த்து கண்ணகியை நினைவு கூறல்; மணிமேகலை மணிபல்லவத் தீவுக்குச் சென்று ஐந்தாண்டுகள் கழித்து திரும்புவதற்குள் புகார் நகரம் கடலில் மூழ்கி விட்டதால் இந்த அத்தியாயத்தை கடக்கவே மனம் வரவில்லை
.
அத்தியாயம் 10 கொள்ளிடம் தாண்டி -வசந்தா. வரலாறு சம அந்தஸ்துள்ள இருவரையும் நினைவு கூர்ந்தாலும் நம் மனம் ஒருவர் சற்று குறைவாக நினைவில் வருகிறாரோ என்று அயர்கிறது. ஆம் ராஜராஜனை ராஜாதி ராஜனாகக் கொண்டாடுகிறோம். கங்கைகொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழன் மறதி அடுக்குகளில் போய் ஒளிந்து கொண்டு விட்டான். செயற்கையாக ஏரியை உருவாக்கிய மாபெரும் மன்னன். கொள்ளிடத்தின் குறுக்கே கீழணை கட்டப்பட்டபோது இந்த கோவிலின் மதிலை உடைத்து கற்களை எடுத்து அணையை அமைத்திருக்கிறார்கள். வரலாற்றில் நமக்கு இருக்கும் ஆர்வம் அவ்வளவுதான்! இந்தக் கட்டுரையை ஊன்றிப் படிக்க வேண்டும் :ஓரிடத்தில் சொல்கிறார்கள் தஞ்சை பெரிய கோவில் ஆண் அம்சத்துடன் இருந்தால், கங்கை கொண்ட சோழபுரம் பெண் அம்சத்தோடு விளங்குகிறது. உட்புற அமைப்பு அத்தனை எழிலாக அமைந்துள்ளது.
அத்தியாயம் 11 இசைவெள்ளம் -சண்முகப்பிரியா. நமக்கெல்லாம் கஞ்சனூர் நெசவைப் பற்றி தெரியுமா? ஹரதத்த சிவாச்சாரியார் ,திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், விகடகவி ராமஸ்வாமி சாஸ்திரி ,சதாசிவ பிரம்மேந்திரர் இவர்களையெல்லாம் பற்றிப் படிக்கும்போது புல்லரிக்கிறது. சதாசிவ பிரம்மேந்திரர் பற்றி புதுக்கோட்டையில் ஒரு வரலாறு பேசப்படுகிறது. சமஸ்தானம் வறட்சிக்கு உட்பட்ட போது அன்றைய அரசர் இவரை பக்தியுடன் அணுகி பஞ்சத்தைப் போக்க வழி கேட்கிறார். மலை வரை கோயிலான திருக்கோகர்ணத்திற்கு சுவாமிகள் எழுந்தருளுகிறார். தூங்கா விளக்காக பிரகதாம்பாள் சன்னதியில் ஒன்றை ஏற்றச் சொல்கிறார்.. பஞ்சம் நீங்கி சுபிக்ஷம் வருகிறது. கோவிந்த தீக்ஷதர் மகாமக குளத்தைச் சுற்றி 16 அழகிய மண்டபங்கள் கட்டி உள்ள செய்தி, நாகேஸ்வரன் கோயில் ,உமையாள்புரம், திருவையாறு ,திருப்பழனம் ,வேங்கட மகி யாரை சொல்ல, யாரை விட?
அத்தியாயம் 12 கழனி நாடு-அமிர்தவர்ஷினி. கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை நம்முடைய தமிழர்களின் அபாரமான திறமைக்கு பெரிய எடுத்துக்காட்டு. கண்ணம்பாடி அணையும் மேட்டூர் அணையும் தடுத்து நிறுத்தி பின்னர் அனுமதிக்கும் அளவை மட்டும் கொண்டு ஓடிவரும் காவேரியின் தோற்றத்தை இப்போது காண்கையில் கரிகாலன் கட்டிய போது எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி எழாமல் இருக்க வாய்ப்பே இல்லை. திருச்சியில் அகண்ட காவிரியாகப் பாய்ந்து ஸ்ரீரங்கத்தை நெருங்கும் போது தன்னிடம் இருந்து பிரிந்த கொள்ளிடத்துடன் காவிரி ஸ்ரீரங்கத்தைத் தாண்டி மீண்டும் இணைகிறாள். இப்பகுதியில் காவிரி நீர்ப் பாசனத்திற்காக எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ரெகுலேட்டர் வைப்பது, வெண்ணாறு, வெட்டாறு, தண்ணீர் வடிகால் அமைப்புகள் எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார்கள்…. திரு ராஜகோபால் இப்பகுதியில் விவரிக்கும் காவிரி வெள்ளப்பெருக்கு தத்துரூபமாக கண்முன்னே எழுகிறது.
அத்தியாயம் 13 ஆர் இரண்டும்- நீலாம்பரி. சங்க நூல்களிலும் சிலப்பதிகாரத்திலும் காவிரியைப் பற்றி காணப்படும் குறிப்புகளை அலசி ஆராய்கிறார் ஒரு நண்பர். திருச்சி மலைக்கோட்டை, அதன் மேலே ஏறிப் பார்த்த காவிரியின் அழகு, ஊரின் அமைப்பு, சமயபுரம் மாரியம்மன் கோயில் அற்புதம் ,மாத்ரு பூதேஸ்வரர் கோயில், அங்கே சந்தித்த சடகோபன், அவரிடம் இருந்த மணிஐயர் ரெக்கார்டுகள், அந்த சங்கீத ஞானம், திருப்பராய்த்துறை விஜயம் ,அங்கே நடைபெறும் தொழில், மாணவர் ஒழுக்கம் ,அமைதி, ஸ்ரீரங்கத்து கோயில் சிறப்பு, திருவானைக்காவில் உருகி உருகி இவர்கள் எழுதிய விதம் அனைத்தும் நம்மை அசைத்து விடுகிறது. நம்மையும் அறியாமல் ஒரு ஆழ் மயக்கத்திற்கு சென்று விடுகிறோம்.
அத்தியாயம் 14 அகண்டம்- சங்கராபரணம். பெருக மணியைத் தாண்டி இவர்கள் சந்திக்கும் அகண்ட காவிரி,. முக்கொம்பு திட்டு, அதன் வனப்பு, மீண்டும் காண கலாதரன் பற்றிய பேச்சு, கோபாலகிருஷ்ண பாரதி சோக ரசமான முகாரியில், கோப ரசத்தை ஏற்றிப் பாடிய பாடல், அலை அலையாக அதைப் பாடிய அழகு, மத்யம கால நடையில் ரத்னாசல பாடல். கடலைக் காண இயலாமல் அமராவதி காவிரி உடனேயே கலந்துவிடுகிறதாம்!
.
அத்தியாயம் 15 காணிக்கை- தன்யாசி. அமராவதி காவிரி சங்கமம் இயற்கையாகவே அமைந்த எல்லைப் பிரதேசம் கரூர். சேரராட்சியில் ஒரு முக்கிய நிலையமாக விளங்கிய ஊர். தென்னகத்தில் எங்கெங்கோ தொலைவில் எல்லாம் குழுமியும், தொடர்ச்சியாகவும், தனிப்பட்டும் நின்று காவல் புரியும் மலைகளுக்கிடையே உற்பத்தியாகும் நதிகளில் பல காவிரியைத் தேடியே விரைந்து வரும் ரகசியத்தை அமராவதி இவர்களிடம் சொன்னாளாம். நெரூராரின் சன்னதியை இவர்கள் வர்ணித்த விதம் நெகிழ வைக்கிறது. இவர்களின் இசை ஆர்வம், அகஸ்தியரை சங்கீத யோகிகளுக்கு ஒரு படி கீழே காட்டப் பார்க்கிறது. கொடுமுடி என்றதும் ஒரு கம்பீர கந்தர்வ குரல் நம் மனச் செவியில் ஒலிக்கும் . அந்த ஊரில் எது அழகு -கோவிலா, காவேரியா, பரிசல்களா?. ஒரு இடம் சிந்திக்க வைக்கிறது- நம்முடைய ரிஷிகள் ஆராய்ச்சிக்காரர்களாக, விஞ்ஞானிகளாக, காடழித்து நாடாக்கியவர்களாக, புவியியல் அறிஞர்களாக, அறிவே தெய்வம் என்று நினைத்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லி சான்றையும் காட்டுகிறார்கள் இவர்கள். இயற்கைப் பொருளுக்கு மாற்றாக செயற்கை இரட்டை காண முனைந்தவர் விசுவாமித்திரர் ;.அகஸ்தியர் புது நிலம் காண முனைந்தவர். நாம் நம்முடைய வரலாற்றை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்
.
அத்தியாயம் 16 நிறைவு- மத்தியமாவதி. ஹரித்வாரில் சமவெளியில் இறங்கிய பிறகு, கட் முக்தேஸ்வர் போன்ற இடங்களில் கங்கையைப் பார்த்தால் புகளூர் பாலத்திலிருந்து காவிரியை பார்ப்பது போல் இருக்குமாம். பவானியில் சங்கமேஸ்வரர் கோயில், ஜமுக்காளம் இவர்களை ஈர்த்து வசப்படுத்துகிறது.. ஆனால் பாவம், கார் ரிப்பேர் ஆனதால் பஸ்ஸில் மேட்டூர் போய் வருகிறார்கள். கணவாய் போன்ற இடைவெளியில் மேட்டூர் அணை அமைக்கப்பட்டிருக்கிறது. மேட்டூரிலிருந்து பவானி திரும்பியவர்கள் சும்மா இருக்கலாம் அல்லவா? ஒரு சினிமா பார்ப்பதற்குப் போய்விட்டு தலைவலியுடன் இடைவேளை நேரத்தில் விடுதிக்கு திரும்பி விடுகிறார்கள்.. மீண்டும் ஒரு அழகான இலக்கிய சர்ச்சை- சுடர் இலை நெடு வேல் நெடுவேள் குன்றம் வேறு எங்கு இருக்கிறது என்று கேட்டது ஜானகிராமனாகத்தான் இருக்கும். ஆனால் ஆராய்ச்சி நண்பர் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு திருச்செங்கோடு அல்ல சுருளிமலை ஆகத்தான் இருக்கும் என்று தன் தரப்பை நிறுவுகிறார்.
அத்தியாயம் 17 ஆலாபனை -ஹிந்தோளம். ஜோடர்பாளையம் போகிறார்கள் பனை மரத்தை வெட்டி குறுக்கே போடப்பட்ட பாதை .இவர்களுக்கு கூழாங்கல் பொறுக்கும் ஆசை வந்துவிட்டது. மிக மிக நயமான வடிவு கொண்ட கற்கள் . பொறுக்கிய பிறகு அனைத்தையும் ஆற்றிலேயே போட்டுவிடுகிறார்கள். கரும்பு பூக்களின் வெண் பட்டுக்கொண்டைகளைப் பார்த்துக்கொண்டே, சிலிர்த்துக்கொண்டே ஒருபயணம் திருஈங்கோய்மலை மிக அருமையான வர்ணனை. அகத்தியர் ஈயாக வடிவெடுத்து சிவனை சுற்றிப் பாடி பரவசப்பட்ட அருமையான இடம்.
அத்தியாயம் 18 பல்லவி -ஆனந்தபைரவி. ஆற்றுக்கு அக்கரையில் தொலைவில் ரத்தனகிரி, இடது பக்கம் அடிவானத்தில் திருச்சி மலைக்கோட்டை, வலது பக்கத்தில் கொல்லி மலைக் குவியல்கள்,. வைரக் கற்கள் பதித்த ஆபரணம் போல் காலை இளவெயிலில் காவேரி ஜொலிக்கிறாள். குணசீலத்தைத் தவிர்த்து விடுகிறார்கள். வரகூரின் கிருஷ்ண பக்தியை அபாரமாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு கிளை நதியோடும் போய் பார்க்க வேண்டுமென்றால் நாயன்மாராக, ஆழ்வாராக,, பண்டாரமாக அல்லது ஹிப்பியாகவாவது இருக்க வேண்டுமாம்!. இங்கே ஒரு அருமையான ஓடப் பாடல் ஒரு பாட்டி பாடுகிறார் எனக்கு மரப்பசு நாவலில் கல்யாணக் கச்சேரி செய்த கோபாலி நினைவிற்கு வந்து விட்டார்.
சென்னை வரும்காவிரியைப் பற்றியும் காவிரி நீர் பங்கீடு பற்றியும் இந்த நூலுக்காக தகவல்கள் எடுத்துக்கொண்ட நூல்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள்.
நதியின் சிறப்பை ,அதன்வழி நடந்ததை சொல்லும் நூலில், வரலாறும் இசை யும் , தமிழும், நம்முடனே பயணிக்கின்றன.. நினைந்து நினைந்து உருகி உருகி உடன் பயணிக்க வேண்டிய அற்புத நூல்.
தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர் கன்னடத்து குடகு மலை கனி வயிற்றில் கருவாகி, தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி, ஏர் வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எனும் பெயரால், நீண்ட வரலாறாய், வண்ணம் பாடி ஒரு வளர் தென்றல் தாலாட்டு, கண்ணம்பாடி அணை கடந்து, ஆடு தாண்டும் காவிரிப் பேர் பெற்று, அகண்ட காவிரியாய் பின் நடந்து, கல்லணையில், கொள்ளிடத்தில், காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டை தாயாகிக் காப்பவள். அவள் கங்கையில் புனிதமாய காவிரி அல்லவா?